Saturday 7 February 2009

அறுபத்தி நான்காம் மொழி - அத்தியாயம் 3

பவளக்கொடி பேசிவிட்டுச் சென்றுவிட்டாள். நாவரசன் வந்ததும் கேட்டுவிட வேண்டும் என நினைத்திருந்தேன். நாவரசன் வீட்டுக்குள் வந்ததும் பவளக்கொடி வந்துவிட்டுச் சென்றாள் என்றேன். அவனது முகம் மிகவும் சந்தோசமானது. என்ன சொன்னாள்? ஏது சொன்னாள் என்று கேட்கமாட்டானா என நானும் அவனையேப் பார்த்திருக்க ஒன்றுமே பேசாது முகம் அலும்பச் சென்றுவிட்டான். என்ன இது? ஒன்றுமே சொல்லாமல் செல்கிறான் என பின் தொடர்ந்தேன். அவ என்ன சொன்னாளுனு கேட்கமாட்டியா என்றேன். திரும்பிப் பார்த்தவன் புன்னகைத்தான். அவ்வளவுதான், எனக்கு ஐயோ என்றாகிவிட்டது. போடா என சொல்லிவிட்டு அப்படியே உட்கார்ந்துவிட்டேன்.

என் மற்ற பிள்ளைகள் கொஞ்சம் கூட இதில் தலையிடுவதில்லை, என் கணவரும் கூட. நான் தான் கவலை துரத்தியதில்லை என சொல்லிவிட்டு இப்படி கவலைப்படுகிறேனோ எனத் தோணியது. அன்று இரவே பவளக்கொடி பற்றி கணவரிடம் பேசினேன். நான் பயந்ததைவிட பழனிச்சாமியா என அவரும் பதறினார். நான் ஊருக்குச் செல்ல வேண்டும் என பிடிவாதமாக இருந்தேன். என்னுடன் உடன் வருவதாக அவர் சொன்னார். அப்பாடா என இருந்தது எனக்கு. பிள்ளைகளிடம் சொல்லிவிட்டு கிளம்பினோம். நாவரசன் மிகுந்த சந்தோசத்தில் இருந்தான்.

நானும் என் கணவரும் எனது பிறந்த ஊரான சிங்கம்புணரியைச் சென்றடைந்தோம். என்னை ஊரில் அடையாளம் கண்டுகொண்டவர்கள் இப்பத்தான் வழி தெரிஞ்சதோ எனக் கேட்டார்கள். வழி தெரியனும்னு வந்திருக்கேன் என்று சொல்லி எங்கள் பூர்விக வீட்டிற்குப் போனோம். கொஞ்ச நேரத்தில் பழனிச்சாமியைப் பார்க்கச் சென்றோம். எனக்கு படபடவென நெஞ்சு அடித்துக்கொண்டது.

பழனிச்சாமி வீட்டில்தான் இருந்தார். அவரது மனைவி பழனியம்மாள் என்னைப் பார்த்து உள்ளே வா சரசு என அழைத்துச் சென்றார். பழனிச்சாமி என்மேல் கோபமாகவே இருப்பார் என்று எதிர்பார்த்து வந்தது பொய்த்துப் போனது. ''வாம்மா தங்கச்சி, ஊரை விட்டு ஒரேயடியா ஒதுங்கிப் போய்ட்ட'' என்றார். எனக்குப் பழசெல்லாம் மறந்து போனது அப்போது.

என் குழந்தைகள் பற்றியெல்லாம் விசாரித்தார். மூத்தவன் இன்னும் மிங்கி மிங்கி பா மட்டுமே தான் சொல்றானா? என்றார். பின்னர் பவளக்கொடி பற்றியும் சொன்னார். அவரது தங்கை மணமுடித்த இடத்தில் சிறப்பாக இருப்பதாக சொல்லி சந்தோசப்பட்டார். எனக்கு ரொம்பவே தைரியம் வந்தது. ஆனால் மிங்கி மிங்கி பா மட்டுமே பேசும் என் மகனை மருமகனாக எப்படி இவர் ஏற்றுக்கொள்வார். சின்னவனை வேண்டுமெனில் கல்யாணம் பண்ணிக்கிரட்டும் என சொன்னால் மறுபடியும் இவரை பகைத்துக்கொள்ள முடியாது. என் கணவர் வாயேத் திறக்கவில்லை.

நான் வந்தது காரணம் என்னன்னா அண்ணே என நான் முழுவதையும் சொல்லி முடிப்பதற்குள் எனக்கு வியர்த்து கொட்டி விட்டது. ''ஓ தாராளமா பண்ணிக்குவோம்'' என்றாரேப் பார்க்கலாம். எனக்கு உடல் புல்லரித்தது. அதற்குள் அதுவரை ஒன்றுமே பேசாமல் இருந்த என் கணவர் ''நிசமாத்தான் சொல்றீங்களா'' என்றார். ''உங்களை மாதிரியா, என்னை நினைக்கிறீங்க'' என்றார் பழனிச்சாமி. எதுவும் விபரீதமாகி விடக்கூடாதே என மிங்கி மிங்கி பா தனை மனதுக்குள் பலமுறை சொல்லிக்கொண்டேன். (தொடரும்)

Friday 6 February 2009

அறுபத்தி நான்காம் மொழி - அத்தியாயம் 2

2. ஜெயராணியையும் உடன் அழைத்துச் செல்லலாம் என நினைத்து அவளை அழைத்தபோது வேலை இருக்கிறது என மறுத்துவிட்டாள். நான் மட்டும் தனியாக நாவரசன் வேலைப் பார்க்கும் இடத்துக்குச் சென்றேன். ஜெயராணி சொன்னதுபோலவே ஒரு பெண் நாவரசனிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள். எனக்கு மிகவும் ஆத்திரமாக வந்தது. மிங்கி மிங்கி பா மட்டுமே சொல்லும் இவனிடம் அப்படி என்ன இவள் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கக்கூடும் என நினைத்தவாரே நெருங்கிச் சென்றேன். அவள் பேசி முடித்துவிட்டாள் போலும், என்னை நோக்கி நடந்து வரத் தொடங்கினாள்.

அவளை நிறுத்தினேன். நீ யார் எனக் கேட்டேன். நல்லவேளை அவள் நன்றாகவே பேசினாள். எங்கே இவளும் மிங்கி மிங்கி பா என்று சொல்லி விடப்போகிறாளோ என ஆத்திரத்துடன் பயமும் இருக்கத்தான் இருந்தது. அதற்குள் நாவரசன் அங்கேயிருந்து சென்றிருந்தான். என்னை கவனிக்கவில்லை போலும். பெயர் பவளக்கொடி எனவும் ஊர் பேர் சொன்னதும் எனக்கு ஆர்வம் வரத்தொடங்கிவிட்டது. யார் மகள் எனக் கேட்டபோது பழனிச்சாமி மகள் என சொன்னதும் எனக்குப் புரிந்தது. ஜபராஜ் கல்லூரியில் படிப்பதாகவும் மாலை நேரத்தில் இங்கு வந்து வேலை பார்ப்பதாகவும் சொன்னாள்.

அவன் எனது மகன் தான் என்று சொன்னேன். ஓ அப்படியா? என ஆர்வமாகக் கேட்டாள். பிறந்த ஊருக்கு சென்று பல வருடங்கள் ஆகிவிட்டது. அதனால் எங்களை அவளுக்கு அதிகமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. என்ன பேசினாய் எனக் கேட்டேன். மிங்கி மிங்கி பா என்றாள். அவளை ஓங்கி அறைந்து விடலாம் போல் இருந்தது எனக்கு. தொலைவில் இருந்து பார்த்தபோது நீ சிரித்துப் பேசினாயே என்றேன் சற்றும் வெட்கமில்லாமல். நான் பேசினேன், அவர் மிங்கி மிங்கி பா என பல தோரணைகளில் சொன்னார் என்றாள். இனிமேல் எனது உணர்ச்சிகளை இப்படி தேவையில்லாமல் அலைபாய விடக்கூடாது என்று அவளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தேன்.

காபி போட்டுக் கொடுத்தேன். இரசித்துக் குடித்தவள் ஏன் நாவரசன் மிங்கி மிங்கி பா சொல்கிறார் தெரியுமா என்றாள். நானும் அவளுக்குத் தெரிந்திருக்கும் என நினைத்துக்கொண்டு தெரியாது, உனக்குத் தெரியுமா என்றேன் ஆவலுடன். நானும் வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து கேட்கிறேன், அவர் சொல்ல மறுக்கிறார். ஆனால் வேலை இடத்தில் எல்லோரும் அவரை மிகவும் மதிக்கிறார்கள். புன்முகத்துடன் மிங்கி மிங்கி பா என சொல்லி செல்கிறார்கள். சற்றுக்கூட கோபம் கொள்வதில்லை அவர் மேல். இவரும் புன்னகையுடன் நன்றாக வேலை செய்கிறார் என சொன்னதும் எனக்கு இது தெரிந்ததுதானே என்றுதான் சொல்ல வேண்டும் போலிருந்தது. ஆனால் ம் அப்புறம் என்றேன்.

என்னிடமே தைரியமாக எனக்கு அவரை மிகவும் பிடித்திருக்கிறது என்று சொன்னாள். என்னதான் என் ஊரு மண்ணாக இருந்தாலும் என்னிடமே இப்படிச் சொல்லலாமா என நினைத்தாலும் மனதுக்குள் சந்தோசமாகத்தான் இருந்தது. யார் இவனுக்கு வாழ்க்கைப்படுவா என இருந்த நான் எங்கள் ஊர்ப் பெண்ணே வந்து சொல்வது கேட்க நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அந்த பழனிச்சாமிக்குத் தெரிந்தால் என்ன ஆகும் என நினைக்கும்போது நான் மிங்கி மிங்கி பா சொல்லிவிடுவேன் போல.

(தொடரும்)

லெமூரியாவும் அட்லாண்டீஸூம் - அத்தியாயம் 4 நிறைவுப் பகுதி.

மனுசாளைப் பத்தி கதையை மிகவும் பக்குவமா எழுதி முடிச்சிட்டேன். மூணு பக்கம்தான் வந்துச்சு. பக்கம் பெரிசில்ல சொல்ற விசயம்தான் பெரிசுனு உங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்கும்தான. என் வீட்டுக்காரிகிட்ட காட்டுனேன். ரொம்ப ரொம்ப சந்தோசப்பட்டா. இப்படித்தான் மனுசாள் தெய்வீக உணர்வோட அன்போட வாழனும்ண்ணானு சொன்னா. அவகிட்ட என்னோட ஐஞ்சாவது கதையும் ஜெயிச்சிருச்சிங்கிற மன நிறைவு என்கிட்ட இருந்துச்சு, அதைவிட அவ ஆசைப்பட்டதை செஞ்சிட்டோம்ங்கிற ஒரு மனநிம்மதி வந்துச்சு.

மனுசாள் பத்தின கதையை மட்டும் உங்களுக்கு காட்டுறேன். மத்த கதையெல்லாம் நீங்க எங்க வீட்டுக்கு வந்தா பார்க்கலாம். நேத்துதான் எல்லா கதையையும் டைப் அடிக்கச் சொல்லி லேமினேசன் பண்ணி பிரேம் போட்டு வரிசையா சுவத்தில தொங்கவிட்டுருக்கேன். டைப் அடிச்சதுக்கு அப்புறம் எல்லா கதையுமே மூணு பக்கத்து மேல தாண்டலை. வீட்டுக்கு வாங்க வாங்கனு உங்களை சொல்லிட்டு அட்ரஸு தராம இருந்தா எப்படி? ஸ்ரீரங்கத்து கோவிலுக்கு கிட்ட வந்து பிச்சிப்பூ அக்ரஹாரம் தேவநாதன் வீடு எதுனு கேளுங்க, எல்லோரும் சொல்வாங்க. மறக்காம ஒருநாளாச்சும் வரனும்.

இப்போ கதையை படிங்க.

அன்பு நிறைந்த மனிதர்கள்மீனாக வந்த ரங்கநாதா, தானாக எழுத நினைக்கையில் தேனாக விசயம்தனை நீ சொல்லிடுவாய், என் மனையாளின் அகலாத அன்பை நிறைவேற்றவே.

மனிதர்கள் ஆசையும், பாசமும், அன்பும், பண்பும் நிறைந்தவர்கள். சகல உயிர்களிடத்திலும் கருணையுடன் இருப்பவர்கள். வேற்றுமையுணர்வு அன்பினை விரட்டியடித்துவிடும் என்பதை அறிந்து கொண்டவர்கள். அன்பினை அமிழ்த்தி வைக்கும் வேற்றுமை எண்ணத்தை மனதில் எழவிடாமல் பாதுகாப்பாக வாழ்ந்து வருபவர்கள்.

மனிதர்கள் மிகவும் நேர்மையானவர்கள். நீதி நியாயத்துக்கு கட்டுப்பட்டவர்கள். கடமையை ஒருபோதும் மறவாதவர்கள். உண்மையை நேசிப்பவர்கள். உள்ளத்தில் எப்பொழுதும் உயர்வாகவே எண்ணுபவர்கள். பிறருக்கு நல்லதை செய்வதை முதன்மையாக கருதுபவர்கள். மனிதர்கள் உருவானதிலிருந்து பல்வேறு உருவ வேறுபாடு கொண்டவர்கள், இருப்பினும் அன்பை மாற்றம் செய்து கொண்டவர்கள் அல்லர்.

லெமூரியா எனும் நிலப்பரப்பில் மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள். இப்போது அந்த நிலப்பரப்பு இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் தென்படவில்லையெனினும் அங்கு வாழ்ந்த மனிதர்கள் பிற இடங்களுக்குச் சென்று அன்பை வழியுறுத்தி வந்துள்ளார்கள் என்பதற்கு சான்றாக இனியும் மனிதர்கள் அந்த மனிதர்களை நினைவு கூர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்.

லெமூரியாவில் வாழ்ந்த மனிதர்கள் உயர்நிலை கொண்டவர்களாக விளங்கினார்கள். தெய்வீக உணர்வு நிறைந்தவர்களாக காணப்பட்டனர். அவர்கள் தங்களுக்கென தனி தெய்வங்களையோ, தனி வழிபாட்டு முறைகளையோ பின்பற்றவில்லை. பிறரிடம் அன்பு செலுத்துவதையே முக்கியமாக கருதினர். அவர்களுக்கு மத கோட்பாடு பற்றியெல்லாம் தெரிந்திருக்கவில்லை. ஒற்றுமையாய் ஒன்றாக தெய்வீக உணர்வுடன் மட்டுமே வாழ்ந்து வந்தனர். அவர்களது ஆயுட்காலம் எண்ணூறு ஆண்டுகள். இப்படி தன்னிகரற்று வாழ்ந்த அவர்கள் இன்றைய கணக்குப்படி சுமார் இருநூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருப்பார்கள் என இன்றைய நிலையில் கணக்கு சொல்கிறார்கள். ஆனால் அதைவிட அவர்களின் அன்பு வாழ்க்கையும் பிறரிடம் வீண்விவாதங்கள், வழக்காடுதலில் ஈடுபடாமல் அமைதியை விரும்பி வாழ்ந்தவிதம் போற்றத்தக்கது.

தவத்திலும், தியானத்திலும் தானத்திலும் சிறந்தவர்களாக விளங்கினார்கள். லெமூரியர்கள் முக்காலம் உணர்ந்தவர்களாக வாழ்ந்து வந்தனர். லெமூர் எனும் குரங்கினமானது சிம்பன்ஸி, மனிதருக்கு முந்தைய உயிரினம் ஆகும். அதனை சிறப்பு செய்யும் பொருட்டே லெமூரியா என ஆங்கிலேயர் ஒருவர் இந்த பகுதிக்கு பெயரிட்டதாக வரலாறு குறிக்கிறது. அது எப்படியிருப்பினும் இத்தகைய மனிதர்கள் நமது முன்னோடிகளாக இருந்து இருக்கிறார்கள் என்பது நமக்கு பெரும் மகிழ்வைத் தருகிறது.

சுமார் நாற்பதாயிரம் காலகட்டத்துக்கு முன்னர் அட்லாண்டிஸ் எனப்படும் பகுதியில் வேறொரு மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள். இந்த அட்லாண்டிஸ் பற்றி தத்துவஞானி பிளாட்டோ குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த நிலப்பரப்பு இருந்ததா என சரிவரத் தெரியவில்லை. ஒரு பகுதி அமெரிக்கர்கள் பலர் இவர்களின் வழித்தோன்றல் என கூறி இனியும் அமைதியுடன் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் விஞ்ஞானம், தொழில்நுட்பம் என மதிநுட்பம் உடையவர்களாக விளங்கினார்கள். இவர்களுக்கு லெமூரியர்கள் பற்றி தெரியவந்தது. லெமூரியர்களின் தெய்வீக உணர்வு இவர்களுக்கு அதிசயமாக இருந்தது. ஆனால் இவர்கள் லெமூரியர்கள் போலவே அமைதியை விரும்பியதால் எந்தவித வேற்றுமை உணர்வு இல்லாமல் பலவித கண்டுபிடிப்புகளில் இறங்கினார்கள். இரண்டு இடத்து மனிதர்களும் ஒருவரை நேசித்தனர்.

ஆனால் இயற்கை விளையாடத் தொடங்கியது. பூமியின் நிலப்பரப்பு கடலுக்கடியில் ஒன்றுக்கொன்று உரசத் தொடங்கியது. இதனை முன்னமே அறிந்திருந்த லெமூரியர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள பலவழிகளைச் செய்தனர். ஆனால் அனைத்தையும் மீறி வெள்ளம் வந்தது. வந்த வெள்ளமானது ஒட்டு மொத்த லெமூரியாவையும் உள்வாங்கியது. தப்பித்தவர்கள் வெகு சிலரே. தெய்வீக உணர்வுடைய மனிதர்களின் காலம் முடிவுக்கு வந்தது பேரிழப்பாகும்.

அவர்கள் விட்டுச் சென்ற அந்த தெய்வீக உணர்வு இன்று பிரிவுகளினால் பேதங்களினால் அலைக்கழிக்கப்படுகிறது.சுமார் பத்தாயிரம் வருடங்கள் முன்னர் வரை வாழ்ந்த அட்லாண்டிஸ் மக்கள் லெமூரியர்களின் அழிவை அறிந்து பாதுகாப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து பல வருடங்கள் தங்களுடைய அறிவாற்றலால் பல விசயங்களை அறிய முன்வந்தனர். இதன்விளைவாக இவர்கள் தங்களுக்குத் தாங்களே அழிவைத் தேடிக்கொண்டனர். இதே பகுதியில் வெள்ளம் வந்தது. அந்த அமைதியான அட்லாண்டிஸ் மனிதர்களும் மறைந்தார்கள். இப்படி விஞ்ஞானத்தில் வேருன்றி வாழ்ந்த மனிதர்கள் அமைதியில் திளைத்த அந்த மாபெரும் மனிதர்களின் இழப்பு நமக்கு பேரிழப்பாகும்.

அதற்கு பின்னால் சரித்திரம் குறிக்கத் தொடங்கியது. மனிதர்கள் கருணையும் அன்பும் உடையவர்கள் என பலர் வலியுறுத்தி வந்தனர், இனியும் வருகின்றனர். அன்பு நிறைந்த மனிதர்கள்தான் இந்த மனுசாள் எல்லாம்.

முற்றும்

கதையைப் படிச்சீங்களா? அன்போட நீங்க எல்லாரும் இருக்கனும். நாங்க ஸ்ரீரங்கநாதரை சேவிக்கப் போறோம். கொஞ்ச நேரத்து முன்னாடி கோவில் பிரகாரத்துக்குள்ள நுழைஞ்சோம். 'பழமை பழமையென்று பாவனை பேசலன்றி பழமை இருந்த நிலை கிளியே பாமரர் ஏதறிவார்' னு பாட்டு கேட்டுச்சு.

கைகோர்த்துக்கிட்டே நடந்தோம். பட்டாச்சாரியார் பதறிக்கிட்டே எல்லாரும் ஓடுங்கோ ஓடுங்கோனு ஓடி வந்தார். நாங்க பதட்டமானோம். நாளன்னைக்கி ஸ்ரீரங்கநாதர் கோவில் கருவறை நுழைவுப் போராட்டம்னு சொல்லி இருந்தவங்க இன்னைக்கே திமுதிமுனு வாராங்கோனு கத்திட்டே பிரகாரம் சுத்தினார். கொஞ்ச நேரத்தில ரொம்ப பேரு ஓடி வந்தாங்க. பதட்டத்தில ஒதுங்கினோம். ஓடினவங்க எங்க மேல மோதினாங்க. நாங்க ரங்கநாதானு கத்தி நிலைகுலைஞ்சி விழுந்துட்டோம். அங்கிருந்த பட்டச்சாரியார்களும், கூட்டமா ஓடினவங்க சிலரும் மயக்கமான எங்களை வீட்டுல வந்து சேர்த்துட்டாங்க போல இருக்கு.

கண்விழிச்சிப் பார்க்கறப்போ எல்லாரும் கூட்டமா நின்னுருந்தாங்க. என் புள்ளைக பேரப்புள்ளைக எல்லாம் அழுதுட்டு இருந்தாங்க. தொண்டு நிறுவனத்துக்காரங்க, சூசையப்பர், இன்னும் ரொம்ப பேரு நின்னுட்டு இருந்தாங்க. மெல்ல என் வீட்டுக்காரியப் பார்த்தேன். கண்ணை மூடி திறந்தா. பெரிய புள்ளைய கூப்பிட்டு நா செஞ்சிட்டு வந்த தொண்டு தொய்வில்லாம தொடர்ந்து செய்யனும்னு மெல்ல சொன்னேன். தலையாட்டுனான். பேரப்புள்ளைக பார்த்துட்டே நின்னாங்க. சின்னவா முதற்கொண்டு எல்லாம் கதறினா. யாரும் அழவேணாம்னு சொன்னேன். ஒவ்வொரு புள்ளையா கூப்பிட்டு தொண்டு செய்றதை தொடரனும்னு சொன்னேன். கதை எழுதினதை சொல்லி சுவரை காட்டினேன். என் வீட்டுக்காரி என்னைப் பார்த்து புன்னகைச்சா. இரண்டு பேரும் கையை பிடிச்சிக்கிட்டோம். ரங்கநாதானு ரெண்டு பேரும் முணுமுணுத்தோம். எங்க உசிரு மெல்ல பிரிய ஆரம்பிக்குது இப்போ. எங்களோட இறுதிச்சடங்குல கலந்துக்கிறதுக்கு நீங்க எல்லாம் வருவீங்களா?

முற்றும்.