Friday 14 September 2012

என்ன சொல்லி தந்தது இந்தியா? 4

முதலில் நல்லியில் துணிகள் வாங்கலாம் என ஐயர் அழைத்து சென்றார். வேஷ்டிகளும், துண்டுகளும் மட்டுமே அதிகமாக வாங்கினார். நல்லியில் முடித்து கொண்டு லிஸ்ட் கொடுத்த பொருட்கள் வாங்க மீண்டும் அதே இடத்திற்கு சென்றோம். ஆடி கார்த்திகை என்பதால் கோவிலில் கூட்டம் நிறைந்து இருந்தது, அதோடு அந்த பாதையை அடைத்து வைத்து இருந்தார்கள். காரினை நிறுத்த எங்குமே இடம் இல்லை. என்ன செய்வது என புரியாமல் முழித்து நின்றோம். 

அப்போது ஒரு சின்ன கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்த பக்கத்தில் அப்படி அப்படியே கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அந்த இடம் நோக்கி காரினை நிறுத்தினோம். ஐயர் பைக்கில் முன்னமே அந்த இடம் சென்று இருந்ததால், டிரைவர் நண்பர் காரிலிருந்து கடையை நோக்கி சென்றார். அப்போது ஒரு வேன் பக்கத்தில் வந்து நின்றது. மற்றொரு கார் எங்கள் கார் மறித்து நின்றது. எப்படி இந்த வேன், கார் எல்லாம் எடுப்பது என மலைப்பாக இருந்தது. 

நிறைய பொருட்கள் என்பதால் ஒரு சைக்கிள் ரிக்சாவில் கொண்டு வருகிறோம் என தகவல் வரவே காத்து இருந்தோம். அதே போல எடை நிரப்பும் வண்டி ஒன்றில் அனைத்து பொருட்களும் வந்து இருந்தது. அதற்கு முன்னர் அருகில் இருந்த வேன் மிகவும் குறுகிய இடைவெளியில் அந்த இடத்தை விட்டு சென்றது கண்டு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. எங்கள் காருக்கு முன் இருந்த கார் அப்படியே நின்று கொண்டு இருந்தது. 

சாக்கு மூட்டைகள் காரின் பின்புறம் ஏற்றினார்கள். துரியோதனன் தனது வீட்டினை வைக்கோல் மூலம் அடைத்து விட்டது போல காரின் பின்புறம் அடைக்கப்பட்டது. ஹோமம் கட்டைகள் சில வண்டியின் மேற்புறம் போட்டார்கள். அதே குறுகிய இடைவெளியில் கார் பயணித்தது கண்டு ஹூம் என்றே பெருமூச்சு விடத் தோணியது. எத்தனை நெரிசல்களிலும் லாவகமாக கார் ஓட்ட வேண்டுமெனில் இந்தியாவில் மட்டுமே கற்று கொள்ள இயலும். 

கார் பயணித்த சில வினாடிகளில் போக்குவரத்து போலீசார் காரினை ஓரம் கட்ட சொன்னார். மறுபடியும் குளிர் தாளுக்கு பிரச்சினையா என நினைக்க, டிரைவர் நண்பர் சென்று பேசிக்கொண்டே இருந்தார். என்ன பிரச்சினையோ என தெரியாமல் காருக்குள் அமர்ந்தே இருந்தோம். திரும்பி வந்தவர் காரில் லோடு ஏற்றியது குற்றம் என சொல்வதாக சொன்னார். அப்போது இன்சூரன்ஸ் படிவம் கேட்க இவரோ இரண்டு நாட்கள் காலாவதியாகிப் போன இன்சூரன்ஸ் படிவம் வைத்து இருந்தார். புதுப்பிக்கப்பட்ட இன்சூரன்ஸ் படிவம் வீட்டில் இருப்பதாக சொல்ல எனக்கோ 'அடக்கடவுளே' என்று இருந்தது. கிட்டத்தட்ட நான்காயிரம் ரூபாய் வரை கேட்பதாக சொன்னார். சரி கட்டிவிட்டு வாருங்கள் என்றேன். அதெல்லாம் தேவையில்லை என சொன்னவர் போலிஸ் ஒருவருக்கு தொலைபேசி போட்டு பேசினார். 

அந்த நேரம் வந்த ஐயர் சென்று அவர்களிடம் பேச, அவர்களோ மிகவும் உறுதியாக இருப்பதாகவே தெரிந்தது. நம் மீது தான் குற்றம், இதில் அவர்கள் மீது என்ன கோபப்பட வேண்டி இருக்கிறது என்று நினைத்தே நான் எப்போதுதான் காரினை விடுவார்கள் என யோசித்தவாறே அமர்ந்து இருந்தேன். காரினை பிடித்து வைத்துக் கொள்வார்களா என்று அப்பாவியாய் கேட்டேன். இதோ வருகிறேன் என டிரைவர் நண்பர் சென்றார். அவர் கையில் வைத்து இருந்த போனை எடுத்து போக்குவரத்து போலீசாரிடம் கொடுத்தார். அவரும் சிறிது நேரம் பேசிவிட்டு இவரிடம் போனை கொடுத்தார். சிறிது நேரத்தில் டிரைவர் நண்பர் முன்னூறு ரூபாய் கட்டிவிட்டு வந்தார். அந்த ரசீது பார்த்தபோது வேகமாக சென்றதற்காக அபாரதம் போட்டு இருந்தது. ஹூம் இந்தியா. 

எல்லோரும் தவறு செய்து கொண்டே இருக்கிறார்கள். நேர் வழியில் இங்கே வாழ்வது என்பதெல்லாம் சாத்தியமே இல்லை. சட்டங்கள், திட்டங்கள் எல்லாம் இந்த இந்தியாவை ஒருபோதும் சீர்திருத்த போவதில்லை. இன்சூரன்ஸ் படிவம் வைக்காத குற்றத்திற்கு என்ன தண்டனையோ அந்த தண்டனை கொடுத்து இருக்க வேண்டும். லண்டனில் எல்லாம் இன்சூரன்ஸ் படிவம் எல்லாம் கையில் வைத்து இருப்பதில்லை. கார் எண் தட்டினால் போதும், காரின் மொத்த வரலாறும் தெரியும். இன்சூரன்ஸ் புதுபிக்கபட்டதா நகல் வேண்டும் என்று வேறு அந்த போலீசார் கேட்டாராம். அங்கேயே பேக்ஸ் வசதி வைத்து இருந்தால் சொல்வதில் அர்த்தம் இருக்கிறது. அப்படி ஏதேனும் தவறு எனினும் இத்தனை நாளுக்குள் நகல் அனுப்பி வை என விட்டுவிடலாம். காரினில் லோடு ஏற்ற கூடாது என்பதற்கான சட்டம் இருக்கிறதா என தெரியவில்லை. 

எனக்கு இனி எத்தனை போலீசார் பிடிப்பார்களோ எனும் அச்சம் வேறு. அடுத்த நாள் ஹோட்டலில் இருந்து கிளம்பும் முன்னர் இன்சூரன்ஸ் படிவம் வந்தால் மட்டுமே காரை எடுத்து செல்லலாம் என நான் சொல்லி வைத்தேன். அதைப்போலவே டிரைவர் நண்பரின் அண்ணன் அங்கும் இங்கும் அலைந்து மின்னஞ்சல் அனுப்பி வைத்தார். கிராம பகுதியில் ஸ்கேன், பேக்ஸ் எல்லாம் வசதி ஒன்றும் பெருகிவிட வில்லை. டிரைவர் நண்பர் எவ்வளவோ சொல்லியும் நான் இன்சூரன்ஸ் படிவத்துடன் தான் செல்ல வேண்டும் என சொன்னது வீணான விசயமாகவே இருந்தாலும், முக்கியமான விசயமாகவே எனக்கு தெரிந்தது.  அதற்கு பின்னர் எவரும் காரை பிடிக்கவே இல்லை. 

நகரத்திற்குள் செல்லாமல் செல்லலாம் என நினைத்தாலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீடு வரை செல்ல வேண்டிய நிர்பந்தம். எனவே மீண்டும் அதே போக்குவரத்து நெரிசல். விஜயகாந்த் வீடு சென்றபோது மாலை மணி மூன்று. சாலையில் குழி தோண்டி போட்டு இருந்தார்கள். அவரது வீட்டில் காவல் போடப்பட்டு இருந்தது. இருப்பினும் எவரும் எளிதாக செல்லுமாறு வீட்டின் வெளிவாயில் திறந்தே இருந்தது. 

சென்னையில் இருந்து கிராமம் நோக்கிய பயணம். நகரத்தை விட்டு வெளியேறவே கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகிப்போனது. கார் சென்ற வேகம் மிரள செய்தது. இடம் செல்கிறார்கள், வலம் செல்கிறார்கள். ஒரு ஒழுங்கு முறை இல்லை. மெதுவாக செல்லும் வண்டி வலம் செல்கிறது. ம்ஹூம். போதும் போதும் என்றாகிவிட்டது. 

இரவெல்லாம் பயணித்து வீடு வந்து சேர்ந்தபோது இரவு மணி ஒன்று. அப்பாடா என்று இருந்தது. தமிழகம் மட்டுமே இப்படியா! 

(தொடரும்) 

Wednesday 12 September 2012

என்ன சொல்லி தந்தது இந்தியா? 3

கும்பாபிஷேகத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கி செல்ல வேண்டும் என்பதால் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்க லண்டனில் இருந்து வருகை தந்த ஐயர் அவர்களை சந்திக்கும் ஏற்பாடு இருந்தது. நேராக கோயம்பேடு வந்து விடுங்கள் அங்கே இருந்து பாரிமுனை பக்கம் செல்லலாம் என சொன்னார். 

நாங்கள் அவரை சந்தித்த நேரம் மாலை நான்கு மணி மேல் இருக்கும். பைக்கில் வந்தவர் காரில் ஏறாமல் அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார். நேரம் ஆகி கொண்டு இருக்கிறதே, கடைகள் எல்லாம் மூடிவிடுவார்கள் எனும் அச்சம் வேறு. சின்ன சின்ன தெருக்களில் கார் சென்றபோது எத்தனைவிதமான இடைஞ்சல்களில் இந்தியாவில் வாழ்க்கை பயணித்து கொண்டிருக்கிறது என எண்ணிக் கொண்டேன். 

அவரது வீட்டிற்கு முன்பாக காரை நிறுத்திவிட்டு அவரது வீட்டிற்குள் சென்றபோது நேரத்தின் மீதுதான் கண் இருந்தது. சில இயந்திரங்களை  முன்னரே வாங்கி வைத்ததாக காட்டினார். இவர் லண்டனில் ஏற்கனவே பணி புரிந்துவிட்டு மீண்டும் லண்டனில் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்வதற்காக ஓராண்டு முன்னர் தான் லண்டனில் உள்ள கோவிலில் இணைந்தார். வெளிநாட்டில் பணி புரிவதன் மூலம் வாழ்க்கையின் தரம் உயர்ந்துவிடுவதாக அவர் சொன்னபோது மறுக்க இயலவில்லை. ஆனால் அதற்கடுத்து நான் கண்ட காட்சிகள் இந்தியாவில் உள்ள திறமைமிக்க வியாபாரிகள் போல உலகில் காண்பது சற்று கடினம் தான் என்றே எண்ண தோன்றியது. 

முதலில் தேவையான ஆராதனை பொருட்கள், கலசங்கள், குத்துவிளக்கு, குடை என வாங்கிட மிகவும் குறுகலான தெரு ஒன்றில் சென்றோம். இருபுறமும் இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அவ்வப்போது சாலையில் ஆட்டோ வந்து போய் கொண்டிருந்தது. நடப்பதற்கே மிகவும் கடினமாக இருந்தது. அந்த தெருவில் இருந்த சில கடைகளில் விசாரிக்க ஒரே பொருளின் விலை வேறு வேறாக இருந்தது. சரி என ஐயர் தனக்கு தெரிந்த ஒரு கடைக்கு அழைத்து சென்றார். கடை மிகவும் சிறிதாக இருந்தது. இந்த கடையில் என்ன பொருட்கள் இருந்து விடப்போகிறது என நினைக்க மாடிக்கு அழைத்து சென்றார்கள். அங்கே நிற்கவே இடம் இல்லாமல் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. எந்த பொருள் கேட்டாலும் அங்கே வேலை செய்தவர் ஓடோடி எடுத்து காண்பித்தது ஆச்சர்யமாக இருந்தது. இல்லாத பொருளை கூட இல்லை என சொல்லாமல் இரண்டு நாட்கள் கழித்து வாங்கி கொள்ளுங்கள் என கணக்கு போட்டபோது ஓரிரு மணி நேரங்களில் லட்சம் ரூபாய்க்கான வியாபாரம்! சில்லறை வியாபார கடைகள் முதலாளிகளிடம் பேசினால் தான் கடைகளின் நிலவரம் புரியும் என நினைக்க கடைகளுக்கு சர்வ சாதாரணமாக வந்து போய் கொண்டிருந்தார்கள் மக்கள். 

அடுத்தொரு கடை. அங்கே ஹோமத்திற்கு தேவையான கட்டைகள், குங்குமம் போன்ற பொருட்கள். அந்த கடையும் சிறிதாகத்தான் இருந்தது. நாங்கள் அந்த கடையை சென்றடைந்தபோது இரவு பத்து மணி இருக்கும் என்றே நினைக்கிறேன். கடையை மூடும் நேரம். லிஸ்ட் கொடுங்க, இரண்டு நாள் கழிச்சி வாங்கிகோங்க என்றார். அவரது மேசையில் கணினி இல்லை, கால்குலேட்டர் இல்லை. ஒவ்வொன்றாக சொல்ல விலை போட்டு கொண்டே வருகிறார். இது கிடைக்கும், இது பக்கத்து கடையில்  வாங்கிகொள்ளுங்கள் என வேகமாக சொல்லிக்கொண்டே செல்கிறார். அடுத்து விறு விறுவென மொத்த கணக்கையும் போட்டு காட்டியபோது எனக்கு சரிபார்க்க மனமே வரவில்லை. சரி முன் பணம் கொஞ்சம் கொடுத்துவிட்டு நகர்ந்தோம். 

துணிகள் இனிமேல் வாங்கமுடியாது, நல்லி சில்க்ஸ் நாளை வாருங்கள் என ஐயர் இடம் சொல்லி அனுப்ப இரவு சாப்பாடு மெக்டோனல்ட்ஸ் சென்று நாங்கள் சாப்பிட்டோம். நான் தமிழில் கேட்க அவனோ ஆங்கிலத்தில் பதில் சொல்லிக் கொண்டே இருந்தான். எனக்கு தர்மசங்கடமாக போய்விட்டது. அவனுக்கு தமிழ் தெரியாதோ என நான் நினைக்க அங்கே வேலை பார்க்கும் மற்றொரு பையனிடம் தமிழில் பேசினான். சரி என நான் மீண்டும் தமிழில் கேட்க அவனோ ஆங்கிலத்தில் மட்டுமே என்னிடம் பதில் சொன்னான். தமிழில் சொல்லுங்க என நான் சொன்னது அவனது காதில் விழவே இல்லை. மொழி தொலைந்து போய் விடும் அநாகரிகம்! நகரத்தில் மட்டுமே இப்படி, அதனால் அச்சப்பட தேவையில்லை என்றே டிரைவர் நண்பர் சொன்னார். 

பன்னிரண்டு மணிக்கு ஹோட்டல் அடைந்தபோது அன்றைய தின அலைச்சல் எல்லாம் தொலைந்திட மீண்டும் பெய்த மழைத் தூறலில் சிறிது நேரம் நடந்தோம். காலையில் எழுந்தபோது எட்டு மணி மேல் ஆகி இருந்தது. கிளம்பி தயாராக பத்து மணி ஆகி இருந்தது. இனி சாப்பாடு கிடையாது என நினைத்து ஹோட்டலில் இருக்கும் உணவகம் செல்ல பத்தரை மணி வரை உணவகம் திறந்து இருக்கும் என்றார்கள். கொஞ்சம் நிம்மதி. இட்லி, பொங்கல் வடை என நமது உணவு. பேசாமல் இந்த உணவுக்காகவே இந்தியாவில் வாழ்ந்துவிட்டு போகலாம் என்றே தோணியது. 

திடீரென எனது மனைவி, அதோ ஒரு நடிகை என்றார் (வீட்டில் சன் டிவி, டிவிடி படம் நாங்கள் பார்ப்பது உண்டு). நாங்கள் அமர்ந்து இருந்த நாற்காலியில் இருந்து மூன்று நாற்காலி தள்ளி தனது குடும்பத்துடன் அமர்ந்து இருந்தார் நடிகை ஜெனிலியா. அவரைப் பார்க்க வேண்டும் என எவரும் ஓடவில்லை. அங்கே பலரும் சாதாரணமாகவே இருந்தார்கள், நாங்கள் உட்பட. அங்கே மிகவும் சாதாரணமாக அவராலும்  இருக்க முடிந்தது. இந்தியாவில் சினிமாவிற்கு என ஒரு தனி இடம், சினிமா கலைஞர்களுக்கு என தனி மரியாதை இருந்தாலும் அங்கே எதுவும் தென்படவில்லை. 

ஹோட்டலில் இருந்து சென்னை வரவே மதியம் ஆகிப்போனது.  மீண்டும் வேறு சில கடைகள் சென்றோம். நல்லியில் சாமிக்கு தேவையான உடைகள் வாங்கினோம். புது நல்லி, பழைய நல்லி என இருப்பது அன்றுதான் தெரிந்து கொண்டேன். சென்னையில் இருந்த சகோதரர் வீடு சென்றோம். அங்கிருந்து மற்றொரு உறவினர் வீடு சென்றோம். மேலும் சில உறவினர்கள் வீடு இருந்தாலும் செல்ல இயலவில்லை. உறவினர் வீடு சென்றபோது இரவு பத்து மணி. தைக்க கொடுக்கப்பட்ட துணி வாங்கிட அன்று முடியாமல் போனது. நாளை எப்படியாவது வாங்கித்தான் ஆக வேண்டும். சென்னையில் இருந்த போக்குவரத்து நெரிசல், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடம் செல்ல ஆகும் நேரம் எல்லாம் கணக்கில் வைத்து ஹோட்டலில் இருந்து நாளை மறுநாள் அப்படியே அங்கிருந்து நகரத்திற்குள் வராமல் கிராமம் சென்று விடலாம் என நினைத்தோம். 

அடுத்த நாள் வழக்கம்போல காலை உணவு. அன்று போக்குவரத்து போலீசார்... இந்தியா என்றுமே இந்தியாதான். 

(தொடரும்) 

Friday 7 September 2012

என்ன சொல்லி தந்தது இந்தியா? 2

காரினை நடு சாலையில் நிறுத்திவிட்டு, சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த மூன்று நபர்களிடம் பேசி அவர்களை அழைத்து வந்தார் டிரைவர். நானும் இறங்கி கொள்கிறேன் என நான் சொல்ல, வேண்டாம் சார் என்றே சொன்னவர் அந்த மூன்று நபர்கள் காரினை தள்ள, கார் ஏனோ கிளம்பவே இல்லை. அவர்கள் காரினை சாலையின் ஓரமாக தள்ளிவிட்டு  சென்றுவிட்டார்கள். 

போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் வாகனங்கள் எதுவுமே வேகமாக செல்லாமல் இருந்தது மனதில் அச்சத்தை விலக்கி இருந்தது. மீண்டும் காரில் இருந்து இறங்கிய டிரைவர் வேறு ஆட்களிடம் பேசிவிட்டு வந்தார். வாகனங்கள் கிளம்ப, பேசி வைத்த ஆட்கள் மறக்காமல் வந்து காரினை தள்ளினார்கள். கார் இந்த முறை கிளம்பியது. காரினை தள்ளியவர்கள் முகத்தில் மகிழ்ச்சி. அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டோம். ஓகே என ஒரு வார்த்தையோடு விலகிப் போனார்கள். யார் இவர்கள்? உதவி என கேட்டதும் ஓடோடி வந்து செய்துவிட்டு போகும் யார் இவர்கள்? 

லண்டனில் ஏழு வருடங்கள் முன்னர் மாலை ஏழு மணிக்கு சாலையில் திடீரென நின்று போன எனது காரினை நான் மட்டுமே தள்ளி சென்ற நினைவுகள் வந்தது. அதிகமான வாகனங்கள் சாலையை அலங்கரித்தாலும் அவரவர் வேகம் அவரவருக்கு தெரிந்தே இருக்கிறது. யார் மீதும் அத்தனை எளிதாக மோதமாட்டார்கள் என டிரைவர் சொன்னபோது எத்தனை நெருக்கடியிலும் வாழப் பழகிப் போன இந்திய சமூகம் மனதோடு நின்றது. 

மகாபலிபுரம் சாலை என நான் தவறாக தகவல் தர, ஈ சி ஆர் சாலையில் செல்லாமல் மகாபலிபுரம் சாலையில் சென்று ஓரிடத்தில் விசாரித்தபோது இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டும் என சொன்னார் ஒருவர். அவர் சொன்ன பின்னர் தான் எனக்கு ஈ சி ஆர் சாலையே நினைவுக்கு வந்தது. ஈ சி ஆர் சாலை நேர் பாதை. மகாபலிபுரம் சாலை சுற்றுப் பாதை. ஒரு வழியாக ஹோட்டல் வந்தடைந்தபோது போதும் போதும் என்றாகிவிட்டது. இத்தனை தொலைவிலா ஹோட்டல் என சற்று அயர்ச்சியாக இருந்தது. சென்னை நகரத்துக்குள் செல்ல மலைப்பாக இருந்தது. 

ஹோட்டல் சென்றதும், அங்கே மாலை போட்டு வரவேற்றார்கள். மிகவும் சிறப்பான வரவேற்பாக இருந்தது. தனியாக வில்லா ஒன்றை பதிவு செய்து இருந்தோம். வில்லாவிற்கு வெளியே ஊஞ்சல். வில்லாவில் இருந்து நடக்கும் தொலைவில் கடல். மிகவும் ரம்மியாமாக இருந்தது. அறையின் அமைப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. திறந்த வெளியில் குளிக்கும் வண்ணம் ஒரு அறை இருந்தது. அந்த அறையை சுற்றிய சுவர் இருப்பினும், வெளியில் இருந்து பார்த்தால் மூங்கில் வைத்து கட்டப்பட்டு இருந்தது. விலை அதிகம் தான். ஆடம்பரத்திற்கு எப்போதுமே விலை அதிகம் தான். சில நேரங்களில் வாய்ப்புகளை பயன்படுத்தாது போனால் வேறொரு வாய்ப்பு அத்தனை எளிதாக வந்துவிடுவதில்லை. சிறிது நேரம் ஒய்வு எடுத்துவிட்டு சென்னை நகரத்திற்குள் சென்றோம். 

வாகனத்தை ஒரு சாலை விதி கண்காணிப்பாளர் நிறுத்தினார். டிரைவர் அவரிடம் சென்று பேசி நூறு ரூபாய் அபராதம் கட்டிவிட்டு வந்தார். என்னவென விசாரித்ததில் வாகனத்தின் கண்ணாடியில் குளிர்ச்சிக்காக ஒட்டப்பட்ட தாளினை அகற்ற வேண்டும் எனும் விதி உள்ளது என சொன்னார். இருப்பினும் இது குறித்து வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது என சொன்னதும், இதெல்லாம் பிரச்சினை இல்லை என்று சொன்னார். எனக்கு ஏனோ எதற்கு விதிகள் மதிக்கப்படுவதில்லை என்றே தோன்றியது. உடனே எடுத்துவிடுங்கள் என டிரைவர் நண்பரிடம் சொல்லிவைத்தேன். மதுரைக்கு சென்ற பின்னர் எடுத்துவிடலாம் என்றே சொன்னார். 

சாலையின் தன்மை என்னை மிரள செய்தது. வேலை நடக்கிறது என எங்கே பார்த்தாலும் சாலைகள் தங்களது அழகை சூறையாடிக் கொண்டிருந்தன. புதிதாக கட்டப்பட்ட எக்ஸ்பெராஸ் மால் சென்றோம். கட்டிடத்திற்குள் மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. ஆடம்பரத்திற்கு விலை மிக மிக அதிகம். மனைவிக்கு மிகவும் சந்தோசம். சிறிய சிறிய கடைகளாக இருந்தாலும் மிகவும் அழகிய பொருட்கள் நிறைந்தே காணப்பட்டன. இந்தியா கலைக்கு மட்டுமல்ல, கலைத்துவம் வாய்ந்த பொருட்களுக்கும் உன்னதமான இடம். கண்ணில் எடுத்து ஒற்றிக் கொள்ளலாம் போலிருந்தது. ஒரு கடையில் அந்த பொருட்களை செய்து கொண்டிருந்தவரை கண்டபோது பிரமிப்பு மிஞ்சியது. எத்தனை திறமையான மனிதர்களை கொண்டது இந்தியா என்று நினைக்கும் பொது பெருமிதமாக இருந்தது. அவரிடம் நான் பேசிய தமிழ் அவருக்கு புரியாமல் போனதற்கு காரணம் அவர் வடநாட்டினை சேர்ந்தவர் என்பது பின்னர் தெரிய வந்தது. 

துணிகள் வாங்கி அங்கேயே தைக்க கொடுத்துவிட, மாலை ஆறு மணிக்கு வாருங்கள் என அவர்கள் சொல்லி வைக்க, நகைக் கடை ஒன்றுக்கு சென்றோம். பணம் இல்லை என்கிற புலம்பல் ஒரு பக்கம். மக்கள் நிறைந்த கடைகள் என மறுபக்கம். மேல்தட்டு மக்கள், கீழ்தட்டு மக்கள். எல்லா நாட்டிலும் உண்டு. பழைய நகை கொடுத்து புதிய நகை வாங்க இந்தியா ஒன்றே சிறந்த இடம். 

லண்டனில் பழைய நகை கொடுத்தால் பத்து சதவிகிதம் கூட நகைக்கான பணம் தரமாட்டார்கள். ஆனால் இந்தியாவில் மட்டுமே பழைய  நகை எனினும் நகைக்கான பணத்தை ஓரளவு மதிப்புக்கு தருகிறார்கள் என்றே தோணியது. கையில் இருந்த பிளாஸ்டிக் அட்டையை கொடுத்ததும், பணம் எடுக்க இயல வில்லை என கடையில் இருந்த பெண் சொன்னதும் திடுக்கென இருந்தது. சரி என கிரெடிட் கார்ட் வாங்கி பார்த்தால் முடிந்து போன கிரெடிட் கார்ட். அடக்கடவுளே, என்ன செய்வது என திகைக்க எதை உபயோக்கிக்க கூடாது என்று இருந்தேனோ அந்த கார்டுகளை கொடுத்து நிலைமையை சரி செய்து  நகை வாங்கி கொண்டு வெளியே வந்தால் மழை. அந்த மழை சத்தத்தில் எத்தனை முறை சொன்னேன், எல்லாம் சரியாக இருக்கிறதா என பார்த்து வாருங்கள் எனும் மனைவியின் அன்பு பாராட்டு வேறு. 

இந்த மழை கிராமப் பகுதியில் விழுந்து தொலைய கூடாதா எனும் ஆதங்கம் மனதை தொட்டு சென்றது. மழை விடும் வரை கடையின் வாசலிலேயே நின்றோம். உடலில் பட்டு தெறிக்கும் மழை குமிழிகள், அந்த மழையோடு வந்து போகும் காற்று. இந்தியா இன்னும் இதமாகவே இருக்கிறது. 

துணிகள் தைக்க கொடுத்த கடைக்கு தகவல் சொல்லலாம் என அவர்கள் கொடுத்து இருந்த அட்டையில் இருந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ள, இந்த எண் தற்போது தொடர்பில் இல்லை என்றே வந்தது. அருகில் இருந்த நபரை தொடர்பு கொள்ள சொன்னேன். அவரும் மறுப்பேதும் சொல்லாமல் தொடர்பு பண்ணியவர், இந்த நம்பர் இணைப்புல இல்லையே சார் என்றார். இந்தியா என்னதான் சொல்லி தந்தது?

(தொடரும்)