Saturday 18 February 2012

பகவத் கீதையைத் தீண்டியபோது - 3 (குணம், வர்ணம், ஞானம்)

பகுதி 2 


கண்ணன் உலகம் தோன்றா காலம் முன்னரே இந்த கீதையை நண்பர்களுக்குச் சொல்லி வந்தானாம். ஒவ்வொரு முறையும் கீதை மறக்கும் பட்சத்தில் மறுபடியும் நண்பனுக்குச் சொல்வானாம். அப்படிச் சொல்லப்பட்ட, இறுதியாகச் சொல்லப்பட்ட கீதைதான் அர்ச்சுனனுக்குச் சொன்னது. அதெப்படி உலகம் தோன்றா முன்னர் சொல்லி இருக்க கூடும், அப்படி எந்த நண்பருக்கு சொல்லி இருக்க கூடும் என்றெல்லாம் என்னிடம் கேட்க கூடாது. 'நல்லாவே காதுல பூ சுத்துறான்' என ஒரு நமட்டு சிரிப்பும் சிரிக்க கூடாது. ஏனெனில் இது பகவத் கீதை. புரிகிறதோ? 


இப்படித்தான் புனித நூல்கள் எல்லாம் தங்களிடம் இருக்கும் 'அழுக்கினை' மறைத்துக் கொண்டு புனிதத் தன்மையினை பாதுகாத்து கொண்டு வருகின்றன என சொல்வோர்கள் உண்டு. நான் எல்லாம் அப்படி சொல்லமாட்டேன். புனிதமான விசயங்களை கூட அழுக்கு படுத்திவிடும் குணங்கள் உடையவர்கள்தான் நாம். 


மூன்று வகை குணங்கள் உடைய மனிதர்கள் என பிரிக்கலாமாம். ஆனால் இந்த மூன்று வகை குணங்கள் ஒவ்வொன்றில் கொஞ்சம் கொஞ்சம் என எல்லா குணங்களும் ஒரு மனிதரிடம் இருக்கும். இந்த மூன்று வகை குணங்களில் எது மேம்பட்டு இருக்கிறதோ அந்த குணத்தை வைத்து அவரை குணவான், கனவான் என சொல்லிக் கொள்ளலாம். ஒரே மரபணுவில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஓங்கியதன்மை உடையது, மற்றொன்று தாழ்த்திய தன்மை உடையது. ஓங்கும் தன்மை செயல்பாடே அது வெளிப்படுத்தும் என்பார்கள். அதே வேளையில் இரண்டு தாழ்த்திய தன்மை இணைந்தால் தாழ்த்திய தன்மை வெளிப்படும் என்பார்கள். நமது குணநலன்கள் மரபணுக்களில் ஒளிந்திருக்கிறதா என்பதை சர்வ வல்லமை பொருந்திய இறைவன் தான் இனி எவர் மூலமாவது வெளியிட இருக்கும் வேத நூலில் தெளிவாக சொல்லவேண்டும். 


மூன்று வகை குணங்கள் எது. சுயநலம் அற்ற வெள்ளேந்தியான கள்ளம் கபடமற்ற சத்வ குணம். இந்த குணம் கொண்டோர் எவரையேனும் காட்டுங்கள் பார்க்கலாம். சில தினங்கள் முன்னர் தான் ஒரு பதிவில் சொன்னோம், சுயநலவாதிகளால் ஆனது உலகம் என. மனிதர்களுக்கு கொஞ்சம் இருக்கும், ஆனால் ஞானிகள், யோகிகள் எல்லாம் இந்த குணம் கொண்டவர்கள் என்கிறது வரலாறு. அப்படியெனில் மனிதர்களுக்கு இல்லை? குழந்தைகள். பொம்மையை தனக்கென வைத்து கொள்ளும் குழந்தைகள் கூட உலகில் உண்டு. இவ்வுலகை படைத்துவிட்டு வேடிக்கைப் பார்க்கும் இறைவன் கொண்டது சத்வ குணமோ? 


தானே எல்லாம், தன்னால் தான் எல்லாம் முடியும் என்று தற்பெருமை சொல்லித்திரியும் அகங்காரம் கொண்டு அலையும் தற்குறிகள் கொள்ளும் ரஜோ குணம் அடுத்தது. இதே கண்ணன் நானே எல்லாம், என்னை நீங்கள் பின்பற்றுங்கள், என்னால் மட்டுமே முடியும் என சொல்வது ரஜோ குணம் இல்லையா? இறைவனால் மட்டுமே முடியும், இறைவன் மட்டுமே உலகை படைக்க இயலும் என்பது இறைவனுக்கு ரஜோ குணத்தை தருவதில்லையா? 


எதுவுமே செய்வது இல்லை. உண்பது கூட அடுத்தவர் ஊட்டி விட வேண்டும். உறங்க வைக்க அடுத்தவர் தாலாட்ட வேண்டும் என சோம்பேறியாய் வாழ்வதே தமோ குணம். இந்த குணத்தில் இருப்பவருக்கு இவ்வுலக வாழ்க்கை பற்றி எதுவுமே தெரிவதில்லை. கடவுளா, அவன் கிடக்கான், ராஜாவா அவன் கிடக்கான் என தான் கிடந்தது உழல்பவர். இறைவன் இவ்வுலகில் எதுவுமே செய்வதில்லையே, எல்லாம் மனிதர்கள் தானே செய்து கொண்டிருப்பது அப்படியெனில் இறைவன் கொண்டது தமோ குணமா?


ஒவ்வொருவருக்கம் இந்த மூன்று குணநலன்கள் இருக்கத்தான் செய்யும். நான் சில விசயங்களில் சோம்பேறியாய் இருக்கிறேன், சில விசயங்களில் அகங்காரம் கொண்டு திரிகிறேன், சில விசயங்களில் கள்ளம் கபடமற்று சுயநலமற்று இருக்கிறேன். 


அடுத்ததாக வர்ணம் பற்றி பேசுகிறது கீதை. எனக்கு தெரிந்தது வானத்தில் மழை விழுந்த பின்னர் தெரியும் வானவில். வானவில் ஏழு நிறங்கள் கொண்டது என்றுதான் படித்து இருக்கிறேன். வயலட், இண்டிகோ, புளு, கிரீன், எல்லோ, ஆரஞ்சு, ரெட் (தமிழ் படுத்திக்கோங்க). ஆனால் மனிதர்களில் நான்கு வகை வர்ணங்கள உடையவர்கள் இருக்கிறார்களாம். மனிதர்களில் கூட நிறத்தை தருவது மெலனின் எனும் ஒரு நிறமி. இந்த மெலனின் நிறமி மூன்று வகைப்படும். இந்த மெலனின் நிறமியை உருவாக்கும் மேலநோசைட் பற்றி தான் மூன்று வருடம் ஆராய்ச்சி செய்தேன். இந்த மெலனின் நிறமி தராத வேறு நான்கு வர்ணங்களை இந்த கீதை பேசுகிறது. 


சென்ற பதிவில் குறிப்பிட்டோம், நம்மை தொழில் ரீதியாகவே அறிமுகப்படுத்துவோம் என, அதே போலவே இந்த வர்ணங்கள் தொழில் ரீதியாகப் பூசப்படுகிறது. அந்தணன், சூத்திரன், வைஷ்யன், சத்திரியன். 


பழியே இல்லாத தூய்மையான ஆத்மா அந்தனணன். அடடா! இழிநிலை வாழ்வு கொள்பவன் சூத்திரன். ஆஹா. அடுத்தவன் குடியை கெடுப்பவன் வைஷ்யன். சபாஷ். அழிக்கிரதையே செய்பவன் சத்திரியன். அருமை. ஆனால் மேற்சொன்ன குணங்களையும் இந்த நிலைகளையும் ஒப்புமைபடுத்தி பார்த்தால் எல்லா வர்ணங்களையும் பூசிக்கொண்டு திரிபவரகாத்தான் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது மிகவும் தெளிவு. நான் வர்ணம் பற்றி பேசினால் எனது வலைத்தளத்தில் 'சாணி' எறிந்துவிடுவார்கள் என்பதால் இத்துடன் நிறுத்தி கொள்கிறேன். ஏனெனில் அந்த ஞானம் எனக்கு இருக்கிறது. 


அதென்ன ஞானம்? பலனை எதிர்பார்க்காமல் செயல்களை செய்வதே ஞானம் என்பார்கள். அப்படி செய்பவர்கள் ஞானி என போற்றப்படுவார்கள். ஆசை எதுவும் இருக்க கூடாது, ஆனால் ஆர்வத்துடன் செயலாற்ற வேண்டும். என்னப்பா இது! இந்த உலகத்துக்கு இது அடுக்குமா? ஆசை இல்லாம ஆர்வம் வருமா? பலன் இதுதான் என நினைக்காம எதுவும் செய்ய முடியுமா? 
ஆனால் மிருகம் வேறு மனிதன் வேறு என்பதே இங்குதானாம். 

ஞானிகள் எல்லாம் ஞானம் தேடி குகைகளைத் தேடித் போவாங்க. எந்த ஞானம் தேடி போறாங்க, எந்த ஞானத்தை கண்டு கொண்டாங்க அப்படின்னு பார்த்தா ஒண்ணுமே இல்லை அப்படின்னு பல வருஷம் தியானம் இருந்து கண்டு சொல்வாங்க. பாவ புண்ணியம் எல்லாம் பத்தி இந்த ஞானம் தெளிவா சொல்லுமாம். ஒருத்தருடைய பாவத்தை போக்க இன்னொருத்தர் பாவம் பண்ணுறது எப்படி நியாயமாகும்? இந்த ஞானம் பெற தியானத்தை இமயமலை போன்ற இடங்களில் போய் செய்வாங்களாம். 



ம்ம். இவ்வுலக ஆசைகளும், பந்தங்களும் துன்பத்திற்கே என விட்டு ஒதுங்கி வாழ்வதா வாழ்க்கை. ஒரு வேலையும் செய்யாமல் தியானம் பண்ணுவதைவிட வேலையை தியனாமாக செய்வது சால சிறந்தது. ஞானிகள் வாழும் ஆசையற்ற, பந்தங்கள் அற்ற ஆனந்தமான வாழ்க்கை போல, ஆசையுள்ள, பந்தங்கள் உள்ள ஆனந்தமான வாழ்க்கையும் உண்டு. மனிதர்கள் எல்லாம் பாவிகளாம். இப்படி சொன்னவரை அப்பாவி என்பதா, அடப்பாவி என்பதா. 


எது பாவம்? நமது எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள், பிறருக்கு துன்புறுத்தல் தராமல் இருக்கவேண்டும் எனில் நாம் எதையும் இவ்வுலகில் செய்ய முடியாது. ஆக பாவம் என சொல்லப்படுவதே பாவமின்றி, மற்றவை பாவம் என வரைகொட்டில் வைக்க முடியாது. இந்த பாவம் குறித்த அறியாமை நிறையவே எனக்கு இருக்கிறது. 


அறிவுள்ள ஒருவன் தனது அறிவினை உபயோகப்படுத்தாமல் இருந்தால் அவன் எப்படி ஞானி ஆவான்! 

பொருள் பற்று இல்லாதவனை ஞானியாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் அறிவு தனில் பற்று இல்லாதவனை ஞானியாக ஏன் ஏற்றுக் கொள்வதில்லை. அறியாமையில் இருப்பதால் நானும் ஞானியாக ஆசைப்படுகிறேன். 
நினைவுகளை நம்முடன் மறந்தே எடுத்துச் செல்கிறோம், வந்து் இருக்கிறோம், செல்லவும் செய்வோம்! அந்த நினைவுகளை மட்டும் மறக்காமல் இருந்திட பரந்தாமன் வழி சொல்வானெனில் உண்மை உணர்த்தப்பட்டுவிடும். 


ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தி நினைவில் கொண்டால் மறக்காது என எனக்கு நினைவில் வைப்பதின் அதிசயம் பற்றி ஒருவர் பாடம் சொல்லித் தந்தார். அவர் பெயர் இன்று என் நினைவில் இல்லை. மறதி மனிதனுக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம். 'கடமையைச் செய், பலனை எதிர்பாராதே'' எனப் படிக்கும்போதெல்லாம் மிகவும் வியப்பாக இருக்கும். ஒரு செயலானது செய்யும்போது அது எவ்விதத்தில் முடிய வேண்டும் என பகுத்தாராய்ந்து செய்வதுதான் சரியான முறை. இது செய்தால் இது கிடைக்கும் என எதிர்பார்த்து செய்தல் கூடாது என்பது ஒரு வகையில் மிக அழகாக, அறிவாக இருந்தாலும் என்ன பலன் என்பதை அடிப்படையாய் வைத்து ஒரு காரியம் செய்வதுதான் நடைமுறை. பலனை எதிர்பார்க்காமல் செய்கிறேன் என நினைக்கும் போதே ஒரு எதிர்பார்ப்பு வந்து அமர்ந்து கொள்வது என்னவோ மனதை கனக்கச் செய்கிறது. எல்லாம் இருந்து, வேண்டாம் எனச் செல்வதுதான் பற்றற்ற தன்மை. அப்படி இல்லாத பட்சத்தில் அது இயலாமையாக கருதப்படும். அறியக்கூடிய தன்மை பெற்றபின் அறிவில் பற்று இல்லாதவரைத்தான் ஞானியாக ஏற்றுக் கொள்ள முடியும். அறியாமைக்கு காரணமான அறிவை அறிந்து கொண்டு அதனை பற்றாமல் இருப்பவரை ஞானியாக ஏற்றுக் கொள்ளலாம் என்றுதான் நினைக்கிறேன். 

பிறப்பு இறப்பு பற்றி எண்ணும்போதெல்லாம் எதற்கு கண்ணன் என எண்ணத் தோன்றும்! இது காலம் காலமாக நடக்கும் யாகம் எனில் எதற்கு கண்ணன்? இல்லாத ஒன்று இருந்ததாய் கண்டு கொண்டதன் உண்மைதான் என்ன? மரணம் அறிவுறுத்துவதில்லை, பயமுறுத்துகிறது. எல்லாவற்றையும் ஏற்றுக் கொள் என வரும்போது எதனை விடுப்பது என்பது கேள்வியாக நிற்கப்போவது இல்லை. எல்லாவற்றையும் விடுப்பது என வரும்போது எதனை ஏற்பது என்பது ஒரு கேள்வியாக நிற்கபோவது இல்லை. நாம் எதனையும் பெறுவதுமில்லை எதனையும் இழப்பதுமில்லை என்பதுதான் உண்மையிலும் உண்மை. 

அகந்தை என யார் எதனைச் சொல்வது? ''நானே எல்லாம்'' என கண்ணன் சொல்லும்போது எனக்கு அது மாபெரும் அகந்தையாய் தெரிகிறது! எல்லாம் அவன் என நான் சொல்லும்போது எனக்கு அது அடக்கமாய் தெரிகிறது. எனது செயல்களுக்கு பொறுப்பு யார் ஏற்பது? நான் செய்ததை நான் செய்தேன் எனச் சொல்லிக் கொள்வது அகந்தையா? என்னால் மட்டுமே செய்ய முடியும் என மார் தட்டிக் கொள்வது அகந்தையா? கர்வப்படு. எல்லாம் தொலையும் என தெரிந்தும் கர்வப்படு. 


--------------------

obsessive-compulsive disorder - இது குறித்து நான் மிகவும் அச்சப்படுகிறேன். நாம் எல்லாம் இறைவன் குறித்த விசயத்தில் இப்படித்தான் இருக்கிறோமோ என எண்ணத் தோன்றும்!

எட்ட முடியாத யோகம் எட்டு நிலைகளாய்! சமாதி என்பது எப்படி உணர்வு நிலையாகும்? சமாதி என்பது உணர்வற்று போகும் நிலைதானே! இங்கு உணர்வு நிலை என்பது இறை உணர்தல் நிலையை குறிக்கிறதா? எட்டு நிலை யோகத்தை பின்னர் பார்க்கலாம்.

ஹூம்... ஒரு குழந்தை ஒரு முறை ஆர்வமுடன் ஒரு விசயம் பற்றி கேட்டதும் அக்குழந்தைக்கு அதற்கான விடை சொல்லப்பட்டால் அக்குழந்தை போகிற போக்கில் எல்லா விசயமும் பற்றி கேட்க ஆரம்பித்துவிடுமாம்! அப்படித்தான் அர்ச்சுனன் தெரிகிறான். உலகம் தோன்றா முன்னர் சொன்ன இந்த கீதையை ஒவ்வொருவருக்கும் திரும்ப திரும்ப சொன்ன கண்ணனுக்கு எதற்கு சலிப்பு ஏற்படவில்லை?


Friday 17 February 2012

பன்முக பதிவர் விருதும் பயந்துபோன நானும்

முதலில் இந்த 'பன்முக பதிவர்' விருதினை எனக்கு அளித்து சிறப்பித்த சகோதரி ஷக்திபிரபா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி சகோதரி.

பொதுவாகவே விருது என்றால் எனக்கு என்னை அறியாமல் பயம் வந்து தொற்றிக்கொள்ளும். எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி செல்லும் எழுத்துகள் காலப்போக்கில் சுயத்தை தொலைத்துவிடும் என்கிற அவசியமற்ற பயம் தான் அது. இதோ இவர்கள் கவனிக்கிறார்கள், அதோ அவர்கள் கவனிக்கிறார்கள் என ஒரு எண்ணம் மனதில் வட்டமிடும்போது அங்கே எதிர்பாராத ஒரு பயம் வந்து சேர்ந்துவிடுகிறது, எங்கே ஏதேனும் எவரேனும் சொல்லிவிடுவார்களோ என அத்தியாவசியமற்ற மனநிலை அனைவருக்கும் நிகழ்வது இயல்பு. ஆனால் அதை எல்லாம் தாண்டி பயமற்ற ஒரு எழுத்து என்பதுதான் ஒருவரின் சுயத்தை அடையாளம் காட்டும். ஒரு எழுத்தை மென்மையாக, இலைமறை காயாக வெளிப்படுத்துவது என்பதைத்தான் நாகரிகம் எனவும் சொல்கிறார்கள். ஒருவர் சொல்லும் விதம் தனில் உங்களது முகம் சுளிக்கிறதா, விரிவடைகிறதா என்பதுதான் அந்த சொல்லிய விதத்திற்கு வெற்றி. ஆனால் எல்லா விதங்களில் எழுதுபவர்களைப் போலவே எல்லா விதங்களிலும் ரசிப்பவர்கள் இருக்கிறார்கள்.

உங்களை நீங்கள் எப்படி அறிமுகப்படுத்த விரும்புகிறீர்கள் என எல்லோரிடமும் ஒரு கேள்வி கேட்போம். அனைவருமே தான் செய்யும் தொழில் சம்பந்தபடுத்தித்தான் தங்களை அறிமுகபடுத்துவார்கள்.  அதை எல்லாம் தாண்டி தனிப்பட்ட மனித குண நலன்கள் எல்லாம் எவருக்கு தேவை என்கிற போக்குதான் நம்மிடம் இருப்பது. இப்போது ஒருவர் பலதுறைகளில் புலமை பெற்றவராக இருப்பதால் ஒரு துறையில் தனித்தன்மை பெற இயலாது போகிறது என்றே சொல்வோர் உண்டு. ஆனால் ஒரே ஒரு தொழிலை முதன்மையாக வைத்து கொண்டு மற்ற விசயங்களில் தம்மை ஈடுபடுத்தி கொள்வோரும் உண்டு. முதன்மையான தொழிலை வைத்தே அவரது அடையாளம் பேசப்படும். இதுவரை என்னை நான் பதிவர் என எவரிடமும் அறிமுகமும் செய்தது இல்லை, நான் பதிவுகள் எழுதுகிறேன் என நேரடியாக எவரிடமும் சொல்லிக்கொண்டது இல்லை. எனக்கு இந்த பதிவு எழுதுவது எல்லாம் ஒரு எழுத்து விளையாட்டு போலத்தான். அப்படி எழுத்துவிளையாட்டில் கிடைக்கும் அங்கீகாரம் மிகவும் பெரியது. ஏனெனில் சின்ன சின்ன பாராட்டு கூட மன மகிழ்ச்சியை தரும்.

நான் பதிவர்களுக்கு விருது தர வேண்டும் என ஆரம்பித்து இரண்டே இரண்டு பதிவர்களுக்கு மட்டும் தந்துவிட்டு நிறுத்தி கொண்டேன். விருது வழங்குவதை கூட ஒரு ஆத்மார்த்தமாக செய்ய வேண்டும் என்கிற நினைப்பில் அப்படியே நிறுத்திவிட்டேன். இந்த வலைப்பூவில் நான் பெற்ற விருதுகள் என இந்த விருதுடன் சேர்த்து மூன்று விருதுகள். இந்த விருதை நான் எனக்குப் பிடித்த பதிவர் ஐந்து பேருக்குத் தந்தால்தான் நான் இந்த விருதை ஏற்றுக்கொண்டேன் என்பதற்கு சமம் என்ற வாசகம் என்னை சில நாட்கள் யோசிக்க வைத்துவிட்டது.

பொதுவாக மின்னஞ்சல் மூலம் வரும் செய்திகள் இப்படித்தான் வரும். இதை நான்கு பேருக்கு அனுப்புங்கள், எட்டு பேருக்கு அனுப்புங்கள் என. நான் அதுபோன்ற மின்னஞ்சல்களை இதுவரை கண்டுகொண்டதே இல்லை. ஒன்றை ஆத்மார்த்தமாக செய்வதற்கும், செய்ய சொல்லிவிட்டார்களே என செய்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. விருதுகள் பெற்ற நண்பர்கள் மிகவும் பாக்கியசாலிகள், அவர்களால் ஆத்மார்த்தமாக பதிவர்களை தேர்ந்தெடுக்க முடிந்தது. நான் பல பதிவர்களை மனதில் பரிசீலித்து கொண்டே இருக்கும்போதே அவர்கள் எல்லாம் விருதுகள் பெற்று கொண்டிருந்தார்கள். ஆஹா இப்படி வெட்டி வியாக்கியானம் நினைப்பு கொண்டிருந்தால் பதிவர்கள் மிச்சம் இருக்க மாட்டார்கள் எனும் நினைப்பு வந்து வெட்டிப் போனது. இருப்பினும் பரிசீலித்து கொண்டேதான் இருக்கிறேன்.

பன்முக பதிவர் என்றதும் எனக்கு 'எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான்' என்ற பாடல் மட்டுமே நினைவில் வந்தது. அந்த பாடல் கேட்கும்போதெல்லாம் என்னையறியாமல் ஒரு உணர்வு சில்லிட்டுப் போகும்.

எங்கிருந்தோ வந்தான்,
இடைச்சாதி நான் என்றான்,
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்

சொன்னபடி கேட்பான் துணிமணிகள் காத்திடுவான்
சின்ன குழந்தைக்கு சிங்காரப் பாட்டிசைப்பான்
கண்ணை இமையிரண்டும் காப்பது போல் என் குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டறியேன்

பற்று மிகுந்து வரப் பார்க்கின்றேன் கண்ணனால்
பெற்று வரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
நண்பனாய்  மந்திரியாய் நல்லாசிரியனுமாய்
பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய் - ரங்கன்

எங்கிருந்தோ வந்தான்

இப்படி பல வேசங்கள் தரித்து வாழும் வேடதாரியான நம்மில் பல விசயங்கள் பற்றி எழுதும் தன்மை இருப்பது இயல்போ என தெரியவில்லை. ஆனால் நம்மில் பலர் மிகவும் குறிப்பாக, ஒரு சம்பந்தப்பட்ட துறை மட்டுமே எழுதும் இயல்புடனும் இருக்கிறோம். அப்படி இருப்பவர்கள் பன்முக பதிவர் விருது பெரும் தகுதி அற்றவர்களா என்றால் அதுதான் இல்லை. ஒரே துறை பற்றி எழுதினாலும் அதில் கூட சில பல புதுமைகள் பற்றி எழுதுபவர்கள் கூட பன்முக பதிவர்கள் தான்.

நான் தேர்ந்தெடுக்க இருக்கும் ஐந்து பதிவர்கள் பற்றி விரைவில் எழுதுகிறேன். இந்த விருதினை நான் ஏற்று கொண்டேன் என முழு மனதுடன் உறுதி செய்கிறேன். அதற்கு முன்னர் எனக்கு பிடித்த ஏழு விசயங்கள் பற்றி சொல்லிவிடுகிறேன்.

1. எனக்கு சாப்பிடுவது மிக மிக பிடிக்கும்.

2. எனக்கு எழுதிக்கொண்டிருப்பது மிக மிக பிடிக்கும்

3. புராண காலத்து வேதங்கள், எழுத்துகள் எல்லாம் வாசித்து மகிழ்ந்திருக்க மிக மிக  பிடிக்கும்

4  மக்களுக்கு என்னை முன்னிறுத்தாமல் சேவகம் செய்வது மிக மிக பிடிக்கும்

5 . மலைகள், காடுகள், நாடுகள் என சுற்றிப் பார்க்க மிக மிக பிடிக்கும்

6  யாதும் ஊரே யாவரும் கேளிரும், நன்றும் தீதும் பிறர் தர வாராவும், இறைவனும் மிக மிக பிடிக்கும்.

7 பிடிக்காத விசயங்களை கூட 'வந்து இந்த பூமியில் வந்து பிறந்தோமே' என்பதற்காக செய்வது பிடிக்கும்.

Thursday 16 February 2012

காதலில் காதல் இல்லை

வருடம் தவறாமல் வாங்கி செல்கிறேன்
வாடிப்போக இருக்கும் பூக்களையும்
மடிந்துபோன மரத்திலால் ஆன வாழ்த்து அட்டையும்
உணர்வற்ற வண்ணமிகு பரிசுப் பொருளும்

எனது உணர்வுகளை இவையெல்லாம் சுமக்கின்றனவாம்
காதலை வெளிப்படுத்துவதன் அவசியம் சொல்கிறார்கள்
கட்டியணைத்து உச்சிநெற்றியில், ஓரத்து இதழில் பதிக்கும்
முத்தம் தரும் பாதிப்பைவிடவா இவை தந்துவிடப்போகின்றன.

கண்கள் கலங்க வைக்கும் கதைகள் கேட்டதுண்டு
காதலை காதலால் மட்டுமே அவை சொல்லிச் சென்றதுண்டு
கருமேகங்கள் மறைத்து நிற்க வேடிக்கைப் பார்க்கும்
மழைத்துளிகள் போன்றே காதல் தவித்து போகிறது

வருடம் தவறாமல் வாங்கிச் செல்கிறேன்
இதை ஒரு வழக்கமாக கொண்டபின்னர்
அதுவுமே பழக்கமாகிப் போனபின்னர்
காதலில் காதல் ஒருபோதும் இருப்பது இல்லை.