Wednesday 23 November 2011

முஸ்லீம் வீட்டு திருமணம்

மதம் சார்ந்து மனிதர்கள்  வாழ ஆரம்பித்த பின்னர் மதம் எதற்கு என கேட்பவர்கள் சற்று வெளியே நின்று வேடிக்கைப்  பார்க்கவும். 

நான் அடிப்படையில் ஒரு இந்து மதம் ஒட்டிய சமூகத்தை சேர்ந்தவன். எனது உறவினர்கள், உற்றார்கள் என அனைவரும் இந்து மத சமூகத்தை சார்ந்தவர்கள். 

இதற்காக நான் முஸ்லீம் வாத்தியாரிடம் படிக்கமாட்டேன் என்றோ, கிறிஸ்துவ வாத்தியாரிடம் படிக்க மாட்டேன் என்றோ அடம் பிடித்தது கிடையாது. 

என்னுடன் இந்து சமூகத்தை சார்ந்தவர்கள் மட்டுமே பழக வேண்டுமென ஒரு கட்டாயம் கொள்வதும் கிடையாது.

இந்து சமூகத்தை சார்ந்தவன் என்றாலும், பிற மத சம்பிராயதங்களை அதனதன் பாட்டுக்கு விடுவதில் மட்டுமே எனக்கு உரிமை உண்டு. அதை சகட்டுமேனிக்கு விமர்சிக்க எனக்கு எவ்வித உரிமையும் கிடையாது. 

இப்படி ஒரு மதத்தை சார்ந்து வாழ்வது எனினும், அனைவரும் மக்கள் என்கிற உணர்வு இருக்கும் என்கிற படசத்தில் இந்த மதங்களே அவசியம் இல்லை என்றாகிவிடுகிறது. ஆனால் இந்த மதங்கள்  ஒரு சாத்திர சம்பிராதய அடையாளங்களாக இருந்து வருவதை  மாற்றுவது சற்று கடினமானது. 

என்னுடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் தோழி ஒருவர் முஸ்லீம் மதத்தினை சார்ந்தவர் என்பதை அறிய கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிப்போனது எனக்கு. பொதுவாகவே பெண்களிடம் கலகலப்பாக நான் பேசுவது இல்லை. மேலும், ஒருவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வமும் எனக்கு அத்தனை இல்லை. 

நான்கு வருடங்கள் பின்னர் தான் எனது ஆசிரியர் மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் பெண் இருவரும் கணவன் மனைவி என்பதே எனக்கு தெரிய வந்தது. 

இப்படியெல்லாம் இருக்க இந்த தோழி எனக்கு நல்ல பழக்கமானாள். அப்பொழுதுதான் இவளது திருமணம் நிச்சயிக்கப்பட போவதாகவும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெற போவதாகவும் சொன்னாள். திருமண பேச்சு பற்றிய விபரம் தெரிந்த பின்னரே இவர் ஒரு முஸ்லீம் என தெரிய வந்தது. அதோடு மட்டுமில்லாமல் நான் சில வருடங்களாக உதவி புரிந்த மற்றொரு பெண் முஸ்லீம் என தெரிய வந்தது. 

முஸ்லீம் என்றால் பர்கா போட்டு இருக்க வேண்டும் போன்ற சட்ட திட்டங்கள் இல்லாமல் இவர்கள் சாதாரணமாக இருந்ததால் இவர்கள் எந்த மதம் என எவராலும் கண்டுபிடிக்க இயலாமல் போனது. இப்படித்தான் அடையாளங்கள் ஏதும் நாம் அணியாமல் போனால் நமக்கு மத முத்திரை குத்தப்படமாட்டாது. மேலும் மதம், கடவுள் பற்றிய விசயங்களை எவரும் ஆய்வகங்களில் அத்தனை பெரிதாக விவாதித்தது இல்லை. 


நான் சில நாட்களாக தாடி வளர்த்து இருந்தேன். சில தினங்கள் முன்னர் கோவிலுக்கு சென்றபோது அங்கிருந்த சிவாச்சாரியார், ஐயப்பனுக்கு மாலை போடப் போறீங்களா என கேட்டார். இல்லையே என சொன்னபிறகுதான் தெரிந்தது, அட தாடி. பிறகுதான் தெரிந்தது இந்த தாடி முஸ்லீம்களின் அடையாளம் என.

சில மாதங்களுக்கு முன்னரே திருமணத்திற்கு வருகிறோம் என இவரிடம் உறுதி கொடுத்தாகிவிட்டது. இரண்டு மணி நேர பயணத்திற்கு பின்னர் திருமணம் நடக்க இருக்கும் ஊரை அடைந்தோம். ஒரு ஹோட்டலில் அன்று இரவு தங்க அறை எடுத்து இருந்தோம்.

மதியம் மூணு மணிக்கெல்லாம் சென்று விட்டதால் அந்த ஊரை சுற்றிப் பார்க்க சென்றோம், எங்கு பார்த்தாலும் ஆசிய மக்கள். சரவண பவன், சென்னை தோசா, என தமிழ்கடைகள் இருந்தன. சற்று தள்ளிப் போனால் இண்டிகோ, பீஸ்ட் இந்தியா என்றெல்லாம் கடைகள். நான்கு மணி ஆகி இருந்தது, சாப்பிட வேண்டும் என மனைவியும் மகனும் விரும்பியதால் இண்டிகோ ஹோட்டலில் சாப்பிட்டோம். இன்னும் சற்று நேரத்திற்கெல்லாம் திருமணத்திற்கு சென்றுவிடுவோம், அங்கு சென்று சாப்பிடலாம் என நினைத்து இருந்ததால் குறைவாகவே சாப்பிட்டேன்.

சில கடைகளையும் சுற்றிப் பார்த்துவிட்டு, லண்டனில் இல்லாத துணி எல்லாம் இங்கே இருக்கிறது, மறுமுறை இந்த ஊருக்கு வர வேண்டும் என நினைப்புடன் ஹோட்டலுக்கு சென்று இந்திய உடையில் ஏழு மணி முப்பது நிமிட திருமணத்திற்கு ஆறு மணி நாற்பத்தினைந்து நிமிடத்திற்கு சென்று விட்டோம்.

மிகப்பெரிய கட்டிடம், அழகாக அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. வெகு சிலரே ஆங்காங்கே அமர்ந்து இருந்தார்கள். எங்களை சைவம் என குறிப்பிட்டு இருந்த ஒரு மேசையில் அமர வைத்தார்கள். எனது வேலை பார்க்கும் இடத்தில் இருந்து நண்பர்கள் வர இருப்பதாக சொன்னார்கள், ஆனால் எவரையும் காணவில்லை. மணமேடை போடப்பட்டு இருந்தது. ஆனால் அங்கே யாரும் இல்லை. மணி ஏழு முப்பது தொட்டது. மணமேடையில் எவருமே இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் வந்து சேர்ந்தார்கள். யார் எந்த மதத்தினர் என அடையாளம் காண இயலவில்லை. தோழியின் அம்மாவும், அப்பாவும் எங்களை வரவேற்பு செய்து விட்டு போனார்கள். தாடி முஸ்லீம்களின் அடையாளம் அல்ல, தனி மனிதர்களின் விருப்ப அடையாளம் என புரிந்தது.

மணி எட்டு ஆனது. எனது நண்பர்கள் வந்தார்கள், அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட மேசையில் சென்று அமர்ந்து கொண்டார்கள். மணி எட்டு முப்பது தொட்டது. திருமண மேடை அப்படியேதான் இருந்தது. அப்பொழுதுதான் அப்பளம் வைத்து விட்டு போனார்கள். அப்பாடா என இருந்தது, அதுவரை தண்ணீர், மற்றும் பழச்சாறு மட்டுமே! நல்லவேளை சாப்பிட்டோம் என நினைத்து கொண்டோம்.

இந்த வேளையில் எங்களது மேசையில் எவருமே அமர வரவில்லை. இரண்டு வாலிபர்கள், அவர்களது அம்மா வந்தார்கள். இது சைவ மேசை என்றதும், இன்னும் எத்தனை மேசை மாற வேண்டுமோ என எழுந்து சென்றார்கள். அதன் பின்னர் ஒரு கணவர், மனைவி வந்தார்கள். ஆனால் அவர் முஸ்லீம் என பார்த்தவுடன் அடையாளம் சொல்ல இயலவில்லை. அவர் எங்களுடன் பேசினார். அப்பொழுதுதான் முஸ்லீம் திருமணம் குறித்து பல விசயங்கள் சொன்னார். இத்தனை நேரமாகிறதே என்றபோது குடும்பத்தை பொறுத்தது என்றார். எனது கல்யாணம் இங்குதான் நடந்தது, சரியான நேரத்தில் நடந்து முடிந்தது, மேலும் முஸ்லீம்களில் வெவ்வேறு சமூகம் உண்டு என சொல்லிக் கொண்டார். எனது தோழி இருக்கும் சமூகத்தில் அத்தனை கட்டுப்பாடு இல்லை எனவும், ஆனால் மணமகனின் சமூகம் மிகவும் கட்டுப்பாடானது என்று சொன்னார்.

அப்பொழுது மணமகன் வந்துவிட்டார் என அறிவிப்பு வந்தது. நிறைய மேசைகள் மண மேடையின் அருகில் காலியாகவே இருந்தது. நாங்கள் கூட என்ன இப்படி இருக்கிறதே என நினைத்து இருந்தோம். சிறிது நேரத்தில் மணமகனுடன் பெரிய பட்டாளமே வந்து இறங்கியது. அனைவரும் சென்று அமர அனைத்து மேசைகளும் நிறைந்தன. தோழியை காணவே இல்லை. பாகிஸ்தான் பேருந்து ஒன்றில் மாப்பிள்ளை வந்து இறங்கினார் என பேருந்தினை காண ஓடினோம். பேருந்து அலங்கரிக்கப்பட்டு அருமையாக இருந்தது.

மணமகன் மேடைக்கு செல்லவே இல்லை. சிறிது நேரத்தில் மணமகனுடன் பலர் இணைந்து முதல் மாடிக்கு சென்றார்கள். மணி பத்து ஆகிவிட்டது. சிறிது நேரம் முன்னர் தான் ரொட்டியும், காய்கறி வகைகளும் கொண்டு வந்து வைத்தார்கள். நாங்கள் சைவ மேசை என அமர்ந்து இருக்க அசைவம், சைவம் என எல்லாம் கொண்டு வந்து வைத்தார்கள். மனிதர்களால் எங்கள் மேசையும் நிறைந்துவிட்டது.

மணமேடையில் திருமணம் நடக்கும் என நினைத்தால் திடீரென திருமணம் முடிந்துவிட்டது என சொன்னார்கள். மாடியில் நின்று படம் எடுத்து கொண்டிருந்தார்கள். பக்கத்தில் அமர்ந்து இருந்த பெண்மணியிடம் விசாரித்தோம். இமாம் என்பவர் இந்த திருமணத்தை கீழே நடத்த சம்மதிக்கவில்லை, அதனால் மாடிக்கு சென்று நடத்தி இருக்கிறார் என்றார். எங்கே மணமகள் என்றோம்? மணமகள் வர தேவையில்லை. மணமகளிடம் தனியாக சம்மதமா என மூன்று முறை கேட்பார்கள், சம்மதம் சொன்னதும் இரண்டு நபர் சென்று சம்மதம் சொல்வார்கள். திருக்குரானில் ஒரு பகுதி ஓதப்படும். பின்னர் இருவருக்கும் விவாகரத்து நடந்தால் மணமகளுக்கு எவ்வளவு பணம் தருவது குறித்து பேசி ஒரு கையொப்பம் இடுவார்கள். மணமகன் தரும் வரதட்சணை. இந்த பணம் உடனே தர வேண்டிய அவசியம் இல்லையாம்.

அப்படி கையொப்பம் இட்டவுடன் திருமணம் முடிந்ததாக அறிவிக்கப்படும் என்றார். எனக்குள் ஒலித்தது திருமணம் நடக்கும் முன்னரே விவகாரத்தா? அதற்கேற்றார்போல முஸ்லீம்கள் மிகவும் பிராக்டிகலாக இருக்க விருப்படுகிறார்கள், திருமண வாழ்வில் எதுவும் நடக்கும் என்பதால் பெண்ணுக்கு பாதுகாப்பு கருதி இவ்வாறு செய்கிறார்கள் என்றார். அது அந்த காலத்து சம்பிராதயம் என்றே தோன்றியது. ஏனெனில் அந்த காலத்தில் முஸ்லீம் பெண்கள் வேலைக்கு செல்வதில்லை, எனவே அவரது குடும்பம் கணவனை நம்பியே இருக்கும், அதனால் இப்படி ஒரு சட்டம் இருக்கலாம் என தோன்றியது.

பின்னர் மணமகன் மேடையில் அமர, மணமகள் வந்தார். அதற்குள் சோறு, சாம்பார் என சாப்பிட்டு முடித்து இருந்தோம். மணி பதினொன்று மேல் ஆனது. வாழ்த்துகள் தெரிவித்து விட்டு ஹோட்டல் வந்து சேர்ந்தோம்.

புரோகிதர், யாகம் வளர்த்தல், மந்திரம் செபித்தல் என எதுவும் இல்லாமல் இந்துக்கள் நடத்தும் சீர்திருத்த கல்யாணம் என்பது முஸ்லீம்களின் கல்யாணம் தான் போல.

எங்களை இந்து என்று எவருமே அடையாளம் காணவில்லை. :) மதம் நமக்கு அவசியமில்லாத ஒன்று என்பது எனக்கு மிகவும் அழுத்தமாகவே புரிந்தது. 

Monday 21 November 2011

ஒரு சினிமா தயாரிப்பாளரின் பைத்தியகாரத்தனம்

திருமோகூர் கோவிலில் சரியாக சொன்னபடி ஏழு மணிக்கு அனைவரும் திரண்டார்கள். பக்கத்து ஊர்களில் இருந்தும் மக்கள் வந்து இருந்தார்கள்.

வேல்முருகன் கம்பீரமான குரலில் பேசத் தொடங்கினான். 

'இந்த படம் எடுக்க குறைஞ்சது ஒரு வருடம் ஆகும். நீங்க எல்லாம் இந்த ஊர்லதான் இருக்கனும். உங்களுக்கு தினமும் வேலை இருக்கு. யார் யாருக்கு என்ன சம்பளம், எப்படியெல்லாம் படம் எடுக்க போறோம் அப்படிங்கிற விவரம் எல்லாம் இந்த டாகுமென்ட்ல இருக்கு. இதை எல்லாம் படிச்சி பாருங்க. சுருக்கமா சொல்ல போனா பதினைஞ்சி ஏக்கர் தரிசு நிலத்தை நீங்க எல்லாரும் சேர்ந்து பண்பட்ட நிலமா மாத்தி அதுல விவசாயம் செய்யனும். அந்த நிலத்துல சாகுபடி பண்ணனும், அது ஒரு போகமா இருக்கலாம், அல்லது ரெண்டு போகமா இருக்கலாம். நிலத்தை பண்படுத்த எப்படியும் குறைஞ்சது மூணு மாசம் ஆகும். நீங்கதான் உழைக்க போறீங்க. இங்க என்ன நடக்குது அப்படிங்கிற விவரம் எல்லாம் என்னோட இணையதளத்துல எழுதி படங்கள் எல்லாம் போட்டு வருவேன். எப்படி வேலை செய்றீங்க எல்லாம் படம் எடுத்து இணையத்துல எழுதுவேன். இப்படி நடக்கிற விசயங்களை கதையோட இணைச்சி சுவராஸ்யமா சொல்றதுதான் நம்மோட 'நன் செய்' படம்.   உங்களுக்கு மேற்கொண்டு இந்த படத்துல நடிக்க விருப்பம் இருந்தா, இங்க இருக்கலாம், அப்படியில்லைன்னா நீங்க கிளம்பி போகலாம். வேறு படத்தில கமிட் ஆகி இருந்தா அந்த படம் சம்பந்தப்பட்டவங்களுக்கு தகவல் சொல்லி அனுப்பிருங்க'

வேல்முருகனுடன் தங்கி இருந்த மூன்று இயக்குனர்கள் புன்னகை முகத்துடன் இருந்தார்கள். பின்னர் வந்து சேர்ந்த அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். சிலர் இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என பேசிக்கொண்டார்கள். 

'எதுக்கு சார் இதெல்லாம், ஒரு காட்சியில தரிசு நிலத்தை காட்டுவோம், அடுத்த காட்சியில விவசாயம் ஆயிருச்சின்னு விளைநிலத்தை காட்டுவோம். இதுக்கு போய் நாங்க எல்லாம் மாடா உழைச்சி தரிசு நிலத்தை விளை நிலமா மாத்தனுமா. நடிக்க சொல்வீங்கன்னு பார்த்தா நிசமாவே வாழ சொல்றீங்களே, என்ன பைத்தியகாரத்தனம் இது, நீங்க சரியான பைத்தியம்' என ஒருவர் உயர்ந்த குரலில் பேசினார். 

'சினிமான்னு சொல்லிக்கிட்டு அதை சாதிக்கிறான், இதை சாதிக்கிறான் அப்பிடின்னு ஒரு ஹீரோவை படத்துல காமிக்கிறது, அவன் தான் உலகத்துல  ரொம்ப நல்லவன்னு காட்டுறது,  ஊழலை ஒழிக்கிறான் அப்படின்னு ஊழல் பண்றவனைய படத்துல நடிக்க சொல்றது, பள்ளிக்கூடம் பக்கமே போயிருக்க மாட்டான் அவனையெல்லாம் ஐ பி எஸ், ஐ எ எஸ், டாக்டர் அப்படின்னு படத்துல காட்டுறது எல்லாம் பைத்தியகாரத்தனமா தெரியலையா.பொழுதுபோக்கு அப்படின்னு சொல்லிக்கிட்டு மொத்த சமூகத்தையும் பைத்தியமாக்கி வைச்சிருக்க இந்த சினிமா, சமூக அக்கறை, சாக்கடை திருத்தம் அப்படின்னு சொல்லிக்கிட்டு, கடையில கஷ்டப்பட்டு உழைக்கிறவங்களோட வறுமையை, கொடுமையை படமா காட்டுறோம்னு காசு பணத்தை அள்ளி பைக்குள்ள போட்டுகிறது முதற்கொண்டு இப்படி அடவாடித்தனம் பண்ற மத்தவங்க எல்லாம் நல்லவங்க, சினிமாவுல சொல்லப்போற சமூக சிந்தனைய வாழ்க்கையா வாழ்ந்து காட்டுங்க அப்படின்னு சொல்ற நான் பைத்தியகாரன், சரிதான். இந்த சினிமா மூலம் ரொம்ப நல்ல விசயங்கள் பண்ணலாம் அப்படிங்கிறதைத்தான் சமூகத்துக்கு சொல்லப்போறேன், இஷ்டம் இருந்தா இருங்க, இல்லைன்னா போகலாம்' 

வந்தவர்களில் சிலர் மட்டுமே களைந்து சென்றார்கள். மற்றவர்கள் சம்மதம் என சொல்லி நின்றார்கள். 

படம் தொடங்கியது. அனைவரும் தரிசு நிலத்தை பண்படுத்த வேலையாட்களாக இறங்கினார்கள். பூஜை என்ற பெயரில் காசு பணத்தை வீணாக்குவது, விளம்பரம் என்ற பெயரில் காசு பணத்தை கரியாக்குவது என இல்லாமல் படம் இணையதளத்தில் அறிவிப்புடனே தொடங்கியது. சில நாட்களில் படத்திற்கான காட்சிகள் எடுக்கப்பட்டன. படம் தொடங்கிய சில நாட்களில் இன்னும் சிலர் பிரிந்து சென்றார்கள். 

பண்படுத்தப்பட்ட நிலம், விளைச்சலில் இறங்கியது. இறுதியாக இருநூற்றி முப்பத்து ஆறு பேர் கொண்ட அந்த படக்குழு பெருமிதம் கொண்டது. தினமும் விவசாய வேளைகளில் தங்களை ஈடுபடுத்தி கொண்டார்கள். இணையதளம் மூலம் பரவிய செய்தியினால் பணம் நன்கொடையாகவும் வந்து கொண்டிருந்தது. 

படத்திற்கான காட்சிகளும் எடுத்து முடிக்கப்பட்டன. அனைவரும் சந்தோசம் கொண்டார்கள். தாங்கள் விளைத்த நிலத்தில் தாங்களே அறுவடை செய்தார்கள். நன் செய் படமும் வெளியானது. 

ஒரு படத்தை எடுத்து வெளியிட்ட சந்தோசத்தை விட ஒரு தரிசு நிலத்தை விளைநிலமா மாத்துன திருப்திதான் ரொம்ப பெரிசு என இந்த படத்தில் ஈடுபட்டவர்கள் சொல்லிக்கொண்டார்கள். கால காலத்திற்கும் விவசாயம் செய்வது என முடிவு கொண்டார்கள். அவர்களைக் கொண்டே எடுக்க இருக்கும் அடுத்த படத்துக்கிற்கான அறிவிப்பை வெளியிட்டார் வேல்முருகன்.  படத்தின் பெயர் 'குறைவற்ற செல்வம்' 

சுத்தம் நிறைந்த நோயற்ற பகுதிகள் உருவாக்க வேண்டும் என்பதுதான் படத்தின் கதை. விவசாயத்தோடு மாசு அற்ற நகரங்கள் உருவாக அந்த படக்குழு தமது புது படத்தை தொடங்கியது. 

இப்படித்தான் படைப்பாளிகளும், எழுத்தாளர்களும் தங்களது சமூகம் பற்றிய சிறந்த எண்ணங்களை கற்பனை மூலம் வெளிக்கொண்டு வருகிறார்கள். ஆனால் உண்மையில் அவை எல்லாம் உண்மையாக நடப்பது அரிதாகவே இருக்கின்றது. 

இதுதான் வாழ்க்கை என்றான பின்னர் எவரை குறைபட்டு என்ன பிரயோசனம். திருமோகூருக்கு அருகில் பதினைந்து ஏக்கர் நிலம் இன்னும் தரிசாகவே இருக்கிறது!  

Thursday 17 November 2011

மனைவியின் மயோர்கா - 2

மயோர்கா வரைபடங்களை ஹோட்டல் வரவேற்பாளரிடம் பெற்றுக்கொண்டு கார் பற்றி விசாரித்தோம். எல்லா இடங்களை சுற்றிப் பார்க்க வேண்டுமெனில் கார் மிகவும் அவசியமாக தென்பட்டது. இஷ்டத்திற்கு எங்கே வேண்டுமெனிலும் செல்லலாம், எதற்கும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை போன்ற வசதிகள் இருப்பதால் கார் எடுப்பது சரியென பட்டது. அந்த எண்ணத்துக்கு வலு சேர்க்கும் வகையில் அந்த வரவேற்பாளர் அதெல்லாம் தைரியமாக கார் ஓட்டலாம் என நம்பிக்கை தந்தார். சரியென மிக குறைந்த நாள் வாடகையில் மூன்று நாட்கள்  பியட் கார் ஒன்றை பதிவு செய்தோம். மறு தினம் காலையில் ஒன்பது மணிக்கு வந்து கார் பெற்று கொள்ள சொன்னார்கள். ஹோட்டலுக்கு கார் வந்துவிடும் எனும் நம்பிக்கையில் அன்றே மதிய வேளையில் அந்த சுட்டெரிக்கும் வெயிலில் நடந்தே நாங்கள் தங்கி இருக்கும் இடத்தை சுற்றிப் பார்க்க கிளம்பினோம்.

வெளியில் செல்லும் முன்னர் ஹோட்டலையும் அதன் வெளிப்புறத்தையும் நோட்டம் இட்டோம். ஹோட்டல் பின்புறம் நீச்சல் குளம் ஒன்று உண்டு. அந்த நீச்சல் குளம் தாண்டி சின்ன கடற்கரை ஒரு இரு நூறு மீட்டர் தொலைவு உண்டு. அதற்கு பின்னர் கடல். நீச்சல் குளம்தனை தாண்டி கடற்கரை அடைந்ததும் கீழ் உள்ளாடை மட்டும் அணிந்து மேல் உள்ளாடை இல்லாமல், மேலாடை இல்லாமல் மார்பகங்கள் வெளித் தெரிய வானம் பார்த்து படுத்து புத்தகம் படித்து கொண்டிருந்த ஒரு இளம் வயது பெண்ணை கண்டதும் திடுக் என்று இருந்தது. மணலோடு மணல் நிறத்தில் தான் அந்த மங்கை இருந்தார். ஆங்காங்கே சிலர் வெயிலில் காய்ந்து கொண்டிருந்தார்கள்.  இனி அங்கே நிற்பது முறையில்லை என நகர்ந்தோம்.

மதிய சாப்பாடு சாப்பிட வேண்டும் என பத்து நிமிடத்தில் அங்கிருந்து நடந்து ஒரு இத்தாலியன் ஹோட்டல் அடைந்தோம், அவர்கள் பரிமாறிய உணவு நன்றாகவே இருந்தது. அங்கிருந்து நடந்து செல்ல மற்றொரு கடற்கரை. எங்கு பார்த்தாலும் அரை குறை ஆடைகளோடு உல்லாசமாக மனிதர்கள். சாலையில் கூட வெறும் உள்ளாடைகளுடன் சுற்றி திரிந்த ஆண்களும் பெண்களும். 'நல்ல காட்சி உங்களுக்கு' என மனைவி கிண்டல் செய்தார். இது போலிருக்க நமக்கு இத்தனை தைரியம் வராது என சொல்லிக்கொண்டு நாங்கள் அணிந்திருந்த முழு ஜீன்ஸ், டி-சர்ட் போட்டிருந்ததை சுட்டி காட்டினேன்.

மனிதர்கள் ஆடை இல்லாமல் திரிந்தாலும் அவை காம உணர்வுகளை தூண்டுவதில்லை என்பதை மயோர்கா காட்டி கொண்டிருந்தது. இந்த விசயங்களை எல்லாம் எழுத்தில் நேரடியாய் வைக்கும் போது வக்கிரம் நிறைந்த பார்வை என்றே பார்க்கப்படுகிறது. இலைமறை காயாக சொல்லும்போது, உவமைகளையும், உவமானங்களையும் வைத்து விவரிக்கும்போது அவை இலக்கியம் என சிலாகிக்கப் படுகிறது. நிர்வாணம், நிர்வானம், நேசிக்க தெரிந்த கண்களுக்கு  காமமாக தெரிவதில்லை. ஆனால் எல்லா இடங்களிலும் முழு நிர்வாணம் அனுமதிக்கப்படுவதில்லை. மானம், அவமானம் என்றெல்லாம் இந்த நிர்வாணம் பிரித்து பார்க்கப்படுகிறது. மார்பக புற்று நோயை பற்றிய விழிப்புணர்வுக்கு பிரா இல்லாமல் வெறும் மார்பகங்களோடு நின்று உணர்த்திய பெண்களும் சரி, சில விசயங்களுக்கு நிர்வாணமாக கூட்டம் கூட்டமாக நின்று தங்கள் போராட்டத்தை வெளிக்காட்டும் போதும் சரி, நிர்வாணம் காமத்தின் வெளிப்பாடு அல்ல என்பது புரியும். அதே வேளையில் வெட்கம் இருக்கும் இடத்தில் நிர்வாணத்திற்கு இடமில்லை. சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பி, அந்த வெயிலில் அங்கிருந்து நடந்தே இடங்கள் சுற்றிப் பார்க்க கிளம்பினோம்.

 நிறைய கடைகள் இருந்தன. வெயிலின் கொடுமை தாங்காமல், மகன் நீச்சல் குளத்தில் குளிக்க வேண்டும் என விரும்பியதால் இரண்டு மணி நேரத்தில் திரும்பினோம். நீச்சல் குளத்தில் நாங்கள் சென்று விளையாட மனைவி வெட்கப்பட்டு கொண்டு  வர மறுத்து அங்கே இருக்கும் நாற்காலியில் அமர்ந்து விட்டார்.

மாலை நேரம் மீண்டும் நடந்தே இடங்கள் சுற்றினோம், ஓரிடத்தில் ஹோட்டல் செல்லும் வழி தெரியாமல் அங்கிருப்பவர்களிடம் பாதை கேட்க ஸ்பானிஸில் பேசினார்கள். ஆங்கிலத்தில் பேச மறுத்தார்களா அல்லது தெரியாதா என தெரியவில்லை. நாங்கள் ஒன்று கேட்க அவர்கள் ஒன்று சொன்னார்கள். நாங்கள் சொன்னது அவர்களுக்குப் புரியவில்லை, அவர்கள் சொன்னது எங்களுக்கு விளங்கவே இல்லை. மொழி தெரியாமல் ஒரு இடத்தில் வாழ்வது அத்தனை சௌகரியமில்லை. நாங்களாகவே நடந்து பிரதான சாலையை கண்டுபிடித்தோம். அங்கிருந்து ஹோட்டல் கண்டுபிடிப்பது எளிதாக இருந்தது.

இரவு ஹோட்டலில் சாப்பிடலாம் என முடிவு செய்தோம். சாப்பிட அமர்ந்தவுடன், ஏன்டா சாப்பிட வந்தோம் என்றாகிவிட்டது. ஒரு தட்டு சோறுடன் பாத்தி கட்டி சாம்பார் ஊத்தி சாப்பிட்டு பழகி போன எனக்கு இரண்டு கத்தரிக்காய், ஒரு காளான், இரண்டு காரட் என வந்து வைக்க அட பாவிகளா என்றுதான் சொல்ல தோணியது. பஃபே முறை இருந்ததால் அங்கே இருந்த ரொட்டி வகைகளை எடுத்து சமாளித்தோம். எப்படியாவது நல்ல கடை ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும் எனும் ஆவல் பிறந்தது. இரவு அந்த ஹோட்டலில் ஒருவர் பாடினார். தேநீர் அருந்தி கொண்டு இரவு பன்னிரண்டு வரை புரியாத மொழி எனினும் பாடலை ரசித்தோம்.

உறங்க செல்லும் முன்னர் கார் ஓட்டி விடுவீர்களா? என மனைவி கேட்டார். அதெல்லாம் ஓட்டிவிடலாம் என சொல்லிவிட்டு,  மனைவியின் இரவு நேர கேள்வியினால் கார் எப்படி ஓட்டுவது என்பது குறித்தான சிந்தனையை மன திரையில் ஓட்டினேன். வலது பக்கம் சென்றால் எப்படி திரும்ப வேண்டும், எப்படியெல்லாம் செல்ல வேண்டும் என்பது குறித்து மனதில் ஓட்டி பழகினேன். ஓரளவு நம்பிக்கை பிறந்தது. காலையில் ஒன்பது மணிக்கு கார் வந்து இருக்கிறது, வாருங்கள் என தொலைபேசியில் அழைத்தார் வரவேற்பாளர். நான் மட்டும் போய் கார் சாவியை வாங்கி வருகிறேன், தயாராக  இருங்கள் என மனைவி, மகனிடம் சொல்லிவிட்டு சில படிவங்களை எடுத்து கொண்டு கீழே வந்தேன்.

கார் காணவில்லை. ஒருவர் வாருங்கள் என என்னை அழைத்தார். என்னோடு மேலும் சிலர் வந்தார்கள். எங்கே கார் என கேட்டேன்? இதோ இந்த காரில் ஏறுங்கள் என அனைவரையும் சொன்னார். அப்பொழுதுதான் புரிந்தது, கார் வேறு ஒரு இடத்தில் இருக்கிறது என்பது. எனக்கு புரிந்த வேளையில் அவரே சொன்னார். கார் வேறு இடத்தில் இருந்து நான் எடுத்து வரவேண்டுமென. அட ராமா என எனக்கு ஆகிப் போனது. அப்பொழுதுதான் எனது செல்பேசி என்னிடம் இல்லை என புரிந்தது. மனைவியிடமும், மகனிடமும் தகவல் சொல்ல வழியில்லை. வேறு வழியின்றி காரில் ஏறி அமர்ந்தேன். சற்று இடைவெளியின் போது ஒரு சுற்றுப் பாதை என வந்து கொண்டே இருந்தது. எப்படி செல்கிறார் என கவனமாக பார்த்து கொண்டே வந்தேன். ஒவ்வொரு சாலை பெயரை மனதில் பதித்தேன். ஒரு சுற்றுப் பாதை வழியாக சென்று கார் இருக்கும் இடம் அடைந்தேன். வந்தவர்களில் எவரும் ஆங்கிலேயர்கள் இல்லை. ஒவ்வொருவரும் பதிவு செய்து கார் எடுத்து கொண்டு சென்றார்கள்.

எனது சுற்று வந்தது. வழிகாட்டி ஒன்றை வாங்கினேன். அதை ஆங்கிலத்தில் மாற்றி அமைத்து தந்தார்கள். மிகவும் பழைய கார். அங்கங்கே சின்ன சின்ன அடி வாங்கி இருந்தது. சுட்டி காட்டினேன், அதெல்லாம் ஒன்றுமில்லை என்றார்கள். சரியென காரில் ஏறி அமர்ந்தேன். சரியாக ஹோட்டல் சென்று விடுவோமா என அச்சம் வந்து சேர்ந்தது. காரை சிறிது தூரம் செலுத்த கண்ணாடியில் ஒட்டப்பட்ட வழிகாட்டி கீழே விழுந்தது. ஆங்கிலத்தில் இருந்து அது மாறி இருந்தது. அதை எப்படி சரி செய்வது என புரியாமல் வழிகாட்டி இல்லாமல் மெதுவாக காரை செலுத்த ஆரம்பித்தேன்.

இடது, வலது, மறுபடியும் வலது என பாதையை நினைவுபடுத்தி சுற்றுப்பாதை வந்தேன்.  மெதுவாக வந்தபடியே வலது பக்கம் திரும்பி பிரதான சாலை அடைந்தேன், கியரை மாற்றும்போது  கியர் தலைப்பாகம் கையுடன் வந்து தள்ளி விழுந்தது. பக் என்று இருந்தது.

அன்று எடுத்த சில புகைப்படங்கள்.

மயோர்கா இயற்கை காட்சிகள் நிறைந்தே தென்பட்டது. கடற்கரைகள், மலைகள் என அற்புதம். அழகிய மரங்களும், வரிசையாய் நிறுத்தப்பட்ட கார்களும்.


தங்கியிருந்த ஹோட்டலின் பின்புறம், நீச்சல் குளமும், அதைத் தாண்டி கடலும்.




நீச்சல் குளத்தில் முன்னர் இருந்த நாற்காலிகள்.


ஹோட்டலின் உட்புறத்தில் ஒரு பகுதி.


இரவில் மயோர்கா.


(தொடரும்)