Monday 3 August 2009

நட்பு தினம்னா என்ன?

நண்பர்கள் தினம் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டதை வலைப்பூக்களில் கண்ணுற்றேன். எனது ஒரு பதிவில் பின்னூட்டமாக சந்ரு அவர்கள் நண்பர்கள் தின வாழ்த்துகள் சொல்லிச் சென்றார். நானும் அதே பின்னூட்டத்தில் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள் சொல்லிக்கொண்டேன்.

ஆனால் வருடப் பிறப்பினைக் கொண்டாடும்போது சொல்லிக்கொள்ளப்படும் வாழ்த்துகளைப் போல் அல்லாமல் எவருமே எனக்கு நண்பர் தின வாழ்த்துச் சொல்லவில்லை, நானும் எவருக்கும் நண்பர் தின வாழ்த்துச் சொல்லிக்கொள்ளவில்லை. ஆக எனக்கு நண்பர்கள் இல்லையா? அல்லது நான் நண்பர்களைப் புறக்கணிக்கிறேனா?

முத்தமிழ்மன்றத்தில் நண்பர்கள் தின வாழ்த்துப் பகிர்ந்து கொள்ளப்படும், ஆனால் இம்முறை எவருமே அந்த தினத்தை நினைவில் வைத்துக்கொள்ளாத ஒருத் தோற்றத்தை இன்று சென்றுப் பார்த்தபோது அறிந்தேன். நானும் மெளனமாக சில பதிவுகள் வழக்கம்போல் படித்துவிட்டு, பதிவிட்டுவிட்டு வெளியேறிவிட்டேன். நண்பர்களை இந்த தினம் மட்டுமே நினைவு கொள்தல் அவசியம் இல்லை என கருதுகிறோமோ? அல்லது இதுவும் ஒரு நாள் சடங்கு முறையில் சேர்க்கப்பட்டுவிட்டதே எனும் வருத்தமா?

நண்பர்கள் எனப் பலரைச் சேர்த்து மகிழும் வேளையில், பகைவர்களாக அவர்கள் மாறிவிடக்கூடாதே எனும் அளவிலா பயம் எனக்கு வந்து சேர்வதுண்டு. எப்போதும் சற்றுத் தள்ளி நின்றேப் பழகிக்கொண்டேன். நட்புடன் சேர்ந்து வரும் எதிர்பார்ப்புகள் என்னை ஓரமாகவே நிற்கச் சொன்னது.

நட்பு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பு கூட நட்பில் ஒருவித ஏமாற்றத்தைத் தந்துவிடுகிறது. விசுவின் மக்கள் அரங்கத்தில் விசு சொன்னார் எனது நண்பர்களைப் பார்த்துப் பல காலம் ஆகிவிட்டது. அவரவர் வேலை, குடும்பம் என்றே நாட்கள் செல்கிறது. திருமணம் ஆன பின்னர் வேலை, குடும்பம் என நட்பு சற்று தள்ளியே தான் நிற்கிறது.

என்னுடன் படித்த, பழகிய நண்பர்கள் எனது நினைவலைகளில் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறார்கள், ஆனால் தொடர்பு கொள்வதுதான் குறைந்துப் போய்விட்டது. எப்போதாவது பேசிக்கொள்வதா நட்பு என்பது போல் ஆகிவிட்டது.

இந்த நட்பு தினத்தை எனது மனைவியிடமும், ஒன்பது வயது நிரம்பிய மகனிடமும் சொன்னேன். புன்னகைத்தார்கள். சில மணி நேரங்கழித்து எங்கள் மகன் என்னிடமும், என் மனைவியிடமும் கை குலுக்கி நட்பு தின வாழ்த்துகள் சொன்னான். நானும் எனது மனைவியும் நட்பு தின வாழ்த்துகள் பகிர்ந்து கொண்டோம்.

எங்கெங்கோ இருக்கும் எங்கள் நண்பர்களும் மகிழ்ந்து இருப்பார்கள், என்னுடன் வாழும் இந்த இரண்டு அருமையான நண்பர்களை நினைத்து.

தேடினால் கிடைத்துவிடும் - 4

எத்தனையோ வியாபாரம் செய்து இருந்தாலும் இதுவரை மீன் வியாபாரம் செய்தது இல்லை. எனவே மீன் வியாபாரம் செய்து அதில் கிடைக்கும் பணத்தைக்கொண்டு தனது பயணத்தைத் தொடரலாம் எனத்திட்டமிட்டார். விடுதியிலிருந்து விடைபெற்றுக்கொண்டு தன்னிடம் இருந்த பணத்தில் தூண்டில், உணவுப் பண்டங்கள் என வாங்கிக்கொண்டார். கிருஷ்ணா நதியினை நோக்கி நடந்தார். நடந்து சென்றபொழுது பேருந்தில் இவருடன் வந்த நபர் எதிர்பட்டார்.

அவரிடம் விசாரித்தபொழுது அவரது நண்பர் இடமாற்றல் ஆகிவிட்டதாகவும், அங்கிருப்பவர்களுக்கு அவர் எங்கு சென்றார் எனத் தெரியாது என கூறியதாகவும் தான் திரும்பவும் சொந்த ஊருக்குச் செல்ல நினைத்ததாக கூறினார். கோவிந்தசாமி அவரிடம் காசிக்கு வர விருப்பமா எனக் கேட்டார். ஆனால் அதற்கு முன்னர் சில வியாபாரங்கள் செய்ய வேண்டும், பணம் சேர்க்க வேண்டும் என சொன்னார். இனி தனக்கு யார் உதவப் போகிறார்கள் என எண்ணிக்கொண்ட அவர், அவரது பெயரை எழுதினால் ஒரு வரிக்கு மேல் வரும் என்பதால் சிவபாலன் என சுருக்கப் பெயரை நாம் குறித்துக் கொள்வோம், கோவிந்தசாமியுடன் வருவதாக சம்மதம் சொன்னார்.

கிருஷ்ணா நதியின் ஓரத்தில் சென்று அன்றைய தினம் எல்லாம் மீன்கள் பிடித்தார் கோவிந்தசாமி. நிறைய மீன்கள் சிக்கின. இதனை நல்ல விலைக்கு விற்று விடலாம் என சற்று தள்ளி சென்று ஒரு வியாபார தளத்தில் மீன்கள் விற்கத் தொடங்கினார். இவரது வியாபார நுணுக்கம் கண்டு சிவபாலன் ஆச்சரியம் அடைந்தார். மீன்கள் மள மளவென விற்கத் தொடங்கின. போட்ட முதல்தனை விட பலமடங்கு லாபம் வந்தது. அங்கிருந்த வியாபாரிகள் இவரை வித்தியாசமாகப் பார்த்தனர். சிவபாலன் சிலரிடம் விளக்கம் சொன்னதும் அவர்கள் எதுவும் சொல்லவில்லை.

ஏதாவது விடுதியில் தங்கலாம் என சொன்னபோது, நதியைக் கடந்தால் விவேகாநந்தசுவாமி ஆஸ்ரமம் இருக்கிறது அங்கு சென்று இன்று இரவை கழிக்கலாம் என்றார் சிவபாலன். கோவிந்தசாமியும் சரியென கூறிவிட ஆஸ்ரமம் அடைந்தார்கள். அப்பொழுது இருட்டி விட்டது. இவர்களை ஆஸ்ரமத்தில் தங்க அனுமதித்தார்கள். அந்த ஆஸ்ரமத்தில் சிறியவர் முதற்கொண்டு வயதானவர்கள் வரை இருந்தார்கள். குருகுலம் போன்ற பள்ளியும் இருந்தது. தோட்டமும் அமைத்து இருந்தார்கள். முந்நாளில் எல்லாம் வழி நெடுக சத்திரம் கட்டி வைத்திருப்பார்களாம், இது போல யாத்திரை செல்பவர்களுக்கு உணவும் ஓய்வெடுக்க இடமும் என மிக சிறப்பாக இருந்து இருக்கிறது. இப்பொழுது அது போன்ற சத்திரங்கள் காண்பது குறைவு. இது போன்ற ஆஸ்ரமங்கள் ஆங்காங்கே இருக்கும் போலும் என கோவிந்தசாமி தனது நினைவை ஓடவிட்டார்.

மறுநாள் காலையில் மீன் பிடிக்கச் சென்றார்கள். நல்ல மீன்கள் சிக்கியது, நல்ல வியாபாரமும் நடந்தது. சிவபாலன் கோவிந்தசாமியை மெச்சினார். சிவபாலனின் வயது 48 தான். காசிக்குப் போறோம் இப்படி மீன் வித்த காசுல போறொமே என்றார் சிவபாலன். செஞ்ச பாவத்தில இந்த பாவத்தையும் சேர்த்து கரைச்சிரலாம் என்றார் கோவிந்தசாமி சிரித்துக் கொண்டே. அங்கிருந்து புகைவண்டி பிடித்து சீர்டி சாய்பாபா ஆலயம் வந்தார்கள். சீர்டி சிறப்பினை கதை கதையாகச் சொன்னார் சிவபாலன். தான் சீர்டியிலே இருக்கப்போவதாக சிவபாலன் சொன்னதும் கோவிந்தசாமி ஏமாற்றத்துடன் தனது பயணத்தை நிறுத்தாமல் தொடர்ந்தார். சிவபாலனின் துணை கோவிந்தசாமிக்கு மிகவும் உதவியாக இருந்தது.

கோடியலூரிலே அவரது நினைவு சுற்றியது. சில மாதங்களுக்கு முன்னர் வசந்தராஜ் தன்னிடம் அவரது மகளுக்கு வரன் பார்ப்பதாகவும், பண உதவியும் கேட்டதும் நினைவுக்கு வந்தது. இந்நேரம் தனது வீட்டில் வைத்து வரன் பார்த்து நிச்சயதார்த்தம் செய்து இருப்பார்கள் என எண்ணினார் கோவிந்தசாமி. இப்படி வீடும் தோட்டமும் தனது என்ற எண்ணம் தனக்கு வராமலிருக்க மிகவும் போராடினார்.

கோடியலூரில் வசந்தராஜ் மகள் கோமலாவுக்கு அரசு பேருந்து ஓட்டுநர் வரனாக அமைந்தார். திருமணத்தை கோவிந்தசாமி வரும் வரை தள்ளி வைக்கலாம் என எண்ணிய வசந்தராஜ் திருமணத்தை சற்று தள்ளி வைக்கலாம் எனக் கேட்டார். வரதட்சிணையை சரியாக பேசியவர்கள் தள்ளி வைக்க இயலாது என கூறவே கோவிந்தசாமியிடம் கேட்ட உதவித்தொகையை குறித்துக் கொண்டு எடுத்துக் கொள்ளத் திட்டமிட்டார் வசந்தராஜ். அடுத்தமாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

கோவிந்தசாமி புவனேஸ்வரை வந்து அடைந்தார். ஒரிஸ்ஸா மாநிலம் என அறிந்துகொண்டவர் இந்த மாநிலத்தில் அதிக வெள்ளம் வரும் என நாளிதழ்களில் படித்து இருந்தார். எங்கு போவது என தெரியாமல் நின்று கொண்டிருந்தார். திடீரென மழை பலமாக விழுந்தது. தொப்பலாக நனைந்து போனார். இருமத் தொடங்கினார். இவரை அங்கே ஒரு இளைஞன் வைத்த கண் எடுக்கமால் அவர் வந்ததிலிருந்து பார்த்துக்கொண்டே இருந்தான். அவன் அருகிலேயே சென்று அந்த கட்டிடத்தின் கீழ் இருமலுடன் நடுங்கிக் கொண்டே நின்றார் கோவிந்தசாமி.

(தொடரும்)

Sunday 2 August 2009

தேடினால் கிடைத்துவிடும் - 3

தனது கவனக்குறைவினை நினைத்து வேதனையுற்றார் கோவிந்தசாமி. பேருந்தில் மீண்டும் ஏறிச்சென்று பணத்தைத் தேடினார். அவரை இறங்கச் சொல்லி அவசரப்படுத்தினார்கள். தனது கனவும் ஆசையும் நிறைவேறாமல் போய்விடுமே எனும் கவலைதான் அவருக்கு மிகவும் அதிகமாக இருந்தது. பணம் அங்கே சிதறியிருக்கவில்லை. பணம்தனை எடுத்தவரை இனிமேல் இதுபோன்று தவறுகள் செய்யாமல் இருக்க வைத்திடு என சிவனை வேண்டிக்கொண்டார் கோவிந்தசாமி. சிக்கனமாக வாழ்ந்த அவருக்கு இப்படி பணம் தொலைந்தது மிகவும் கவலையாக இருந்தாலும் ஒருவரின் தேவைக்கு அது உதவுமே என நினைத்துக்கொண்டார்.

அங்கிருந்தவர்கள் என்ன ஆனது எனக் கேட்டார்கள். அப்பொழுது கோவிந்தசாமி தனது பணம் தொலைந்த விசயத்தைக் கூறினார். அனைவரும் பரிதாபத்துடன் பார்த்தார்கள். காசிக்குச் சென்றே தீர்வது என மன உறுதி கொண்டார். இப்பொழுது எப்படி பணத்தைச் சேர்ப்பது என யோசித்தார். மகன்களையோ மகளையோத் தொடர்பு கொள்ள மனம் இடம் தரவில்லை. எப்படியும் என்னை காசியில் கொண்டு சேர்த்துவிடு என சிவனை வேண்டிக்கொண்டு சென்னையிலிருந்து நடக்கலானார்.

வழியில் இருந்த குளம் ஒன்றில் குளித்தார். நடந்து சென்று கொண்டே இருக்கையில் வழியில் கிராமம் ஒன்றை அடைந்தார். இவரை ஒருவர் விசாரித்தார். இவர் தனது நிலையையும், காசிக்குச் செல்வதையும் சொல்லவே அவர் மிகவும் உற்சாகம் அடைந்தார். தனது பெயர் முத்துச்சாமி என அறிமுகப்படுத்திக்கொண்ட அவர் கோவிந்தசாமியை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். தனது மனைவியை அழைத்து இவருக்குச் சாப்பாடு போடச் சொன்னார். கோவிந்தசாமிக்குப் புரியாமல் இருந்தது. வேண்டாம் என மறுக்க மனம் இடம் தரவில்லை. நல்ல பசியாகவும் களைப்பாகவும் இருந்தது. உணவு அருந்திய பின்னர் முத்துச்சாமி இவரை ஓய்வெடுக்கச் சொன்னார். கோவிந்தசாமியும் அந்த வீட்டில் ஓய்வு எடுத்தார்.

பின்னர் முத்துச்சாமி, கோவிந்தசாமியிடம் தனது தந்தையின் அஸ்தியை வைத்திருப்பதாகவும் அதனை கங்கையில் கரைக்க வேண்டும் எனும் ஆசையை அவரது தந்தை சொன்னதாகவும், தனக்கு நேரமில்லாத காரணத்தாலும், பிற காரணங்களால் செல்ல இயலாமல் இருப்பதாகவும் அதனால் அதைக்கொண்டு சென்று கங்கையில் கரைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். கோவிந்தசாமி சரியென ஒப்புக்கொண்டார். முத்துச்சாமி கொஞ்சம் பணம்தனை கோவிந்தசாமியிடம் கொடுத்தார். மறுக்காமல் கோவிந்தசாமி வாங்கிக்கொண்டார். ஆனால் பணம் வாங்கியதற்கான ஆதாரம் ஒன்றை எழுதிக்கொடுத்தார். முத்துச்சாமி வாங்கிட மறுத்தார். ஆனால் கோவிந்தசாமி தனது மகன் ஒருவரின் முகவரியைக் கொடுத்து நான் திரும்பி வராமல் போனால் அவரது மகனிடம் இந்த பணத்தைப் பெற்றுக்கொள்ளச் சொன்னார். முத்துச்சாமி தனது தந்தையின் ஆசை நிறைவேற வேண்டும் என்பதிலே அப்பொழுது குறியாய் இருந்தார், இருப்பினும் சரியென வாங்கி வைத்துக்கொண்டார்.

அந்த கிராமத்தில் ஒருநாள் தங்கி இருந்தார். ஊர் மிகவும் அழகாக இருந்தது. மரங்கள் செடிகள் கொடிகள் என இயற்கை வளத்துடனும் கிராம மக்கள் சுறுசுறுப்புடன் வேலைப்பார்த்து கொண்டிருந்ததைப் பார்த்தபோது கோடியலூர் ஞாபகத்திற்கு வந்தது. வசந்தராஜ் தனது வீட்டில் சென்று குடியேறி இருக்க வேண்டும் என நினைத்துக்கொண்டார். ஆனால் அவரது நினைவின்படி இல்லாமல் வீட்டைச் சென்று சுத்தப்படுத்துவதோடு நிறுத்திக்கொண்டார் வசந்தராஜ். தோட்டத்தில் விளைந்தவைகளால் வந்த பணம், தோட்டத்திற்குச் செலவாகும் பணம் என பெரிய நோட்டினில் எழுதி வைக்க ஆரம்பித்தார் வசந்தராஜ். சுப்புராஜிடம் மிகவும் கண்டிப்புடன் இதைச் செய்ய வேண்டும் என சொல்லி இருந்தார். முத்துச்சாமி தனது தோட்டம்தனை எல்லாம் இவருக்குச் சுற்றிக்காட்டினார். கோவிந்தசாமி தான் ஊரில் செய்ததை இவரிடம் சொல்லவில்லை.

விடைபெற்றுக்கொண்டு பயணமானார் கோவிந்தசாமி. பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தபோது இவருடன் ஒருவர் பேச்சுக்கொடுத்தார். அவர் ஒரு பெரிய பணக்காரர் எனவும் சொந்தங்கள் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் கூறினார். இப்பொழுது விஜயவாடாவில் உள்ள நண்பரைச் சந்தித்து உதவி கேட்கப்போவதாக சொன்னவர் தன்னிடம் பணம் இல்லாததால் யாராவது உதவமாட்டார்களா என எதிர்பார்த்து சில நாட்களாக இங்கே வந்து போவதாக சொன்னார். அவர் பேசிய தெலுங்கு அரைகுறையாகப் புரிந்தது கோவிந்தசாமிக்கு. கோவிந்தசாமி அவரை தான் அழைத்துச் செல்வதாக சொல்லி விஜயவாடா செல்லும் பேருந்தில் பயணமானார்.

கோவிந்தசாமிக்கு அவர் சொன்ன பேச்சில் இருந்து சுப்புராஜ் ஞாபகம் வந்தது. அனைத்தையும் எழுதிக்கொடுத்த பின் அதனை அவர்கள் திரும்பத் தருவார்கள் எனும் உத்தரவாதம் எதுவும் இல்லை என எண்ணம் வந்தது. அதே வேளையில் கஷ்டப்படும் வசந்தராஜ் குடும்பம் நன்றாக இருக்கட்டும் எனும் எண்ணம் மேலோங்கி எழுந்தது. என்ன யோசனை என கேட்ட அவரிடம் இப்பொழுதும் கோவிந்தசாமி தனது செயலை சொல்லவில்லை. புதையல் பற்றி சொன்னார். அதற்கு அவர் பலமாகச் சிரித்தார். இப்படி இந்த வயதில் புதையலைத் தேடி என்ன செய்யப்போகிறீர்கள்? அதுவும் கனவினை நம்பி என்றார். கோவிந்தசாமி அதற்கு புதையல் மட்டுமே எனது ஆசையில்லை. காசியை எப்படியாவதுப் பார்த்துவிட வேண்டும் எனும் ஆசையும் கூட என்றார்.

விஜயவாடா வந்தது. பேருந்தில் இருந்து இறங்கிய அவர் நன்றி சொல்லிக்கொண்டு தனது நண்பரின் முகவரியை இவரிடம் தந்துவிட்டு கொஞ்சம் பணம் வாங்கிக்கொண்டு கிளம்பினார். கோவிந்தசாமி ஒரு விடுதிக்குச் சென்றார். அங்கே அன்று ஓய்வு எடுத்தார். தன்னிடமிருந்த பணம் குறையத் தொடங்கி இருந்தது. இனிமேல் பணம் சேர்க்காமல் காசிக்குச் செல்வது இயலாது என நினைத்தவருக்கு ஒரு யோசனை வந்தது.

(தொடரும்)