Monday 19 April 2010

வேகமாக இயங்கிட மறுக்கும் வலைப்பூக்கள்

நாம இருக்கிற அவசரத்துல நமக்கு உடனே உடனே எல்லாம் கிடைச்சாத்தான் அடுத்த அடுத்த வேலையை பர்ர்த்துட்டு போக முடியும். இருந்தாலும் சில விசயங்களுக்கு பொறுமையா இருக்கணும் அப்படிங்கிற ஒரு விதி இருக்கத்தான் செய்து. அப்படி நாம பொறுமையா இல்லைன்னா நமக்குத்தான் நஷ்டம்.

அதுவும் இந்த வலைபூக்கள் இருக்கிறதே அது சில நேரங்களில் வலி தரும் பூக்கள் போல ஆகிவிடுகிறது. அது இது அப்படி இப்படினு நம்ம வலைப்பூக்கள்ல இணைச்சி வைச்சிட்டா வலைப்பூக்களோட வேகம் குறைஞ்சி போயிறது பல நாளா நடக்கிற கொடுமை.

எனக்கு சில நேரங்களில பொறுமை இருக்கும், வலைப்பூ திறக்கிற வரைக்கும் இருந்து படிச்சிட்டு போயிறது. சில நேரங்களில அந்த மாதிரி சமயத்தில எதுக்கு படிக்கணும்னு அடுத்த வலைப்பூ பக்கம் திரும்பிரது. இதெல்லாம் எதுக்கு பிரச்சினை அப்படின்னு ரீடர்ல படிக்கிறவங்க இருக்கத்தான் செய்றாங்க. ரீடர்ல படிக்கிறது எப்படின்னா வீட்டுல உட்கார்ந்து திரைப்படம் பார்க்கிற மாதிரி. ;)

இப்படித்தான் இந்த வலைப்பூ கூட பிரச்சினையில பல நாளா இருந்துட்டு வந்தது. என்னவெல்லாம் பண்ணி பார்த்துட்டேன். ஒன்னும் புரியல. சில நேரங்களில் தமிழ்மண சேவைக்கு காத்து இருக்கிறேன் என வரும். நானும் காத்து இருக்கிறேன்னு இருந்தேன். அப்புறம் அமித் ஜெயினுக்காக காத்து இருக்கிறேன் என வர ஆரம்பிச்சது. அப்போ நான் திருமண பந்தம் அப்படிங்கிற கவிதைக்கு ஒரு படம் இணைச்சிருந்தேன். அப்பத்தான் இந்த அமித் ஜெயின் என்னோட வலைப்பூ தனில் நான் படிக்க கடவு சொல் எல்லாம் கேட்டு வைச்சது. அதற்கப்புறம் படத்தை எடுத்துட்டேன், அது மாதிரி எதுவும் வரலை. ஆனா வலைப்பூ வேகம் குறைய ஆரம்பிச்சது. சரி அப்படின்னு எல்லா உபரிகள் வெளியேற்றினேன். அப்புறம் வேகம் ஆமை வேகம் தான். நமக்கு மட்டும் தான் இந்த பிரச்சினைன்னு நினைச்சேன். ஆனா சகோதரி சித்ரா சொன்னதும்தான் இந்த பிரச்சினையோட தன்மை புரிய வந்தது. நன்றி சித்ரா.

சரி இந்த அமித் ஜெயின் யாருன்னு தேடித் பார்த்தா ஒரு இணைய தளத்துல நான் அமித் ஜெயின் அப்படின்னு ஒரு சின்ன விளம்பரம். என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டு இருக்கறப்ப டெம்ப்ளேட் உள்ளார பார்த்தா இந்த அமித் ஜெயின் கோடிங் இருந்தது. அதை நீக்கினேன். இப்ப வேகமா வேலை செய்கிறது.

இது என்னன்னா நாம எத்தனை பேர் நம்ம பதிவை பார்த்தார்கள்னு பார்க்க ஒரு கோடிங் அது. எத்தனை பேர் பார்க்கிராங்கனு தகவல் பெற போய் பார்க்க வரவங்களுக்கு ஒரு எரிச்சல் தரக்கூடிய கோடிங் நமக்கு தேவைதானா? அது போல வேகமாக இயங்க மறுக்கும் வலைப்பூக்கள் எல்லாத்தையும் ஒரு நிமிஷம் சரி பார்த்துருங்க, படிக்க வரவங்களுக்கு சௌகரியமாக இருக்கும். வேற கோடிங் கிடைத்தால் அதை இணைத்துவிட்டு சரி பார்த்து கொள்ளலாம். நன்றி.

Friday 16 April 2010

சிரிக்கத் தெரியாதுங்க, மன்னிச்சிருங்க.

எத்தனை தடவை, திரும்பத் திரும்ப ஒளிபரப்பினாலும், அதே நகைச்சுவை காட்சிகள் பார்த்து ரசித்து சிரித்து மகிழ்ந்து இருப்பேன். எத்தனை தடவை நகைச்சுவை பதிவுகள் பார்த்து மனம் விட்டு சிரித்து இருந்திருப்பேன். சிரிப்பு ஒன்றுதான் மனிதர்களை மற்ற விலங்கினங்களிடமிருந்து வித்தியாசப்படுத்துகிறது என சொல்லும் போதெல்லாம் சிரிப்புடன் சிந்தனையும் வந்து சேர்ந்து விடுகிறது.

சிரிப்பது என்ன அவ்வளவு கஷ்டமான வேலையா? பிறரை சிரிக்க வைப்பது என்பது என்ன அவ்வளவு கஷ்டமா? எனக் கேள்வி கேட்டால் பல நேரங்களில் ஆமாம் என்றே சொல்லத் தோன்றுகிறது.

நகைச்சுவை என்பது மிகவும் மெல்லிய கயிறு. அதை சற்று அதிகமாக இழுத்துவிட்டால் அறுந்து போகும் தன்மை உடையது. இதில் வயது வந்தோர்க்கான நகைச்சுவையும் இருக்கத்தான் செய்கிறது. அதில் வக்ர எண்ணங்கள் தலை காண்பித்தாலும் அவை நகைச்சுவை எனும் போர்வையால் மறைக்கப்பட்டு விடுகிறது. நகைச்சுவை உணர்வுடன் எல்லா விசயங்களையும் அணுகினால் துன்பம் விலகிப் போய்விடும் என்பது சத்தியமான உண்மை, ஆனால் அந்த நகைச்சுவைதனை எல்லா இடங்களுக்கும் பொருத்திப் பார்ப்பது இயலாத காரியம்.

நகைச்சுவை என சொல்லிக் கொண்டு எதை வேண்டுமானாலும் சொல்லலாம், செய்யலாம் எனும் உரிமையே பல நேரங்களில் எதிர்பாராத விளைவுகளை கொண்டு வந்து சேர்த்து விடுகிறது. நகைச்சுவைதனை உற்று நோக்கும் போது தோன்றுவது என்னவெனில் ஒருவரின் முட்டாள்தனத்தை கண்டு சிரிக்கிறோமா அல்லது ஒருவரின் சமயோசித புத்தியை நினைத்து ரசிக்கிறோமா என பாகுபாடு பார்க்க இயல்வதில்லை.

ஒன்றின் மீது நம்பிக்கை வைத்து செயல்படுவது என்பது அந்த நம்பிக்கையின் அடிப்படை.  பிறரது நம்பிக்கைகள் கேலிக்குரியதாகத் தெரியலாம். பிறரின் செயல்பாடுகள் அர்த்தமற்றதாகத் தெரியலாம். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுபவர்களுக்கு ஒரு விசயத்தை தன்மையுடன் புரிய வைக்காமல் நகைச்சுவை செய்தால் சிரித்துவிட்டுத்தான் போகத் தோன்றும், சிந்திக்கத் தோன்றாது.

நான் மிகவும் கோபக்காரனாகவே தெரிகிறேன், முகத்தை கடுகடுவென வைத்திருக்கிறேன் என பலரும் சொல்லும்போது மனதுக்குள் சிரித்துக் கொள்கிறேன். 'இஞ்சி தின்ன குரங்கு' எனும் பழமொழியை 'உர்ராங்கொட்டான்' எனும் அடைமொழியை என்னால் மிகவும் ரசிக்க முடிகிறது.

கலகலப்பாகவே பேசும் வழக்கத்தை வைத்திருக்கிறேன். ஆனால் பேசி முடித்து கிளம்புகையில் ஒரு வெறுமை உணர்வு எட்டிப் பார்க்கிறது. துயரப்படுபவர்கள் கண்களில் வட்டமிடுகிறார்கள். அடுத்தவர்களை பாவம் என்று எண்ணாதே, நீதான் பாவம் என என்னை நோக்கிச் சொல்லும்போதெல்லாம் என்னால் சிரித்து மகிழ்ந்திருக்க இயலவில்லைதான்.

பொது நல வாழ்க்கைக்காக வசதியான வாழ்க்கையை துறந்துவிட்ட பல தலைவர்களை கோமாளிகள் என பிறர் சொல்லக் கேள்விபடும் போதெல்லாம் இனம் புரியாத வலி வந்து சேர்ந்துவிடுகிறது. இலங்கையில் துயரப்படும் தமிழ் உறவுகளை கண்டு ஆத்திரத்திலும், ஆதங்கத்திலும் பேசிப் பேசியே அந்த கொடிய நிகழ்வுகளை நகைச்சுவையாக்கும் தன்மை கண்டு சிரித்து மகிழ எப்படி முடியும்?

என் சட்டைப் பையில் கொஞ்சம் பணம் அதிகமாகவே இருக்கிறது, அழுத பையன் அழுதபடியே எனும் வரிகள் என்னை வாட்டும் போதெல்லாம் எப்படி என்னால் மகிழ்ந்து இருக்க இயலும்?

இப்படி எத்தனையோ வாழ்வியல் கசப்புகளை மறந்துவிட்டு எப்பொழுதும் சிரித்து மகிழ்ந்திருங்கள் எனச் சொல்வது நகைச்சுவையாகத்தான் இருக்கும். இருப்பினும் எதையும் மாற்ற இயலாது, ஏன் வீணாக மனதையும் உடம்பையும் கெடுத்துக் கொள்கிறீர்கள் என்று சொல்வதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது. கல்யாண வீட்டில் அழுது கொண்டிருப்பது எத்தனை அசெளகரியமோ அது போல சாவு வீட்டில் சிரித்துக் கொண்டிருப்பது அத்தனை அசெளகரியம். இந்த பூமியானது கல்யாண வீடாகவும், சாவு வீடாகவும் மாறி மாறி காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. எங்கெங்கு அழ வேண்டுமோ அங்கங்கு அழுது விடுவதும், எங்கெங்கு சிரிக்க வேண்டுமோ அங்கங்கு சிரித்து விடுவதும் செளகரியமான ஒன்றாகவே இருக்கிறது.

ஒரு பட்டிமன்றம் பார்த்த போது நான் மிகவும் ரசித்த நகைச்சுவை ஒன்று:

மனைவி: 'இன்னைக்கு சாம்பார் வைக்கவாங்க, இல்லைன்னா ரசம் வைக்கவாங்க'

கணவன்: 'நீ ஏதாச்சும் ஒன்னு செஞ்சி வைச்சிரு, அப்புறம் பேரு வைச்சிக்கலாம்'

வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும். உலக உயிரினங்கள் யாவும் எப்போதும் மகிழ்ந்திருக்க நல்லதொரு வாய்ப்புதனை நல்குவாய் பரம்பொருளே.

Thursday 15 April 2010

தண்ணீர் கண்ட பின்பு மரம் ஆனேன் - தொடர் பதிவு.


அடுத்த கட்ட அழையா தொடர் பதிவு. தண்ணீரும் மரம் வளர்ப்பதின் பயன்பாடும்.

இந்த பூமியில் மட்டும் எப்படி இவ்வளவு தண்ணீர் வந்ததுனு புது புது கதையா அறிவியலுல படிச்சேன். அட எதுக்கு மத்த கிரகத்தில எல்லாம் இந்த மாதிரி தண்ணி இல்லைன்னு நினைச்சப்போ ஒன்னும் புரியல. வியாழன் கிரகத்தில மீத்தேன் வாயு நீர் மாதிரி ஓடி திரியுதாம். கொமேட்டு கூட பனியாத்தான் இருக்குதாம். செவ்வாயில கூட பனி உறைஞ்சி இருக்காம்.

இப்படி மொத மொதல எல்லாம் கிரகங்களும் சூரியனிலிருந்து வெடிச்சி சிதறி வந்தப்ப எரிமலை குழம்பாக இருந்த இந்த பூமியில எப்போ பார்த்தாலும் அம்மோனியா, மீத்தேன் வாயு தான் இருந்துச்சாம், அதோட நிறைய கரியமில வாயுவும் கூட, கொஞ்சம் நீராவியும் இருந்துச்சாம் . அப்புறம் பூமி குளிர்ந்தப்ப மெதுவா நீராவி எல்லாம் தண்ணியா மாறி பூமியில கொட்டிச்சாம். அப்போதான் முதல் தண்ணீர் இந்த பூமியில உருவானதாம். அதோட மட்டுமில்லாம இந்த கொமேட்டு வந்து மொத்தமா பூமியில தண்ணிய கொட்டிட்டு போச்சுன்னு சொல்றாங்க.

அப்போ முத முத உருவான தண்ணி நல்ல தண்ணியா, உப்பு தண்ணியா அப்படின்னு யாருக்குத் தெரியும். இப்படி இருக்கறச்சே கடலு எல்லாம் உருவாகி இருக்கு. கடலு உருவாகி இருக்குன்னு சொன்னதும் தான் உப்பு தண்ணிதான் முதல வந்துருக்கணும் அப்படின்னு நினைக்க தோணுது. அந்த உப்பு தண்ணியில இருந்துதான் உயிரினங்கள் தோன்றி இருக்கும்னு ஒரு கதை படிச்சேன்.

மெல்ல தாவரங்கள் வர ஆரம்பிச்சதாம். அந்த தாவரங்கள் இந்த தண்ணியையும், கரியமில வாயுவையும் சேர்த்து வைச்சி உணவு தயாரிக்க ஆரம்பிச்சதாம். அப்படி இருந்த சமயத்தில்தான் கரியமில வாயு எல்லாம் குறைய ஆரம்பிச்சி, ஆக்சிஜன் அதிக அளவில உண்டாச்சாம். அப்புறம் தான் மத்த உயிரினங்களும் தோன்ற ஆரம்பிச்சதாம். அதோட வான் படலம் ஒன்னு உருவாச்சாம். இப்படி உருவான தண்ணி, மலைகள் இருக்கிற மூலிகைகள் மேல உரசி ரொம்ப நல்ல தண்ணியா இருந்துட்டு வருதாம். தாவரங்கள் தான் நல்ல தண்ணீர் வர காரணம்.

எல்லா ஒரே நிலபரப்பா இருந்த பூமிய இந்த தண்ணி தான் வந்து பிரிச்சி போட்டுச்சுனு சொல்வாங்க. எங்க பார்த்தாலும் கடலு. ஆனாலும் கடலு உப்பாத்தான் கிடக்கு, அதுக்கு முக்கிய காரணம் சோடியம்னு சொல்றாங்க. நம்ம கிணத்துல குளத்துல இருக்கற தண்ணியில கால்சியம், மெக்னீசியம் எல்லாம் அதிகம் இருந்தா அந்த தண்ணி உப்பு தண்ணி. அது இல்லாம இருந்தா நல்ல தண்ணி.

ஊருல நல்ல தண்ணி கிணறு, உப்பு தண்ணி கிணறுனு இருக்கும். ஊருல தண்ணித் தொட்டி எல்லாம் அப்போ கட்டாமதான் இருந்தாங்க. அதனால எங்கனயாவது போய் நல்ல தண்ணி எடுத்துட்டு வருவாங்க. அப்புறம் ஊருல குழாய் எல்லாம் போட்டாங்க. ஆனா தினமும் தண்ணி விடமாட்டாங்க. காசு வைச்சிருக்கவங்க அவங்க அவங்க வீட்டுக்கு தனியா குழாய் இணைப்பு வாங்கி வைச்சிட்டாங்க. இந்த தண்ணிக்காகவே குழாயடி சண்டை எல்லாம் ரொம்ப பிரமாதமா இருக்கும். தண்ணீர்தனை  அதிகமா அனாவசியமா செலவழிக்கக் கூடாதுனு எல்லாருக்கும் தெரியணும். .

அப்புறம் ஊருக்கு பொதுவா போர்வெல் எல்லாம் போட்டு வைச்சிட்டாங்க. அது என்னமோ நல்ல தண்ணியா அமைஞ்சிருச்சி. போர்வெல் போட்டு போட்டு இப்போ எல்லாம் உப்பு தண்ணியா மாறிட்டு வருதாம். இப்படி தண்ணி ஒரு பக்கம் இருக்கறப்ப மரமும் எங்க பார்த்தாலும் ஊருல இருந்துச்சி. நான் படிச்ச பள்ளி கூடத்தில மரக் கன்று எல்லாம் நட்டு வைப்போம். ஊரு ரோட்டோரமா புளிய மரம் எல்லாம் இருந்தது.

மரங்களே இல்லாதப்ப வந்த தண்ணி, மரங்கள் வந்ததும் மழையா பொழிய ஆரம்பிச்சி இருந்துச்சு. மரங்கள் குளிரிச்சியை தருதுன்னு சொன்னாங்க. மலைகள் இருக்குற பக்கம் எல்லாம் நல்ல மழை விழுமாம்ல. எங்க பக்கத்து ஊருல தொடங்கி மெதுவா மரங்களை வெட்ட ஆரம்பிச்சாங்க. மழை பெய்யாம போயிருச்சி. அப்போ அப்போ மழை கஞ்சி எல்லாம் எடுத்துருக்கோம். யாருமே மரத்தை நடுங்கனு சொன்னதில்லை. வேப்ப மரம் மாரியாத்தாவுக்கு சொத்துன்னு சொல்லி வைச்ச ரகசியம் புரியலை.

மரத்தை வெட்ட வேணாம்னு சொன்னா யாரு கேட்கறா. தானா வளருற  மரத்தை மனிசருங்க பண்ணுன காரணத்தால ஒவ்வொருத்தரும் நட்டு வைச்சி வளர்க்க வேண்டியதா போச்சு. அசோக மன்னர் சாலை இருபுறங்களிலும் மரத்தை நட்டு வைக்க சொன்னார். இப்போ ஊருக்கு போயிருந்தப்ப ரோட்டோரம் மரத்தை எல்லாம் காணோம். சாலை விரிவாக்கம் செய்றாங்களாம். மரத்தை நட்டு வைச்சிருவாங்க தானே. அப்படி மரம் இல்லாம பாக்கறப்போ வெறிச்சினு எதையோ பறி கொடுத்ததை போல இருந்துச்சி.


மரம் வளர்ப்போம், மழை பெற வைப்போம். மரம் வளர்ப்போம் மனிதம் வளர்ப்போம். நிலத்தடி நீரை உறிஞ்சாமல் மழை நீரை சேமித்து மேலும் மேலும் மரம் வளர்ப்போம். உலக வெப்பமயமாதல் பத்தி எல்லாரும் கவலை படறாங்க. கவலைபட்டா போதாது, ஒரு செடி என்ன ஓராயிரம் செடி வளர்க்கணும். பயோடீசல் உருவாக்கணும். இந்த தாவரங்கள் நமக்கு மருந்து. நீர் தரும் ஆதாரம்.

எப்பவோ எழுதின கவிதையில கடைசி வரி எனக்கு எப்பவுமே பிடிச்சது. 'எதிர்கால இருளுக்கு நிகழ்கால வெளிச்சம் விதையுங்கள்' தாவரங்கள் இல்லைன்னா எந்த உயிரினமும்  இல்லை. எனவே தாவரங்கள்  பாதுகாப்போம். நீர் சேமிப்போம்