Friday 14 July 2017

அடியார்க்கெல்லாம் அடியார் - வாழ்த்துரை சு.சந்திரகலா

அடியார்க்கெல்லாம் அடியார் - வாழ்த்துரை 

இன்று அனைத்து நகரங்களும் வளர்ந்து நிற்பதற்கு பின்னால் கிராமங்கள் தான் இருக்கின்றன. மனிதனின் பழக்க வழக்கங்கள் அழியாமல் இருப்பதற்கும் உறவின் உன்னத நிலையையும் கிராமங்கள் தான் புரிய வைக்கின்றன. கிராம மக்களின் வாழ்வியல் முறையையும் சமயம் மனிதனின் வாழ்வோடு எவ்வாறு பயணிக்கிறது என்பதை எடுத்துரைக்கிறது அடியார்க்கெல்லாம் அடியார்.

இக்கதையின் ஆரம்பம் முதல் இறுதிவரை கிராமத்திற்குள் பயணம் செய்த உணர்வை கொடுக்கும்.நகரத்தில் ள்ள இளைய சமுதாயத்தினர்க்கு இந்நாவல் ஒரு வரப்பிரசாதமாக அமையும்

கிராம மக்களின் நடைமுறை வாழ்க்கையில் தொடக்கி உறவுகளின் முக்கியத்துவத்தையும் சமயம் மற்றும் அன்பின் முக்கியத்துவத்தையும் இக்கதையின் மையகருத்தாக எடுத்து உணர்த்தியிருப்பது சிறப்பு.


இக்கதையின் சில இடங்களில் உலகநியதிகளை எடுத்துரைப்பது மிகவும் சிறப்பு.அறிவியல் சார்ந்த விஷயங்களை சொல்லவும் மறக்கவில்லை.அதை வாசகர்களுக்கு புரியும்படி மிக எளியமுறையில் விவரித்துள்ளார் இராதாகிருஷ்ணன்.சார்லஸ் டார்வின் இயற்கை தேர்வு முறை பற்றி கூறியிருப்பது அற்புதம். இதன் மூலம் இவர் மிகச் சிறந்த அறிவியலார் என்பதை நிரூபித்துளார்

கடவுள் சமயம் சார்ந்த விஷயங்களை எழுதுவதற்கு அதை பற்றிய அறிவும் புரிதலும் மிக முக்கியம். ஆனால் இராதாகிருஷ்ணன் அவர்கள் மிக அழகாக தன்னுடைய கருத்துக்களை எடுத்துரைத்திருக்கிறார். ஆங்காங்கே இறைவனை பற்றி மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் அவற்றின் விளக்கங்கள் அவர்களின் சிறப்புகளை சொல்லியிருக்கிறார். மனிதன் வாழ்வதற்கு அன்பு ஒரே அடிப்படை என்பதை மிக அழகாக உணர்த்துகிறார்

அடியார்க்கெல்லாம் அடியார் என்னும் இந்நாவலில் பல அரிய தத்துவங்களையும் வாழ்வியல் முறைகளையும் தன்னுடைய மிகச் சிறப்பான எழுத்துக்களால் புரியவைத்தமைக்கு இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.”யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுகஎன்று தான் ஒவ்வொரு கதை ஆசிரியரும் தம் எழுத்துக்களை புத்தகமாக வெளியிடுகின்றனர். இராதாகிருஷ்ணன் அவர்களும் அந்த எண்ணத்திலேயே தன்னுடைய நாவலை வெளி உலகிற்கு கொண்டுவந்திருக்கிறார் என்பதே என்னுடைய எண்ணம். இது போன்ற பல நாவல்கள் எழுதி எழுத்து துறையில் சாதிக்க வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.

நன்றி  

                                 
அன்புடன்                                                                                                                                                  
சு.சந்திரகலா  

அடியார்க்கெல்லாம் அடியார் - மதிப்புரை ஹனுமலர்

அடியார்க்கெல்லாம் அடியார் - மதிப்புரை 

இந்த நாவலைப் படித்தபோது உணர்ந்த எனது உண்மையான உணர்வுகளை இதில் பதிவு செய்துள்ளேன். முதல் இருபது பக்கங்கள் மிகவும் மெதுவாகவும் அத்தனை சுவாரஸ்யமாகவும் இல்லாமல் இருந்தது. இதற்கு நான் ஒரு இந்துவாக இல்லாமல் இருப்பதும் மற்றும் இந்து கலாச்சாரம் அறியாமல் இருப்பதுவும் காரணம் ஆகும். எனது மனதை இந்த முதல் இருபது பக்கங்கள் அவ்வளவாக ஈர்க்கவில்லை. பக்தி பாடல்கள் எனக்குப் புரியாத காரணத்தினால் அவற்றை வாசிக்காமல் கூட கடந்துவிட்டேன்.

ஈஸ்வரி வந்தபிறகு எனக்கு கதையில் ஈடுபாடு ஏற்பட்டு ஆர்வத்துடன் வாசிக்கத் தொடங்கினேன். காதல் கடவுளை வெல்ல இயலுமா என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் மேலோங்கியது.

காதல் சிவனை வென்றது என சொல்லலாமா என யூகம் செய்கின்றேன். ஈஸ்வரியின் மற்றும் கதிரேசனின் காதல் மிகவும் அழகாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. அவர்களது புரிதலை உணர்ந்து கொள்ள முடிகிறது, அதுவும் குறிப்பாக ஈஸ்வரி. அவள் தன் கணவன் மீது சந்தேகமோ, பொறாமை குணம் கொண்டவள் போல தென்படவே இல்லை. உண்மைக் காதல். காதலே எல்லாம். என்னை மெய்மறக்கச் செய்த பகுதி என குறிப்பிடலாம்.

மதுசூதனன் மற்றும் வைஷ்ணவி இருவருக்கும் இடையில் காதல் முதலில் இருந்தே அவ்வளவாக சொல்லப்படவில்லை. மதுசூதனின் பிடிவாத முரட்டு குணம் தென்படுகிறது. அவனது வாழ்வு சீரழிந்தது போல இன்னும் கதையில் காட்டி இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.

என்னை கவர்ந்த அம்சங்களில் ஒன்று கதிரேசன் வைஷ்ணவியிடம் கொண்டு இருக்கும் ஒரு உன்னத நட்பு. மிகவும் அருமை. அவன் அவளோடு பேசும் போதும் அவளை அவன் நடத்தும் விதமும் அற்புதமான தருணங்கள்.

காதல்தான் எல்லாம். காதல் இருந்தால் வாழ்வு இருக்கும் என முடித்தவிதம் வெகு சிறப்பு.

அன்புடன்
ஹனுமலர்


Tuesday 16 May 2017

ஆட்டுக்கு வளைகாப்பு

ஆடு கர்ப்பமாக இருக்கிறது என அறிந்து பெரு மகிழ்ச்சியுடன் அம்மாவிடம் ஓடிச் சென்றேன்.

''அம்மா அம்மா ஆட்டுக்கு வளைகாப்பு பண்ணுவோம்மா''

அம்மா என்னை முறைத்துப் பார்த்தார்கள்.

''ஏன்டா இப்படி இருக்க ஊருல என்ன பேசுவாங்க தெரியுமா''

''ஆட்டோட கர்ப்பத்துக்கு நம்ம தலைவர் வீட்டு கிடாதான் காரணம் அதையும் கூட்டி வரலாம்மா, தயவு செஞ்சி சரினு சொல்லும்மா''

''என் வயித்துல எப்படிடா நீ வந்து பொறந்த, நீயெல்லாம் ஆட்டுக்குப் பொறக்க வேண்டியவன், போயிரு''

அம்மாவின் கோபம் எனக்கு எரிச்சல் தந்தது. அம்மாவுக்குத் தெரியாமல் வளைகாப்பு விழா ஏற்பாடு பண்ண வேண்டும் என திட்டமிட்டு வரும் ஞாயிறு அன்று விழா நடத்த ஒரு சின்ன அரங்கம் பிடித்தேன். ஆட்டிடம் செய்தி சொன்னேன். ஆடு என்ன சொல்றான் இவன் என்பது போல என்னைப் பார்த்தது.

கால்கள் மட்டுமே உள்ள ஆட்டுக்கு கொலுசு போலத்தான் வளையல் போட இயலும் என அறுபது வளையல்கள் அதன் நான்கு கால்களுக்கு அளவெடுத்து வெளியூரில் உள்ள கடையில் சொன்னேன்.

''யாருக்குவே''
.
''ஆட்டுக்குண்ணே''

''புத்தி கெட்டுப் போச்சாலே, அவனவன் பெத்த புள்ளைக்கே வளைகாப்பு செஞ்சி வைக்கமாட்டீங்கா இவனைப் பாருவே, கலிகாலம். சரி சரி கொடுத்துட்டு போ நாலு நாளுல செஞ்சி வைக்கேன்''

''சனிக்கிழமை வேணும்''

''சரிவே, வெள்ளிக்கிழமை வந்து வாங்கிக்கோ''

பூக்கடையில் சென்று நின்றேன். ஆட்டுக்கு மாலை போட்டால் மாலை தரையில் தட்டக்கூடாது. அந்த ஆடு தன்னை வெட்டப் போகிறார்களோ என எண்ணவும் கூடாது என யோசித்தேன்.

''என்ன தம்பி, என்ன வேணும்''

''சந்தனம், குங்குமம் வேணும்''

''வேற''

''ஆட்டுக்கு ஒரு நல்ல மாலை செஞ்சி தாங்க''

''என்ன கிடா வெட்டா''

''இல்லை ஆட்டுக்கு வளைகாப்பு''

''முன்னமே சொல்ல வேண்டிதான தம்பி, தப்பா பேசிட்டேனே, சரி ஆடு எவ்வளவு உயரம்''

எப்போது ஆட்டின் உயரம் அளந்து இருக்கிறேன். கால் அளவு அளந்த எனக்கு ஆட்டின் உயரம் தெரியவில்லை.

''என்னோட தொடை உயரத்துக்கு இருக்கும்ணே''

தான் உட்கார்ந்த இடத்தில் இருந்து எட்டிப்பார்த்தார்.

''இப்பவே கட்டித்தரவா''

''சனிக்கிழமை வேணும்''

அங்கிருந்து நேரடியாக துணிக்கடைக்குப் போனேன். எனக்குப் பிடித்த நிறத்தில் எடுப்பதா அல்லது ஆட்டுக்குப் பிடித்த நிறத்தில் எடுப்பதா என யோசித்தபடி உள்ளே சென்றேன். சந்திரன் அண்ணனை அங்கே பார்ப்பேன் என நினைக்கவில்லை. அவர் கண்ணில் படாமல் ஒரு ஓரமாக சென்று நின்று கொண்டேன்.

சந்திரன் அண்ணனுக்கு ஒரே ஒரு மகள் தான். அந்தப் பெண் கூட பக்கத்து ஊர்ப் பையனை காதல் பண்ணிக்கொண்டு ஒரு வருடம் முன்னர் ஓடிப்போய்விட்டாள். சில வாரங்கள் கழித்து வந்த அவர்களை இந்த சந்திரன் அண்ணன் வீட்டுக்குள் சேர்க்க மறுத்துவிட்டார். அந்தப் பையன் வீட்டிலும் சேர்த்துக் கொள்ளவில்லை. என் மாமன் பையன் கணேசன் தான் சற்று தொலைவில் உள்ள பூச்சிக்காட்டில் ஒரு வீடு தந்து அடைக்கலம் தந்து இருக்கிறான். அந்த பெண் கூட மாசமாக இருப்பதாக கணேசன் சொன்னான். நான் பூச்சிக்காடு எல்லாம் போனது இல்லை. இந்த வளைகாப்புக்கு அவனை அழைக்கலாம் என்றால் வேலை காரணமாக டில்லி செல்வதாக போன வாரம் சொல்லி இருந்தான்.

ஆடு கருப்பு நிறம். அதற்கு என்ன நிறம் பொருத்தம் என கடையில் சேலை எடுக்க அமர்ந்தேன். துணியாக எடுத்து தைக்கலாம் என்றாலும் சேலையாக எடுத்தால் நல்லது என எண்ணினேன். நீல நிறத்தில் பச்சை நிறம் கலந்தது. சேலையில் இது முன்புறம் வருவது, ஜாக்கெட் பீஸ் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு காட்டிக் கொண்டு இருந்தாள் அந்தப் பெண்.

''சேலை ஆட்டுக்குத்தான்''

''ஆட்டை கல்யாணம் கட்டியிருக்கிகளா''

என்னவொரு சேட்டை அந்தப் பெண்ணுக்கு என நினைத்தேன். அவளது கழுத்தை கவனித்தேன். தாலி ஒன்றும் தட்டுப்படவில்லை. மெல்லிய செயின் ஒன்று போட்டு இருந்தாள்.

''ம்ம்ம் நான் வளர்க்கிற ஆடு அது. கட்டினா உங்களைத்தான் கட்டிக்கிறலாம்னு இருக்கேன்''

''ஆமா காத்துக்கிட்டு இருக்காக''

சிலர் அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்ததால் அந்தப் பெண்ணிடம் மேற்கொண்டு பேச்சு கொடுக்கக்கூடாது என சேலையை வாங்கிக்கொண்டு கிளம்பினேன். அந்தப் பெண்ணின் முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டது. யார் எவர் என பிறகு விசாரிக்க வேண்டும். பக்கத்தில் கிடாவுக்கு ஒரு வேட்டியும் சட்டையும் வாங்கினேன்.

சேலையுடன் தையல்கார கோமதி அக்கா வீட்டுக்கு வந்தேன்.

''ஒரு சத்தியம் பண்ணுக்கா''

''என்னடா வந்ததும் வராததுமா சத்தியம் பண்ண சொல்ற''

''இப்போ ஒரு சேலை கொடுப்பேன் அதை என்னோட ஆட்டுக்கு தைச்சி கொடுக்கணும்''

''நீ லூசுன்றது சரியாத்தான்டா இருக்கு''

பட்டென என்னை லூசு என அந்த அக்கா சொன்னது எனக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது.

''சரிடா சேலையைக் கொடு''

சேலையை வாங்கிப் பார்த்ததும் அக்காவின் முகத்தில் ஏகப்பட்ட ஆச்சரியம்.

''டேய் இது விலை உசந்த பட்டாச்சேடா, கொடுத்து வைச்ச ஆடுதான்''

''ஆட்டோட அளவுக்கு தைச்சிக் கொடுக்கா, யார்கிட்டயும் சொல்லமாட்டேனு சொல்லுக்கா''

''போடா ஆட்டுக்கு சேலை தைக்கிறேன்னு சொன்னா யார் என்கிட்டே தைக்க கொடுக்கமாட்டாங்க. யார்ட்டயும் சொல்லலை. இன்னைக்குப் போய் ஆட்டுக்கு அளவு எடுத்துக்கிறேன்''

''அப்படியே இதை கொஞ்சம் வெட்டிக்கொடுக்கா''

''என்னடா இது''

''கிடாவுக்கு சட்டை வேட்டி''

''சரிடா''

''அளவு''

''போடா நான் பாத்துக்கிறேன்''

குங்குமம், சந்தனம் இவற்றை ஆட்டுத் தொழுவத்தில் ஒளித்து வைத்தேன்.

வளைகாப்பு பத்திரிக்கை அடிக்க வேண்டும் என வெள்ளையாபுரம் சென்றேன்.

''யாருக்கு வளைகாப்பு''

''ஆட்டுக்கு''

''ஆடுனு மட்டும் போட்டு இருக்கு, ஆட்டுக்குப் பேரு இல்லையா''

''ஆட்டுக்கு பேரு ஆடுதான், இது ஆடு, கிடா படம்''

நான் எழுதிக் கொடுத்த தாளினை தலையில் அடித்துக் கொண்டார்.

''எவ்வளவு காப்பி வேணும்''

''முன்னூறு, இல்லையில்லை முன்னூற்றி மூணு''

''இந்த ஞாயிற்றுக்கிழமைனு போட்டு இருக்கு, இப்ப வந்து தர, இன்னைக்கு செவ்வாய்க்கிழமை''

''சும்மாதானே இருக்கீங்க''

''எகத்தாளம்''

''வெள்ளிக்கிழமை காலையில வரேன்''

''சரி அட்வான்ஸ் கொடுத்துட்டுப் போ''

அங்கேயே ஒரு உணவுக்கடையில் வளைகாப்புக்கு வருபவர்களுக்கு புளிசாதம், தயிர்சாதம், லெமன் சாதம், தேங்காய் சாதம், பருப்பு சாதம் என உணவுக்கு ஆர்டர் கொடுத்தேன்.

தலைவரிடம் சென்று விபரத்தைச் சொன்னேன். கலகலவென சிரித்தார்.

''முட்டாப்பய வேலை எல்லாம் நீ செய்ற, சரி வந்து சனிக்கிழமை சாயந்திரம் பத்திட்டுப் போ''

''ஐயா யார்கிட்டயும் வெள்ளிக்கிழமை வரைக்கும் சொல்ல வேணாம்''

''ரகசிய வளைகாப்பா''

''ஊரறிய வளைகாப்பு தான்''

மீண்டும் சிரித்தார்.

எல்லாவற்றையும் ஏற்பாடு செய்தாகிவிட்டது. சேலையை அட்டகாசமாக கோமதி அக்கா தைத்து இருந்தார். ரவிக்கை கூட தைத்து இருந்தார். வேட்டி சட்டை எல்லாம் எப்படி துல்லியமாக வெட்டினாரோ தெரியவில்லை.

வெள்ளையாபுரம் சென்று வெள்ளிக்கிழமை பத்திரிக்கை வாங்கி வந்தேன். அவருக்கே முதல் பத்திரிகை. வளையல்களை வாங்கிக்கொண்டு ஒரு பத்திரிக்கையை அங்கே தந்தேன். நேராக துணிக்கடைக்கு சென்று அந்தப் பெண்ணைத் தேடிப் போய் பத்திரிகை தந்தேன்.

''நிசமாலுமா''

''ம்ம்''

''வராம இருந்துராதீங்க''

''கட்டாயம் வரேன்''

அவளது பெயர் வனிதா. பூச்சிக்காடுதான் சொந்த ஊரு. பெண்ணின் பெற்றோர்கள் விவசாயம் பார்க்கிறார்கள். கணேசனுக்கு தெரிந்த பெண் தான். மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. வீடு வந்து சேர்ந்தேன்.

''அம்மா இன்னைக்கு எல்லோருக்கும் வளைகாப்பு பத்திரிகை தரனும்''

''உனக்கு அறிவே இல்லையா, என்ன காரியம் பண்ணிட்டு வந்து நிக்கிற, உனக்கு புத்தி கெட்டுப் போச்சுன்னு ஊரெல்லாம் பேசப் போறாங்க''

அம்மா பத்ரகாளியானார். நான் அமைதியாக நின்று கொண்டு இருந்தேன். அப்பா சத்தம் கேட்டு வந்தார்.

''உங்க புள்ள என்ன காரியம் பண்ணி இருக்கு பாருங்க''

எனது கையில் இருந்த பத்திரிக்கையைப் பார்த்தார்.

''நல்ல காரியம் பண்ணி இருக்கான். நம்ம பேரைக் கூட போட்டு இருக்கான்''

''உங்க ரெண்டு பேரை என்ன பண்றது''

''நீங்க வர வேண்டாம், நானே பத்திரிகை போய் வைக்கிறேன்''

''அதுதான் முறை''

''என்னங்க முறை கிறைங்கிறீங்க''

''போகட்டும்''

நானாக மட்டும் சென்று ஒவ்வொரு வீடாக பத்திரிக்கை தந்தேன். என்ன நினைத்தார்களோ வரோம்பா என்றார்கள். சந்திரன் அண்ணன் முகத்தில் மட்டும் பெரும் சோகம் நிறைந்து இருந்தது போல எனக்குத் தென்பட்டது.

சனிக்கிழமை அன்று மாலை வாங்கி வந்தேன். அன்று முழுவதும் மிகவும் படபடப்பாக இருந்தது. தலைவர் வீட்டில் சென்று அன்று மாலையில் கிடாவை அழைத்து வந்தேன். நன்றாக ஆடு மற்றும் கிடாவை குளிப்பாட்டினேன். ஆட்டுத் தொழுவத்தில் தான் அன்று உறங்கினேன்.

மறுநாள் காலை ஆட்டிற்கு ரவிக்கை சேலை அணிவித்தேன். கிடாவுக்கு சட்டை வேட்டி அணிவித்தேன். என் கண்ணே பட்டுவிடும் போல் இருந்தது. ஊரெல்லாம் வளைகாப்பு பற்றிய பேச்சாக இருந்தது. வீட்டுக்கு ஒருவர் என பெண்கள் கிளம்பிவிட்டார்கள்.

முதலில் ஆடு, கிடா சற்று மிரண்டது. பின்னர் சகஜ நிலைக்குத் திரும்பியது. ஆடு என்னைப் பார்த்தபடி இருந்தது. அதன் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பார்த்தேன். கிடா தன்னை வீரன் என எண்ணிக்கொள்ளத் தொடங்கியது.

வனிதா தனது பெற்றோர்களுடன் வந்து இருந்தாள். என் அப்பா அம்மாவிடம் அவர்களை அறிமுகப்படுத்தினேன். அவர்கள் பேசிக்கொள்ள தொடங்கினார்கள். வனிதா என்னுடன் வந்தாள்.

''எவ்வளவு கூட்டம்''

''அன்பை போற்றும் மனிதர்கள் இந்த உலகத்தில் நிறைய இருக்காங்க, எதையும் ஒரு தெய்வ நிலையில் பார்க்கும் மனம் அவங்களுக்கு இருக்குங்க''

அம்மாயிதான் முதலில் ஆட்டுக்கு சந்தனம் குங்குமம் வைத்தார். அதன் பின் அப்பத்தா வந்தார். அவர்கள் எல்லாம் என்னைப் பார்த்து பெருமிதம் கொண்டார்கள். அம்மாவும் வந்தார்கள். இப்போது என்னவோ அவர்களிடம் பெரும் மகிழ்ச்சி இருப்பது போல தோனியது. என்னிடம் நேராக வந்தார். வனிதா பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள்.

''யாரும் உனக்கு பொண்ணு கொடுக்கமாட்டாங்கனு நினைச்சேன், என் தப்புதான்''

அம்மா என்னிடம் அப்படி சொல்லிவிட்டு வனிதாவின் நெற்றியில் குங்குமத்தை வைத்துவிட்டுப் போனார்.

வனிதாவின் முகத்தில் வெட்கம் கண்டேன்.

ஆடு, குங்குமம் சந்தனம் என தன்னை நிரப்பிக் கொண்டு இருந்ததை பார்த்தபோது ஒரு பெண் அமர்ந்து இருப்பது போலவே எனக்குத் தென்பட்டது.

எல்லோரும் என்னை வெகுவாகப் பாராட்டினார்கள். வந்தவர்களில் ஒருவர் வருமானத்துக்கு வைக்கிற விழானு நினைச்சேன் ஆனா யார்கிட்டயும் காசு கொண்டு வரக்கூடாதுனு சொல்லிட்டியேப்பா என ஆயிரம் ரூபாய் எடுத்துத் தந்தார். வேண்டாம் என மறுத்தாலும் அவர் கேட்பதாக இல்லை. சாப்பாட்டின் சுவையை விழாவின் சிறப்பை பெருமை பேசாதவர்கள் ஊரில் இல்லை.

அன்று இரவு களத்துமேட்டில் அமர்ந்து இருந்தேன். சந்திரன் என்னைத் தேடி வந்தார். வந்தவர் என் கைகளைப் பிடித்தபடி கலங்கி நின்றார்.

''என் கண்ணைத் தொறந்திட்ட தம்பி''

காதல் செய்து ஓடிப்போன சந்திரன் அண்ணன் மகளின் திருமண வரவேற்பு மற்றும் வளைகாப்பு என அதே அரங்கத்தில் ஒரு சேர பத்து நாட்கள் கழித்து வெகு விமரிசையாக நடந்தது.

முற்றும்

Monday 15 May 2017

திருநெல்வேலி ட்வீட்டப் கவிதை - TnMegaTweetup2017

டிவிட்டரில் எழுதும் தமிழ் கீச்சர்கள் வருடந்தோறும் ஒருமுறை ஓரிடத்தில் ஒன்று கூடி விழா எடுப்பது வழக்கம். இதற்காக கவிதை எழுதி பேரும் புகழும் பெற வேண்டும் என்பது என்னுடைய பேராசைகளில் ஒன்று. நான் டிவிட்டரில் எழுத ஆரம்பித்த ஆண்டு ஆகஸ்ட் 2013. அதற்கு முன்னரும் விழா நடந்து இருக்கிறது. ட்விட்டரில் சேர்ந்த பிறகு எழுதிய முதல் எழுத்து இது  அதற்குப்பிறகு ஒரு கதை எழுதி அப்படியே நிறுத்தி வைத்து இருக்கிறேன். 
எவ்வளவு விளையாட்டுத்தனம் கொண்டவர்கள் இருக்கிறார்கள் எதற்கு இதையெல்லாம் ஒரு பெரிய விசயமாக கருதக்கூடாது என நினைக்க வைத்த கற்றறிந்த கயவர்கள் பற்றி எழுதியது. 



திருப்பூரில் நடந்தபோது நான் எழுதவில்லை 

இம்முறை இத்திருவிழா திருநெல்வேலியில் நடந்தது. நண்பர் பாண்டித்துரை அவர்களிடம் கவிதையை கொடுத்து அனுப்பினேன். கவிஞர் திரவியம் அவர்கள் கவிதையை சிறப்பாக வாசித்தார்கள். அவர்களுக்கு நன்றி. விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பெருமளவுக்கு ஒருங்கிணைப்பைச் சரியாகச் செய்து இருந்தார்கள் என உறுதியாக சொல்லலாம். வாழ்த்துக்கள். 

ஒரு உறுத்தலான விசயம், அதுதான் குறை சொல்லாமல் இருக்க இயலாதே, இந்த அசைபடத்தில் ஒலிக்கும் சில குரல்களை கேளுங்கள் நான் சொல்வது உங்களுக்குத் தெரிய வரும் அப்படி இல்லாதபட்சத்தில் கண்டு கொள்ளாமல் விட்டுவிடவும்.   

எனக்குள் எப்போதுமே இப்படியொரு எண்ணம் எப்போதும் உண்டு அதாவது ஒன்றை உயர்த்திப் பேச மற்றொன்றை தாழ்த்திப் பேச வேண்டிய அவசியமே இல்லை மேலும் ஒன்றை உயர்த்திப் பேசினால் மற்றொன்று தாழ்ந்தது என்ற பொருளும் இல்லை. அதை இந்தக் கவிதையில் தவறவிட்டது போல இருக்கிறது. ஆனால் இதை கவிதை என்று இலக்கியவாதிகள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள், அதுவரைக்கும் பரவாயில்லை. அடுத்தமுறை இத்திருவிழா பாண்டிச்சேரியில். அதற்கும் இப்போதே வரிகள் யோசிக்கத் தொடங்கி  இருக்கிறேன். 


அசைபடத்தில் கவனித்தால் எனது பெயர், நான் வசிக்கும் இடம் எல்லாம் மிகவும் தவறாகவே சொல்லப்பட்டு இருக்கிறது, இது என்னுடைய தவறுதான். இராதாகிருஷ்ணன், லண்டன் என எழுதித் தந்து இருக்க வேண்டும். இப்படித்தான் எதையுமே முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல், யார் எவர் என ஒரு விபரமும் புரியாமல் அந்த உலகம் இயங்கிக் கொண்டு இருக்கும். எவருடன் பழகுகிறோம், எவருடன் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்பது கூட பல நேரங்களில் தெரியாது. நாம் எழுதுவதை எல்லாம் ஏதோ  இந்த உலகத்தையே மாற்றி அமைத்து விடும் வலிமை கொண்ட சொற்றொடர்களாக எண்ணி வாதிட்டு கொண்டு இருப்பார்கள், எரிச்சல் அடைவார்கள், மகிழ்ச்சி அடைவார்கள். இதன் காரணமாக மன உளைச்சல் அடைபவர்களும் உண்டு. எப்படி இருப்பினும் முகம் காட்டாதவர்கள் மத்தியில் முகம் காட்டும் சிலர் கொண்டாடும் திருவிழா இது. எனது கவிதை எப்போதும் தொடரும். 


நெல்லைக்கு ஒரு வாழ்த்து

நெல்லுக்கும் திரு என மரியாதையிட்டு
அன்பின் வேலியால் கட்டப்பட்டு
நெல்லையப்பர் காந்திமதி சுவாசிக்கும்
ஊரின் பெருமை உரக்கச் சொல்வேன்
இரக்கமனம் கொண்ட மக்கள் உள்ள
தாமிரபரணி ஆறு புகழ் கொண்ட
திருநெல்வேலி மிகச் சிறந்த ஊரு

அன்பைத் தொல்லையாய் எவரும்
இங்கே கண்டதுமில்லை
பண்பைத் தொலைத்து எவரும்
இங்கே வாழ்வதும் இல்லை
தமிழ்ச்சொல்லை சொல்லும் விதத்தில்
இத்தரணியில் எவருமே இவர்களுக்கு
ஓர் நிகருமில்லை

நெல்லையின் பெருமையைச் சொல்லவே
எல்லையில்லா புகழ்கொண்ட தமிழ்
நாடினேன்
இல்லையென சொல்லாது நல்விசயங்கள்
செய்யும் இதயம் கனிந்த மக்களை
தன்னுள்ளே கொண்ட நெல்லையில்
குடிபுகுந்தேன்

நெல்வளம் கொண்ட நகரம்
சொல்வளம் கொண்ட நகரம்
தேவாரப் புகழ் பெற்ற திருத்தலம்
எம்சிவன் நடனமிட்ட தாமிர திருச்சபை
இனிப்பின் சுவை அல்வா
நெற்கதிர் அறுக்கும் அரிவாள் – நெல்லை
புகழ் பாடுவேன்

தமிழின் வீரம் சொன்ன நெல்லை
பாளையக்காரர்கள் வலம் வந்த எல்லை
தாமிரம் நல்ல மின்கடத்தி
நாமும் இங்கே கூடினோம் தமிழ் கடத்தி
நமது புலமையைச் சொல்ல
நெல்லைபோல ஒரு இடமும்
இல்லை

எழுத்தால் அறிமுகம் ஆனோம்
கருத்தால் மனதில் கூடினோம்
நம் நட்பை உலகறியச் செய்து
இதை எந்த நாளும்
நல்வழியில் தொடர்வோம்
வளர்வோம் வாழ்வோம்
வாழ்க தமிழ்




Wednesday 12 April 2017

பிரபஞ்சத்தின் நுனி

ஒரு குண்டூசியின் நுனி இருமுனைகளில் இருக்கும். குண்டூசியின் நடுவில் அமர்ந்து கொண்டு இருபக்கமும் பார்த்தால் ஒரு பக்க நுனியானது கூர்மையாகவும் மற்றொரு நுனி குண்டாகவும் இருக்கும்.  இப்போது நம்மால் அந்த குண்டூசியின் இருபக்க நுனியைத் தாண்டி எதுவுமே பார்க்க இயலவில்லை என வைத்துக் கொள்வோம் அதற்காக எதுவுமே இல்லை என முடிவு செய்ய முடியாது. இப்போது எல்லா குண்டூசிகளையும் வட்டமாக சுற்றி வைத்து நடுவில் அமர்ந்து கொள்வோம். எங்கு சுற்றினாலும் ஒரே நுனி மட்டுமே தெரியும். நாம் அமர்ந்து இருப்பது ஒரு பக்க நுனி என்றாலும் குண்டூசியின் தொடக்கம் மத்தியப் பகுதி ஆகிறது. குண்டூசிகளைத் தாண்டி நம்மால் எதுவும் பார்க்க இயலாத போது குண்டூசியின் நுனியை எல்லை எனக் கொள்கிறோம். இப்போது அந்த குண்டூசியின் நுனி நீள்கிறது என கொள்வோம். இவ்வாறாக ஒவ்வொரு குண்டூசியை சென்று அமர்ந்தாலும் மத்திய பகுதியாகவே தோன்றும். இதை அப்படியே பிரபஞ்சத்திற்கு கொண்டு போவோம்.

இந்த பிரபஞ்சத்தில் நாம் தான் மத்திய பகுதியில் இருப்பது போலவும் நாம் பார்க்கும் எல்லா திசைகளிலும் நுனிப்பகுதி ஒரே மாதிரியாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நுனிப்பகுதியைத் தாண்டி என்ன இருக்கிறது என்பது நமது பார்வைக்குட்பட்ட பிரபஞ்சத்தினைத் தாண்டி நம்மால் காண இயல்வது இல்லை என்பதால் கற்பனையில் பயணிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

இந்த பிரபஞ்சம் தொடங்கிய தினம் முதல் வெகுவேகமாக விரிவடைந்து போய்க் கொண்டிருக்கும் பிரபஞ்சத்தில் நடக்கும் நிகழ்வுகள் பல நட்சத்திரங்களை உருவாக்குகிறது. நட்சத்திரங்கள் அல்லாத கிரகங்களும் உண்டாகின்றன. பால்வெளி வீதி போல பல வீதிகள், கருந்துளைகள் என நிறைந்து காணப்படுகின்றன. தாயைத் தேடி ஓடும் கன்றுக்குட்டியைப் போல எதையேனும் தேடித்தான் இந்த பிரபஞ்சத்தின் கேலக்சிகள் ஓடிக்கொண்டு இருக்கின்றனவா என்றால் உண்மையில் என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை. இதில் என்னவெனில் இப்போது நாம் வேறு கேலக்சியில் சென்று அமர்ந்தாலும் அந்த கேலக்சியே மத்தியப்பகுதி என தெரியும். மற்ற கேலக்சிகள் நம்மைவிட்டு ஓடுவது போல் இருக்கும். இப்போது இந்த பிரபஞ்சத்தின் நுனி என சொன்னோமோ அங்கே சென்று அந்த கேலக்சியில் அமர்ந்து கொண்டால் இப்போது கூட அந்த மத்தியப்பகுதி போலவும் மற்ற கேலக்சிகள் விலகிச் செல்வது போலவும் தோன்றும். அப்படியெனில் பிரபஞ்சத்தின் நுனி தான் எது. குண்டூசியின் மறுமுனைக்குச் சென்றால் அங்கிருந்து அது மத்திய பகுதி ஆகும். ஆக குண்டூசியின் நுனி தான் எது.

அதாவது ஒவ்வொரு கேலக்சியில் இருந்தும் மற்ற கேலக்சிகள் விரிவடைந்து செல்கின்றன. இப்போது குண்டூசி எடுத்துக்காட்டு பெரும் குழப்பமாகத் தெரியும். ஆனால் அது அப்படித்தான். ஒவ்வொரு குண்டூசியும் ஒரு கேலக்சி அதற்கு வெளிப்புறமோ உட்புறமோ என இல்லை. எனக்கு வலம் எனில் என் எதிர் நிற்பவருக்கு இடம். அப்படியெனில் பிரபஞ்சத்திற்கு நுனி என்பதே இல்லையா? முடிவே இல்லாத முடிவிலியா என்றெல்லாம் யோசித்தாலும் பிரபஞ்சம் நுனி கொண்டு இருக்கிறது என்றே சொல்கிறார்கள்.

இதைவிட நமது பிரபஞ்சம் போலவே இன்னொரு பிரபஞ்சம் இருக்க வாய்ப்பு உண்டு என்றும் சொல்கிறார்கள். அதில் நம்மைப் போலவே செயல்பட்டு கொண்டு இருக்கும் நபர்கள் உண்டு என கற்பனை பண்ணுகிறார்கள்.

ஏழு பிரபஞ்சங்களில் ஏழு பூமிகள், ஏழு இராதாகிருஷ்ணன்கள் , இப்படி எழுதுவதை போல எழுதிக் கொண்டு இருக்கக்கூடும். இதை இருள் பாய்ச்சல் டார்க் ப்ளோ நிரூபிப்பதாக  சொல்கிறார்கள். அதாவது நமது பிரபஞ்சத்தின் மீது உண்டாகும் ஒரு வெளி ஈர்ப்பு விசை மற்றொரு பிரபஞ்சம் மூலம் உண்டாகி இருக்கலாம் எனும் கருத்து நிலவுகிறது.

எவரேனும் அறிவியல் அறிந்தவர்கள் விளங்க வைக்கட்டும். 

Monday 3 April 2017

பத்து ரூபாய்

விருதுநகர் பேருந்து நிலையத்தில் ஊருக்குச் செல்வதற்காக ஆறு மணி பேருந்துக்கு காத்திருந்தேன். எங்கள் ஊருக்குச் செல்லும் நபர்கள் ஆங்காங்கே தென்பட்டார்கள். எப்படியும் கூட்டம் கூடிவிடும். இந்த ஆறு மணி பேருந்தை விட்டுவிட்டால் வரலொட்டியோ மில்லோ சென்று அங்கிருந்து நான்கு மைல்கள் நடந்து போக வேண்டும்.

ஏபிஆர் அவர்களை இன்றுதான் கணக்கு பார்ப்பது சம்பந்தமான வேலை குறித்து சந்தித்துவிட்டு வந்தேன். நாளை வரச் சொன்னார். எங்கள் ஊர் ஆடிட்டர் மாமாதான் இந்த வேலையை எனக்கு ஏற்பாடு செய்து இருந்தார். ஏபிஆர் வியாபார மண்டி என்றால் விருதுநகரைச் சுற்றி இருக்கும் கிராமத்தில் இருப்பவர்களுக்குத் தெரியும்.

பேருந்துகள் வருவதும் மக்கள் ஏறிக்கொள்வதும் போவதுமாக இருந்தன. சில பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வராமல் வெளியே நின்று போவதாகவும் இருந்தன. இந்த விருதுநகர் என்றால் வியாபாரம், வெயில், ஐந்தாம் திருவிழா, காமராசர் என்றே ஊர் பெருமை பேசும்.

மல்லாங்கிணர் எம் எஸ் பியில் தான் படித்துவிட்டு அருப்புக்கோட்டை எஸ் பி கே கல்லூரியில் அக்கவுன்டசி படித்துவிட்டு உடனே வேலை கிடைக்கும் என்று யாரும் எதிர்ப்பார்க்க முடியாது. ஒரு வருடம் சில இடங்கள் ஏறி இறங்கி ஆடிட்டர் மாமாவிடம் சம்பளமின்றி உதவியாளனாக இருந்தேன். வாய்ப்பு வரப்ப சொல்றேன்பா என்றே சொல்லி சொல்லி மாதங்கள் ஓடிப்போயிருந்தன.

இந்த பேருந்து நிலையத்தைச் சுற்றி இரண்டு தியேட்டர்கள், புரோட்டா கடைகள் மருத்துவமனைகள், மர வியாபாரம் என பல இருக்கிறது. ஏபிஆர் கடையில் இருந்து மர வியாபார கடையைத் தாண்டித்தான் இந்த பேருந்து நிலையத்திற்கு வர முடியும். அப்படி இல்லாது போனால் ரத்னா போட்டோ ஸ்டூடியோ வழியாகவும் வரலாம். எல்லா பேருந்துகளும் நிரம்பி வழியும்.

பேருந்து வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது. மனிதர்களை சுற்றிப் பார்த்தவண்ணம் நின்று கொண்டிருந்தேன். என்னை நோக்கி வருவது போல வந்து விலகிச் சென்ற மனிதர்களும் இருந்தார்கள்.

மழை பெய்ய வேண்டும் என வேண்டாத நாளில்லை. பேருந்து நிலையம் எனில் பேருந்துகளின் இரைச்சல் சத்தம் அதுவும் ஒலி  அழைப்பான் சத்தம் எல்லாம் காது கிழியும். அதையும் தாண்டி மனிதர்கள் பேசிக்கொண்டு இருப்பார்கள். பேருந்து நிலையத்தில் கழிவறையும் உண்டு. இதுவரை பல முறை பேருந்து நிலையம் வந்து இருந்தாலும் ஒருநாள் கூட அந்த கழிவறைக்குள் சென்றது இல்லை.

''அப்படி ஓரமா நிக்கிறது'' அடையாளமே தெரியாத ஒருவர் என்னை நோக்கித்தான் சத்தம் போட்டாரா என்று கூட தெரியவில்லை.

''எனக்கு ஒரு உதவி வேனும்''

எனது உயரத்திற்கு என்னைப்போலவே ஒல்லியாக மாநிறத்தில் ஒரு பெண் வந்து என்னிடம் தான் கேட்டாள் . அவளது தோழிகள் எவரேனும் விளையாடுகிறார்களா என சுற்றி பார்த்தேன். எங்கேனும் கேமராக்கள் இருக்கின்றவா என்ற தேடலும் அப்போது இருந்தது.

''பணத்தைத் தொலைச்சிட்டேன் ஒரு பத்து ரூபா தாங்க''

இதே பேருந்து நிலையத்தில் சில தடவை ஊருக்குப் போக காசில்லை என சிலர் ஏமாற்றித் திரிபவர்களை கண்டு இருக்கிறேன். ஆனால் இந்தப் பெண் பார்த்தால் அப்படி தெரியவில்லை. பாம்பு வடிவ போட்டு ஒன்று வைத்து இருந்தாள். இந்த ஸ்டிக்கர் பொட்டு  எல்லாம் எந்த மடையன் கண்டுபிடித்தானோ என்றே நினைத்தேன்.

''இருந்தா கொடுங்க''

பையில் ஐம்பது ரூபாய் இருந்தது. அப்படியே எடுத்து அவளிடம் தந்தேன். பணத்தை வாங்கியவள் ஒரு நிமிஷம்  என ஒரு கடையை நோக்கிப் போனாள். அவள் நீல நிறத்தில் சேலை அணிந்து இருந்தாள் . நான் நீல நிறத்தில் சட்டை அணிந்து இருந்தேன். அப்போதுதான் நீல நிற சேலைகளும் சட்டைகளும் அங்கே நிறைய தென்பட்டன.

பணத்தைத் தந்துவிட்டு அப்படியே நின்று கொண்டிருந்தேன். என்ன நிகழ்வு நடந்து கொண்டு இருக்கிறது என என்னால் கொஞ்சம் கூட யூகிக்க இயலவில்லை. நாற்பது ரூபாய் திருப்பித் தந்தாள்.

''உங்க மொபைல் நம்பர் தாங்க''

கொஞ்சம் கூட யோசிக்காமல் மொபைல் நபரைத் தந்தேன். குறித்து கொண்டவள் நன்றி என்று சொன்னபோது அவளது கண்களில் நிம்மதி இருந்தது.

திருமங்கலம் செல்லும் பேருந்தில் சென்று ஏறிக்கொண்டாள். அவள் என்னைப்  பார்ப்பது போலவே இருந்தது. சிறிது நேரத்தில் எனது மொபைல் போனில் பண உதவிக்கு நன்றி - சபிதா என்று வந்தது.

இவ்வுலகில் ஏமாற்றுக்காரர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்பது பொய். இப்படித்தான் மதுரை பேருந்து நிலையத்தில் சென்ற வருடம் ஒருமுறை என்னிடம் ஒரு நடுத்தர வயதுமிக்கவர் தம்பி உன் அப்பா எனக்குத் தெரியும் எனக்கு ஒரு ஐம்பது ரூபாய் தா உங்க அப்பாகிட்ட கொடுத்துருறேன் என்றதும் யோசித்துக் கொண்டு இருக்கும்போதே பணம் இல்லையினா மூட்டையை வண்டியில் ஏத்தமாட்டாங்க அவ்வளவு பணம் இல்லை கொடு தம்பி என்றதும் மரமண்டைத்தனமாக பணத்தை எடுத்துக் கொடுத்தேன். பெயர் கூட வாங்கி கொள்ளவில்லை. அந்த நிகழ்வை அப்பாவிடம் சொன்னபோது கடுமையாகத் திட்டினார். இரக்கம் இருக்கலாம் ஏமாற மட்டும் கூடாது என அறிவுரை சொன்னார்.

இன்று ஐம்பது ரூபாயை எடுத்துத் தந்தேன். அவள் அப்படியே ஓடிப்போய் இருந்தால் என்ன ஆவது. இந்த நிகழ்வுகள் நடந்து முடிந்த சமயம் நான் ஊர் செல்லும் பேருந்து எனது ஊருக்கு பேருந்து நிலைய வாயிலை விட்டு கிளம்பிப் போய்க்கொண்டு இருந்தது.

இனி ஓடிப்போய் பிடிக்கவும் முடியாது. ஊருக்கு நடந்துதான் போக வேண்டும். பேராலி ட்ரிப் இன்னைக்கு கட்டாம் அதான் வக்காலி வேமா வந்துட்டுப் போயிட்டான் என ஒருவர் அவரது ஆதங்கத்தை தீர்த்துக் கொண்டு இருந்தார். காரியாபட்டி செல்லும்  பேருந்து வந்து நின்றது.

ஓட்டுநரிடம் சென்று வேகமாக செல்ல முடியுமா என கேட்க வேண்டும் போலிருந்தது. சில வேளைகளில் இந்த அரசு பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் ஒன்றுக்கொன்று முந்திக்கொண்டு போகும். எப்படியும் கலெக்சன் பார்க்க வேண்டும் என அவர்களுக்குள் இருக்கும் போட்டியினால் சாலை சீர் கெட்டதுதான் மிச்சம்.

மில்லில் இறங்கி நீர் அற்ற ஓடையை கடந்து வீட்டுக்குப் போனேன். அதற்குள் அவளிடம் இருந்து இன்னொருசெய்தி வந்தது.

'நாளை விருதுநகர் பேருந்து நிலையத்திற்கு மாலை ஐந்து மணிக்கு வந்தால் பணத்தைத் திருப்பித் தருகிறேன் - சபிதா ' என்று இருந்தது.

'சரி- சபேசன்' என பதில் அனுப்பினேன்.

அவளது முகமும் பாம்பு பொட்டோடு நினைவுக்கு வந்தது. எங்கள் ஊரில் சிலரது முகமும் பாம்பு பொட்டோடு வந்து போனது. வெள்ளையம்மாள் அக்கா எப்போதும் பாம்பு பொட்டு வைத்திருக்கும். தன்  புருசனோடு  சண்டை போடாதே நாளே இல்லை. ஒருநாள் நான் கூட எதுக்குக்கா இப்படி எப்பப் பார்த்தாலும் மாமா கூட சண்டை போடுற என சொல்லி இருக்கிறேன். அப்போது அதற்கு அந்த கடன்கார மனுசனை பத்தி என்கிட்ட பேசாதே என சீறியதில்  இருந்து நான் கேட்டதே இல்லை.

இந்த குட்டிப்பெண் சுகி கூட பாம்பு பொட்டு  வைத்து இருப்பாள். ஒருமுறை சோழிங்கன் மாமா தொலைக்காத பணத்தை தொலைத்துவிட்டதாக அழுது புலம்பியபோது வீட்டுக்குள் தவறுதலாக வைத்துவிட்டுப் போயிருந்த ஐம்பதாயிரம் பணத்தை எடுத்து தந்தாள் சுகி. தொலைப்பது வேறு. ஏமாறுவது வேறு.

எதற்கு இந்த பாம்பு பொட்டு  எல்லாம் வைக்கிறார்கள். பாம்பு எல்லாம் விசுவாசம் கொண்டது இல்லை. இந்த உலகில் எந்த ஒரு உயிரினங்களும் விசுவாசம் கொண்டது இல்லை. எலும்புத் துண்டுக்காக வாலை  ஆட்டும் நாயைத்தான் நன்றியுள்ளது என சொல்லி வருகிறோம்.

''போன காரியம் என்னாச்சுப்பா?''

''நாளைக்கு வர சொல்லி இருக்காருமா''

''இன்னைக்குப் போக வேணாம்னு சொன்னேன் கேட்டியா''

அம்மா சொல்லியும் கேட்காமல் நான் சென்றது சபிதாவை சந்திக்கத்தானா என்பது போலிருந்தது.

''கிடைக்கிற வேலையில் சேர்ந்துரு பிறகு பாத்துக்கலாம், நீயும் எத்தனை நாளு இப்படியே இருப்ப''

''சரிம்மா''

அப்போதுதான் அப்பாவும் வந்து இருந்தார்.

''நான் கல்குறிச்சி அழகர்கிட்ட  சொல்லி இருக்கேன். இங்கே கிடைச்சா பாரு இல்லைன்னா அங்க போ''

அப்பாவும் எனக்காக வேலை தேடிக்கொண்டு இருந்து இருக்கிறார் என சிலர் சொன்னபோது தெரிந்தது. உங்கப்பாரு சொன்னாரு என்றே சொல்லி இருக்கிறார்கள், ஆனால் வேலைதான் தந்தபாடில்லை.


என் அம்மாவும் என் அக்காவும் பாம்பு பொட்டு வைத்துக் கொண்டதே இல்லை. என் அக்கா திருமணம் ஆகிப் போனதுடன் சரி. மீண்டும் பாப்பா பிறந்தபின் ஒருமுறை வந்து பார்த்துவிட்டுச் சென்றாள். இந்த மண்ணில் விளையாடிய காலங்களை எல்லாம் மறந்து போய்விட்டாள் என்றுதான் நினைத்தேன்/

ஒருமுறை அக்காவைப் பார்க்கச் சென்றபோது எங்களை எல்லாம் மறந்துட்டியாக்கா என்றே கேட்டு வைத்தேன். நோய்வாய்ப்பட்ட மாமியாரைப் பார்க்க வேண்டும் அதனால் அவரை விட்டு எங்கும் என்னால் வர முடியாது என வளைகாப்பு கூட அங்கேயே வைத்துக் கொண்டாள். அவளது நியாயம் சரியாகத்தான் இருந்தது.

விசுவாசம், தேவைகள் இருப்பின் விசுவாசம். மச்சான் உன் அக்காவை கட்டியது என்னோட அதிர்ஷ்டம் என்பார் மாமா. இதே அக்கா தனிக்குடித்தனம் போக வேண்டும் என அடம்பிடிக்கும் அக்காவாக இருந்தால் என்ன செய்து இருப்பார் என்றே யோசித்தேன். ஆள் வைச்சிக்கிற வேண்டிதானேக்கா என்று சொல்ல நினைத்து சொற்களை விழுங்கி இருக்கிறேன்.

இரவு எல்லாம் சபிதா குறித்தே நினைத்து இருந்தேன். அவள் எதற்கு என்னிடம் வந்து கேட்க வேண்டும். இந்த உலகில் சில விசயங்கள் எதற்காக நடந்து கொண்டு இருக்கிறது என்பதை கொஞ்சமும் புரிந்து கொள்ள முடியாது போலிருந்தது.

காலையில் எழுந்து மில் வரை நடந்து வந்து பின்னர் விருதுநகர் வந்து ஏபிஆர் அவர்களை சந்தித்தேன். வேலையில் அன்றே சேர்ந்தேன். மனது கொண்ட சந்தோசத்திற்கு அளவே இல்லை. அப்போதும் சபிதா பற்றியே எண்ணம் இருந்தது. அவளிடம் இருந்து எந்த செய்தியும் வந்து இருக்கவில்லை. இன்று வருவாயா என கேட்க நினைத்து வேண்டாம் என விட்டுவிட்டேன்.

வேலை அத்தனை கடினமான ஒன்றாக இல்லை. அப்போது வந்த ஒருவர் பையன் புதுசா மளமளன்னு வேலையை செய்றாப்ல என சொன்னபோது இன்னும் சந்தோசமாக இருந்தது. மதிய  வேளை  உணவு கருவாடும் தயிர் சாதமும் கொண்டு வந்து இருந்தேன். அங்கேயே சாப்பிட்டேன். எப்போதும் காத்தாடி சுற்றிக்கொண்டே இருந்தது.

அந்த கடைக்கு முன்னால் ஒரு அரச மரம் இருக்கிறது. பிள்ளையார் இல்லாத அரச மரத்தை பார்த்து ஆச்சர்யமாக இருந்தது. எங்கள் ஊரில் கூட ஒரு அரச மரம் இருக்கிறது. ஆனால் பிள்ளையார் உண்டு.

''இந்தாணே டீ'' சரியாக மூனு  மணிக்கெல்லாம் டீ  மேசைக்கு வந்து சேர்ந்தது. டீ  வைத்த பையனை  ராமர் டீ ஸ்டாலில் வைத்துப் பார்த்து இருக்கிறேன்.

''எப்படிடா இருக்கே''

''புதுசா வேலைக்கு சேர்ந்து இருக்கியாணே''

''ம்ம் எப்படிடா இருக்கே''

''நல்லா இருக்கேணே''

அங்கே சென்று டீ குடிக்கும்போதெல்லாம் இவன் தான் கொண்டு வந்து தருவான். அவனது சிரித்த முகமும் நன்றாக துவைத்து அயர்ன் போட்ட சட்டை டவுசரும் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. ஒருவரை அறிவாக பார்க்கிறோமோ இல்லையோ அழகாக பார்க்க விருப்பம் கொள்கிறோம்.

அங்கே வருபவர்கள் அவனை பெரிய கலெக்டர் உத்தியோகம் பாக்குற டிப்டாப்பா இருக்கே என கேலி பண்ணுவார்கள். இவனும் பதிலுக்கு விளக்கமாத்துக்கு பட்டுக்குஞ்சம் ஒன்னும் தப்பில்லை சார் என்பான். அவனை அந்த கடையில் பார்க்கும்போது எப்படிடா இருக்கே என்பதுதான் அவனிடம் நான் கேட்கும் கேள்வி. அவன் என்னணே இன்னும் வேலை கிடைக்கலையா என்பான்.

எண்ணெய், சூடு என இருந்தாலும் அவனது வேகம் கண்ணைப் பறிக்கும். எட்டு வரைப் படித்து இருக்கிறான். அவனிடம் படிக்கிறயா என்று கேட்டபோது படிக்க  வசதி இல்லைணே எனும் சொற்களில் என்னை நினைத்துக் கொள்வேன். என் அப்பா அம்மா தோட்ட வேலை காட்டு வேலை என கடினமாக உழைத்து சேர்த்த பணம்இல்லையெனில் நானும் படித்து இருக்க முடியாது.  கொஞ்சம் பணம் இருந்தா தாணே நானே ஒரு கடை போட்டு காட்டுறேன் என்று ஒருமுறை சொன்னான். அப்போதுதான் நான் வேலை தேடும் விசயத்தை  அவனிடம் சொல்லி வைத்தேன்.

இன்னும்  கொஞ்சம் நேரத்தில் பஜ்ஜி, போண்டா என ராமர் டீ ஸ்டால் களைகட்டிவிடும். 

கடை நாலு மணிக்கு எல்லாம் மூடிவிட்டோம். ஏழு மணிக்கு ஆரம்பித்து நாலு மணிக்கு முடியும் வேலை. சரியாக நாலு மணிக்கு வந்து டீ  கிளாஸ் எடுத்துட்டுப் போனான்.

''உனக்கு வேலை கிடைச்சது எனக்கு சந்தோசமா இருக்குணே''

அவனது கண்களில் நிறைய சந்தோசம் இருந்தது. அவனிடம் நான் சம்பாதிச்சு பணம் தரேன் கடை போடுடா என சொல்ல வேண்டும் போலிருந்தது.

''இனி தினமும் உன்னைப் பார்ப்பேன்டா''

''ஆமாணே''

அவனுக்குள் எத்தனை உற்சாகத்தை என்னால் தந்து இருக்க முடிந்து இருக்கிறது. என்னிடம் என்ன தேவையை அவன் எதிர்பார்க்கிறான். நான் சந்தோசமாக இருப்பதைத் தவிர அவனுக்கு வேறு என்ன தேவை என்னிடம் இருக்க இயலும். நான் சம்பாதித்து அவனுக்கு கடை போடும் அளவுக்கு எல்லாம் உதவி செய்ய முடியாது என்பதை ஒன்றும் அவன் அறியாதவன் இல்லை.

அவனுடனே நடந்து போனேன்.

''இருணே, பஜ்ஜி கட்டித் தரேன். அம்மாவுக்கு கொடுணே''

என்னவேண்டுமெனிலும் சொல்லிக்கொள்ளுங்கள் இந்த உலகில் அன்பு போன்ற ஒரு உன்னதமான விசயம் எதுவும் இல்லை.

ஒரு பையில் போட்டு வந்து தந்தான்.

''எவ்வளவுடா?''

''என் கிப்ட்ணே, கொண்டு போணே''

பத்து ரூபாயை வலுக்கட்டாயமாக அவனது கையில் திணித்துவிட்டு நடந்தேன். அவனுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என மனம் நினைத்துக் கொண்டே இருந்தது. யார், எங்கு இருக்கிறான் என்ற எந்த விபரமும் அறியாத ஒருவனிடம் நான் கொண்டு இருக்கும் இந்த அன்பு எனக்கு விளங்கிட முடியாமலே இருந்தது. ஒரு பள்ளிக்குச் செல்லும் பையன் போலவே அந்த கடையில் அவன் எனக்குத் தென்படுவான். பெருமாள் என்றே பெயரை ஒருமுறை சொல்லி இருக்கிறான்.

பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன். சபிதா சரியாக ஐந்து மணிக்கு வந்தாள்.

''இந்தாங்க பத்து ரூபாய்''

வாங்கிக்கொள்ள மனம் மறுத்தது.

''என்னை ஏமாத்துக்காரினு  நினைச்சீங்களா, கடன்காரியாக்க வேணாம்''

வாங்கி சட்டைப்பையில் வைத்துக் கொண்டேன். வெவ்வேறு நிற உடையே அணிந்து இருந்தோம். இன்று அழகாக பொட்டு  வைத்து இருந்தாள். ஸ்டிக்கர் பொட்டு  இல்லை. வரிசையாக அமைந்த வெள்ளைநிறப் பற்கள். ஒரு அழகுப் பொம்மை போலவே தென்பட்டாள்.

''எங்கே வேலை பாக்கிறீங்க?''

நான் இந்த கேள்வியை அவளிடம் எதற்கு கேட்டோம் என்றே இருந்தது. அதற்குள் அவள் லைஸாண்டர் ஹாஸ்பிடல் ரிசெப்ஷனிஸ்ட் என்றாள். சரளமான பேச்சு தெளிவான குரல். நான் இன்னைக்குத்தான் அக்கவுண்ட் செக்சன்ல ஏபிஆர் கடையில் சேர்ந்து இருக்கிறேன் என்றேன்.

''என்கிட்ட எதுக்கு பணம் கேட்டீங்க?''

நானா இந்த கேள்வியை கேட்கிறேன்.

''உங்களை பார்த்தப்போ பணம் கிடைக்கும்னு தோனிச்சி''

''பாம்பு பொட்டு  எதற்கு வைச்சி இருந்தீங்க''

''பிடிச்சி இருந்துச்சி வைச்சி இருந்தேன்''

அவளுடன் நிற்பது பெருமிதமாக இருந்தது. அவளது ஊர் திருமங்கலம் கள்ளிக்குடி என்று சொன்னாள். அதற்குள் மதுரை செல்லும் பேருந்து சில கடந்து போயிருந்தது. எனது ஊர் கீழப்பட்டி என சொல்லி வைத்தேன்.

தினமும் அவளை சந்திக்க வேண்டும் போலிருந்தது.

சபிதா, பெருமாள், சபேசன் என்கிற நிழல் மனிதர்களோடு உண்மை போல எண்ணி அவர்களுடனே தொடர்ந்து வாழ்வதற்கு எவனோ ஒருவன் இந்த உலகில் பிறந்து இருக்கக்கூடும்.

(முற்றும்)






Tuesday 14 February 2017

ஆட்டிற்கும் அன்பிற்கும் நன்றி - முன்னுரை

முன்னுரை 

அசைவம் சாப்பிடுபவர்கள் அன்பு செய்ய தகுதி அற்றவர்கள். 

இதை எழுதியதுதான் எழுதினேன். இது தவறான கருத்து என பல நண்பர்கள், தோழிகள் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். தவறான கருத்தாகவே இருந்துவிட்டுப் போகட்டும் என நான் பேசாமல் இருந்து இருக்கலாம், அன்பு என்ற சொல் இல்லையென்றாலும் அருள் அதாவது கருணை என்ற சொல் வடிவம் கொண்டு இருப்பதால் இது வள்ளுவர் சொன்னது என ஒரு குறளை மனதில் நினைத்துக் குறிப்பிட்டுவிட்டேன்.

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் 
எங்ஙனம் ஆளும் அருள் 

வள்ளுவர் சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாதென்று சொல்லிவிட்டார்கள். அவரவருக்கு எது சௌகரியமோ அதைத்தான் சரியென்று சொல்வார்கள்.

அதைவிட ஒருபடி மேலே போய் இதை தஞ்சாவூர் கல்வெட்டில் எழுதி அதன் அருகில் சென்று அமர்ந்துகொள்ள வேண்டும்  என ஒருவர் சொல்லிவிட்டார். மேலும் ஒருவர் என்னவொரு புத்திகெட்ட வாக்கியம் இது என கேட்டுவிட்டார்.

பல்வேறு கருத்துக்களைக்  கொண்ட மனிதர்கள் எனக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் சிலர் மென்மையானவர்களாகவும், பலர் வன்மையானவர்களும் என இருக்கிறார்கள். என்னால் இந்த வன்மையானவர்களின் சொற்கள் தரத்தை எல்லாம் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடிவது இல்லை.

தனது சிந்தனைக்கு, தனது கருத்துக்கு மாற்று கருத்து சொல்லிவிடக்கூடாது என மிகவும் கடினமான சொற்களை கையாள்கிறார்கள். அவர்களின் தரத்துக்கு நாம் செல்வது என்பது அவசியம் இல்லை. இல்லையனில் அன்பை வலியுறுத்தும் தகுதி நமக்கில்லை என்றாகிறது.

ஆனால் இந்த அசைவம் சாப்பிடுபவர்கள் குறித்து ஏதேனும் கருத்தைச் சொன்னால் உடனே மூளை பலருக்கும் அதீதமாக வேலை செய்து விடுகிறது. இதற்குப் பின்னணி என்னவென்று யோசித்துப் பார்த்தால் சாதீய கருத்து ஒன்று இருக்கிறது என்பது எனது மனதுக்கு தெரியாமல் போய்விட்டது. அன்பு செய், அசைவம் உண்ணாதே என்றால் பார்ப்பனீயத்திற்கு குடை பிடிப்பதாக கருதிக்கொள்ளும் மடத்தனம் எல்லாம் எனக்குப் புரிவதற்கு சில நாட்கள் ஆனது.

அதிலொருவர் சைவம் சாப்பிட்ட ஹிட்லர் ஒரு கொடுங்கோலன், எனவே இந்த வாக்கியம் தவறானது என்கிறார். ஹிட்லரின் ஆணைக்கு கீழ் படிந்த பலரும் மூளை கெட்டுப் போன அசைவக்காரர்கள் என்றெல்லாம் மறுத்துப் பேச எனக்கு விருப்பம் இல்லை. ஹிட்லர் ஆரம்பத்தில் அசைவம் சாப்பிட்டவர் என்பது வேறு வரலாறு.

மனிதர்களை பலியிடுவது எத்தனை கொடுங்குற்றமோ அதைப்போல விலங்குகளை பலியிடுவது கொடுங்குற்றமே 

இப்படியெல்லாம் நான் சொல்வதினால் என்னை விலங்கினப் பிரியன் என்றோ, அசைவம் வெறுக்கும் சைவப் பிரியன், அன்பை வலியுறுத்தும் சமணப் பிரியன் என்றோ நீங்களே கங்கணம் கட்டிக்கொள்ள வேண்டாம்.

அன்பு காட்டுபவர்களை வெறுக்கச் செய்வதே பலரது பணி

இந்த அன்பையும், அன்பின் வழி சொன்ன ஆடும் என்னோடு சேர்ந்து உங்களுடன் பேசிக் கொண்டு இருக்கும்.