Thursday 20 October 2011

போட்டியும் பொருளாதார சரிவும் - கடனாளிகள்

ஒரு நாட்டின் பொருளாதரத்தை நிர்ணயம் செய்வது அந்த நாட்டின் மக்கள் மட்டுமில்லாமல் அடுத்த நாட்டு மக்களும் தான். 

ஒரு நாடானது தனது தேவையினைப் பூர்த்தி செய்தபின்னரே பிற நாடுகளுக்கு கொடுக்க வேண்டும், அப்படி செய்தால் தான் அந்த நாடு ஒரு முன்னேற்றமடைந்த நாடாக இருக்க இயலும். பொதுவாகவே ஒரு நாடு தனக்கு தேவையில்லாத ஒன்றை உற்பத்தி செய்து அதனை பிற நாடுகளிடம் விற்பனை செய்து தனது பொருளாதாரத்தை முன்னேற்றி கொள்ளலாம். 

மேலும் அந்த அந்த நாட்டின் தேவைகள் குறித்து அந்த அந்த நாட்டுக்கே சென்று உற்பத்தியை பெருக்கி தனது வளமையை வளப்படுத்தலாம். இப்படித்தான் உலக நாடுகள் தனது வர்த்தகத்தை பெருக்கி கொள்கின்றன. ஒரு நாட்டின் தேவை எது, அத்தியாவசியம் எது, அனாவசியம் எது என்பதை தீர்மானிக்கும் நிலையில் நாட்டின் தலைவர்களை விட நாட்டின் மக்களே இருக்கிறார்கள். 

இதை ஒரு வீடு என்பதில் இருந்து தொடங்கலாம். இப்பொழுது சௌகரியம், அசௌகரியம் என எதை விரிவுபடுத்துவத்து அல்லது விளக்கப்படுத்துவது என்பதை பார்க்கலாம். ஒருவருக்கு தங்குவதற்கு தேவையான ஒரு வீடு தேவை. இப்பொழுது வீடு என்பது நான்கு சுவர்கள் கொண்ட ஒரு அமைப்பாகவும் இருக்கலாம். ஒரு படுக்கை அறை, ஒரு சமையல் அறை, ஒரு கழிவறை மற்றும் குளியலறை, ஒரு பொது அறை, ஒரு படிப்பு அறை என ஒரு வீடு போதுமானது. வீட்டில் அதிக நபர்கள் இருந்தால் பொது அறை படுக்கை அறையாக மாறிவிடும். ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் இப்படி தனிதனி அறைகள் இல்லாமல் கூட வீடு அமையலாம். வீடு எப்படி இருக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் வசதியை பொறுத்து அமைகிறது. 

வீட்டிற்கு தேவையான பொருட்கள் அதாவது அமரும் நாற்காலி, மெத்தைகள், தொலைகாட்சி, வானொலி, சட்டி பாத்திரங்கள் என அவையும் ஒரு வகையில் அடக்கலாம். இப்பொழுது வீடு தயார். இதற்காக செலவழிக்கப்படும் பணம் எவ்வளவு? இந்த பொருட்களையெல்லாம் உற்பத்தி பண்ணுபவர்கள், வீடு கட்டுபவர்கள் என ஒவ்வொருவரின் தொகை எவ்வளவு, லாபம் எவ்வளவு? கணக்கிட்டு பார்த்தால் வீடு கட்டுமான தொழிலாளர்கள் முதற்கொண்டு சித்தாள் வரையிலான பொருளாதாரம் தெரியும். இப்படித்தான் ஒரு நாட்டின் அமைப்பும் நிர்ணயம் செய்யப்படுகிறது. 

ஆனால் எந்த ஒரு நாடும் தன்னிடத்தில் அனைத்து பணத்தையும் கொண்டிருப்பதில்லை. இதனை உலக  நிதி அமைப்பிடம் கடனாக பெறுகின்றன. ஒவ்வொரு நாடுமே இத்தகைய கடன் பெற்று வாழ்க்கை நடத்துவதால் ஒவ்வொரு குடிமகனும் கடனாளிகள் என ஆகி விடுகிறார்கள். சிக்கன வாழ்க்கை, சில்லறை வாழ்க்கை, ஆடம்பர வாழ்க்கை, படோபகர வாழ்க்கை என தனது நிலைக்கு மேல் வாழ நினைப்பவர்கள் கஷ்டம் கொள்கிறார்கள் என்பது ஒரு புறம் இருந்தாலும் கனவுகள் இல்லாத, சாதிக்க வேண்டும், முன்னேற வேண்டும் என முனைப்பு இல்லாத எவரும் முன்னேற முடியாது. 

தன்னிடம் போதிய அளவு நிதி இல்லாத பட்சத்தில் நாங்கள் கடன் வாங்க மாட்டோம் என ஒரு நாடு இருந்தால் அந்த நாடு முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியாது. கையில் இருப்பை வைத்து கொண்டுதான் எதையும் செய்ய முடியும் என நினைத்தால் எதுவுமே நடக்காது. வருவாயை பெருக்கும் வழியை அறிந்து கொண்டு செலவினங்களை கட்டுபடுத்த வகை செய்ய வேண்டும். 

வீட்டில் சமைத்து சாப்பிடுவது அசௌகரியம் என நினைத்தால் பையில் இருக்கும் பணம் அசௌகரியப்படத்தான் செய்யும். அதே வேளையில் அனைவருமே வீட்டிலேயே சாப்பிட நினைத்துவிட்டால் உணவகங்கள் எல்லாம் அவசியமில்லாமல் போய்விடும். அப்படி உணவகங்கள் அவசியமில்லாமல் போனால் அங்கு வேலை பார்ப்பவர்கள், அந்த உணவகத்திற்கு தரப்பட்ட பொருட்கள் எல்லாம் நின்று போய்விடும். 

எல்லாருடைய தேவைகளையும் ஒரே நிறுவனத்தினால் பூர்த்தி செய்ய முடியாத காரணத்தின் காரணமாகவே சில பல மாற்றங்களுடன் பல நிறுவனங்கள் ஒரே பொருளை சற்று வித்தியாசப்படுத்தி விற்பனைக்கு கொண்டு செல்கின்றன. ஒரு நிறுவனத்தின் தலைவரின் செயல்பாடுகள் அந்த நிறுவனத்தின் பெயரை வலுப்படுத்தவோ, வலுவிளக்கவோ செய்கின்றன. மக்களிடம் பிரசித்து பெற்றுவிட்டால் அந்த நிறுவனத்தின் மீதான நம்பிக்கை மென்மேலும் வலுவடைந்து அந்த நிறுவனம் ஒரு தனி இடத்தை இந்த போட்டியில் நிலை நாட்டிக் கொள்கிறது. 

சிறந்த பொருள் அதிக விலை என்பது வியாபார தந்திரம். அதே வேளையில் சிறந்த பொருள் குறைந்த விலையிலும் கிடைக்கும் என்பதை நாம் மறுக்க கூடாது. பெரிய பெரிய கடைகளில் விற்கப்படும் பொருள்களில் இருக்கும் நம்பிக்கை சின்ன சின்ன கடைகளில் விற்கப்படும் பொருள்களில் நமக்கு நம்பிக்கை வருவதில்லை. அது மனித இயற்கை. 

சிறுக சிறுக சேர்த்தல் அவசியம். எது எடுத்தாலும் ஒரு ரூபாய் என விற்பனைக்கு ஒரு நிறுவனம் தொடங்கினால் அதனால் லாபம் அதிகமா, நஷ்டம் அதிகமா? அடுத்து சந்திக்கலாம். 

Wednesday 19 October 2011

தமிழ்மணமே தளராதே இருக்கிறோம் நாங்கள்

முத்தமிழ்மன்றத்தில் இருக்கும்போது ஏதாவது கருத்துப் பிரச்சினை வரும். அப்பொழுது எதற்கு இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்கிற ஒரு ஆதங்கம் வந்து சேரும். பின்னர் யோசித்துப் பார்த்தால் அவருக்கு தெரிந்தது அவர் செய்கிறார் என்கிற ஒரு விசயம் எச்சமாக நிற்கும். இப்பொழுது கூட அந்த பதிவுகளை எல்லாம் படித்தால் சிரிப்பு மட்டுமே மிஞ்சுகிறது. எங்கே போனார்கள் அவர்கள்? 

அந்த மன்றத்தில் பல உறுப்பினர்கள் சேர்ந்து இருந்தாலும் பங்களிப்பார்கள் மிகவும் குறைவு. இரண்டாயிரத்து ஆறாம் வருடத்தில் அங்கே இணைந்த நான் இதுவரை பத்தாயிரம் பதிவுகள் பதிந்து உள்ளேன். அதில் ஒரு வரி பதிவுகளான நன்றிகள், மறுமொழிகள் மிக அதிகம். அங்கே இருந்து இந்த வலைப்பூவில் நான் கொண்டு வந்து சேர்த்ததில் ஐநூறுக்கும் குறைந்த பதிவுகளே தேறின. அதிகம் தமிழ் வாசித்தது முத்தமிழ்மன்றத்தில் தான். பின்னர் தமிழ்மணத்தின் மூலம் பல தமிழ் பதிவுகள் வாசிக்கத் தொடங்கினேன். ஆச்சர்யமூட்டும் வகையில் பல எழுத்துகள் இருந்தாலும், நகைச்சுவை பதிவுகளும், சர்ச்சைக்குரிய பதிவுகளுமே அதிகம் ஈர்த்தது. காரணம் அது மனித இயல்பு. 

பொதுவாகவே சர்ச்சைக்குரிய பதிவுகள் குறித்து, சர்ச்சைக்குரிய விசயங்கள் குறித்து எதுவும் எழுதுவதில்லை. பல பிரச்சினைகள் பார்த்து இருந்தாலும் எல்லாம் காலப்போக்கில் நீர்த்துப் போய்விடும் என்பதன் காரணமாகவே. இப்படி பிரச்சினைகள் வரும்போது அது குறித்து எழுதி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் பதிவர்கள் பலர் உண்டு. ஒரு பிரச்சினை பதிவுலக பிரச்சினை ஆகிவிடும் அளவுக்கு அதிகம் பேசப்படும், பின்னர் வேறு விசயங்களுக்கு சென்று விடுவார்கள். அப்பொழுதுதானே எழுத்து பயணம் தொடரும். எத்தனை நாளுக்குத்தான் ஒரே விசயத்தை பற்றி எழுத்து போர் நடத்துவது. இதனால் தமிழ் பதிவர்கள் குறித்த சிந்தனை ஒன்று நானும் எழுதியது உண்டு. ஒரு கூட்டணியாக வலம் வரும் பதிவர்கள் ஒன்றுமில்லாத விசயத்தை கூட பலரும் படிக்கும் வகையில் அதை பெரிதுபடுத்திவிடுவார்கள். அதில் தவறும் இல்லை. ஏனெனில் நோக்கம் என்பது எழுதுவது. அவ்வளவே. வாசிக்கும் வாசகர் எதை வாசிப்பது, எதை வாசிக்க கூடாது என்பதை அவரே  தீர்மானம் செய்து கொள்ள வேண்டியதுதான். 

இதில் இன்ன இன்ன பதிவர் இப்படிப்பட்டவர் என்கிற தனி முத்திரையும் உண்டு. இந்து மதத்தை கேலி செய்யும் ஒரு கூட்டம் உண்டு. ஆனால் அதைப்பற்றி எதிர் பதிவு போடும் அளவுக்கு நிறைய பதிவர்கள் கூட்டு சேர்ந்ததை கண்டதில்லை. மதம் சார்ந்த, இயக்கம் சார்ந்த, அமைப்புகள் சார்ந்த, நட்புகள் சார்ந்த தளங்கள் நிறையவே உண்டு. அவையெல்லாம் ஒரு சாதாரண வாசகர் எனக்கு வெளிச்சம் போட்டு தந்தது இந்த தமிழ்மணமே. 

இந்த தமிழ்மணத்தில் இணைந்த பதிவர்கள் பலர் எழுதாமலேயே நிறுத்தி இருக்கிறார்கள். எதாவது பிரச்சினையின் போது விலகியும் போய் இருக்கிறார்கள். இதனால் தமிழ்மணம் இழந்தது ஒன்றுமில்லை. எழுதுபவர்கள் இழக்கிறார்கள். தனது கருத்துகள் பலருக்கு செல்லும் வழியை தாங்களே அடைத்து கொள்கிறார்கள். ஒரு நாட்டுக்கு தலைவர் அவசியம். ஆனால் அந்த தலைவரை விட மக்கள் அவசியம் எனில் தலைவர் எதற்கு? எத்தனையோ மிக சிறந்த பதிவர்கள் இந்த திரட்டிகளில் எல்லாம் இணைத்து கொண்டதில்லை. மிகவும் பிரபலமான நபர்கள் எவருமே தங்களை திரட்டியில் சேர்த்ததும் இல்லை. இணைய வழியில் எழுதாதபோது எழுத்தாளர்கள் இருக்கத்தானே செய்தார்கள். 

விமர்சனம் செய்ய எனக்கு உரிமை இருக்கிறது என சொல்பவர்கள், பிறர் விமர்சிப்பதை தாங்கி கொள்ள மறுத்துவிடுகிறார்கள். 

நகைச்சுவையாகத்தான் இருந்தது. தமிழ்மணத்திற்கு சமீபத்திய பிரச்சினைக்கு தமிழ்மணத்தில் தங்கள் பதிவுகளை இணைத்தே கண்டனம் தெரிவித்தது. இப்படி எதிர்ப்பை தமிழ்மணத்தில் இணைக்காமல் எழுதி இருக்க வேண்டும். நாங்களும் படித்து இருக்கமாட்டோம். மேலும் இந்த பிரச்சினை தங்கள் சுயத்தை உரசிப் பார்த்துவிட்டது என தெரிந்து இருந்தால் தமிழ்மணம் பக்கமே எட்டிப் பார்த்து விடக்கூடாது. ஆனால் யார் யார் என்ன எழுதி இருக்கிறார்கள் என தமிழ்மணத்தில் தேடி தேடி பதிவு போடுகிறார்கள். இப்படி அவர்களது கருத்தை தெரிவிக்க இந்த தமிழ்மணம் வேண்டும்? இது போன்றவர்களை முட்டாள் பதிவர்கள், வெட்டிப் பதிவர்கள், வீண் பதிவர்கள் என்று எல்லாம் இப்போது நான் சொன்னால் இவர்கள் வருந்தமாட்டார்களா? அதோடு மட்டுமில்லாமல் தமிழ்மணத்தை தடை செய்வார்களாம். தமிழ்மணம் தார்மீக மன்னிப்பு கேட்கவேண்டுமாம். வெங்காயங்கள் என இவர்களை திட்டினால் வருந்தமாட்டார்களா? தமிழ்மனங்கள் வருந்துகின்றனவாம். எத்தனை இழிவாக, நாகரிம் அற்று  எல்லாம் எழுதிய பதிவுகள் இதே இணைய வீதியில் சிதறித்தான் கிடக்கின்றன. அதில்தான் நான் மிதிப்பேன் என்றால் யாருக்கு என்ன கவலை? தெருவுக்கு தெரு, நாட்டுக்கு நாடு ஒருவரை ஒருவர் மதத்தினால், சாதியினால் கேவலப்படுத்துவதை மதப் போர்வையில், சாதிப் போர்வையில், ஆணாதிக்கப் போர்வையில் ஒளிந்திருக்கும் மனித மிருகங்கள் குறித்து எந்த கவலையும் இல்லை இவர்களுக்கு. ஒரு வேலை உணவு க்கு வழி இல்லாமல், வானம் பொய்த்து, பூமியும் பிய்த்து வாடும் நாடுகள் பற்றிய அக்கறை இல்லை எவருக்கும். எந்த வாசகத்துக்கு சண்டை தொடங்கியதோ அந்த வாசகத்திற்கே அர்த்தம் தெரியாத சடங்களை குறித்து இறைவன் இப்போது என்ன நினைத்து கொண்டிருக்கக் கூடும்? தவறு செய்தவரை கூட்டமாக குறி வைத்து தாக்கியவர்கள் கூட குற்றவாளிகள். மன ஒழுங்கு இல்லாதவரிடம் இருந்து ஒதுங்கிப் போகக் கூடியவரே புத்திசாலி. ஒரு குற்றம் தொடங்கி ஓராயிரம் குற்றங்கள் ஏற்பட எவர் காரணம்? தான் தவறு செய்தேன் என பிறர் சொல்லி தெரிகிற அளவுக்கு ஒருவரின் மனநிலை இருக்குமெனில் அவரை எப்படி திருத்துவது? 

அதெல்லாம் இருக்கட்டும். ஒரு தனிமனிதன் செய்யும் தவறுக்கு மொத்த நிர்வாகம் எதற்கு பங்கு ஏற்க வேண்டும்? முதலில் தனிமனிதன் தவறுக்கு அவரே பொறுப்பு. நிர்வாகத்தில் அவர் கலந்து ஆலோசித்து பின்னர் செயல்பட்டாரா? நிர்வாகம் இதற்கு அனுமதி தந்ததா? நிர்வாகத்தில் இருப்பவர் பொறுப்புடன் செயல்படவில்லையெனில் நிர்வாகத்தின் பெயர் கெட்டுவிடும் என்பது அவருக்கு தெரிந்து இருக்க வேண்டும். மொத்த நிர்வாகமும் இதேபோல் செயல்பட்டால் அந்த நிர்வாகம் குறித்து கண்டனம் எழுப்பலாம். அதைவிடுத்து நிர்வாகம் குறித்த கருத்துகள் கேலிக்குரியவையாக இருக்கும். 

மதம் சார்ந்த விசயங்கள் மனிதனை மிகவும் புண்படுத்துகின்றன. நம்பிக்கை சார்ந்த விசயங்கள் மனிதனை மிகவும் அச்சுறுத்துகின்றன. இறைவனுக்கு எதுவுமே வலிப்பதில்லை. ஆனால் இந்த இழிநிலை மனிதர்களுக்குத்தான் எல்லாமே வலிக்கின்றன, ஏனெனில் இறைவன் ஏற்படுத்தாத பல விசயங்கள் இவர் ஏற்படுத்தி வைத்திருப்பதுதான். இறைவன் எழுதியதாக சொல்லப்படும் புத்தகங்கள், இவர் கொண்டிருக்கும் சாத்திர சம்பிராதயங்கள், அப்பப்பா. உலகம் பிளவுப்பட்டு போனதில் இவர்களின் பங்கு மிக மிக அதிகம். பொருளாதாரம், நிறம், இனம் என இவர்களின் கொலைக்குற்றங்கள் கணக்கில் அடங்காது. 

புதிய பதிவர்கள், நடுநிலை பதிவர்கள், பிரச்சினைக்கு என போகாமல் எழுத்தே தலையாயப் பணி என இருப்பவர்கள் திரட்டிகளினால் பயன் அடைவார்கள். உங்கள் நிர்வாகி ஒருவரின் எழுத்து அவரது கருத்து. பொது இடத்தில் வந்து விட்டாலே பொல்லா வினையும் வந்து சேரும் என்பது நான் உட்பட அனைவருமே கருத்தில் கொள்ள வேண்டியதுதான்.

ஒரு எழுத்து ஒருவரை ஓரளவுக்கே அடையாளம் காட்டும். நேரில் பேசுங்கள், நேரில் பழகுங்கள். வாழ்க்கை சுகமாகும். சாந்தி நிலவும், சமாதானமும் நிலவும். 



ஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (3)


சுவாசம் என்பது மூச்சை உள்ளிழுத்து வெளியிடுவது. இந்த சுவாசம் ஒரு இயந்திர தன்மையாக இருக்கும்பட்சத்தில் அதிகளவு உபயோகமில்லை. ஆனால் அதே வேளையில் இந்த சுவாசத்தினால் ஒரு வேதிவினை நடைபெறும்போதுதான் இதன் முக்கியத்துவம் மிகவும் மனதில் கொள்ளவேண்டியது. 

மூச்சை அடக்கி வாழும் வாழ்க்கை என்பது ஒரு சில நிமிடங்கள் மட்டுமே சாத்தியம். தாவரங்கள் கரியமில வாயுவை உட்கொண்டு ஆக்சிஜனை வெளியிடுகிறது. நாமோ ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு கரியமில வாயுவை வெளியிடுகிறோம். 

தாவரத்தின் சுவாசம் இலையின் மூலமாகவே நடைபெறுகிறது. இலையில் இருக்கும் காற்றிடங்கள் இதற்கு உருதுணையாகின்றன. ஸ்டாமோடா எனப்படும் சிறு துளையானது தவாரங்கள் சுவாசிக்க உதவுகின்றன. 

ஒவ்வொரு உயிர் வாழ் இனமும் தனக்குள் வெவ்வேறு உடல் அமைப்பை வைத்துக்கொண்டு சுவாசித்துக் கொண்டு இருக்கின்றன. நமக்கு மூச்சுக்குழல், கிளைக்குழல், சுவாசப்பை என நுரையீரல் அமைப்புடன் சுவாசிக்கின்றோம். இந்த மூச்சுக்குழல், கிளைக்குழல், சுவாசப்பை என பகுதியில் ஏற்படும் பிரச்சினைகளே ஆஸ்த்மா போன்ற மூச்சு சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் காரணமாகும். 

இந்த அமைப்பானது பஞ்சு போன்று மெருதுவாக இருக்கும். சுவாசப்பைகள் மிகவும் சின்னதாக காணப்படும். இந்த சுவாசப்பைகள் வாயுக்கள் பரிமாற்றத்திற்கு பெரிதும் உதவுகின்றன. சுவாசப்பைகள் சிறிதாக இருப்பதினாலும், ரத்த நாளங்கள் அதிகளவில் வந்து செல்வதாலும் வாயுக்கள் பரிமாற்றம் மிகவும் சிறப்பாக செய்து கொள்கின்றன. இந்த நுரையீரலும், இருதயமும் இணைந்து பணியாற்றுவதால் நமது உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் தேவையான ஆக்சிஜன் பரிமாற்றமும், கரியமில வாயு வெளியேற்றமும் நடைபெறுகிறது. 

இந்த நுரையீரல் அமைப்பில் இருக்கும் திசுக்கள், நார், சுரக்கும் காரணிகள் என இந்த நுரையீரலை பாதுகாத்து கொள்ளும் வகையில் பல விசயங்கள் அமையப்பெற்று இருக்கின்றன. பொதுவாகவே நமது உடலில் இருக்கும் திசுக்களுக்கு தம்மை தாமே சரி செய்து கொள்ளும் செயல்பாடுகள் உண்டு. சரிசெய்யும் அளவிற்கு விட மிஞ்சும்போதுதான் பிரச்சினைகள் உருவாகின்றன. 

நமது உடலில் ஏதேனும் உபாதைகள் ஏற்பட்டால் நமது ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்கள் குழுவில் உள்ள நியுட்ரோபில், பெசொபில், எசிநோபில், மேக்ரோபெஜ், மோனோசைட், லிம்போசைட் என்பவை பெருமளவில் உதவிபுரிகின்றன. இவையே நமது உடலில் உள்ள பிரச்சனைகளை சரிகட்டும் நிபுணர்கள். 

இப்படி நாம் இந்த நுரையீரல் அமைப்புடன் சுவாசித்து கொண்டிருக்க, மீன்களோ வேறு சுவாச அமைப்பு பெற்று இருக்கிறது. அவைகளுக்கு இந்த நுரையீரல் அமைப்பு கிடையாது. அதற்கு பதிலாக செதில்கள் மூலம் சுவாசம் அதுவும் நீரில் மட்டுமே சுவாசிக்கும் தன்மை உடையவனாக இருக்கின்றன. தவளைகள் தனது தோள்களின் மூலம் நீரிலும், சிறிய நுரையீரல் அமைப்புடன் நிலையத்திலும் சுவாசிக்கும் தன்மை உடையவனாக இருக்கின்றன. எறும்புகள் போன்றவை எல்லாம் இது எல்லாம் எதற்கு என நேரடியாக காற்றினை தனது செல்களுக்கே அனுப்பி வைத்து விடுகின்றன. இப்படி ஒவ்வொரு உயிரினமும் இப்படி இருக்க ஆஸ்த்மா மனித குலத்திற்கே மட்டும் தானா பிரச்சினை? 

பிரணாயமம் பற்றி நமது முன்னோர்கள் கூறியதை நாம் இப்போது நினைவு கூர்வோம். நமது சுற்றுப்புறம் மிகவும் சுத்தமானதாகவும், நமது சுவாசம் சீராகவும் இருந்தால் நெடுங்காலம் வாழலாம் என்பது அவர்களின் கணிப்பு. அது முற்றிலும் உண்மை. 

விஷம்தனை உண்டு அதிக நாள் உயிர் வாழ்வோர் உண்டோ? சுற்றுப்புற மாசுவினால் நாம் விஷத்தை உள்ளிழுத்து வெளியிட்டு கொண்டிருக்கிறோம்.
நாம் எப்படி மூச்சு விடுகிறோம் என்பதை நாம் உன்னிப்பாக கவனித்து பார்த்தல் அதுவே ஒரு தியானத்திற்கு சமானம். குறிப்பிட்ட நேரத்தில் வலது நாசி புறமாகவும், குறிப்பிட்ட நேரத்தில் இடது நாசி புறமாகவும், சில நேரங்களில் இரண்டு நாசிகள் வழியாக சுவாசம் செய்கிறோம் என எவரேனும் நம்மிடம் வந்து சொன்னால் நமக்கு வேலை அற்றவர்களின் வீண் வேலை என சொல்லத்தான் தோன்றும். ஆனால் எதற்கும் ஒரு நாள் இதற்கென நேரம் செலவிட்டுப் பார்த்தால் சொல்வதில் உள்ள சூட்சுமம் தெரியும். 

நாசியில் இருந்து தொடங்கும் இந்த பயணம் நுரையீரல் வரை சென்று அங்கிருந்து வேறு பயணம் தொடங்குகிறது. நாம் உட்கொள்ளும் உணவானது மூச்சுக்குழல் வழி சென்றிடாது ஒரு மூடி போன்ற அமைப்பு நம்மை பாதுகாத்து வருகிறது. ஏதேனும் மூச்சுக்குழல் வழியாக சென்றுவிட்டால் புரையேறிவிட்டது என இருமல் மூலமாக நாம் அந்த பொருளை வெளியேற்றி விடுகிறோம். இதற்கு எல்லாம் காரணமாக இருப்பது நரம்பியல் மண்டலம் தான். இந்த நரம்பியல் மண்டலம் எல்லா தகவல்களையும் சேகரித்து என்ன செய்வது என்ன செய்யக்கூடாது என ஒரு திட்டவட்டமட்டமாக பணிபுரிந்து வருகிறது. 

நமக்கு பயம் ஏற்பட்டாலோ அல்லது உடற்பயிற்சி செய்தாலோ நமது சுவாசிக்கும் தன்மை அதிகரிக்கிறது. இதற்கு காரணம் நமது திசுக்களுக்கு அதிக அளவில் தேவைப்படும் ஆக்சிஜன். அதோடு மட்டுமல்லாமல் இருதயம் இதற்கென வேகமாக துடிக்கவும் செய்கிறது. அதற்கேற்றாற்போல் நமது சுவாசத்தன்மையும் ஈடு கொடுக்கிறது. 

இப்படிப்பட்ட சகல சௌபாக்கியங்களையும் கொண்டுள்ள நமது நுரையீரல் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தான் என்ன? மூச்சு திணறல் மூலம் அவஸ்தைப்படும் நபர்களின் அனுபவங்கள் சொல்லும் கதைகள் பல. இந்த விசயத்தை குறித்த ஆராய்ச்சிகள் பெருமளவில் நடத்தப்படுகின்றன. சுவாசம் இல்லாவிட்டால் சுக வாசம் ஏது?