Saturday 7 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும்

தலைப்பு தந்த அருணா எனும் இராதை அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. 

1. அருந்தவப்புதல்வி 

சின்னஞ்சிறு கிராமம். பெருமாள்பட்டி. வயல்வெளிகளும், மரங்களும், செடிகளும், கொடிகளும், ஆடுகளும், நாய்களும், பூச்சிகளும், பறவைகளும், கோழிகளும், மாடுகளும் அதோடு மனிதர்களும் செழிப்புடன் இருந்தார்கள். 

கிராமத்தில் மொத்தம் நாற்பது வீடுகள் மட்டுமே. வீட்டுக்கு ஐந்து நபர்கள் என கணக்கில் கொண்டால் கூட மொத்தம் இருநூறு நபர்களே தேர்வார்கள். அதில் பலர் வெளியூருக்கு வேலைக்குச் சென்று அங்கேயே தங்கியும் போனார்கள். கிராமத்து திருவிழா என தலைகாட்டிப் போவார்கள். கிராமத்திற்கு என்று பள்ளிக்கூடம் எல்லாம் கட்டப்பட்டு இருக்கவில்லை. பெருமாள்பட்டியில் இருந்து ஆறு கிலோமீட்டர்கள்  தொலைவில் உள்ள பாப்பநாயக்கன்பட்டிக்குத்தான் படிக்க எல்லாம் போக வேண்டும். செம்மண் சாலை மட்டுமே. கிராமத்திற்கு என ஒரே ஒரு கோவில், ஊருக்குப் பெயர் வாங்கித்தந்த பெருமாள் கோவில். அதே ஊரைச் சேர்ந்த பரந்தாமன்தான் அக்கோவிலின் அர்ச்சகர். கோவில் சுற்றி இருந்த நிலங்கள் எல்லாம் ஊருக்குப் பொதுவானது. 

பதினைந்து வருடங்கள் முன்னர் அந்தக் கோவிலின் அர்ச்சகராக இருந்த பாப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுதாமன் பட்டர் வைகுண்ட பதவியை அடைந்த பிறகு கிராமத்தின் தலைவர் வசுதேவன் தேடி அலைந்து பரந்தாமனை திருத்தங்கலில் இருந்து அழைத்து வந்தார். 

பரந்தாமனுக்கு அப்போது பதினெட்டு வயதுதான். கோவில் அருகே ஒரு வீடு ஒன்றை கோவில் நிலத்தில் பரந்தாமனுக்கு கட்டித்தந்தார் வசுதேவன். பரந்தாமனுக்கு இருபத்தி ஒரு வயது ஆனபோது வசுதேவனே மறுபடியும் தேடி அலைந்து கல்லுப்பட்டியில் இருந்து பூங்கோதையை சம்மதிக்க வைத்து தானே முன் நின்று பரந்தாமனுக்கும், பூங்கோதைக்கும் திருமணம் பண்ணி வைத்தார். பன்னிரண்டு வருடங்களாக அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. 

அன்று காலையும் எப்போதும் போல சூரியன் உதித்து இருந்தது. எல்லா வீட்டின் வாசல்களில் கூட்டிப் பெருக்கப்பட்டு, நீர் தெளிக்கப்பட்டு கோலம் போடப்பட்டு இருந்தன. பரந்தாமன் எப்போதும் போல கோவிலுக்கு கிளம்பினான். பூங்கோதை பட்டு ஆடை உடுத்தி பரந்தாமன் கண்ணே பட்டுவிடுவது போல பேரழகியாகத் தெரிந்தாள். 

''இன்னைக்கு நம்ம பன்னிரண்டாவது வருச திருமண தினம், பெருமாள் நமக்கு கருணையே காட்ட மாட்டாரா''

''நமக்கு குழந்தை இல்லைனு ஆகிப்போச்சு, எதுக்கு வீணா கவலைப்பட்டுக்கிட்டு, ஊருல இருக்க குழந்தைக்கு சேவகம் பண்ணினாள் போதும்''

''நாம ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்கலாம்ல''

''நீயும் தான் அஞ்சாறு வருசமா சொல்லிட்டு இருக்க, அதெல்லாம் நடக்கிற காரியமா''

''நாம சரியா தேடலை, வசுதேவன் ஐயா கிட்ட சொன்னா தேடிக்  கொண்டு வந்து இருப்பாருல''

''அன்னைக்குச் சொன்னதுதான் இன்னைக்கும் அவருகிட்ட நாம எதுவும் கேட்க வேணாம்'' 

''பெரியாழ்வாருக்கு கிடைச்ச கோதை போல நமக்கு ஒரு பொண்ணு கோவில் நிலத்தில் கிடைக்காதா''

''இப்படி வெட்டியா கனவு காணாம கிளம்பி வா, கோவில் நடை திறக்க நேரம் ஆகிருச்சு''

''நாளு வேற தள்ளிப் போயிருக்கு, நமக்கு ஒரு பிள்ளை பிறக்கும்''

''இப்படி அப்போ அப்போ சொல்லி சொல்லி உன்னை நீயே ஏமாத்திக்கிற''

பரந்தாமன் பூங்கோதையின் தலையினைத் தடவியபடி தனது மார்பில் சாய்த்துக் கொண்டான். பல வருடங்கள் பூக்காத, காய்க்காத மரம் சட்டென பூத்து குலுங்குவது எத்தனை மகிழ்ச்சியை அந்த மரத்திற்குத் தருமோ தெரியாது ஆனால் அந்த மரத்தை பல வருடங்களாக வளர்த்து வந்தவருக்கு பெரும் மகிழ்வைத் தருவதாகும். 

கோவில் நடையைத் திறந்தான் பரந்தாமன். புறாக்கள் பறந்தன. கோவில் வளாகத்தை கூட்டிப் பெருக்கினாள் பூங்கோதை. கோவிலுக்குள் இருந்த கிணற்றில் நீர் இறைத்து தெளித்தான் பரந்தாமன். கர்ப்பகிரகத்தை திறந்து சிறு விளக்கேற்றி வைத்தான். பெருமாள் அருகில் சிறு குழந்தை போல தாயார் அமர்ந்து இருக்கும் கோலம். வேலைக்குச் செல்பவர்கள், பள்ளிக்கூடம் செல்பவர்கள் என இக்கோவிலுக்கு வந்து வணங்கியே செல்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். அவர்களுக்கென நாலாயிர திவ்விய பிரபந்தம்தனில் சில பாடல்கள் பாடி தீபம் ஆராதனை காட்டுவது வழக்கம். 

வெளியூரில் இருந்து சில வேண்டுதல்கள் என வந்து போவோர்கள் உண்டு. பரந்தாமன் புரியும் சேவை எல்லோரையும் மிகவும் கவர்ந்த ஒன்று. இருவருமே பன்னிரண்டாம் வகுப்பு வரைதான் படித்தும் இருந்தார்கள். கோவில் சேவை தவிர்த்து கோவில் நிலத்தில் பணிபுரியும் வழக்கம் கொண்டு இருந்தார்கள். அந்த நிலத்தில் இருந்து வரும் பொருட்கள் யாவும் கிராமத்து மக்களுக்கு என பகிர்ந்து தரப்பட்டு இருந்தது. இதை எல்லாம் முறையாக வசுதேவனே பல வருடங்களாக கண்காணித்து வந்தார். பரந்தாமன் வந்த பிறகு அந்த முழு பொறுப்பையும் பரந்தாமனிடம் தந்தார். பரந்தாமனின் நேர்மை வசுதேவனுக்கு பெரும் நிம்மதியைத் தந்து கொண்டு இருந்தது. 

கிராமத்தில் இருந்து சிலர் இந்த நிலத்தில் வந்து வேலை செய்து விட்டுப் போவார்கள். குழந்தைக்கென என்ன என்னவோ கிராமத்துப் பெண்கள் பல யோசனைகளை தந்து போனார்கள். அதெல்லாம் சில வருடங்கள் மட்டுமே, அதற்குப்பிறகு அந்த பெருமாள் மனசு வைச்சாதான் உண்டு என எவரும் குழந்தை பற்றி பேசுவது இல்லை. 

அன்று மதியம் உச்சிகால பூசை முடித்துவிட்டு கோவில் கர்ப்பகிரகத்தின் முன் இருந்த பெரும் வெளியில் பரந்தாமன் அமர்ந்து இருந்தான். தக்காளி, கத்தரிக்காய் என பறித்து வந்து சிறு மூட்டைகளை அங்கே வைத்துவிட்டு பரந்தாமனை பற்றியபடி மயங்கி விழுந்தாள் பூங்கோதை. 

''பூங்கோதை, பூங்கோதை'' பதறினான் பரந்தாமன். 

அங்கே இருந்த தண்ணீர் எடுத்து அவளது முகத்தில் தெளித்தான். சிறிது நேரத்தில் விழித்தவளுக்கு குடிக்கத் தண்ணீர் தந்தான். 

''தலை சுத்தி வந்துருச்சி, வெயிலு இன்னைக்கு அதிகம்'' என மெல்லிய குரலில் சொன்னாள் பூங்கோதை. 

''பேசாம உட்காரு, சாயந்திரம் வெயிலு சாஞ்சப்பறம் வேலை செய்யலாம்ல, எல்லாரும் பதினோரு மணிக்கு வீட்டுக்கு போயிருறாங்க நீ மட்டும் ஏன் இப்படி இருக்க'' 

தன்  வயிறு பிடித்தவள் ''என்னமோ மாதிரி வருது'' என எழுந்து கோவில் நடையைத் தாண்டி நடந்தாள். பரந்தாமன் அவளை கைத்தாங்கலாக பற்றியபடி இருந்தான். வாந்தி எடுத்தாள். வாய் முகம் கழுவிட உதவினான் பரந்தாமன். 

''பித்தமா இருக்கும்'' என்றான் பரந்தாமன். 

''பிள்ளையா இருக்குமோ'' என கண்களில் நீர் மல்க பரந்தாமனிடம் கேட்டாள் பூங்கோதை. 

எங்கிருந்தோ வந்த ஒரு பறவை கோவிலில் இருந்த மணியினை அசைத்துவிட்டுச் சென்றது. கோவில் மணியின் ஓசை எப்போதுமே பேரின்பம் தரவல்லது. 

(தொடரும்) 








Saturday 9 June 2018

காலா - உலக மாற்றம் எவர் கைகளில்

கபாலி படம் பார்த்த பிறகு நிறைய தமிழ்ப்படங்கள் பார்த்தாகி விட்டது. பல படங்களின் பெயர்கள் கூட மறந்து விட்டது. பொதுவாக படத்தைப் பார்க்க ஆரம்பித்த அரை மணி நேரத்தில் உறங்கி விடுவது உண்டு., என்னைத் தாலாட்டும் தமிழ் படங்கள்.  அருவி, அறம் போன்ற படங்கள் சமூகத்தில் சில விசயங்களை மாற்ற வேண்டும் என மிகவும் தைரியமாகச் சொன்ன படம். இதை விட இருட்டு அறையில் முரட்டு குத்து எனும் படம் எல்லாம் அதீத தைரியம்தான். சமூகப் பிரச்சினைகள் ஒருபுறம், காமம் சார்ந்த விசயங்கள் எல்லாம் ஒரு புறம். படைப்பாளி சமூகத்திற்கு ஏதேனும் சொல்ல வேண்டும் என துடிதுடித்துக் கொண்டு இருக்கிறான்.

காலா படத்தைப் பார்க்க வேண்டும் எனும் முடிவு ரஜினி.  தியேட்டருக்குப் போனால் தெரிந்தவர்கள் நிறைய பேர் வந்து இருந்தார்கள். அதற்கு முன்னர் வேறொரு திரையில் படம் பார்த்தவர்கள் வெளியில் உணவுப் பொருட்கள் வாங்க வந்து இருந்தார்கள். பார்க்க வேண்டிய படம் என சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.

படம் ஆரம்பிக்கத் தொடங்கியதும் மனிதர்கள் குறித்த வரலாறு சொல்லப்படுகிறது. நில ஆக்கிரமிப்பு செய்பவர்கள் கோலோச்சிய காலம் இன்றும் தொடர்கிறது. நிலத்தை இழந்தவர்களின்  கதையை, பறிக்கப்பட்ட கதையை கேளுங்கள், எத்தனை வலிமிக்கது எனப் புரிய வரும். குடும்பம், காதல், அடிதடி என படம் அழகாக நகர்கிறது. கதாநாயகன் வில்லன் என எடுக்கப்படும் படங்களில் பெரிதாக ஒன்றும் எதிர்பார்த்து விட முடியாது. நிலம் நம் உரிமை. நம் நிலத்திலேயே நம் மரணம் என்பது எல்லாம் கேட்க உணர்வுப் பூர்வமாக இருக்கும். ஆனால் வெளியூர் வேலை என்பதுதான் பலரின் கனவு. ஊரை விட்டு வெளியேப் போகாமல் வாழ்ந்து மடிந்த மக்கள் முன்னர் இருந்தனர், அப்போது கூட திரைகடல் ஓடி திரவியம் தேடு எனச் சொன்னது தமிழ்.

புரட்சி, போராட்டம் என்பது மக்களின் வாழ்வோடு கலந்த ஒன்று. மக்கள் அனைவரும் போராட்டத்திற்கு தங்களை தயார்படுத்துவது இல்லை. போராட்டம் புரட்சி பண்ண ஒரு தனிக்கூட்டம் மக்களில் உண்டு. அதிகார வர்க்கம் என்பது அடிமை வர்க்கத்தினால் உண்டாவது. அடிமை வர்க்கம் போராடும் போது அதிகார வர்க்கம் ஆடும், ஆனால் அதிகார வர்க்கம்தனை அழிப்பது கடினம். பணம், பதவி. இவற்றை வெல்ல மக்கள் மாற வேண்டும்.

படத்தில் இந்தி வசனங்கள் வருகிறது. தூய்மை இந்தியா எனும் முழக்கத்தை கேலி கூத்தாக்க முனைந்து இருக்கிறார்கள். சிறு குழந்தைகள் சம்பந்தபட்ட காட்சிகள் எல்லாம் இப்போதைய குழந்தைகளின் மனநிலையை சொல்கிறதா எனத் தெரியவில்லை. படம் நன்றாக இருக்கிறது என்றார் ஒருவர். சரியான குப்பை என்றார் இன்னொருவர்.

தமிழகத்தில் இப்படிப்பட்ட இடங்கள் உண்டா எனக் கேட்டார் ஒருவர். இருக்கிறதா?

தமிழ் சினிமாவின் சாபக்கேடு பாடல்கள். மனைவி நோக்கி இரஜினி பாடும் ஒரு பாடல்  நன்றாக இருந்தது என்றனர். இசை மிகச் சிறப்பு.

நிறைய காட்சிகள் பேரழகு. இராமன் இராவணன் கதை. இராவண காவியம் எனும் நூல். என்னவோ சொல்ல வந்து என்ன என்னவோ சொல்கிறார்கள். இறுதியில் நல்லவேளை நிலத்தைப் பாதுகாப்பது போல? முடிக்கிறார்கள். வாழ்த்துகள் இயக்குநர். ரஜினி தமிழ் சினிமாவின் பேரரசர் என்னவோ சொல்ல வந்து என்ன என்னவோ சொல்லி முடிக்கிறேன். படைப்பாளியின் பலவீனங்களில் இதுவும் ஒன்று.

மக்கள் நினைத்தால் உலக மாற்றம் நிகழும், எந்த மக்கள் என்பதே கேள்வி.





Friday 14 July 2017

அடியார்க்கெல்லாம் அடியார் - வாழ்த்துரை சு.சந்திரகலா

அடியார்க்கெல்லாம் அடியார் - வாழ்த்துரை 

இன்று அனைத்து நகரங்களும் வளர்ந்து நிற்பதற்கு பின்னால் கிராமங்கள் தான் இருக்கின்றன. மனிதனின் பழக்க வழக்கங்கள் அழியாமல் இருப்பதற்கும் உறவின் உன்னத நிலையையும் கிராமங்கள் தான் புரிய வைக்கின்றன. கிராம மக்களின் வாழ்வியல் முறையையும் சமயம் மனிதனின் வாழ்வோடு எவ்வாறு பயணிக்கிறது என்பதை எடுத்துரைக்கிறது அடியார்க்கெல்லாம் அடியார்.

இக்கதையின் ஆரம்பம் முதல் இறுதிவரை கிராமத்திற்குள் பயணம் செய்த உணர்வை கொடுக்கும்.நகரத்தில் ள்ள இளைய சமுதாயத்தினர்க்கு இந்நாவல் ஒரு வரப்பிரசாதமாக அமையும்

கிராம மக்களின் நடைமுறை வாழ்க்கையில் தொடக்கி உறவுகளின் முக்கியத்துவத்தையும் சமயம் மற்றும் அன்பின் முக்கியத்துவத்தையும் இக்கதையின் மையகருத்தாக எடுத்து உணர்த்தியிருப்பது சிறப்பு.


இக்கதையின் சில இடங்களில் உலகநியதிகளை எடுத்துரைப்பது மிகவும் சிறப்பு.அறிவியல் சார்ந்த விஷயங்களை சொல்லவும் மறக்கவில்லை.அதை வாசகர்களுக்கு புரியும்படி மிக எளியமுறையில் விவரித்துள்ளார் இராதாகிருஷ்ணன்.சார்லஸ் டார்வின் இயற்கை தேர்வு முறை பற்றி கூறியிருப்பது அற்புதம். இதன் மூலம் இவர் மிகச் சிறந்த அறிவியலார் என்பதை நிரூபித்துளார்

கடவுள் சமயம் சார்ந்த விஷயங்களை எழுதுவதற்கு அதை பற்றிய அறிவும் புரிதலும் மிக முக்கியம். ஆனால் இராதாகிருஷ்ணன் அவர்கள் மிக அழகாக தன்னுடைய கருத்துக்களை எடுத்துரைத்திருக்கிறார். ஆங்காங்கே இறைவனை பற்றி மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் அவற்றின் விளக்கங்கள் அவர்களின் சிறப்புகளை சொல்லியிருக்கிறார். மனிதன் வாழ்வதற்கு அன்பு ஒரே அடிப்படை என்பதை மிக அழகாக உணர்த்துகிறார்

அடியார்க்கெல்லாம் அடியார் என்னும் இந்நாவலில் பல அரிய தத்துவங்களையும் வாழ்வியல் முறைகளையும் தன்னுடைய மிகச் சிறப்பான எழுத்துக்களால் புரியவைத்தமைக்கு இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.”யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுகஎன்று தான் ஒவ்வொரு கதை ஆசிரியரும் தம் எழுத்துக்களை புத்தகமாக வெளியிடுகின்றனர். இராதாகிருஷ்ணன் அவர்களும் அந்த எண்ணத்திலேயே தன்னுடைய நாவலை வெளி உலகிற்கு கொண்டுவந்திருக்கிறார் என்பதே என்னுடைய எண்ணம். இது போன்ற பல நாவல்கள் எழுதி எழுத்து துறையில் சாதிக்க வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.

நன்றி  

                                 
அன்புடன்                                                                                                                                                  
சு.சந்திரகலா