Monday 15 May 2017

திருநெல்வேலி ட்வீட்டப் கவிதை - TnMegaTweetup2017

டிவிட்டரில் எழுதும் தமிழ் கீச்சர்கள் வருடந்தோறும் ஒருமுறை ஓரிடத்தில் ஒன்று கூடி விழா எடுப்பது வழக்கம். இதற்காக கவிதை எழுதி பேரும் புகழும் பெற வேண்டும் என்பது என்னுடைய பேராசைகளில் ஒன்று. நான் டிவிட்டரில் எழுத ஆரம்பித்த ஆண்டு ஆகஸ்ட் 2013. அதற்கு முன்னரும் விழா நடந்து இருக்கிறது. ட்விட்டரில் சேர்ந்த பிறகு எழுதிய முதல் எழுத்து இது  அதற்குப்பிறகு ஒரு கதை எழுதி அப்படியே நிறுத்தி வைத்து இருக்கிறேன். 
எவ்வளவு விளையாட்டுத்தனம் கொண்டவர்கள் இருக்கிறார்கள் எதற்கு இதையெல்லாம் ஒரு பெரிய விசயமாக கருதக்கூடாது என நினைக்க வைத்த கற்றறிந்த கயவர்கள் பற்றி எழுதியது. 



திருப்பூரில் நடந்தபோது நான் எழுதவில்லை 

இம்முறை இத்திருவிழா திருநெல்வேலியில் நடந்தது. நண்பர் பாண்டித்துரை அவர்களிடம் கவிதையை கொடுத்து அனுப்பினேன். கவிஞர் திரவியம் அவர்கள் கவிதையை சிறப்பாக வாசித்தார்கள். அவர்களுக்கு நன்றி. விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பெருமளவுக்கு ஒருங்கிணைப்பைச் சரியாகச் செய்து இருந்தார்கள் என உறுதியாக சொல்லலாம். வாழ்த்துக்கள். 

ஒரு உறுத்தலான விசயம், அதுதான் குறை சொல்லாமல் இருக்க இயலாதே, இந்த அசைபடத்தில் ஒலிக்கும் சில குரல்களை கேளுங்கள் நான் சொல்வது உங்களுக்குத் தெரிய வரும் அப்படி இல்லாதபட்சத்தில் கண்டு கொள்ளாமல் விட்டுவிடவும்.   

எனக்குள் எப்போதுமே இப்படியொரு எண்ணம் எப்போதும் உண்டு அதாவது ஒன்றை உயர்த்திப் பேச மற்றொன்றை தாழ்த்திப் பேச வேண்டிய அவசியமே இல்லை மேலும் ஒன்றை உயர்த்திப் பேசினால் மற்றொன்று தாழ்ந்தது என்ற பொருளும் இல்லை. அதை இந்தக் கவிதையில் தவறவிட்டது போல இருக்கிறது. ஆனால் இதை கவிதை என்று இலக்கியவாதிகள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள், அதுவரைக்கும் பரவாயில்லை. அடுத்தமுறை இத்திருவிழா பாண்டிச்சேரியில். அதற்கும் இப்போதே வரிகள் யோசிக்கத் தொடங்கி  இருக்கிறேன். 


அசைபடத்தில் கவனித்தால் எனது பெயர், நான் வசிக்கும் இடம் எல்லாம் மிகவும் தவறாகவே சொல்லப்பட்டு இருக்கிறது, இது என்னுடைய தவறுதான். இராதாகிருஷ்ணன், லண்டன் என எழுதித் தந்து இருக்க வேண்டும். இப்படித்தான் எதையுமே முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல், யார் எவர் என ஒரு விபரமும் புரியாமல் அந்த உலகம் இயங்கிக் கொண்டு இருக்கும். எவருடன் பழகுகிறோம், எவருடன் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்பது கூட பல நேரங்களில் தெரியாது. நாம் எழுதுவதை எல்லாம் ஏதோ  இந்த உலகத்தையே மாற்றி அமைத்து விடும் வலிமை கொண்ட சொற்றொடர்களாக எண்ணி வாதிட்டு கொண்டு இருப்பார்கள், எரிச்சல் அடைவார்கள், மகிழ்ச்சி அடைவார்கள். இதன் காரணமாக மன உளைச்சல் அடைபவர்களும் உண்டு. எப்படி இருப்பினும் முகம் காட்டாதவர்கள் மத்தியில் முகம் காட்டும் சிலர் கொண்டாடும் திருவிழா இது. எனது கவிதை எப்போதும் தொடரும். 


நெல்லைக்கு ஒரு வாழ்த்து

நெல்லுக்கும் திரு என மரியாதையிட்டு
அன்பின் வேலியால் கட்டப்பட்டு
நெல்லையப்பர் காந்திமதி சுவாசிக்கும்
ஊரின் பெருமை உரக்கச் சொல்வேன்
இரக்கமனம் கொண்ட மக்கள் உள்ள
தாமிரபரணி ஆறு புகழ் கொண்ட
திருநெல்வேலி மிகச் சிறந்த ஊரு

அன்பைத் தொல்லையாய் எவரும்
இங்கே கண்டதுமில்லை
பண்பைத் தொலைத்து எவரும்
இங்கே வாழ்வதும் இல்லை
தமிழ்ச்சொல்லை சொல்லும் விதத்தில்
இத்தரணியில் எவருமே இவர்களுக்கு
ஓர் நிகருமில்லை

நெல்லையின் பெருமையைச் சொல்லவே
எல்லையில்லா புகழ்கொண்ட தமிழ்
நாடினேன்
இல்லையென சொல்லாது நல்விசயங்கள்
செய்யும் இதயம் கனிந்த மக்களை
தன்னுள்ளே கொண்ட நெல்லையில்
குடிபுகுந்தேன்

நெல்வளம் கொண்ட நகரம்
சொல்வளம் கொண்ட நகரம்
தேவாரப் புகழ் பெற்ற திருத்தலம்
எம்சிவன் நடனமிட்ட தாமிர திருச்சபை
இனிப்பின் சுவை அல்வா
நெற்கதிர் அறுக்கும் அரிவாள் – நெல்லை
புகழ் பாடுவேன்

தமிழின் வீரம் சொன்ன நெல்லை
பாளையக்காரர்கள் வலம் வந்த எல்லை
தாமிரம் நல்ல மின்கடத்தி
நாமும் இங்கே கூடினோம் தமிழ் கடத்தி
நமது புலமையைச் சொல்ல
நெல்லைபோல ஒரு இடமும்
இல்லை

எழுத்தால் அறிமுகம் ஆனோம்
கருத்தால் மனதில் கூடினோம்
நம் நட்பை உலகறியச் செய்து
இதை எந்த நாளும்
நல்வழியில் தொடர்வோம்
வளர்வோம் வாழ்வோம்
வாழ்க தமிழ்




2 comments:

Yaathoramani.blogspot.com said...

நெல்லையின் பெருமைதனை'
சுருக்கமாகச் சொன்னாலும்
நிறைவாகச் சொல்லும் கவிதை அருமை

பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்களுடன்

Radhakrishnan said...

மிக்க நன்றி ஐயா