Tuesday 29 January 2013

பேய்கள் அரசாண்டால்

நான் தூங்கும்போது காலை மணி மூன்று இருக்கும். வெட்டியாக பொழுதைப் போக்கி கொண்டிருந்தேன். பின்னர் உறங்கினேன். 'பேய்கள் அரசாண்டால், பிணம் தின்னும் சாத்திரங்கள்' என பட்டென்று ஒருவர் எனது காதில் சொல்லிக்கொண்டு இருந்தார். நான் திடுக்கிட்டுப்  பார்த்தேன். சாமியார் நின்று கொண்டிருந்தார். என்ன சொல்வது என்றே புரியவில்லை.

மீண்டும் அதே வரியைச் சொன்னார். பேய்கள் அரசாண்டால், பிணம் தின்னும் சாத்திரங்கள். எனக்கு மிகவும் குழப்பமாகிப் போனது. அதெப்படி பேய்கள் அரசாள  முடியும்? சாத்திரங்கள் பிணம் தின்ன முடியும்? என்றே சாமியாரை நோக்கினேன். எனக்கு இவரிடம் பேசுவது அவ்வளவாக பிடிக்காது. அதன் காரணமாகவே அவர் பேசுவதை தடை செய்ய வழக்கு தொடரலாமா என எனது வக்கீலிடம்  மிகவும் விரிவாக பேசி அப்போதே நினைத்தேன்.

நீங்கள் இனிமேல் என்னிடம் பேசக் கூடாது என்று வழக்கு தொடர இருக்கிறேன் என்றேன். சாமியார் திகைக்காமல் சிரித்தார். இவ்வளவுதானா? தாராளமாக வெட்டியாய் இருக்கும் உனது வக்கீலுக்கு ஒரு வெட்டி வேலை ஒன்று கொடு என்றார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. இவர் மீது வழக்கு போடுவேன் என்கிறேன், அது வெட்டி வேலை என்கிறாரே என நினைத்தேன்.

பக்தா, எனது பேச்சு உரிமையை நீ தடை செய்ய நினைத்தால் நான் எங்கேனும் பேசிக் கொண்டிருப்பது உனது காதில் விழும் வாய்ப்பு நேரடியாக இல்லாது போனாலும் மறைமுகமாக அமைந்துவிடும் என்றார். சரியென இவரின் மீதான தனிப்பட்ட வெறுப்புக்கு நமது மதிப்பை குறைத்து கொள்வானேன் என நினைத்து கொண்டு பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் பற்றி கேட்டேன்.

உனது மனதினை எப்போதும் நல்ல சிந்தனைகளுடன் வைத்து இரு. தனிப்பட்ட நபர்கள் மீது காழ்ப்புணர்ச்சி எதுவும் கொள்ளாதே. நல்ல சிந்தனைகளை தெய்வீக சிந்தனைகள் என்றும் கெட்ட சிந்தனைகளை பேய் சிந்தனைகள் என்றும் மனதில் ஓடும் எண்ணங்களை சொல்லலாம். பேய் சிந்தனைகள்  உன்னிடத்து அரசாட்சி செய்தால், அல்லது நாட்டியம் செய்தால் நீ கற்று கொண்ட வித்தைகள், நல்ல சாத்திரங்கள் எல்லாம் செத்தவைகளுக்கு சமானம், அவைகளால் ஒன்றும் உனக்கு உதவி செய்ய இயலாது. பல நூல் கற்றும் நீ களிமண் என்றார்.

அப்படி என்றால் இதில் இருந்து விடுதலை கிடையாதா? என்றேன். சாமியார் சிரித்தார். தெய்வீக சிந்தனைகளை நீ மெதுவாக மனதில் அழுத்தமாக பிடித்து கொள்ள இந்த பேய் சிந்தனைகள் விலகும். தவறு என தெரிந்தால் அவற்றை எல்லாம் புறந்தள்ள வேண்டும். தவறு என தெரிந்தும் அதையே பிடித்து கொண்டிருப்பதால் மேலும் மேலும் உனது மரியாதைகள் குறைந்து கொண்டே போகும். நீதி நியாயத்திற்கு உட்பட்டு வாழ்வதே மனித வாழ்வில் பெரும் சௌகரியமான செயல் எனவே தெய்வீக சிந்தனைகளை கைபற்று பேய் சிந்தனைகளிடம் இருந்து விடுதலை கிடைக்கும் என்றார் சாமியார்.

பேய்கள் அரசாண்டால், பிணம் தின்னும் சாத்திரங்கள் நானும் சொல்லிப் பார்த்து கொண்டேன். எனக்கு சாமியார் அறிவியல் பற்றி பேசமாட்டாரா எனும் ஏக்கம் வந்து தொலைந்தது. தாங்கள் இந்த பூமி பற்றி எனக்குசொல்லித் தாருங்கள் என அவரது பேச்சை தடை செய்ய நினைத்த நான் வினவினேன். சாமியார் சிரித்தார்.

எனக்கு சங்கடமாகவே இருந்தது. எதற்கு எடுத்தாலும் சாமியார் சிரிப்பது எனக்கு புரியாமலே இருந்தது. நிச்சயம் அடுத்த முறை சொல்கிறேன் என எழுந்து சென்றார். என்னுள் இருந்த பேய் சிந்தனைகள் என்னை அழுத்திக் கொண்டிருந்தன. எனது சோம்பேறித்தனம் என்னை பார்த்து ஏளனமாக பார்த்தது. விழித்துக் கொண்டேன்.

மணி எட்டாகுது, வேலைக்குப் போகலையா என்றார் அம்மா. எட்டு மணி ஆகுதல, எழுப்பி இருக்கலாம்ல என அம்மாவை சத்தம் போட்டேன். பிணம் தின்னும் சாத்திரங்கள். வேகவேகமாக கிளம்பினாலும் மணி ஒன்பது தொட்டு இருந்தது. வேலை இடத்தை அடைந்தேன். தாமதமாக வந்ததற்காக என்னை எனது அதிகாரி ஏகத்திற்கும் என்னை சத்தம் போட்டார். பேய்களின் அரசாட்சி.

மாலை வந்தது, விஸ்வரூபம் எனும் திரைப்படம் பார்க்கலாம் என சென்றேன். நான் சென்றபோது அந்த திரையரங்கில் வேறு படம் போட்டு கொண்டிருந்தார்கள், அங்கே இருந்தவரிடம் என்னவென வினவினேன். இந்த படம் திரையிடக் கூடாது என்பது தெரியாதா, இந்த படத்திற்கு தடை விதித்து இருக்கிறார்கள் என்றார். என்ன காரணம் என்றேன். இது கூட தெரியாமல் எதற்கு உயிர் வாழுற என்றார். எனக்கு என்ன சொல்வது என புரியவில்லை. ஒரு திரைப்படம் பற்றி நான் அறிந்து கொள்ளாமல் இருப்பது சமூக குற்றமா?

நான் ஏமாற்றத்துடன் திரும்பினேன்.  அப்போது இருவர் பேசிக்கொண்டு இருந்தார்கள். பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்றார் ஒருவர். மற்றொருவர் விளக்கம் கேட்டார். அதற்கு அவர் அரசு பற்றி ஏதோ பேய் அரசு என திட்டி விளக்கம் கொடுத்து கொண்டு இருந்தார். நான் மனதிற்குள் சிரித்து கொண்டேன். அரசு, மக்கள், மதம், சாமியார் எல்லாம் மனிதர்கள் தானே! ஆனால் சாமியார் எனது கண்களுக்கு மிகவும் பிரமாண்டமாக தெரிந்தார்.

அம்மாவிடம் பேய்கள் அரசாண்டால், பிணம் தின்னும் சாத்திரங்கள் என்றேன். பிணத்தை தின்னா தின்னுட்டு போகுது. பேய்கள் அரசாண்டா ஆண்டுட்டு போகுது. நீ ஒழுங்கா இரு, அது போதும் என்றார். எனக்கு அம்மா, சாமியாரை விட மிகவும் பிரமாண்டமாகத் தெரிந்தார். 

Thursday 24 January 2013

இவனுங்க தீவிரவாதிங்கதான்

விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்த  சில அமைப்புகள் முதலில் இதை, இஸ்லாமிய தீவிரவாதம்  தடை விதிக்க ஆர்ப்பாட்டம் நடத்தட்டும்.

விஸ்வரூபம் எனும் பெயரை அரபியே மொழி வடிவத்தில் அமைத்து இருக்கிறார் கமல். கமல் தெரிந்தே தான் எல்லாம் செய்து இருக்கிறார். கமல் குறி வைத்து இருப்பது ஒசாமா போன்ற வகையறாக்களை, சாதாரண முகம்மதுகளை அல்ல.

கமல்... எதற்கு அந்த அமைப்புகளுக்கு எல்லாம் படம் போட்டு காட்டுறீங்க? அவர்கள் என்ன தணிக்கை குழுவில் உறுப்பினர்களா? 

தமிழக அரசு தனது கோமாளித்தனத்தினை மீண்டும் மீண்டும் நிரூபித்து கொண்டு இருக்கிறது.படம் பார்த்து கலவரம் பண்ணும் அளவுக்கு மதி கெட்டு போனதா தமிழகம்? கலவரம் பண்ணுவதற்கு என அறிக்கை வேந்தர்கள் இருக்கிறார்களே! அவர்களை அல்லவா முடக்க வேண்டும்! இதெல்லாம் இருக்கட்டும், மக்களின் அடிப்படை பிரச்சினைகளில் கவனம் செலுத்து தமிழக அரசே! 

ஒரு சில முஸ்லீம்களின் நடவடிக்கையினால் மொத்த முஸ்லீம்களுக்கும் கெட்ட பெயர் என்பதை சராசரி முஸ்லீம்கள் புரிந்து கொள்வார்கள். ஆனால் முஸ்லீம்கள் அல்லாதவர்களிடம் இது குறித்து கேட்டால் முஸ்லீம்கள் பற்றிய கண்ணோட்டம் வேறு மாதிரிதான் இருக்கிறது. 

சமீபத்தில் லண்டனில் உள்ள ஒரு இடத்தில் சில முஸ்லீம்கள் 'இது எங்க ஏரியா, இப்படி உடை உடுத்தாதே, இங்கே குடிக்காதே என போவோர் வருவோர்களிடம் வம்பு செய்து இருக்கின்றனர்'. இப்படி இவர்கள் நடந்து கொள்வதன் மூலம் ஒட்டு மொத்த முஸ்லீம்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருகிறார்கள். இதுதான் கமல் சொன்ன கலாச்சார தீவிரவாதம். நிறைய நபர்கள் இங்கிலாந்து அரசின் உதவித் தொகையின் மூலம் பிழைப்பு நடத்தி வருபவர்கள். 'உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்யும் கோமாளிகள்' இருக்கும் வரை ஏதாவது பிரச்சினை வந்து கொண்டே இருக்கும். 

சல்மான் ருஷ்டியை மிரட்டிய அதே கும்பல்களின் வழித் தோன்றல்கள் தான் இவர்கள் எல்லாம். படைப்பாளியை மதம் என்கிற எந்தவொரு மதம் பிடித்த பெயரில் மிரட்டும் எவரும் தீவிரவாதிதான். 

'நான் எழுதியதை நீங்கள்  தடை செய்ய துடித்தால் நீங்கள் மதிக்கும் மத நூல்களை எல்லாம் தடை செய்ய நான் எதற்கு துடிக்க கூடாது என ஒவ்வொரு படைப்பாளியும் உள்ள குமுறல்களுடன் தான் இருப்பான்' 

இப்பொழுதெல்லாம் எதற்கு எடுத்தாலும் கைது என முண்டாசு கட்ட ஆரம்பித்து விட்டார்கள். கருத்து சுதந்திரம் என்பதன் சுதந்திர அளவு எதுவென புரியவில்லை.

கமல், தான் ஒரு கை தேர்ந்த அரசியல்வாதி மற்றும் ஒரு வியாபாரி என்பதை நிரூபித்து கொண்டு இருக்கிறார். பீத்தினா ஊத்திக்கும் என்பது அவருக்கு தெரியாமலில்லை. ஆனால் திறமை இருக்குமிடத்தில் கர்வம் இருக்கத்தான் செய்யும். கர்வம்தனை வெளிக்காட்டாமல் பணிவுடன் பாசாங்கு போடுபவரைத்தான் எல்லோருக்கும் பிடித்து இருக்கிறது. தீவிரவாதிகளை விட மிதவாதிகளாக வேசம் போடுபவர்களைத்தான் உலகம் கொண்டாடி வருகிறது. 

வாளால் வெட்டுபவனை விட 
வார்த்தைகளால் வெட்டுபவன் 
மிக மிக கொடியவன்!

உலகம் இப்போது பழைய புதினத்தின் அடிப்படையில் புதிதாக வரலாறு எழுதிக் கொண்டு இருக்கிறது. 

விஸ்வரூபம் - திரைப்படம் வெளியாகும் முன்னரே ஒரு வெற்றி சித்திரம் தான். சிலருக்கு கண்களில் எரிச்சல் தந்து இருக்கிறது, சிலருக்கு கண்களில் குளிர்ச்சி தந்து இருக்கிறது. 

படத்தின் கதை இந்த வரிகளில் ஒளிந்து இருக்கிறது. கணவனின் பழைய வாழ்க்கையில் ஒளிந்திருக்கும் மர்மங்கள்!

எவர் என்று  நினைத்தாய்
எதைக் கண்டு சிரித்தாய் 
விதை ஒன்று முளைக்கையில் 
வெளிப்படும் முழுரூபம் 

எவர் என்று  நினைத்தாய்
எதைக் கண்டு சிரித்தாய் 
விதை ஒன்று முளைக்கையில் 
வெளிப்படும் புதுரூபம் 

எவர் என்று  நினைத்தாய்
எதைக் கண்டு சிரித்தாய் 
விதை ஒன்று முளைக்கையில் 
வெளிப்படும் சுயரூபம் 

யார் என்று புரிகிறதா
இவன் தீ என்று தெரிகிறதா!


விஸ்வரூபம் 

அடுத்து எவராவது 'ஔரங்கசீப்' என்ற படம் எடுக்கட்டும்! 

Thursday 17 January 2013

இன்று எனக்கு பிறந்த நாள்

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் மற்றும் தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துகள்.

-----

எனது ஜனன குறிப்பில் இப்படித்தான் எழுதப்பட்டு இருப்பதாக ஞாபகம். 1975ம் வருடம் தை மாதம் நான்காம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 12.10 மணிக்கு ஜனனம். பூரட்டாதி நான்காம் பாதம், மீன ராசி, துலாம் லக்னம் என்றெல்லாம் குறிப்பினை படித்த அனுபவம் உண்டு. இன்று எனக்கு முப்பத்து எட்டு வயது. இத்தனை வயதாகி விட்டதா என்ற எண்ணம் எழாமல் இல்லை.

அதிகாலையில் பிறந்தநாள் வாழ்த்துகள் என்று சொன்ன எனது மனைவிக்கும், எனது பையனுக்கும் ஒரு புன்னகை சிரிப்புடன் நன்றி சொல்லிவிட்டு இத்தனை வருடங்களை ஒரு சின்ன அசைவு போட்டபோது அம்மாவும், அப்பாவும் மட்டுமே முதலில் கண்களில் தெரிந்தார்கள். சிறிது நேரம் பின்னர் மீண்டும் பிறந்த நாள் வாழ்த்து சொன்ன மனைவியிடம்

அன்னையை இழந்து தவித்து நின்றபோது
அன்னையாய் வந்தவள் நீ

என்று ஒரு கவிதை என அவரிடம் சொல்ல, எனது அழகு பற்றி வர்ணனை கவிதை சொல் என கேட்டார். இப்படி கடந்த பதினான்கு  வருடங்களாக என்னிடம் கேட்டாலும்

நீ ஒரு காதல் கவிதை
உனக்கு எதற்கு ஒரு பொய் கவிதை

என்றே இன்னமும் சமாளித்துக் கொண்டிருக்கிறேன். 

இம்முறை பிறந்தநாள் கொண்டாட்டம் எல்லாம் கிடையாது. ஆனால் திடீரென எனது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் உறவினர்களுடன் சேர்ந்து இந்த லண்டன் வந்த பதினான்கு வருட காலங்களில் அத்திப்பூத்தாற்போல் நடந்தது உண்டு. இந்தியாவில் இருந்தவரை பிறந்தநாள் கொண்டாடியதாக நினைவில் இல்லை, ஒரே ஒருமுறை கல்கத்தாவில் படித்து கொண்டிருந்தபோது நண்பர்களுக்கு இனிப்பு வாங்கி தந்ததாக நினைவு.

இந்த இனிய நன்னாளில், எந்நாளும் போல இவ்வுலகம் செழிப்புற்று இருக்க எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.