Monday 10 August 2015

நமது திண்ணை ஆகஸ்ட் மாத சிற்றிதழ்

இந்த மாத சிற்றிதழ் சற்று தாமதமாகவே வெளிவந்தது. எனக்குள் ஒரு சின்ன அச்சம், எங்கே இதழ்தனை வெளியிட மறந்துவிட்டார்களா அல்லது இனிமேல் வெளியே வரவே வராதா என. இதற்கு ஒரு காரணம் இருக்கிறது, நான் பார்த்தவரை பல விசயங்கள்  போதிய ஆதரவு இல்லாது போகுமெனில் அவைத் தொடர வாய்ப்பு இல்லை, அதே வேளையில் ஈடுபாடு இல்லையெனில் தொடர்ந்து செய்யவும் இயலாது.  சென்றமுறை சில பிரச்சினைகள் என சொல்லி இருந்தார்கள். நல்லவேளை, மிகவும் சிறப்பாகவே வெளிவந்துவிட்டது. ஆசிரியருக்கும், வடிவமைப்பாளருக்கும் மற்றும் எழுதியவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அமரர் திரு அப்துல் கலாம் அவர்களின் மரணம் இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் ஒரு அதிர்ச்சி அலைகளை ஏறப்டுத்திச்  சென்றது. எத்தனை பொருத்தமான வரிகள். ''நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் நமது இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்''. ஒரு மாமனிதர் என்பதற்கு அவர் வாழ்ந்த காலங்களே உதாரணம்.

அடுத்து உயில் எனும் கவிதை. தலைப்பே அருமை. உயிலில் விவசாய நிலங்கள் எழுதி வைப்பார்கள். விவசாய நிலங்களே இல்லாது போகும் தருணத்தை மிகவும் அருமையாக எழுதி இருக்கிறார். வேதனைகளை சுமக்கும் வரிகள்.

மிகவும் ஆவலுடன் படிக்கும் தொடர் ஸ்ரீராமானுஜர். இத்தனை விசயங்களையும் மிகவும் சுவாரஸ்யமாக எழுதி வரும் சுஷீமா அம்மா அவர்களுக்கு மிக்க நன்றி. செவி வழியாக பல விசயங்கள் பல கேள்விப்பட்டு இருந்தாலும் முதன்முறையாக வாசிப்பது  மிகவும் சிறப்பாக இருக்கிறது, அதுவும் கேள்விபட்டதைவிட மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இப்படிப்பட்ட மனிதர்களின் வாழ்வு, அந்த மனிதர்களைச் சுற்றி அமைந்த வாழ்வு நமக்கு நல்லதொரு பாடத்தை எடுத்துச் சொல்கிறது. பிறருக்கு உதவுவதே தலையாய பண்பு என்பது அன்று சிலருக்கு இருந்து இருப்பது இன்று சிலருக்கு இருப்பது போற்றத்தக்கது.

அப்பா குறித்த ரோகிணி அவர்களின் பதிவு கண்களை கலங்கச் செய்தது. இப்படி எல்லாம் வாழ வெகு சிலருக்கு மட்டுமே கொடுத்து வைத்து இருக்கிறது போலும். தமது பிள்ளைகள் தான் எல்லாம் என்பவர்கள் உள்ள உலகில் பிறரையும் அரவணைக்கும் அன்பு ஆசிரியர்களுக்கு உண்டுதான் எனினும் இவரது தந்தையை குறித்த விசயங்கள் பெருமிதம் கொள்ளச் செய்கின்றன.

நல்ல நல்ல படங்கள் மிகவும் தெளிவாக சிற்றிதழை அலங்கரிக்கின்றன. அருமையாக இருக்கிறது. பாராட்டுக்கள். கேள்விப்படாத பாடல் என்றாலும் உமாகிருஷ் அவர்கள் விவரித்த வர்ணனையில் அந்த பாடலை கேட்டுவிட வேணும் எனும் எண்ணம் உண்டாக்கியது சிறப்பு. இசை வரிகளுக்கு எப்போதும் பலம் தான்.

கலாம் அவர்கள், அவனதிகாரம், அவளதிகாரம் என டவிட்கள் அலங்கரிக்கின்றன. இப்படி ஒரு தலைப்போடு எழுதப்படும் சிந்தனைகளை நாம் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கின்றன. பல வாசிக்காதவைகள் என்பதால் இன்னும் ரசிக்க முடிந்தது கூடுதல் சிறப்பு.

ஓவியர் கேசவ் அவர்களின் நேர்காணல் வெகு சிறப்பு. ஓவியம் ஒன்றுதான் எனக்கு இன்னும் பிரமிப்பை ஏற்படுத்திக் கொண்டு இருக்கும் ஒரு விசயம். ஒருவரை தத்ரூபமாக வரைவது என்பது, ஒரு விஷயத்தை மனதில் வைத்து அதை ஓவியமாக வெளிப்படுத்துவது இன்னும் ஆச்சரியத்தை உண்டுபண்ணிக்கொண்டே இருக்கின்றன. எப்படி ஓவியர் ஆனார், ஓவியத்திற்கு எழுதப்படும் வெண்பா என அற்புதமாக விவரித்து இருக்கிறார். அதுவும் கிருஷ்ணர் குறித்த ஓவியங்கள் என அவர் குறிப்பிட்ட  நிகழ்வு ஆச்சரியம். அவரது ஒரு ஓவியம் இது. அவரது வலைதளத்தில் சென்று பார்த்தேன். பிரமாதம். ஒவ்வொன்றும் பிரமிக்க வைத்தன.

கிச்சன் டைம் எனக்குப் பிடித்த காளான். இத்தனை எளிதாக இருக்கிறதே என நண்பர் ரவி எழுதுவதில் இருந்து எண்ணிக்கொள்ளலாம். ஆனால் செய்து பார்த்தால்தான் தெரியும். ஆசிரியரின் மெல்லிசை மன்னர் பதிவு வழக்கம் போல சிறப்பு. 

தொடர்ந்து நமது திண்ணை தடங்கல் இன்றி வெளிவர எமது வாழ்த்துக்கள். சிறப்பாக வடிவமைக்கப்பட்டு நல்ல விசயங்கள் தாங்கி சிறந்து விளங்குகிறது நமது திண்ணை. பாராட்டுகள். 


Wednesday 5 August 2015

தேடிக்கொண்ட விசயங்கள் - 7 ஆர் என் ஏ உலகம் இல்லை

பகுதி - 6

ஒன்று கிடைக்கும் உடனே ஒரு முடிவுக்கு வந்துவிடுவோம், பிறகு வேறொன்று கிடைக்கும் உடனே எடுத்த முடிவை பரிசீலனை செய்வோம். எடுத்த முடிவுக்கு எதிராக எது தோன்றினாலும் அதன் தன்மையை பரிசீலனை செய்து அதை ஏற்றுக்கொண்டு பயணிப்போம். இதுதான் இந்த உலகத்திற்கு அறிவியல் சொன்ன நீதி.

அறிவியல் எதற்குமே அவமானப்பட்டது இல்லை. உண்மையைச் சொல்ல எதற்கு அவமானம், வெட்கம், தயக்கம். பல காலங்களாக இந்த உலகம் ஆர் என் ஏ மூலம் உருவாகி இருக்க இயலும் என நம்பிக்கொண்டு இருந்தார்கள். அதற்கான ஆதராங்கள் என பல காட்டப்பட்டன. நியூக்ளிக் அமிலங்களை தாமாக ஒருங்கிணைத்து உருவாகிய ஆர் என் ஏ  பிற்காலத்தில் டி என் ஏ வாக பரிமித்தது என்பதே நம்பபட்டவந்த செய்தி. இப்போதும் கூட இந்த புரதங்கள் உருவாக டி என் ஏ  செல்லின் கருவில் இருந்து வெளிவர இயல்வதில்லை. மாறாக டி என் ஏ வில் இருந்து ஆர் என் ஏ கருவில் நகல் எடுத்து வெளியே வந்து ரைபோசொமில் புரதங்கள் உருவாக்குகின்றன. எனவே இதற்கு முன்னர் இந்த உலகில் உயிரினங்கள் தோன்ற இந்த ஆர் என் ஏ  காரணம் என எண்ணி ஆர் என் ஏ  உலகம் என்று ஒரு கோட்பாடு உருவாக்கப்பட்டது.

இந்த நியூக்ளிக்  அமிலங்கள் உருவாக வினையூக்கிகள் தேவை. இந்த வினையூக்கிகளை ஆர் என் ஏ தான் செயல்படுத்தி வந்ததாக  நம்பினார்கள். எப்போது புரதம் இந்த வினையூக்கி வேலையை தானே செய்ய ஆரம்பித்ததோ அப்போது இந்த ஆர் என் ஏ  உலகம் முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது. ரைபோசோம்கள் உருவான காலகட்டமே ஆர் என் ஏ  முடிவுக்கு ஒரு காரணம். ஆனால் இதை எல்லாம் மறுத்து ஒரு அறிவியல் அறிஞர் சொல்லி இருப்பது என்னவெனில் நிச்சயம் இந்த ஆர் என் ஏ  உலகம் என்று ஒன்று இந்த உயிர்களைத்  தோற்றுவிக்க காரணம் இல்லை என அறிவித்து இருக்கிறார்.

ரைபோசோம்களை ஆராய்ந்து பார்த்த இவர் இந்த ரைபோசோம்கள் முன்னர் வினையூக்கி போல செயல்பட்டு அமினோ அமிலங்களை இணைத்து புரதம் உருவாக்கி வந்து இருக்கின்றன. இது எல்லா உயிரிகளிலும் தென்படுகிறது. மேலும் இந்த ரைபோசோம்கள் அத்தனை சிறப்பாக ஒன்றும் செயலாற்றவில்லை மேலும் புரதம் போல இவற்றுக்கு எவ்வித வடிவமும் கிடையாது, ஆகவே இந்த ரைபோசோம்  ஒரு பானை போல செயல்பட்டு அதில் என்ன சேர்கிறதோ அதைவைத்து ஒன்று உண்டாக்கப்படும். எனவே இந்த ரைபோசோம்கள் ஒன்றும் இயற்கைத் தேர்வு மூலம் தம்மை முன்னிலைபடுத்தியவை அல்ல, மாறாக மூலக்கூறுகள் இணைந்து உண்டாக்கியவை என எண்ணம் தோன்றுகிறது என்றார்.

ஆர் என் ஏ  மற்றும் புரதங்கள் தாமாக உருவாகக்கூடிய சாத்தியம் இல்லை என முன்னர் சொல்லப்பட்டாலும் கிட்டத்தட்ட 14 அமினோ அமிலங்கள் மற்றும் சில புரதங்கள் தாமாகவே உருவாகும் தன்மை கொண்டவை. எனவே ஆர் என் ஏ  உலகம் என்பதை விட ஆர் என் ஏ/புரதம் உலகம் சரியாக இருக்கும் என்கிறார்.

ஆர் என் ஏ  உலகம் :

ஆர் என் ஏ  தானாக நியூக்ளிக் அமிலங்கள் மூலம் உருவாகி தாமே பெருகி அதில் இருந்து ரைபோசோம்கள் உருவாக்கி பின்னர் அந்த ரைபோசோம்கள் ஆர் என் ஏ தற்போது போல புரதங்களாக மாற்றியதும் அந்த புரதங்கள் வினையூக்கிகளாக செயல்பட்டு கொண்டு இருக்கின்றன.

ஆர் என் ஏ  அல்லாத உலகம் :

இந்த நியூக்ளிக்  அமிலங்கள், அமினோ அமிலங்கள் எல்லாம் கூடி ஆர் என் ஏ வுக்கு முந்தைய ஒன்றையும் அதே போல புரதங்களுக்கு முந்தைய ஒரு புரதம் உண்டாக்கி இருக்கின்றன. இவை இரண்டும் சேர்ந்து அடிப்படை ரைபோசோம்கள் உருவாக்கின. அந்த அடிப்படை ரைபோசோம்கள் வினையூக்கியாக செயல்பட்டு  ஆர் என் ஏ  மற்றும் புரதம் உருவாக்கின. அதற்குப் பின்னர் ஆர் என் ஏ  மற்றும் புரதம் ஆர் என் ஏ மூலக்கூறுகளை பெருகச் செய்தன. பின்னர் இந்த அடிப்படை ரைபோசோம்கள் ரைபோசோம்களாக  மாறி ஆர் என் ஏ  வை புரதம் உருவாக வழி செய்தன என்கிறார்கள்.

 இந்த உலகம் உருவாக ஆர் என் ஏ  மூலக்கூறு காரணம்  இல்லை என்றால் இந்த புரதம் மற்றும் ஆர் என் ஏ  ஒரு சேர அடிப்படையில் தானே தோன்றி இருக்க வேண்டும் என அடிப்படை ரைபோசோம்கள் உருவாக்கி அது ஆர் என் மற்றும் புரதம் உருவாக்கும் வல்லமை கொண்டவையா என சோதிக்கத்  தொடங்கிவிட்டார்கள்.

சற்று பொறுங்கள், இந்த பிரபஞ்சத்தின் தீராத வலியைப் போக்கிக் கொண்டு இருக்கின்றேன்.

(தொடரும்) 

Thursday 30 July 2015

ஏடு கொண்டார் எவர் கண்டார்

கல்வெட்டு ஒன்றைப் பார்த்து
இதில் எழுதப்பட்டு இருப்பது
உண்மையா என மனம்
எண்ணியபோது தானே பதிலாக
உண்மையாகவும் இருக்கலாம்
உண்மையற்றதாகவும் இருக்கலாம்
என்றே சொல்லி அமர்ந்தது

எத்தனையோ புத்தகங்கள்
எழுதப்பட்டு இருக்கிறது
கதைகளா, கற்பனைகளா என
மனம் வினவிக்கொண்டே
தனக்குள்
கதையாக  கற்பனைகளாக இருக்கலாம்
கதையற்றும் கற்பனையற்றும் இருக்கலாம்
என ஆசுவாசம் கொண்டது

ஆண்டாண்டு காலமாக
இறைவன் குறித்த பாடல்கள்
ஏற்றுக்கொள்வதா மறுப்பதா
என்ற மனதின் ஓசைக்கு
அதுவே இசையாய்
ஏற்றுக்கொள்ளவும் செய்யலாம்
மறுத்துவிடவும் செய்யலாம்
என உருகி நின்றது

அவரவர் எண்ணம் கொண்டு
தான் அறிந்த அறிவின் பலம் கொண்டு
இந்த பரந்த பிரபஞ்சங்களின்
ஏடு கொண்டார் எவர் கண்டார்
ஏதுமே எழுதிவைக்காத
மனிதர் கொண்ட மௌனங்களுக்கு
அர்த்தம் நாம் அறியலாம்
அர்த்தம் நாம் அறியாமலும் இருக்கலாம்.




Wednesday 29 July 2015

களிமண் - மயர்வற மதிநலம்

களிமண் கொண்டு வந்து
ஒரு பொம்மை செய்து தர சொன்னான்
தண்ணீர் ஊற்றி
களிமண்ணில் ஒரு பொம்மை
செய்து தந்தேன்

அந்த பொம்மையை
 தண்ணீரில் கரைத்துவிட்டு
என்ன தண்ணீரில்
பொம்மை அழிகிறதே  என்றான்
நீ கொண்டு வந்த
களிமண் அப்படி என்றேன்

சிறிது நேரம் யோசித்தவன்
நான் எப்படிபட்ட களிமண்
கொண்டு வந்தாலும்
நீ அழியாத பொம்மை
அல்லவா செய்ய வேண்டும் என்றான்

அழியாத புகழோடு வாழ
வழி சொன்னான் அவன்
அழியாத கல்வியோடு மேன்மை
பெற சொன்னான் அவன்
அழியாத சிறப்பு குணம்
கொண்டிருக்க சொன்னான் அவன்

தன்  தேகத்து பெருமை பேசியிராது
பிறருக்கு அடிமையற்று இருந்திடவே
களிமண் கொடுத்துச் சொன்னான் அவன்

உள்ளத்தில் உயர்வு கொண்டு
கழிவிரக்க எண்ணம் அகற்றி
மதிநலம் சிறப்புற மனநலம் தானுயர
அழியாத வாழ்வு வாழச் சொன்னான் அவன்






Monday 27 July 2015

யாருமற்ற அநாதை பிரபஞ்சம்

சில தினங்களாகவே அந்த சாலை வழியில் பார்க்கிறேன்
ஒரு மரத்தின் நிழலில் அவ்விலங்கு படுத்து இருக்கிறது
எங்கிருந்து வந்து இருக்கும் என அதனிடம் கேட்டாலும்
உர்ரென்று முறைக்கும் அல்லது பாய்ந்து கடிக்கும்

என்னைப்போலவே பலரும் அவ்வழி செல்கிறார்கள்
அதே விலங்குதனை பார்த்தபடி நகர்கிறார்கள்
கல்லெடுத்து எறியும் சிறுவர் கூட அதை
கண்டுகொள்ளாமல் போய் விடுகிறார்கள் மௌனமாக

இப்படியாக இன்னும் சில தினங்கள் நகர்கின்றன
திடீரென ஒருநாள் அந்த விலங்கினை காணோம்
ஏதேனும் வேறு ஒரு மரம் தேடிப்  போயிருக்கும்
என்றே எனது மனமும் சமாதானம் சொல்கிறது

வேலைக்கு விடுமுறை சொல்லிவிட்டு தேடுகிறேன்
எந்த மரத்தின் கீழும் அந்த விலங்கு காணவில்லை
தனித்துக் கிடந்த அந்த விலங்கை வாரியணைத்து
என் வீட்டில் வைத்து அழகு பார்த்து இருக்கலாம்தான்.

Sunday 19 July 2015

அடியார்க்கெல்லாம் அடியார் - ஆசியுரை திருமதி சுஷீமா சேகர்


                                                                        ஆசியுரை 

இப்போதெல்லாம் கிராமங்கள் கூட நகரங்கள் ஆகி வருகின்றன. விவசாய நிலங்கள் வீடு கட்டும் மனைகளாக மாறி விட்டன. கிராம வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நகரில் வளரும் பிள்ளைகளுக்குக் கொஞ்சமும் தெரிவதில்லை. இந்த நாவலைப் படிக்கையில் திரு.ராதாகிருஷ்ணன் அவர்கள் நம்மை ஒரு அழகிய கிராம சூழலுக்குள் அமிழ்த்தி விடுகிறார்.

கிராமத்தில் இருந்து கல்லூரிக்குப் படிக்க வரும் முதல் தலைமுறையினர் படும் அல்லகளையும், அவர்களுக்கு நண்பர்களாலும் சூழ்நிலைகளாலும் நேரும் மனமாற்றங்களையும் அருமையாகப் பகிர்ந்துள்ளார் கதாசிரியர். படிக்க ஆரம்பித்தவுடன் கதை போல் அல்லாமல் சினிமாவைக் காண்பது போல் அவர் எழுத்து நம் கண் முன் விரிகிறது.

கருத்துரிமை மட்டுமே நம்மை ஐந்தறிவுள்ளப் பிராணிகளிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. ஒவ்வொரு துடிப்புள்ள இளைஞன் வாழ்வில் ஏற்படும் சலனங்களையும், கேள்விகளையும் அதற்கான விடைத் தேடல்களையும் படிப்படியாக இக்கதையில் விவரித்திருக்கிறார் திரு.ராதாகிருஷ்ணன்.

தற்போது இருக்கும் இளம் தலைமுறையினர் மதங்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. ராதா அவர்கள் சமணம், சைவம், வைணவம் ஆகிய மதங்களை இக் கதையில் வரும் பாத்திரங்கள் மூலம் விளக்குவது நல்ல ஒரு உக்தி. கடைசியில் நாம் உணருவது அதையெல்லாம் விட அன்புள்ள மனிதனாய் இருப்பதே சாலச் சிறந்தது என்று! நல்லதொரு முத்தாய்ப்பு கதைக்கு!

அவரின் இந்த நாவலை பலரும் படித்து, சுவைத்து, மகிழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி அவரை வாழ்த்துகிறேன். எந்தப் படைப்பும் சரியான சிந்தனையாளர்கள், படைப்பைப் பாராட்டுபவர்கள் கைகளில் போய் சேர்ந்தால் தான் படைத்தவருக்கு ஆனந்தம். அது திரு.ராதாகிருஷ்ணன் அவர்களுக்குக் கிட்ட வேண்டும் என்பது என் ஆசை. இன்னும் பல நற்கதைகள் எழுதி பேரும் புகழும் அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அன்பும் ஆசியுடனும்,
சுஷீமா சேகர்.

--------------------------------

மிக்க நன்றி அம்மா. எண்ணில்லா மகிழ்ச்சி கொண்டேன். 

Saturday 18 July 2015

அவளது சொந்தம்

வேண்டுவன எல்லாம் வேண்டுவன
விடுவன எல்லாம் விடுவன
தான் ஆண்டு தன் பிள்ளை ஆண்டு 
ஆண்டாண்டு காலங்கள் எவரும் இருப்பதில்லை

ஊர்வன எல்லாம் ஊர்வன

பறப்பன எல்லாம் பறப்பன 
கல்வியறிவு களவு அறிவு என 
எந்த அறிவும் கொண்டதில்லை 

நடப்பன எல்லாம் நடப்பன

கடப்பன எல்லாம் கடப்பன
கவலை ஆட்டுவித்து கவலை புரிந்து 
காலங்களில் எல்லாம் விழுந்து கிடப்பன

அவளது சொந்தம் என்று திரிவன

அவனது சொந்தம் என்று வருவன
ஒன்றுக்கொன்று வேறுபட்டு உழன்று 
உடைந்தும் ஒட்டுறவாக இருப்பன

சாமி கண்டேனென சொல்வன 

பொய்யாய் உலகம் வெல்வன
தானே உலகமும் சுற்றமும் என மறந்து 
ஏதோ எவரோ என ஓடி ஒளிவன

அழுவன எல்லாம் சிரிப்பன

சிரிப்பன எல்லாம் அழுவன
இன்பம் மட்டுமே கருதி வாழ்வில் 
துன்பம் கண்டால் நடுங்குவன

ஓடுவன எதையோ நாடுவன

நாடுவன எதையோ தேடுவன
மறதியில் எதையும் மறந்து திரிந்து
ஏதும் அறியாது சிவனாகி கிடப்பன

கண் பார்ப்பன காது கேட்பன

வாய் பேசுவன மூக்கு சுவாசிப்பன
காலமெல்லாம் இதையே நினைந்து

நினைந்து மூளை தோல் உணர்வன 
எது காப்பன எது தோற்பன 
அது அழிவன அதுவே ஆக்குவன
எல்லாம் உருமாறி உருமாறி எக்காலத்தும் 
வழி மாறாது இப்படியே இருப்பன 

எல்லா ன இருந்தாலும் பண ண இல்லாது
போனால் எவரும் எவரையும் மதிப்பன ரோ?

Wednesday 15 July 2015

பூமி சுற்றலும் அவள் சுற்றலும்

எங்கே சுற்றுப் பார்க்கலாம் என சுற்றச் சொன்னவுடன் சரசரவென சுற்றி தலை கிறுகிறுத்துப் போச்சு என எல்லாமே தன்னைச்சுற்றி சுற்றுவதாக சொன்னான்.  ஆமாம் இந்த பூமி எப்படி சுற்றுகிறது எனக் கேட்டால் சுற்றவேண்டும் எனும் வேண்டுதல் போல என சொல்லிவிட்டுச் சென்றான். அவனை மீண்டும் அழைத்து அப்படி என்ன வேண்டுதல் என்றேன். மனிதர்கள் பாப பரிகாரத்திற்கு பிரகாரம் சுற்றுவது போல என்றான். எதையுமே குதர்க்கமாக சொல்லிச் செல்லும் அவனை எனக்கு சிறு வயதில் இருந்தே பழக்கம். திடீரென சிறகுகள் இல்லை என்றால் பறவைகள்  இல்லைதானே என்பான். எத்தனையோ முறை என்ன என்னவோ சொல்லிவிட்டுப் போவான். எதற்கு சம்பந்தம் சம்பந்தமில்லாமல் பேசுகிறான் என எனக்கு அவனுக்கு சித்தம் கலங்கிவிட்டதோ என எண்ணிக்கொள்வேன். ஆனால் இன்றுவரை அவன் அப்படி வேறு எவரிடமும் பேசியது இல்லை. 

என்னை நீ பைத்தியம்னு நீ நினைச்சல, இல்லைன்னு சொல்லாத எதுக்குனா உன்னை நான் பைத்தியமுன்னு நினைச்சேன் என்றான். சரி இருந்துவிட்டுப் போகட்டும். இந்த பூமி எப்படி சுற்றுகிறது என சொல்லிவிட்டுப் போ என்றேன். நான் பேசும்போது நீ குறுக்கேப் பேசக்கூடாது என கட்டளை இட்டான். நான் கேள்வி கேட்கலாமா என்றேன். உனக்கு ஒருதரம் சொன்னாப் புரியாது, கேள்வி கேட்கறது பேசறதுல ஆகாதா என்றவுடன் சரி என அமைதி ஆனேன். 

ஆமா, நீ அந்த புள்ளை  பின்னாலே சுத்திட்டு திரியற உனக்கு வெட்கம் மானம் ரோசம் எதுவும் இல்லையா என்றான். அவ என்னோட காதலி அதுக்கும் இதுக்கும் இப்ப என்ன சம்பந்தம் என்றேன். அவதான் உன்னை சுத்தி வரணும் ஆனா நீ அவளைச் சுத்தி வரியே. என்னைக்காவது நிலாவை சூரியன் சுத்தி வந்து இருக்கா என்றான். அவள் சூரியன், நான் நிலா அப்படின்னு வைச்சிக்கோ, விசயத்துக்கு வா என்றேன். இப்போ என்னோட தொனி வேறமாதிரி இருக்கும். அதனால சொல்றதை மட்டும் கேளு என அவன் ஆரம்பித்தான். 


துகள்கள் தூசிகள் சேர்ந்த போதே இந்த சுற்றுதலை தாம் உருவாகும் முன்னரே நட்சத்திரங்கள் கோள்கள் கற்றுக்கொண்டுவிட்டன. நேர்உந்து விசை. கோண உந்துவிசை என இரண்டு விசைகள் உண்டு. நேர்  உந்து விசை ஒரு பொருளின் வேகம் மற்றும் நிறை மட்டுமே சம்பந்தப்பட்டது. கோண உந்து விசை ஒரு பொருளின் நிலைமத் திருப்புத்திறன் மற்றும் கோண வேகம் சம்பந்தப்பட்டது. 



                                                                               நன்றி கூகிள் 

நேராக எறியப்பட்ட பொருள் தான் கொண்ட நேர் உந்து விசையால் சுற்றிச்சுற்றி வராது. நேராக ஓரிடத்தில் சென்று விழும். வட்டப்பாதையில் நேர் எதுவும் கிடையாது. இது நேர் உந்து விசைக்கு உண்டானது. 


எப்போது நேர் உந்து விசையானது கோண உந்து விசை ஆகிறதோ அப்போது  எல்லா இடங்களிலும் ஒரே தன்மை கொண்டு இருக்க அந்த பொருளானது சீராக சுற்றிக்கொண்டே வரும்.அப்படித்தான் கோள்கள் உருவாக காரணமாக இருந்த இந்த துகள்கள் தமக்குள் சுற்றுத்தன்மையை உண்டாக்கின. "They started with spin and still spinning" அப்படி சுற்றியதால் உருண்டை வடிவம்தனை கோள்கள் கொண்டது. கோண உந்து விசை. பூமி இப்படித்தான் சுற்றுகிறது. 

எந்த ஒரு அணுவிலும் உள்ள எலக்ட்ரான்கள் இப்படித்தான் செயல்படுகின்றன. அவை புரோட்டான்களை மையம் கொண்டு சுற்றுபவை. சுற்றும்போது அவை ஒரே இடத்து நிலை கொள்வதில்லை. புரோட்டான்கள் கூட சுற்றுபவைதான் +1/2 -1/2 சுற்றுக்கொண்டவை.

தன்னைத்தானே சுற்றி சூரியனை சுற்றுவது பூமி. பூமியின் சுற்றுப்பாதையை பிற கோள்கள் நிலா சூரியன் இவற்றின் விசைகள் கூட தீர்மானிக்கின்றன. நிலாவானது பூமித் தன்னைத்தானே சுற்றுவதன் வேகத்தை வருடத்திற்கு இத்தனை வேகம் என குறைத்து பாதிக்கச் செய்கிறது. காலப்போக்கில் நாட்கள் நீள வாய்ப்பு உண்டு. ஒரு காலத்தில் நாள் என்பது ஆறு மணிநேரம். 

                                                                                நன்றி கூகிள் 





மேலே காட்டப்பட்டுள்ள படங்களில் உள்ளதுபோல மையநோக்கு விசை (Centripetal force), மையவிலக்கு விசை (centrifugal force)  ஈர்ப்பு விசை (gravitational force) கோண உந்தம் (angular momentum) என்பதெல்லாம் கணக்கில் கொண்டு தான் இந்த செயற்கை கோள் (satellite) பூமியைச் சுற்றிவருகிறது. நிலா மற்றும் பூமிக்கும் அதே நிலை எனினும் தனக்குள் இருந்த இருக்கும் Angular momentum (கோண உந்தம்) ஒன்றுதான் இந்த சுற்றும் கலையை பூமிக்கு கற்றுத்தந்தது.




Friday 10 July 2015

நுனிப்புல் பாகம் -3 9

பகுதி - 8

9. மரபியல் உலகம்

இவ்வுலகில் இந்த குழந்தைகள் விசித்திரம். எப்படி குழந்தைகள் ஒரு விஷயத்தை அறிந்து கொள்கின்றன எப்படி ஒரு பழக்க வழக்கத்தை பின்பற்றுகின்றன என்பது மற்றொரு அதிசயம். பசிக்காக மட்டுமே குழந்தை. பின்னர் தனக்கு இன்னது தேவை என கருதி அழும் குழந்தை. குழந்தைகள் உலகம் புரிந்து கொள்ள இயலாது.

இரட்டைக் குழந்தைகளுக்கு எல்லாவித மரபணுக்கள் ஒரேமாதிரி இருந்தாலும் அவர்களது செயல்பாடுகள் வேறுவிதமாக இருக்கும். சூழ்நிலையானது குழந்தைகளின் மனநிலையில் பெரும் மாறுபாட்டினை உண்டாக்கும். வாசன் இந்த இரண்டு குழந்தைகள் எப்படி வளர்ந்து என்னமாதிரியான மனிதர்களாக உருவாகி வருவார்கள் என யோசித்தான்.

மறுநாள் சாரங்கன் நேராக விநாயகம் பெரியவர் வீட்டிற்கு வந்து இருந்தார். விநாயகம் அவரை வீட்டுக்குள் வரவிடாமல் மந்தையில் சென்று பேசலாம் என அழைத்துச் சென்றார்.

''அவ்வளவு கோபமா உனக்கு''

''சாரங்கா, நீ பண்ணி இருக்கிற காரியம் தெரியுதா, இன்னும் நீ மாறலை''

''எனக்கு சம்பந்தம் இல்லை, இல்லைன்னா உன்னை எதுக்கு வந்து பார்க்கபோறேன்''

''சொல்ல வந்த காரியத்தைச் சொல்லு''

''இங்கே நிலம் விலைக்கு வாங்கணும்''

''நான் தரமாதிரி இல்லை, நீ வேணும்னா இங்கே யார் தராங்கனு கேட்டு வாங்கிப்போடு. எனக்கு எந்தவித ஆட்சேபணை  இல்லை''

''அவங்க வந்தப்ப நீ அப்படி சொல்லி இருக்கலாமே, எதுக்கு முத்துராசு அவங்க மேல கையை நீட்டினான். அதுதான் அவங்க கொலைபண்ண முயற்சி பண்ணி இருக்காங்க''

''அவங்க என்ன பேசினாங்க, நீ என்ன பேச சொல்லி அனுப்பின, வாசன் மேல அவங்க காட்டின மரியாதை. சாரங்கா உன்கிட்ட எனக்குப் பேச எதுவும் இல்லை''

விநாயகம் விறுவிறுவென அங்கிருந்து சென்றார். சாரங்கனை நோக்கி சிலர் யாருமே உனக்கு நிலம் இங்கே தரமாட்டாங்க, பேசாம வேற ஊருல நிலம் வாங்கிப்போட்டு வாழுற வழியைப் பாரு என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே முத்துராசு அங்கே வந்தார்.

''இன்னும் இங்கதான் திரியிற''

''ராசு, உன்னோட ஆட்டத்தை எல்லாம் வேற யார்கிட்ட வேணா வைச்சிக்கோ''

''இப்ப நீ கிளம்பலை, நான் என்ன பண்ணுவேன்னு தெரியாது. ஊர்த் துரோகி''

சாரங்கன் அங்கிருந்து உடனடியாக கிளம்பினார். அவர் இனி இந்த குளத்தூர் பக்கம் வரக்கூடாது என்கிற நினைப்புடன் போனாலும் மனதில் ஏற்பட்ட அவமானம் அவரை எப்படியேனும் வஞ்சம் தீர்க்க வேணும் என எண்ணிக்கொண்டே இருக்கச் செய்தது. வாசன் அவரை வழியில் கண்டான்.

''ஐயா, என்ன இந்தப்பக்கம்''

''நிலம் வாங்கலாம்னு வந்தா யாரும் மரியாதை தரல, அந்த விநாயகம் என்னை ஒரு மனிசனா கூட மதிக்கமாட்டேன்கிறான். இந்த ராசு என்னை ஒரு எதிரியாகவேப் பார்க்கிறான். நீ என்ன என்னை சொல்லப்போற''

''உங்களை என்ன சொல்லப்போறேன் ஐயா. நீங்கதான் இன்னும் என் மேல கோவத்தில இருக்கீங்க. எப்படியும் நீங்க திரும்பி வரத்தான் போறீங்க. ஒவ்வொருமுறை ஏதேனும் திட்டம் இல்லாமலா வரப்போறீங்க. நிலம் வாங்குற அளவு உங்களுக்கு காசு ஏது''

''நீயும் என்னை எதிரியாப் பார்க்குற. எனக்கு காசு எப்படி வந்ததுனு உனக்கு கவலை வேணாம். நிலம் தர முடியுமானு சிலர்கிட்ட கேட்டு எனக்கு தகவல் சொல்லு, நான் வந்து வாங்கிக்கிறேன்''

''எனக்குத் தெரிஞ்சி உங்களுக்கு யாரும் நிலம் தரமாட்டாங்க. உங்களோட செய்கை எல்லாம் நல்லா இல்லை ஐயா''

''வாசா, உன்னை நான் எப்படியும் ஒழிச்சி கட்ட நினைச்சி இருந்தா அதை என்னைக்கோ செஞ்சிருக்க முடியும். எனக்கு அது தேவை இல்லை.''

''வேற என்னதான் உங்க எண்ணம்''

''நானும் இந்த ஊருல வாழணும். என்னை ராசு நீ அந்த விநாயகம் எல்லோரும் சேர்ந்து வெளியே அனுப்பிட்டீங்க''

''நீங்கதான் போனீங்க. மறந்துரவேணாம்''

முத்துராசு அந்த நேரம் பார்த்து அங்கே வந்தார்.

''எனக்குத் தெரியும் நீ இப்படிதான் பண்ணுவ''

கல் ஒன்றை எடுத்து சாரங்கனின் பக்கத்தில் எறிந்தார். சாரங்கன் படும் கோபம் கொண்டவராக அனுபவிப்பீங்க என்றபடி வேகமாக நடக்க ஆரம்பித்தார்.

''என்னண்ணே இப்படி பண்றீங்க''

''வாசா, உனக்குத் தெரியாது. இவன் விஷம். சரி நான் தோட்டத்திற்குப் போறேன்''

''வீட்டுக்கு வரை போயிட்டு வரேன்ணே''

வாசன் நேராக ஐவரதன் அஷ்டவரதன் இருவரையும் பார்க்க சென்றான்.

பூங்கோதையிடம் எப்படி இருவரையும் அடையாளம் காண்பாய் என்றான். ஐவரதன் வலது கையில் கட்டப்பட்ட கயிறு, அஷ்டவரதன் இடது கையில் கட்டப்பட்ட கயிறு என அடையாளம் காட்டினாள்.

நமது மரபணுவில் உள்ள 46 குரோமோசோம்கள் இரண்டு இரண்டாக இருக்கும். இந்த மரபணு ஒன்று செயல்பாட்டு தன்மையும். மற்றொன்று அடங்கிய தன்மையும் கொண்டு இருக்கும். எந்த மரபணு வெளிப்படுகிறதோ அதன் குணாதிசயம் வெளிப்படும். இப்போது இந்த இரண்டு குழந்தைகளிடம் உள்ள மரபணு ஒருவருக்கு ஒன்று வெளிப்பட்டும், மற்ற குழந்தைக்கு மற்ற மரபணு வெளிப்பட்டும் இருந்தால் அதுவே வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்டு இருக்கும்.

இவர்களுக்கு எப்படிப்பட்ட பழக்கம் உருவாகும் என இந்த மரபணுக்கள் தீர்மானிக்க இயலது எனினும் சில அடிப்படை இயல்புகள் மாற வாய்ப்பு இருக்கும் என்றே வாசன் நினைத்தான்.

''ரெண்டு பேரும் எதிர்மாறான குணம் கொண்டு இருந்தா என்ன செய்வீங்க பூங்கோதை''

''வளரட்டும்ணா பார்க்கலாம். அந்த செடிகள் எல்லாம் என்ன அண்ணா பண்ணி இருக்கீங்க''

''அப்படியேதான் இருக்கு. பார்க்கலாம்''

வாசன் தோட்டத்திற்கு திரும்பிச் சென்றான். முத்துராசு தோட்டத்தில் மயக்கமாகி விழுந்து இருந்தார்.

(தொடரும்)