Thursday 2 July 2009

கேள்வியும் பதிலும் - 2

2) உங்கள் குழந்தை தமிழ் கற்றுக் கொள்ள மறுத்தால் அதை எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?

மிகவும் நல்ல கேள்வி. எனது ஆசை என்னவாக இருந்தது எனில் என்னால் எனது சிறு வயது ஆசையான நாவல் எழுத முடியாமல் போவதைக் கண்டு மனம் கலங்கியது. எனது மகன் மாபெரும் நாவலாசிரியனாக வரவேண்டும் (தமிழில் தான்) என அவனுக்கு கல்கி என பெயர் சூட்டினேன். யாருக்கும் அப்பெயர் பிடிக்கவில்லை. பின்னர் நவீன் என சூட்டினேன். காரணம் நவீன் என்றால் புதியது என பொருள்படும். புதிய இராதாகிருஷ்ணனாய் அவன் வரட்டும் என்ற எண்ணம்தான்.

அப்படிப்பட்ட எண்ணம் கொண்டு இருக்கையில் இருப்பது இலண்டனில், எப்படி தமிழ் கற்றுக் கொள்வது? தமிழ் பள்ளிக்கு அனுப்பி வைத்தோம். தமிழ் ஒருநாள்தான் கற்று வருகிறான். சில நேரங்களில் தமிழ் பள்ளி பிடிக்கவில்லை என அவன் சொல்லும்போது, நான் அவனிடம் பிடிக்கவில்லையெனில் விட்டுவிடு எனச் சொல்வேன். அவனோ இல்லை நான் படிக்கிறேன் என படித்து வருகிறான். நிச்சயம் தமிழ் என்னைவிட நன்றாக கற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கை இருக்கிறது. எதையும் நிர்பந்தப்படுத்துவது இல்லை. இது செய் என சொல்வதோடு சரி, அவனாக விருப்பப்பட்டால் ஒழிய நான் புகுத்துவது இல்லை. கடவுள் கிருபையால் தமிழ் அவனுக்குப் பிடித்து இருக்கிறது. அவன் தமிழ் பாடும்போது (சங்கீதம், மிருதங்கம் பயின்று வருகிறான்) மிகவும் சிரிப்பாக இருக்கும், பெருமையாக இருக்கும்.

ஆக தமிழ் கற்றுக் கொள்ள மறுத்து இருந்தால் கஷ்டமாக இருந்து இருக்கும் என்றுதான் நினைக்கிறேன். இருந்தாலும் 'அவனுக்கு விதித்தபடி நடக்கிறான்' என ஆண்டவன்மேல் பாரத்தை போட்டுவிட்டு போய் இருப்பேனோ என்னவோ? இப்பொழுதுதானே படித்துக் கொண்டு இருக்கிறான், இறைவன் அருள்புரிவான் என் நம்புகிறேன்.

(தொடரும்)

கேள்வியும் பதிலும் - 1

முத்தமிழ்மன்றம் எனும் வலைத்தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு நான் அளித்த பதில்களும்.

1. அஹிம்சை என்ற உங்கள் ஆன்மீக எண்ணங்களுக்கு எதிர்மறையாக உங்கள் வேலை அமைந்தால் என்ன செய்வீர்கள்?

அப்படிப்பட்ட வேலைதான் செய்து கொண்டு இருக்கிறேன் சகோதரி!

நான் இந்தியாவில் இருந்த வரை (1998) அசைவம் சாப்பிடுவேன், அதுவும் எப்போதாவது தான். எங்கள் வீட்டில் எப்போதாவதுதான் அசைவம் சமைப்பார்கள். எனது அம்மாவிடம் அசைவம் சாப்பிடுவது பிடிக்கவில்லை எனக் கூறிக்கொண்டே சாப்பிட்ட தருணங்கள் பல. சாப்பிட்ட பின்னர் மிகவும் கவலையாக இருக்கும். இந்த எண்ணமெல்லாம் வந்தது ஒரு 18 வயது பின்னர்தான். அதற்கு முன்னர் அஹிம்சை பற்றி நினைக்கவே இல்லை. ஏதோ சாப்பிட வேண்டும் எனத் தோன்றும், அவ்வளவுதான்.

எனது தாயின் மரணத்திற்கு பின்னர் அசைவம் சாப்பிடுவது இல்லை என்ற முடிவு எடுத்தேன், எனது மனைவியும் (திருமணத்திற்கு முன்னர்) என்னிடம் அதிசயமாக அசைவம் பற்றி கேட்க நான் சாப்பிடமாட்டேன் என உறுதி அளித்தேன். அசைவம் சாப்பிடுவதை நிறுத்திய நாள் 12-04-1998. இதுநாள்வரை அசைவம் சாப்பிட்டது இல்லை. என்னை ஆச்சரியமாக என்னை அறிந்தவர்கள் பார்த்தார்கள், எனது நண்பர்கள் வியந்தார்கள், இதில் என்ன வியப்பதற்கு என்ன இருக்கிறது என என் அண்ணன் ஒருமுறை எதில் எதில் உறுதி கொள்ள வேண்டுமோ அதில் உறுதி கொள் என்றார். என்னைப் பொறுத்தவரை எதை ஒருவனால் ஒரு விசயத்தை சிக்கெனப் பிடித்துக் கொள்ள முடியுமோ, அதே வேளையில் மிகவும் பிடித்த விசயத்தை உடனடியாய் விட்டுவிடவும் முடியுமோ அவனால் கடவுளை உணர முடியும் என்ற கருத்தை எனக்குள் நான் புதைத்த காலங்கள் எனக்கு ஞாபகம் வந்து போகும். கடவுளை நான் உணரவில்லை என்பது வேறு விசயம்.

நான் இலண்டனில் ஆராய்ச்சியை ஆரம்பித்தபோது எனது ஆசிரியர் என்னிடம் கேட்ட கேள்வி இதுதான் 'நீ சைவம், உனக்கு விலங்குகளைக் கொன்று ஆராய்ச்சி செய்வதில் ஆட்சேபனை இல்லையா?' என்பது தான். இது எதற்கு கேட்டார் எனில் இங்கு இது போன்ற ஆராய்ச்சி செய்ய அனுமதி வேண்டும், தனிப்பட்ட படிப்பினை படிக்க வேண்டும், அதனால்தான் கேட்டார். நான் எதுவுமே நினைக்கவில்லை சரி என்று சொல்லி அன்று ஆரம்பித்து இன்றுவரை நிறுத்தவில்லை.

எனது மனம் பாடுபடும். கொல்வதற்கு முன்னர் மிகவும் கவலையாக இருக்கும். சில தினங்களில் கண்ணீர் வந்ததும் உண்டு. ஒரே நாளில் 250 எலிகளையெல்லாம் கொன்று இருக்கிறேன். பாவமாக இருக்கும், மனதில் எத்தனையோ சமாதானங்கள் சொல்லிக் கொள்வேன். இருந்தும் இந்த வேலை எனக்குப் பிடித்து இருப்பதால் எனது உடல்நலம் பற்றி கூட கருதாமல் பணிபுரிந்து வருகிறேன். இறக்கும் உயிர்களை தியாகச் செம்மல்கள் என மனதில் நினைத்துக் கொள்வேன். ஏதோ ஒரு நல்ல விசயத்துக்காக தங்கள் வாழ்வினை படைத்துக் கொண்ட அந்த விலங்கினங்கள் பாக்கியசாலிகள்.

நான் எனது ஆராய்ச்சி நூலில் எழுத நினைத்தது இதுதான்!

''Dedicated to my beloved mice''

இன்னும் அந்த உயிரினங்களை நினைத்து மனம் வலிக்கிறது, இருந்தும் தொடர்கிறேன், ஒருநாளாவது கண்ணன் வந்து எனக்கு கீதை சொல்லமாட்டானா என்று!

(தொடரும்)

வேத நூல் - 10 (நிறைவுப் பகுதி)

சிரகமெராவின் செயலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மிபலோ ''ஏன் இவ்வாறு செய்தாய்?'' என்று கேட்டான். ''கொல்ல நினைத்த காரணத்திற்காக எனக் கூறிய சிரகமெரா இதில் நான் குற்றவாளி என்றால் நாளை நீங்கள் உயிர் மாய்த்திட்டால் நீங்களும் குற்றவாளி என்பதை மறுக்க வேண்டாம், மறக்க வேண்டாம்'' என கூறினாள்.

''நீ செய்தது தவறு, இதை நியாயப்படுத்திக்கொண்டிருக்க முடியாது, இதற்கானத் தண்டனையை நீயே பெற்றுக்கொள்ளத்தான் வேண்டும்'' என்றான் மிபலோ. ''நான் தண்டனையைப் பெற்றுக்கொள்கிறேன் ஆனால் உங்களுக்கு யார் தண்டனை தருவது'' என்றாள் சிரகமெரா. ''நான் உயிரை மாய்த்துக்கொள்ளமாட்டேன், அதுவாகப் போகும்'' என்றான் மிபலோ. ''இது என்ன காற்றா? தானாக உள்ளே வருவதற்கும் தானாக வெளியே செல்வதற்கும்'' என்றாள் சிரகமெரா. ''என் உயிரை நானாக மாய்த்துக்கொள்ளமாட்டேன் என உறுதி கூறுகிறேன்'' என்றான் மிபலோ.

அன்று அங்கேயே தங்கினாள் சிரகமெரா. காலையில் கிரகமெஸ்டிடம் நடந்த விபரங்களை கூறினான் மிபலோ. சூரியன் தாமதித்துக் கொண்டிருந்தது. கிரகமெஸ்ட் பரவாயில்லை திடீரென இறந்துவிட்டான் எனச் சொல்லிவிடலாம் எனச் சொன்னான். மிபலோவால் இதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ''இவளே கொலை செய்தாள் அதனால் இவளுக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும்'' என்றான் மிபலோ. சிரகமெராவை நோக்கி ''இவனையும் சேர்த்து கொலை செய்துவிடு'' எனச் சிரித்தான் கிரகமெஸ்ட்.

''தலைமையிடத்தில் இருப்பவர்கள் தவறு செய்யக்கூடாது'' என்றான் மிபலோ. ''ஒன்று செய், நீ தலைமையிடத்தில் சில நாட்கள் இல்லாது இருந்தாய் அல்லவா அதுபோல இப்பொழுதும் இருந்துவிடு. நீ தவறு செய்வதாய் ஆகிவிடாது'' என்றான் கிரகமெஸ்ட். மிபலோவுக்குப் புரியும் மொழியில்தான் பேசி அசத்தினான் கிரகமெஸ்ட். ''நன்றாக பேசுகிறாய் என் மொழியில் நீ பேசுவதால் நான் மாறிவிடுவேன் என நினைத்தாயா'' என்றான் மிபலோ.

சிரகமெரா மிபலோவிடம் ''என்ன தண்டனை என்றாலும் ஏற்றுக்கொள்கிறேன்'' என்றாள். அதற்குள் சாங்கோ ஆதரவாளர்கள் சாங்கோ இறந்து கிடப்பதைப் பார்த்து மிபலோவின் அவையினை முற்றுகையிட்டார்கள். பலத்த சப்தம் எழுந்தது. சிலர் கற்களை கொண்டு வீசினர். மிபலோ ஒரு கொலையாளி எனக் கூச்சலிட்டனர். இதையெல்லாம் பார்த்துப் பொறுக்காத கிரகமெஸ்ட் வீரர்களை அழைத்து உடனடியாக அவர்களை ஒடுக்குமாறு ஆணையிட்டான். மிபலோ தடுத்தான்.

சூரியன் உதித்தது. கிரகமெஸ்ட் தடுத்தும் கேளாது மிபலோ அவர்கள் முன் தோன்றினான். கற்களால் அவனை அடித்தார்கள். ஒருவன் பெரிய கல்லை எடுத்து மிபலோவின் மேல் போட்டான். மிபலோ அஸ்தமனமானான். சிரகமெரா கதறினாள். மிபலோவை அடித்துக் கொன்றவர்களை அன்றே மொத்தமாக அழித்தான் கிரகமெஸ்ட்.

தானேஸ்ராவில் குவ்விலானுக்குத் திருமணம் நடந்தது. தன் மனைவியுடன் குவ்விலான் எகிப்து நோக்கி பயணம் தொடங்கினான். சிறிது நாட்கள் பின்னர் சிரகமெராவை தன் மனைவியாக்கிக் கொள்ள நினைத்தான் கிரகமெஸ்ட். ஆனால் சிரகமெரா மறுத்துவிட்டாள். சாங்கோவை பின்பற்றியவர்கள் கிரகமெஸ்டை நினைத்து கதிகலங்கினார்கள்.

மாதங்கள் நகர குவ்விலான் தன் மனைவியுடன் எகிப்து வந்தடைந்தான். நடந்த விபரங்களை அறிந்த குவ்விலான் சத்தமின்றி அழுதான். அங்கே இருக்கப் பிடிக்காமல் குவ்விலான் பெருசியா நோக்கி பயணமானான். சிரகமெரா,சாங்கோ ஆதரவாளர்கள் குவ்விலானுடன் பயணமானார்கள். நைல் நதியில் சில வாரங்கள் பின்னர் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. மிபலோ கட்டிய பிரமிடினை அந்த வெள்ளம் ஒரு அலசு அலசியது. கிரகமெஸ்ட் வெள்ளத்தின் சீற்றம் கண்டு அச்சமுற்றான். வெள்ளம் பல உயிர்களை பலிவாங்கியது. வெகு சிலரே உயிர் தப்பினர்.

பெருசியா சென்றடைந்த குவ்விலான் தனக்கு நினைவில் இருந்ததையெல்லாம் எழுதத் தொடங்கினான்.அதைப் படித்த சாங்கோ ஆதரவாளர்கள் இதுதான் உண்மையான வேதம் எனப் பின்பற்றத் தொடங்கினார்கள். சாங்கோ தங்களை ஏமாற்றிவிட்டதாகவே உணர்ந்தவர்கள் மிபலோவின் மரணத்தை நினைத்து வருத்தப்பட்டார்கள்.

சிரகமெராவையும் திருமணம் செய்துகொண்டான் குவ்விலான். அவர்களுக்கு குழந்தைகள் பிறந்தது. பெருசியாவில் பெரும் போர் நடந்தது, பலர் உயிர் இழந்தார்கள். அதைக் காண சகிக்காமல் சில காலம் அங்கே இருந்துவிட்டு தானேஸ்ரா திரும்பினான் குவ்விலான்.

அனைத்து விசயங்களையும் மீண்டும் எழுதி வைத்தான் குவ்விலான். அதை மிகவும் பாதுகாப்பான ஒரு இடத்தில் வைத்துவிட்டு அமைதியாக அமர்ந்து இருந்தபோது அவனது உயிர் பிரிந்தது.

மிபலோ சொன்ன எண்ணங்கள் அடங்கிய வேதம் குவ்விலானால் எழுதப்பட்டு அந்த பிரமிடுக்குள் தினமும் உறங்கிக் கொண்டிருக்கிறது. அதை வெளியே எடுக்க வழியில்லாது போகும்படி குவ்விலான் தான் எழுதியதை எவரிடமும் சொல்லாமல் பாதுகாப்பாக வைத்துவிட்டு திடீரென மறைந்தான்.

பல பிரமிடுகள் பின்னர் கட்டப்பட்டன. அந்த வேதம் எந்த பிரமிடுக்குள் இருக்கிறது என தெரியாமல் போனது. குவ்விலானின் சந்ததிகளுக்கும் தெரியாததாகவே இருந்தது.

தற்போது அகழ்வாராய்ச்சியில் பார்த்தபோது குவ்விலானால் இவ்வாறு தொடங்கப்பட்டு இருந்தது.

சாத்திரங்கள் செய்தாரடி அதில்
ஆத்திரங்கள் வைத்தாரடி பல
பாத்திரங்கள் பண்ணிபண்ணிப் புத்தி
பேதலிக்கச் செய்து போனாரடி.

(முற்றும்)