Monday 14 September 2009

அடுப்பங்கரையில் அம்மா!

சேவலை எழுப்பிவிட்டு
முன்வாசல் துடைத்து தெளித்து
அழிந்துவிடுமென தெரிந்தும்
அளவு புள்ளிகளிட்டு சித்திரம் வரைந்து
வானத்து சூரியன் வருமுன்னே
நெருப்பு சூரியன் உதிக்க வைத்து
நெடுநேரமாய் அங்குதான் நிற்பாள் அம்மா.

அடுப்பினை ஊதினாலும்
புகைபடியாத சுவாசம்
"புகைபிடியாத" மன நேசம்
கண்களன்றி காதலித்து
காதலினால் கருத்தரித்து
"கருவறை சுத்தம்"
ஒருபோதும் செய்ததில்லை
"ஒவ்வாத பானம்" நுகர்ந்ததில்லை
ஒழுக்கமே வாழ்க்கையென
போற்றி வாழும் அம்மா
ஊர் எல்லை தாண்டியதில்லை
எங்கள் ஊர் காவல் தெய்வம் போல.

வீணான கனவுகள்
கலைய விருப்பமின்றி
உறங்கி நடிக்கும் என்
நடிப்புத் தூக்கம் துக்கம் கலைத்து
கல்வி கலை இசையென கற்றிட செய்து
இம்மியளவும் என் வாழ்க்கை
சலித்துபோய் விடாது
தினம்தோறும் எனக்காக வாழும் அம்மா.

ஊரெல்லாம் சுற்றி
காணாத மனிதர்கள் கண்டு
கையில் நடைபேசியுமாய்
காலில் கணினியுமாய்
அலைந்து திரிந்து வீடு திரும்புகையில்
அன்போடு அரவணைக்கும் அம்மா
அறிகின்றேன் உண்மையான அன்பும்
நல்ல ஒழுக்கமும்தான் வாழ்க்கையும் கடவுளும்.

யோசிக்கின்றேன்
இனிவரும் காலத்தில் அன்புக்காக என்பிள்ளை
யாருமில்லா அடுப்பங்கரையில்
துயரம் தாங்கி உலவ வேண்டும்
நானும் என் மனைவியும் வீடு சேரும் வரை.

கருத்துகளும் அதன் சுதந்திரமும்

வலைப்பூக்களில் எழுதுவோர் அனைவருக்கும் கருத்துக்களை வெளியிட சுதந்திரம் உண்டு, அதே வேளையில் கருத்துக்களை எவ்வாறு வெளியிட வேண்டும் என்கிற ஒரு வரைமுறையும் இருக்கிறது? என்பதை அனைவரும் அறிவோம்.

கருத்துக்களைப் பொருத்தவரை கருத்துக்களை வெளியிடுபவரின் மனநிலை, கருத்துக்களைப் படிப்பவரின் மனநிலை என இரண்டு விதமாகப் பிரித்துக் கொள்ளலாம். கருத்துக்களை வெளியிடுபவர் எந்த சூழ்நிலையிலும் சரி, எல்லாச் சூழ்நிலையிலும் சரி தனது கருத்துக்களுக்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதை எவரும் மறுக்க இயலாது.

கருத்துக்களை எடுத்துக்கொள்வது என்பது படிப்பவரின் மனநிலையைப் பொருத்தே அமைகிறது, அதாவது அந்த நேரத்தில் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதைப் பொருத்தும் அமைகிறது. படிப்பவர் ஒவ்வொருவரின் மனநிலைக்கு ஏற்ப கருத்துக்கள் எழுதுவது என்பது எளிதான காரியமில்லைதான் ஆனால் கருத்துக்களை திறம்பட எழுதும் விதம் உண்டு.

மேலும் ஒருவரால் வெளியிடப்படும் கருத்துக்களினால் ஏற்படும் மனஸ்தாபங்கள், அதனால் வரக்கூடிய மன உளைச்சல்கள் என கருத்தினை வெளியிடுபவரும், கருத்தினால் பாதிக்கப்படுபவரும் அடைகிறார் என்பதில் இரு கருத்து இல்லை. இதன் விளைவாக அவ்வப்போது தலைகாட்டும் பிரச்சினைகள் பெரிய விவாதங்களை ஏற்படுத்தி வருவது ஒருவரது எழுத்தின் நோக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் அமைந்துவிடுகிறது.

'குழப்பமில்லாது இருப்பின் தெளிவுக்கானத் தேடல் அவசியமில்லை' என்பதை அனைவரும் அறிவோம். பல விசயங்கள் குழப்பம் தரக்கூடியதாக இருக்கும் காரணத்தினாலேயே தெளிவுக்காக விசயங்கள் விவாதிக்கப்படுகின்றன. ஒரு மாறுபட்ட எண்ணம் மற்றவர் மனதில் எழுவதற்கு நமது கருத்துக்களும் காரணம் என்பதும் உண்மையே.

பொதுவாக எவரையும் புண்படுத்த வேண்டும் எனும் நோக்கத்தில் எவரும் பதிவுகளை இடுவதில்லை. கருத்துச் சுதந்திரத்தை நாம் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதை பரிசீலனை செய்வோம். 'நமக்குச் சரியெனத் தெரிவது பிறருக்குத் தவறாக இருக்கலாம்' நமக்குத் தவறெனத் தெரிவது பிறருக்குச் சரியாக இருக்கலாம்' எனும் உண்மையை உணர்ந்து கொண்டு விவாதத்தைத் தவிர்த்துவிட்டு கலந்துரையாடினால் அனைவரும் மகிழ்வுடன் இருப்பார்கள், நல்ல நல்ல விசயங்கள் கற்று மகிழலாம்.

எழுத்தின் நோக்கம் வெல்லட்டும், பல சிறந்த எழுத்தாளர்கள் உருவாகட்டும்!

Sunday 13 September 2009

தாவரமே ஆதாரம்


முளைக்கும் விதைக்கு
ஒளித் தேவையில்லை
விழித்துக் கொள்ளும்
முளைத்து வந்தவுடன்

கோள்கள் வெடித்து சிதறியதும்
கரியமில வாயுதனை
ஆக்ஸிஜனாய் மாற்றி
உயிரின் ஆதாரமாய்
உரைத்து நிற்கும் இலைகள்

வேருக்கு தெரியாது
உணவு தயாரிக்க
தண்ணீரை உலைக்குத்
தருவதுப் போல்
தாதுவும் தந்து
இலை தயாரிக்க
வேர் பார்த்து ரசிக்கும்

ஒளியும் நீரும் இல்லையெனில்
ஒன்றுக்கும் ஆகா தாவரம்
உணர்ந்து கொள்ளுங்கள்
உலகின் வாழ்வுக்கு
தாவரமே ஆதாரம்.