Monday 22 February 2010

பதின்ம கால மனக் குறிப்பேடுகள் (2) - தொடர் அழைப்பு


2007ல் இந்தப் படத்தைக் காட்டி கவிதை எழுதச் சொன்னபோது எனக்கு நினைவுக்கு வந்தவன் பாண்டி.

தரையில் பம்பரம் சுற்றவிட்டால்
அதன் தலையில் அடிப்பான் பாண்டி
போன மாதம் பம்பரம் உடைந்து
புது பம்பரம் வாங்க காசு இன்றி
பாண்டி தந்த ஓசி பம்பரமும்
சுக்கு நூறாய் போன பின்னே
வண்ணம் பூசி வாங்கியாந்து
ஆணி அளவை நீட்டம் பண்ணி
அழகாத்தான் சுற்றுது என் கையில
அதுதரும் குறுகுறுப்புல உடல் கூசுது
இதை தரையில விட்டா
அதன் தலையில அடிப்பானோ பாண்டி
இதன் அழகுல மயங்கி நிற்பான் அந்த பாண்டி தோண்டி!

இந்த கவிதையை இப்பொழுது வாசிக்கும்போது கூட அந்த கிராமத்துத் தெரு கண்ணுக்குள் வெளிச்சம் காட்டித்தான் போகிறது. எத்தனை ரம்மியமான இரவுகள், தெரு விளக்குகளில் படித்தவர்களைப் பற்றி பெருமையாக பேசும் பூமி, தெரு விளக்குகளின் ரசனையில் விளையாடுபவர்களையும் பெருமையாக பேசாமல் கடவுள் பால் குடிக்கும் நேரம் என விரட்டி அடிக்கப்பட்ட காலங்கள் பதின்மத்தில் அச்சம் தருபவைதான்.

கோபக்காரனாகவே வாழ்ந்து வந்திருக்கிறேன் பதின்மத்துக்கு முன்னமும் பதின்மத்தின் பாதி வரையிலும். கவிதைகள், கதைகள், நாடகம் என எழுத்தில் மூழ்கிப்போக இந்த பதின்மத்தில் உறுதுணையாய் இருந்தது எனது மாமா மகன் ஜெயராம், சுப்புலட்சுமியின் அண்ணன். கதைகளும், கவிதைகளும் நான் எழுதிய பல கட்டுரைகளும் இந்த பதின்மத்தில் தான். கதைகளும், கவிதைகளையும் மீட்டு விட்டேன், கட்டுரைகள் வெல்லக்கட்டிக்காக மடிக்கப்பட்டதாக கடைக்கார அழகர் மாமா சொன்னபோது பெரும் இழப்பாகவே எனக்கு ஏன் அப்போது தெரிந்திருக்கவில்லை, ஆனால் இப்போது எழுதும்போது ஏதோ இனம்புரியாத வலி இருக்கத்தான் செய்கிறது. நிலையில்லாதவைகள் எனும் தலைப்பிட்டு எழுதிய கட்டுரை தாள்கள் கண் முன்னால் விரிகின்றன. அதனால்தான் வலைப்பூ ஆரம்பிக்கும்போது கூட எல்லாம் இருக்கும் வரை என்றே தலைப்பிட்டு இருந்தேன். இழப்பின் வலிதனை அதிக நேரம் நீடிக்க நான் அனுமதிப்பதில்லை.

பள்ளித் தோழர்களில் மறக்கவே முடியாத நபர்கள் என புளியம்பட்டி அழகர்சாமி, தற்கொலை செய்து கொண்ட பாம்பாட்டி கிரி, இலக்கணம் பேசிக்கொள்ளும் வரலொட்டி ரமேஷ்காந்தி, டி.ராஜேந்தரை பின்பற்றும் வரலொட்டி மோகன் என சொல்லிக்கொண்டே போகலாம். இதையும் தாண்டிய ஒரு நபர் உண்டு.

ஒருவன் எனது முகம் அவனது பாடப்புத்தகத்தில் தெரிகிறது என என்னை கலங்க வைத்தவன். அதன் காரணமாகவே அவன் என்னை வெறுக்கும்படி அவனை உதாசீனப்படுத்தினேன். பள்ளிவிட்டு பிரியும் வரை என்னிடம் அவன் பேசவில்லை, சில நண்பர்கள் சேர்ந்து அவனும் என்னைப் பார்க்க வீடு தேடி வந்தபோது, வீட்டின் வெளி வாசலிலேயே தண்ணீர் தந்து அனுப்பி வைக்குமளவுக்கு நான்  பிடிவாதக்காரன். என்னை அவன் பெண்ணாக உருவகம் செய்து காதலித்திருக்க விருப்பப்பட்டு இருக்கிறான் எனும் எச்சரிக்கை உணர்வு எனக்குள் வந்ததன் காரணம் எனக்குப் புரியாது, ஆனால் அப்போது அப்படித்தான் நடந்து கொள்ளத் தோன்றியது. வழி தவறிப் போகாமல் வலி ஏற்றுக்கொண்டதும் பதின்மத்தில் தான். வழி தவறிப் போனாலும் வலியின்றி இருந்ததும் பதின்மத்தில் தான்.

இந்த பதின்மத்தில் எனது தாய், தந்தையிடம், உற்றார், உறவினரிடம் கற்றுக்கொண்டதை விட சுதந்திரத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரியாதவனாகவே இருந்திருக்கிறேன், கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை முறைகேடாகப் பயன்படுத்துபவனாகவே வாழ்ந்திருக்கிறேன். சொன்ன வேலைகள் எதையும் செய்வதில்லை, ஒரு சோம்பேறியாகவே வாழப் பழகியிருந்திருக்கிறேன், எனக்குத் தெரிந்ததெல்லாம் விளையாட்டு, சாப்பாடு. பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என இந்த பதின்மத்தில் கற்றுக்கொண்டதில்லை, அது பழக்கத்திலும் வந்திருந்ததும் இல்லை.

விளையாட்டுத்தனமாகவே வாழ்ந்திருந்த அந்த பதின்ம காலங்கள் வினையாகப் போய்விடாமல் தடுத்தாட்கொள்ளப்பட்டிருக்கிறேன், எங்கெங்கு வளைந்து விட வேண்டுமோ அங்கங்கே வளைந்து இருக்கிறேன், ஒடிந்து விடும் நிலை வந்தபோதெல்லாம் தாங்கப்பட்டு காக்கப்பட்டு இருக்கிறேன். அந்த பதின்ம காலங்கள் தந்த பாடத்தினால் இப்போதெல்லாம் பதின்ம காலங்களில் இருப்போரை எச்சரிக்கையுடனே இருக்கச் சொல்கிறேன். ஒருவேளை தாங்குபவர்களும், காப்போர்களும் இல்லாமலேப் போய்விடக்கூடும்.

தெகா அவர்களுக்கு நன்றி கூறி இவர்களைத் தொடர அழைக்கிறேன்.

சுந்தரா

ஷக்திபிரபா

சித்ரா

சிவா 

சங்கவி

ஜோ அமல் ராயன் ஃபெர்னாண்டோ 

(நிறைவு பெற்றது)




பதின்ம கால மனக் குறிப்பேடுகள் (1) - தொடர் அழைப்பு

நண்பர் தெகா அவர்களின் தொடர் அழைப்பிற்கு எனது நன்றிகள். பதின்ம காலம் என்றதும், என்னவெல்லாம் நினைவுக்கு வந்து சேரும் என எண்ணிக் கொண்டபோது தனியாக எங்கேனும் அமர்ந்து அழுதுவிடலாமா என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. எனது அந்த பதின்ம காலங்கள் எனக்குத் திரும்பவும் கிடைக்கப் போவதில்லை. ஆனால் எனது மகனின் பதின்ம காலங்கள் எப்படியெல்லாம் இருந்துவிடப் போகிறது என்பதை ரசிக்க ஆவலுடன் இருக்கிறேன்.

காலத்தை மிகவும் கவனத்துடன் சரிபார்த்துக் கொள்கையில் எனது பதின்ம காலங்கள் நடைபெற்ற ஆண்டுகள் எனப் பார்த்தால் 1987லிருந்து 1993வரை எனக் கொள்ளலாம். 1987ல் எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். 1993ல் கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்துக்கொண்டிருந்தேன்.

தடுமாற்றங்களும், ஏமாற்றங்களும் பலவீனங்களும், பலங்களும், வெற்றிகளும், தோல்விகளும் நிறைந்துதான் அந்த காலகட்டங்கள் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. இதனை ஒரு குறிப்பேடுகளில் எழுதி வைத்திருந்தாலாவது எதனையும் மறக்காமல், மறைக்காமல் அப்படியே எழுதி வைத்துவிட முடியும். இப்பொழுது மனதில் எதுவெல்லாம் நினைவுக்கு வருகிறதோ அதை மட்டுமே தொகுத்திட விழைகிறேன்.

எனது சகோதரர் ஒருவர் கவிதை, தத்துவம் என குறிப்பேடுகளில் எழுதி வருவார், அதைப் பார்த்ததும் நானும் எழுத வேண்டும் எனும் ஆர்வத்தில் எங்கள் பக்கத்து ஊரில் இருக்கும் ஒலிபெருக்கி நிறுவனமான கே.ஜி.சேகர் 90 சக்தி 80 என மதிப்பிட்டது உண்டு. திருவள்ளுவர் பஸ் 80, பாண்டியன் பஸ் 60 என மதிப்பீடு போட்டது உண்டு. விளையாட்டாகவே எதையும் செய்யும் பழக்கம் அதிகமாகவே உண்டு. இப்படி எழுதியதைப் பார்த்ததும் திட்டு வாங்கிய தினம் முதல் குறிப்பேடு அவசியமில்லாத ஒன்றாகவே இருக்கிறது, இன்று வரை.

எனது பதின்மகாலத் தொடக்கத்தில் நான் மட்டும் தனியாகப் பள்ளிக்குச் செல்ல வேண்டுமென்றாகிப் போனது.  என்னுடன் சேர்ந்து படித்துக்கொண்டிருந்தபோது, ஏழாம் வகுப்பு முடித்ததும் சென்னை சென்றுவிட்ட வாசு, ஸ்ரீராம், அழகியநல்லூருக்குப் பயணித்துவிட்ட ரமேஷ். எனது நண்பர்கள். அன்று விலகியதைப் போலவே இன்றும் ஏனோ வெகு தூரத்தில் விலகி நிற்கிறோம். ஆனால் இவர்களை என்னால் ஒருபோதும் மறக்க இயல்வதில்லை, மனதில் ஓரத்தில் பயணித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

எனக்கு மிகவும் பிடித்தமான சுப்புலட்சுமி, கவிதா. இவர்கள் உடன்பிறவா சகோதரிகளின் மகள்கள் .மனதின் ஓரத்தில் இவர்களுக்கென ஒரு தனி இடம் எப்போதும் உண்டு.

பதின்ம காலத்தில் அதிகம் பழகியது கவிதாவுடன் மட்டுமே. தட்டாங்கல்லு, பல்லாங்குழி, தாயம் என எங்கள் ஊருக்கு கவிதா வரும்போதெல்லாம் கவிதாவுடன் சேர்ந்து விளையாடுவது என்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

எவரையேனும் திருமணம் பண்ணுவதாக இருந்தால் காதலித்துத்தான் திருமணம் பண்ணிக்கொள்வேன் என என்னிடம் கவிதா சொன்ன வார்த்தைகள் என்றைக்கும் மறக்காது, அதுபோலவே மண வாழ்க்கையும் அமைத்துக்கொண்டாள். அடுத்த வருடம் பதின்ம காலங்களின் தொடக்கம்.

சுப்பு பாட்டி வீட்டில் இருந்து படித்ததால் விடுமுறைக்கு மட்டுமே வந்து போவாள், ஆனால் அவளது படிப்புத் திறமை, பேச்சுத் திறமை இன்றும் மனதில் நினைவுதனை விட்டு நீங்கா சுகங்கள்.

பதின்ம காலத்தில் நடந்த பல நிகழ்வுகள் என்னை உலுக்குகின்றன. காமிக்ஸ் புத்தகக் கடை போட்டு பத்து பைசாவுக்கும், இருபது பைசாவுக்குமாய் வாடகைக்கு விட்ட ஸ்ரீதர், வீட்டினில் திட்டுகள் வாங்கினாலும் எங்களுடன் கிரிக்கெட் விளையாட வந்த கொண்டப்பன், வயது அதிகம் என பாராமல் எங்களுடன் கிரிக்கெட் விளையாடிய ரங்கசாமி, அழகர்சாமி என ஒரு கூட்டம். இவர்களை எல்லாம் பார்த்துப் பேசி பல வருடங்கள் ஆகிவிட்டது, கொண்டப்பனைத் தவிர.

களத்து மேட்டுகளிலும், தோட்டத்து வரப்புகளிலும் மணலில் உருண்டு விளையாடியபோது உடனிருந்த கண்ணன், கோலிக்குண்டு, பம்பரம், செதுக்கு முத்து விளையாட்டில் சூரனான பாண்டி, நட்புடன் பழகும் முருகேசன், சமீபத்தில் துர்மரணமடைந்த பெருமாள்... பதின்ம காலம் ஒரு தீராத ஏக்கத்தை ஏற்படுத்துகிறது, பாண்டியை நினைத்து சமீபத்தில் ஒரு கவிதை எழுதியது உண்டு. என்னால் இவர்களை மறக்க முடியாது, ஆனால் விலகிப்போய்விட்டேனே என நினைக்கும்போது  கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொள்கிறது.

இப்போதைக்கு இங்கே நிறுத்துகிறேன்... இன்னும் தொடர்வேன். என்னுடன் சேர்ந்து நீங்களும் எனக்காக அழுது விடுங்கள்.

Thursday 18 February 2010

எதற்காக எழுதுகிறீர்கள்?

எழுத்தாளர்கள் அல்லாத ஒவ்வொருவருக்கும் சொந்த அலுவல்கள் இருக்கின்றன, அதற்கெல்லாம் நேரம் ஒதுக்கிய பின்னர் எழுத்துக்கும், வாசிப்பதற்கும் என நேரம் ஒதுக்கி ஒருவர் பதிவு இடுவது என்பது வாசிப்பது என்பது அத்தனை எளிதானதும் அல்ல. விசயங்கள் அறிய வேண்டியிருக்கிறது, சரியான முறையில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுத வேண்டியிருக்கிறது. சொந்த படைப்புகள், பிறர் தந்த படைப்புகள் என்பது பதிவிடும் ஒவ்வொருவருக்கும் அவரவர் மனநிலையில் உயரிய ஒன்றுதான். 

மேலும் பதிவுகளிடும் பதிவாளர்களுக்கு உற்சாகமும் ஊக்கமும் தேவைப்படுகிறது என்பது பொதுவாக ஒப்புக்கொண்ட வாதமாக இருந்தாலும் எழுதுபவர் எப்பொழுதுமே தன்னை உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டும், ஏனெனில் உற்சாகம் என்பது பிறர் மூலம் வந்தால், பிறர் இல்லாத பட்சத்தில் உற்சாகம் தொலைந்து போய்விடும். எழுதும் எழுத்து என்றாவது எங்காவது எப்படியாவது பயன் அளிக்கும் என்ற திடகாத்திரமான நம்பிக்கை ஒன்றே தொடர்ந்து எழுத்துப் பணியில் ஒருவரை இருக்க வைக்கும். 

ஒரு பதிவரின் கருத்துக்கு மாற்று கருத்துத் தெரிவிக்கும்போது அந்த பதிவரின் சிந்தனைக்கு எதிர்மறையான சிந்தனை ஒன்று எழுந்துவிடுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. அவ்வாறு எழும்போது தனது சிந்தனையை அந்த பதிவர் சரியே என நிரூபிக்கும் நிலைக்கும், எதிர்மறை சிந்தனையாளர் தனது சிந்தனையை சரியே என நிரூபிக்கும் நிலை ஏற்படும் பட்சத்தில் மாற்றுக் கருத்து என்பது மறைந்து கருத்து வேறுபாடு நிலவுகிறது. ஆனால் எழுதுகின்ற பதிவர்கள் மனநிலையில் 'அட அவருடைய கருத்தும் பரவாயில்லையே, ஆனா நம்ம கருத்து இது' என எண்ணம் எழும்போது அங்கே கருத்து வேறுபாடுத் தோன்றாது. ஒரு கருத்துக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம் என எண்ணம் எழும். 

மாற்றுக் கருத்துக்கும், கருத்து வேறுபாடுக்கும் என்ன வித்தியாசம் எனில் ஒருவர் கொண்ட கருத்தினில் வேறுபாட்டு நிலையை எடுத்துக் கொண்டு எழுதியவரின் நிலையை சந்தேகிப்பது, எழுதியவரை குற்றம் சொல்வது என தனிமனிதரின் செயல்பாடுகளை குறைத்து மதிப்பிடுவது போன்ற நிலையை கருத்து வேறுபாடு உருவாக்கிவிடும். ஆனால் மாற்றுக் கருத்து என வரும்போது அங்கே அத்தகைய சூழ்நிலை தவிர்க்கப்பட்டு விடுகிறது. தனிமனிதரின் செயல்பாடுகள் குறித்து எந்த கேள்விக்குறியும் எழுவதில்லை. 

பொதுவாக எதனையும் சொந்தப் பிரச்சினையாக நினைக்கும்போது செயல்பாடுகள் குறித்து வருத்தம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நமது எண்ணத்துக்கு எப்படி மற்றொருவர் மாறிப் போகலாம் என எண்ணம் எழும்போது அங்கே எப்படியாவது நமது எண்ணமே சரி என்கிற தோற்றத்தை உருவாக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். 

ஒரு கருத்தினை எடுத்துக்கொள்ளும் விதம் பொருத்தே ஒவ்வொருவரின் எண்ண ஓட்டம் அமைகிறது. மாற்றுக் கருத்து உட்பட. ஆனால் இவர்னா இப்படித்தான் என்கிற மனப்பக்குவம் ஒவ்வொரு பதிவரிடமும் இயற்கையாகவேத் தோன்றுவதால், குறிப்பிட்ட பதிவர் என்ன எழுதினாலும் அந்த எழுத்தின் தன்மைக்கு ஒரு முலாம் பூசப்பட்டு காட்சி அளிப்பதை எவராலும் மறுக்க இயலாது. 

எழுத்துகள் 

சாம்ராஜ்யங்கள் கட்டவும் அழிக்கவும் உதவின,
விடுதலை வேட்கையைத் தூண்டின, 
பாலியல் எண்ணங்களை பரவசப்படுத்தின, 
எதிரிகளை உருவாக்கின,
நண்பர்களை கொண்டு வந்து சேர்த்தன,
வரலாறை திரித்தும் திரிக்காமலும் பேசின, 
கற்பனைகளை, மந்திரங்களை பிரபலமாக்கின
ஆராய்ச்சிகளுக்கு அடித்தளம் போட்டன
இறைத்தூதர்களுக்கும் ஒரு மொழியாகின
மனதின் பிம்பங்களாயின
மரணமில்லா நிலையும் பெற்றன

இப்பொழுது சொல்லுங்கள் நீங்கள் எல்லாம் எதற்காக எழுதுகிறீர்கள்?