Friday 26 February 2016

மாறா மரபு - 5

7. அறியாதவரை ரகசியம்

‘’தாத்தா உங்க பேரு என்னனு சொல்லலையே’’

‘’ரங்கநாதன்’’

‘’உங்க பேரு’’

‘’ரங்கநாதன்’’

‘’அது இல்லை தாத்தா, உங்களுக்கு உங்க அம்மா அப்பா வைச்ச பேரு’’

‘’ரங்கநாதன்’’

‘’ரங்கநாதன்?’’

‘’ஏன் என் பேரு ரங்கநாதன் அப்படினு இருக்கக்கூடாதா? பேசாம வாரும்’’

சாலை இருமருங்கிலும் கடைகள். மல்லிகைப்பூ வாசமும், குளிர்ந்த காற்றும் என மிகவும் ரம்மியமாக இருந்தது. இத்தனை கடைகளிலும் வியாபாரங்கள் நடந்துகொண்டு இருக்கத்தான் செய்கின்றன, வாங்குவதற்கு மக்கள் கடையில் நின்றுகொண்டுதான் இருக்கிறார்கள்.
ஒவ்வொருவரின் முகமும் பரிச்சயமற்ற முகங்களாகவே சிவராமிற்கு காட்சி அளித்தது. என்னவென்னவோ பேசிக்கொண்டே இவர்களை பலர் கடந்து கொண்டு போனார்கள்.

இந்த அறிவியல் உலகில் ஆன்மிகம் எனும் ஒன்று இன்னும் உயிர்ப்போடு இருப்பதற்கு காரணம் என்னவென ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொல்வார்கள் என சிவாரம் எண்ணிக்கொண்டே நடந்தான். ரங்கநாதன் கோவிலின் பிராதன  வாசற்படியைத் தாண்டியதும் வலப்புறம் திரும்பினார். அங்கிருந்து நேராக நடந்து இடப்புறம் திரும்பினார். ஒரு வார்த்தை கூட பேசவில்லை. சிவராம் தன்னைத்தான் பேச வேண்டாம் என சொன்னார், அவராவது பேசலாமே என மனதில் எண்ணிக்கொண்டான். அந்த தெருவானது அத்தனை சுத்தமாக வைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்த தண்ணீர்க்  குழாய் ஒன்றில் ஆடவர், பெண்டிர் என தண்ணீர் எடுத்துக் கொண்டு இருந்தார்கள். ஒரு சின்ன இடம்  ஒன்றில் சிறுவர்கள் சிறுமியர்கள் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். தெருவின் இரண்டு பக்கங்களிலும் வெட்டப்படாத மரங்கள் பூத்து குலுங்கிக் கொண்டு இருந்தன.

ரங்கநாதன் குடிசையின் முன் சென்று நின்றார். அந்த குடிசைக்கு கதவு அவசியமில்லை என்றாலும் கதவு ஒன்று இருக்கத்தான் செய்தது. குடிசையின் இருபுறமும் சன்னல்கள் கூட வைக்கப்பட்டு இருந்தன. கதவைத் தள்ளினார், திறந்தது.

‘’கதவுக்கு பூட்டு போடும் பழக்கம் இல்லையா தாத்தா?’’

‘’இல்லை’’

ஒரு விளக்கை ஏற்றி வைத்தார். உள்ளே சமையல் அறை என எதுவும் இல்லை. ஒருபுறம் துணிகள் என சில அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. மறுபுறம் பல புத்தகங்கள் இருந்தது.

‘’ரகசியம் அப்படின்னு சொன்னீங்களே’’

‘’சத்ய யுகம் தெரியுமோ?’’

‘’தெரியாது’’

‘’கலியுகம் தெரியுமோ?’’

‘’இப்ப நடக்கிறதுதானே தாத்தா’’

‘’வேத சாஸ்திரங்கள் படிக்கிறது உண்டோ?’’

‘’எனக்கு ஆர்வம் இருந்தது இல்லை, சாமி கும்பிடறது எல்லாம் ஒரு சம்பிரதாயம்’’

‘’கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லும்’’

‘’படிக்கிறது இல்லை’’

‘’சத்ய யுகத்திலே இருந்த மனுசாளுடோ மரபணுக்கள் வெறும் முப்பதாயிரம் மட்டுமே. அவா உயிரோட வாழ்ந்த வருடங்கள் நூறு வருஷ கணக்கு இல்லை ஆயிர வருஷ கணக்கு. அவாளுக்கு மூப்பு எல்லாம் உடனே வருவது இல்லை. நோய் இல்லை. நொடி இல்லை. இது எல்லாம் ரகசியம்’’

சிவராம் தனது தலையில் கை வைத்துக் கொண்டான். நாம் இன்ட்ரான் எக்ஸ்சான் பத்தி எதுவும் ரகசியம் சொல்வார் என்று நினைத்தால் பழம்பெரும் கதை ஒன்றை சொல்கிறார் என நினைத்து பெருமூச்சு விட்டான்.

‘’இப்போ லோகத்திலே மரபணு பத்தி பெரிசா பேசறா, அதுவும் இன்ட் ரான் எக்ஸான் அதிலும் இன்ட்ரான் எல்லாம் விலக்கப்பட்டு எக்ஸான் மட்டுமே புரதம் உருவாக்க போதும் அப்படினும் இந்த இன்ட்ரான் எல்லாம் எப்படி உருவாச்சுனும் தலையைப் போட்டு பிச்சுக்கிறா. அதுவும் இந்த இன்ட்ரான் எல்லாம் இருக்கிறதாலதான்  மனுசா நிறைய அறிவாளியா உருவானாங்கனு சொல்லிக்கிறா, ஆனா இந்த இன்ட்ரான் இல்லாம இருந்ததால் தான் மனுசா எல்லாம் பேதம் குரோதம் எல்லாம் பாக்காம இருந்தா அப்படின்னு சத்யயுகத்திலே சொல்லப்பட்டு இருக்கு.  எந்தவொரு வர்ணாஸ்ரமம் எல்லாம் இல்லை, மதம் இல்லை, சிலைகள் இல்லை, கோவில்கள் இல்லை அப்போ மனுசாள் மட்டுமே கடவுள்.  எல்லோரிடத்திலும் இறைவன் உண்டு அப்படின்னு சொல்றதுதான் சத்ய யுகம், எக்ஸான் யுகம், சத்ய யுகத்திற்கு அப்புறம் இந்த இன்ட்ரான் மெல்ல மெல்ல உள்ள சேர்ந்தப்ப உண்டானதுதான் மனித வேறுபாடுகள், மனுசாள் எல்லாம் இந்த இன்ட்ரான்களால் தான் குரோதம் கொண்டு இருக்கா’’

சிவராம் தான் என்ன கேட்டுக்கொண்டு இருக்கிறோம் என ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தான். ஒரு விஷயத்தை அப்படியே புராண கதைகளோடு சம்பந்தபடுத்தும் ஒரு புத்திசாலித்தனம் வெகுவாக பரவிக்கொண்டு வருகிறது என சிவராம் மனதில் நினைத்தான், ஆனால் இவர் எப்படி?

‘’இதை வேறு யாருகிட்ட எல்லாம் சொல்லி இருக்கீங்க தாத்தா?, இல்லை இது யாரு உங்களுக்கு சொன்னா தாத்தா?’’

‘’என்னை என்னனு நினைச்சேள்?, விளைச்சல் இல்லா நிலத்தில நீரைப் பாய்ச்சி அறுவடை பண்றதுக்கு எல்லாம் நான் கத்துக்கிட்டது இல்லை. ரகசியம் அப்படின்னு சொன்னேனே, உம்ம காதில விழுந்துச்சோ இல்லையோ, எப்படி வேறு யாருகிட்டயும் இதை சொல்லி இருக்க முடியும்னு நினைக்கிறேள், முத முதலில் இதை உம்மகிட்டதான் நான் சொல்றேன். எனக்கு இது என்னோட தாத்தா சொன்னது, என் தாத்தாவுக்கு அவங்க அப்பா சொன்னது இப்படி பல காலங்களாக சொல்லப்பட்டு வரக்கூடிய ஒன்னு. அவா எல்லாம் சொல்லும்போது இந்த இன்ட்ரான் எக்ஸான் அப்படின்னு சொல்லலை. உள்ளுக்குள்ள இருக்கிற மாற்றம் மனுசாளை மாத்துதுனு சொல்லிட்டு வந்தா. நான்தான் அது என்னவாக இருக்கும்னு யோசிச்சி இந்த ஞானம் தோன்றினது. இன்ட்ரான் இல்லாத குழந்தைகள் உருவாகும் காலம் ஒன்று தோன்றும்போது இந்த கலியுகம் மறைஞ்சி சத்யயுகம் தோன்றும். இது கால சுழற்சி’’

‘’சரி, பேச்சுக்காகவே வைச்சிக்குவோம், இது இயற்கையாகவே நடக்குமா தாத்தா’’

‘’என்ன பேச்சுக்குனு சொல்றேள், எல்லாம் இயற்கை தான், செயற்கைனு நாம பேரு வைச்சிக்கிட்டோம், இங்கே இருந்துதானே எல்லாம் நாம செய்றோம்னோ, உமக்கு அது எப்படி நடந்தா என்ன, கால காலமாக அதுதான் நடக்கிறது. இதுதான் இந்த பிரபஞ்ச உலக ரகசியம். நான் இதை எல்லாம் எழுதலை, இதை நீர் எழுதி பெரிய பேரு வாங்கிக்கும். உம்மகிட்ட சொல்லிய திருப்தி எனக்கு போதும். இந்தாரும் தண்ணீர் அருந்தும்’’

‘’விலங்குகள் கூடவா அப்படி?’’

‘’அவா எப்பவுமே அப்படித்தான், சத்ய யுக தொடக்கத்திலே இந்த கலியுக விலங்கு, மனுசா எல்லாம் இருப்பா, கொஞ்ச வருசத்திலே எல்லாம் அழிஞ்சி போயிருவா. பல்லாயிர வருஷம் பின்னால் மறுபடியும் தோன்றுவா, அடுத்த யுகம் அடுத்த யுகம் அப்படின்னு தொடரும். ஆனா சத்ய யுகம் மட்டுமே எக்ஸான் யுகம்’’

‘’சாப்பாடு, சமைக்க அப்படின்னு சமையல் அறை எதுவும் இல்லையே தாத்தா’’
‘’யாராவது வந்து கொடுத்தால் மட்டுமே நான் சாப்பிடுவேன். இந்த தண்ணீர் கூட ஒருத்தர் வந்து வைச்சிட்டுப் போனதுதான். இந்த குடிசை வீடு என்னோட நிலம் இல்லை. நான் இங்கே தங்க ஒருத்தர் கொடுத்த இடம்தான் இது. மாளிகை எல்லாம் தந்தா, அது நீயே அனுபவினு சொல்லிட்டேன். இந்த புத்தகங்கள் எல்லாம் ஒருத்தர் வந்து தந்தா. நான் எதுவும் விலை கொடுத்து வாங்குறது இல்ல. எனக்கு இருக்க துணி எல்லாம் தட்சணையா வந்தது. ஒரு தடுமல், காய்ச்சல் அப்படின்னு இதுவரை படுத்தது இல்லை, ஆனா முதுமை வந்துடுத்து’’ 

‘’இப்படி இருக்கிறதால என்ன சாதிச்சிட்டதா நினைக்கிறீங்க?’’

‘’என்ன சொல்றேள், சாதிக்கவா இந்த லோகத்தில பிறக்கிறோம்?, வாழனும், நம்ம விருப்பப்படி வேறு எவருக்கும் கட்டுப்படாம சுதந்திரமா வாழனும்’’

‘’அப்படி வாழ்ந்து என்ன உலகத்தில் கண்டீங்க’’

‘’என் ரங்கநாதனை கண்டேனில்லையோ, சத்ய யுகத்தை எனக்குள்ள கண்டேனில்லையோ’’

‘’தாத்தா, வேறு ஏதாவது ரகசியம் இருக்கா?’’

அமர்ந்தவர் கண்களை மூடினார். காற்று வீசும் சப்தம் மட்டுமே கேட்டது. எப்படியும் ஒரு பத்து நிமிடங்கள் மேல் ஆகி இருக்கும். சிவராம் தாத்தா என அழைக்க நினைத்து அமைதி ஆனான். அமர்ந்து இருந்தவர் சட்டென வலது புறம் சாய்ந்தார். சிவராம் அதிர்ச்சி ஆனான். தாத்தா என அலறியவன் தண்ணீர் எடுக்க நினைத்து எழும் முன்னர் சட்டென சாய்ந்தவர் எழுந்து நின்றார்.

‘’இன்ட்ரான் இல்லாத பெண் குழந்தை ஒன்று ஆண் குழந்தை ஒன்று இன்னும் இரண்டு வருடத்திற்குள் இந்த பூமியில் பிறக்கும். அந்த குழந்தைகளே சத்ய யுகத்தைத் தொடங்கி வைக்கப்போகின்ற குழந்தைகள். இன்னும் பல ஆயிரம் வருடங்களில் எக்ஸான் யுகம் மட்டுமே. எதுவுமே பேசாமல் நீர் இனி போகலாம்’’

சிவராம் பெரும் அதிர்ச்சிக்குள்ளானான்.
‘’தாத்தா, நீங்க சொல்றது’’

அதற்குள் ரங்கநாதன் அப்படியே கீழே படுத்து கண்களை மூடிக்கொண்டார். சிவராம் பலமுறை அழைத்தும் அவர் கண்களை திறந்து பார்த்தவர் எதுவும் பேசவில்லை. இனி அங்கு இருப்பதால் எவ்வித பயனும் இல்லை என கருதி வெளியேறினான். சுபாவிடம் தான் நாளை சென்னையில் இருப்பேன் என தகவல் மட்டும் சொன்னான்.

இந்த ரங்கநாதன் தாத்தா சொன்னது எல்லாம் அவனுக்குள் சுழன்று கொண்டு இருந்தது. தான் ஸ்ரீரங்கம் வந்தது, ஜெகனிடம் பேசியது, இவரை சந்தித்தது எல்லாம் கனவாக இருக்கக்கூடும் என்றே எண்ணுமளவு அவனுக்குள் ஒரு பெரும் குழப்பம் வந்து சேர்ந்து இருந்தது.

நமது சிந்தனைக்கு உதவும் மனிதர்கள் நமது வழியில் தென்பட்டுக் கொண்டே இருப்பார்கள். அவர்களை அடையாளம் கண்டு கொள்வதில் உள்ளது நமது சிந்தனையின் செயல்பாடு. யூகத்தில் பேசும் பேச்சுக்கள் எல்லாம் பலிப்பது இல்லை. பலித்தபின் யூகம் வந்த காரணம் எவரும் விளங்க முடிவது இல்லை.

இதை எல்லாம் சுபாவிடம் சொல்லியே ஆக வேண்டும் என எண்ணி பேருந்தில் சென்னை நோக்கி பயணம் செய்தான் சிவராம். அதிகாலையில் வீடு சென்று விரைவாக குளித்து சுபா மருத்துவமனை செல்லும் முன்னர் அவளை வழியில் சந்தித்தான். எல்லா விசயங்களையும் சொல்லி முடித்தான்

‘’சிவா, இது எல்லாம் உண்மையா இல்லை நீயா கதை எதுவும் சொல்றியா?’’

‘’நான் சொன்ன விபரங்களை வைச்சி நீ வேணும்னா ஸ்ரீரங்கம் போயிட்டு வா’’

‘’அப்போ அந்த ராம் சொன்னது எல்லாம் நடக்குமா?’’

‘’நடக்கும்னு எனக்கு தோணுது சுபா, ஜெகன் காட்டின படங்கள், மூலக்கூறுகள் வேலை செய்யும் விதம் அப்படியே என் மனசுக்குள்ள இன்னும் இருக்கு. இது உண்மையிலேயே மனித வரலாற்றில் ஒரு மாபெரும் மரபணு புரட்சி, நீ அந்த தம்பதிகளைப் பார்த்தியா, அவங்க உடம்புல எதுவும் மாற்றம் இருக்கா, ஏதாவது சிம்ப்டம்ஸ் சொன்னாங்களா’’

‘’எதுவும் சொல்லலை சிவா, அவங்களை ராம் நேரடியா டீல் பண்றான். நான் அங்கே ஒரு வேடிக்கைப் பார்க்கிற மாதிரிதான் இருக்கேன். ரொம்ப நார்மலா இருக்காங்க. சிவா, அடுத்த தம்பதிகள் பாலகுரு, திவ்யா வர இருக்காக்கங்க, திங்கள் வர வேண்டியவங்களை மாத்திவிட்டுட்டான் ராம். அவங்ககிட்ட பேசட்டுமா?’’

‘’நோ நோ சுபா. நீ இனி பண்ண வேண்டியதெல்லாம் டாக்டர் ராமுக்கு உதவி பண்றது மட்டும்தான். டாக்டர் ராம் கிட்ட போய் நல்லா யோசிச்சிப் பார்த்தேன், ஐ வில் கோ ஆப்பரேட் வித் யூ அப்படின்னு சொல்லு’’

‘’சிவா திஸ் இஸ் நாட் ரைட்’’

‘’சொன்னா கேளு சுபா, அந்த ரங்கநாதன் தாத்தா சொன்னதை கேட்டதுல இருந்து ஐ திங் யூ சுட் ப்லீவ் இட்’’

‘’சரி சிவா, நான் ராம் கிட்ட சொல்றேன். நானும் இந்த வீக்கென்ட்ல ஸ்ரீரங்கம் போயிட்டு வரேன்’’

சுபா மருத்துவமனைக்குள் நுழைந்தாள். டாக்டர் ராம் நிறைய ஆலோசனையில் தனது அறையில் அமர்ந்து இருந்தார். அறையை விட்டு வெளியேறியவர் சுபா வருவதைப் பார்த்ததும் சுபாவை நோக்கி சென்றார்.

‘’டாக்டர் சுபா, இன்னைக்கு வரவங்க கிட்ட எதுவும் சொல்லமாட்டேன்னு எனக்கு உறுதி கொடு’’

‘’சொல்லமாட்டேன் டாக்டர் ராம், நானும் நல்லா யோசிச்சேன் எனக்கு உன் மூலமா வரப்போற பேரை எதுக்கு நான் கெடுத்துக்கணும்’’

‘’வாவ், கிரேட் டாக்டர் சுபா. வாட் எ சர்ப்ரைஸ். ஆனா உன்னோட கிரிமினல் புத்தியை பயன்படுத்த நினைச்சா அப்புறம் நான் டாக்டராக இருக்க மாட்டேன். என்னோட நடவடிக்கையே வேறு மாதிரி இருக்கும்’’

‘’இல்லை டாக்டர் ராம். சத்தியம். நோ வேர்ட்ஸ். ஐ டேக் இன்சார்ஜ்’’

‘’வெரிகுட், எப்படி இப்படி ஒரு மாற்றம்’’

‘’சுகுமார், தீபா ரொம்பவும் இயல்பா எவ்வித பிரச்சினை இல்லாம இருக்காங்க அதனால எனக்கு நம்பிக்கை வந்தது’’

‘’நைஸ். பாலகுரு இன்னைக்கு தன்னோட மனைவியோட மதியம் இரண்டு மணிக்கு வரார். அதோட இதை நிறுத்திக்குவோம். நாம் கொஞ்ச நாளைக்கு எதுவும் பண்ண வேண்டாம். குழந்தைகள் பிறந்தப்பறம் நாம் அவங்க டெவெலப்மென்ட் பார்த்துட்டு அவங்க இப்படி பிறந்த காரணத்திற்கு என்னவெல்லாம் செய்தோம்னு  உலகத்துக்கு காட்டணும் டாக்டர் சுபா, அந்த ஜெகன் எப்படியும் உன்னை மாதிரி என்கிட்டே வருவான்’’

‘’ஓகே டாக்டர் ராம்’’

சுபாவின் மனமாற்றம் குறித்து ராம் பெரிதாக யோசிக்கவில்லை. தன்னை மீறி சுபா எதுவும் செய்ய இயலாது என ராம் நம்பினார்.

பாலகுரு, திவ்யா நிறைய கேள்விகள் கேட்டார்கள். அதுவும் குறிப்பாக கேப்ச்யூல்ஸ் பற்றி அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு ராம் தெளிவாக பதில் சொன்னாலும் பாலகுரு இதெல்லாம் தேவையா என்றே கேட்டார். ஒருவழியாக அவர்களை சம்மதிக்க வைக்கும் முன்னர் ராம் சரி கேப்ச்யூல்ஸ் வேண்டாம் என சொல்லுமளவுக்கு வந்துவிட்டார். சுபா தான் சில விசயங்களை பேசி அவர்களை முழு மனதோடு சம்மதிக்க வைத்தாள். அவர்கள் சந்தோசமாக கிளம்பி சென்றார்கள். கோபத்தின் உச்சியில் இருந்தார் ராம்.  

‘’டாக்டர் சுபா, நான் ஒரு முட்டாள்னு நீ என்னை நம்ப வைக்க பாக்கிறல, இதுல கேம் விளையாடின உன்னோட லைப்ப முடிச்சிருவேன்’’

சுபா அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாள் (தொடரும்)


Monday 22 February 2016

ஜீரோ எழுத்து - 10 (கருந்துளை)

முந்தைய பகுதி 

இதற்கு முந்தைய பகுதியை எழுதி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. இந்த இரண்டு வருடங்களில் பேரதிசயங்கள் நிகழவே செய்து இருக்கின்றன. அதிலும் மிகவும் குறிப்பாக இந்த கருந்துளை பற்றிய சமீபத்திய ஒரு கண்டுபிடிப்பு பிரமிக்கத்தக்க ஒன்றுதான். 

இந்த கருந்துளைகள் பற்றி நிறையத் தெரிந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் இருந்த போதிலும் எதுவுமே விளங்கிக்கொள்ள முடிந்தது இல்லை. தனக்குப் பிடித்த ஒன்றை ஒளித்து வைக்கும் சிறு குழந்தையைப் போல இந்த பிரபஞ்சம் தனக்குப் பிடித்த இந்த கருந்துளைகளின் ரகசியங்களை மறைத்து வைத்துக்கொண்டே இருக்கிறது. 

இந்த பிரபஞ்சத்தில் ஒளி அலைகளை வெகு எளிதாக கண்டுபிடித்துவிட்டார்கள், ஆனால் இந்த ஈர்ப்பு அலைகளை அத்தனை எளிதாக கண்டுபிடிக்க முடியாத ஒன்றாக இருந்தது. ஐன்ஸ்டீன் இந்த ஈர்ப்பு அலைகள் ஒரு ஈர்ப்பு ஆற்றலாக வெளிப்படும் என்றே தனது கோட்பாடுதனில் குறிப்பிட்டு இருந்தார். இதை இத்தனை வருடங்களாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக அதே வேளையில் நிரூபிக்க வழி இல்லாததாகவே தென்பட்டது. நியூட்டனின் கோட்பாடுபடி இந்த ஈர்ப்பு அலைகள் இருக்கவே வாய்ப்பு இல்லை என்றே கருதப்பட்டது. 

பல வருடங்களாக  இந்த ஈர்ப்பு அலைகள் பற்றி அறிய வேண்டும் என அதற்கான கருவிகளை உருவாக்கிட முனைந்ததன் பலன்  இந்த வருடம் நிறைவேறி இருக்கிறது. 

இந்த கருந்துளைகள் இந்த ஈர்ப்பு அலைகளை கண்டுபிடிக்க உதவி இருக்கிறது. மீண்டும் இந்த இயற்பியல் உலகம் உந்த பிரபஞ்சம் பற்றிய பார்வையினை சற்று மாற்ற வேண்டி இருக்கிறது. 

(தொடரும்) 

மாறா மரபு - 4

6. எவருக்குத் தெரியும்

ஜெகன் சிவராமிடம் பேசிட்டு வா என அனுப்பினான்.

‘’சிவா நீ இப்போ எங்கே இருக்க’’

‘’ஒரு முக்கியமான விசயமா வெளியூர் வந்து இருக்கேன்’’

‘’அதான் எங்கே?’’

‘’திருச்சி’’

‘’எப்போ திரும்பி வருவ?’’

‘’நாளைக்கு வந்துருவேன். என்ன விஷயம்’’

‘’கொஞ்சம் கேப்ஷ்யூல்ஸ் இன்னைக்கு எடுக்கலாம்னு இருக்கேன், அதான் எடுத்த உடனே உங்கிட்ட கொடுக்கணும் இல்லைன்னா பிரச்சினை வந்துரும். ராம் கண் கொத்தி பாம்பா இருக்கான். அவனே இனி வரப்போற தம்பதிகளுக்கு கேப்ஷ்யூல்ஸ் தந்துக்கிறேனு சொல்லிட்டான். அவன் வந்து அதை எடுத்து இடம் மாத்துறப்ப ஏதாவது பண்ணனும்’’

‘’சுபா, நீ எதுவும் பண்ண வேணாம். அந்த கேப்ஷ்யூல்ஸ் வைச்சி நாம ஒண்ணும் பண்ணமுடியாது. அதனால கவலைப்பட வேண்டாம்’’

‘’என்ன சிவா சொல்ற’’

‘’ஆமா, நீ கொஞ்சம் பதறாம இரு. பார்த்துக்கிரலாம்’’

‘’சரி, நீ வந்ததும் எனக்கு தகவல் சொல்லு’’

‘’சரி’’

‘’பேசியாச்சா சிவா. நான் காட்டுற விஷயத்தை கொஞ்சம் கவனமாப் பாரு.

பெரும்பாலான பாக்டீரியாக்களில் எம்ஆர்என் ஏவில் இந்த இன்ட்ரான்கள் கிடையாது, ஆனால் எல்லா உயர்நிலை உயிரினங்களில் இந்த எம்ஆர்என் ஏக்களில் இன்ட்ரான்கள் உண்டு. இந்த எம்ஆர்என் ஏக்களில் உள்ள இன்ட்ரான்களை நீக்கியபின்னரே ஒரு எம்ஆர்என் ஏ புரதம் உண்டாக்கும் நிலைக்குச் செல்லும்.

ஒரு பாக்டீரியா தனது உயிரை பிறவற்றில் இருந்து எப்படி காத்துக் கொள்கிறது என்பதே அவை இன்னமும் இவ்வுலகில் தொடர்ந்து இருக்கக்காரணம். வைரஸ் பாக்டீரியாவை தாக்கும் தன்மை கொண்டது. ஆனால் இந்த பாக்டீரியா தனது டி என் ஏவை வேறு எந்த ஒரு டி என் ஏ வும் தாக்கி கலந்து விட முடியாதபடி தன்னில் இருக்கும் புரத வினையூக்கி மூலம் சரியாக வெட்டிவிடும் தன்மை கொண்டது. இதனால் பிற டி என் ஏ பாக்டீரியா டி என் ஏ வில் கலந்துவிட முடியாது. இதை இந்த பாக்டீரியா மெதிலேசன் வினையூக்கி மூலம் ஒரு மீதைல் மூலக்கூறுதனை தனது டி என் ஏ வில் உள்ள நியூக்ளிக் அமிலங்களில் சேர்க்கும். இப்படி செய்யும் பொது எவை எல்லாம் மீதைல் மூலக்கூறு இல்லையோ அவை எல்லாம் வெளி டி என் ஏ என பாக்டீரியாவில் உள்ள வினையூக்கி முடிவு செய்யும். இப்போது வேறு ஒரு வினையூக்கி வந்து வெட்டப்பட்ட தேவையற்ற டி என் ஏ வை தன்னில் கிரகிக்க வெட்டப்பட்ட தேவையான டி என் ஏக்கள் இணைந்து இப்போது ஒரு முழு டி என் ஏ இருக்கும்’’

‘’அது பாக்டீரியா, ஒரு செல் உயிர். ஆனால் மனிதர்கள் அப்படி இல்லையே. எவ்வளவு பெரிய பிரச்சினை வரும் தெரியும்தானே ஜெகன்’’

‘’அதனால் என்ன, பாக்டீரியா சில நேரங்களில் வைரஸ் டி என் ஏ வை தனதாக்கி கொள்ளும் தன்மை கொண்டது. அப்போது அந்த வைரஸ் டி என் ஏ வை கூட மெதிலேசன் பண்ணி தனதாக்கிக் கொள்ளும். அதைப் போல தான் இந்த இன்ட்ரான்கள். உனக்குத் தெரியாதது இல்லை. இந்த இன்ட்ரான்கள் எப்படி வந்தது ஏன் வந்தது எதற்கு இருக்கிறது என புரியாமல் இருந்தது. உன்னோட ரிசர்ச்ல கூட பண்ணி இருப்ப. இப்போ இந்த இன்ட்ரான்கள் பல முக்கிய வினையூக்கி, புரதம் உருவாக காரணமாக இருக்கிறது. எப்படி பாக்டீரியா செயல்படுதோ அதைப்போல நமது செல்கள் செயல்படுது. எம் ஆர் என் ஏ உருவாகும் முன்னர் இந்த இன்ட்ரான்கள் எப்படி ஒரு வினையூக்கி வெட்டுதுன்னு நான் ரிசர்ச் பண்ணி இருக்கேன். அதை வைச்சிதான் நான் இந்த மூலக்கூறு உருவாக்கி அதே வினையூக்கி போல செயல்பட வைச்சி இருக்கேன். அதாவது டி என் ஏவில் இதை செய்றது. எதுக்கு எம் ஆர் ஏ வரைக்கும் காத்து இருக்கணும்’’

‘’ஜெகன் எனக்கு இது சாத்தியம்னு தோணலை. நீ உருவாக்கின மூலக்கூறு எப்படி வேலை செய்யும்னு உனக்குத் தெரியும்’’

‘’இந்த படத்தைப் பாரு சிவா, இது விந்து அணுவில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட டி என் ஏ. அது அண்ட அணுவில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட டி என் ஏ. அதில் எல்லாம் இன்ட்ரான் எக்சான் எல்லாம் இருக்கு. அடுத்ததா நான் மூலக்கூறு  சேர்த்தப்போ எல்லா இன்ட்ரான்களிலும் இந்த மூலக்கூறு போய் இணைகிறது. எப்படி பாக்டீரியா மெதிலேசன் பண்ணுதோ அதே டெக்னிக் நான் பண்ணினேன். அடுத்தது பாரு, நான் இணைச்சதும் வினையூக்கி வந்து நான் மூலக்கூறு இன்ட்ரான் எல்லாம் வெட்டுது பாரு, அடுத்து இன்னொரு வினையூக்கி வந்து அவை எல்லாம் விழுங்குது, இப்போ எக்சான் மட்டும் தான்’’

‘’ஜெகன், என்னால் நம்பமுடியலை’’

‘’அதுக்குத்தான் நான் இதை எல்லாம் படம் எடுத்து வைச்சி இருக்கேன். எப்படி ஒவ்வொரு இன்ட்ரான் எல்லாம் வெட்டப்பட்டு விழுங்கப்படுதுன்னு’’

‘’எல்லா விந்து அணுவிலும் இப்படி நடக்குமா?’’

‘’ஆமா, எழுபது சதவிகிதம் வெற்றி கிடைச்சிருக்கு. அடுத்த கட்டமே எப்படி இந்த மூலக்கூறுதனை கொண்டு போறது அப்படின்னு யோசிச்சி டாக்டர் பாண்டே கிட்ட மூலக்கூறு டெலிவரி பத்தி பேசி இந்த கேப்ஸ்யூல் உருவாக்கினேன். ஆணுக்கும் பெண்ணுக்கும் வேற வேற முறை. சிவா நீ இதைப் பத்தி எல்லாம் கவலைப்படாத, இந்த டாக்குமென்ட் ல எல்லா விபரமும் எப்படி ஒவ்வொரு ஸ்டெப் பண்ணனும்னு இருக்கு. நீ அதை மட்டும் கவனமா பண்ணு போதும். இது ஒரு நாள் வேலை இல்லை. எங்கேயாவது ஒரு சின்ன தவறு நடந்தாக்கூட இந்த மூலக்கூறு வேலைக்கு ஆகாது. கேப்ஸ்யூல் எப்படி பண்றதுன்னு இந்த டாக்குமென்ட்ல இருக்கு’’

‘’ஜெகன், எனக்கு இதை பண்ண முடியும்னு தோணலை. அதுவும் நீ சொல்றது எல்லாம் சத்தியமா நடக்க வாய்ப்பே இல்லை. நீ காட்டினது உண்மையா இருந்தாலும் அதுவும் நியூக்ளியஸ்க்குள்ள இந்த மூலக்கூறு போய் இப்படி எல்லாம் பண்ணும்னு உனக்கு எப்படி தெரியும், நீ ஒரு எலி அல்லது வேறு சின்ன உயிரில் முயற்சி பண்ணி இருக்கலாம். இப்படி நேரடியா மனித உயிரோட விளையாடுறது எனக்கு சரியாப்படல’’

‘’சிவா, ஜஸ்ட் மேக் தீஸ் மாலிக்குல்ஸ், ரெஸ்ட் ஐ வில் சீ. ஐ வில் செட்டில் த அமவுண்ட் டு யூ. ப்ளீஸ் டோன்ட் சே நோ அண்ட் டோன்ட் பேக் அவே ப்ரம் திஸ் (just make these molecules, rest I will see. I will settle the amount to you. Please don’t say NO and don’t back away from this)

ஜெகன் எல்லா விபரங்களையும் சிவராமிடம் காட்டினான். ஒவ்வொரு விசயங்களையும் தெளிவாக சொல்ல சொல்ல சிவராம் மனதில் மாற்றம் உண்டானது. எப்படி நியூக்லியஸ் உள்ளே இந்த மூலக்கூறு செல்லும், எப்படி மற்ற செல்களில் சென்று இவை செயல்படாது என ஜெகன் சொன்னபோது சிவாராமிற்கு சற்று ஆச்சரியமாக இருந்தது. ஜெகன் அத்தனை நேரம் பேசவில்லை என்றால் நிச்சயம் சிவராம் எழுந்து போயிருப்பான். ஆனால் ஜெகனின் விடாத பேச்சு, எல்லாம் அப்படியே நடக்கும் எனும் உறுதிப்பாடு சிவராமிற்கு ஆசையை உண்டாக்கியது.

‘’சரி ஜெகன். பண்ணித்தரேன்’’

‘’வெல்டன், டேக் திஸ் சிவா  கீப் இட் சேப், லெட் அஸ் ஈட் நவ்’’

அன்று மாலை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்புவதாக திட்டம் போட்டான் சிவராம். ஜெகனிடம் சொல்லிவிட்டு ஸ்ரீரங்கம் கோவிலுக்குப் போனான். இந்த உலகில் இத்தனை விசயத்தையும் கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு எந்த ஒரு மனிதரும் அமைதியாக இருந்து விடவில்லை. அதது அதன்பாட்டில் நடக்கும் எனில் நாம் எதற்கு எனும் சிந்தனையே மனிதனை இந்த அளவுக்கு கொண்டு வந்து இருக்கிறது. இந்த இன்ட்ரான்கள் ஏதுமற்று மரபணுவில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அங்கே இருந்த ஒருவர் பாடிய பாடல் கேட்டு சிவராம் அங்கேயே நின்றான்.

ஊரிலேன் காணி யில்லை உறவுமற் றொருவ ரில்லை
பாரில்நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ண னேஎன் கண்ணனே கதறு கின்றேன்
ஆருளர்க் களைக ணம்மா அரங்கமா நகரு ளானே.

இந்த பாடலில் உள்ள அர்த்தம் போல இருக்கிறது வாழ்வு என எண்ணினான் சிவராம். தான் செய்யும் செயலில் கொள்ளும் நம்பிக்கைகள் பொய்த்துப் போகாதவண்ணம் இருக்கவே இறைவனின் மீதான நம்பிக்கைகள் மனிதர்களுக்கு உண்டாகி இருக்கக்கூடும். அப்படி என்னதான் இந்த இன்ட்ரான்கள் தம்மில் பெரும் ரகசியத்தைக் கொண்டு இருக்கக்கூடும் என சிவராம் தனது ஆராய்ச்சி மீது ஒரு புதிய கண்ணோட்டம் உண்டாகவேண்டி சிந்தித்தான்.

மீண்டும்அதே வரிகளை அவர் அங்கே பாடிக்கொண்டே இருந்தார். ஸ்ரீரங்கம் கோவிலில் கூட்டம் அதிகமானது. அங்கிருந்து கிளம்பியவன் பணம் கொடுத்து தரிசனம் செய்வதா, பணம் கொடுக்காமல் தரிசனம் செய்வதா எனும் குழப்பத்தில் நின்றவன் பணம் கொடுக்காமலே வரிசையில் சென்று நின்றான். அங்கே ஒவ்வொருவரின் பேச்சுக்கள் அவனுக்கு சற்று சுவாரஸ்யமாக இருந்தன. இந்த இன்ட்ரான்கள் எக்சான்கள் பற்றி எல்லாம் இவர்களுக்குத் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை என கருதினான்.  இருவரின் பேச்சு அவனுக்கு திகைப்பூட்டியது.

‘’இத்தனை வயசுல உனக்கு என்ன இந்த வரிசையில் நின்னு பெருமாளை சேவிக்கணும்னு தலைவிதியா, அதோ அங்கே பணம் கொடுத்து போக வேண்டியதுதானே’’

‘’உமக்கு என்ன தலைவிதியோ அதுவே எனக்கு இருக்கட்டும். எத்தனை மணி நேரம் வெட்டியா உலகத்தில மனுசா செலவழிக்கிறா, என் ரெங்கநாதனுக்கு இப்படி நான் நின்னு போறதுலதான் இஷ்டம்’’

‘’உன்னைத் திருத்த முடியாது’’

‘’அது என்னோட மரபணுவில ஊறினது, உமக்கு அது பத்தி எப்படி தெரியும், பேசாம வாரும், மத்தவா பாக்கிறா’’

அதிக வயதான முன் தலை எல்லாம் வழித்து பின்னால் குடுமி போட்டு நெற்றியில் நீண்ட ராமம் இட்ட மரபணு என சொன்ன அவரின் பேச்சு சிவராமிற்கு ஆச்சரியம் வரவழைத்தது.

பொதுவாக எல்லோரும் என் ரத்தத்தில் ஊறியது என்றல்லவா சொல்வார்கள், இவரோ என்னோட மரபணுவில் ஊறினது என்கிறாரே
என அவரிடம் பேச்சுக் கொடுத்தான்.

‘’தாத்தா, நீங்க சொன்னதில தப்பு இருக்கு. மரபணுவில் எப்படி ஊறும், ரத்தத்தில் அல்லவா ஊறும்’’

‘’பாக்கறதுக்கு படிச்சவா மாதிரி இருக்க, என்னை சோதிக்கிற மாதிரி கேள்வி கேட்கறளே. என்னை சோதிக்க அந்த ரெங்கநாதனுக்கு மட்டுமே உரிமை உண்டு. உமக்கு மரபணு அப்படின்னா என்னான்னு  தெரியாதா, இல்லை தெரியாதமாதிரி நடிக்கிறேளா’’

‘’தெரியும், ஆனா நீங்க அப்படி சொன்னது எனக்கு ஆச்சரியமா இருந்தது’’

‘’இப்போதான் எல்லாம் ஜீன் ஜீன் அப்படின்னு ஊரு உலகம் எல்லாம் பேசறாளே, ரத்தத்தில் உள்ள சிவப்பு ரத்த அணுக்களுக்கு கருவே கிடையாது அப்படின்றது நோக்கு தெரியுமோன்னோ, இப்போ நான் அதை பேச விரும்பலை. ரெங்கநாதனை சேவிக்க வந்துட்டு எதுக்கு எனக்கு இந்த வியாக்கியானம் எல்லாம், நீர் சேவிச்சிட்டு என்னோட ஆத்துக்கு வந்தா எல்லாம் சொல்றேன். பொது இடத்தில மத்தவாளுக்கு நாம இடைஞ்சலா இருக்கப்படாது. புரியுதுன்னோ’’

‘’சரிங்க தாத்தா’’

கோவிந்தா, கோவிந்தா எனும் சத்தம் அனைவரும் ஒரு சேர எழுப்பினார்கள். ஆனால் அந்த வயதானவர் ஒரு பாடலை தனக்குள் முனுமுனுத்தார்.

தவத்துளார் தம்மி லல்லேன் தனம்படத் தாரி லல்லேன்
உவர்த்தநீர் போல வென்றன் உற்றவர்க் கொன்று மல்லேன்
துவர்த்தசெவ் வாயி னார்க்கே துவக்கறத் துரிச னானேன்
அவத்தமே பிறவி தந்தாய் அரங்கமா நகரு ளானே

சிவராமிற்கு அந்த பாடல் தெரியவில்லை, சரியாக கேட்கவும் இல்லை. இவ்வுலகில் எத்தனையோ அதிசயமிக்க மனிதர்கள் இருக்கவே செய்கிறார்கள். ஒவ்வொருவரும் இவ்வுலகைப் பற்றிய ஒரு கருத்தைக் கொண்டு இருக்கிறார்கள். டாக்டர் ராம் இன்ட்ரான்கள் நீக்கப்பட்ட ஒரு மனித சமூகத்தை உருவாக்கிட நினைக்கிறார். இன்ட்ரான்கள் நீக்கப்பட்ட பின்னே புரதங்கள் எல்லாம் உருவாகிறது என்றாலும் அந்த இன்ட்ரான்கள் கருவிலேயே இருக்கக்கூடாது என கருதுகிறார். ஆனால் இதை எல்லாம் பொருட்படுத்தாமல் பிறந்தோம், வேலை பார்த்தோம், சந்ததிகள் உருவாக்கினோம் என பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் பிறந்து இறந்து போனார்கள் எனும் யோசனையில் நகர்ந்தான் சிவராம்.

வயதானவர் ‘ரெங்கநாதா’ எனும் மெல்லிய குரல் கொண்டு அழைத்து கைகள் மேல்தூக்கி கூப்பியபோது அந்த வயதானவரின் முகத்தில் எத்தனை சந்தோசம் என்பதையே நோக்கினான் சிவராம். ஒரு சில வினாடிகளில் அந்த வேண்டுதல் கடந்து விட்டது. சிவராம் தான் என்ன வேண்டினோம் என்பதையே நினைவில் கொள்ளவில்லை.

‘’ஆத்துக்கு வரேள்தானே, ஆத்துல நா மட்டும் தான் இருக்கேன், ஆத்து அப்படின்னா மாளிகைனு நினைச்சிண்டு வராதேள்’’

சிவராம் சரி என சொல்லியபடி அவருடன் நடந்தான்.

‘’என்ன வேண்டிண்டு வந்தேள்’’

‘’வேண்ட மறந்துட்டேன் தாத்தா’’

‘’நீர் வேண்டித்தான் அந்த ரெங்கநாதன் தருவாரில்லை’’

‘’நீங்க என்ன வேண்டினீங்க தாத்தா’’

‘’ரெங்கநாதானு வேண்டிண்டேன், அது போதும் எனக்கு’’

‘’நீங்க என்ன படிச்சி இருக்கீங்க, என்ன வேலை பாத்தீங்க’’

‘’நான் வேதம் படிச்சி இருக்கேன், கோவிலில பூசாரியா வேலை பார்த்தேன், ரெங்கநாதனுக்கு சேவகம் பண்றதுதான் என்னோட வேலை. நீர் என்ன படிச்சி இருக்கேள்’’

‘’மூலக்கூறு உயிரியல் படிச்சி இப்போ ஆராய்ச்சி பண்றேன் தாத்தா’’

‘’மரபணு ஆராய்ச்சியா, என்கிட்டே ஒரு ரகசியம் இருக்கு, சொல்றேன் வாரும்’’

சிவா திடுக்கிட்டான் (தொடரும்)