Friday 21 November 2014

வெட்டித் தருணங்கள் - 1

முன்னுரை :

இது ஒரு நிழல் அல்ல, நிஜமும் அல்ல. இந்த கதையில் வருபவர்கள் என் கற்பனையில் உதித்தவர்கள் அல்ல. அன்றாடம் இவர்களுடன் எழுத்து மூலம் மட்டுமே பழகி இருக்கிறேன் என சொல்லவும் முடியாது. இருப்பினும் திடீரென இவர்களை எல்லாம் கதை மாந்தர்கள் ஆக்கினால் என்ன என எனக்குத்  தோணியது. அதன் விளைவாக இந்த நாவல் எழுதத் தொடங்கினேன். எவரேனும் இந்த கதைப் பாத்திரம் நான்தானா என என்னிடம் கேட்பீர்களேயானால் எனக்குத் தெரியாது.

கதைக்கான கரு என்னவாக இருக்கும் என்றே நான் யோசனை செய்யாமல் எழுதத் தொடங்கிய கதை இது. எப்போது பார்த்தாலும் அன்புதனை மையமாக வைத்தே எழுதி முடித்தாகிவிட்டது. கதை எழுதி முடிக்கும் முன்னரே எழுதிய முன்னுரையும் இதுதான்.

அன்புடன்
இராதாகிருஷ்ணன்
--------------------------------------------------------------------------------------------------------------------
1.

''அம்மா எனக்கு ஒரு லேப்டாப் வாங்கித் தருவியா?''

''காசுக்கு எங்கடா போறது?''

''அப்பாட்ட கேளுமா''

எனது ஆசையை அம்மாவிடம் சொல்லிவைத்தேன். அம்மா எரிச்சலாக என்னைப் பார்த்தார்கள். இப்போதுதான் பொறியியல் துறையில் முதலாம் வருடம் சேர்ந்து இருக்கிறேன். எனது வீட்டில் இருந்து அரை மணி நேரத்தில் கல்லூரிக்கு சென்று விடலாம். முதல் நாள் கல்லூரியில் நிறைய பேர் கைகளில் விலை உயர்ந்த மொபைல் போன்கள்  வைத்து இருந்தார்கள். எனக்கு ஒரு பாடாவதி போன் அப்பா வாங்கி தந்து இருந்தார். என்னை எப்படியாவது மருத்துவர்  ஆக்கிட வேண்டும் என அப்பாவும் அம்மாவும் போராடினார்கள். நான் பொறியியல் துறைக்குத்தான் போவேன் என அடம் பிடித்தேன். நான் நினைத்ததுதான் நடந்தது.

என்னுடன் உடன் பிறந்தவர்கள் மூன்று அக்காக்கள். பையன் வேண்டும் என வேண்டி பிறந்தவன் நான். ஒரு அக்காவிற்கு மட்டும் திருமணம் முடிந்துவிட்டது. அவர்களைப் பற்றி எல்லாம் எனக்கு இப்போது பேச விருப்பம் இல்லை.

என்னை கொக்கு போகுது பாரு என கேலி பண்ணாதவர்கள் எவருமே எனது ஊரில் இல்லை. நானும் ஆமா நான் கொக்குதான் என சைக்கிளில் பறந்து செல்வேன். சிலரை அடித்து துவைத்து இருக்கிறேன். இருந்தாலும் போடா கொக்கு எலும்பு உடையப்போகுது என கேலி பேசுவார்கள்.

நான் விஜய் ரசிகன். எனக்கு கமல் அஜீத் ரஜினி விக்ரம் சூர்யா ஆர்யா எல்லாம் கொஞ்சம் கூடப் பிடிக்காது. நான் பத்தாவது படிக்கும்போது விஜய் குறித்து கேலி பேசியவனை பல்லை பெயர்த்து இருக்கிறேன். என்னை கேலி பேசியவர்களை விட விஜயை கேலி பேசினால் என்னால் பொறுத்துக் கொள்ள இயலாது. இதோ என் கையை பாருங்கள். இளைய தளபதி விஜய் என பச்சை குத்தி இருக்கிறேன். நீங்களும் குத்திக் கொள்ளுங்கள். வேறு எவர் ரசிகராக நீங்கள் இருந்தாலும் என்னிடம் விஜய் பற்றி மட்டுமே அதுவும் மிகவும் உயர்வாக பேச வேண்டும், இல்லை என்றால் என்னிடம் பேசக்கூடாது.

நான் ஏ  ஆர் ரகுமானின் பரம விசிறி. என்னமோ இளையராஜாவாம், என் அப்பா இளையராஜா குறித்து நிறைய பெருமை பேசுவார். இளையராஜா பாட்டு கேட்டால்தான் தூக்கம் வரும் என சொல்வார். நான் ரகுமான் பாட்டு கேட்டுதான் தூங்குவேன். இளையராஜா பாடல் என்றால் எனக்கு அறவேப் பிடிக்காது என்றில்லை, பிடிக்காது.

மற்றொன்று நான் பெரியாரின் தீவிர விசிறியும் கூட. பெரியாரின் கொள்கைகளை பதினோராம் வகுப்பில் படிக்க ஆரம்பித்தேன். அன்றிலிருந்து கோவிலுக்கு செல்வதை தவிர்த்தேன். இருந்தாலும் வம்படியாக கோவிலுக்கு அம்மா அழைத்துப் போவார்கள். அங்கு வரும் இளம் பெண்களை சைட் அடிப்பது என்  வழக்கம். என் அக்காக்கள் என்னடா பார்வை அங்க என திட்டுவார்கள். அந்த பொண்ணு அழகா இருக்காக்கா எனும் எனது வெள்ளேந்தி பேச்சு வீட்டில் அப்பாவிடம் அவ்வப்போது மொத்துகள் பெற்றுத் தரும். அதனால்தான் எனக்கு அவர்கள் குறித்து பேச விருப்பம் இல்லை. சதிகார அக்காக்கள்.

எனக்கு இந்த மதம் சாதி எல்லாம் அறவேப் பிடிக்காது. அதனால் நாங்கள் எந்த ஆளுங்க என நீங்கள் தெரிந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.

''என்னடா லேப்டாப் கேட்டியாமே''

''ஆமாம்பா''

''எவ்வளவுடா ஆகும்''

''ஒரு முப்பதாயிரம் ஆகும்பா, லேப்டாப் வசதியா இருக்கும்பா''

''சரிடா வாங்கித்தாரேன்''

அப்பாவின் பழக்கம் இதுதான். தனது பிள்ளைகளுக்கு என எதுவும் குறை வைக்கமாட்டார். எனது பிறந்தநாள் 23 மார்ச். குறித்து வைத்துக்கொள்ளுங்கள். வருடம் தவறாமல் நீங்கள் எனக்கு வாழ்த்து சொல்லவேண்டும்.

''பள்ளிக்கூடத்தில தந்த லேப்டாப் மாதிரி இதை பண்ணின, கொன்னுருவேன்''

''இல்லைப்பா, பத்திரமா பாத்துக்குவேன்''

''பொண்ணுகளுக்கு வாங்கித் தராம இவனுக்கு மட்டும் என்ன பவிசு''

''விடுடீ, ஆசைப்படுதாம்ல, அவக கேட்கலைல''

எனக்கு சந்தோசம் பொங்கியது. எனது ஊர் திருநெல்வேலி பக்கம். கிராமத்தின் பெயர் எல்லாம் உங்களுக்கு சொல்லமாட்டேன். நீங்கள் என்னைத் தேடி வந்துவிட்டால் நான் என்ன பண்ணுவது. அதனால் திருநெல்வேலி போதும்.

லேப்டாப் எந்த பிராண்ட் வாங்கலாம் என யோசித்தேன். என்ன வாங்கலாம் சொல்லுங்க?

(தொடரும்)



Thursday 20 November 2014

திருமணத்தை வெறுக்கும் பெண்கள் - 2

ஒரு மணி நேரத்தில் அம்மா என்னை எழுப்பினார். இப்ப தலைவலி எப்படி இருக்கிறது என்றவரிடம் பரவாயில்லைமா என்றபடி எழுந்தேன். சீக்கிரம் கிளம்பு என்றவரிடம் நாளைக்குப் போகலாம்மா என்றதும் நாளைக்கு எனக்கு வேற வேலை இருக்கு நீ கிளம்பு என்றார். முகம் கழுவி கிளம்பினேன். சிலர் தம்பதிகளாக சிலர் குழந்தைகளுடன் திருமணமானவர்கள் நிறைய கண்ணில் பட்டார்கள். முதலில் சேலை கடைக்குப் போனார் அம்மா. சனிக்கிழமைக்குத் தேவையானதை வாங்கினார் அம்மா. தலைவலி மீண்டும் தலையெடுத்தது.

வீட்டிற்கு வந்தபோது இரவு 9 மணி, அப்பா வந்து இருந்தார். நான் தலைவலி என சொல்லிவிட்டு நேராக தூங்கப் போய்விட்டேன். இரவு ஒரு மணி இருக்கும். என்னோட தோழி ஒருத்தி அழைத்தாள், தூக்க கலக்கத்தில் என்னடி என்றேன். பணம் கொஞ்சம் வேணும்டி நாளைக்கு பத்து மணிக்கு உன் ஆபிஸ் பக்கம் வரேன் என்றவளின் குரலில் பதட்டமும் நடுக்கமும் தெரிந்தது. என்னடி பிரச்சினை எவ்வளவு வேணும் என்றேன். பத்தாயிரம் வேணும், காலையில் எல்லா விபரங்கள் சொல்கிறேன் என போனை வைத்துவிட்டாள்.

தூங்க முயற்சித்து என்ன காரணம் என தெரியாமல் தூங்காமல் தவித்தேன். எப்படி தூங்கினேன் என தெரியாது.அம்மா என்னை எழுப்பிவிட்ட பின்னர் அவசரம் அவசரமாக கிளம்பி ஏடிஎமில் பணம் எடுத்துக்கொண்டு அலுவலகம் போனேன். பத்து மணிக்கு அவள் வந்து இருந்தாள். என்னடி இப்படி படபடப்பா இருக்க என்றதும் வீட்டுல கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றாங்க என்னக்கு பிடிக்கலைன்னு சொன்னேன், கேட்கமாட்றாங்க அதான் மதுரைக்கு போறேன், போயிட்டு விபரம் சொல்றேன் என பணத்தை வாங்கிக்கொண்டு எனது கைகளை  பிடித்துக் கொண்டாள். அவள் எனது பேச்சை கேட்கும் மனநிலையில் இல்லை. அவளது வலி எனக்குள்ளும் இருந்தது. ஆனால் என் அப்பாவை நினைக்கையில் எனக்கு அழுகை வந்தது. மிகவும் கண்டிப்பானவர்.என்னிடம் நீ தைரியம் மிக்கவள் என பிறர் சொன்னது பொய் என்றே தோணியது. என் தோழியின் தைரியம் குறித்து எனக்கு பொறாமையாகவும் இருந்தது. சரியாக நாலு மணிக்கெல்லாம் அவள் அழைத்தாள். ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் தங்க ஏற்பாடு பண்ணிட்டேன், இந்தா வேற நம்பரு யாருட்டயும் தராதே என்றவள் நன்றி சொல்லி வைத்தாள். நீ பண்றது தப்பு என அவளிடம் சொல்லும் முன்னர் அவள் எண்கள் தந்து கொண்டிருந்தாள். எழுதி வைத்தேன். எனக்கு அன்று இரவு விபரீத ஆசை தோணியது.

தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த அம்மா அப்பாவிடம் யாரு மாப்பிள்ளை என்றேன். சனிக்கிழமை வரப்ப பார்த்துக்கிரலாம் என்றார் அப்பா. அம்மாவை தனியாக அழைத்துக் கேட்டால் எனக்கு தெரியாதுடி, ஏன்டி பறக்கிற ரெண்டு நாளு தானே பொறு  என்றார். அங்கே என்ன சத்தம் என அப்பா சத்தம் போட்டார். மாப்பிள்ளை யாருன்னு கேட்கிறா என்றார் அம்மா. அம்மா நாடகம் பார்க்கப் போனார் நான் ஏமாற்றத்துடன் மாடிக்கு போனேன்.

திருமணம் குறித்த கனவுகள் எனக்கு கொஞ்சம் கூட இல்லை. எனக்கு ஆண்கள் குறித்து எவ்வித வெறுப்பும் இல்லை. எனக்கு சுதந்திரமாக இருக்கப் பிடித்தும் முடியாமல் போனது கூட காரணமாக இருக்கலாம். ஆனால் இப்போதைய நிலையில் இருந்து எப்படி தப்பிப்பது என எனக்குத் தெரியவில்லை. எப்படிபட்டவர் எனினும் ஏற்று வாழத்தான் வேண்டுமா என்பது எனக்கு புதிது அல்ல. அம்மா, அப்பாவை மீறி எதுவுமே செய்வதில்லை. என்னால் அப்படி இருக்க இயலுமா என்றால் இதோ தடுமாறிக்கொண்டு இருக்கிறேன். அன்புக்குரிய அப்பா எதற்கு இப்படி நடந்து கொள்கிறார் என எனக்கு சத்தியமாகப் புரியவில்லை. அப்பா தூங்கும் முன்னர் அவரிடம் பேச ஆவல் கொண்டேன். மணி பன்னிரண்டு தாண்டியது. அம்மா அங்கேயே உறங்கிக்கொண்டு இருந்தார். அம்மா அப்பா இல்லாமல் தனியாக சென்று தூங்கியது இல்லை. தொலைகாட்சி அணைக்கப்பட்டது. எழுந்திரி என அப்பா சொன்னதும் அம்மா எழுந்து தூங்க வந்தார்கள். என்னம்மா தூங்கலையா என்றார் அப்பா.

கல்யாணம் வேணாம்பா என்று நான் சொன்ன பார்வையில் எனது உடல் கொண்ட நடுக்கத்திற்கு என்ன உவமை சொல்வது. உடனே போம்மா தூங்கு என்றார். என்னுடன் படித்த நண்பர்கள் தோழிகள் அதில் காதல் சொன்ன சிலர் என் நினைவுக்கு வந்து போனார்கள். என்னோட காதலை உதாசீனப்படுத்துறல என அழுத ரமணன் முகம் என் கண் முன்னால் வந்தது. கல்யாணம் பண்ண முடியாது நீ வேணா காதலி என்றே சொன்னாலும் அவன் கேட்கவில்லை. வேறு எவரையாவது காதலித்து திருமணம் பண்ணுவேன் என சவால் விட்டுப் போனான். அவனுக்குள் அப்போது ஏற்பட்ட வலி எனக்கு ஏற்பட்டுக்கொண்டு இருந்தது. வலி அடக்கிப் பழகிக் கொண்டு இருந்தேன்.

தோழியின் பெற்றோர்கள் நான் வேலைக்கு செல்லும் முன்னரே என்னை தேடி வந்து விட்டார்கள். தங்கள்  மகள் குறித்து கேட்டார்கள். எனக்கு பொய் சொல்ல விருப்பமில்லை. அவர்கள் இருவரிடம் என் தோழியின் மனம் குறித்து சொல்லி வேலை தேட மதுரை சென்று இருப்பதாக சொல்லி வைத்தேன். பாதகத்தி பிடிக்கலைன்னா சொல்ல வேண்டியதுதானே, நல்லவேளை அவளோட நம்பர் வேலை செய்யலை வேற நம்பர் இருந்தா கொடு பேசணும் என்றார்கள். ஆபிஸ்ல இருக்கு தரேன் என எனது நம்பரை அவர்களிடம் தந்து வைத்தேன்.

விபரம் கேட்ட அம்மாவிடம் எல்லா கதையும் சொன்னேன். நீ ஏண்டீ ஓடலை என அம்மா கேட்டபோது என் விழிகளை என்னால் நம்பவே இயலவில்லை. அம்மா? ஆமாம்டி நீ எதுக்கு ஓடலை  என்றபோது அப்பா அங்கு வந்து நின்றார். யாரு எதுக்கு ஓடினா என அப்பா கேட்டதும் அம்மா எல்லா கதையும் சொனனர். அப்பா பார்த்த பார்வையில் நடுநடுங்கிப் போனேன். நான் பெத்த பிள்ளைடி  எப்படி ஓடுவா என கர்ஜித்து வெளியில் சென்றார். அம்மா என்னிடம் எதற்கு தோழியை தடுக்கவில்லை என என கேட்டபோது பதில் சொல்ல இயலாமல் தவித்தேன். இதுதான் நீ பழகினதுக்கு அர்த்தமா என்றபோது எனக்குப் பிடிக்காத கல்யாணத்தை எதுக்கு பண்ணி வைக்கிற என்றேன். அது வேற இது வேற. ஒழுங்கா அந்த புள்ளைய வீடு வந்து சேர சொல்லு என்றார். வேலைக்கு வந்து தோழியிடம் விபரம் சொன்னேன். ஏன்டி  இப்படி பண்ணின  என்றவளிடம் நீ ஊருக்கு வா என்றேன்.

அதற்கு அவள் அவங்க என்னை கொன்னு போட்டுருவாங்க என புலம்பினாள். நம்பரை தொலைச்சிட்டேன் என பொய் சொல்லு என்றவளின் குரல் உடைந்து இருந்தது. அவளுக்கு அக்கா அண்ணன் தம்பி உண்டு. இழப்பு கடினம் எனினும் தாங்கிக் கொள்ளக்கூடும். அவளது அம்மா எனக்கு அழைத்தார். அவள் நம்பர் மாறிவிட்டது அழைத்தால் சொல்கிறேன் என பொய் சொன்னேன்.

சனிக்கிழமை வந்தது. (தொடரும்) 

Thursday 13 November 2014

திருமணத்தை வெறுக்கும் பெண்கள் - 1

எனக்கு கல்யாணம் வேண்டாம் என அம்மாவிடம் சொல்லிக்கொண்டு இருந்தேன். கல்யாணம் பண்ணாமல் பெண்ணால் வாழ இயலாது என்றார் அம்மா. இயலும் என்றேன். ஒழுங்கா சொன்னபடி கேளு என அம்மா திட்ட ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிவிட்டது. நெருங்கிய பள்ளித்தோழிகள், கல்லூரித்தோழிகளில் ஒரு திருமணம் இன்னும் சில மாதங்களில்  நடைபெற இருக்கிறது. அதை அம்மா காரணம் காட்ட ஆரம்பித்து இருந்தார்கள். அப்பா ஏதும் சொல்லாமல் இருந்தது எனக்கு ஒரு மன ஆறுதல்.

எனக்கு வயது 23தான் ஆகிறது. முதுநிலை படிப்பு முடித்து நல்லதொரு வேலையில் இருக்கிறேன். என்னிடம் சென்ற வருடம் ஒருவன் என்னை மிகவும் விரும்புவதாக சொன்னான். விரும்பிக்கொண்டிரு, திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை என்றேன். நீ அழகாக இருக்கிறாய் என்பதற்காக எனது பார்வையை குறை சொல்லாதே என திட்டிவிட்டான். சிலமுறை முயற்சி செய்தான். எனது பிடிவாத குணம் அவனை என்மீது பிடிமானமில்லாமல் செய்தது.

கல்யாணம் பண்ணும் ஆசையில்தான் பலரும் காதலிக்கவே விரும்புகிறார்கள் என்பதுதான் எனக்குத் தெரிந்தது. அன்று வேலை முடித்து வீடு திரும்பினேன். வழக்கம்போல காபி, பலகாரம் அம்மா செய்து கொடுத்தார்கள். நம்ம வம்சம் விருத்தி அடைய வேணாமா, பெத்தது ஒண்ணே ஒண்ணு  என்றார் அம்மா. ஏம்மா நீங்க பெத்துக்கோங்க அவளுக்கோ, அவனுக்கோ கல்யாணம் பண்ணி வம்சம் விருத்தி பண்ணுங்க என நான் சொன்னது அம்மாவுக்கு சற்று வலித்திருக்க வேண்டும். ஏன்டீ இப்படித்தான் நீ பேச கத்துக்கிட்டயா என அம்மா அடுக்களைக்குப் போய்விட்டார். பாதி சாப்பிட்ட பலகாரத்தை விட்டுவிட்டு அடுக்களைக்குப் போனேன். அம்மா கோபத்துடன் இருந்தார்கள். எனக்கு கல்யாணம் பிடிக்கலைம்மா என்றேன். இங்க பாரு, நீ என்னைக்கு கல்யாணம்னு முடிவு பண்றியோ அன்னைக்கு என்கிட்டே பேசு என அம்மா சொன்னதும் சரிம்மா என வந்துவிட்டேன்.

அன்று இரவு அப்பா என்னை அழைத்தார். இந்த சனிக்கிழமை உன்னை பொண்ணு பார்க்க வராங்க, எங்கயும் போகாத என கண்டிப்புடன் சொன்னார். அப்பா என்றேன். எதுவும் பேச வேண்டாம் என சொன்னவரை  விட்டுவிட்டு அம்மாவை முறைத்துப் பார்த்தேன். அம்மாவின் முகத்தில் மகிழ்ச்சி. அன்று நிறைய அழுதேன். என்னால் அப்பாவை எதிர்த்துப் பேச இயலாது. எனது ஆசைகளுக்கு குறுக்கே நிற்காத அப்பா இன்று மட்டும் எப்படி? எனது வீங்கியிருந்த கண்கள் என் இரவின் அழுகையை பறைசாற்றிக் கொண்டு இருந்தது. என்னடி அழுதயா என்ற அம்மாவிடம் நீ சந்தோசமாக இருக்கேதானம்மா என் சாப்பிட்டுவிட்டே கிளம்பினேன். சீக்கிரம் வா, கடைக்குப் போகணும் என்ற அம்மாவின் குரல் எனக்கு ஏன்  கேட்டதோ?

என்னடி ஒருமாதிரி இருக்க என்ற அலுவலக தோழியின் கேள்விக்கு அழுதுவிடுவேன் போலிருந்தது. என்னை பொண்ணு பார்க்க வராங்க என்றேன். அதுக்கு ஏன்டீ  கவலைப்படற என்றவளுக்கு வேறேதும் பதில் சொல்ல தோணவில்லை. மனம் வேலையில் லயிக்கவில்லை. நிறைய தவறுகள் அன்று நடந்தது. தலைவலி வேறு வந்து சேர்ந்தது. சில மணி நேரத்தில் அலுவலகத்தில் இருந்த அனைவரும் வாழ்த்து சொல்ல ஆரம்பித்து இருந்தார்கள். அசட்டு சிரிப்பு சிரித்து வைத்தேன். ஒருமணி நேரம் முன்னதாக விடுப்பு எடுத்து வீடு வந்து சேர்ந்தேன். அம்மா எனக்காக காத்து இருந்தார். அதே காபி அதே பலகாரம், அம்மா தலைவலிக்குது என்றேன். உடனே காபியை எடுத்து போய்விட்டு சுக்கு காபி போட்டு வந்தார். அம்மா நான் கொஞ்சம் தூங்குகிறேன் என்றேன். கடைக்குப் போகணும்னு சொன்னேனே என்றவரிடம் ஒரு மணி நேரம் என சொல்லி தூங்கப் போனேன்.

(தொடரும்)