Showing posts with label பதிவர் மாவட்டம். Show all posts
Showing posts with label பதிவர் மாவட்டம். Show all posts

Sunday 28 March 2010

ஆண்டிகள் சேர்ந்து கட்டிய மடம்

எனக்கு இந்த கதையைப் பத்தி முத முத எப்பத் தெரியும்னா நாங்க இங்க ஒரு அமைப்பை உருவாக்க ஜனவரி மாசம் திட்டம் போட்டோம். அதாவது ஊருல இருக்கிற அதாவது தென்மாவட்டங்கள்ல இருக்கிற கிராமத்து பகுதிகளுக்கு நலத்திட்டம் செய்யனும்னு. ஆரம்பிக்கிறப்பவே என் மாமா மகன் சொன்னான், ஆண்டிகளல்லாம் சேர்ந்து கட்டிய மடம் போல ஆகிரக்கூடாதுனு, அப்பதான் என்னனு கேட்டு தெரிஞ்சிக்கிட்டேன். சாமிகளா, தமிழ்வலைப்பதிவர் குழுமத்தை அதுமாதிரி ஆக்கிப்பூடாதிங்கனு சொல்லத்தான் இந்த பதிவு.

எப்படி ஒரு அமைப்பு ஆரம்பித்தோம்னு சொல்றேன் கேளுங்க. சமூக சேவை செய்ற நினைப்புள்ளவங்களா உறவினர்களுக்குள்ள பேசி ஒரு முடிவுக்கு வந்தோம், சரி எப்படித்தான் ஆரம்பிக்கிறதுனு ஒரு திட்டம். இலண்டன் ஸ்ரீவைஷ்ணவ டிரஸ்ட் அப்படினு ஒரு பெயரை மனசில நினைச்சிக்கிட்டு ஒரு ஹோட்டலுல பதினாலு பேரு குழுமியிருந்தோம். எனக்கு அன்னைக்குனு பாத்து வாந்தியும், காய்ச்சலுமா வந்து சேர்ந்தது அந்த நாராயணன் புண்ணியமோ என்னவோ!

மிகவும் நேர்த்தியா லேப்டாப் சகிதமா என்னோட சொந்த அண்ணன் பல திட்டங்களோட வந்தாரு. மைக் எல்லாம் பிடிச்சி யாரும் பேசல. உங்களுக்கு ஏன் இப்படி ஒரு அமைப்பு ஆரம்பிக்கனும்னு விருப்பம், உங்க நோக்கம் என்னனு ஒவ்வொருத்தரா சொல்ல சொன்னாரு. எல்லாரும் ஊருல இருக்கறவங்களக்கு பொதுவா வயதானவர்கள், கல்வி உதவிக்கு நிற்பவர்கள், ஆதரவற்றோர் போன்றவர்களுக்கு நாம உதவுனும், அதை தனிப்பட்ட மனிசரா செய்றதை விட சேர்ந்து செஞ்சா நல்லாருக்கும், மேலும் வியாபார நோக்கமும் இருக்கனும், அந்த வியாபார நோக்கத்தின் மூலம் வர பணத்தை ஊருக்கு தந்து உதவனும், சுற்றுலா போகனும் அப்படினு ஒவ்வொருத்தரும் ஒரு கனவை சொன்னோம். தலைவர், உபதலைவர், பொருளாளர், செயலாளர் அப்படினு ஒரு மனதா தேர்ந்தெடுத்தோம், அவங்க ரெண்டு வருசத்துக்குத்தான் பதவில இருப்பாங்க, அப்புறம் புது ஆளுக, முதல இருந்தவங்க இருக்க முடியாது. அப்படியே சுற்று சுற்றி வரும். நல்லாதான் இருந்தது. எல்லாரும் இலண்டன் ஸ்ரீவைஷ்ணவ டிரஸ்ட் னு முடிவு பண்ணி பஜ்ஜி, சிக்கன் (வைஷ்ணவம்னா அசைவத்தை நிறுத்துங்க சாமிகளானு ஒரு சத்தம் கேட்டது ) சமோசா, கொகோ கோலா அப்படினு கூட்டம் முடிஞ்சிப் போச்சு. என்னாலதான் எதுவுமே சாப்பிட முடியல. நான் எந்த பதவியும் எடுத்துக்கல, ஏன்னா அந்த நாராயணன் புண்ணியமோ என்னவோ.

பெயரை எல்லாம் பதிவு செய்யனும்னு ஒரு நிர்வாகம் ஆரம்பிக்க முடிவு பண்ணியாச்சு. தைல முடிச்சிரலாம்னு பாத்தோம். ஆனா இன்னமும் நிர்வாகம் பதிவு செய்யலை, பேசினப்பவோ இது உடனடி விசயம் இல்ல, ஐந்தாண்டு திட்டம்னு தெளிவா இருந்தோம், ஒவ்வொருத்தரும் அத்தனை பிஸி. இதுல சமூக சேவைக்கு நேரம் ஒதுக்கறது அத்தனை சுலபமா என்ன. ஏன்னா கூடியிருந்த பதினாலு பேருல எட்டு பேரு முன்னமே மகாலக்ஷ்மி கோவில் நிர்வாகத்தில் இருந்தவங்கதான், அவங்கங்களுக்கு கடுமையான வேலைப்பளு மத்த இதர காரியங்களால, விலகிப் போனவங்கதேன். நான் அந்த கோவிலுல சேர்மனு, செயலாளர், அப்படி இப்படினு பதவி வகிச்சிருக்கேன், அப்புறம் எனக்கு நாராயணனா ரொம்பப் பிரியம். எனக்கு இப்படி ஒன்னா புதுசா ஆரம்பிச்சி செய்றதுக்கு அந்த கோவில் மூலமா செய்யலாமேனு ஒரு ஆதங்கம் எப்பவும் இருக்கு, ஆனா நிலமை அத்தனை சுலபமா இல்லனு தெரிஞ்சதலா புதுசா ஆரம்பிச்சே செய்வோம்னு இவங்களோட இறங்கிட்டேன்.

ஒரு குழு ஆரம்பிச்சி செய்றது ஒன்னு ஈசி இல்ல, என்னமோ ஆரம்பிச்சோம், அதைச் செஞ்சோம், இதைச் செஞ்சோம்னு இருக்கறது பேரு குழு இல்ல, ஒரு தெளிவான, திட்டமிட்ட தைரியமான மனசு வேணும். எப்பவும் கொள்கை விலகாத உறுதி வேணும். அதெல்லாம் நம்ம மக்களுக்கு இருக்கானு நம்மளையே கேட்டுப் பார்த்தாக்க நல்லாவே புரியும்.

பதிவு பண்றதாக்கான பேப்பர் வேலை எல்லாம் ஜரூரா நடந்துக்கிட்டுதான் இருக்கு, என்ன பதினாலு பேரு கையெழுத்துப் போடுறதுக்கு ஒரு மாசம் ஆகிப்போச்சு ;) அட ஒன்னு சொல்ல மறந்துட்டேனே, கூட்டத்துக்கு வந்த ஒருத்தரு எனக்குப் பிடிக்கலனு விலகிக்கிறேனு சொன்னாரு நாங்களும் சரினு சொல்லிட்டோம். அதுக்கு பதிலா இன்னொருத்தரு வந்து சேர்ந்துருக்காரு. அப்புறம் ஸ்ரீவைஷ்ணவனு சுருக்க வேணாம்னு வேற பேர முடிவு பண்ணிட்டோம், அதுக்கு நாங்க எடுத்துக்கிட்ட நாளு கணக்கு என்னவோ சரியா சொன்னா மூணு வாரம். பொறுமையா எதையும் செய்யனும்னுங்கிற பக்குவம் முதல வேணும். சோ காட்டுறதுக்கு ஒரு குழுவோ அமைப்போ ஆரம்பிக்கக்கூடாது, சரிதானே நான் சொல்றது.

குழு ஆரம்பிக்க முன்னாடி நாங்க பேசிக்கிட்டது என்னவோ இதுதான், ஒருமித்த கருத்தில்லாத எவரையும் நிர்வாக குழுவில் சேர்ப்பதில்லை, ஆனால் அவர்கள் நன்கொடை தந்தால் வாங்கிக்கொள்வோம். எவரேனும் எதிராகப் போனால் பொங்கலும் சுண்டலும் தந்து மரியாதையாக அனுப்பி விடுவோம், மேலும் பணம் கொடுப்பவர்களுக்கு பொங்கலும் சுண்டலும் நிச்சயம் உண்டு. அப்படி இப்படினு நகைச்சுவையா ஆரம்பிச்சோம், இப்ப நடக்கறதைப் பாத்தா ஒன்னுமே ஆகாது போலனுதான் நினைப்பாங்க ஆனா எங்க கனவை இந்த குழுவை வெற்றிகரமாக நடத்தி நிச்சயம் நிறைவேத்துவோம்னுங்கிற நினைப்பு எங்களுக்கு இருக்கு என்ன கொஞ்ச நாளு ஆகலாம், அதுக்காக உடனே அவசரப்பட்டு அது இதுனு எழுதிப்பூடாதிங்கண்ணே, நாலு சுவத்துக்கல நல்லா பேசி ஒரு முடிவுக்கு வந்தப்பறம் பதிவை எழுதுங்கண்ணே, இந்த விசயத்துல மட்டும் மனசுல தோணுனதை பதிவுல எழுதறதை நிறுத்திட்டு ஆண்டிகள் சேர்ந்து மடம் கட்டினத போல இல்லாம ஒரு அட்டகாசமான அமைப்பை கொண்டு வாங்கண்ணேனு எல்லாரையும் கேட்டுக்கிறேன். எங்கனாச்சும் தப்பா எழுதி இருந்தா வருத்தம் தெரிவிச்சிக்கிறேண்ணே. அடுத்தவங்களை அனுசரிச்சி ஒருத்தொருக்கொருத்தர் விட்டுக்கொடுத்துப் போற பழக்கத்தை முதல கையில் எடுங்கண்ணே.

ஊருல இருந்து இருந்தா உங்களையெல்லாம் வைச்சி ஒரு கட்சி ஆரம்பிச்சிருக்க மாட்டேன். (இப்படி வெட்டி சவாடலெல்லம் வேண்டாம்ணே). அப்புறம் ஒன்னு கவனத்துல வைச்சிக்கோங்கண்ணே, ஆரம்பிக்கிறப்போ அப்படி இப்படினு தான் இருக்கும், ஒரு தெளிவான நோக்கம் இருந்துட்டா அசைக்க முடியாதுண்ணே. நான் தான் ராசா னு இருக்கிற பதிவுலகத்துல நாங்கதான் சேவகர்களுனு சொல்லிப் பாருங்கண்ணே, தமிழ் வலைப்பதிவர்கள், இணைய பதிவர்கள் அப்படிங்கிற பவர்னு பளிச்சினு இருக்கும்.

Monday 22 February 2010

பதின்ம கால மனக் குறிப்பேடுகள் (2) - தொடர் அழைப்பு


2007ல் இந்தப் படத்தைக் காட்டி கவிதை எழுதச் சொன்னபோது எனக்கு நினைவுக்கு வந்தவன் பாண்டி.

தரையில் பம்பரம் சுற்றவிட்டால்
அதன் தலையில் அடிப்பான் பாண்டி
போன மாதம் பம்பரம் உடைந்து
புது பம்பரம் வாங்க காசு இன்றி
பாண்டி தந்த ஓசி பம்பரமும்
சுக்கு நூறாய் போன பின்னே
வண்ணம் பூசி வாங்கியாந்து
ஆணி அளவை நீட்டம் பண்ணி
அழகாத்தான் சுற்றுது என் கையில
அதுதரும் குறுகுறுப்புல உடல் கூசுது
இதை தரையில விட்டா
அதன் தலையில அடிப்பானோ பாண்டி
இதன் அழகுல மயங்கி நிற்பான் அந்த பாண்டி தோண்டி!

இந்த கவிதையை இப்பொழுது வாசிக்கும்போது கூட அந்த கிராமத்துத் தெரு கண்ணுக்குள் வெளிச்சம் காட்டித்தான் போகிறது. எத்தனை ரம்மியமான இரவுகள், தெரு விளக்குகளில் படித்தவர்களைப் பற்றி பெருமையாக பேசும் பூமி, தெரு விளக்குகளின் ரசனையில் விளையாடுபவர்களையும் பெருமையாக பேசாமல் கடவுள் பால் குடிக்கும் நேரம் என விரட்டி அடிக்கப்பட்ட காலங்கள் பதின்மத்தில் அச்சம் தருபவைதான்.

கோபக்காரனாகவே வாழ்ந்து வந்திருக்கிறேன் பதின்மத்துக்கு முன்னமும் பதின்மத்தின் பாதி வரையிலும். கவிதைகள், கதைகள், நாடகம் என எழுத்தில் மூழ்கிப்போக இந்த பதின்மத்தில் உறுதுணையாய் இருந்தது எனது மாமா மகன் ஜெயராம், சுப்புலட்சுமியின் அண்ணன். கதைகளும், கவிதைகளும் நான் எழுதிய பல கட்டுரைகளும் இந்த பதின்மத்தில் தான். கதைகளும், கவிதைகளையும் மீட்டு விட்டேன், கட்டுரைகள் வெல்லக்கட்டிக்காக மடிக்கப்பட்டதாக கடைக்கார அழகர் மாமா சொன்னபோது பெரும் இழப்பாகவே எனக்கு ஏன் அப்போது தெரிந்திருக்கவில்லை, ஆனால் இப்போது எழுதும்போது ஏதோ இனம்புரியாத வலி இருக்கத்தான் செய்கிறது. நிலையில்லாதவைகள் எனும் தலைப்பிட்டு எழுதிய கட்டுரை தாள்கள் கண் முன்னால் விரிகின்றன. அதனால்தான் வலைப்பூ ஆரம்பிக்கும்போது கூட எல்லாம் இருக்கும் வரை என்றே தலைப்பிட்டு இருந்தேன். இழப்பின் வலிதனை அதிக நேரம் நீடிக்க நான் அனுமதிப்பதில்லை.

பள்ளித் தோழர்களில் மறக்கவே முடியாத நபர்கள் என புளியம்பட்டி அழகர்சாமி, தற்கொலை செய்து கொண்ட பாம்பாட்டி கிரி, இலக்கணம் பேசிக்கொள்ளும் வரலொட்டி ரமேஷ்காந்தி, டி.ராஜேந்தரை பின்பற்றும் வரலொட்டி மோகன் என சொல்லிக்கொண்டே போகலாம். இதையும் தாண்டிய ஒரு நபர் உண்டு.

ஒருவன் எனது முகம் அவனது பாடப்புத்தகத்தில் தெரிகிறது என என்னை கலங்க வைத்தவன். அதன் காரணமாகவே அவன் என்னை வெறுக்கும்படி அவனை உதாசீனப்படுத்தினேன். பள்ளிவிட்டு பிரியும் வரை என்னிடம் அவன் பேசவில்லை, சில நண்பர்கள் சேர்ந்து அவனும் என்னைப் பார்க்க வீடு தேடி வந்தபோது, வீட்டின் வெளி வாசலிலேயே தண்ணீர் தந்து அனுப்பி வைக்குமளவுக்கு நான்  பிடிவாதக்காரன். என்னை அவன் பெண்ணாக உருவகம் செய்து காதலித்திருக்க விருப்பப்பட்டு இருக்கிறான் எனும் எச்சரிக்கை உணர்வு எனக்குள் வந்ததன் காரணம் எனக்குப் புரியாது, ஆனால் அப்போது அப்படித்தான் நடந்து கொள்ளத் தோன்றியது. வழி தவறிப் போகாமல் வலி ஏற்றுக்கொண்டதும் பதின்மத்தில் தான். வழி தவறிப் போனாலும் வலியின்றி இருந்ததும் பதின்மத்தில் தான்.

இந்த பதின்மத்தில் எனது தாய், தந்தையிடம், உற்றார், உறவினரிடம் கற்றுக்கொண்டதை விட சுதந்திரத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரியாதவனாகவே இருந்திருக்கிறேன், கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை முறைகேடாகப் பயன்படுத்துபவனாகவே வாழ்ந்திருக்கிறேன். சொன்ன வேலைகள் எதையும் செய்வதில்லை, ஒரு சோம்பேறியாகவே வாழப் பழகியிருந்திருக்கிறேன், எனக்குத் தெரிந்ததெல்லாம் விளையாட்டு, சாப்பாடு. பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என இந்த பதின்மத்தில் கற்றுக்கொண்டதில்லை, அது பழக்கத்திலும் வந்திருந்ததும் இல்லை.

விளையாட்டுத்தனமாகவே வாழ்ந்திருந்த அந்த பதின்ம காலங்கள் வினையாகப் போய்விடாமல் தடுத்தாட்கொள்ளப்பட்டிருக்கிறேன், எங்கெங்கு வளைந்து விட வேண்டுமோ அங்கங்கே வளைந்து இருக்கிறேன், ஒடிந்து விடும் நிலை வந்தபோதெல்லாம் தாங்கப்பட்டு காக்கப்பட்டு இருக்கிறேன். அந்த பதின்ம காலங்கள் தந்த பாடத்தினால் இப்போதெல்லாம் பதின்ம காலங்களில் இருப்போரை எச்சரிக்கையுடனே இருக்கச் சொல்கிறேன். ஒருவேளை தாங்குபவர்களும், காப்போர்களும் இல்லாமலேப் போய்விடக்கூடும்.

தெகா அவர்களுக்கு நன்றி கூறி இவர்களைத் தொடர அழைக்கிறேன்.

சுந்தரா

ஷக்திபிரபா

சித்ரா

சிவா 

சங்கவி

ஜோ அமல் ராயன் ஃபெர்னாண்டோ 

(நிறைவு பெற்றது)




பதின்ம கால மனக் குறிப்பேடுகள் (1) - தொடர் அழைப்பு

நண்பர் தெகா அவர்களின் தொடர் அழைப்பிற்கு எனது நன்றிகள். பதின்ம காலம் என்றதும், என்னவெல்லாம் நினைவுக்கு வந்து சேரும் என எண்ணிக் கொண்டபோது தனியாக எங்கேனும் அமர்ந்து அழுதுவிடலாமா என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. எனது அந்த பதின்ம காலங்கள் எனக்குத் திரும்பவும் கிடைக்கப் போவதில்லை. ஆனால் எனது மகனின் பதின்ம காலங்கள் எப்படியெல்லாம் இருந்துவிடப் போகிறது என்பதை ரசிக்க ஆவலுடன் இருக்கிறேன்.

காலத்தை மிகவும் கவனத்துடன் சரிபார்த்துக் கொள்கையில் எனது பதின்ம காலங்கள் நடைபெற்ற ஆண்டுகள் எனப் பார்த்தால் 1987லிருந்து 1993வரை எனக் கொள்ளலாம். 1987ல் எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். 1993ல் கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்துக்கொண்டிருந்தேன்.

தடுமாற்றங்களும், ஏமாற்றங்களும் பலவீனங்களும், பலங்களும், வெற்றிகளும், தோல்விகளும் நிறைந்துதான் அந்த காலகட்டங்கள் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. இதனை ஒரு குறிப்பேடுகளில் எழுதி வைத்திருந்தாலாவது எதனையும் மறக்காமல், மறைக்காமல் அப்படியே எழுதி வைத்துவிட முடியும். இப்பொழுது மனதில் எதுவெல்லாம் நினைவுக்கு வருகிறதோ அதை மட்டுமே தொகுத்திட விழைகிறேன்.

எனது சகோதரர் ஒருவர் கவிதை, தத்துவம் என குறிப்பேடுகளில் எழுதி வருவார், அதைப் பார்த்ததும் நானும் எழுத வேண்டும் எனும் ஆர்வத்தில் எங்கள் பக்கத்து ஊரில் இருக்கும் ஒலிபெருக்கி நிறுவனமான கே.ஜி.சேகர் 90 சக்தி 80 என மதிப்பிட்டது உண்டு. திருவள்ளுவர் பஸ் 80, பாண்டியன் பஸ் 60 என மதிப்பீடு போட்டது உண்டு. விளையாட்டாகவே எதையும் செய்யும் பழக்கம் அதிகமாகவே உண்டு. இப்படி எழுதியதைப் பார்த்ததும் திட்டு வாங்கிய தினம் முதல் குறிப்பேடு அவசியமில்லாத ஒன்றாகவே இருக்கிறது, இன்று வரை.

எனது பதின்மகாலத் தொடக்கத்தில் நான் மட்டும் தனியாகப் பள்ளிக்குச் செல்ல வேண்டுமென்றாகிப் போனது.  என்னுடன் சேர்ந்து படித்துக்கொண்டிருந்தபோது, ஏழாம் வகுப்பு முடித்ததும் சென்னை சென்றுவிட்ட வாசு, ஸ்ரீராம், அழகியநல்லூருக்குப் பயணித்துவிட்ட ரமேஷ். எனது நண்பர்கள். அன்று விலகியதைப் போலவே இன்றும் ஏனோ வெகு தூரத்தில் விலகி நிற்கிறோம். ஆனால் இவர்களை என்னால் ஒருபோதும் மறக்க இயல்வதில்லை, மனதில் ஓரத்தில் பயணித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

எனக்கு மிகவும் பிடித்தமான சுப்புலட்சுமி, கவிதா. இவர்கள் உடன்பிறவா சகோதரிகளின் மகள்கள் .மனதின் ஓரத்தில் இவர்களுக்கென ஒரு தனி இடம் எப்போதும் உண்டு.

பதின்ம காலத்தில் அதிகம் பழகியது கவிதாவுடன் மட்டுமே. தட்டாங்கல்லு, பல்லாங்குழி, தாயம் என எங்கள் ஊருக்கு கவிதா வரும்போதெல்லாம் கவிதாவுடன் சேர்ந்து விளையாடுவது என்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

எவரையேனும் திருமணம் பண்ணுவதாக இருந்தால் காதலித்துத்தான் திருமணம் பண்ணிக்கொள்வேன் என என்னிடம் கவிதா சொன்ன வார்த்தைகள் என்றைக்கும் மறக்காது, அதுபோலவே மண வாழ்க்கையும் அமைத்துக்கொண்டாள். அடுத்த வருடம் பதின்ம காலங்களின் தொடக்கம்.

சுப்பு பாட்டி வீட்டில் இருந்து படித்ததால் விடுமுறைக்கு மட்டுமே வந்து போவாள், ஆனால் அவளது படிப்புத் திறமை, பேச்சுத் திறமை இன்றும் மனதில் நினைவுதனை விட்டு நீங்கா சுகங்கள்.

பதின்ம காலத்தில் நடந்த பல நிகழ்வுகள் என்னை உலுக்குகின்றன. காமிக்ஸ் புத்தகக் கடை போட்டு பத்து பைசாவுக்கும், இருபது பைசாவுக்குமாய் வாடகைக்கு விட்ட ஸ்ரீதர், வீட்டினில் திட்டுகள் வாங்கினாலும் எங்களுடன் கிரிக்கெட் விளையாட வந்த கொண்டப்பன், வயது அதிகம் என பாராமல் எங்களுடன் கிரிக்கெட் விளையாடிய ரங்கசாமி, அழகர்சாமி என ஒரு கூட்டம். இவர்களை எல்லாம் பார்த்துப் பேசி பல வருடங்கள் ஆகிவிட்டது, கொண்டப்பனைத் தவிர.

களத்து மேட்டுகளிலும், தோட்டத்து வரப்புகளிலும் மணலில் உருண்டு விளையாடியபோது உடனிருந்த கண்ணன், கோலிக்குண்டு, பம்பரம், செதுக்கு முத்து விளையாட்டில் சூரனான பாண்டி, நட்புடன் பழகும் முருகேசன், சமீபத்தில் துர்மரணமடைந்த பெருமாள்... பதின்ம காலம் ஒரு தீராத ஏக்கத்தை ஏற்படுத்துகிறது, பாண்டியை நினைத்து சமீபத்தில் ஒரு கவிதை எழுதியது உண்டு. என்னால் இவர்களை மறக்க முடியாது, ஆனால் விலகிப்போய்விட்டேனே என நினைக்கும்போது  கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொள்கிறது.

இப்போதைக்கு இங்கே நிறுத்துகிறேன்... இன்னும் தொடர்வேன். என்னுடன் சேர்ந்து நீங்களும் எனக்காக அழுது விடுங்கள்.

Wednesday 3 February 2010

தமிழ்மணத்துக்கு காமம் பிடிக்காது

பொதுவாக தமிழ்திரட்டிகளைப் பற்றி நான் எதுவுமே அதிகமாக எழுதுவதில்லை. ஆனால் என்னைப் போன்று அங்கீகாரம் பெற இயலாத பலரது எழுத்துகளை பலருக்கு அறிமுகப்படுத்தும் வகைதனில் திறம்படச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் திரட்டிகள் அனைத்திற்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Friday 22 January 2010

சாலையோரம்

ஸ்டார்ஜன், தீபா, ஸ்ரீவித்யா, பலாபட்டறை சங்கர் அவங்க எல்லாம் சாலையோரம் பற்றி எழுதியதைப் படித்தேன். இது ஒரு தொடர் இடுகைனு இருந்தாலும் விருப்பப்பட்டவங்க எழுதலாம்னு சங்கர் அவரோட பதிவுல எழுதி இருந்ததால எனக்கும் இந்த சாலையோரம் பற்றி எழுதனும்னு ஒரு எண்ணம் வந்தது.

சின்ன வயசுல சாலையோரத்தில விளையாடலைன்னாலும் எங்களுக்குச் சொந்தமான களம் ஒன்றில் செங்கல் வைத்துக் கொண்டு பேருந்து போல் மணலில் ஓட்டுவது வழக்கம். அப்படி ஓட்டிக் கொண்டு போகும் போது ஒரு மாடு நின்று கொண்டிருப்பதை பொருட்படுத்தாமல் செங்கல் வைத்து ஓட்டிய போது மாடு விட்ட ஒரு உதை இன்னமும் மறக்க முடியவில்லை. கவனக்குறைவு!

வரப்பு ஓரங்களில் பேருந்து ஓட்டுவது போல ஓடித் திரிந்த காலங்கள் இன்னும் அப்படியே நினைவில் இருக்கிறது. பேருந்து ஓட்டுநர் ஆகவேண்டும் என ஆசைப்பட்டிருந்தேன். எங்க ஊருக்குள்ள ஒரே நேரத்தில் ஒரு தனியார் பேருந்தும், அரசு பேருந்தும் வரும், யார் முதலில் ஊருக்குள் வருவது என போட்டி போட்டுக் கொண்டு வருவார்கள். அப்படி தனியார் பேருந்து ஒருநாள் முன்னதாக வந்துவிட இரண்டு பேருந்து ஓட்டுநர்கள் போட்டுக்கொண்ட சண்டை இன்னமும் நினைவில் இருக்கிறது. இதே நிகழ்வு பல வருடங்கள் பின்னர் சென்னையில் பாரிமுனையில் பார்த்தபோது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. இவர்களின் வேகத்திற்கு பலியாகும் மக்கள்!

மதுரையில் படித்தபோது நானும் என் தந்தையும் சாலையோரத்தில் நடந்து சென்றபோது பேருந்து ஒன்று என் தந்தையை உரசிவிட என் முன்னால் தள்ளிச் சென்று விழுந்த தந்தையை பார்த்தபோது நான் அடைந்த அதிர்ச்சி இன்னும் மறக்க முடியாதது. பேருந்து சற்று வேகம் குறைத்து வந்ததாலும், சாலையின் ஓரத்தில் கற்கள் ஏதும் இல்லாது போனதாலும் என் தந்தை அன்று எவ்வித காயமின்றி தப்பினார்.

மிதிவண்டி ஓட்டிப் பழக வேண்டும் என கஷ்டப்பட்டு மிதிவண்டி பழகிய பின்னர் சக்கரத்தில் காலை விட்டு காயப்பட்ட கால், வேகமாக ஓட்டிக்கொண்டு வருகிறேன் என சக்கரம் சறுக்கி விழுந்தபோது தலையில் ஏற்பட்ட காயம் என மிதிவண்டி பயணம் சிரமம் சில முறை தந்தது. அந்த சிரமமே என்னை இந்தியாவில் இருந்தவரை வேறு இரு சக்கர வாகனங்களை பழகவிடவில்லை.

சென்னையில் விரிவுரையாளராகப் பணியாற்றியபோது என் நண்பன் ஸ்ரீராம் என்னை அவனுடைய இரு சக்கர வாகனத்தை ஓட்டச் சொன்னபோது பயமாகத்தான் இருந்தது. அவன் அநாயசமாக ஓட்டிச் செல்லும் விதம் கண்டு பிரமிப்புதான் மிஞ்சியது. தலைக்கவசம் இல்லாமல் அவன் பயணித்தது இல்லை. இந்தியாவை விட்டு வெளியேறும் வரை நான் எந்த வாகனங்களும் ஓட்டியது இல்லை, ஓட்டப் பழகியதும் இல்லை.

இலண்டன் வந்ததும் கார் (மகிழ்வுந்து) ஓட்ட வேண்டுமெனில் எழுத்துத் தேர்வு எழுத வேண்டும் என சொன்னார்கள். சாலை விதிகள் பற்றிய தேர்வு அது. அந்த சாலை விதிகள் தேர்வுதனில் முழு மதிப்பெண்கள் எடுத்து தேர்வாகினேன். ஆனால் செயல்முறைத் தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்து மூன்றாம் முறையே தேர்வாகினேன். இத்தனை சட்டதிட்டங்கள் உடைய இங்கே சட்டம்தனை மதிக்காமல் வாகனம் ஓட்டுபவர்களும் உண்டு.

ஒருமுறை எனக்கு முன்னால் மூன்று வாகனங்கள் நின்று கொண்டிருக்க, முன்னால் இடமிருக்கிறதே என மூன்று வாகனங்களை முந்திக்கொண்டு போய் நிற்க எனக்கு முன்னால் காவல் அதிகாரி வண்டி நின்று கொண்டிருந்தது. என்னை இறங்கச் சொல்லியவர், ஏன் இப்படி வந்தாய்? எனக் கேட்க இடமிருந்தது வந்தேன், என் தவறுதான் என்றேன். நீ வந்தது மற்ற வாகன ஓட்டிகளுக்குப் பிடிக்கவில்லை, ஏன் வந்தாய் என மறுபடியும் கேட்டார். இடமிருந்தது அதனால் வந்தேன், என் தவறுதான், இனி அவ்வாறு செய்யமாட்டேன் என சொன்னேன். எங்கே வேலை பார்க்கிறாய் என்றார், வேலை இடம் சொன்னதும், சென்று வா என அனுப்பி விட்டார். இத்தனைக்கும் நான் அதிக வேகத்தில் வாகனத்தைச் செலுத்தவில்லை. இருப்பினும் பொறுமை அவசியம் என அந்நிகழ்வு எடுத்துகாட்டியது. ஆனால் நாளிதழ்கள் புரட்டினால் 30 மைல் வேகம் செல்ல வேண்டிய இடத்தில் 70 மைல் வேகத்தில் சென்றார் என்றெல்லாம் செய்திகள் பார்க்கலாம். பல சட்ட திட்டங்கள் கடுமையாக கடைப்பிடிக்கப்படும் இந்த நாட்டில் கூட வாகன ஓட்டிகளின் செயல்பாடு எரிச்சல் தருவதாகவே இருக்கும். பலர் வாகனம் ஓட்டுவதற்கான அங்கீகாரம் இல்லாமல் வேறு நாடுகளில் எடுத்துக்கொண்ட அங்கீகாரம் வைத்து ஓட்டுவதால் ஏற்படும் பிரச்சினைகள் அதிகமே.

புகைப்பட கருவி சாலையில் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருக்கும், வாகன ஓட்டிகள் புகைப்பட கருவி இருக்குமிடம் மட்டும் வேகத்தை மட்டுப்படுத்துவார்கள், அதைத் தாண்டியதும் பறந்து செல்வார்கள். ஏன் இப்படி செய்கிறார்கள் என்றே தோன்றும்,

ஒருமுறை நான் மஞ்சளிருந்து சிகப்பு விளக்கு வரும் முன்னர் செல்ல வேண்டுமென சென்றபோது மில்லி விநாடியில் எனது வாகனம் புகைப்படம் எடுக்கப்பட்டு 3 புள்ளிகளும் 60 பவுண்டுகளும் கட்டிய நிகழ்வு என்னை மிகவும் பாதித்தது, பலமுறை வேகமாக செல்லும் வாகனங்களைப் பார்த்து மனதுக்குள் நினைத்துக் கொள்வதுண்டு, எங்கே இத்தனை வேகமாகச் செல்கிறார்கள் என! அதே வேளையில் நாம் வேகமாகச் செல்லும்போது அந்த எண்ணம் ஏன் நமக்கு வருவதில்லை எனும் சிந்தனையும் வருவதுண்டு.

30 வயது நிரம்பிய பெண் ஒருவர் தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்த வாகனத்தை வெளியில் இருந்து இயக்க அந்த வாகனம் பின்னோக்கிச் செல்ல அருகிலிருந்த மற்றொரு வாகனத்துக்கும், இந்த வாகனத்துக்கும் இடையில் சிக்கி அவர் மரணமடைந்த செய்தி அதிர்ச்சி அளித்தது. கவனத்துடன் சென்றாலும், கவனமில்லாமல் வந்த லாரி ஒன்றினால் மரணமடைந்த ஒருவர் பற்றிய செய்தி அதிர்ச்சி தந்தது. முத்தமிழ்மன்ற நண்பர் ஒருவர் சாலை விபத்தில் மரணமடைந்த செய்தி என்னை வெகுவாகவே பாதித்தது.

சாலையினைக் கடக்கும்போதும் கவனம் தேவை. சாலை விதிகளும், சாலையில் செல்வது பற்றிய எச்சரிக்கையும் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. பல வசனங்கள் ஆங்காங்கே ஊரில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.

இருப்பினும், மதுரையிலிருந்து அருப்புக்கோட்டைக்கு 30 நிமிடத்தில் இரவு 10 மணிக்கு பயணித்த கார்! பேருந்து ஒன்று எதிரில் வந்தபோதும் அதன் அருகில் நேராக சென்று மின்னலென விலகிச் சென்ற கார் என சமீப காலத்தில் காரில் தமிழகத்தில் பயணித்தபோது ஏன் இப்படி இவ்வளவு வேகம் என ஓட்டுநர்களிடம் கேட்டபோது 'அப்படியே அணைச்சி போகனும்ணே' எனும் பதிலைக் கேட்டபோது சாலையோரம் மிகவும் பயங்கரமானதாகவே காட்சி அளித்துக் கொண்டிருந்தது.

விருப்பமுள்ளோர் தொடர வேண்டுகிறேன்.

Wednesday 16 September 2009

வலைப்பதிவர் ஆனேன்! தொடர்ந்து விளையாடுங்க (கிரி, தெகா, விதூஸ், ஜெஸ்வந்தி)




முத்தமிழ்மன்றத்தில் நான் எழுதியிருந்த பதிவுகளை மட்டுமே (சில பதிவுகள் தவிர்த்து) இங்கே வெளியிட்டுக் கொண்டிருந்த தருணத்தில் ''தேவதை வந்தாள்'' என அழைத்துச் செல்லக் கூறினார்கள் திருமதி.ஜெஸ்வந்தி அவர்கள். அவசர அவசரமாக பதில் சொல்ல வேண்டி தேவதையிடம் ஒரு வரம் கேட்டு அந்த தேவதையைத் தொலைத்துவிட்டேன். வலைப்பூக்களில் பார்வை இடும்போது அந்த தேவதை மிகவும் சந்தோசமாக வலைய வந்து கொண்டிருப்பதைக் கண்டு ம்னதில் சந்தோசம் கொண்டேன். ஒரு விசயத்தை எத்தனை ஈடுபாடுடன் செய்து கொண்டிருக்கிறார்கள் என.

இதோ தொடர் விளையாட்டுகளில் கலந்து கொள்வது மூலம் வலைப்பதிவராக அறிமுகம் ஆகிறேன்.

1. A – Available/Single? Not Available & Not Single : திருமணம் ஆகிவிட்டது. தனியாளானாக என்னைக் கருதிக்கொண்டால் பெரும் இடர்பாடுகள் வந்து சேரும்.

2. B – Best friend? : எனது மனைவி. எது சரி, எது சரியில்லை என அவர் பார்வையிலிருந்து சொல்வார். என் பார்வைக்கு ஏற்றபடி நான் நடந்து கொள்வேன்.

3. C – Cake or Pie?: கேக் தான், அதிக விழாக்களில் சாப்பிடுவதுண்டு.

4. D – Drink of choice? : எப்போதும் விரும்பி குடிக்க நினைப்பது 7up

5. E – Essential item you use every day? : ஆடைகள்

6. F – Favorite color? : வானத்து, கடலின், கிருஷ்ணரின் நீல நிறம் (கதையே எழுதி இருக்கோம்)

7. G – Gummy Bears Or Worms?: விளையாட, விருந்தாக இரண்டையுமே சேர்த்துக்கொள்வதில்லை.

8. H – Hometown? - மேலத்துலுக்கன்குளம். (எங்கே இருக்கிறது என பலருக்கும் தெரியாமலிருந்தால் இந்த கிராமம் விருதுநகர் மாவட்டத்தில் இருக்கிறது).

9. I – Indulgence? - கற்பனையில் மிதப்பது.

10. J – January or February? ஜனவரி, ஜனங்களுக்கு வரிகள் பல! எனினும் முழுமையான மாதம், முதல் மாதம்.

11. K – Kids & their names? ஒன்பது வயது நிரம்பிய ஒரு பையன். நவீன்.

12. L – Life is incomplete without? - அமைதி, திருப்தி.

13. M – Marriage date? 13-07-1998

14. N – Number of siblings? ஆறு - இரண்டு அக்காக்கள், நான்கு அண்ணன்கள்

15. O – Oranges or Apples? ஆப்பிள். உடலுக்கு நல்லது என பழமொழி கொண்டிருப்பதால்.

16. P – Phobias/Fears? மனிதர்களைக் கண்டு வெகுவாக அச்சப்படுவேன். 'நான் ஒரு ஏமாளி' என என்னை மிக எளிதாகச் சொல்வார்கள்.


17. Q – Quote for today? : 'நன்றாகச் சாப்பிடு, நன்றாகத் தூங்கு, எல்லா வேலையும் நன்றாகவே நடக்கும்'

18. R – Reason to smile? : 'புன்னகைக்குக் காரணமெல்லாம் சின்னதாய் தட்டிக்கொடுத்துக் கொள்வது'

19. S – Season? வெயில் மாறி தூறல் பொழியும் காலம்.

20. T – Tag 4 People? திரு. கிரி, திரு. தெகா, திருமதி. விதூஸ், திருமதி. ஜெஸ்வந்தி (சரியாகத்தான் பகிர்ந்து இருக்கிறேன்)

21. U – Unknown fact about me? உலகிற்கு நல்லது செய்ய வேண்டும் என எதுவுமே செய்யாமலிருப்பது.

22. V – Vegetable you don't like? பிடித்தத் காய்கறிகளைக் கேட்காமல் பிடிக்காத காய்கறி கேட்ட இந்த கேள்விதான். 'எதையும் சாப்பிடும் குப்பைத் தொட்டி என் வயிறு' என பிறர் கேலி செய்வதுண்டு, அசைவம் தவிர.

23. W – Worst habit? எதையும் எளிதாக நம்பிவிடுவது.


24. X – X-rays you've had? 2004ல் animal experiments செய்யும்போது ஏற்பட்ட உபாதையினால் எடுத்துக் கொண்ட நுரையீரல், இருதய எக்ஸ் கதிர் படம்.

25. Y – Your favorite food? :) சாதமும், சாம்பாரும் (இவையிரண்டும் நானே நன்றாக சமைப்பேன்). சிப்ஸும் பர்கரும்.

26. Z – Zodiac sign? Capricorn

அன்புக்குரியவர்கள்: அன்னையும், தந்தையும், மனைவியும், மகனும். உற்றாரும், சுற்றாரும், நட்பும், பகையும்.

ஆசைக்குரியவர்: கடவுள்

இலவசமாய் கிடைப்பது: காண்பதரிது

ஈதலில் சிறந்தது: எதுவும் இரவாமலிருக்கும்படி செய்வது.

உலகத்தில் பயப்படுவது: பொய்யும், உண்மையும்.

ஊமை கண்ட கனவு: எழுத்துக்களில் தெரிந்து கொள்ளலாம்.

எப்போதும் உடனிருப்பது: தலைக்கனம்

ஏன் இந்த பதிவு: கோவியாரின் அன்பு அழைப்பு.

ஐஸ்வர்யத்தில் சிறந்தது: நோயில்லா கல்வியும், செல்வமும்.

ஒரு ரகசியம்: சொல் எனும் சொல்

ஓசையில் பிடித்தது: பறவைகளின் சப்தம்

ஔவை மொழி ஒன்று: அறஞ் செய்ய விரும்பு (விரும்புவதை மட்டுமே செய்து வருகிறேன்)

(அ)ஃறிணையில் பிடித்தது: தாவரம் (இது இல்லாது போயிருந்தால் பிற அஃறிணைகளும், உயர்திணையும் இல்லாது போயிருக்கும்)


நன்றி கோவியாரே.