Tuesday 18 October 2011

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? படிச்சவரும் முட்டாளும்

 முன்னுரை  எழுதி கிட்டத்தட்ட இரண்டு வருசம் ஆகிப் போச்சு. இனிமே ஒவ்வொரு தொடரா எல்லாத்தையும் எழுதி முடிச்சிரலாம்னு ஒரு முடிவுக்கு வந்துட்டேன். அதன் முதற்படிதான் இந்த வாழ்க்கையில் சீரழிவது எப்படி அப்படிங்கிற தொடரோட தொடக்கம். சமூக பிரச்சனைகளை பத்தி சமூகம் கவலைப்படட்டும். என் தொடரைப் பற்றி மட்டுமே நான் அக்கறை கொள்கிறேன் இங்கு. 

1. படிச்சவரும் முட்டாளும் 

படிச்சவர் யாரு? முட்டாள் யாரு? இது ரொம்ப ரொம்ப யோசிக்க வேண்டிய விசயம். ஆனா எப்படி யோசிக்கிறது? 

படிச்சவர் அனாவசியமா யோசிப்பார் . முட்டாள் யோசிக்கவே மாட்டார் அப்படினு ஒரு பொது கருத்து வைச்சிப்போம். ஒரு பக்கத்துல படிச்சவரே  அப்படினு ஒரு நாலு பேரை பேச வைப்போம். மறு பக்கத்துல முட்டாளே அப்படினு ஒரு நாலு பேரை பேச வைப்போம். இவங்க சொல்ற கருத்தை எல்லாம் எடுத்து ஒரு குறிப்பு வைச்சிப்போம். அப்புறம் யாரு படிச்சவர், யாரு முட்டாளு அப்படினு தெரிஞ்சி போயிரும். இவங்க பேசி முடிக்கிறவரைக்கும் நாம காத்திருப்பது சரிதானுங்களா, அதுதான் இல்லை. இவங்க பேசறதை எல்லாம் கேட்டுகிட்டு இருக்காங்க பாருங்க அவங்க தான் முட்டாளுங்க. இதுவும் சரிதானா, அதுதான் இல்லை. 

சரி, தமிழ் விக்கிபீடியாவில , ஆங்கில விக்கிபீடியாவில அப்படி இப்படி பீடியாவில் எல்லாம் போய் தேடித்தான் பாருங்க. படிச்சவர், முட்டாள் அப்படிங்கிறதுக்கு என்ன விளக்கம் அப்படினு. ஒரு மண்ணும் இருக்காது. எதுக்குனா இதை எல்லாம் ஒரு கட்டத்துக்குள்ள விளக்க முடியாது. இது ஒரு பெரிய வட்டம். சுத்தி சுத்தி வரும். 

படிச்சவர் : குறைந்தது ஒரு மொழியைப் படிக்கவும், எழுதவும் தெரிந்தவர். இவருக்கு எது நல்லது, எது கெட்டது என்பதை பாகுபடுத்தி பார்க்கத் தெரியும். சமயோசிதமாக சிந்தித்து செயல்படுவதில் சிறப்பானவர். 

முட்டாள் : இவருக்கு குறைந்தபட்சம் ஒரு மொழியை கூட எழுதவோப்  படிக்கவோ  தெரியாது. சமயோசிதமாக சிந்திப்பதில் சற்று குறைபாடு இவரிடம் இருக்கும். என்ன பேசுகிறார் என்பதற்கான சிந்தனை கூட இவரிடம் இருப்பதில்லை. 

சரி படிச்சவங்களுல முட்டாளுங்க இல்லையா அப்படினு சமயோசிதமா ஒரு கேள்வி வரும். முட்டாளுங்க படிச்சவங்க மாதிரி நடந்துக்க முடியாதா அப்படினு இன்னொரு கேள்வி வரும். இப்படி கேள்வி கேள்வி கேட்கறவங்க எல்லாம் படிச்சவங்கனு சொல்ல முடியாது. எதுக்குனா முட்டாத்தனமா கேள்வி கேட்கறவங்க முக்காவாசி பேரு படிச்சவங்கதான். 

ஆக மொத்தம் படிச்சவங்களுல முட்டாளுங்க இருக்காங்க. அவங்கதான் படித்த முட்டாள்கள். இப்ப இருக்கிற வாழ்க்கையில நூத்துக்கு ஐம்பது  சதவிகிதம் இப்படிப்பட்ட  படித்த முட்டாள்கள் தான் உலகை ஆக்கிரமிச்சிட்டு இருக்காங்க. மீதி ஐம்பது சதவிகிதம் படிச்ச விரக்தியில ஒன்னும் செய்ய முடியாதா அப்படிங்கிற மன அழுத்தத்துல இருக்காங்க. அவங்களும் ஒரு முட்டாள் கூட்டம் தான். ஆக இது, மொத்தத்துல ஒரு முட்டாள்களின் உலகம். இல்லை, இல்லை நான் முட்டாள் இல்லை, அப்படி இப்படினு நீங்க குதிச்சா நல்லா குறிச்சி வைச்சிகோங்க, நீங்கதான் உண்மையிலேயே  முட்டாள். 'எப்படி மன நிலை பிறழ்ந்தவர் தன மனநிலையை குறித்த சிந்தனையை அறிய இயலாதோ அதைப் போலவே முட்டாள்கள் தங்கள் முட்டாள்தனத்தை ஒரு போதும் ஒப்புக் கொள்வதில்லை. அப்படி முட்டாள்தனத்தை ஒப்புக்கொண்டாலும் முட்டாள்களாகவே வாழ்பவர்கள் இருப்பவர்கள் அதிகம்'.  

ஒரு பாட்டு கேள்வி பட்டுருப்பீங்க, அந்த பாட்டை இன்னொருதரம் கேட்டு பாருங்க. நான் ஒரு முட்டாளுங்க, நல்லா படிச்சவனு நாலு பேரு சொன்னாங்க, ஏற்கனவே சொன்னவங்க ஏமாளியானாங்க, எல்லாம் தெரிஞ்சிருந்தும் புத்தி சொல்ல வந்தேங்க. 

எப்படி சீரும் சிறப்புமா வாழ்க்கையில வாழறது அப்படினு புத்தி சொல்றதை விட, எப்படி சீரழிஞ்சி போறதுனு சொன்னா ரொம்பவே நல்லா இருக்கும். 

நல்லது கெட்டது பாகுபாடு படுத்தி பார்க்கிறவங்க நல்லவர், கெட்டவர் அப்படினு பிரிச்சி பார்க்கலாம். படித்த நல்லவர், படித்த கெட்டவர். நல்ல முட்டாள், கெட்ட முட்டாள். ஆனா எப்ப கெடுதலை குறித்த சிந்தனை இருக்கோ அவங்க முட்டாள் அப்படினு ஆயிரும், அதனால படித்த கெட்டவர் எல்லாம் சரியில்லை. அவர் முட்டாள். அதுதான் முன்னமே சொல்லிட்டமே முட்டாள்களின் உலகம் இது. படித்த, படிக்காத முட்டாள்களின் உலகம். 

சரி படித்த முட்டாளைத் தவிர்த்து முட்டாள்களுல, ஓரளவு சிந்திக்க தெரிந்த முட்டாள், அடி முட்டாள், வடிகட்டின முட்டாள் அப்படிங்கிற பிரிவினை எல்லாம் உண்டு. அதனால அவங்ககளை  எந்த பிரிவுல சேர்க்கிறது அப்படிங்கிற சிந்தனையை அப்புறம் பார்த்துக்கிரலாம். 

எதுக்கு இப்படி ஒரு விவரிப்பு அப்படினா வாழ்க்கையில் சீரழிய முதல் தேவை நீங்கள் ஒரு முட்டாளாக இருக்க வேண்டும் என்பதுதான். எப்படிப்பட்ட முட்டாள் என்பதை உங்கள் செயல்பாடுகள் தீர்மானிக்கும்.

இப்ப நீங்க செய்ய வேண்டியது எல்லாம் என்ன தெரியுமா? என்னதான் நான் இது முட்டாள்களின் உலகம் அப்படினு ஒரு பொது கருத்தை சொன்னாலும் உங்க கடமைனு ஒன்னு இருக்கு இல்லையா? அது என்னனா...

நீங்க முட்டாளா, இல்லையா அப்படிங்கிற ஒரு முடிவுக்கு இதுநாள் வரை நீங்க நடந்து கொண்ட முறையை, இப்ப நடந்துகிட்ட முறையை ஒரு அலசு அலசுனும். அது உங்க நடத்தை, படிப்பு, பிறர் கிட்ட எப்படி நடந்து கிட்டீங்க, துரோகம், நட்பு, காதல், கத்தரிக்காய், திருமணம், புடலங்காய், வியாபாரம், கல்வி, கலவி பொருளாதாரம், கடன், உடன், ரசிக கூட்டம், தொண்டர் கூட்டம் அது, இது அப்படினு ஒன்னு விடாம அலசனும். அலசிட்டு நீங்க முட்டாளா இல்லையானு ஒரு முடிவுக்கு வரனும், அப்படி நீங்க உங்களை முட்டாள் அப்படினு முடிவு கட்டிட்டா வாழ்க்கையில் சீரழியறதுக்கு உங்களை தயார் படுத்திட்டீங்கனு மார் தட்டி சொல்லிகிரலாம். 

அப்போ அடுத்த பாகத்துக்கு போலாமா? 






Friday 14 October 2011

தண்ணீர் வரம் ஒரு நியூட்ரினோ ராணா

நியூட்ரினோ ஒரு போங்காட்டம் அப்படினு ஒரு தலைப்புல எழுத நினைச்சேன். அதைப் பத்தி மனசுல நினைச்சிட்டே இருக்கறப்ப சவால் சிறுகதை பத்திய அறிவிப்பு பார்த்தேன். சரி போங்காட்டம் அப்படின்னு ஒரு தலைப்பு வைச்சி ஒரு சிறுகதையை எழுதி முடிச்சிட்டேன். நியூட்ரினோவுக்கு போங்காட்டம் தான்.

எப்ப பார்த்தாலும் உலகை திருத்த வந்த உத்தம சிகாமணி மாதிரி எழுத்துல வேஷம் கட்டினா எதுனாச்சும் நடக்கவாப் போகுது. வாழ்க்கைய சீரியசாப் பார்த்தா அப்புறம் ஐ சி யு ல கொண்டு போய் சேர்க்க வேண்டியதுதான் அப்படின்ற ஒரு அடிப்படை எண்ணம கூட வந்து சேரலை. என்ன செய்ய, செய்ய முடியாதவங்க சிந்திக்க மட்டும் செய்வாங்கன்னு சொல்லிக்கிற வேண்டியதுதான்.

பல மாசங்களா இந்த பதிவுலகம் பக்கமே அவ்வளவா எட்டிப் பார்க்கலை. எல்லாம் தலை போற காரியம்னு நினைச்சி, இந்த ஊரை சீர்படுத்த வந்த தியாக செம்மல்னு நினைச்சிகிட்டு அப்பப்பா ஒருவழியா ஒரு வருஷம் ஓடிப் போச்சு. இன்னும் தலை போற காரியம் நிறைய இருக்கு. அப்ப அப்ப எழுதுவோம்னு அப்ப அப்ப நினைப்பு வரும்.

சரி, என்ன என்ன எழுதி வைச்சிருக்கொம்னு பார்த்தா ரொம்ப தொடர்கள் அந்தரத்தில தொங்கிட்டு இருக்கு. ஒன்னு ஆரம்பிச்சி அதை தொடர்ந்து செய்யணும், இல்லேன்னா ஆரம்பிக்க கூடாது. அப்படி ஆரம்பிச்சிட்டா முடிச்சிரனும் அல்லது தொடர்ந்து வாரம் வாரம் எழுதணும். இப்படி எந்த நிர்பந்தம் இல்லாம, கொள்கையும் இல்லாம எழுதினா 'மொக்கை பாண்டி' அப்படின்னு ஒரு பட்டம் போட்டுக்கிரலாம்.

இப்படித்தான் ஒரு பில்டர் அங்கொரு இங்கொரு வேலைன்னு எல்லா வேலையும் வாங்கி வைச்சிகிருவானாம். ஒரு வேலையும் ஒழுங்கா முடிச்சி தரமாட்டானாம். இப்போ முடிக்கிறேன், அப்போ முடிக்கிறேனு இழுத்து அடிப்பானாம். அது மாதிரி எழுத்துல இருந்தா எழுத்து வசப்படுமா.

சரி இந்த நியூட்ரினோ எதுக்கு, தண்ணீர் வரம் தலைப்பு எதுக்கு. எல்லாம் அறிவியல் பண்ற கூத்து தான். எதையாவது சொல்லிட்டே இருந்தாத்தான் அறிவியல் பத்தி பரபரப்பா பேசுவாங்க.

ஐன்ஸ்டீன் சொன்னாராம், ஒளியை விட வேகமாக செல்லும் பொருள் எதுவுமே இவ்வுலகில் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை அப்படின்னுட்டு. இவர் சொன்னதை இதுவரைக்கும் யாருமே முறியடிக்க முடியலையாம். ஒளி தான் அதி வேகமாம். ஆமா இந்த ஒளி எது? இயற்பியல் பாடம் தான் எடுக்கனும். இந்த ஒளிக் கீற்றுகளில் மொத்தம் ஏழு வகையா பிரிச்சி இருக்காங்க, அதனுடைய அலை நீளத்தை கணக்கில் வைச்சி. அந்த அத்தனை ஒளியும் ஒரே வேகம் தானாம். இந்த ஒளியின் வேகம் வேறுபட்ட கனம் நிறைந்த பொருள்களில் செல்லும் போது குறையுமாம்.

சரி இந்த நியூட்ரினோ எங்கே இருந்து வந்திச்சி. என்ன பண்றது. புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் அப்படின்னு படிச்சி வந்தவங்க கிட்ட அதையும் தாண்டிய பல அணு துகள்கள் இருக்குன்னு சொன்னா எப்படி இருக்கும், அப்படித்தான் பல அணு துகள்கள் இருக்காம். அதுல ஒண்ணுதான் இந்த நியூட்ரினோ. இருந்துட்டு போகட்டுமே, இந்த நியூட்ரினோவா சாப்பாடு போடப் போகுது.

அது இல்லை பிரச்சினை, இந்த நியூட்ரினோ ரொம்ப வேகமாம். அதாவது ஒளியை விட மில்லி செகண்டு வேகமா போகுதாம். இதை உங்ககிட்டே விடறேன், நீங்களே அறிஞ்சி சொல்லுங்க அப்படின்னு பல வருசமா ஆராய்ச்சி பண்ணுன கூட்டம் அறிவிசிருச்சாம். சரி இப்போ அதுக்கென்ன அப்படினா, ஐன்ஸ்டீன் சொன்னது பொய், இதுவரைக்கும் சொல்லிட்டு வந்த பெரும் பிளவு கொள்கை எல்லாம் பொய் அப்படின்னு நிரூபணம் செய்யலாமாம். செஞ்சி...கால காலமா ஒன்னை சொல்லி இன்னொன்னை மாத்துரதுதானே நம்ம அறிவியலோட வேலை. அதுக்குத்தானே அறி இயல்.

இந்த செய்தி வந்த நேரம் பெரும் பரபரப்பு. இப்ப அப்படியே அடங்கி போச்சு. எதுக்குனா நாநோபார்ட்டிகில் அப்படின்னு கேள்வி பட்டுருப்போம். கடுகு சிறிசு காரம் பெரிசு அப்படிங்கிற மாதிரி ஒரு துகள் ரொம்ப சின்னதா இருந்தா அதனோட போக்குவரத்தே தனியாம். அது போல இந்த நியூட்ரினோ விதிகள் எதுவுமே பின்பற்றாதாம். நம்ம உடலுக்குள்ள கூட இப்போ இந்த நிமிஷம் பல நியூட்ரினோக்கள் கடந்து போகுதாம். ஆனா ஒளி நம்ம உடலை ஊடுருவுமா? அப்படி ஊடுருவிச்சினா எப்படி ஒருத்தரை ஒருத்தரை பார்க்கறது. இந்த நியூட்ரினோ ஒளியை விட வேகமா இருக்க வாய்ப்பு இல்லைன்னு சொன்னாலும் அறிவியல் வித்துவான்கள் வேற யாராச்சும் ஆராய்ச்சி செஞ்சி சொல்லட்டும்னு இருக்காங்க.

அப்புறம் இந்த கோமெட்டு. இது பண்ற அட்டூழியம் தாங்க முடியலை. கால் கடுக்க நடந்து தலையில ஒரு குடம், இடுப்புல ஒரு குடம் அப்படின்னு தண்ணீ சுமந்து வரக்கூடியவங்க்களை நினைச்சா எவ்வளவு கஷ்டம். அதுவும் இந்த தண்ணீர் தான் இந்த பூமியில் உயிர்கள் வாழ ஆதாரம்னு தெரியும். அந்த தண்ணீரை இந்த கோமேட்டுதான் கொண்டு வந்து கொட்டுச்சாம். பூமியில மட்டும் எதுக்கு கொட்டுச்சோ. கோமெட்டுக்கே வெளிச்சம். இந்த கோமெட்டு சூரியன் பக்கத்தில வந்ததும் தன் கிட்ட இருக்க பனிக்கட்டிய உருக்கி தண்ணியா கொட்டிருமாம். அதோடு மட்டுமா, பூமியில ஏற்பட்ட எரிமலை வெடி சிதறல் இந்த தண்ணீருக்கு காரணம் அப்படின்னு எப்படி தண்ணீர் வந்ததுனு ஒரே அலசல். போர் போட்டு தண்ணீர் எடுக்கறவங்களை நிறுத்த சொல்லனும். பூமிக்கு தண்ணீர் வரம் கொடுத்தது எங்க ஊரு மாரியாத்தா அப்படின்னு இவங்களுக்கு எப்படி புரிய வைக்கிறது.

அதோடு நிற்கிறாங்களா, உலகம் விரிவடைஞ்சிட்டே அதுவும் படு வேகமா போய்கிட்டே இருக்காம். எல்லாம் இந்த ஒளி மூலம் பண்ற ஆராய்ச்சி தான். கருந்துளை, கரும் பொருள் அப்படின்னு இந்த மொத்த உலகமே அப்படித்தான் இருக்காம். ஒளி ஊடுருவ இயலாத பொருள் ஏதேனும் வான் வெளியில் சிந்தப்பட்டு இருக்கிறதோ அப்படின்னு ஒரு ஐயம் வந்துட்டு போகுது.

இப்படி அறிவியல் எல்லாம் பேசிட்டு இருந்தா நல்லா தான் இருக்கும், ஆனா சாப்பாட்டுக்கு மம்பட்டிய எடுத்து வெட்டுனாதானே உண்டு. கிணத்துல தண்ணீ இருக்கா, வயக்காலுக்கு தண்ணீ போதுமானு வானத்தை பார்த்துட்டு இருக்கிற நமக்கு இந்த தண்ணீ எப்படி வந்துச்சுனும், இந்த உலகம் விரிவடையுதா, சுருங்கி தொலையுமானு கவலை பட தோணுமா. அவரவர் கவலை அவரவருக்கு.

அதுக்கப்பறம் ராணா படத்துக்கு ஒரு பாட்டு எழுதினா என்ன அப்படின்னு தோணிச்சி.

இணையம் இல்லாத காலத்தில்
மனிதர்களின் மனதில்
இணையே இல்லாமல்
இடம் பிடித்த அரசனே பேரரசனே

மழை பொழிய வானம் மறுத்தால்
நல்ல மனிதர்களை விதைக்கும்
வருணனே நீ தர்மனே (இணையம்)

ஒளியை விட நீ வேகம்
உன் உணர்வால் தீர்த்துவிடு தாகம்
நியூட்ரினோ அது நீதானோ
உலகம் போற்றும் அரசனே ராணா

நீ சொன்னதால் தானே பூமியில்
உயிரினம் வளர்ந்தது
பூமிக்கு பெருமை சேர்க்க
நீயும் அரசனாய் இங்கு பிறந்தது

ராணா ராணா ராணா
நீ வேணா வேணா வேணா
என சொல்வேனா (இணையம்)

கருந்துளை கரும்பொருள் எல்லாம்
உன்னில் உன்னில் ஐக்கியம்
ஒளியை மட்டுமே சிந்தும்
உனது கண்கள் உலகின் பாக்கியம் ராணா

செம்மண்ணோ, களிமண்ணோ
பசுமை போத்திடும் ரகசியம்
இந்த பாரினில் நீ தந்தாய் அதிசயம்
உண்மை மக்கள் பெற்றவனே


ராணா ராணா ராணா
நீ வேணா வேணா வேணா
என சொல்வேனா (இணையம்) 

இப்போதைக்கு நான் மொக்கைபாண்டி இல்ல, இல்ல, இல்ல. 




Thursday 13 October 2011

போட்டியும் பொருளாதார சரிவும் -1


ஏழை பணக்காரர் பாகுபாடு இல்லாத ஒரு உலகத்தை உண்டாக்குவது என்பது வெறும் கனவு. அரசனும் ஆண்டியாவான், ஆண்டியும் அரசனாவான் என்பது கேட்பதற்கு மிகவும் நன்றாகவே இருக்கும். பணத்தின் அடிப்படையில் இயங்கும் உலகத்தில் பணத்தை பெருக்கி கொள்ள தெரிந்தவரே மிகவும் புத்திசாலி என்கிறார்கள். கண்ணாடியானது கல்லை உடைக்கும் தந்திரம் பணத்திடம் உண்டு.

இந்த பணத்தின் பெரு மதிப்பு என்பது ‘காசேதான் கடவுளடா என ஒரு இரு வார்த்தைகளில் அடக்கி விடலாம். இந்த காசு பற்றிய சிந்தனையும், காசு பற்றிய எண்ணங்களும் மட்டுமே முதன்மை வகித்து வருகிறது. பணத்தை கொண்டு எதையும் வாங்கலாம், ஆனால் சில விசயங்களை வாங்க இயலாது என சொன்னாலும், பணத்தின் முக்கியத்துவம் அறியாதவர்கள் துறவற வாழ்க்கைக்கு செல்வது சிறந்தது என்கிற பகட்டான வாழ்க்கை அத்தியாவசிய வாழ்க்கையாகி இன்று நிற்கிறது.
கடன் பட்டோர் நெஞ்சம் போல் கலங்கினான் என்பது அன்றைய வாக்கு. கடன் கொடுத்தோர் நெஞ்சம் கலங்குகிறது அது இன்றைய வாக்கு. கேட்பவர்களுக்கு, கேட்காதவர்களுக்கு என இந்தா பணம் வந்து வாங்கி கொள், நன்றாக செலவழி என சொன்ன வங்கிகள் முதற்கொண்டு தனிப்பட்ட நபர்கள் வரை இந்த பொருளாதார சரிவுக்கு முதல் புள்ளி வைத்தவர்கள்.

வரவு எட்டணா, செலவு பத்தணா என்கிற போக்கில் உலகத்தில் கடன் வாங்காத நாடே இல்லை எனலாம். எல்லா நாடுகளும் இந்த கடன் தொல்லையால் கண் விழி பிதுங்கி நிற்கிறது. எப்படி செலவினை குறைப்பது என்பது ஒவ்வொரு நாட்டிற்கும் திண்டாட்டம் ஆகிவிட்டது. ஒரு நாட்டின் கடன், அந்த நாட்டின் குடிமகன் பட்ட கடன் என்கிற நிலை தான். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆட்பட்ட ஒவ்வொருவரும் இந்த கடன் தொல்லையால் தவிப்பது தவிர்க்க இயலாமல் ஆகிவிடுகிறது.
இதெற்கெல்லாம் என்ன காரணம், பொருளாதார கட்டமைப்பு சரிவர இல்லாமல் இருப்பதே. ஒரு பொருள் விற்பதை பொறுத்தே அந்த பொருளில் விலை நிர்ணயிக்கப்படுகிறது, அல்லது அந்த பொருளின் தேவையை பொருத்து, இருப்பை பொருத்து எனவும் கொள்ளலாம். இந்த பணம் எல்லாம் எப்படி வந்தது. பணம் பற்றாகுறை ஏற்படும்போது ஒரு அரசு பணம் பற்றாகுறையை போக்க பணம் அச்சடித்து வெளியில் விடலாம், அப்படி செய்யும்போது அந்த நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது என்கிறார்கள்.

ஒரு உதாரணத்திற்கு எடுத்து கொள்வோம், வங்கிகள் எப்படி பணம் சம்பாதிக்கின்றன. வங்கிகளுக்கு பணம் எங்கிருந்து வருகிறது? அது முழுக்க முழுக்க மக்களின் பணம். மக்கள் தங்கள் பணத்தை பாதுகாக்க முடியாத பட்சத்தில் வங்கிகளில் பாதுகாப்பாக இருக்கும் என வைக்கிறார்கள். இந்த மக்களின் பணத்தை வங்கிகள் பிற பொருள்களின் மீது செலுத்தியோ முதலீடு செய்தோ அதன் மூலம் லாபம் பார்க்கின்றன. மிக குறைந்த அளவே இந்த வங்கிகள் தரும் பணம் மக்களுக்கு பெரிதாக தெரியலாம் அதனால் ஏற்படும் இழப்புகளையும் இந்த மக்களே தாங்கி கொள்ள வேண்டும் எனும் போதுதான் நாட்டின் பொருளாதார சீர்கேடு ஏற்படுகிறது.

மிக முக்கியமானது போட்டியாளர்களின் நம்பகத்தன்மை. வியாபார உலகத்தை எப்பொழுது அடியோடு ஒழித்துக் கட்ட நாம் செயல்பட முயல்கிறோமோ அப்பொழுதுதான் ஒரு நாட்டின் பொருளாதாரம் சீர் பெறும். இத்தனை காலமாக பொருளாதார சீர்கேட்டில்தான் எல்லா நாடுகளும் இருந்தன. எல்லாம் மூடி மறைக்கப்பட்டு இருந்தன. கிட்டத்தட்ட இதே பொருளாதார சரிவு எண்பது வருடங்கள் முன்னர் ஏற்பட்டது எனவும், இருபது வருடங்கள் முன்னால் ஏற்பட்டது எனவும் சொல்லப்படுகிறது. ஆனால் கடன் பட்ட நாடுகள் என்றுதான் இருந்து வந்தது.

எனது நிலத்தில் விளைந்த தக்காளியும், மற்றொருவர் நிலத்தில் விளைந்த தக்காளியும் ஒரே விலை தான். ஆனால் ஒரு நிறுவனத்தில் உருவாகும் வாகனமும், மற்றொரு நிறுவனத்தில் உருவாகும் வாகனமும் விலை வெவ்வேறு. இதுபோன்ற போட்டியாளர்களின் செயல்பாட்டினால் பொருளாதாரம் சீர் குலைகிறது.

இந்த விசயத்தை மிகவும் எளிதாக சொல்லிவிட இயலாது. எப்படி குவாண்டம் மெக்கானிக்ஸ் இயற்பியலில் பெரிதாக பேசப்படுகிறதோ, எப்படி இந்த பூமியில் மற்றும் உயிரினங்கள் எவ்வாறு தோன்றின என்பது குறித்த விசயங்கள் விவாதிக்கப்படுகின்றனவோ அது போல இந்த பொருளாதாரம் குறித்த விசயங்கள் பல நிபுணர்களால் அலசி ஆராயப்படுகிறது.

குவாண்டம் கொள்கையும், உயிர் தோன்றியது எவ்வாறு என்பது கடினமாக இருக்கலாம், ஆனால் இந்த பொருளாதாரம் அத்தனை கடினமானதா?

இந்த பொருளாதாரம் குறித்த முழு சிந்தனையும் அலசுவோம், வாருங்கள்.
ஒரு நாட்டின் பொருளாதாரத்தை தீர்மானிப்பது யார், எது?