Thursday 14 October 2010

எனது ஆங்கில நாவலுக்கான கதைக் கரு.

எத்தனை வருட கனவு?  எத்தனை வருட சிந்தனை? தலைப்பு மட்டுமே கையில் இருந்தது?  எதை பற்றி எழுத?

எப்பொழுது பார்த்தாலும் இறைவன் பற்றிய சிந்தனை, அன்பு பற்றிய ஆதிக்க சிந்தனை, உலகில் கஷ்டபடும் கோடானுகோடி மக்களை பற்றிய சிந்தனை.

இதுவரை என்னால் எழுதப்பட்ட கதைகள் எல்லாம் அன்பை வலியுறுத்தும் வண்ணமே அமைந்து இருந்தது.

ஆங்கில நாவலுக்கு தலைப்பு வைத்த பின்னர் கூட இறைவன் பற்றிய சிந்தனையே மேலோங்கி இருந்தது. தலைப்பை பிறரிடம் சொல்லும்போதெல்லாம் 'எங்களுக்கு தெரியும் நீ எதைப் பற்றி எழுதப் போகிறாய் என' என்றே சொன்னார்கள். இறைவன் பற்றிய சிந்தனையை ஆங்கில நாவலிலும் நான் எழுதுவேன் என்பதை எப்படி அவர்கள் தீர்மானித்தார்கள் என தெரியாது. ஆனால் எனக்கு தெரிந்த மொழி அதுதான். இறை எனும் அன்பு மொழி.

இறைவனை விட்டு வெளியில் வர வேண்டும். என்னால் அத்தனை எளிதாக வெளி வர இயலாத சூழல். அன்பை பற்றிய எண்ணம் தனை கொஞ்சம் தள்ளி வைக்க வேண்டும். எல்லோரும் அன்பாகத்தான் இருக்கிறார்கள், எனது பார்வை மட்டுமே முட்டாள்தனமாக இருக்கிறது எனும் எண்ணம் என்னுள் நிகழ வேண்டும். இப்படி பல நாட்கள் சிந்தித்த போதெல்லாம் எதுவுமே தோன்றுவதில்லை. கதை கரு இல்லாமல் நான் இனிமேல் தமிழ் நாவலோ ஆங்கில நாவலோ எழுதுவதில்லை என்பதை முடிவு செய்து வைத்திருந்தேன். அதனால்தான் தமிழ் நாவல் ஒன்று 'புதைக்க வா, எரிக்க வா' இன்னும் காத்து கொண்டிருக்கிறது. கதை கரு தயாராக இருந்தாலும் ஆங்கில நாவல் தான் அடுத்த இலக்கு.

இந்த  ஆங்கில நாவலுக்கு இத்தனை சிந்தித்தேன் என நினைக்கும்போதுதான் எனது நுனிப்புல் நாவல் மூன்றாம் பாகத்துக்கான அடிப்படை கருவாகவும் வைத்து கொள்ளும் சாத்தியம் இருந்தது என கண்டு கொண்டேன். இந்த சிந்தனை நேற்றுதான் எழுந்ததா? பல நாட்கள் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்த எண்ணம் திடீரென வெளி வந்ததா? நான் என்ன எழுத நினைத்தேன் என எழுதி முடித்தால்  மட்டுமே தெரியும் . ஒரு சின்ன விசயத்தை வைத்து அதை சுற்றி பாத்திரங்கள் வரைவதுதான் நான் கற்றுக் கொண்ட எழுத்து முறை. இப்படித்தான் பல மெகா தொடர்கள் எல்லா மொழிகளிலும் உருவாக்கப்படுகிறது என்றே கருதுகிறேன்.

எதற்கு ஆங்கில நாவலுக்கு இத்தனை முன்னுரிமை? கனவு. கனவு மட்டுமே காரணம். தமிழ் மொழி வழியில் கற்று கல்லூரியில் எல்லா பாடங்களும் ஆங்கிலம் என்றபோது பாட புத்தகத்தில் ஆங்கில சொல்லின் மேல் தமிழ் எழுதி கற்று வாழ்ந்த வாழ்க்கை, ஆங்கிலம் என்றாலே பெரிய விசயம் எனும் கிராமத்து எண்ணம் உள்ளுக்குள் குடிகொண்ட கொடுமை. இதையெல்லாம் உடைத்து எறிந்து விட முடியாதா எனும் ஒரு ஏக்கம்.

எனது ஆராய்ச்சி நூலில் விழுந்த திருத்தல்கள் கண்டு மனம் கசிந்தது. எனது முதல் ஆராய்ச்சி கட்டுரையை வெளியிடும் முன்னர் ஆங்கிலம்தனை சரிபாருங்கள் என்றுதான் கட்டுரை வெளியீட்டாளரிடம் இருந்து கருத்து வந்தது. ஆங்கிலம் ஒரு மொழி. எனது பெயரை பார்த்தாலே ஆங்கிலம் சரியில்லை என நான் எழுதுவதை திருத்திவிட துடிக்கும் பலரை பார்த்து இருக்கிறேன். இதன் காரணமாகவே நன்றாக ஆங்கிலம் தெரிந்த ஒருவர் எழுதியதை நான் எழுதியதாக ஒருவரிடம் தர அவர் அதையும் திருத்தியதை கண்டு மனதுள் சிரித்து இருக்கிறேன். இது இப்படித்தான் என ஒரு முடிவோடு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் இருக்கும் வரை உலகில் புரட்சி என்பது வெறும் பேச்சுதான்.

தமிழ் வழி வந்த மாணவர்கள் பலர் நான் எழுதிய தமிழ் கதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க சொன்னபோதெல்லாம் தமிழ் கற்று கொண்டு வாருங்கள் என வேண்டுகோள் விடுத்து இருக்கிறேன்.

Stephen Hawking எழுதிய The Grand Design  புத்தகத்தை வெகு குறைந்த நாட்களில் படித்து முடித்துவிட்டேன். என்னை பொறுத்தவரை இது ஒரு பெரிய அதிசயம்தான். M-Theory க்கு mental theory என அவர் வைத்து இருந்திருக்கலாம் என தோன்றியது. பல பேரறிஞர்கள் படு முட்டாளாக இருக்கிறார்கள் எனும் ஒருவருடைய கூற்று எனக்கு பழகிப் போன ஒன்று.

தமிழ் மட்டுமே ஓரளவுக்கு தெரிந்த எனக்கு இந்த ஆங்கில நாவல் எழுதப் போவது பெரும் சவால்தான். எனக்கு ஆங்கிலம் சரியாகவே தெரியாது என்பதுதான் எனது நாவலுக்கு முதல் தடைக்கல். இனிமேல் ஆங்கிலம் நன்றாக கற்று எழுதுவதென்றால் இன்னும் பல வருடங்கள் ஆகிவிடும். ஆங்கிலம் சரியாக தெரியாத எனது எண்ணத்தை எனது பலமாக எனது நாவலுக்கு வைத்துக் கொண்டால் என பலமுறை தோன்றியது உண்டு. அதை நடைமுறைபடுத்தி விடும் வாய்ப்பு இப்போது அதிகம் இருப்பதாகவே தெரிகிறது.

நுனிப்புல் பாகம் 3 பிப்ரவரி மாதம் 2012ல் எழுத இருப்பதால் அதற்குள் இந்த ஆங்கில நாவலை எழுதி முடித்து விட வேண்டும் எனும் ஆவல் அதிகமாகவே இருக்கிறது. பல ஆங்கில நாவல்களை படித்தால் ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

இந்த ஆங்கில நாவலை நிச்சயம் தமிழ் நூல்கள் வெளியிட்டு கொண்டிருக்கும் பதிப்பகத்தின் மூலம் தான் வெளியிட போகிறேன். இத்தனை விசயங்கள் இங்கே பகிர்ந்த பிறகும் நான் ஆங்கில நாவல் எழுதாமல் இனியும் காலம் தாழ்த்தினால் அது எனது சோதனை காலம் அல்ல, அது சோம்பேறி காலம்.

Wednesday 13 October 2010

நுனிப்புல் (பாகம் 2) 18




18. விநாயகம் திருமால் வாசன் 

மாலை வேளையில் திருவில்லிபுத்தூரை அடைந்தார்கள் பெரியவரும் வாசனும். பேருந்திலிருந்து இறங்கும்போதே தடுமாறி விழுந்தான் வாசன். பெரியவர் பதறிப்போனார். வாசன் பெரியவரின் உதவியுடன் எழுந்து மேல் ஒட்டிய மண் துகளையெல்லாம் தட்டிவிட்டான். சின்னஞ்சிறு சிராய்ப்புகள் ஆங்காங்கே ஏற்பட்டு எரிச்சல் தரத் தொடங்கியிருந்தது. பார்த்து இறங்கக்கூடாதா என பார்த்துச் சென்ற கூட்டம் பரிதாபமாக சொன்னது. வாசன் தலை நிமிர்ந்து பார்த்தான். 

''என்ன ஆச்சு வாசா''

''ஒண்ணும் இல்லை ஐயா, கோபுரம் தெரியுதானு மேலே பார்த்துட்டே கீழே பார்க்க மறந்துட்டேன் ஒரு கல்லு நல்லா சிராய்ச்சிருச்சி''

''கடையில போய் ஏதாவது குடிச்சிட்டுப் போவோம்''

''எப்ப திருமலைக்கு பேருந்து போகும்னு கேட்டு தெரிஞ்சிக்கிட்டா நல்லதுனு தோணுது ஐயா''

பேருந்து நிலையத்தில் விசாரித்தனர். மாலை ஆறு மணிக்கு ஒரு பேருந்தும் அதற்கடுத்து இரவு எட்டு மணிக்கு இருப்பதாகவும் கூறினார். நடந்து சென்றால் நாற்பது நிமிடங்களில் நடக்கலாம் என கூடுதல் தகவலும் தந்தார்கள். மணி நான்கு முப்பது ஆகி இருந்ததால் பேருந்திற்காக காத்து இருந்தே செல்லலாம் என முடிவெடுத்து அங்கிருந்த கடை ஒன்றில் நுழைந்தனர். வாசன் பெரியவரிடம் ஆண்டாள் கோவில் செல்லலாமா என கேட்டான். பெரியவரும் சரி என சொன்னார். காபி அருந்தியபின்னர் கடையினை விட்டு கீழிறங்கி வரும்போது பாதையில் கால் தடுக்கி மீண்டும் விழுந்தான் வாசன். வலியுடன் இந்த முறை தானாகவே எழுந்தான். காலில் ரத்தம் சொட்டத் தொடங்கியது. பெரியவர் அங்கிருந்த மருந்து கடை ஒன்றில் மருந்தும் கட்டுப்போட துணியும் வாங்கி கட்டுப் போட்டார். வாசன் சற்று நேரம் எங்கும் செல்லாமல் நின்றான். 

கோவில் திறப்பதற்கு சற்று நேரமாகும் என சொன்ன பெரியவர் பேருந்து நிலையத்தில் ஓரிடத்தில் வாசனுடன் அமர்ந்தார். வாசன் மிகுந்த யோசனையில் அமர்ந்திருந்தான். 

''நீ கால் எடுத்து வைச்சதிலிருந்தே ரொம்ப தடுமாருற தம்பி''

''ஒண்ணும் தெரியலை ஐயா, ஏதோ ஒண்ணு என்னை இப்படி பண்ணுறத போல உணருரேன்''

''மதியம் தான் சாப்பிட்டோமே, பசி மயக்கம்னு சொல்ல முடியாது''

''அதெல்லாம் இல்லை ஐயா, கோவிலுக்கு நாளைக்குக் கூடப் போய்க்கிரலாம் ஐயா. கொஞ்ச நேரம் நான் இப்படி சாஞ்சிக்கிறேன்''

வாசன் சுவரில் அப்படியே சாய்ந்தான். மதுரையிலிருந்து கிளம்பிய பேருந்து ஒன்று திருவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தினை அடைந்தது. பேருந்து நிலையத்துக்குள்ளே வராமல் வெளியே அனைவரையும் இறக்கிவிட்டுக்கொண்டு இருந்தார்கள். ஒவ்வொருவராக நமக்குப் பரிச்சயப்படாதவர்கள் இறங்கிக்கொண்டே இருந்தார்கள். சிலர் இறங்கியதும் அதற்குப் பின்னர் திருமால் இறங்கினார். பேருந்து நிலையத்துக்குள்ளே வந்த திருமால் பெரியவரைப் பார்த்தார். கண்மூடி இருந்த வாசனும் திருமாலின் கண்களில் பட்டான். திருமலைக்குச் செல்வதற்காக திருமால் பெரியவர் அருகிலேயே வந்து அமர்ந்தார். பெரியவரைப் பார்த்து புன்னகை புரிந்தார் திருமால். பெரியவரும் திருமாலைப் பார்த்து புன்னகை புரிந்தார். அப்பொழுது அங்கே வந்த ஒருவர் திருமலைக்கு எப்போ பேருந்து போகும் எனக் கேட்டார். பெரியவர் ஆறு மணிக்கு என பதில் சொன்னார். 

திருமால் அமைதியாகவே அமர்ந்து இருந்தார். பெரியவர் தான் பேசினார். 

''நீங்க எங்க போறீங்க''

''திருமலை''

''என்ன விசயம்?''

''டாக்டர் விஷ்ணுப்பிரியனை பார்க்கப் போறேன்''

''உங்க பேரு''

''திருமால்''

''திருமால்?''

''ஆமாம், ஏன் ஆச்சரியமா கேட்கறீங்க''

''ம்ம் நீங்க சென்னையா, சொந்த ஊரு சாத்திரம்பட்டியா?''

''ஆமாம் அதெப்படி உங்களுக்குத் தெரியும்''

பெரியவர் அமைதியானார். திருமால் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை. வாசனின் மேல் தனது பார்வையைச் செலுத்தினார். வாசன் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போல இருந்தது. பெரியவர் திருமாலிடம் தனது தம்பி மகள் பாரதிதான் விபரங்கள் சொன்னாள் என திருமால் திருப்பி கேட்காமலே பதில் சொன்னார். திருமால் ஆர்வமுடன் கேட்டுக்கொண்டார். பெரியவர் எழுந்து சிறிது நேரத்தில் வருவதாக திருமாலிடம் சொல்லிவிட்டு நடந்தார். திருமால் வாசன் அருகில் வந்து அமர்ந்தார். வாசன் விழித்துப் பார்த்தான். பெரியவரைக் காணாது சுற்றி சுற்றிப் பார்த்தான். திருமாலை நேருக்கு நேராய் பார்த்தான். 

வாசன் காலை நகர்த்தினான். கால் விண்ணென்று வலித்தது. பக்கத்தில் மனிதர்களின் இரைச்சலில், பேருந்துகளின் சத்தத்தில் தான் எப்படி உறங்கினோம் என நினைக்கவே ஆச்சரியமாக இருந்தது வாசனுக்கு. திருமாலைப் பார்த்துக்கொண்டே இருக்க அவனது கண்களில் கண்ணீர் நிரம்ப ஆரம்பித்தது. 

''என்னோட பெயர் திருமால், இருக்கும் ஊர் சென்னை. சொந்த ஊர் சாத்திரம்பட்டி''

அவனால் எதுவும் பேச இயலவில்லை. கைகள் கூப்பி வணங்கினான். கண்களில் நீர் கொட்டியது. தலையை குனிந்து கொண்டான். பெரியவர் திரும்பினார். 

''என்ன வாசா, இப்போ வலி எப்படி இருக்கு''

''ம்ம்''

''என்ன ஆச்சு?'' திருமால் கேட்டார்.

பெரியவர் நடந்ததை கூறினார். திருமால் வாசனின் காலினை அப்போதுதான் பார்த்தார். திருமால் வாசனின் தலையை நிமிர்த்தினார். கண்கள் சிவந்து இருந்தது. கன்னங்களில் கண்ணீர் கோடு வரைந்து பழகிக்கொண்டு இருந்தது. கண்களையும் கன்னங்களையும் துடைத்துக்கொண்டான் வாசன். திருமால் புன்னகை புரிந்தார். 

''என்னைப் பார்க்கனும்னுதானே நீ நினைச்சே, இதோ நானே வந்துட்டேன்''

''ம்ம்''

''என்னைப் பார்த்ததும் ஏன் அதிர்ச்சியாயிட்ட''

''ம்ம்''

''ஊருக்குப் போனதும் பேசட்டும், உடம்புக்கு சரியில்லை போல'' 

திருமாலிடம் பெரியவர் சொன்னார். பேருந்து வந்து நின்றது. மூவரும் பேருந்தில் ஏறிச் சென்றனர். பெரியவரும் திருமாலும் பேசிக்கொண்டே வந்தனர். வாசன் அமைதியாய் புன்னகை புரிவதோடு நிறுத்திக்கொண்டான். திருமலை நிறுத்தம் வந்ததும் இறங்கினார்கள். இறங்கும் போது வாசன் இம்முறையும் விழப்போனான். திருமால் தாங்கிப் பிடித்துக் கொண்டார். வாசனின் உடல் நடுங்கியது. திருமால் வாசனிடம் சொன்னார்.

''மாதவியை மதுரையில நான் பார்த்தேன், பெருமாள் தாத்தா எழுதின கடிதம்தனை அவகிட்ட கொடுத்து இருக்கேன் உன்கிட்ட கொடுக்கவும் கடிதம் வச்சிருக்கேன். நீ எதுவும் பேசமாட்டேன்றியே''

''ம், அப்புறமா பேசறேன்''

''சரி''

பெரியவர் சொன்னது போலவே நேராக பார்த்தசாரதி வீட்டிற்கு திருமால் செல்ல இசைந்தார். மூவரும் பார்த்தசாரதி வீட்டிற்குள் நுழைந்தார்கள். பார்த்தசாரதியின் பெற்றோர்கள் வரவேற்றனர். திருமால் வீட்டினைப் பார்த்தார். பூங்கோதையும் மற்றவர்கள் வீட்டினுள் நுழைந்தார்கள். வாசன் நடுக்கத்துடனே அமர்ந்து இருந்தான். திருமாலைப் பார்த்த பூங்கோதை வாசனின் அருகில் வந்து நின்று கொண்டாள். திருமால் அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்பட்டார். பெரியவர் உற்சாகமாக காணப்பட்டார். சந்தோசமாகப் பேசிக்கொண்டு இருந்தார். 

திருமண வாழ்த்து சொன்ன திருமால் பூங்கோதையைப் பார்த்தார். பூங்கோதை வாசனுக்குப் பின்னால் சென்று நின்றாள். கேசவனின் கைகளைப் பிடித்துக்கொண்டாள். திருமால் எழுந்து தான் டாக்டர் விஷ்ணுப்பிரியனை சந்தித்துவிட்டு பின்னர் வருவதாக கிளம்பியவர் வாசனிடம் உடன் வருமாறு கூறினார். சாப்பிட இங்கு வர வேண்டும் என கூறினார்கள். அவர்களுடன் பார்த்தசாரதியும் உடன் சென்றார். வாசலில் கால் வைத்த திருமால் மீண்டும் பூங்கோதையைப் பார்த்தார். பூங்கோதை கேசவனின் கைகளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள். புன்னகைத்துக்கொண்டே திருமால் நடக்கலானார்.

விஷ்ணுப்பிரியன் வீட்டுக்கு வந்தார்கள். பார்த்தசாரதி வீட்டுக்குள் வராமல் கடைக்குச் செல்வதாக கூறி விடைபெற்றுக்கொண்டார். சுபாவும் விஷ்ணுப்பிரியனும் திருமாலையும் வாசனையும் வரவேற்று அமரச் சொன்னார்கள். அறிமுகத்துடன் நலம் விசாரித்து முடிந்த மறு நிமிடம் திருமால் கேட்டார்.

''பெருமாள் தாத்தா பற்றிய குறிப்புகளை கொஞ்சம் எடுத்துட்டு வரமுடியுமா?''

விஷ்ணுப்பிரியன் திகைத்தார். வாசன் திருமாலை ஆச்சரியமாகப் பார்த்தான். சுபா வேகமாக சென்று பெருமாள் தாத்தா பற்றிய குறிப்புகள் கொண்டு வந்து திருமாலிடம் தந்தார். திருமால் ஒவ்வொரு பக்கங்களாய் புரட்டினார். 

''நீங்க நினைச்சது நடந்துரும்ல, நடக்கத்தான் வேணும் இல்லையா''

''எதை சொல்றீங்க நீங்க''

''பெருமாள் தாத்தாவை மறுபடியும் உருவாக்க நினைச்சது மட்டுமில்லாம, பூங்கோதைக்கும் கேசவனுக்கும் குழந்தை உண்டாக்கி இரட்டை குழந்தையா பிறக்க வைக்க நினைச்சது''

சுபா விஷ்ணுப்பிரியனை கோபத்துடன் பார்த்தாள். மாதவி வாசனின் மனதில் வந்து போனாள். விஷ்ணுப்பிரியன் அமைதியானார். பதில் சொல்லவில்லை. சுபாவிடம் பெருமாள் தாத்தாவின் குறிப்புகளைத் திருப்பித் தந்தார். பின்னர் விஷ்ணுப்பிரியனை தன்னுடன் திருமலைக் கோவிலுக்கு வருமாறு அழைத்தார். விஷ்ணுப்பிரியனுடன் வாசனும் உடன் கிளம்பினான். சுபாவிற்கு பயமாக இருந்தது. அவர்கள் வெளியேறியதும் பார்த்தசாரதிக்கு தகவல் தெரிவித்தாள். மூவரும் திருமலைக் கோவில் வாசல் அடைந்தார்கள். தீபம் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது. திருமால் விஷ்ணுப்பிரியனிடம் எதுவும் பேசாமல் வந்தவர் கோவிலுக்குள் நுழையும் முன்னர் வாசலில் நின்றே கேட்டார்.

''நீங்க நினைச்சது நடக்குமா டாக்டர்?''

''தெரியலை, பொறுத்திருந்துதான் பார்க்கனும்''

விஷ்ணுப்பிரியன் அமைதியாகவே பதில் சொன்னார். திருமால் கலகலவென சிரித்தார். வாசனும் உடன் சிரித்தான். கோவில் மணி ஒலிப்பது போல் இருந்தது. விஷ்ணுப்பிரியனுக்கு கலக்கமாக இருந்தது. 

(தொடரும்)

Monday 11 October 2010

இந்தியாவும் எழுத்துலகநண்பர்களும் - 4

அதிகாலை எழுந்து காங்கேயனத்தம் பயணம் செய்தோம். எனது மாமா வழியினர் கும்பிடும் குல சாமி என சொன்னார்கள். எனக்கு இதற்கு முன்னர் இந்த ஊருக்கு சென்றதாக நியாபகம் இல்லை.

இறைவனே இல்லை எனும் ஒரு கூற்று ஒரு பக்கம். எங்கு பார்த்தாலும் புது கோவில் கட்டி கும்பாபிஷேகம் என ஒரு பக்கம். சாமி இருந்தா என்ன, இல்லைன்னா என்ன கும்பிடரதுக்கு நாங்க இருக்கோம் என மனிதர்கள் இருக்கும் வரை இறைவனுக்கு அழிவே இல்லை. இந்த சடங்குகள், சம்பிராதயங்கள் எல்லாம் கடந்துவிட்டேன் என சொன்னாலும் இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் இருப்பதில்லை. மனிதர்களுடன் மனிதராய் கலந்து கொள்வதில் சந்தோசம் இருக்கத்தான் செய்கிறது. பலருடன் சிரித்து மகிழ்ந்து பேச ஒரு வாய்ப்பாக அமைந்தது என சொல்லலாம்.

அந்த திருவிழாவில் பல உறவினர்களை சந்தித்தேன். எவரது வீட்டுக்கும் சென்று பார்க்க வேண்டிய சூழல் தேவையற்று போனது. பலருக்கும் அன்னதானம் இடப்பட்டது. கும்பாபிஷேகம் முடித்த மறு கணம் பெங்களூர் செல்ல வேண்டுமென அருப்புகோட்டை வந்து மதியம் மதுரை அடைந்தோம். மதுரையில் இருந்து நேராக பெங்களூர் விமான பயணம். விமான பயணம் மிகவும் நன்றாகவே இருந்தது.

பெங்களூர் இறங்கியதும் லண்டன் போன்ற தட்பவெப்ப நிலை. விமான நிலையத்தில் போடப்பட்ட சாலைகள் மிகவும் அருமையாக இருந்தது. பெங்களூரில் அன்றே கடைகளுக்கு சென்றோம். பெரிய பெரிய கடைகளாக இருந்தது. மறு தினம் மைசூர் பயணம். செல்லும் வழியில் கைவினை பொருட்கள் மற்றும் கலை பொருட்கள் கடைகள் மிகவும் சிறப்பாக இருந்தது. மழையும் பெய்து கொண்டிருந்தது.

பெங்களூரில் இரண்டு நண்பர்களை சந்திக்கலாம் என நினைத்து இருந்தேன், ஆனால் மைசூர் செல்லும் பயணம் அமைந்ததால் அந்த வாய்ப்பு ஏற்படுத்த இயலவில்லை. பிருந்தாவன், மைசூர் அரண்மனை, சாமுண்டி கோவில், திபெத்தியர்கள் வாழும் பகுதி என பல இடங்களை இரண்டு தினம் சுற்றி பார்த்தோம்.

தமிழர்களை மிகவும் ஏளனமாகவே கன்னடர்கள் நடத்துவதுண்டு, பார்ப்பது உண்டு என எனது மாமா மகளின் கணவர் சொன்ன போது தமிழர்களை தமிழர்களே ஒழுங்காக நடத்துவதில்லை என்பதை நினைவு படுத்தினேன். எதற்கு வெளிநாட்டில் சென்று வாழ்கிறீர்கள், இங்கே வந்து பலரது வாழ்க்கையை உயர்த்தலாமே ஏன் எல்லாரும் வெளிநாடு வெளிநாடு என சென்றுவிடுகிறார்கள் என அவருடனான உரையாடல் மிகவும் நன்றாக இருந்தது. படித்தவர்கள் பறந்துவிடுகிறார்கள் எனும் குற்றச்சாட்டு எப்போதும் இந்தியாவில் உண்டு. படிக்காதவர்களும் பறந்துவிடுகிறார்கள் என்பதை மறுக்கவும் முடியாது. பொருளாதார விசயத்துக்காக இடம் மாற்றம் நிகழ்ந்துவிடுவதுண்டு. பொருளாதாரம் என வரும்போது தன்னிறைவு என்பது நிகழ வாய்ப்பே இல்லை. எனவே வெளிநாடு சென்றவர்கள் வெளிநாடு என இருந்து விடுகிறார்கள். இதற்கு என்ன காரணம், எதற்கு என அலசியதில் சில விசயங்கள் பிடிபட்டன. பல விசயங்கள் புரிபடவே இல்லை.

பெங்களூர் சுற்றி பார்க்கவே இல்லை. ஒரு சில இடங்கள் மட்டுமே பார்த்தோம். கிருஷ்ணர் ஆலயம் செல்லலாம் என சொன்னார்கள். கடைகள் செல்வோம் என பல பொருட்கள் வாங்கினோம். அங்கிருந்து கோவா விமானத்தில் சென்றோம். கோவா.

கற்பனை ஊர். வடக்கு கோவா, தெற்கு கோவா என பிரிக்கப்பட்டிருக்க நாங்கள் பார்க் ஹையட் ஹோட்டலில் தங்கி இருந்தோம். அது மத்திய கோவாவில் இருந்தது. கொங்கனி பேசும் மொழியாம். ஆனால் ஆங்கிலம் அதிகம் பேசுகிறார்கள். அற்புதமான ஹோட்டல். நூறு ஏக்கர் பரப்பளவில் கடற்கரையுடன் அமைந்து இருந்த அருமையான ஹோட்டல். எங்கும் செல்ல வேண்டியதில்லை என்பதுபோல் இருந்தது.

இரண்டு நாட்கள் தங்கி இருந்தோம். முதல் வடக்கு கோவா சென்றோம். செல்லும் இடமெல்லாம் கடற்கரை. மற்றும் சின்ன சின்ன ஆலயங்கள். தேவாலயங்கள் சில சென்றோம். போர்ச்சுகீசியர் அடையாளங்கள் சில இருந்தன. பம்பாய் படத்தில் எடுக்கப்பட்ட கோட்டை ஒன்று சென்றோம். சாலைகள் எல்லாம் அருமையாக இருந்தது. சுற்றியும் நல்ல இயற்கை வளங்கள்.

அடுத்த தினம் முற்றிலும் வித்தியாசமான கோவா பார்த்தோம். ஜன நெருக்கடி. பழைய கட்டிடங்கள் என தெற்கு கோவா காட்சி அளித்தது. மீண்டும் கடற்கரை. கோவா மறக்க முடியாத இடம் தான். ஹோட்டலில் மட்டுமே தங்கி இருந்துவிட்டு வரலாம் என்பது போன்ற ஊர் தான்.

அங்கிருந்து பெங்களூர் வந்து கோயமுத்தூர் அடைந்தோம். பெங்களூரில் இருந்து கோயமுத்தூர் செல்லும் விமானம் மாற சரியாக நாற்பது நிமிடங்கள் மட்டுமே. இருப்பினும் பிரச்சினை இன்றி சென்றது மகிழ்வாக இருந்தது. கோயமுத்தூரில் இறங்கினோம். எங்களது வாகனம் வந்து இருந்தது. எனது சகோதரி வீட்டில் மூன்று மணி நேரமே தங்கி இருந்தோம்.

ஊட்டி செல்வதா, வேண்டாமா என யோசனையில் இருக்க திடீர் திட்டம் உருவானது.

(தொடரும்)