Wednesday 2 September 2009

சனிப்பெயர்ச்சி பலன்கள் படிச்சா பயம் வருமா?

என்ன சொல்வது? எவ்வளவு தூரம் விஞ்ஞானம், தொழில்நுட்பம் என முன்னேறினாலும், நாடுவிட்டு நாடு போனாலும் இந்த தின பலன்கள், வார பலன்கள், மாத பலன்கள் ஆண்டு பலன்கள் படிப்பதில் இருக்கும் சுகமே அலாதிதான். அதுவும் குருப்பெயர்ச்சி பலன்கள், சனிப் பெயர்ச்சி பலன்கள் பற்றி சொல்லவே தேவையில்லை. அவற்றின் முக்கியத்துவம் குறித்து தனிப் புத்தகங்கள் இருக்கக் கூடும்.

இதில் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்பதை விட அப்படி என்னதான் எழுதி இருக்கிறார்கள் எனப் படிப்பதில் கொஞ்சம் ஆர்வம் அதிகமே உண்டு. நமது ராசியைப் போலவே உலகில் எத்தனையோ பேர்கள் இருக்க, அத்தனை பேரும் ஒரே மாதிரி வாழ்க்கை வாழாமல் இருப்பது தெரிந்தும் வாசிப்பது என்பதை மட்டும் விடத் தோணுவதில்லை. அதுவும் எழுதியதை வாசித்துவிட்டு அதற்கடுத்து என்ன நடக்கிறது என்பதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் வாழ்ந்து கொண்டே இருப்பதுதான் வழக்கமாக இருக்கிறது.

விளையாட்டுச் செய்திகள் படித்துவிட்டு கண்கள் நோக்குவது என்னவோ இன்றைய பலன்கள் செய்தியைத்தான். செய்தியில் உண்மையில்லாமலும் இருக்கக் கூடும். மேலும் ஒரு நண்பர் சொன்னது என்னவெனில் எந்த ராசி எனத் தெரியாமலே ஒரு ராசியை எடுத்துக்கொண்டு இதுதான் நம் ராசி எனப் படித்தாலும் கூட சரியாகவே இருக்குமாம். ஆனால் ராசி தெரிந்த காரணத்தினால் பிற ராசிகளைப் படிக்கும்போது அப்படி எனக்குத் தோன்றவில்லை. மனைவியின் ராசிக்குத் தவிர பிற ராசிகளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதில் படிப்பதில் ஒரு பிடிப்பும் இருப்பதில்லை, இருப்பினும் எழுதியவரின் மனநிலை என்ன என அறிந்து கொள்ள அனைத்து ராசிகளையும் ஒரு கண்ணோட்டம் விடுவதுண்டு.

இப்படி சனிப்பெயர்ச்சி பலன்கள் படித்தபோது பல ராசிகளுக்கு ஒட்டுமொத்தமாக சரியில்லை எனும் வகையில் எழுதப்பட்டிருப்பதைப் படிக்க நேர்ந்தது. அடடா, எழுதுபவர்கள் நம்பிக்கையை வளர்க்கும் வண்ணம் எல்லாமே நன்றாக நடக்கும் என எழுதியிருந்தால் படிப்பவர்களுக்கு ஒருவித மன சந்தோசம் ஏற்படுமே என்றுதான் தோணியது. வேறு எவரேனும் என்ன எழுதியிருக்கிறார்கள் என்றுப் பார்த்தால் ஆம் ஒருவர் எழுதி இருந்தார், சனி சங்கடம் தருவார் என பயப்பட வேண்டாம் எனும் தொனியில் அனைத்து ராசிகளுக்கும் அமைந்து இருந்தது. எப்படியிருப்பினும் படிக்கும்போது இருக்கும் சுவாரஸ்யம் அதிகமே.

'மடியில் கனமிருந்தால் வழியில் பயம்' என சொல்வார்கள், அதுபோல நாம் முறையான வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் இடப்பெயர்ச்சியாளர்களால் எதுவும் நேராதுதான், ஆனால் முறையான வாழ்க்கையையா நாம் தேர்ந்தெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என கணப் பொழுது யோசித்தால் இந்த இடப்பெயர்ச்சியாளர்கள் இடம்பெயராமலே இன்னலுக்கு நம்மை ஆட்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்பது தெரியும் தான். இப்போ சொல்லுங்க, சனிப்பெயர்ச்சி பலன் படிச்சாத்தான் பயம் வருமா?

ஆவலுடன் ராசிகளைப் படிக்க நினைத்து இருப்பீர்கள், அதனால் நான் விரும்பிப்படிக்கும் மாத ராசி பலன்களின் இணைப்பு இதோ. இவர் எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும், மாதம் ஒரு முறை மறக்காமல் படித்துவிடுவது உண்டு. நீங்களும் படித்துப் பாருங்களேன்.

எல்லாம் தெரிந்தது போல்

எல்லாம் தெரிந்ததுபோல் இருக்கிறது
மது அருந்தும் பழக்கத்தால்
கல்லீரல் கரைபட்டு போகும்
இதயம் இடியென துடிக்கும்
புகை பிடித்து பார்ப்பதால்
நுரையீரல் விரைத்து நோகும்
உதடு மட்டுமின்றி
ரத்தம் கூட தன் நிறம் மாற்றும்
அளவுக்கும் நேரத்திருக்கும்
உட்படாத உணவு
அடிவயிறை அரித்து பார்க்கும்
கவனமின்றி போயின்
கலை இழந்த கண்களும்
வழுவிழந்த பல்லும் எலும்பும் மிச்சம்
தண்ணீர் இல்லா சிறுநீரகம்
பிணைய கைதியாய்
நல் எண்ணம் இல்லையேல்
மூளை முரண்டு பிடிக்கும்
மனம் மரத்து போகும்
உண்மை ஒழுக்கம் இல்லா வாழ்க்கை
கற்பில்லாத காதல்
உயிரை உருக்குலைய செய்யும்
ஏனோ எல்லோர்க்கும்
எல்லாம் தெரிந்தது போல்
மட்டுமே இருக்கிறது.

ஆசைப்படு அவதிப்படாதே
ஆசை துன்பம் தருமெனில்
துயரபடாமல் உயரம் ஏது?
கர்வப்படு கருணை இழக்காதே
பொறாமைப்படு பொசுங்கிப் போகாதே
இரக்கபடு இழந்து நிற்காதே
கோபப்படு கொன்று விடாதே
காதலிக்க கற்று கொள்
கரைந்து போகாதே
சாந்தமாக இரு செத்து போகாதே
ஏனோ எல்லோர்க்கும்
எல்லாம் தெரிந்தது போல்
மட்டுமே இருக்கிறது
எவையும்
செயல்படுத்த முடியாமல்
புதைந்துபோய் கிடக்கிறது.

Sunday 30 August 2009

இலங்கை மாநகரம்

இதிகாச காலத்திலேயே
இன்னலுக்கு உட்பட்ட நகரம்
நாட்கள் பறந்த பின்னரும்
தொடரும் இன்னல்கள்

நிறமெல்லாம் ஒன்று தான்
நிலமெல்லாம் ஒன்று தான்
வினையேன் வந்து தொலைந்தது
வேறுபட்ட மொழி கொண்டதாலா
வேற்றுமை கண்ட இனத்தினாலா
புத்தர் தந்த எண்ணத்தில்
அன்பும் கருனையும்
தொலைந்து போனதாலா
கண்ணீர் விட்டு கதறுகின்றேன்
காக்கும் கடவுள் அவதரிப்பாராக.

தென்றல் சுதந்திரமாய்
உலாவிடும் தூய நகரம்
தீங்கினை நினையாது
தென்னை காய்த்து குலுங்கும்
கடலின் அலைகள் முத்தமிட்டு
கரையினை கட்டி தழுவிடும்
காதலர்களின் தலைநகரம்

புன்னகை சிந்தி
விருந்தோம்பலின் வெளிச்சமாய்
விளங்கிடும் புண்ணிய நகரம்
எல்லாம் கனவாய் இருக்கிறது
நேற்றைய தினமெல்லாம்
கனவாய் போகுமெனில்
இன்றைய தினமும்
இந்நகரத்தில் கனவாய் போகாதா

பூஞ்சோலையாய் இருந்த பூமியில்
பூக்களை கருக செய்வதும்
உரிமையுள்ள பங்கினை வேண்டி
உரக்க குரல் தரும்
உணர்வுகளை உரைய வைப்பதும்
கல்லிலும் மண்ணிலும் கட்டி புரண்டு
நிலவின் நிழலில்
கதைகள் கதைத்து
கனவெல்லாம் வளர்த்து
வாழ்ந்த நல்ல உள்ளங்களை
செந்நீர் வடிக்க செய்வதும்
இருக்கும் இனிய இடம் விட்டு
இன்னல் தரும் இடம் நோக்கி
விடை காணும் மனிதருக்கு
இது விதியா
அறிவில்லார் தரும் நீதியா.

அமைதி ஒரு நாள் வரும்
ஆயுதம் ஏந்தி
அவதியுரும் நாள் தொலையும்
அன்புடன் கதைத்து
ஆராத துயரம் தீரும்
கண்கள் காணும் வேற்றுமை
கடலில் கரைந்து போகும்

கரும்புகையில்லா வானத்தில்
மேகங்கள் கவிதை பாடி செல்லும்
மரத்தின் கிளையில் கனிகள்
பறவைகளுக்கு காத்து நிற்கும்
வளரும் பயிர்களுக்கு
வீரமிக்க செயல்கள் சொல்லி
வலிமையை கற்பிக்கும்
வாழ்வு நோக்கி
இன்னலையெல்லம் தாங்கி நின்று
இன்பத்தை இரு கைகளால்
அணைக்க வேண்டி
கண்ணீர் துடைக்க வழியின்றி
கலங்கி நிற்கும்
இலங்கை மாநகரம்
அமைதியின் வழியில்
சிறந்து விளங்கும்
உயிர் பெற்றதின் அர்த்தம் விளங்கும்.

------
எழுதிய ஆண்டு 2006!!!