Wednesday 14 July 2010

கோழிதான் முதலில் வந்தது

முதலில் வந்தது எது? கோழியா? முட்டையா?

விடை தெரியாத கேள்விக்கு ஒரு விடை கிடைத்துவிட்டதாய் அறிவியலாளர்கள் அறிவிப்பு.

முதலில் வந்தது கோழிதான் என திட்டவட்டமாக அறிவித்து விட்டார்கள்.

ஒரு புரதம் (ஒவோக்லேடிடின் 17) முட்டை உருவாவதற்கு காரணம் என்பதை கண்டுபிடித்ததன் மூலம் இதை அறிவித்து இருக்கிறார்கள். இந்த புரதம் கோழியின் அண்ட செல்லில் மட்டுமே இருப்பதாலும், இந்த புரதம் பல வினைகளை செயல்படுத்துவதாலும் கோழிதான் முதல் என சொல்லி இருக்கிறார்கள்.

இந்த புரதம் கால்சியம் கார்பனேட் தனை மாற்றி முட்டையின் ஓடுதனை உருவாக்குகிறதாம்.

விடை தெரியாத கேள்விக்கெல்லாம் விடை உண்டு. அந்த விடையையும் மாற்றும் வல்லமை அறிவியலுக்கு உண்டு.

அடியார்க்கெல்லாம் அடியார் - 23

வீட்டிற்குச் சென்றதும் செல்லாயி அமைதியானார். கதிரேசனும் அமைதியாக அமர்ந்து இருந்தான். சற்று நேரத்திற்கெல்லாம் பக்கத்து ஊர் சிவன் கோவில் குருக்கள் பச்சிலை சாறுடன் வீட்டிற்கு வந்தார். ''இதை மூணு வேளைக்குப் பையனுக்குக் கொடுங்க'' எனச் சொல்லிவிட்டு பதில் ஏதும் எதிர்பாராமல் கொடுத்துவிட்டுச் சென்றார். கதிரேசனின் நெற்றிப்பகுதியைத் தொட்டுப் பார்த்தார். காய்ச்சல் அடிப்பது போல் இருந்தது.

''நாளைக்கே நான் சங்கரன்கோவில் கிளம்புறேன்மா'' என்றான் கதிரேசன். ''உடம்பு சரியானப்பறம் போப்பா'' என்றார் செல்லாயி. ''ரொம்பநாள் கழிச்சிப் போனா, அந்த வேலைய யாருக்காவது தந்திருவாங்கம்மா, வாடகை எடுத்த வீட்டுக்கும் பணம் வேற தரனும், இல்லையின்னா அதுவும் கிடைக்காது '' என்றான் கதிரேசன். ''இந்த மருந்தைக் குடிப்பா, இதையும் கூட எடுத்துட்டுப் போ'' என்றார் செல்லாயி.

கதிரேசன் அன்று இரவு நன்றாகத் தூங்கினான். காலையில் எழுந்ததும் குளித்துவிட்டு உடலெல்லாம் திருநீரு பூசினான். கிழக்குப் பக்கம் திரும்பி நின்றுகொண்டு ''ஓம் நமசிவாய'' என உரக்கச் சொன்னான். கதிரேசன் சொன்னதைக் கேட்டு எட்டி வந்துப் பார்த்தார் செல்லாயி.

''பெற்றகடன் தீரும் என்றா பிறவி தந்தாய்
மற்றகடனும் தீர்த்து வைக்கும் வழியிதுவா
எக்காரியம் செய்திட இங்கே என்னை அனுப்பினாய்
அக்காரியம் உனதாலாகாதோ சொல்சிவனே''

பாடிமுடித்தவன் ''சிவனே போற்றி போற்றி'' எனச் சொல்லிவிட்டுத் திரும்பினான். கையில் கரண்டியுடன் நின்ற செல்லாயி ''என்னை மறந்துராதப்பா'' என்றார். கதிரேசன் அமைதியாகவே நின்றான். ''என்னை மறந்துருவியாப்பா'' என்றார் செல்லாயி மேலும். அப்பொழுதும் கதிரேசன் அமைதியாகவே நின்றான். ''பேசுப்பா'' என்றார் செல்லாயி.

''இவரால் தான் நானும் இங்கே வந்தேன்
என்முன்னால் இவரும் சென்றிட தகுமோ
பிரியாது இவரும் என்னோடு இருக்கும் வழிதனை
தெரியாது என்பாயோ சொல்சிவனே''

''என்னப்பா சொல்ற'' என்றார் செல்லாயி. ''நீ உயிரோடு இல்லாமப் போனா என்னை மறந்துருவியில்லம்மா'' என்றான் கதிரேசன். ''ஐயோ கதிரேசா, ஏன் இப்படியெல்லாம் பேசறப்பா'' என்றார் செல்லாயி. ''கவலைப்படாதேம்மா, இந்த உயிர் இந்த ஜீவன்ல இருக்கறவரைக்கும் உன்னை மறக்கமாட்டேன்மா'' என்றான் கதிரேசன். செல்லாயியின் கவலை மிகவும் அதிகமானது. கதிரேசன் சங்கரன்கோவிலுக்குக் கிளம்பினான். ''அவரோட ஃபோன் நம்பர் கொடுத்துட்டுப் போப்பா'' என்றார். சிவசங்கரனின் தொலைபேசி எண்ணை எழுதிக் கொடுத்தான் கதிரேசன்.

''உன் அப்பா என்னைத் தவிக்க விட்டுட்டுப் போனமாதிரி போயிராதப்பா'' என்று சொன்னார் செல்லாயி. ''ஏன்மா என்மேல உனக்கு நம்பிக்கை இல்லையாம்மா'' என்றான் கதிரேசன். ''உன் மேல நம்பிக்கை இருக்குப்பா, ஆனா அந்த சிவன் மேல கொஞ்சமும் எனக்கு நம்பிக்கை இல்லைப்பா'' என்றதும் ''நம்பிக்கை வைச்சிக்கோம்மா'' என செல்லாயியின் கால்களில் விழுந்தான். செல்லாயியின் கண்ணீர் கதிரேசனின் கழுத்துப் பகுதியில் சொட்டென்று விழுந்தது.

(தொடரும்)

Tuesday 13 July 2010

ஒரு மருந்தை உருவாக்க

எந்த நோய் எது காரணி
நொந்து போன வாழ்க்கை இது.

வந்த நோய் பல காரணி
நாய் படும் பாடு இது

எந்த மூலக்கூறு எப்படி
வேலை செய்யும்
கண்டு கண்டு பெண்டு நிமிரும்

பத்தாயிரம் மூலக்கூறுகள்
உருவாக்கிய பின்னர்
அதில் பத்து கூட தேறாது

செலவழிச்ச பணம் கணக்கு
பார்த்தா உலை வைக்க மனசிருக்காது

செல்கள், திசுக்கள் என
செல்லரிக்காத ஆய்வு
சொல்லில் வைச்சாலும்
புரியுமோ இந்த நோவு

விலங்குகளில் வில்லங்கமில்லாம
நல்ல முடிவு வந்தாலும்
மருந்தாகும் நிலை நிலையில்லை

மூணு கட்ட ஆய்வு  மனிசரிடம்
தாண்டி வந்தப்பறமும்
முழுசும் உறுதியில்லை

ஒரு பிள்ளை பெற
பத்து மாசம்
ஒரு மருந்து உருவாக்க
பத்து வருஷம்

வணிகம் தான் பண்றோம்
வாய் கிழிய பேசு
எங்க உசிரும் இதுல
போகிறதை ஒரு
ஓரமாவாச்சும் சொல்லு

வருமுன் காப்போம்னு
ஒரு வழி செஞ்சி வைச்சா
அதை வக்கனையா எழுத
காசா பணமா!