Thursday 1 November 2012

ஓவபைன் தந்த அதிர்ச்சி

பொதுவாகவே மருத்துவ ஆராய்ச்சி என்றால் அப்படி இப்படித்தான் இருக்கும் போல. இன்று இருக்கும் தொழில்நுட்ப வசதி, பலவகையான செயல்முறை பயிற்சிகள் என எதுவமே இல்லாத காலத்தில் இந்த இந்த தாவரம் இந்த இந்த பலனைத் தரும் என சித்தர்கள் என போற்றப்படுபவர்கள் கண்டுபிடித்து தந்ததே பெரும் அதிசயம் தான்.

இந்தியா, சைனா போன்ற நாடுகள் இது போன்ற மருத்துவ முறைக்கு மிகவும் முக்கியத்துவம் தந்து கொண்டிருந்தன. தாவரங்களின் மூலம் தங்களது உடல் நலனை காத்துக் கொள்ளும் முறையை மனிதர்கள் கற்றுக் கொண்டார்கள். இது கூட இயற்கைத் தேர்வு அடிப்படையில் மனித இனம் தம்மை இவ்வுலகில் தக்க வைத்துக் கொண்ட ஒரு முயற்சி எனலாம்.

ஓவபைன் அல்லது ஸ்ட்ரோபந்தின் எனப்படும் மருந்து ஸ்ட்ரோபந்துஸ் எனப்படும் மலர் இன வகை சார்ந்த தாவரத்தில் இருந்து பிரித்தெடுக்கும் பொருளாகும். இந்த ஸ்ட்ரோபந்துஸ் ஆப்பிரிக்கா, இந்தியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் வளரும் தன்மை உடையது. இவை மிகவும் உயரமாக வளரக்கூடிய தாவரமும் ஆகும்.

இந்த தாவரம் மிகவும் விஷத்தன்மை உடையது என்பதை முன்னரே அறிந்து வைத்திருந்த ஆப்பிரிக்கர் கூட்டம் இதனை அம்பில் தடவி பிறரை கொல்ல பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றே குறிப்புகள் இருக்கின்றன. அதி வேளையில் இந்த தாவரத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஓவபைன் இதயத்திற்கு மிகவும் உபயோகமாகக் கூடிய மருந்தாக பயன்படுத்தப்பட்டது. எதுவுமே அளவுக்கு அதிகமாக உபயோகித்தால் அமிர்தமும் நஞ்சு என்பது போல இந்த மருந்து அளவு அதிகமானால் ஆளையே கொன்று விடும் என்பதுவும் அறியப்பட்ட ஒன்று.

இதய கோளாறுகள் நீக்கும் இரண்டு வகை மருந்துகள் என டிஜிடளிஸ் மற்றும் ஸ்ட்ரோபந்துஸ் இரண்டுமே விஷத்தன்மை உடையவை. இந்த ஓவபைன் சோடியம் பொட்டாசியம் பரிமாற்றத்தை தடுக்கும் தன்மை உடையது. இப்படிப்பட்ட மிகவும் கொடிய மருந்துடன் வேலை பார்க்க வேண்டும் என்பதெல்லாம் தலையில் எழுதப்படாத விதி.

கினிபிக்ஸ் வேகஸ் நரம்புதனில் இந்த மருந்தினை சோதனை செய்தபோது இவை மிகவும் அற்புதமாகவே வேலை செய்தது. மிகவும் சிறப்பான மருந்து ஒன்று கண்டுபிடித்துவிட்டோம் என்ற குதூகலத்தில் இந்த மருந்து அளவு அதுவும் மிகவும் குறைவான அளவு கினிபிக்ஸ் ற்கு தந்தபோது அவை அனைத்தும் இறந்து போயின. இந்த செயல்முறையை செய்வதற்கு முன்னரே எனக்கு எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. கவனத்துடன் இரு, இல்லையெனில் இந்த மருந்து உன்னை தாக்கலாம் என.

ஆனால் மிகவும் குறைந்த அளவே தந்தும் இப்படி இந்த மருந்து செய்தது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. வாழ்விலும் அப்படித்தான். கெட்ட விசயங்கள் மிகவும் குறைவாக செய்தால் பிரச்சினை இல்லை என்று நினைக்க கூடியவர்கள் உண்டு. ஆனால் அந்த குறைவான கெட்ட விசயங்கள் மனிதர்களை அழிக்கும் வல்லமை உடையதுதான். ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் நடப்பதைவிட ஒரு உண்மை சொல்லி அந்த கல்யாணம் நின்றால் அதுதான் சிறப்பு.

இப்படி உலகில் பல விஷத்தன்மையான விசயங்கள் நல்லது செய்வது போலவே வலம் வருகின்றன. அவை வளம் பெறாமல் காப்பது நமது கையில் உள்ளது. 

Wednesday 31 October 2012

அல்வா கிண்டும்

நடிகையாகும் முன்னரே
நன்மங்கை
அட்டகாசமாய் கிண்டுவார் அல்வா
அல்வாவின் ருசியை
ஆர்ப்பரித்து பேசி செல்வர்

பாதம் அல்வா பாங்குடனே
பிஸ்தா அல்வா பிசகாமல்
கேரட் அல்வா கவனத்துடன்
இனிப்பை அளவுக்கு
சற்று தூக்கலாய்
கிண்டிய அல்வாவுக்கு
கிறங்கித்தான் போவோர் பலர்

நடிகையான பின்னரும்
நன்றாகவே கிண்டுவார் அல்வா
அல்வாவின் பக்குவம்
அவருக்கு மட்டுமே தெரிந்தது போல்
தினமும் கிண்டித்தான் வைப்பார்

அல்வாவை எவருக்கும் 
அவராக சென்று தந்ததில்லை 


அரசியலுக்கு வந்த பின்னர்
அல்வாவின் தேவை
அளவுக்கும் அதிமாகிப் போனது
ஆட்கள் எல்லாம்
வைத்துக் கொள்வதில்லை
அவரேதான் எசமானி
சாமானியனும் மறுக்காமல்
அல்வாவின் பெருமை பேசுவர்

அளவுக்கு அதிகமான அல்வா
கிண்டியவருக்கு ஒருபோதும்
தந்ததில்லை பிரச்சினை
தானாக சென்று
உண்டு களித்து இருந்தோர்க்கு
உள்ளதே எக்கணமும் பிரச்சினை

அல்வாவை எவருக்கும்
அவராக சென்று தந்ததில்லை
சொல்வாக்கு இல்லாது போனாலும்
செல்வாக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை
கிண்டித்தான் மட்டுமே வைக்கிறார் அல்வா


Tuesday 30 October 2012

காதலில் வக்கிரம்

எனக்கு நீ கிடைக்காமல் போனால் 
எவருக்குமே நீ கிடைக்காமல் 
போகக் கடவது என்றே 
சாபம் இட்டதுண்டு 

தினந்தோறும் நீ வரும் பேருந்தில் 
அன்று நீ வராததை கண்டு 
அந்த பேருந்து கவிழட்டும் 
என்றே நினைத்தேன் 

உனது அழகிய முகத்தை 
நான் பார்க்கக் கூடாது 
என்று சொன்ன உன் தந்தைக்கு 
பாடம் புகட்ட 
அமிலத்தை அவரது  முகத்தில் 
தெளித்துவிட துடித்தேன் 

எனது காதலை உன்னிடம் 
சொன்னபோது 
நீ மறுத்து வெறுத்து ஒதுக்கிய 
மறுகணம் 
நான் இறந்துவிடலாம் என்றே 
கலங்கினேன்

காதலும் காதல் சார்ந்த 
இடம் கல்லறை 
என அனைவரும் 
சொல்லிவிடட்டும் என 
உன்னையும் அன்றே 
கொன்று ஓரிடத்தில் நம்மிருவரையும் 
புதைக்க பயணித்தேன் 

உள்ளத்தில் உள்ள காதலை 
தேக்கி வைக்க இயலாமல் 
உள்ளத்தில் உள்ளது எல்லாம் 
உன்னிடத்தில் மீண்டும் சொன்னபோது 
நான் தவிக்க வேண்டும் என்றே 
நீ என்னை தவிர்ப்பதாக சொன்னாய் 

என்னில் மட்டும் இல்லை 
காதலில் வக்கிரம் 
உன்னிடத்திலும் உண்டு 
கண்டுகொள்!