Tuesday 17 January 2012

இணையதள அறிவுகளஞ்சியங்கள் நாளை முடங்குகின்றன

அமெரிக்காவில் கொண்டுவரப்பட இருக்கும் இரண்டு சட்டங்களை எதிர்த்து இணையதளங்கள் நாளை இருபத்தி நான்கு மணிநேரம் தங்களை முடக்கி கொண்டு எதிர்ப்பினை தெரிவிக்க இருக்கின்றன. 

கிட்டத்தட்ட ஐயாயிரம்  இணையதளங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் சேர்ந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் என களத்தில் இறங்கி இருக்கின்றன. 

எப்படி நமது இணையதளத்தை முடக்குவது என்பது குறித்தான விபரங்களையும் இந்த இணையதளம் வெளியிட்டு உள்ளது. இணையதளம் வைத்திருக்காத நபர்கள் எதிர்ப்பினை ட்விட்டர், முகநூல் தனில் பதிவு செய்ய வேண்டுமென கேட்டு கொண்டிருக்கிறார்கள். சிடிசன், குடிமக்கள், என்பது போல இணையதளம் வைத்து இருப்பவர்கள் நெட்டிசன், வலைதளமக்கள், என புது பட்டம் அளித்து இருக்கிறார்கள். 

கருப்பு கொடி காட்டுவது போல எல்லா இணையதளங்களும் கருப்பாகவே இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பது எனது வேண்டுகோள். 

சரி, அப்படி என்ன அந்த இரண்டு சட்டங்கள் சொல்கிறது. இணையதள ரகசியங்கள் பாதுகாப்பு தடுப்பு சட்டம், அறிவுசார் சொத்து பாதுகாப்பு சட்டம். இப்படி இந்த இரண்டு சட்டங்கள் கொண்டு வந்தால் நிறைய அறிவுசார் இணையதளங்கள் எல்லாம் மூட வேண்டிய நிலை வந்து விடும். நாளை அமெரிக்காவில் கொண்டு வர இருக்கும் சட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும், நமது சுதந்திர பேச்சை, நமது முன்னேற்றத்தை தடுக்கும் இந்த சட்டங்கள் ஒடுக்கப்பட வேண்டும் என அறைகூவல் விடுத்து இருக்கிறார்கள்.  

இந்த இணையதளங்கள் செய்யும் பல விசயங்கள் கண்டனத்துக்குரியவையாக இருக்கின்றன என சொல்கிறார்கள். 

1  ஒருவர் எழுதிய நூலை அப்படியே அப்பட்டமாக பதிவது. (இது போன்று நான் எழுத நினைத்த கம்பராமாயணம், ஸ்ரீமத் பாகவதம் கிடப்பில் போடப்பட்டு விட்டன). 

2 பி டி எப் வடிவில் புதத்தகத்தையே காப்பி செய்து இணையத்தில் பதிவது. 

3 இசையை வெளியிடுவது, படங்களை வெளியிடுவது, தொடர்கள் வெளியிடுவது என பல வேலைகளை இலவசமாகவே செய்து வருகின்றன. இதன் மூலம் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைகிறார்கள். 

எத்தனையோ அறிவு சார்ந்த விசயங்கள் இணைய தளம் மூலம் கிடைப்பதால் நூலகம் சென்று பல வருடங்கள் ஆகிவிட்டன. அப்படியெனில் நூலகங்களில் இலவசமாக கிடைக்கும் புத்தகங்கள் முடக்கப்படுமா? ஒரு படம் வாங்கி அதில் பல படங்கள் உருவாக்கி வாடகைக்கு விடப்படும் தொழில் முடக்கப்படுமா? 

இணையதள வளர்ச்சியினால்  பதிப்புரிமை, காப்புரிமை வைத்திருப்பவர்கள்  பாதிக்கப்பட்டது என்னவோ உண்மைதான். அதற்காக இணையதளத்தையே முடக்குவது அறிவை சிதைப்பது போன்றதாகும். 

காப்புரிமை, பதிப்புரிமை வைத்திருப்பவர்கள் சற்று சிந்தித்து செயல்பட வேண்டிய காலம் இது. அதே வேளையில் இணையதளம் வைத்திருப்பவர்கள் மிகவும் மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டிய தருணம் இது. 

இணையதளங்கள் மீது திணிக்கப்பட இருக்கும் சட்டத்தை நீங்கள் எதிர்க்கிறீர்களா?, ஆதரிக்கிறீர்களா? 





Friday 13 January 2012

நேசம் போட்டிகள் எப்போது களைகட்டும்?



நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை, குறும்பட போட்டி்கள்


இதுவரை இந்த போட்டிகளுக்கு என எழுதியவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது என்பதை நினைக்கும்போது பதிவர்கள் நிறையவே யோசித்து கொண்டிருக்கிறார்கள் என தெரிகிறது. நான் ஒரு சிறுகதை, கட்டுரை தயார் செய்து கொண்டிருக்கிறேன். பொங்கலுக்கு பின்னர் வெளியிடலாம் என இருக்கிறேன். 

அதற்கு முன்னர் என்றோ எழுதிய புற்று நோய் எனும் கதையை இங்கே மீண்டும் பதிவு செய்கிறேன். இந்த போட்டி குறித்த விபரங்களை அறிந்து கொள்ள இங்கே அழுத்துக

புற்று நோய் - சிறுகதை (இது இந்த போட்டிக்காக அல்ல, போட்டிக்காக வேறு ஒரு கதை எழுதி கொண்டிருக்கிறேன்) 

//புதனவெள்ளி மருத்துவமனை வளாகத்தில் ஆறு மருத்துவர்கள் மிகவும் யோசனையுடன் அமர்ந்து இருந்தார்கள். மிகவும் நிசப்தமான அமைதி நிலவியது. ஒருவரையொருவர் பார்த்த வண்ணம் யாராவது பேச்சைத் தொடங்கமாட்டார்களா என எதிர்பார்ப்புடன் இருப்பது அவர்களின் முகத்தில் அப்படியே தெரிந்தது. அமைதியை கலைத்து தலைமை மருத்துவர் ஜெயபால் பேசினார்.

''இன்னைக்கு வந்திருக்க பேஷண்ட் ரொம்பவும் கிரிட்டிக்கல் கண்டிசன்ல இருக்கார், அவருக்கு அறுவை சிகிச்சை செஞ்சாகனும் ஆனா அதற்கான செலவை ஏத்துக்குற வசதி அவங்களுக்கு இல்லை. யாரோ சொல்லி இங்க கொண்டு வந்திருக்காங்க, இந்த கேன்சரை வெட்டினாலும் திரும்ப வந்துரும், இப்போ போராடுற உயிருக்கு என்ன செய்யலாம் சொல்லுங்க''

''அறுவை சிகிச்சை செஞ்சிரலாம், இதுக்கு யோசனைப் பண்ண வேண்டியதில்லை'' என்றார் துணை மருத்துவர் கோபால்.

''மருத்துவ செலவு யார் கட்டுவாங்க'' என்றார் ஜெயபால்

''நாம் எப்பவும் ஆராய்ச்சிக்குனு வாங்குற ஃபண்ட்ல இருந்து உபயோகிப்போம், இப்படி உயிருக்குப் போராடுறவங்களை காப்பாத்துறது நம்மளோட தர்மம்'' என்றார் அறுவை சிகிச்சை மருத்துவர் ஜெயக்கொடி.

ஜெயக்கொடி அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளையெல்லாம் செய்துவிட்டு அந்த நோயாளியின் உறவினர்களிடம் புற்றுநோய் பற்றி சின்ன விளக்கம் கொடுத்தார்.

'புற்றுநோய் எப்படி உருவாகிறது? எதனால் உருவாகிறது? ஒரு முறை வரும் இந்த நோய் உயிர் கொல்லாமல் போகாது. ஒவ்வொரு அங்க அமைப்பையும் கூறு பார்க்கும் இந்த நோய்க்கு உலகமே மருந்து கண்டுபிடிக்க போராடிக் கொண்டு இருக்கிறது. லேசர், எக்ஸ்ரே என ஒளியின் உதவி கொண்டு இந்த நோய் தடுக்கும் முறையை கண்டுபிடித்து ஓரளவே வெற்றி கண்டு இருக்கிறார்கள்.

பொதுவாக செல்கள் இரண்டாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிரியும், அதிலிருந்து இரண்டு இரண்டாக செல்கள் பிரிந்து கொண்டே ஒரு சீரமைப்புடன் வரும். அப்படி இல்லாமல் தான் தோன்றித்தனமாக ஒரு செல் பல செல்களாக மாற்றம் கொள்ளும்போது போதிய சக்தியைப் பெறமுடியாமல் மற்ற செல்களின் உணவையும் தானே தின்று அந்த நல்ல செல்களையும் அழிக்கத் தொடங்கிவிடுகிறது இந்த மாறுபாடு அடைந்த செல்கள். இப்படி மூர்க்கத்தனமான செல்களை அழிக்கப் பயன்படும் மருந்துகள் நல்ல செல்களையும் ஒரு கை பார்த்துவிடுகிறது. இதனால் நல்ல செல்கள் பாதிக்கப்பட்டுவிடுகின்றன.

வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என மரபணுக்களில் கையை வைத்தால் வேறு விளைவுகளையும் கொண்டு வந்து விடுகிறது. எனவே இந்த செல்களை அழிப்பதன் மூலம் ஓரளவுக்கு நிலைமையை சீராக்க முடியும் ஆனால் மீண்டும் இந்த செல்கள் தங்களது மாற்றத்தை வெளிப்படுத்த தொடங்கிவிடும். இந்த நோயில் இரண்டு வகை உண்டு. ஒன்று உடலில் எல்லா இடங்களிலும் பரவி விடுவது, மற்றொன்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நிலை கொள்வது. எப்படியும் அவரை உயிருடன் பிழைக்க வைத்துவிடுவோம் 'ஜெயக்கொடி பேசியது வந்திருந்தவர்களுக்கு புரிந்ததா எனத் தெரியவில்லை.

கடும் போராட்டத்துக்குப் பின் அறுவை சிகிச்சை முடிந்தது. மருத்தவமனையிலே அவர் தங்க வைக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை முறைத் தொடர்ந்து நடந்து வந்தது. சற்று தேறி வருவதாகவே சொன்னார்கள். உறவினர்கள் பணத்தை புரட்டினார்கள். எப்படியாவது இவர் பிழைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார்கள். செல்கள் மருந்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்து கொண்டிருப்பதாக மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் ஓரிரு வாரங்களில் செல்கள் தனது வேலையை காட்டத் தொடங்கியது. இந்த முறை அதிவேகமாக தனது பணியைச் செய்தது. மருத்துவர்கள் மேற்கொண்டு எந்த முயற்சியும் செய்ய இயலாது என சொல்லிவிட்டனர். அந்த நோயாளி அகால மரணம் அடைந்தார்.

''இந்த கேன்சருக்கு ஒரு முடிவுகாலமே வராதா?' என சோகத்துடன் சொன்னார் ஜெயக்கொடி. ஜெயபால் இதற்காக செலவிடப்படும் நேரத்தையும், பணத்தையும் நினைத்து மனம் வருந்தினார். பல காலமாக நடந்து வரும் ஆராய்ச்சியில் ஒரு முடிவும் இல்லாமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக சொன்னார்.

அப்பொழுது ஒருவர் வெட்டப்பட்ட நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். அவருக்கு உரிய சிகிச்சை வெகுவேகமாக அளிக்கப்பட்டது. உயிருக்குப் போராடிய நிலையில் வந்த அவரை மருத்துவர்கள் காப்பாற்றிவிட்டனர். என்ன ஏது என விசாரிக்காமல் அனைத்து சிகிச்சையும் முடிந்திருந்தது. எப்படி இந்த நிலைமை வந்தது என பின்னர் கேள்விபட்டபோது மருத்துவர் ஜெயக்கொடி மனமுடைந்தார்.

ஒரு அரசியல் தலைவரை கேவலமாக பேசியதற்காக இவரை அந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவர் ஒருவர் வெட்டிவிட்டார் எனவும், இதே போன்று பலமுறை அவர் பலரை வெட்டி இருப்பதாகவும் சில காலங்கள் சிறைக்குச் செல்வதாகவும், பின்னர் சிறையிலிருந்து வெளிவந்தால் இதேபோன்று நடந்து கொள்வதாகவும் கூறினார்கள்.

ஒரு சமுதாயத்தை இதுபோன்ற மனிதர்கள் அழித்துவிடுவது குறித்து மிகவும் வேதனையுற்றார் ஜெயக்கொடி. இப்படி தான் தோன்றித்தனமாக திரிபவர்களை ஒரு கட்டுப்பாட்டில் கொண்டுவர இயலாத வாழ்க்கை முறையை நினைத்துப் பார்க்கையில் புற்றுநோய் நிலைமையை விட இந்த புற்றுநோய் நிலைமை ஜெயக்கொடியை மிகவும் சோகத்திற்குள்ளாக்கியது.

ஏதாவது ஒரு பெயரில் இதுபோன்ற மனிதர்களின் நடமாட்டத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வர ஆராய்ச்சி ஒன்றை ஒருவர் துவங்கினார். இந்த ஆராய்ச்சியும் புற்றுநோய்க்கான மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியைப் போலவே நீண்டுவிடாமல் நல்ல முடிவு கிடைக்க வேண்டும் என உலக சமயத்தை வேண்டிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றே ஜெயக்கொடிக்குப் பட்டது.

முற்றும்.//



Thursday 12 January 2012

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? எனது பெயர் முகமது பின் துக்ளக்

முன்பகுதி 

தொலைந்த நாகரிங்கள் பற்றி பார்க்கும் முன்னர் ஒரு முக்கியமான நபரை பற்றி பார்த்துவிடுவது சிறப்பு தரும் என்பதால் அவரே நம்மிடம் பேசுகிறார்.

--------

எனது பெயர் முகம்மது பின் துக்ளக், அதாவது நீங்கள் எப்படி என் சகோதரன் பின் லேடனை உச்சரிப்பீர்களோ அதைப்போலவே எனது பெயரை நீங்கள் உச்சரிக்க வேண்டும். பேருந்தினை 'பின்னால்' தள்ளினால் என்ன ஆகும் என கேட்டால் 'பின்' வளைந்து விடும் என மொக்கை சொல் சொல்வார்களே அது போல எனது பெயரில் நகைச்சுவை உண்டு என நீங்கள் கருதினால் அது உங்கள் முட்டாள்தனம். எனது பெயரில் நாடகம், திரைப்படம் கூட எடுத்து இருக்கிறீர்கள், அந்த திரைப்படத்தை நான் பார்த்து சிரித்து சிரித்து அழுதேன். சோ எனும் இந்துத்துவா எடுத்த படம் அது. அவரது பத்திரிக்கைக்கு கூட துக்ளக் என்றே பெயர் இட்டு எனது பெருமை நிலை நாட்டி மத நல்லிணக்கத்தை காட்ட முயற்சி செய்து இருக்கிறார். துக்ளக் என்றால் கோமாளி என்று அர்த்தம் தனை சொன்ன சோ வேண்டுமானால் கோமாளியாக இருக்கலாம், நான் ஒருபோதும் கோமாளியாக இருந்தது இல்லை. மேலும் முசலமான் மட்டும் தான் இவ்வுலகில் இருக்க வேண்டும் என்பது என்னுடைய நெடுநாளைய கனவு அல்ல. இந்துக்கள், ஜெயின் மதத்தவர்கள் என அனைவரையும் நேசிக்கும் மனப்பான்மை எனக்கு அதிகம் உண்டு. இதை புரிந்து கொள்ளாதவர்கள் பற்றி நான் என்ன செய்ய இயலும்?

என்னை அறிவிற்சிறந்த முட்டாள் என்றே உலகம் அழைத்து வருகிறது கண்டு வெகுவாக மனம் உடைகிறேன். நான் அறிவினை முட்டாள்தனமாக உபயோகித்தேனா என்பது குறித்து விளக்கம் தருமாறு பலர் கேட்கிறார்கள். நான் பல நல்ல நல்ல திட்டங்களை நாட்டில் அறிமுகப்படுத்தினேன், ஆனால் அதை சரிவர செயல்படுத்தவில்லை என்பதால் என்னை அறிவிற்சிறந்த முட்டாள் என்றே சொல்கிறார்கள். நான் ஒன்று கேட்கிறேன், திட்டம் ஒன்றை கொண்டுவந்தால் அதை வெற்றி பெற செய்வது அரசரான நானா, மக்களா? மக்கள் எதையுமே புதிதாக ஒன்றை ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் இருப்பதில்லை. அவர்களது நலத்திட்டங்கள் என்று தெரிந்து இருந்தும் எனது திட்டங்கள் தோல்வி அடைந்ததற்கு மக்களே காரணம். அவர்கள் தான் கோமாளிகள், நான் அல்ல என்பதை தெளிவு படுத்துகிறேன்.

நான் பல துறைகளில் தேர்ச்சி பெற்று இருந்தேன். என்னை தத்துவ ஞானி என போற்றுவார்கள். கணித புலமை எனக்கு நிறைய இருந்தது. எனக்கு சமஸ்கிருதம் முதற்கொண்டு பெர்சியன், அரபிக், துர்கிஷ் போன்ற மொழிகளில் புலமை பெற்று இருந்தேன். எனது அரசு எல்கைகள் விரிவடைந்ததால் தலைநகரை டெல்லியில் இருந்து தேவகிரிக்கு மாற்றினேன். தொவ்லபாத் என்று பெயரிட்டது உண்மைதான். ஆனால் தேவகிரியில் போதிய வசதிகளை பெருக்க முடியாததால் எனது திட்டம் தோல்வி அடைந்தது. மொத்த மக்களையும் டெல்லியில் இருந்து நான் இடமாற்றம் செய்தது எனது தவறு என்றே சொல்கிறார்கள். தலைநகரை மட்டுமே மாற்ற நினைத்த நான் எப்படி மக்களை என்னுடன் கொண்டு செல்ல முயற்சி செய்து இருப்பேன். நான் தலைநகர் மாற்றியதும் ஒரு கவிஞர் டெல்லி சாத்தான்களின் கூடாரமாக இருந்தது என்று எழுதி இருக்கிறார்.  வரலாற்றை திரித்து திரித்து எழுதுவதுதான் அனைவரின் வேலையா? அது சரி, இந்தியாவின் தலைநகரை டெல்லியில் இருந்து மத்திய பிரதேசத்திருக்கு மாற்றினால் எப்படி இருக்குமோ அப்படி ஆகிவிட்டது எனது செயல்பாடு, இதற்காக நான் அறிவிற்சிறந்த முட்டாள் என அழைக்கப்படுவது எவ்விதத்தில் நியாயம், என்னை கோமாளி என சொல்வது எப்படி சரியாகும்?

நாணயங்களில் என்னை நானே பதித்து அழகு பார்த்தேன், எனது தந்தையை பதித்து அழகு பார்த்தேன். வரிவடிவ வரைவியல் எனக்கு பிடித்தமானதாக இருந்தது, இதன் காரணமாக நான் ஏராளனமான தங்க நாணயங்கள் உற்பத்தி செய்தேன். நான் எழுதியதில் எனக்கு பிடித்தது என்னவெனில் 'எவர் ஒருவர் சுல்தானுக்கு தலைவணங்குகிறார்களோ அவர்கள் இரக்கமுள்ள இறைவனுக்கு தலை வணங்குகிறார்கள்' என்று குறிப்பிட்டேன். இதன் மூலம் பல நாணயங்கள் அதிக விற்பனைக்கு போனது. அது எனது ராஜ தந்திரம் ஆகும்.


தவறு செய்பவர்களுக்கு, என்னை எதிர்ப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதித்தேன். எப்படி ஹிட்லர் குளிரில் சென்று மாட்டினாரோ அதைப்போலவே எனது படைகள் சீனப் படையெடுப்பின் போது குளிரில் மாட்டி கொண்டன. அதற்காக ஹிட்லரும் நானும் கோமாளிகளா? எனக்கு எதிராக நடத்த அடக்குமுறை போராட்டத்தை எதிர்க்க புறப்பட்ட நான் நோய்வாய்பட்டு இறந்தேன். எனது அறிவை போர் போன்றவைகளில் செலவழிக்காமல் மக்கள் நலனுக்காக செலவழித்து இருக்கலாமோ என இப்போது கண்ணீர் விட்டு கதறுகிறேன், என்ன செய்வது. காலம் கடந்துவிட்டது. 

வாழ்க்கையில் பல வெற்றிகளை பெற்ற நான் எனது அகங்காரத்தால் சீரழிந்து போனேன், வாழ்க்கையில் சீரழிய முட்டாள்தனமான அறிவு ஒன்றே போதும் என்பதற்கு என்னை உதாரணமாக காட்ட முனைகிறார்கள். அது முற்றிலும் தவறு. எனது அகங்காரம் எனது அறிவை மறைத்தது. வாழ்வில் சீரழிய 'தான்' என்ற அகங்காரம், மற்றவர்களை 'மதிக்காத தன்மை' மற்றும் அன்பை நிலைநாட்டாமல் இருப்பது போன்றவை என்பதுதான் நான் வாழ்வில் கற்று கொண்ட பாடம். இதை நீங்கள் கற்று கொண்டு ஒருவருக்கொருவர் உறுதுணையாய் இருந்து இந்த உலகத்தில் தீன் இலாஹி அக்பர் என சொல்லிக்கொண்டு மத நல்லிணக்கத்தோடு வாழ வேண்டுமாய் கேட்டு கொள்கிறேன். 

----------

முகம்மது பின் துக்ளக் உரையை கேட்டதும் எத்தனை வருடங்கள் ஆனாலும் மக்கள் தங்களது அறிவினை முட்டாள்தனமாக உபயோகிப்பதை மட்டும் மாற்றப் போவதில்லை என்பது உறுதியானது. முடிந்த பின் வருந்துவது மனித இயல்பு. 

தொலைந்த நாகரிகங்கள் எப்படி சீரழிந்து இருக்க கூடும்?