Sunday 14 March 2010

கதை - டிவிடி விமர்சனம்

நாய்குட்டி படத்தோட விமர்சனம் மிச்சமிருக்கிறதால அதைப்பட்டி சொல்லிருவோம். நாய்க்குட்டி படத்துல விபச்சாரத்துக்கு போற பொண்ணுகளை தன்னோட சைக்கிள் ரிக்ஷாவில கூட்டிட்டு போய் விடற நாய்குட்டி பேரு வைச்சிக்கிறவருதான் படத்துல ஹீரோ. கூட்டிட்டுப் போய் ஆட்டோ, பணம்னு வளர்ந்துராரு. இப்படி அவர் வேலை செய்றப்போ அவர் பாக்குற காட்சிகள், காதலி அப்படினு படத்துலஅதிகம். ஒரு நண்பன் இந்த நாய்குட்டியை தப்பா புரிஞ்சிக்கிட்டதால அந்த நண்பனால இந்த நாய்குட்டி ஏமாத்தப்படறாரு, அந்த நண்பனால கடைசில இந்த நாய்குட்டி உயிர் பரிதாபமா போயிருது, இப்படிப்பட்ட நல்லவன் சாக காரணமாயிட்டனு அந்த நண்பனோட காதலி அந்த நண்பனை என்ன பண்றானு பல விசயங்களை சொல்லிட்டுப் போயிருக்கு நாய்குட்டியோட வாழ்க்கை. இவ்வளதான் கதை. வித்தியாசமாத்தான் இருந்திச்சி. 

ஆனா இதையெல்லாம் தாண்டி ஒரு படம் பார்க்க வேண்டி வந்திருந்திச்சி. அந்த படத்தோட தலைப்பே கதை. படம் பாத்துட்டு இருக்கறப்போ எனக்கும் ஒரு மாதிரியாத்தான் இருந்திச்சி. ஏன்னா படம் ஒரு எழுத்தாளரைப் பத்தியது. படம் பாத்துட்டே இருந்தப்போ நமக்கு இப்படி ஒரு நிலைம வந்துரக்கூடாது சாமினு கடவுளை வேண்டிட்டே இருந்தேன். எப்படி ஒரு எழுத்தாளர் தத்ரூபா ஒரு கதைய எழுதுறாருனு காட்டுறாக. தான் எழுதற கதையில தன்னோடமனைவியவே கதைபாத்திரமா மாத்தி அவருக்கு தொல்லை தரக்கூடிய எழுத்தாளாரா வலம் வராரு. 

வாழ்க்கையில கண்டதை, பார்த்ததை எப்படி எழுதற எல்லாருமே தன்னோட சொந்த சரக்கு மாதிரி எழுதி தள்ளிட்டு இருக்காங்கனு மனசில நினைச்சிக்கிட்டேன். சொந்த அனுபவங்கள கதைனு போர்வையில எழுதற ஆளுகளையும் இந்த படம் நினைவுக்கு கொண்டு வந்துச்சு. மனநிலை பாதிக்கப்படற அளவுக்கு ஒரு எழுத்து வெறி கொண்டு போகுதுனு பார்க்கறப்போ ஊருல உலாவுற பல எழுத்தாளர் சிகாமணிகள் கண்ணுக்கு வந்து போனாங்க. 

தன்னை நிலைநிறுத்திக்க எப்படியெல்லாம் வேஷம் போட்டுத் திரியறாகனு நினைச்சப்போ இந்த படம் கொஞ்சம் அதிர்ச்சியாத்தான் இருந்துச்சு. எழுத்தாளர் ரொம்பவும் உச்சத்துக்கேப் போயிராரு. காமம் பத்தியெல்லாம் தன்னோட சொந்த விசயங்களை எழுதினத படிச்ச மனைவி துடிச்சிப் போயிருரா. மனைவியோட கருவை கலைக்க திட்டம் தீட்டி அதையும் செய்து ஒரு புத்தகமா அதைப் பத்தி எழுதி கொண்டாடும் வெறித்தனம் பிடிச்சவரா இருக்காரு இந்த எழுத்தாளரு. இதைப் பார்த்ததும் ரொம்ப பயமாத்தான் இருந்திச்சி. அட பாவிகளா, இப்படியெல்லாமா புகழ், பணம் பேருக்காக வெறி பிடிச்சி திரிவாங்கனு. 

பயம் இந்த படம் கொடுத்தது இல்ல, இந்த எழுத்தாளர போலவே நேத்து ஒன்னு பேசிட்டு , இன்னைக்கு ஒன்னு பேசிட்டு திரியற எழுத்தாளருக பலரு மனசுல வட்டமிட்டு போனதுதான் பயம் கொடுத்துச்சு. படம் பாத்துட்டே இருக்கறப்போ நானு எழுதன கதையெல்லாம் என்னைப் பாத்து சிரிச்சிச்சு. நாளிதழுல படிச்ச விசயத்த கதையா மாத்தி எழுதன நிலைம, இன்னொரு கதையை தழுவி நானு எழுதன கதைனு எனக்கு ஒருமாதிரிதான் இருந்துச்சு. 

இது மட்டுமில்லாம நகைச்சுவைனு ஒரு பகுதிக்கு அடுத்தவங்க எழுதுன கதையை தன் கதைனு பேரை மட்டும் மாத்தி திரியும் ஒருத்தரும் படத்துல வராரு. இதைப் பார்த்தப்போ ஒரு வலைப்பூவுல படிச்ச கதை திருடன எழுத்தாளருனு ஒருத்தரை பத்தி எழுதிருந்த விசயம்தான் நினைவுக்கு வந்துச்சு. அதே மாதிரி 'மறு பதிப்பு' அப்படினு நானு எழுதன ஒரு கதையும் ஞாபகத்துல வந்து தொலைஞ்சிச்சி. அடுத்தவங்க எழுத்தை அப்படியே எழுதி பேரு வாங்கனும்னு எதுக்கு திரியறாங்கனு நினைக்கிறப்போ, எழுத்தை மட்டுமில்ல அடுத்தவங்க வாழ்க்கையவே திருடி வாழற மனுசங்க மனசுக்கு வந்தாக. 

இப்படியே படம் பாத்துட்டே போனா ஒரு கட்டம் திணற வைக்குது. அட கண்றாவி, இப்படியெல்லாமா, எழுதறதுக்கா ஒரு மனுசன் தன்னை தரம் தாழ்த்திக்குவானு தோணுச்சி. நாட்டு நடப்ப நினைச்சா இதெல்லாம் ஒன்னுமில்லைனு நினைக்கவும் தோணுச்சி. அப்படி போகுது கதை. படத்து சான்றிதழுல 'வயது வந்தவருக்கு' மட்டும்னு போட்டதால இளைய தலைமுறை பாதிக்கப்படக்கூடாதுனு நினைச்சிக்கிட்டாங்கனு நினைச்சிக்கிட்டேன். 

படத்தோட கடைசி கட்டம் தான் ஒரு நிமிசம் ஐயா சாமினு சொல்ல வைச்சது. படத்துல வர மனைவி எரிச்சல கிளப்புரா. ஏன் நம்மூரு பொண்ணுக எல்லாம் இப்படி அடைச்சி வைச்சமாதிரி இருக்காகனு கடுப்பா இருக்கு. புருசன்னா அவன் என்ன செஞ்சாலும் சரினு ஏத்துட்டு வாழற அடிமைப்பட்ட வாழ்க்கைய பொண்ணுக வாழறத நினைக்கறச்சே கோவம் கோவமா வருது. ஓங்கி அறையற புருசன அம்மி எடுத்து அப்படியே கொன்னு போட்டு போனாத்தான் குறைஞ்சா போகப்போகுது தோணுது. 

வாழ்க்கையெல்லாம் அன்பே இல்லாம சத்தம் போட்டே வாழற புருசனைக்கூட தூக்கி வைச்சி ஆடற அந்த தாம்பத்ய உறவோட உன்னதம் எனக்குத்தான் தெரியாமப் போச்சு போலனு நினைச்சிக்கிட்டு இருக்கறப்போ கதைய முடிச்சவிதம் அந்த மனைவிய ஓங்கி அறை விடலாமானு தோணுச்சு. ஆனா காதலுனு ஒன்னு இருக்கே அதோட வலிமையும் கொஞ்சம் வலிக்கத்தான் செய்ய வைச்சிச்சி. காதலு எப்படியெல்லாம் ஒருத்தரை நடக்க வைக்குது. ஆனா இது காதலுனு சொல்றத விட காதல் வெறி, கட்டுக்குள்ள சிக்கிக்கிட்டு விலக முடியாத வலினு ஒவ்வொரு உசுரும் இந்த உலகத்துல போராடற வாழ்க்கையில இந்த கதை தலைப்பு வைச்ச படம் கதை இல்ல, ஏதோ ஒரு மூலையில நடந்துக்கிட்டு இருக்கற ஒரு கொடூரம். அவ்ளதேன். 

Saturday 13 March 2010

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 8


அடுத்ததாக எப்படி ஒரு மூலக்கூறினை எழுதுவது? தண்ணீர் என்றால் H2 O என அறிவோம். அது போன்று ஓவ்வொரு மூலக்கூறு எழுதும்போது அதனுடைய விதியை பின்பற்றி எழுதினால் எளிதாக முடியும். 


உதாரணமாக சோடியம் தன்னால் ஒரு எலக்ட்ரான் மட்டுமே இழக்க முடியும் எளிதாக ஆக குளோரினுடன் இணையும்போது NaCl என எழுதிவிடலாம், ஆனால் இரண்டாவது குழுவில் உள்ள கால்சியத்துடன் குளோரின் இணைவதை CaCl என எழுதினால் தவறாகிவிடும். காரணம் கால்சியம் தனது வெளிவட்ட ஆர்பிட்டாலில் இரண்டு எலக்ட்ரான்கள் இழக்கும் தன்மை உடையது. எனவே இரண்டு குளோரின்கள் தேவைப்படும் ஆக CaCl2 என எழுதுவதே சரியாகும். இது போன்று சோடியம் ஆக்ஸிஜனுடன் இணையும் போது Na2O எனவும் கால்சியம் ஆக்ஸிஜனுடன் இணையும் போது CaO எனவும் எழுத வேண்டும்.

ஆக்ஸிஜனேற்ற எண்களை நினைவு கொள்வது மிகவும் சுலபம். முதலில் ஒரு அணுவானது எந்த நிலையில் நிலை பெற்று உள்ளது என்பதை எண்ணத்தில் கொள்ள வேண்டும். குரூப் 1 என்றால் +1 குரூப் 2 என்றால் +2 என செல்லும். டி பிளாக்கில் இருக்கும் அணுக்கள் பல ஆக்ஸிஜனேற்ற எண்களைப் பெற்று இருக்கும் என்பதால் அதனை மட்டும் தனியாய் பார்ப்போம். 


நமக்கு மிகவும் தேவையான உபயோகப்படுகிற மூலக்கூறுகளைப் பார்த்து விடுவோம். அதாவது பி பிளாக்கில் உள்ள அணுக்கள் குறிப்பாக ஆக்ஸிஜன் இரண்டு எலக்ட்ரான்களை பெறுவதால் பூர்த்தி நிலை அடைவதால் -2 என எண்ணை பெறுகிறது. நைட்ரஜன் இருவித நிலையை கொண்டு உள்ளது. 


இப்படி அணுக்களில் உள்ள எலக்ட்ரான்களைப் பொருத்து அதனுடைய மூலக்கூறுகள் வடிவமைப்பை பெற்றுக் கொள்கின்றன. இந்த வடிவமைப்புகள் சில வட்டத்திற்குள் அமைந்துவிடுவதால் அதிக வேறுபாடுகள் என காண்பது அரிது. இவை எளிமையான மூலக்கூறுகளுக்கு மட்டுமே என கருதுகிறேன். எப்படி வடிவமைப்பை கொண்டுள்ளது என்பதை பார்க்கும் முன்னர் சில ஆக்ஸிஜனேற்ற விதிவிலக்குகளையும் பார்த்து விடலாம்.

உதாரணமாக H2O2 இதில் பார்த்தோமானால் 


O = 2x-1 = -2 
H = 2x1 = 2


என இருந்தால் தான் இது முழுமை பெற்ற ஒரு மூலக்கூறுவாக இருக்க முடியும், ஆனால் H தன்னிடம் ஒரு எலக்ட்ரான் மட்டுமே பெற்று உள்ளது.


முழுமை பெறுவது என்பது s2p6 என்ற அமைப்பை பொறுத்தது எனச் சொல்வார்கள். ஆக்ஸிஜனுக்கு 2 எலக்ட்ரான்கள் தேவை. ஹைட்ரஜனுக்கு 1 எலக்ட்ரான் தேவை , எனவே நீர் மூலக்கூறில் ஆக்ஸிஜன் இரு எலக்ட்ரான்களை ஒவ்வொரு எலக்ட்ரான்கள் கொண்டுள்ள ஹைட்ரஜனுடன் பரிமாறிக்கொண்டு, தானும் முழுமை பெற்று, ஹைட்ரஜனும் முழுமை பெறுகிறது.


ஆக்ஸிஜன் - அணு எண் 8 2, 2,4 (2வேண்டும் முழுமை பெற)
ஹைட்ரஜன் - அணு எண் 1 1 (1 வேண்டும் முழுமை பெற)

மேலும் ஒரு உதாரணம் NaH

இது என்னவெனில் Na +1 அமைப்பு கொண்டது, H +1 அமைப்பு கொண்டது, இப்படி +1+1 எழுதினால் கூட்டுத்தொகை +2 ஆக வரும், எனவே NaH+2 என எழுதினால் மட்டுமே முறை, ஆனால் இது மூலக்கூறு, எனவே NaH என்றுதான் எழுத வேண்டும். எனவே ஆக்ஸிஜனேற்ற எண்கள் இப்படி அமைகிறது.

Na = +1
H = -1

இனி அமைப்புகள் பற்றி பார்க்கும்முன்னர் எப்படி எலக்ட்ரான்கள் அணி வகுத்துக் கொள்கின்றன என்பதை பார்த்துவிடுவோம். 

H-O-O-H இப்படித்தான் ஹைட்ரஜன் பெராக்ஸைடு மூலக்கூறு வாய்ப்பாடு அமைகிறது. இதில் எப்படி ஹைட்ரஜன் இரண்டு எலக்ட்ரான்கள் தருவது போல் அமைய முடியும் என்று பார்த்தால் சற்று கடினம்தான். ஆனால் இந்த மூலக்கூறு மிகவும் நிலைத்தன்மையுடையது அல்ல. ஒரு மூலக்கூறு என எடுத்துக் கொண்டால் மொத்த ஆக்ஸிஜனேற்ற தன்மையானது 0 வாகத்தான் இருக்கும்.

தண்ணீர் மூலக்கூறினை எப்படி எழுதுவது என்பது அறிவோம். H-O-H ஆனால் இங்கு குறிப்பிட்டது போன்று இப்படி 180 டிகிரியில் நேராக இந்த ஹைட்ரஜன் இணைந்து இருப்பதில்லை. காரணம் ஆக்ஸிஜனில் உள்ள நான்கு சுதந்திர எலக்ட்ரான்கள். பொதுவாக எலக்ட்ரான்கள் மற்ற எலக்ட்ரான்களைக் கண்டதும் விலகி ஓடும் தன்மை உடையது. அப்படி இந்த சுதந்திர எலக்ட்ரான்கள் கொண்ட ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் எலக்ட்ரான்களை சற்று விலக்கம் அடையச் செய்கிறது. ஆதலினால் இப்படி நேர்கோட்டில் அமையாமல் சற்று வளைவாக தண்ணீர் மூலக்கூறு அமைகிறது.

O
H H

இணைப்புக் கோடு அமைய உதவும் எலக்ட்ரான்கள் அதிகமாக மற்ற எலக்ட்ரான்களை தள்ளி விடுவதில்லை. சுதந்திர எலக்ட்ரான்கள் மட்டுமே அதிக அளவில் மற்ற எலக்ட்ரான்களை தள்ளிவிடும் ஆற்றல் உடையது. உதாரணமாக போரான் டிரைகுளோரைடு மற்றும் அம்மோனியாவைக் காணலாம். போரானில் சுதந்திர எலக்ட்ரான்கள் இல்லை எனவே அவை முக்கோண வடிவில் குளோரின்கள் இணைந்து காணப்படுகிறது.

Cl

B

Cl Cl

ஆனால் அம்மோனியாவில் நைட்ரஜன் சுதந்திர எலக்ட்ரான்கள் பெற்று இருக்கும் காரணத்தால் இது போன்று அமையாமல் சற்று வித்தியாசமாக அமைகிறது. இதற்கு காரணம் முன்னரே சொன்னது தான்.

N
H H
H

இதுவே கார்பனாக இருக்கும் பட்சத்தில் சுதந்திர எலக்ட்ரான்கள் இல்லாத காரணத்தால் நான்முகனாக காட்சி தருகிறது. இதனை டெட்ராஹெட்ரல் என்பார்கள். மீத்தேன் வாயுவின் அமைப்பு இது.

H

C
H H
H

இந்த அமைப்பின் கோணம் அவ்வளவு வித்தியாசப்படுவதில்லை. போரான் 120, நைட்ரஜன் 107 மற்றும் கார்பன் 104. அப்படிப் பார்க்கப் போனால் எலக்ட்ரான்கள் அத்தனை பலம் கொண்டு தள்ளி விடுவதில்லை என்றுதான் தோன்றும். ஆனால் தண்ணீர் மூலக்கூறில் நிலைமை வேறு. எனவே இரண்டு இரட்டை சுதந்திர எலக்ட்ரான்கள் இருந்தால் விலக்கும் தன்மை சற்று அதிகமே.

இதனால் என்ன பெரிய பிரச்சினை என எண்ணினால் இருக்கிறது. ஒரு மூலக்கூறினை உருவாக்கும்போது அது எப்படி எந்த அமைப்பை பெற்றால் ஒரு ரிசெப்டாரில் சென்று உட்கார முடியும் என பல அரிய விசயங்கள் இருக்கிறது. அதைப் பொருத்தே ஒரு மூலக்கூறு மருந்தாக மாறக்கூடிய சாத்தியக்கூறு இருக்கிறது. எனவே எல்லா மூலக்கூறுகளும் மருத்துவ குணம் பெற்று இருப்பதில்லை.

ஒரு சிறு மாற்றம் செய்தால் போதும் ஒன்றுமில்லா மூலக்கூறு மருந்தாகும் அதைப் போல ஒரு மாற்றம் செய்தால் மருந்தாகும் மூலக்கூறு ஒன்றுமில்லாமல் போகும். இயற்கையைப் போல் மருத்துவ குணம் வாய்ந்த மிகவும் சிரமமான மூலக்கூறுகளை இரசாயன கூடத்தில் செய்ய இயலுவதில்லை. சில தனிமங்கள் மூலக்கூறில் அமைந்து இருப்பதைப் பார்த்தால் எப்படி இதெல்லாம் சாத்தியம் என எண்ணும் அளவிற்கு பல மூலக்கூறுகள் இருக்கத்தான் செய்கிறது. சர்வ சாதாரணமாக இது போன்ற மூலக்கூறுகளை உருவாக்கிட இயற்கை தானாக தேர்ந்தெடுத்த முறை என நாம் நினைத்துக்கொண்டால் நினைத்துக் கொண்டே இருக்க வேண்டியது தான். 


Friday 12 March 2010

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 7

பல விஞ்ஞானிகள் கூடிய சபை ஒன்றுக்கு சென்றபோது எத்தனை பேர் ஒரு நோய் குறித்து பல வகைகளில் சிந்தித்து அந்த நோயைப் போக்க முயற்சி செய்கிறார்கள் என பார்த்தபோது வியந்து போனேன். இதனை அப்படியே ஒருவரிடம் சொன்ன போது ஆமாம் செல்லமுடியாத இடத்திற்கு அனைவரும் பல பாதைகளை தேர்ந்தெடுத்துச் செல்கிறார்கள் என்றார். ஒரு நிமிடம் மெளனமாகிப் போனேன். அப்படியென்றால் இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்? 

நோயைத் தீர்ப்பது என்பது தலையாய கடமையல்லவா? அதற்காக எவ்வளவு பணம் செலவாகிறது, எத்தனை பேருடைய உழைப்பு இருக்கிறது! யோசித்துப் பார்த்ததில் ஒன்று மட்டும் தெரிந்தது. இன்ன காரணம்தான் இப்படி ஏற்படுகிறது என்பது மட்டும் எவருக்கும் சரியாகப் புலப்படவில்லை. ஒருவேளை இதனால் இருக்கலாமோ? இதன் மூலமாக இப்படி நடந்து இருக்கலாம் என எண்ணிக்கொண்டே அதனை அடிப்படையாக கொண்டே ஆராய்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு நோயிற்கும் ஒவ்வொரு நோயுடன் தொடர்பு இருக்கிறது. ஒன்றை நாம் சரிசெய்யும் பொழுது அது மறுபடியும் வராமல் இருக்க வேண்டும் ஆனால் அப்படியிருப்பது இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். அனைத்து நோயிற்கும் மூலம் ஒன்று தான் என வைத்துக் கொண்டு சிந்தனை செய்வோம்! இது குறித்து ஒரு பெரும் ஆய்வு செய்ய வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே உண்டு. ஆனால் கதை எழுதுவது போல் இது அவ்வளவு எளிதான விசயம் அல்லவே. 

வேதியியலைப் பற்றி விவரித்துக் கொண்டு இருக்கும்போது இதனை எழுதுவதன் நோக்கம் தனித்தனி தனிமங்களின் கூட்டமைப்பே மூலக்கூறுகள்! அவைதான் நமது உடலில் ஏற்படும் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படை. அதனுடைய நுணுக்கம் தெரிந்துவிட்டால் எல்லாம் புரிந்துவிடும். அப்படியென்றால் இதுவரை நுணுக்கம் தெரிந்து கொள்ளப்படவில்லையா? என்றால் புரிந்து கொள்ளப்படவில்லை எனச் சொல்லலாம். இத்தனை சிக்கலான கட்டமைப்பு எப்படி உருவானது என சிந்திப்பதிலேயே பல காலங்கள் கழிந்து போனது. இனியும் கழிந்து கொண்டு இருக்கிறது. 



தனிமங்கள் தனிமங்களாகவே தனியாக இருந்து இருந்தால் இன்று இந்த உயிர் வாழும் தன்மை என்று ஒன்று வந்து இருக்க முடியாது என்பது அறிந்ததுதான். தனித்து ஆக்ஸிஜன் இருந்து இருந்தால் இன்று நாம் சுவாசிப்பது காற்றாக இருக்க முடியாது. ஆக்ஸிஜன் மற்றொரு ஆக்ஸிஜனுடன் இணைந்து ஒரு மூலக்கூறாக இருப்பதன் காரணம் நிலைத்தன்மை என்னும் வேதியியல் தத்துவம். தனித்தன்மையானது அனைத்துக்கும் பொருந்துமா என்றால் இல்லை என்றுதான் கூறமுடியும். ஹீலியம், ஆர்கன் போன்ற வாயுக்கள் தனித்தே இருக்கிறது காரணம் அவை நிலைத்தன்மை அடைய மற்றொரு தனிமத்தை அணுக வேண்டிய அவசியமில்லை. ஆக நிலைத்தன்மை மிகவும் முக்கியமா என்று பார்த்தால் இந்த தனிமங்களை எல்லாம் ஆராய்ந்துதான் பார்க்க வேண்டும் காரணம் நிலைபாடுடைய உலோகங்கள் பொதுவாக தனித்தே காணப்படுகின்றன. நிலைத்தன்மை என்பது என்ன என்றால் s2 p6 அதாவது s அறையில் இரண்டு எலக்ட்ரான்களும் p அறையில் ஆறு எலக்ட்ரான்களும் கடைசி ஆர்பிட்டாலில் இருக்க வேண்டும். 

உதாரணமாக ஹைட்ரஜன் எடுத்துக்கொண்டால் அதனுடைய அணு எண் 1 இந்த ஹைட்ரஜன் வேறு ஒரு ஹைட்ரஜனுடன் இணைந்து வெளிவட்ட ஆர்பிட்டாலில் இரண்டு எலக்ட்ரான்கள் என பூர்த்தி நிலை அடைகிறது. இங்கு இரண்டு எலக்ட்ரான்கள் தான் அதிகபட்சம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனவே s2 என்னும் நிலைப்பாடு வந்தடைகிறது. 

இது போல ஆக்ஸிஜனின் அணு எண் 8. அதனுடைய வெளிவட்ட ஆர்பிட்டாலில் 6 எலக்ட்ரான்கள் இருக்கும். வேறு ஆக்ஸிஜனுடன் இணைந்து எட்டு எலக்ட்ரான்கள் என பூர்த்தி நிலை அடைந்துவிடும். 

இந்த ஆக்ஸிஜனுக்கு தேவையான இரண்டு எலக்ட்ரான்களை ஹைட்ரஜன் ஒவ்வொரு தனிமமாக இருந்து வழங்கி அது நீராக மாறுகிறது. இது எப்படி எல்லாம் நடைபெறுகிறது என பின்னர் பார்ப்போம். 

ஹைட்ரஜன் தனியாகவும் சேர்ந்தும். 



ஆக்ஸிஜன் தனியாக 


ஆக்ஸிஜனும் ஹைட்ரஜனும் இணைந்த பின்னர்


ஒரு தனிமமானது எலக்ட்ரான்களை இழக்கும்போது அது நேர்தன்மை அடைகிறது. ஒரு தனிமமானது எலக்ட்ரான்களை பெறும்போது அது எதிர்தன்மை அடைகிறது. எலக்ட்ரான்களின் பரிமாற்றத்தால் மட்டுமே ஒரு மூலக்கூறு உருவாகிறது. இப்படி மூலக்கூறுகள் உருவாக அணுக்களின் பிணைப்பு இருவகையில் நடைபெறுகிறது. இதனை இப்படி இப்பொழுது சுருக்கி வைத்துக் கொள்வோம். 

மிகவும் யோசிக்க வேண்டிய விசயம், ஒரு தனிமமானது புரோட்டானை இழந்துவிட்டால் அந்த தனிமம் அந்த தனிமமாகவே இருக்க முடியாது! ஆகவே தான் புரோட்டான் கடவுளின் துகள் என கருதப்படுகிறது. ஒரே ஒரு புரோட்டான் கொண்டுள்ள ஹைட்ரஜனை புரோட்டான் இழக்கச் செய்தால் என்ன கிடைக்குமோ?, ஆனால் அந்த தனிமம் ஹைட்ரஜனாக இருக்க முடியாது. இதில் கதிரியக்கமுள்ள தனிமங்கள் பற்றி பின்னர் பார்ப்போம். 

எலக்ட்ரான்கள் பரிமாற்றம் எப்படி எனப் பார்ப்போம். 

சோடியம் 11 எலக்ட்ரான்கள் கொண்டது, இப்பொழுது ஒரு எலக்ட்ரான் இழந்து சோடியம் + ஆகிறது. 

குளோரின் 17 எலக்ட்ரான்கள் கொண்டது, இப்பொழுது ஒரு எலக்ட்ரானை பெற்று குளோரின் - ஆகிறது. 

அப்படி ஏற்பட்ட பின்னர் இந்த நேர்தன்மையும் எதிர்தன்மையும் கொண்ட பிடிப்பினால் இந்த மூலக்கூறு உருவாகிறது. 

அதே வேளையில் மேலே குறிப்பிட்ட படங்களைப் போல் எலக்ட்ரான்களை ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து நிலைத்தன்மை அடைந்து மூலக்கூறு உருவாகிறது. இது ஆர்பிட்டால் பொருத்து பலமான பலமற்ற பிணைப்பு உருவாகிறது. 

(தொடரும்)