Saturday 29 May 2010

விளக்குதனில் ஏற்றுங்கள் ஒளி


சனீஷ்வர பகவானுக்கு 
எள் விளக்காய் நான்
எள்ளோடு
என்னில் எண்ணை நிரப்புங்கள்

கார்த்திகை மாதம்
கார்த்திகை தீபமாய்
கவனமாய் என்னை
வீடெல்லாம் நிரப்புங்கள்

என்னை செய்தவருக்கு
வயிறு நிறைந்திட வழி  சொல்லுங்கள்
இன்னும் விற்கபடாமல் இருக்கிறேன்
என்னை வாங்கிச் செல்லுங்கள்!

நுனிப்புல் (பாகம் 2) 5

                               5 சுந்தரனின் காதல் 


கிருத்திகாவும் பாரதியும் பேருந்தில் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. வில்லிவாக்கம் நிறுத்தம் வந்ததும் இருவரும் இறங்கிக் கொண்டார்கள். எதுவும் சொல்லிக் கொள்ளாமல் கிருத்திகா தனது வீட்டை நோக்கி நடந்தாள்.

‘’கிருத்தி’’

‘’என்னய்யா’’

‘’இந்த விசயத்தை வேற யார்கிட்டயும் சொல்லிக்க வேண்டாம், திருமாலும் அவருடைய மனைவியும் நம்மளைப் பார்க்க வந்தா எங்க வீட்டுக்குக் கூப்பிட்டு வர வேண்டாம், மறந்துராத கிருத்தி’’

‘’புரியுதுய்யா’’

‘’யோகலட்சுமி அக்கா சொன்னது உண்மையா?’’

‘’அப்படித்தான்யா சொன்னாங்க, உன்கிட்ட பொய் பேசுவேனா?’’

‘’வேற எதுவும் அவரைப் பத்தி சொன்னாங்களா?’’

‘’இல்லைய்யா’’

‘’நாளைக்கு படிப்போம், நான் நீ சொன்னதையும் சேர்த்து வாசனுக்கு கடிதம் எழுதி வைச்சிருக்கேன்’’

‘’ம்’’

கிருத்திகா பாரதியிடம் விடைபெற்று கொண்டாள். பாரதி வீட்டினுள் நுழைந்தாள்.

‘’இவ்வளவு நேரமா போய்ட்டு வரதுக்கு பாரதி’’

‘’எதிர்பாரா விதமா நேரமாயிருச்சிம்மா’’

‘’சாப்பிட்டியா?’’

‘’ம்’’

அம்மாவுக்கு பதில் சொல்லிவிட்டு தனது அறையினுள் நுழைந்தாள் பாரதி. வாசனை தொடர்பு கொள்வதா, வேண்டாமா என முடிவெடுக்க முடியாது திணறினாள். ஊரில் இன்று பூங்கோதையின் நிச்சயதார்த்தம் என கூறி இருந்த காரணத்தினால் ஒரு வழியாக நாளை திருமணம் முடிந்த பின்னர் தொடர்பு கொள்ளலாம் என முடிவுக்கு வந்தாள். தான் எடுத்து வைத்திருந்த குறிப்புகளை அனைத்தும் மிகவும் கவனமாக கோர்வையாக எழுதினாள். இதனை வாசனுக்கு அனுப்பி விடுவதுதான் சிறந்தது என கருதினாள். வாசன் இதுகுறித்து மேற்கொண்டு ஏதாவது செய்ய நினைத்தால் அவனே செய்து கொள்ள வேண்டும் என எண்ணினாள்.

திருமால் பற்றிய விபரமும், பெருமாள் தாத்தாவின் சாத்திரம்பட்டி தொடர்பும் எழுதியவள், பெருமாள் தாத்தா எழுதிய கடிதம் காணக் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டாள். கிருத்திகா கூறியதையும் சேர்த்தாள். வாசனுக்கு திருமால் எழுதிய கடிதம்தனை உடன் இணைத்தாள். மிகவும் குறிப்பாக இனிமேல் விபரங்களுக்கு திருமாலை நேரடியாகத் தொடர்பு கொள்ளவும் என எழுதி, நட்புடன் பாரதி என கையொப்பமிட்டாள். வாசனின் முகவரியை கடிதத்தில் எழுதிவிட்டு கடிதம்தனை பத்திரப்படுத்தினாள்.

மாலை நேரம் தாண்டி இரவு நேரம் வந்தது. பாரதி அவளது அறையில் படித்துக் கொண்டு இருந்தாள். அருண், சேகர் இருவரும் சேர்ந்தே வந்தார்கள். பாரதியின் அறைக்குச் சென்றார் சேகர்.

‘’பாரதி இங்க வாம்மா’’

‘’என்னப்பா’’

‘’சுந்தரன்கிட்ட என்ன சொன்ன நீ’’

‘’இல்லப்பா அப்படி ஒரு முக்கியமான விசயமும் சொல்லலையே’’

‘’நீ அவனை வேலையை விட்டுட்டு குளத்தூர் போகச் சொன்னியாமே, இப்ப உன்கிட்ட கேட்டா ஒண்ணும் சொல்லலைனு சொல்ற, அவன் மனசு வருத்தப்பட்டு வந்து தயங்கி தயங்கி சொல்றான், அதுக்கு மேல எதுவும் கேட்டா ஒண்ணும் சொல்ல மாட்றான், என்ன நடக்குது பாரதி’’

‘’ஓ அதுவாப்பா, நேத்து சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்பா, அஷ்டலட்சுமி கோவிலுக்கு வந்து இருந்தான், அப்போ எங்கிட்ட வந்து நம்ம குளத்தூர் பெருமாள் தான் தெய்வம் மற்றதெல்லாம் வெறும் கண்காட்சினு சொன்னான், அதுக்கு நான் அவன்கிட்ட அப்படின்னா என் அப்பாகிட்ட சொல்லிட்டு வேலையை விட்டுட்டு ஊருக்குப் போ அங்க இருக்கற வேலையை செய், மற்ற வேலையெல்லாம் சும்மா, என் அப்பா கேட்டா எந்த காரணமும் சொல்லாதேனு சொன்னேன்பா’’

‘’ஓ இவ்வளவுதானா, நான் என்னமோ ஏதோனு நினைச்சிட்டேன் நீ படிம்மா’’

என பாரதியிடம் சொல்லிவிட்டு சேகர் மாடியிலிருந்து இறங்கி வந்தார். அந்த நேரம் பார்த்து சுந்தரன் வந்து நின்றான். சுந்தரனை வீட்டை விட்டு வெளியே அழைத்துச் சென்றார் சேகர்.

‘’நீ விளையாட்டுப் பையனா இருக்கியே, பாரதி ஒரு பேச்சுக்கு சொன்னதை உண்மைனு எடுத்துக்கிட்டு ஊருக்குப் போகனும்னு அழாத குறையா வந்த சொன்ன’’

‘’இல்லை சார், அவ ரொம்ப சீரியஸா சொன்னா சார்’’

‘’சரி சரி, அவ சொன்னதுக்காகப் போகனுமா, நீ என்னை நம்பிதான வந்த, நான் சொல்றதை கேட்டு நடந்துக்கோ, தேவையில்லாம மனசை குழப்பிக்காத, உன்னோட திறமைக்கு நல்ல எதிர்காலம் இருக்கு, வீணா சிதறடிச்சிடாதே, நானும்தான் பார்க்கிறேன் நீ ஊருக்குப் போய்ட்டு வந்ததிலிருந்து சுறுசுறுப்பு கொஞ்சம் குறைஞ்சிருக்கே, எப்படின்னாலும் சரி, சாதிக்கனும்கிற எண்ணத்தைத் தூக்கிப் போட்டுறாதே’’

சுந்தரன் சேகரின் பேச்சைக் கேட்டதும் மனதில் குடிபுகுந்த பாரதியின் மேலான காதல் ஆட்டம் கொள்ளத் தொடங்கியது. மனம் அச்சம் கொண்டு தவித்தது. வாசனிடம் அவசரப்பட்டு சொல்லிவிட்டோமோ என வாட்டம் கண்டது, இது குறித்து வாசன் பெரியவரிடம் சொல்லி, பெரியவர் சின்னவரிடம் சொல்லிவிட்டால், அருணுக்குத் தெரிந்துவிட்டால் சுந்தரனின் மனம் பதைபதைத்தது. குழந்தை பருவ, பள்ளி பருவ காதல் பாடாய் படுத்தியது. பாரதியின் மனதில் இடம் பிடித்து விட வேண்டும் என்ற காதல்தான் அவள் விளையாட்டாய் சொன்னதை உண்மையென கருத வைத்து வேலை விட்டுச் செல்லுமளவிற்குத் தூண்டி இருந்தது. தனது செயலின் மடத்தனத்தை எண்ணியவாறே சேகரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு அவருடன் சேர்ந்து சாப்பிட அமர்ந்தான். அருண், அம்மாவிடம் கேட்டான்.

‘’பாரதி சாப்பிடலையாம்மா’’

‘’காலை பூரா எங்கோ போய்ட்டு வந்துட்டு இப்போ உட்கார்ந்து படிச்சிட்டு இருக்கா, அவ பிறகு வந்து சாப்பிடுவா’’

சுந்தரனுக்கு சாப்பாடு பரிமாறிய சரோஜா கேட்டார்.

‘’என்ன தம்பி முகம் ஒரு மாதிரியா இருக்கு, உடம்பு சரியில்லையா’’

‘’அது எல்லாம் ஒண்ணுமில்லைம்மா, நல்லாத்தான் இருக்கேன்’’

சேகர் நடந்த விசயம்தனை சுருக்கமாக கூறியதும் சரோஜா மிகவும் பரிதாபப்பட்டார். அருண் கலகலவெனச் சிரித்துவிட்டுச் சொன்னான்.

‘’இன்னும் பயம் விட்டு போகலை போல’’

சுந்தரன் மிகவும் சங்கடமாக உணர்ந்தான். சாப்பிட்டு முடித்ததும் சுந்தரன் தனது வீடு நோக்கி கிளம்பும் முன்னர் சரோஜா அழைத்தார்.

‘’தம்பி எதுவும் மனசில வைச்சிக்காதப்பா, எப்பவும் போல சந்தோசமா இரு, எதுனாலும் எங்கிட்ட கேளுப்பா’’

‘’ம்ம்’’

சுந்தரன் மனதில் முடிவு எடுத்தவனாய் நடந்தான். பாரதியின் அறைக்குச் சென்றான் அருண்.
‘’நீ இனிமே ஏதாவது சுந்தரன் கிட்ட சொன்னா இது ஜோக், இது சீரியஸ் அப்படினு சொல்லிட்டுப் பேசு பாரதி, பாவம் அவன். அவன் வந்தப்பறம் நம்ம கம்பெனியோட முன்னேற்றம் பல மடங்கு பெருகிட்டு இருக்கு நீ ஏதாவது பேசி அவனை ஊருக்கு அனுப்பிராத’’

‘’சரிண்ணா’’

பாரதிக்கு, சுந்தரனை நினைத்துப் பார்க்கும்போது மிகவும் கஷ்டமாக இருந்தது. எப்படி இப்படி நடந்து கொண்டான் என நினைத்துப் பார்க்கையில், அவனது நடவடிக்கைகள் குறித்து யோசிக்கையில் பாரதி சரியாக ஒரு விசயம்தனை கணித்துக் கொண்டாள். கிருத்திகாவிடம் இது குறித்து பேசினாள். கிருத்திகாவுக்கு சுந்தரன் அத்தனைப் பழக்கமில்லை, ஆனால் சுந்தரனைப் பார்த்தால் மறக்காமல் புன்னகை மட்டும் புரிவாள். சுந்தரனும் மறக்காமல் புன்னகை புரிவான். ‘கனவு வரப் போகுதுய்யா’ என கிண்டலடித்தாள் கிருத்திகா. பாரதி சிரித்தாள். கனவின் வலிமையினை யாரும் உணரப் போவதில்லை.

இரவு சற்று வேகமாகவே உறங்கினாள் பாரதி. கிருத்திகா சொன்னது போலவே கனவும் வந்தது. கனவு பற்றியே நினைத்துக் கொண்டிருந்து இருப்பாளோ? சுந்தரன் மேல் மிகவும் பரிதாபப்பட்டு இருந்து இருப்பாளோ? அந்த கனவில் சுந்தரனை அருண் துரத்தியடிப்பதாக கண்டாள். மனதில் திடமான முடிவினை எடுத்தாள். தன்னால் சுந்தரனுக்கு எவ்வித பாதிப்பும் வரக்கூடாது என கருதினாள்.

பொழுது சற்று வேகமாகவே விடிந்தது. குளத்தூரில் திருமண நாள். கேசவனின் திருமணம் பற்றி வீட்டில் பேசிக் கொண்டார்கள். திருமணத்திற்கு யாராவது ஒருவர் சென்று இருந்து இருக்கலாம் என்றார் சேகர். காலையில் சுந்தரன் வழக்கம்போல் வந்து சாப்பிட்டு விட்டு கிளம்பினான்.

கடைக்குச் சென்று திரும்பிய பாரதி சுந்தரனை வழியில் கண்டாள். சுந்தரன் தலையை குனிந்து கொண்டு விலகி நடக்க ஆரம்பித்தான். பாரதி சுந்தரனை அழைத்துப் பேசினாள்.
‘’உன் மனசுல என்னைப் பத்தி ஏதாவது நினைச்சிக்கிட்டு இருந்தா அதை இப்பவே மறந்துரு’’

‘’அப்படியெல்லாம் இனிமே எதுவும் நினைக்கமாட்டேன்’’

‘’உன்னோட நடவடிக்கைகள் அப்படித்தான் எனக்கு நினைக்கத் தோணுது, உன்னோட நல்லதுக்குத்தான் சொல்றேன்’’

சுந்தரன் இனிமேல் கவலை வேண்டாம் என பாரதியிடம் கூறினான், அப்பொழுது மனதில் வலிதனை உணரத் தொடங்கினான். பின்னர் சுந்தரன் வேலைக்குச் சென்றான். மிக வேக வேகமாக வேலையை முடித்தான். வேலைதனை முடித்துவிட்டு மதிய வேளையில் வாசனிடம் பாரதி காதல் விசயம் பற்றி எதுவும் இனிமேல் பேச வேண்டாம் என்றான். வாசன் பாரதியிடம் இதுகுறித்து பேசுவதாக கூறினான். ஆனால் சுந்தரன் கூறிய விசயங்கள் கேட்டபின்னர், வாசன் இனிமேல் இது குறித்து பேசுவதில்லை என உறுதி அளித்தான். சுந்தரன், தனது காதலுக்கென இருந்த வாசன் எனும் ஒரு உதவி வாசலையும் திறக்கவே முடியாதபடி அடைத்தான். சூரியன் வேறு சுட்டெரித்தது.

(தொடரும்) 

Friday 28 May 2010

நல்லாவே சமைப்பேன்

''இன்னுமா கிளம்பலை'' அம்மா சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். ''இதோ ரெடியாயிட்டேன்'' நானும் பதிலுக்கு சத்தம் போட்டேன். ''பொண்ணு தானே பார்க்கப் போறோம், பொண்ணு மாதிரியே சீவி சிங்காரிச்சிட்டு இருக்கானே'' அப்பாவின் முனகல் சத்தம் தெளிவாகத்தான் கேட்டது.

நான் அப்பொழுதுதான் கல்லூரி படிப்பு முடித்து இருந்தேன். வேலைக்கு விண்ணப்பம் செய்து கொண்டிருந்த தருணம். கடந்த வார நேர்முகத் தேர்வில் சிறப்பாக செய்தது போன்ற உணர்வு. ஒரு வாரத்தில் அழைக்கிறேன் என சொல்லி இருந்தார்கள். எப்படியும் அழைத்து விடுவார்கள் என தினமும் எனது மொபைல்தனை மறக்காமல் சார்ஜ் செய்துவிடுவேன். சில பல நேரங்களில் பேட்டரி தீர்ந்து அவசரத்திற்கு கூட மொபைல் உதவாமல் போய்விடுகிறது.

அவசர அவசரமாக மாடியிலிருந்து கீழிறங்கி வந்தேன். அம்மாவும் அப்பாவும் தயாராக இருந்தார்கள். அந்த நேரம் பார்த்து எனது சொந்தக்கார பாட்டி வந்து சேர்ந்தார். ''எங்க மூணு பேருமா கிளம்பிட்டீங்க, நம்ம சொந்த பந்தத்துல இல்லாத பொண்ணுகளா, அதுல ஒரு பொண்ணை கட்டிக்கிற வேண்டியதுதானே, வெளியூர் பொண்ணு கட்டப் போறானாம்'' என பேசியதும் தான் தாமதம், அப்பாவுக்கு கடுமையான கோபம் வந்துவிட்டது. அந்த பாட்டி நன்றாகத்  திட்டு வாங்கினார்.

எங்கள் உறவினர் எவரும் எங்களுடன் பெண் பார்க்க வர முயற்சிக்கவில்லை. அவரவருக்கு கோபம் மட்டுமே மிஞ்சி இருந்தது. ''என்னங்க ஒரு எட்டு என் அண்ணனை கூப்பிட்டு போவோம்'' என்றார் அம்மா. ''அன்னைக்கு நல்லா வாங்கி கட்டிக்கிட்டது போதாதுன்னு இப்ப வேறயா'' என கோபம் தீராமலே சொன்னார் அப்பா.

பேருந்து நிலையம் நோக்கி நாங்கள் மூவரும் நடந்தோம். எங்கள் எதிரில் வந்த எனது மாமா மகள் ''மாமாவுக்கு பொண்ணு பாக்கப் போறீங்களா அத்தை, நானும் கூட வரட்டுமா, மூணு பேரா  சேர்ந்து ஒரு நல்ல காரியத்துக்கு போகக் கூடாதுல'' என்றாள். ''உங்க அப்பன் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வா'' என்றார் என் அம்மா. ''சொல்லிட்டுதான் அத்தை வந்தேன்'' என்றாள் எனது மாமா மகள் முகம்  மலர்ந்தபடியே.

உறவினர்களுக்குள் எந்த பொண்ணும் எடுக்கக் கூடாது என மிகவும் தீவிரமாகவே இருந்தார் எனது அப்பா. அதற்கு அவர் சொல்லும் காரியங்கள் ஆயிரம் ஆயிரம். ஒரு காரணத்தைக் கூட இதுவரை நான் மறுத்துப் பேசியது இல்லை.

பேருந்து   நிலையத்தில் நாங்கள் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தோம்.  ''மாமா, பொண்ணு போட்டோ இருக்கா'' என்றாள் எனது மாமா மகள். ''ம்ம்'' என சொல்லியவாறே எடுத்துக் காட்டினேன்.

போன  வாரம் தான் தரகர் எனது சாதகத்திற்கு பொருந்திய சாதகங்கள் என ஐந்து பெண்களின் போட்டோவுடன் அவர்களது விபரங்களையும் தந்து இருந்தார். முதல் போட்டோவை பார்த்ததும் மூக்கும் முழியுமாக இருந்த அந்த பெண் பளிச்சென மனதில் இடம் பெற்றுவிட்டாள், மத்த படங்களை பார்க்க வேண்டாம் என தோன்றினாலும் பார்த்து வைத்தேன். நல்லவிதமாக வேறு எந்த பெண்ணும் எனக்குப் பிடிக்கவில்லை. எனக்குப் பிடித்த பெண்ணையே என் அப்பா அம்மா சரி என சம்மதம் சொல்லிவிட்டார்கள்.

போட்டோவைப் பார்த்தபடியே ''என்னை மாதிரியே அழகா இருக்காங்க'' என்றாள் மாமா மகள். ஆமாம், அவள் சொல்வதும் உண்மைதான்,  என் மாமா மகள் கொள்ளை அழகு. நன்றாகப் படித்து வருகிறாள். அடுத்த வருடம் கல்லூரி படிப்பை முடித்து விடுவாள். ஒரு நல்ல வேலையிலும் சேர்ந்து விடுவாள். இவளது நிலையில் நான் இருந்தால் 'வெயிலுக்குகந்தம்மனுக்கு இந்நேரம் காசு வெட்டி போட்டுருப்பேன், என் மாமா மனம் மாற வேண்டும் என ஏறாத கோவிலுக்கு எல்லாம் ஏறி இருப்பேன், ஆனால் இவளோ தன்னை ஒதுக்கியவன் என்று கூட பார்க்காமல் எனது பெண் பார்க்கும் படலத்துக்கு உடன் வருகிறாளே' எனும் யோசனையில் இருந்தேன். பேருந்து வந்து நின்றது. ''இந்தாங்க மாமா போட்டோ'' என தந்தாள்.

பெண்ணின் வீடு மிகவும் அழகாக இருந்தது. அகர்பத்தியின் நறுமணம் தாலாட்டியது. ''வாங்க வாங்க'' என எனது வருங்கால மாமனாரும், மாமியாரும் வரவேற்றார்கள். அவர்களது உறவினர்கள் என பலர் அங்கே தென்பட்டார்கள். அத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தார்கள். ''நாங்க மட்டும் தான் வந்தோம்'' என குறிப்பறிந்து சொன்னார் என் அப்பா. ''தரகர் வரலையா'' என்றார் என் வருங்கால  மாமனார். எனது கண்கள் பெண்ணை தேடியது. நாங்கள் நால்வரும் சோபாவில் அமர்ந்தோம். எனது மாமா மகள் என் அம்மாவின் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள், சிரித்த முகமாய் இருந்தாள்.

பலகாரங்கள் என மேசையில் இருந்தது. எடுத்துக்கோங்க என தட்டை காட்டியவர்  ''நாங்க சுத்த சைவம்'' என்றார் என் வருங்கால மாமனார். ''நாங்களும் தான், அதை தரகர் கிட்ட ரொம்ப முக்கியமா சொல்லி இருந்தேன்'' என்றார் என் அப்பா. நான் சைவ உணவு சாப்பிட்டே வளர்ந்தவன். ஆசைக்கு கூட முட்டை சாப்பிட்டது இல்லை. எனக்கு அப்படியொரு கொள்கை பிடிப்பு. பலகாரம் ருசித்த போது ''யார் செஞ்சது'' என்றார் என் அம்மா. அந்த பலகாரம் செய்தது அவளது வருங்கால மருமகளாக இருக்க வேண்டும் எனும் ஆசையாய் கூட இருக்கலாம். ''என் பொண்ணு தான்'' என்றார் என் வருங்கால மாமியார். ''ரொம்ப நல்லா இருக்கு'' என்றாள் என் மாமா மகள்.

அனைவரின் கண்களும் எனது மாமாவின் மகளின் மீது இருந்தது. அங்கிருந்த நடுத்தர வயதான பெண் ஒருவர் ''அடி ஆத்தி எம்புட்டு அழகு'' என்று தனது முகவாய் கட்டையில் கைவைத்து சொன்னவர், பின்னர் தலையில் சொடுக்கிக் கொண்டார். எனது மாமா மகள் வெட்கத்தில் தலை குனிந்து கொண்டாள். அனைவரும் எனது மாமா மகளை எனது சகோதரி என்றே நினைத்து இருக்கக் கூடும் என சொல்ல முடியாது, ஏனெனில் என் அப்பா விலாவாரியாக எங்கள் குடும்பத்தை பற்றி, வெளியில் பெண் எடுப்பதற்கான  காரணங்கள் ஐந்து என தரகரிடம் எழுதிக் கொடுத்து இருந்தார்.

பெண்ணை அழைத்தார்கள். காபியுடன் பெண் வந்தார். எனது மாமா மகள் என்னை பார்த்து அவளது கட்டை விரலை உயர்த்தி காட்டினாள். அவளது முகத்தில் எத்தனை சந்தோசம். அந்த நேரம் பார்த்து எனது மொபைல் ஒலித்தது. எங்கும் எழுந்து செல்லாமல் அங்கிருந்தே பேசினேன். வேலை கிடைச்சிருக்குமே என நீங்கள் நினைத்து இருந்தால் அது சரிதான். எனக்கு வேலை கிடைத்த விசயத்தை என் அப்பா அம்மாவிடம் மெதுவாக சொன்னேன். ''பொண்ணோட ராசி'' என்றார்கள். ''என்  மாமா மகளோட ராசியா'' என்றேன் மெதுவாக சிரித்துக் கொண்டே. என் அப்பா என்னை முறைத்துவிட்டு ''பொண்ணு பார்க்க வந்த நல்ல நேரம், என் பையனுக்கு நல்ல உத்தியோகம் கிடைச்சிருச்சி'' என்றார் சந்தோசத்துடன். அனைவரும் சந்தோசப்பட்டார்கள். எனது மாமா மகளின் முகத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சி. இரண்டு கட்டை விரலை உயர்த்தி காட்டினாள். பெண் வெட்கத்தில் சிரித்தாள்.

ஒவ்வொருவருக்காக காபி தந்தவள் எங்களுக்கும் தந்தாள். போட்டோவைப் பார்த்ததைவிட நேரில் மிகவும் அழகாய் இருந்தாள். காபி அருந்தினோம். எனது மாமா மகள் ரசித்துக் குடித்து கொண்டிருந்தாள். பெண்ணை பார்த்து ''நல்லா சமைப்பியாம்மா'' என்றார் என் அம்மா. ''நல்லாவே சமைப்பேன்'' என்றாள். அவளது குரல் கேட்டதும் எனக்கு ''பேசு இன்னும் பேசு'' என சொல்லத் தோன்றியது. உடனே எழுந்து பெண்ணுடன் தனியாய் பேச வேண்டும் என அனுமதி பெற்று பேசினேன்.

என்னை மிகவும் பிடித்து இருப்பதாக சொன்னாள். எனக்கு மனதில் மிகவும் சந்தோசமாக இருந்தது. வேலைக்கு செல்ல விருப்பமா என்றேன். சமைப்பது, துணி துவைப்பது, வீட்டை சுத்தமாக வைத்திருப்பது எல்லாம் வேலைதானே. வேலை செய்யாமல் எவரும் சும்மா இருக்க இயலுமா என இயல்பாக பேசிய அவளது பேச்சில் காதல் கொண்டேன். என் அப்பாவின் விருப்பத்திற்கு ஏற்றவாறே அவர் பெண் பார்த்து வைத்திருக்கிறார் என நினைத்துக் கொண்டேன்.

ஊருக்கு போய் தகவல் சொல்றோம் என சொல்லாமல் அங்கேயே சம்மதம் சொன்னோம். என் மாமா மகள் என் வருங்கால மனைவியை கட்டிப்பிடித்தாள். அத்தனை சந்தோசம் அவளுக்கு.

சந்தோசமாக பேருந்து நிலையத்தில் வந்து நின்றபோது என்னருகில் வந்து  என் மாமா மகள் அதிக சந்தோசத்துடன் சொன்னாள் ''மாமா, என் ரூட் இப்போ கிளியர், தேங்க்ஸ் மாமா'' சிறு வயது காலங்களில் அவளும் நானும் ஓடிபிடித்து விளையாடிய தருணங்கள் நினைவில் ஆடியது.

அவளது செல்பேசி ஒலித்தது. சற்று தள்ளிச்  சென்றுதான் பேசினாள், இருந்தும் எனக்கு கேட்டது.  ''இனி நம்ம காதலுக்கு யாரும் தடையா வரமாட்டாங்கடா, நான் நினைச்ச வேலைக்கு நிச்சயம் போகலாம், இல்லைன்னா இத்தனை படிச்சும் அடுப்படியிலே அடைச்சி வைச்சிருப்பாங்கடா''

எனது வருங்கால மனைவிக்கு வேலைக்கு செல்ல விருப்பம் எனில் முதன் முதலாக எனது அப்பாவின் காரணத்தை எதிர்க்க காரணம் தேடிக் கொண்டிருந்தேன்.