Friday 30 April 2010

அடியார்க்கெல்லாம் அடியார் - 8

கதிரேசனை வீட்டிற்குள் அழைத்தார் செல்லாயி. ஆனால் உள்ளே செல்லாமல் வெளியே நின்றான் கதிரேசன். கதிரேசனிடம் என்னைத் தேடி நீ வந்திருக்க அவசியமில்லை என்று செல்லாயி சொன்னார். பார்க்க வேண்டும் போல் தோணியது என்ற கதிரேசனிடம் நீ இன்னும் பக்குவப்படவில்லை என்றார் செல்லாயி. நான் சிவன் பக்தன் என்றான் கதிரேசன். நீ என் மகன் என்பதை யாரும் மறுக்க மாட்டாங்க என்ற செல்லாயி நீ முதலில் உள்ளே வா, வெளியே நின்னு பேசாதே என்றார்.

அதற்குள் ஊரில் இருந்த சிலர் அங்கே வந்து சேர்ந்தனர். நடந்த விசயம் உடனே தெரிந்து கொண்டனர். கதிரேசனை நோக்கி படிக்கிற வயசுல என்ன பக்தி வேண்டி கிடக்கு என்றார்கள். அதிலும் ஒரு பாட்டி ‘’கதிரேசு, புளி புளிக்கத்தான் செய்யும் ஆனா அது பதார்த்தங்களை கெடாம பாதுகாக்கும் தன்மை வச்சிருக்கு, அதுபோல இந்த குடும்பவாழ்க்கை கசக்கறமாதிரிதான் தெரியும் ஆனா சந்ததி சந்ததியா காத்து வரும்’’ என்றார். ''செல்லாயி, ஒரு கல்யாணத்தை இவனுக்குக் கட்டி வையி, எல்லாம் சரியாப் பூரும்'' என்றார் அந்த பாட்டி மேலும்.

‘’எனக்கு என்ன பண்றதுனு தெரியலை, ஒருவாரம் படிக்கப் போய்ட்டு இப்படி வந்து நிற்கிறான். யார் என்ன மந்திரம் செஞ்சாங்களோ'' என்றார் செல்லாயி வேதனையுடன். ''நீ தான் நல்லா படிச்சி வருவனு பார்த்தா இப்படி பொறுப்பில்லாம சாமியாரு ஆயிட்டேன்னுட்டு, போய் நல்லா படிச்சி முன்னுக்கு வரப் பாரு'' என பொறுப்பில்லாமல் இளைஞர்களும், தந்தையர்களும் சுற்றிவரும் ஊரில் பொறுப்புடன் சிலர் பேச ஆரம்பித்தார்கள்.

''வீட்டுக்குள்ள வாப்பா, மத்ததைப் பிறகு பேசிக்கிரலாம்'' என கதிரேசனை உள்ளே அழைத்துச் சென்றார் செல்லாயி. கதிரேசன் வீட்டுக்குள் நுழைந்தான். மற்றவர்கள் கலைந்து சென்றார்கள். செல்லாயியின் உறவினர்கள் கேலி பேசினார்கள். ஒரு மகனைப் பெத்து அவனை சாமிக்கு நேந்துவிடத்தான் வளர்த்தியாக்கும் என்றார்கள். கதிரேசன் வீட்டில் தரையில் ஒரு ஓரமாக அமர்ந்து இருந்தான். நாழிகை கழிந்து கொண்டே இருந்தது. ஊரெல்லாம் கதிரேசன் பற்றிய பேச்சாகிவிட்டது. 'இந்த வயசுல சாமியாரு ஆயிட்டேனு வந்து நிற்குது' என்றார்கள் சிலர்.

கதிரேசனிடம் பல விசயங்கள் சொல்லி அலுத்துப் போயிருந்தார் செல்லாயி. ''பரம்பரையே இல்லாமப் போயிரும்பா யோசிச்சி செய்பா'' என்றதோடு நிறுத்திவிட்டு அமைதியானார். ஒரு சில மணி நேரங் கழித்து வீட்டுக்கு வந்த கதிரேசனின் தந்தை வழி தாத்தா ''இவங்களுக்குத் தெரியுமா? அத்தனையும் ஒதுக்கிட்டு சிவனே கதி என இருக்கறது எத்தனை கடிசுனு இவங்களுக்குத் தெரியுமா? கதிரேசு, நீ எடுத்த முடிவு அத்தனை சாதாரணமில்ல, மனசு ஓரிடத்தில உட்காராது, கண்ணை மூடிக்கிட்டாலும் கண்டது மனசுக்குள்ள கன்னாபின்னானு சுத்தும், எல்லோரும் போல சிவனைத் தொழுதுட்டு சாதாரணமா வாழ்ந்துட்டுப் போக வழியப் பாரு அம்புட்டுதான் சொல்வேன்'' என்றார் அவர் பங்குக்கு.

செல்லாயியின் அண்ணன் விசயம் கேள்விபட்டு துவாரம்பட்டியிலிருந்து கிளம்பி வந்துவிட்டார். ''என்ன புள்ளைய வளர்த்து வைச்சிருக்க, சாமியாரா போறான்னா அதை ஊரு பூரா பரப்பிட்டு திரியனுமா, ஏண்டா நீதான் சாமியாராப் போகனும்னு முடிவு பண்ணிட்டா என்னத்துக்கு உன் ஆத்தாளப் பார்க்க வந்த, அப்படியே அங்குட்டு போக வேண்டியதுதானே, மானம் போகுது, ஊருல பார்க்கறவனெல்லாம் உன் மருமகன் கதிர்ஈசனா மாறிட்டானு கேலி பண்றானுங்க, ஒழுங்கா இருக்கற வழியைப் பாரு இல்லை கையை காலை உடைச்சி மூலையில உட்கார வைச்சிருவேன்'' என கோபத்தின் எல்லைக்குச் சென்று கத்தினார் அவர். கதிரேசன் எந்த ஒரு சலனமுமின்றி அமைதியாகவே அமர்ந்து இருந்தான்.

செல்லாயி தனது அண்ணன் லிங்கராஜுவை தனியாய் அழைத்து ''உன் பொண்ணை என் பையனுக்கு உடனே கல்யாணம் பண்ணிருவோம்ணே, இவன் இருக்கறதப் பார்த்தா பயமா இருக்கு'' என்றவுடன் ''அவ படிச்சிட்டு இருக்கா, இப்படி மனசு இருக்கறவனுக்கு என் பொண்ணை ஒரு காலமும் தரமாட்டேன், நாளைக்கே ஓடிப் போய்ட்டான்னா என் பொண்ணு நிலைமை என்னாகிறது'' என சொல்லி முடித்த அடுத்த கணமே ''என் புள்ளைய நீ இனி திட்டாதேண்ணே, நீயும் விசயம் கேள்விபட்டு வராமலேயே இருந்திருக்கலாம்'' என்றார். லிங்கராஜு வீட்டை விட்டு வெளியேறினார்.

நடு இரவு நெருங்கிக் கொண்டிருந்தது. முழு தினமும் விரதம் இருந்து இருந்தாள் செல்லாயி. அவரவர் உறங்கச் சென்று விட்டார்கள். ''உனக்கு தெரியாதாய்யா, அந்த ஈசனே குடும்பஸ்தருய்யா, சிவனைப் பத்தி நீ சின்ன வயசுல இருந்தே சொல்சிவனேனு சிலாகிச்சிப் பாடறப்ப எல்லாம் எனக்கு கேட்க சந்தோசமா இருக்கும் ஆனா இப்போ நீ இருக்கற நிலையைப் பாத்தா எனக்கு உசிருப் போகற மாதிரி இருக்குப்பா, இப்பப் பாடுப்பா'' என அழுத விழிகளுடன் சொன்னார் செல்லாயி. கதிரேசன் தனது அமைதியை கலைத்தான்.

உன்பக்தனாய் மாறிய கணம் பந்தம் வேண்டாமென
தன்நிலை தவறிய சிறுகுழந்தையை போன்றே
பெற்றது என்நிலை என்பதாய் கருதியே பேசினர்
உற்றவள் உயிரை அண்டம்தருமோ சொல்சிவனே.

செல்லாயி மயங்கி விழுந்தாள். கதிரேசன் அம்மா அம்மா என பதறியவண்ணம் எழுப்பினான். தண்ணீரை எடுத்து வந்து தெளித்தான். மயக்கம் தெளிந்த செல்லாயி பதறிய கதிரேசன் கண்டு ''மத்த உயிர் கலங்கறதைக் கண்டு காப்பாத்த துடிக்கிற உணர்ச்சியை விட எந்த உணர்ச்சியும் சிவனுக்கு உகந்தது இல்லைப்பா'' என்றார் அவர். சமையல் அறையில் செல்லாயி விரதம் முடிக்க வைத்திருந்த உணவை எடுத்து வந்து அன்னைக்கு ஊட்டி விட்டான் கதிரேசன். அவனது கைகள் நடுங்கியது.

(தொடரும்)

அடியார்க்கெல்லாம் அடியார் - 7

சிவபுராணம் படிக்க ஆரம்பித்தான் கதிரேசன். நீலகண்டன் சொன்ன வரியையும் அடுத்த வரியையும் மட்டும் பலமுறைப் படித்தான். பொருள் விளங்கியது போலிருந்தது. இருப்பினும் நீலகண்டனிடமே விளக்கம் கேட்டுவிடலாம் எனச் சென்றான்.


 ''தாத்தா எனக்கு விளக்கம் சொல்லுங்க'' என்றான் கதிரேசன். 

''புரியலையா, புரிந்தது சரிதானானு சோதிக்க வந்திருக்கியா?'' என்றார் நீலகண்டன்.



''புரிந்தது சரிதானானு தெரிஞ்சிக்க வந்துருக்கேன்'' என்றான் கதிரேசன். 


''என்ன புரிஞ்சிக்கிட்ட சொல்லு?'' என்றார் நீலகண்டன். 

''நான் எல்லாப் பிறப்பும் எடுத்தும் உன்னை உணரவில்லை; ஆனால் இம்முறை உன்னை உணர்ந்து உன் மனம் அடைந்தேன்'' என்றான் கதிரேசன்.



''இவ்வளவுதானா? இன்னும் இருக்கா?'' என்றார் நீலகண்டன்.


 ''அவ்வளவுதான் தாத்தா'' என்றான் கதிரேசன். 


''பாடல் முழுசும் படிச்சியா?'' எனக் கேட்டார் நீலகண்டன்.


 ''இல்லை தாத்தா'' என்றான் கதிரேசன்.


 ''இதுதான் வாழ்க்கையோட சூட்சுமம்'' என்றார் அவர். 

மேலும் அவர் தொடர்ந்தார்.



 ''மொத்த வாழ்க்கையை யாராலேயும் வாழ முடியாது, எல்லா விசயத்தையும் ஒரே பிறப்புல தெரிஞ்சிக்கவும் முடியாது. காலம் காலமா சொன்னவங்க, அவங்களுக்கு முன்னால சொன்னவங்கனு கருத்துக்களை எடுத்துக்கிட்டாலும் முழுசும் ஒருத்தரும் தெரிஞ்சிக்க முடியாது. ஒவ்வொன்னா அதன் அதன் நிலையில நாம பிறந்தாலும் நம்மால விசயத்தைத் தெரிஞ்சிக்கிறது கஷ்டம். ஆனா எல்லா விசயத்தையும் தெரிஞ்சிக்கிட்டதுபோல நாம நடந்துக்கிறதுதான் நம்மை நாமே ஏமாத்திக்கிட்டு வாழுற வாழ்க்கை. இப்படியே நாமப் பார்த்தோம்னா தெளிவுதான் பிறக்கனும், ஆனா மயக்கநிலைதான் மிஞ்சும், அதனாலதான் தெரிஞ்சிக்கிறம்னுங்கிற ஆவல் தொடர்ந்துகிட்டே இருக்கு உலகத்திலே'' என நிறுத்தியவர் சிறிது இடைவெளிவிட்டு சொன்னார். ''எந்த விசயத்திலும்''. கதிரேசன் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தான். 

''இப்பப் பாடலுக்கு வரேன், எத்தனையோ பிறப்பு எடுத்தபோதும் அவரால் பெருமானை உண்மையாய் தொழ இயலவில்லை. அதுல என்ன சொல்றாருங்கிறதுதான் முக்கியம். புல், கல் என்றெல்லாம் சொல்லி மனிதனாகவும் பிறந்தேன், அசுரராகவும் இருந்தேன். முனிவராகவும் இருந்தேன். ஆனால் அப்போது கூட உனது பாதம் எனக்குத் தென்படவில்லை. இப்பொழுது உன் பாதம் தென்பட்டு உன்னை சரணடைந்தேன் என்கிறார், இது நான் அறிஞ்சது. ஒவ்வொருத்தரும் உன்னை மாதிரி பொருள் கொள்ளலாம். அதனால மனிதராக இருப்பவர்கள் சிவனை மட்டுமே தொழ வேண்டுமென்பதில்லை. ஆனால் அவர்கள் சிவனைத் தொழும்வரை அவர்களது பயணம் தொடரும், அதுவும் முந்தைய பயணம் நினைவில்லாமல். சிவனை உண்மையாய் உணரும் வரை இந்த வாழ்க்கைப் பயணம் தொடரும். உயிருள்ள பொருளிலும், உயிரற்ற பொருளிலும் சிவனே. எல்லாம் சிவமயம். அறிந்து கொள்ளும்வரை பயணம் நிற்காது. நான் அறிந்து கொண்டேனா என்பதை என்னால் மாணிக்கவாசகர் போல் சொல்ல முடியவில்லை''


கதிரேசன் கண்கள் கலங்கியபடி நன்றி சொன்னான். நீங்கள் தமிழாசிரியரா எனக் கேட்ட கதிரேசனுக்கு ஆம் என்று தலையாட்டினார் நீலகண்டன். அவருடன் தங்கி இருந்த நான்கு நாட்களும் மிகவும் நன்றாக இருந்தது. பல விசயங்கள் சொன்னார். அன்றைய தினங்களில் பாடல் எதுவும் அவன் பாடவே இல்லை. பூஜையில் அமர்ந்தபோது பாடுவான் என எதிர்பார்த்த நீலகண்டன் அவன் பாடாதது கண்டு ஆச்சரியமடைந்தார். ஆனால் அதுகுறித்து கேட்கவில்லை. ஒவ்வொரு தினமும் தீவிர யோசனையில் இருந்தான் கதிரேசன். மதுசூதனன் ஒவ்வொரு மாலையும் கதிரேசனை சந்திப்பான். தெய்வேந்திரன் பற்றி அதிகமாக சொல்லி இருந்தான். வெள்ளிக்கிழமை வந்தது. ஊருக்குச் செல்ல வேண்டும் என நீலகண்டனிடம் சொல்லிவிட்டு கிளம்பினான். ''நிச்சயம் என்கிட்ட திரும்பி வரனும்'' என்றார் நீலகண்டன். 

புளியம்பட்டியை அடைந்தான் கதிரேசன். கதிரேசன் வரவைக் கண்டதும் கண்களில் நீர் கோர்த்தது செல்லாயிக்கு. வீட்டின் வாசல் வெளியே நின்றவன் ''அம்மா நான் சிவன் பக்தனானேன், இனி எனக்கு குடும்ப பந்தம் வேண்டாம், என்னை ஆசிர்வதியுங்கள் அம்மா'' என்றான் கதிரேசன். அந்த வார்த்தைகளைக் கேட்ட செல்லாயி பதறினார். எழு என தூக்கிவிடக்கூட சக்தியின்றி, செல்லாயிக்கு இருந்த பாதி உயிரும் போய்விடத்தான் துடித்தது. 



(தொடரும்) 

Thursday 29 April 2010

எழுதுவதை நிறுத்திப் போராட்டம்

அன்பு நிறைந்த தமிழ் எழுத்தாளர்களே, பாசம் மிக்க தமிழ் பதிவர்களே, மன்னிக்கவும் பதிவர் எழுத்தாளர்களே, உங்களுக்கு எனது முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் ஒரு புதிய அமைப்பு ஒன்றை தொடங்கி இருக்கிறேன். அந்த அமைப்பின் பெயர் என்னவெனில் ' தமிழ் தொண்டு அமைப்பு ' ஆகும்.

இந்த தமிழ் தொண்டு அமைப்பிற்கு நான் தலைவர். இந்த 'தமிழ் தொண்டு அமைப்பு' தனில் உறுப்பினராக சேருபவர்கள் விண்ணப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன், இல்லை இல்லை,  கட்டாயப்படுத்துகிறேன்.  மேலும் எவர் எவர் துணைத் தலைவர், செயலாளர், துணை செயலாளர், பொருளாளர், துணை பொருளாளர், கணக்காளர், என பல பதிவுகளுக்கு, மன்னிக்கவும், பதவிகளுக்கு தங்கள் பெயரை தாங்களே பரிந்துரை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உங்கள் பெயரை எவரேனும் பரிந்துரை செய்யவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் என்னவெனில் நமது கோரிக்கைகளை நாமே முனைந்து செயல்பட்டு நிறைவேற்றும் வரை தமிழில் எழுதாமல் இருப்பது ஆகும். இந்த அமைப்பில் இணைபவர்கள், அதாவது சேர்ந்துவிட்டீர்கள்,  இதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த முக்கிய நோக்கத்தை எவரேனும் மறந்து செயல்பட்டால் அவர்களை கடுமையாக இந்த அமைப்பு தண்டிக்கும் என்பதை கடுமையாகவே சொல்லிக் கொள்கிறேன். மேலும் இந்த அமைப்பில் நீங்கள் இணையாவிட்டால் உங்களை எழுத்தாளர்கள் என்றோ, பதிவர்கள் என்றோ ஒருபோதும் நீங்களோ எவரோ அழைத்துக் கொள்ளக்கூடாது. இதற்கு முழுமையாக தடை விதிக்கப்படும். அதையும் மீறி நீங்கள் எழுதினால் உங்கள் கணினிகள், கைகள் உடைக்கப்படும் என்பதை சற்று சீற்றத்துடன் சொல்லிக்கொள்கிறேன்.

வருகிற மே மாதம் முதல் தினமான சனிக்கிழமை அன்று நமது போராட்டம் தொடங்குகிறது என்பதை அறிவுறுத்துகிறேன். நீங்கள் அனைவரும் இந்த அமைப்பில் உறுப்பினர்கள் ஆகிவிட்டீர்கள் எனும் உணர்வு இப்போதே உங்களுக்கு வர வேண்டும். தமிழில் எழுதுவதை நிறுத்த நீங்கள் இப்போதே உங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். மொழி பெயர்ப்பாளர்கள் என்று கூறிக்கொண்டு ஏதேனும் தமிழில் எழுதினால் கூட தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். உலகம் முழுவதும் உள்ள இந்த தமிழ்  எழுத்தாளர்கள், பதிவர் எழுத்தாளர்கள் இந்த அமைப்பின் கொள்கைக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என கடுமையாகவே எச்சரிக்கப்படுகிறார்கள்.

இந்த அமைப்பின் கோரிக்கைகள் என்னவெனில்

௧. உலகம் முழுவதும் அனைவரும் தமிழ் அறிந்திருக்க வேண்டும். எழுத படிக்க கட்டாயம் தெரிய வேண்டும்.

 ௨. அனைவரும் தமிழ் எண்களை உபயோகித்து பழக வேண்டும், இனிமேல் வேறு எண்களை மறந்தும் உபயோகிக்கக் கூடாது.

௩. ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி, ஸ்பானிஷ் இது போன்ற மொழிகள் யாவும்  தமிழ் மொழிக்கு அடிமை என அந்தந்த மொழிகள் தங்களை தாங்களே அறிவித்துக் கொள்ள வேண்டும். மேலும் தமிழ் மொழி புழக்கத்தால் அனைத்து பிற மொழிகள் அழிந்து போய்விட வேண்டும்.

௪. மிகவும் முக்கியமாக அனைவரும் தங்களது பெயர்களை தமிழில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு முன் மாதிரியாக என் பெயரை நான் மாற்றி அமைத்துக் கொண்டுவிட்டேன்.

௫. தமிழ் வார்த்தைகள் மட்டுமே உபயோகிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பிற மொழி வார்த்தைகள் பேசக் கூடாது.

௫. உலகில் உள்ள அனைவரும் தமிழர்கள் எனும் எண்ணம் அனைவரின் மனதில் வேரூன்ற வேண்டும்

இப்படிப்பட்ட பல கோரிக்கைகளை, மற்ற கோரிக்கைகள் பின்னர் வெளியிடப்படும்,  நிறைவேற்றும் வரை அனைவரும் இனிமேல் தமிழில் எழுதாமல் இருக்க வேண்டும் என ஆணையிடுகிறேன். தமிழில்தானே எழுதாமல் இருக்கலாம், ஆங்கிலத்திலோ பிற மொழியிலோ எழுதுவேன் என எவரேனும் கள்ளத்தனமாக முயன்றால் அதைப் பார்த்துக் கொண்டு இந்த அமைப்பு புளியங்காய் பறித்துக் கொண்டிருக்காது என்பதை அவசியத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

எதை எதை எழுத வேண்டுமோ அதை அதை இந்த இரண்டு நாட்களுக்குள் முடித்துக் கொள்ளுங்கள். மே மாதம் முதல் தேதி இனிமேல் எழுத்தாளர்கள் தினமாக கொண்டாடப்படும். இப்படிப்பட்ட காலவரையற்ற எழுதுவதை நிறுத்தி நடத்தப்படும்  போராட்டம் மாபெரும் வெற்றியடைய செய்ய வேண்டுமென வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.

-------------------------------------------------------------------------------------------------------------
ராசு : ஏன்டா, நம்ம அண்ணனுக்கு மொக்கைன்னா என்னான்னு தெரியாதுன்னு சொல்லிட்டு இருந்தாரு.

வாசு : தெளிவாப் பேசிட்டு போயிருக்காரு, மொக்கை, சக்கைன்னுட்டு . வாடா நாம களத்தில இறங்குவோம்

ராசு : ?????

-------------------------------------------------------------------------------------------------------------

                                              தமிழ் தொண்டு அமைப்பு

நிறுவனர் மற்றும் தலைவர் :  ராதாகிருட்டிணன்
துணைத் தலைவர் : தாமோதர் சந்துரு
செயலாளர் : ஷங்கர்
துணை செயலாளர் : சுந்தரா
பொருளாளர் : சித்ரா
துணைப் பொருளாளர்: ஹேமா
பொறுப்பாளர்கள் : கதிர் (தமிழ் மொழி மட்டும்) ஜெஸ்வந்தி (பிற மொழிகள்) சங்கவி (கலைகள் மற்றும் கலாச்சாரம்) பா.ராஜாராம் (எழுத்தாளர்கள் நலம் பேணுதல்)
எழுத்தாளர்களின் தொடர்பாளர்: ரமேஷ் (தமிழ் உதயம்)
ஒருங்கிணைப்பாளர் : தீபா (கபீஷ்)
செய்தித் தொடர்பாளர்: தர்ஷினி (தோழி)
பட்டய கணக்காளர்:                                          
வழக்கு அறிஞர் :        
வங்கித் தொடர்பாளர் :                        
வங்கி : ஸ்டேட்ஸ் பேங்க் ஆப் இந்தியா
பதிப்பகம் : நயினார் பதிப்பகம் (அனுமதி பெற வேண்டும்)

---------------------------------------------------------------------------------------------------