Wednesday, 14 April 2010

கதை கதை கேளு - தொடர்பதிவு

சில தொடர் பதிவுகளை எழுத வேண்டும் என்பதின் முதல் கட்டமாக முதல் அழையாத் தொடர் வரிசையில் நுனிப்புல் நாவலில் பங்கு பெற்ற ஒரு கதை மட்டுமே இங்கே அளிக்கப்படுகிறது.  இனி கதையை கேளுங்க, படிங்க. 

வாசன் சாப்பிட்டு முடித்துவிட்டு சுமதியிடம் விபரம் கேட்டான். சுமதியும் தனக்கு பரீட்சை வருவதாகவும் வெளியில் சிலர் காத்துக் கொண்டு இருப்பதாகவும் படிப்பு சொல்லித்தர வேண்டும் என சொன்னாள். ‘’ இன்னைக்கு தோட்டத்தில அதிக வேலை இருந்தது அதனாலதான் வரமுடியல, பாடம் மட்டும்தான இன்னைக்கு’’ என்றான் வாசன். ‘’இல்லை மாமா, பாடத்தோட கதையும் வேணும்’’ என்றாள் சுமதி.

வெளியில் தலைமை சீடரை அனுப்பிவிட்டு என்ன இனியும் காணவில்லை என காத்துக் கொண்டு இருந்தார்கள் செல்வங்கள். அவர்கள் சத்தம் போடாமல் அமைதியாய் இருந்தது ஆச்சர்யமாய் இருந்தது. வாசன் வந்ததும் பாலு ‘’எனக்கு பாடத்தில பெயிலாப் போய்ருவோம்னு பயமா இருக்கு’’ என்றான். வாசன் ‘’இன்னும் பரீட்சைக்கு நாள் இருக்குத் தான, படிச்சிரலாம்’’ என்றதும் சிறு நம்பிக்கை வந்தவன் போல சரியென தலையாட்டினான். வீட்டின் வெளியில் வெளிச்சம் இருந்தது, அனைவருக்கும் பாய் விரித்து அமரச் சொன்னான் வாசன். அனைவரும் அமர்ந்தனர். பாடங்கள் சொல்லித் தந்தான். ‘’எவ்வள படிச்சாலும் மறக்குது’’ என பாலு தன் நிலையை வாசனிடம் சொன்னதும் ‘’ஒண்ணோட ஒண்ணு ஒப்புமை படுத்தி படிச்சா மறக்காது, இலகுவா ஞாபகம் வைக்க உதவும், நாம மனனம் செய்துதான் படிக்கனும் அதே வேளையில் புரிஞ்சி மனனம் செஞ்சா நல்லது’’ என்றதும் ‘’பரீட்சை முடிஞ்சிட்டா ஜாலிதான்’’ என்றான் பாலு.

வாசன் அதற்கு ‘’பரீட்சை முடிஞ்சாலும் படிச்சிக்கிட்டே இருக்கனும் இல்லைனா 'நூறு நாள் கற்ற கல்வி ஆறு நாள் விடப்போம்' மாதிரி ஆயிரும், இதற்கு அர்த்தம் தெரியுமா’’ என்றான். சுமதி சொன்னாள் ‘’நூறு நாள் படிச்சி ஆறு நாள் படிக்காம விட்டா நூறு நாள் படிச்ச கல்வி மறந்துரும்’’ என்றதும் ‘’ஆமா’’ என்றான் வாசன். ‘’அப்படின்னா படிச்சிகிட்டே இருக்கனுமா’’ என்றான் பாலு. ‘’விசயங்கள் தெளிவுபடுத்திக்கிற படிச்சிட்டுத்தான் இருக்கனும். வாழ்க்கைக்கு எவ்வளவு தூரம் உபயோக்கிறோம் அப்படிங்கிறது இரண்டாவது பட்சம்’’ என்றான் வாசன்.

‘’படிப்பு அப்படிங்கிரது ஒவ்வொரு விசயத்திலும் இருந்து படிக்கிறது, வெறும் புத்தகப் படிப்பு படிப்பாகாது. விசயம் தெரிய விசயங்கள் படிக்கனும் ஆனா எப்படி நடைமுறையில நடந்துக்கனுமோ அதுக்கு நமது விவேக புத்தியை உபயோகிக்கனும், அதுதான் சிறந்த கல்விக்கு வரைமுறை’’ என்றதும் பழனி ‘’இதை எங்க வாத்தியார் சொல்லமாற்றாரு, புத்தகத்தை படிங்கடா மனப்பாடம் பண்ணுங்கடான்னு சொல்றார்னே’’ என்றான். ‘’நீ எவ்வளவு விசயம் தெரிஞ்சவனா இருந்தாலும் பள்ளிக் கூடத்தில நீ எடுக்குற மதிப்பெண்கள் வைச்சித்தான் உன்னை எடை போடுவாங்க அதனால அவர் சொல்றதுதான் சரி, ஆனா உலக நடப்பு அப்படி இல்ல’’ என்றான் வாசன். பாடங்களை படித்து முடித்தார்கள். வாசன் நாளைக்கு பார்க்கலாம் என்றதும் சுமதி ‘’மாமா கதை’’ என்றாள். வாசன் சற்று யோசித்தவாறே இதோ நான் கேள்விபட்ட கதை சொல்றேன் என ஆரம்பித்தான்

‘’ஒருத்தன் மற்றவர்களுடைய மனசை படிக்கிற படிப்பை எடுத்து நல்லவிதமா படிச்சு முடிச்சான்’’ என்று வாசன் ஆரம்பிச்சதும் ‘’அது என்ன படிப்புன்னே’’ என்றான் பழனி. ‘’அதை ஆங்கிலத்தில சைக்காலஜினு சொல்வாங்க தமிழ்ல மன உளவியல்னு சொல்வாங்க’’ என்றதும் அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ‘’ சாமி கதை இல்லையா, நம்ம ஊருக்கு வந்தாரே ஒரு தாத்தா அவர் பத்தி இல்லையா’’ என்றான் பாலு. ‘’இல்ல இது வேற கதை’’ என்றான் வாசன். ‘’கதைய சொல்ல விடுங்கள்’’ என்றாள் வேணி.

வாசன் தொடர்ந்தான். ‘’அப்படி அவன் படிச்சி முடிச்சதும் தனது நண்பனோட கிராமத்தை விட்டு தள்ளி தனியா ஒரு வீடு எடுத்து தங்கினான்’’ ‘’அவர் நண்பன் என்ன படிச்சிருக்கார்னே’’ என்றான் பழனி. வாசன் சிரித்துக் கொண்டே ‘’அவன் நண்பன் சட்டம் படிச்சி இருந்தான், இப்படி இவங்க தங்கி இருந்தப்ப படிக்க பள்ளிக்கூடம் பக்கமே போகாத ஒருத்தர் இவனோட தனியான வீட்டை பார்த்து வந்தார்’’ ‘’யாருனே நம்ம முத்துராசு மாமா மாதிரியா’’ என்றான் பழனி. ‘’அப்படியெல்லாம் இல்லை’’ என்று சொல்லிய வாசன் ‘’கதைய கேளு’’ என்றான். ‘’நீங்கதான அண்ணே ஒப்புமை படுத்தி படிக்கச் சொன்னீங்க’’ என்றான் பழனி. மற்றவர்கள் அமைதியாய் கேட்டுக்கொண்டு இருந்தனர்.

‘’அந்த நேரம் பார்த்து அவனது சட்டம் படிச்ச நண்பன் வெளியூருக்கு போயிருந்தான், முன்ன பின்ன தெரியாதவர் இவன்கிட்ட வந்து எனக்கு பசிக்குது ஏதாவது கொடுன்னு கேட்டார்’’ அந்த நேரம் பார்த்து ஏதொ சொல்ல வாயெடுத்த பழனியின் வாயினை மூடினான் பாலு. வாசன் புன்னகைத்துக் கொண்டே ‘’உள்ள வாங்க அப்படின்னு அவரை வரவழைச்சி உணவு தந்தான், அவர்கிட்ட நிறைய நேரம் பேசிகிட்டு இருந்தான், அவரும் நிறைய விசயங்கள் பேசினார் அப்படி பேசிட்டு இருக்கறப்ப நேரம் போறதே தெரியல இருட்டிருச்சு, உடனே அவர் இங்க தங்கிட்டு காலையில போறேன்னு சொன்னதும் சரி அப்படின்னு சம்மதம் தந்து படுக்கச் சொன்னான். புதுசா வீடு போனதால நிறைய விலையுயர்ந்த பொருட்கள் எல்லாம் வங்கி வைச்சி இருந்தான், சரின்னு தூங்கினாங்க’’ என நிறுத்தினான் வாசன்

‘’என்ன அண்ணே ஆச்சு’’ என்றான் பழனி இம்முறை வாய் மூட வந்த பாலுவின் கைகள் விளக்கி. வாசன் தொடர்ந்தான். ‘’காலையிலே எழும்பி பார்த்தப்ப வீட்டுல இருக்குற பொருட்கள் எல்லாம் காணோம் அந்த ஆளையும் காணோம், அய்யோ ஏமாந்துட்டுமேன்னு தலையில கை வைச்சி உட்காந்துட்டான்’’ என்றதும் ‘’அவன் தான் பிறர் மனசை படிச்சிருக்கிறாரே மாமா பின்ன எப்படி’’ என்றாள் சுமதி. ம்ம் எனச் சொல்லிவிட்டு ‘’அவன் நண்பன் வந்தவுடன் இதை பார்த்து பதறிப் போய் என்ன ஆச்சுனு கேட்டான், அதுக்கு அவன் நேத்து ஒருத்தர் வந்தார் நல்லா பேசினார் பிறகு தூங்கனும்னு சொன்னார் இப்படி பண்ணிட்டு போய்ட்டார்னு’’ சைக்காலஜி படிச்சவன் சொல்ல சட்டம் தெரிஞ்சவனுக்கு கோவம்னா கோவம் ‘’அறிவு இருக்காடானு திட்டினான் முன்ன பின்ன தெரியதவங்களை எப்படி நம்பலாம் உன் படிப்பை உபயோகிக்க வேண்டியது தான’’ அப்படினு சொன்னான். அவன் சொன்னான் ‘’படிப்பை உபயோகிச்சு அவர்கிட்ட பேசினப்பறம் அவர் நல்லவருனு முடிவு பண்ணித்தான் தங்க விட்டேன்னு சொன்னதும் அவனையும் அவன் படிப்பையும் திட்டிக்கிட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்னு’’ அந்த நண்பன் சொன்னான்.

இங்க வந்து பொருள் எல்லாம் திருடிட்டு போனவரை அவர் வீட்டுல பார்த்த அவரோட மனைவி ‘’எப்படி இவ்வளவு பொருள்னு கேட்டாங்க அதுக்கு அவர் சிரிச்சிக்கிட்டே ஒருத்தனைப் பார்த்தேன் அவன் தலையில இளிச்சவாயன்னு எழுதி ஒட்டாத குறைதான் பேசி தூங்கறாப்ல நகர்த்திட்டேன்னு சொன்னார்’’ இதில இருந்து என்ன தெரியுது என்றான் வாசன். ‘’ஏமாத்துறவங்க ஏமாத்திட்டே இருப்பாங்க’’ என்றான் பாலு. ‘’கற்றது கையளவு கல்லாதது உலகளவு’’ சுமதி சொன்னாள். வாசன் சிரித்துக் கொண்டே ‘’ம்ம், எதிலயும் சமயோசிதமா சிந்திச்சு வாழனும், வெறும் புத்தகப் படிப்பை நம்பக் கூடாது’’ என்றதும் அனைவரும் நன்றி சொல்லிவிட்டு கிளம்பினார்கள் .

Tuesday, 13 April 2010

இனிமேல் எழுதுவதற்கு என்ன இருக்கிறது?

பசியால் துடிதுடிக்கும் பிள்ளை,  வறுமையின் கொடுமையை வரிகளில் வைத்த கொடுமை. இதுபோல் எத்தனை பிள்ளைகள் பசியால் துடிதுடித்து செத்து இருக்கும்? இன்னும் சாகும்?

ஊழல், லஞ்சம் என உழைப்பாளர்கள் வீணடிக்கப்பட்டு விட்டதை விடிய விடிய எழுதிய விரல்களில் வலி. இன்னும் ஊழல்களாலும் லஞ்சத்தினாலும் வலி குறையாத மானுடம்.

கற்பு, பெண்கள், குழந்தைகள், என ஐம்புலன்களின் அடக்கம் பற்றி அதி சிரத்தையுடன் எழுதப்பட்ட விசயங்கள். பாலியல் கொடுமையால் பாழடிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?

மதம், கடவுள் என்றே நல்வழி சொல்வதாய் புராணங்கள், பல நூல்கள். அதே மதங்கள் உற்சாகப்படுத்தும் தீவிரவாதங்கள். எத்தனை மனிதர்கள் உயிர் இழந்து போனார்கள்? பிரிந்தும் போனார்கள்?

விளை நிலங்களுக்கு ஏற்பட்ட பரிதாபம் குறித்து எழுதப்பட்ட குரல்கள். அழுகுரல்களைத் தவிர ஏதும் மிச்சமில்லை.

படிப்பதன் குறித்த அவசியம்! ஒழுக்கம் குறித்த விழிப்புணர்வு. ஏமாறும் மனிதர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை?

சாதி, இனம், மொழி வேற்றுமையில் ஒற்றுமை. வரி வரியாய் சொன்ன விசயங்கள். வேற்றுமை களைவதே ஒற்றுமை என வெறுப்பை வளர்க்கும் கூட்டங்கள்.  எதுவும் முடிவதாய் தெரியவில்லை.

இப்படி எத்தனை எத்தனையோ விசயங்கள் எழுதியும், சொல்லியும் எதுவும் மாறவில்லை. இனிமேல் எழுதுவதற்கு என்ன இருக்கிறது?

Friday, 9 April 2010

சாதிக்கலாம்னு இருக்கு

செத்துரலாம்னு இருக்கு. எனக்கு ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. மாணவர்களின் நிலையை எண்ணியும், தங்களது பணியை நினைத்தும் பல ஆசிரியர்கள் தற்கொலைக்கு முயன்று இருக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு சொல்கிறது.  முதன் முதலில் இப்படியொரு விசயத்தை பல ஆசிரியர்கள் தங்களது மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என கேள்விபட்டபோது எனக்கு ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. இப்படிப்பட்ட மனநிலை கொண்ட ஆசிரியர்களிடம் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் நிலையை எண்ணிப் பார்க்கும்போது கலக்கம் மட்டுமே மிஞ்சுகிறது. ஆசிரியர்கள் ஒழுங்காகச் சொல்லித் தரமாட்டேன்கிறார் என மாணவர்கள் சொல்லும்போது ஆசிரியப் பணிக்கு சென்று விடலாமா என மனம் எண்ணுகிறது. ஆனால் அதே மாணவர்கள் நடந்து கொள்ளும் விதம்தனை பார்க்கும் போது எதற்காக ஆசிரியப் பணிக்குச் செல்ல வேண்டுமென மனம் தடை போட்டு விடுகிறது.

போட்டிகள் நிறைந்ததுதான் இந்த உலகம். இது அனைவருக்கும் தெரிந்தே இருக்கிறது. சக மனிதர்களை மிதித்துதான் முன்னேற வேண்டுமெனில் அதை தைரியமாகவே செய் என்பதுதான் நடைமுறைப்படுத்தப்பட்ட கோட்பாடு. அடுத்தவர்களுக்கு வலிக்கும் என தயவு தாட்சண்யம் பார்த்துக் கொண்டிருந்தால் உங்களது வலியை பகிர்ந்து கொள்ள எவரும் வந்து நிற்க மாட்டார்கள் என்பதுதான் உலகம் கண்டறிந்த தத்துவம்.

மாணவர்களை ஒரு கட்டுபாட்டுக்குள் கொண்டுவர ஆசிரியர்கள் திணறித்தான் போகிறார்கள். பலதரப்பட்ட மனநிலை கொண்ட மாணவர்களை திறம்பட நடத்துவது என்பது ஆசிரியர்களுக்கு பெரும் சவாலான விசயமாகத்தான் இருக்கிறது. ஆனால் ஆசிரியர்களுக்கென சொல்லப்பட்ட 'வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை' எனும் சொல்வழக்கு இன்றும் மனதில் ஒருவித வலியைத் தந்துவிட்டேச் செல்கிறது.  எத்தனை மாணவர்கள், ஆசிரியர்கள் தங்கள் பொறுப்புதனை உணர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்?  படிப்பு என்பது ஒரு கடைநிலை விசயமாகவே மாணவர்களில் பலர் கருதுகிறார்கள் என்பது கண்கூடான உண்மை. இப்படிப்பட்ட மாணவர்களை நெறிப்படுத்துதல் என்பது என்ன எளிதான வேலையா? வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு மிகவும் எளிதான வேலையாகவேத் தெரிகிறது. ஏனெனில் வடையும், காபியும், வீட்டு சொந்த வேலையை செய்ய சொன்ன ஆசிரியர்கள் என பலர் நமது கண்களில் தெரிகிறார்கள்.

'என் தந்தை பணக்காரர், நான் ஏன் படிக்க வேண்டும்'  'பணம் சம்பாதித்த பலர் என்ன படித்தார்கள்?' என்றே மாணவர்களால் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. பணம் சம்பாதிக்க எந்த ஒரு பட்டமும் அவசியமும் இல்லை, எழுதப் படிக்கத் தெரிந்தாலே போதும் தான். அதுகூட பல நேரங்களில் அவசியமில்லை. பணம் மூலம் ஒரு கல்வியாளாரை விலைக்கு வாங்கி, உதவியாளராக வைத்துக் கொள்வது என்பது ஒன்றும் பெரிய கடினமான விசயம் இல்லை. மேலும் பணம் சம்பாதிக்க ஒரு பெட்டிக்கடை போதும். அயராத உழைப்பும், முயற்சியும், சிந்திக்கும் வல்லமையும், அதை செயல்படுத்தக்கூடிய திறனும் மூலதனமாக இருக்கும் பட்சத்தில் பணம் சம்பாதித்தல் ஒரு பெரிய விசயமே இல்லை என்றுதான் ஒரு இட்லி கடை வைத்தவர் பல ஹோட்டல்களுக்கு அதிபதியானார் என அறியலாம்.

மேலும் படித்தவர்கள் ஆயிரம் யோசனைகள் செய்வார்கள். படிக்காதவர்கள் ஒரு யோசனைதான் செய்வார்கள். ஆயிரம் குறிக்கோள்கள் உடையவர்கள் ஒரு குறிக்கோளினையாவது முறையாக அணுகுவார்களா என்பது கேள்விக்குறியே. இப்படியிருக்கும் பட்சத்தில் ஆசிரியர்களுக்கென தரப்படும் சம்பளமும், மரியாதையும் சமூகத்தில் ஒரு இழிநிலை தொழிலாகவே ஆசிரியப்பணி கருதப்பட்டு வருகிறது. இந்த ஆசிரியர்கள் தங்களது வாழ்வில் எத்தகைய காரியங்களைச் செய்யவல்லக் கூடியவர்கள் என சற்று சிந்தித்துப் பார்த்தால் மொத்த உலகத்தையே ஒரு நேர்வழிப்பாதையில் கொண்டு செல்லும் திறன் படைத்தவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் எத்தனை ஆசிரியர்கள் தங்களது கடமையுணர்வை அறிந்தவர்களாக இருக்கிறார்கள்?

ஒரு வகுப்பில் அறுபது மாணவர்கள் இருந்தால் அதில் இருபது மாணவர்கள் நன்றாகப் படிக்கக்கூடியவர்கள், மற்ற இருபது மாணவர்கள் சுமாராகப் படிக்கக் கூடியவர்கள், அதற்கடுத்த இருபது மாணவர்கள் படிப்பை சுத்தமாக வெறுக்கக் கூடியவர்கள் என வைத்துக் கொள்வோம். இப்பொழுது ஆசிரியர்களின் நிலை என்ன? அனைவரையும் நன்றாக படிக்க வைத்து அனைவரையுமே சிறந்தவர்களாக கொண்டு வருவதுதான், ஆனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆணை எதுவென அறிந்தால் தலைசுற்றல் தான் வந்து சேரும். ஆம், கடைசி இருபது மாணவர்களை கண்டு கொள்ள வேண்டாம், அனைவரும் அறிவாளிகள் ஆகிவிட்டால் ஒரு சில வேலைகள் செய்வது எவர் என்றே அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். என்ன ஒரு கோட்பாடு? மாணவர்கள் தாங்கள் என்ன வேலை செய்ய விருப்பப்படுகிறார்கள் என விட்டுவிடவும் முடியாது, ஏனெனில் பலருக்கு ஒரு தெளிவான முடிவுதனை எடுக்கும் பக்குவம் இருப்பது இல்லை.

படித்துவிடுவதால் வரும் பெரும் பிரச்சினைகள் அளவிடமுடியாதவை. இவ்வளவு படித்துவிட்டு எதற்கு இந்த வேலை செய்கிறாய்? என்றே கேட்கப்படும் கேள்விகளால் மனம் உடைந்து போவோர்கள் எத்தனை பேர்? படித்தவர்கள் எத்தனை பேர் விவசாயம் பார்க்கிறார்கள்? அதே வேளையில் 'அவன் படிக்காதவன், அப்படித்தான் இருப்பான்' என்பது எத்தனை செளகரியமாக இருக்கிறது.

இந்த ஆசிரியர்கள் மன அழுத்தத்திற்கு உட்படுவது என்பது இன்றைய காலகட்டத்தில் ஒன்றும் அதிசயமில்லை. மாணவர்களால் மட்டுமல்ல, பெற்றோர்களினாலும் ஆசிரியர்கள் பெரும் அவதிக்கு உட்படுகிறார்கள். வீட்டிலிருந்தே நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு படிப்புச் சொல்லித் தர இயலுமெனில் பள்ளிக்கூடம் எதற்கு என்றே பெற்றோர்களின் மனநிலை இருக்கிறது. ஒரு ஆசிரியர் சொல்லித் தருவதை திறம்பட பின்பற்றும் மாணவரே முன்னுக்கு வருவார் என்பதை ஏன் பெற்றோர்கள் உணர்வதில்லை! தங்களது பிள்ளைகளை கண்டிப்புடன் வளர்க்காமல் பொறுப்புகளை தட்டிக்கழிக்கும் பெற்றோர்கள் எத்தகையவர்கள்?

நாம் ஒவ்வொருவரும் ஒருவிதத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தான். கற்றுக் கொள்வதும், கற்றுக் கொடுப்பதும் என நாம் ஒவ்வொரு நிமிட வாழ்க்கையிலும் அறிந்து கொள்வது என்பது அளவிடமுடியாதது. இதில் ஆசிரியர்கள் என அவர்களுக்கு மட்டும் தனி பொறுப்பு என்பது எவர் போட்ட சட்டம்? ஆசிரியர்களே, உங்கள் கடமையை நீங்கள் சரி வரச் செய்து வாருங்கள், செத்துரலாம்னு இருக்கு எனச் சொல்வதை விட்டுவிட்டு இன்னும் இன்னும் சாதிக்கலாம்னு இருக்கு என சொல்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த இடுகையை அனைத்து ஆசிரியர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.