Wednesday 7 July 2010

அடியார்க்கெல்லாம் அடியார் - 21

நாட்கள் வெகுவேகமாக நகர்ந்து கொண்டிருந்தன. கல்லூரி, சிவன் கோவில், வீடு என்றே நேரம் கடந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு முறை சின்னச் சின்ன விடுமுறை வந்தபோதெல்லாம் சில காரணங்களால் தனது ஊருக்கேச் செல்ல வேண்டியிருந்தது.  மதுசூதனன் கதிரேசனை மாறச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தான். இதனால் சில சமயங்களில் வைஷ்ணவி சற்று எரிச்சல் அடைந்தாள். ஒருமுறை வைஷ்ணவி கண்டிப்புடன் சொன்னதும் மதுசூதனன் அமைதியாக இருக்கத் தொடங்கினான். சிவன் கோவிலுக்கேச் செல்லாத மதுசூதனன் சிவன் கோவிலுக்கு வரத் தொடங்கினான். கதிரேசனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

இப்படித்தான் ஒருமுறை சிவன் கோவிலுக்கு வந்த மதுசூதனன் மெதுவாகப் பாடல் பாடினான். என்ன பாடல் என அருகில் இருந்த கேட்ட கதிரேசனுக்கு மனதில் சிரிக்க வேண்டும் போல் இருந்தது ஆனால் அந்த பாடல் கதிரேசனுக்கு ஒரு நல்ல பாடமாக அமையும் என அவன் எதிர்பார்க்கவில்லை. மதுசூதனன், ஆண்டாள் எழுதிய திருப்பாவையில் இருந்துப் பாடினான்.

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்

 சிவன் கூட இவன் கண்ணுக்கு திருமாலாகத் தெரிகிறாரே என நினைத்துக் கேட்டான் கதிரேசன். ''எனக்குப் பிடித்தபடி இந்த சிவனால் இருக்க முடியும்'' என்றான் மதுசூதனன். ''திருப்பிச் சொல்லு'' என்றான் கதிரேசன். ''எனக்குப் பிடிச்சபடி இந்த சிவனால் இருக்க முடியும்'' என்றான் மறுபடியும். கதிரேசனுக்கு மதுசூதனன் சொன்னதன் அர்த்தம் விளங்கவில்லை. கோவிலிலிருந்து வெளியே வந்து அதே கேள்வியைக் கேட்டான் கதிரேசன்.

''என் இஷ்டத்துக்கு இந்த சிவன் இருப்பார்'' எனச் சொல்லிய மதுசூதனனை ''திருமாலுக்கும் சிவனுக்கும் உனக்கு வித்தியாசம் தெரியலையா, சிவன்கிட்ட அந்த பாடலைப் பாடினியே'' என்றான் கதிரேசன். ''வித்தியாசம் பண்ணினேன், சிவன் கோவிலுக்கு வரலை, இப்போ இந்த சிவன் என்னோட இஷ்டம், வித்தியாசம் இல்லை'' எனச் சொல்லிவிட்டு சிரிக்கத் தொடங்கினான் மதுசூதனன். மேலும் ''நான் மாறிட்டேனு நீ நினைக்காதே, அந்த சிவன் தான் இப்போ எனக்காக மாறிக்கிட்டார்'' என்றான் அவன். கதிரேசன் மதுசூதனன் சொன்ன விசயத்தை மிகவும் பலமாக யோசிக்க ஆரம்பித்தான். சிவன் மாறிக்கொள்வாரா? என எண்ணம் வந்து சேர சில நாட்கள் பின்னர் வைஷ்ணவியிடம் கேட்டான்.

''இப்படியெல்லாம் அவன் பேசினானா? நானா அவனை சிவன் கோவிலுக்குப் போக சொல்லலை. ஒருநாள் நான் சிவன் கோவிலுக்குப் போகனும்போல இருக்குனு சொன்னேன், அதுக்கு அவன் சரி தாராளமாப் போனு சொன்னான், கொஞ்ச நாளுல அவனும் வர ஆரம்பிச்சிட்டான், ஏன் இப்படி சொன்னானு தெரியலையே, எப்படியோ சிவன் கோவிலுக்கு வரானே அதுவே சந்தோசம் தான் எனக்கு'' என்றாள் அவளும்.

''சிவன் மாறுவாரா?'' என்றான் கதிரேசன். ''அவனுக்குத்தான் மாறிட்டாரே'' என்றாள் வைஷ்ணவி. கதிரேசன் அமைதியானான். ''உன்கிட்ட ஒரு விசயம் கேட்கனும்னு இருந்தேன்'' என ஆரம்பித்தவள் ''திருமாலுடைய மார்புல அவரோட மனைவி இருக்கிறதாகவும், சிவனோட உடம்புல பாதிய அவரோட மனைவிக்கு தந்ததாகவும் இருக்கிறத பத்தி என்ன நினைக்கிற'' என்றாள்.

''திருமால் பத்தி தெரியலை, ஆனா சிவன் தன்னோட உடம்புல பாதிய மனைவிக்கு தரலை, மனைவியோட உடம்புலதான் பாதிய தான் போய் எடுத்துக்கிட்டார், அப்படித்தான் அவரோட மனைவியும் விரும்பினாங்க'' என்றான் கதிரேசன். ''என்ன சொன்ன?'' என்றாள் வைஷ்ணவி. கதிரேசன் தான் சொன்ன வார்த்தைகளை அசைபோடும் முன்னர் வைஷ்ணவி சொன்னாள். ''மனைவி விருப்பத்திற்கு தன்னை மாத்திக்கிட்டார்ல'' என்றாள். கதிரேசன் அமைதியாக இருந்தான். அவன் வாயிலிருந்தே வந்த வார்த்தைகளை அவனால் நம்ப இயலவில்லை. அன்றெல்லாம் யோசனையாய் இருந்தது.

''திருமாலும் மனைவி விருப்பத்திற்காகத்தான் தன் மார்புல வைச்சிக்கிட்டாருனு நினைக்கிறேன்'' என சொன்ன வைஷ்ணவி ''மொத்த ஆண்குலமும் பெண்கள் விருப்பத்திற்கேற்பவே வாழப் பழகிக்கிட்டாங்க, காதலின் உச்சம் அது'' என்றாள். ''அப்ப நீங்க?'' என்றான் கதிரேசன். ''எங்க பெருமையை நாங்க இப்படியெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கமாட்டோம்'' எனச் சிரித்தாள், கதிரேசனும் சிரித்தான். ஆனாலும் கேள்வியில் மனம் நின்றது.

ஒவ்வொரு முறையும் இதே யோசனையாய் இருக்க பூஜை அறையில் கூட பாடத் தோன்றவில்லை. நாட்களும் நகர்ந்து சென்றது. சமணர் கோவில் சென்றுப் பார்க்க வேண்டும் எனும் ஆசையும் வற்றிப் போனது.

இரண்டாம் வருட கோடை விடுமுறையில் சங்கரன் கோவில் சிறிது நாட்கள் சென்றான். நீலகண்டனின் ஒரு வருட காரியத்தில் கலந்து கொண்டான். அங்கே ஈஸ்வரியிடம் சிவன் குறித்து பேசினான். ''இதிலென்ன சந்தேகம்?'' என்றாள் அவள். மேலும் ''உன்னோட வாழவே விருப்பம், இதுக்கு எங்க வீட்டுல யாரும் தடையா இருக்க மாட்டாங்க'' என்றாள். சிவனே கதியென இருந்த கதிரேசனுக்கு ஈஸ்வரி சொன்ன வார்த்தைகள் மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது. கதிரேசன் சந்தோசமாக அன்று பாடினான்.

''எமக்காக உம்மை மாற்றிக் கொள்ளும் பெருமானே
உமக்கொன்றும் சுமையென ஏதும் இல்லையன்றோ
பிட்டுக்கு மண் சுமந்த கோலம் கொண்டே
பாட்டுக்கு பதில்சொன்னாயோ சொல்சிவனே''

(தொடரும்)

Tuesday 6 July 2010

பதிவர்கள் - இவர்களை எல்லாம் பார்க்க வேண்டி வந்தால்

எழுத்து வேற, அதை எழுதறவங்க வேற அப்படினு பிரிச்சி பார்க்க சொன்னாலும் சொன்னாங்க. ஆனா என்னால எழுத்து வேற அதை எழுதுறவங்க வேற அப்படினு இனம் பிரிச்சி பார்க்கறதுல ரொம்ப சிரமமாத்தான் இருக்கு.  கற்பனை அப்படிங்கிறதுல பாதிக்கு மேல உண்மை இருக்கத்தான் செய்யும், எதுக்குனா கற்பனைனு எழுதப்படற விசயம் மாதிரியே வாழறவங்க இருக்காங்க இந்த உலகத்தில.

நல்ல விசயங்கள் எழுதுறாங்க. நல்ல விசயங்களை மட்டுமே எழுதுறாங்க. இது யாருக்கு தோணும்னா, அதை எழுதுறாங்களே அவங்களுக்குத் தோணும். ஆனா படிக்கிறவங்களுக்கு அப்படித் தோணுமா. பலருக்கு தோணாது, சிலருக்கு தோணும். 

நமக்கு தெரிஞ்சதை எழுதிட்டு ஓரமா இருக்கலாம். நமக்கு பிடிச்சதை படிச்சிட்டு ஓரமா இருக்கலாம். ஆனா எழுத்துனு வரப்ப எதுக்கு இப்படி எல்லாம் எழுதனும் அப்படினு  மத்தவங்களை அதட்ட தோணும், எதுக்குனா நம்மதான் இந்த உலகத்தை என்னமோ மிகவும் நேரான பாதையில செலுத்துரமாதிரி ஒரு அடவடியான எண்ணம் ;)

போன ஜென்ம பகை அப்படிங்கிற மாதிரி போன வருஷ பகை, அதுக்கு முந்தின வருஷ பகை, போன மாச பகை, போன வார பகை அப்படினு புகைஞ்சிகிட்டே இந்த எழுத்து இருந்துட்டு வருதாம். பத்திக்கிட்டு எரியமாட்டிங்குதுன்னு சிலருக்கு கவலை வேற இருக்காம். வெட்டிகிட்டு சாகமாட்டாங்களானு ஒரு கூட்டம் பிராத்தனை பண்ணிகிட்டு திரியறாங்களாம்.

வாய்க்கா வரப்பு தகராறு எதுவும் இல்லைனு ஒரு பேச்சு அடிபடுது. அப்புறம் என்ன எழுத்து எழவுக்கு இப்படி எழுத்து தகராறு. அது வேற ஒன்னும் இல்லையாம். சண்டைய பார்க்கத்தான் கூட்டம் கூடுமாம். அது மாதிரி ஒருத்தரை இன்னொருத்தர் எழுதி தாக்கிகிட்டா பதிவுலகத்தில் தனக்கென தனி இடம் ஒன்னு சிறப்பா அமைச்சிக்கிடலாம்னு தெரிஞ்சவங்க எல்லாம் சொல்றாங்க. ;) நாலு பேருக்கு நாம தெரியனுமா நல்லவங்களுக்கு கெடுதல் பண்ணு அப்படினு ஒரு சொல் வழக்கு இருக்கு. கெட்டவனு பேரு வாங்கிருவோம்னு பயப்படவேணாம் ;)  நல்லவருனு சொல்ல ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்து.

இப்போ  எனக்கு என்ன பிரச்சினை. யாரு யாரை அடிச்சிகிட்டா என்ன, மிதிச்சிகிட்டா என்ன. அவங்க அவங்க தலைவலிக்கு அவங்க அவங்க மாத்திரை சாப்பிடுவாங்க. இதுல நாம ஏதாவது ஒரு பக்கம் சாஞ்சி பேசினாலும் குத்தம், சாயமா பேசினாலும் குத்தம். எதுக்குனா ரண்டு பக்கமும் நியாயம் இருக்குனு ரண்டு பக்கமும் நின்னு பேசறதுக்கு ஆளு இருக்கு. இதுக்கு மேல  சிவனேனு சும்மா இருந்தா கூட சொரணை கெட்டவங்கனு ஒரு பட்டம் கொடுத்து விட்டுடுறாங்க.

சரி அதெல்லாம் பிரச்சினை இல்லை, எனக்கு இப்போ இந்த தமிழுல எழுதறவங்க எழுத்து எல்லாம் படிச்சி படிச்சி அவங்களைப் பத்தி ஒரு பிம்பம் உருவாக ஆரம்பிச்சி தொலைஞ்சிருச்சி. இதுல கொடுமை என்னனா தப்பா எழுதுறதை வைச்சிதான் பிம்பம் பெரிசா உருவாக ஆரம்பிச்சிருச்சி. ஆயிரம் நல்ல விசயங்கள் இருந்தாலும், ஒரு தீய விசயம் இருந்தால் போதும், அத்தனை நல்ல விசயங்களும் பொசுங்கிப் போய்விடும் அப்படிங்கிற பாலபாடம் எனக்கு கத்து கொடுக்கப்பட்டு  இருக்கறதால இந்த பிம்பம் எல்லாம் மறையவே மறையாது. பல பதிவர்களை வாழ்நாளில் தவறியும் பார்க்கவே கூடாது, அப்படி பார்த்தாலும் தவறியும் பேசிவிட கூடாது அப்படின்னு ஒரு முடிவுக்கு வந்தாகிவிட்டது.

யார் அந்த பதிவர்கள்? அப்படிப்பட்ட  பதிவர்களை கை காட்டித்தான் ஆக வேண்டும் என்பதெல்லாம் இல்லை, ஏனெனில் என்னை பார்க்க வேண்டும் என எவருக்கும் இனிமேல் நினைப்பு இருக்காது. அவரவர் தேவைக்கு அவரவர் சரியாக செய்து கொள்வார்கள். ;)

எனது மனைவி போடும் கடிவாளம்

பெண் பார்த்துவிட்ட வந்த பின்னர் எனது மனம் நிலை கொள்ளவில்லை. மனதுக்குள் எனது மனைவி வேலைக்கு செல்ல விருப்பப்படுவாளோ எனும் எண்ணம் சுற்றிக்கொண்டே இருந்தது. நானும் காரணம் தேடி தேடி அலுத்துப் போனேன். எந்த ஒரு காரணமும் சிக்கவில்லை.

சில வாரங்களிலேயே வேலையில் சென்று சேர்ந்தேன். காலையில் ஏழு மணிக்கு கிளம்பினால் சரியாக எட்டு மணிக்கெல்லாம் எனது அலுவலகம் சென்று சேர்ந்து விடுவேன். மாலை ஆறு மணி வரை அலுவலகத்தில் இருப்பேன். பின்னர் வீடு வந்து சேர சரியாக ஏழு மணி முப்பது நிமிடம் ஆகிவிடும். அலுவலகத்தில் இருக்கும்போது எனது வருங்கால மனைவிக்கு அவ்வப்போது தொலைபேசி அலைப்பு செய்து பேசுவேன். அப்போதெல்லாம் இந்த வேலை விசயம் பற்றி கேட்கத் தோணவில்லை. ஏதாவது நினைத்துவிடுவாரோ எனும் அச்சமும் இருந்தது.

அலுவலகத்தில் இருந்து வந்தவுடன் களைப்பு தீர குளித்துவிட்டு, நன்றாக சாப்பிட்டுவிட்டு தொலைகாட்சியில் தொடர்களை ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பேன். பெண் பார்த்துவிட்டு வந்தபின்னர்தான் இந்த தொலைகாட்சித் தொடர் எல்லாம் பார்க்கத் தொடங்கி இருக்கிறேன். எப்படியும் ஒரு காரணம் கண்டு பிடித்துவிட வேண்டும் எனும் ஆசைதான். ஆனால் சில தொடர்களில் மனைவி வேலைக்கு செல்வதை விரும்பாத கணவன் என காட்டிக் கொண்டிருந்தார்கள். அந்த தொடர்களில் நடிப்பவர்களுக்கு நிச்சயம் வலித்து இருக்காது, ஏனெனில் அவர்கள் செய்வது ஒரு வேலை தான். ஆனால் அவர்களைப் போல வீட்டில் அடக்கி ஒடுக்கப்பட்டவர்களின் மனதின் வலி எப்படியிருக்கும்? எனது மாமா மகள் ஞாபகம் வந்தது. தொடர் பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள் இரவு ஒன்பது மணிக்கு எனது மாமா வீட்டிற்கு சென்றேன்.

மாமா மகள் படித்துக் கொண்டிருந்தாள். எனது வேலை பற்றிய எண்ணத்தை அவளிடம் தெரிவித்தேன். வேலைக்கு போகமுடியாத‌ நிலைமை வந்தால் நான் எல்லாம் செத்துருவேன் மாமா என்றாள். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. வேலையில் சேர்ந்து கொண்டு அங்கு வேலையில் ஏற்படும் இன்னல்களை கண்டு செத்துவிடலாம் என சொன்ன சகோதரிகள் கண்ணுக்கு முன் வந்தார்கள். எனது அலுவலகத்தில் பல பெண்கள் பணிபுரிகிறார்கள். அவர்கள் எல்லாம் 'ஏன்டா இந்த வேலைக்கு வந்தோம்' என அலுத்துக் கொள்ளாத நாட்களே கிடையாது. என் வருங்கால மனைவி வேலைக்குப் போக வேண்டும் என சொன்னால் என்ன செய்வது என கேட்டேன். அதற்கு அவள் மிக சர்வ சாதாரணமாக சொன்னாள். காரு வாங்கனும், வீடு வாங்கனும், விலையுயர்ந்த பொருள் வாங்கனும், அதுக்கெல்லாம் பணம் வேணும்னு சொல்லுங்க மாமா. இதுக்கெல்லாமா காரணம் தேடுவாங்க என்றாள். நல்ல வேளை நான் தப்பிச்சேன் என்றாள்.

அன்றிலிருந்து காரணம் தேடுவதை தவிர்த்து இருந்தேன். எங்கள் திருமணம் மிகவும் சிறப்பாகவே நடைபெற்றது. சாந்தி முகூர்த்தம் அன்று சாந்தி முகூர்த்தம் வேண்டாம் என்று சொன்னாள் எனது மனைவி. என்ன காரணம் என கேட்டேன். பிள்ளைகள் பிறந்தால் பணம் அதிகம் தேவைப்படும், அவளும் வேலைக்கு செல்ல வேண்டிய சூழலும் வந்து சேரும் என்றாள். அதற்காக கல்யாணம் பண்ணிய பிரம்மச்சரியாகவா வாழ்வது என்றேன். அப்படித்தான் சில காலங்கள் வாழ வேண்டும், இப்போதுதான் நீங்களும் வேலைக்கு சென்று இருக்கிறீர்கள், அதனால் சில வருடங்கள் ஆகட்டும் என்றாள். எனக்கு மிகவும் வெறுப்பாகிவிட்டது. ஒரு சராசரி மனிதன் என்பதை அன்றுதான் நான் அறிந்து கொண்டேன். கோபத்துடன் அப்படியே தூங்கியும் போனேன்.

சில நாட்கள் அவளுடன், எனது மனைவி என சொல்லாமல் இருப்பதற்கு எனது கோபம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள், தேனிலவு சுற்றுலா சென்றேன். படுபாதகியாக இருந்தாள் அவள். கருவுறாமல் இருக்க தடுப்பு சாதனம் என எதையும் உபயோகிக்கவும் கூடாது என சொல்லிவிட்டாள். கட்டை பிரம்மச்சாரியாக என்னை இருக்க வைத்தாள். எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. கல்யாணம் பண்ணினோமா, அடுத்த சில வருடத்தில் அடுக்கடுக்காக பிள்ளைகள் பெற்றோமா என நினைத்திருந்த எனக்கு அவளின் செயல்பாடு அவள் மீதான வெறுப்பு கல்யாணம் பண்ணிய சில தினங்களில் ஆரம்பித்து இருந்தது.

அவள் மிகவும் கட்டுப்பாடுடன் இருந்தாள். எனக்கு ஆச்சரியமாகவும் இருக்கத்தான் செய்தது. காதல் மட்டுமே கல்யாணத்தின் வெற்றிப்படி என்றாள். கல்யாணம் என்பது நாமிருவரும் பிள்ளைகள் பெற்று கொள்ள செய்து கொள்வதல்ல என்றாள். எனக்கு இதெல்லாம் கல்யாணம் முன்னால் பேசவில்லையே என்று தோணியது. இவள் வேலைக்குப் போக வேண்டுமெனில் என்ன காரணம் சொல்லலாம் என தேடி வைத்திருந்த எனக்கு, இவள் வேலைக்குப் போகாமலிருக்க தயார் செய்து வைத்திருந்த காரணம் என்னை அலைக்கழித்தது.

சின்ன சின்ன குழந்தைகள் எல்லாம் பார்க்கும்போது மிகவும் ஏக்கமாக இருக்கும். ஒரு முறை எனது மாமா மகள் என்னிடம் பேசிக் கொண்டிருந்தாள். அப்பொழுது அவளிடம் தாம்பத்யம் இல்லாமல் நாங்கள் வாழும் விசயத்தை சொல்லிவிட்டேன். என்ன மாமா இது, உங்க இரண்டு பேருகிட்ட இருக்க அந்தரங்க விசயத்தை எல்லாம் என்கிட்ட சொல்றீங்க என்றாள். இல்லை நீ அவகிட்ட பேசிப் பாரு என்றேன். எனக்கு உதவுவதாக நினைத்துக் கொண்டு எனது மாமா மகள் அவளிடம் பேசினாள்.

அன்று இரவு என்னிடம் எனது மனைவி, கோபம் தீர்ந்துவிட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள், உங்க மாமா பொண்ணு என்கிட்ட பேசினாங்க. ரொம்ப நல்ல பொண்ணுங்க. வாழ்க்கையில் ரொம்பத் தெளிவா இருக்காங்க. வேலைக்குப் போய் நாலு காசு சம்பாதிச்சிட்டுதான் கல்யாணம் எல்லாம், அதுவரைக்கும் காதல் தான். காதல் பண்றப்ப இந்த விசயத்தையெல்லாம் யோசிக்க வேண்டியதில்லைனு சொன்னாங்க. நாம ரெண்டு பேரும் தாலி கட்டிட்டு காதல் பண்றதா நினைச்சிக்குவோம், என்ன சொல்றீங்க என்றார் எனது மனைவி.

எனக்கு கடிவாளம் போடப்பட்டதாய் நினைத்துக் கொண்டேன். அழகான எனது மாமா மகள் மீது எனக்கு ஆசை ஒருபோதும் வந்தது இல்லை. அடுத்த பெண்கள் மீதும் எனக்கு எவ்வித ஆசை வந்ததும் இல்லை. எனது மனைவி எனும் உரிமையால் மட்டுமே எனக்கு ஆசை வந்தது. அந்த ஆசை கூட நிராகரிக்கப்படும்போது மிகவும் கோபம் வந்தது, ஆனால் நாட்கள் செல்ல செல்ல கோபம் இல்லாமல் மனைவியை அதிக அளவு நேசிக்கத் தொடங்கி இருந்தேன். ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பதெல்லாம் எனக்கு எழுதப்பட்டதல்ல என புரியத் தொடங்கியது.

இப்பொழுது பிள்ளைகள் பெற்று கொள்ள வேண்டும் என எப்படி எனது மனைவியை எனது வழிக்கு கொண்டு வருவது என ஒரு காரணம் தேடிக் கொண்டிருந்தேன்.