Friday 16 August 2013

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? - எகிப்தியர்கள்

பாபிலோனியர்கள் குறித்து பார்க்கும் முன்னர் எகிப்தியர்கள் பற்றி கண்டு கொள்வோம். தற்போதைய எகிப்தில் நடக்கும் கலவரங்களுக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து கொள்வோம். தற்போது எகிப்தில் என்னதான் நடக்கிறது என்பதற்கு மிகவும் சுருக்கமாக 'அரசு கொண்டு வரும் மத கட்டுபாடுகள் மீதான அதிருப்தி' என்றே பார்க்கப்படுகிறது. இதே எகிப்தில் தான் சில வருடங்களுக்கு முன்னர் முப்பது வருடங்கள் அரசாண்ட ஒருவரை விரட்டி அடித்தனர் மக்கள். நம்பிக்கையோடு ஒருவரை தேர்ந்தெடுக்க அவர் தலைவலியாக மாறுவதால் ஏற்படும் ராணுவ உதவியுடனான சீற்றங்கள். 

எகிப்து பிரமிடுகளுக்கு என பிரசித்தி பெற்றது. எகிப்து நைல் நதியால் நன்மை பெற்றது. எகிப்து வரலாற்றை இவ்வாறு பிரிக்கிறார்கள். கிட்டத்தட்ட ஆறாயிரம் வருடங்கள் முன்னர் தொடங்கி ஆயிரம் ஆண்டுகள் இருந்த நகட கால கட்டம். மேல் எகிப்து இது நைல் நதிக்கு இருபக்கத்தில் அமைந்த பகுதி , கீழ் எகிப்து இது தற்போதைய கைரோ போன்ற இடங்கள், என்றே பிரித்து இருந்து இருக்கிறார்கள். இவ்வாறு பிரிந்து கிடந்த இரண்டு பகுதிகளை ஒரே அரசாக பிரித்த சிறப்பு மேனேஷ் எனும் அரசரையே குறிக்கும். பரோ என்றே அரசரை குறிப்பிடுகிறார்கள். இந்த காலகட்டம் ஆயிரத்து அறநூறு வருடங்கள் நிலைத்தது, இதனை தினைட் கால கட்டம் என்கிறார்கள். அப்போதைய தலைநகரம் மெம்பிஸ். என்னதான் ஒன்றாக இணைத்தாலும் எப்போது பிரிந்து செல்லலாம் என்றே முனைப்புடன் இரண்டு பகுதிகளும் இருந்து இருக்கின்றன. 

பழங்கால அரசு. இந்த தினைட் காலகட்டத்திலேயே இந்த ஒரே அரசுதனை முப்பத்தி எட்டு பிரிவுகளாக பிரித்து இருக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் தான், கலை, கலாச்சாரம், மதம் எல்லாம் தோன்றி இருந்து இருக்கிறது. இந்த அரசர் சூரியனின் பிள்ளைகளாக போற்றப்பட்டும் இருக்கிறார்கள். இதன் காரணமாகவே பெரிய பிரமிடுகள், கல்லறைகள் எல்லாம் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. 

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் செலவழிக்கப்பட்டு சக்கரா எனும் இடத்தில் ஜோசெர் எனும் பிரமிடு நான்காயிரம் வருடங்கள் முன்னர் உருவாக்கப்பட்டது. அதற்கு பின்னர் ஐம்பது ஆண்டுகள் செலவழிக்கப்பட்டு ச்நேப்று எனும் பிரமிடு உருவாக்கப்பட்டது. நாற்பது ஆண்டுகளில் உருவான சாப்ஸ் பிரமிடு. உலக அதிசயங்களில் ஒன்றானபிரமிடு இது. இது கிசா எனப்படும் இடத்தில் வேறு இரண்டு பிரமிடுகளுடன் சேர்த்து கட்டப்பட்டது. இந்த பிரமிடுகள் அடிமைகளால் கட்டப்பட்டது அல்ல. மிகவும் கைதேர்ந்த கட்டிட நிபுணர்களால் கட்டப்பட்டதுதான் என்றே வரலாறு குறிக்கிறது. 

இந்த அரசர்கள் கடவுளை பெரிதும் போற்றி இருக்கிறார்கள். கடவுளை உயர்ந்த நிலையில் வைத்து மகிழ்ந்து இருக்கிறார்கள். இவர்களுடைய கடவுளுக்கு எல்லாம் தலைகள் விலங்கு தலைகளாகவே இருக்கும். இங்கே ஒரு ஒற்றுமையை குறித்தாக வேண்டும். விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் முதல் சில அவதாரங்கள் விலங்கு தலையை உடையதாகவே இருந்து இருக்கும். அப்படியே பரிணாமத்தை தொட்டு பார்த்தால் நமது மூதாதையர்கள் விலங்குகளாகவே இருந்து இருப்பதும், அதில் இருந்து பிரிந்த பிரிவுதான் நாம் மனித விலங்கு என்றும் சொல்லப்படுகிறது. 

கடவுளின் கலாச்சாரம் தொடங்கப்பட்ட எகிப்தில் நிறைய மத நிறுவனங்கள் வெவ்வேறு கடவுளை உருவாக்கி கொண்டன. ஒவ்வொரு கடவுளுக்கு என ஒரு கதை சொல்லப்பட்டது. அதில் மிக முக்கியமான கதை ஐசிஸ் ஒச்ரிஸ் பற்றியதாகும். ஒச்ரிஸ் உலகத்தையே கட்டுபாட்டில் வைத்து இருந்தபோது, அவரது பொறாமை கொண்ட சகோதரர் செட், ஒஸ்ரிசை துண்டு துண்டாக வெட்டி உலகில் எல்லா இடங்களிலும் சிதறிவிட்டானாம். இதை அறிந்த ஒச்ரிஸ் மனைவி ஐசிஸ் , ஒஸ்ரிசின் பிறப்பு உறுப்பு தவிர எல்லா பகுதியையும் எடுத்து ஒன்று சேர்த்தாளாம். அப்படி உருவாக்கப்பட்ட ஒச்ரிஸ் பாதாள உலகை காத்து வருகிறானாம். 

ஐசிஸ் மற்றும் ஒச்ரிஸ் மகன் ஹோரஸ் தனது மாமா செட் தனை எதிர்த்து போராடி இருக்கிறார். செட் மேல் எகிப்து கடவுளாகவும், ஹோரஸ் கீழ் எகிப்து கடவுளாகவும் இருந்து இருக்கிறார்கள். மேல் எகிப்து வளமானதும், கீழ் எகிப்து பாலைவனமாகவும் இருந்து இருக்கிறது. அனுபிஸ், தோத், கணும் போன்ற கடவுளர்கள் இருந்து இருக்கிறார்கள். அனுபிஸ் ஒச்ரிஸ் பாகங்களை தனது தாயுடன் சேர்ந்து ஒன்று சேர்க்க உதவியவர். தோத் நமது சித்திரகுப்தன் போல. பாவ புண்ணியங்களை எழுதுபவர். கணும் நமது பிரம்மா போல. மக்கள், உயிரனங்கள் என அனைத்தையும் தோற்றுவிப்பவர். இவர் உயிரை உருவாக்குவதுடன் ஆத்மாவையும் அதனுடன் சேர்த்து வைப்பவர். நமது நாட்டில் இருப்பது போலவே ஆத்மாவுக்கு அழிவில்லை என்றே நம்புகிறார்கள். 

இப்படி இருந்த காலகட்டத்தில் தெற்கில் இருந்து தீபேஷ் வடக்கில் இருந்து ஹெரக்லாபோளிஸ் போன்றவர்கள் எகிப்தின் இந்த பழைய அரசினை சிதறடித்தார்கள். இவர்களுக்கென தனிக்கடவுள் எல்லாம் இருந்து இருக்கிறது. இந்த காலகட்டம் மத்திய அரசு. நேண்டுஹோடேப் எனப்படும் தீபேஷ் அரசர் சிதறடிக்கப்பட்ட அரசாங்கத்தை ஒன்றிணைக்க பாடுபட்டார். அவர் செய்த முயற்சி வெற்றி பெற்று அமுன் எனப்பாடும் கடவுளை தலைமையாக கொண்டார்கள். இதற்கு காரணம் அமேநேம்ஹெட் எனப்படும் அரசர். இவரது காலத்தில் எகிப்தில் வியாபாரம் பெருகியது. நிறைய கோவில்கள், பிரமிடுகள் எழுப்பப்பட்டன. மத்திய கிழக்கு பகுதியில் எகிப்து கோலோச்சி விளங்கியது. ராணுவம், விவசாயம், அணைகள் கட்டுதல் என ஒரு வலிமைமிக்க வளமைமிக்க பேரரசாக எகிப்து விளங்கியது. ஆனால் இது அதிக நாள் நிலைக்கவில்லை. 

கிழக்கு பகுதியில் இருந்து ஹைகொஸ் எனப்படும் மக்கள் இந்த பேரரசுக்குள் நுழைந்து அவரின் கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தார்கள், இருப்பினும் அவர்கள் எகிப்து கலாச்சாரத்தை பின்பற்றினார்கள். எகிப்தில் இருந்த வம்சாவளிகள் பெரும் எதிர்ப்பை காட்டின. அஹ்மொசே எனப்படும் அரசர் இந்த ஹைஹோச்களை விரட்டி அடித்தார். இவர் பதினெட்டாவது பரம்பரையாகும். அப்போது புதிய அரசாங்கம் உருவானது. துத்மொசிஸ் எனப்படும் அரசர் சூடான், சிரியா போன்ற பகுதிகளை எல்லாம் கைபற்றினார். ஆப்ரிக்கா நாடுகளில் இருந்த வளத்தை தங்களுடன் இணைத்து கொண்டார். இவரின் மரணத்திற்கு பின்னர் துத்மொசிஸ் மகள் ஹெட்ஷ்புட் அரசு பொறுப்பிற்கு வந்தார். தன்னை மாபெரும் அரசர், தான் ஒரு ஆண் என அறிவித்தார். இவரது அரசாட்சியில் எகிப்து கோலோச்சி விளங்கியது. பெண் என்ற ஒரு காரணத்தினால் இவரது காலகட்டத்தை பூசி மேழுகிவிட்டார்கள். 

அமேன்தொப் மூவாயிரம் வருடங்கள் முன்னர் அரச பதவிக்கு வந்தார். இவரது சிலை இன்னமும் இருக்கிறது. இவரது கால கட்டத்தில் கட்டிட கலை மாபெரும் சிறப்பு பெற்றது. இவரது காலகட்டத்தில் ஒரே கடவுள் எனும் தத்துவம் கொண்டு வந்ததோடு பொற்காலம் என போற்றப்படும் அளவிற்கு போர் என இதுவும் இல்லாமல் விளங்கியது. 

மனித குல வரலாற்றிலேயே மிகவும் பழமையான, அனைவருக்கும் தெரிந்த ஒரு எகிப்திய கலாச்சாரம் மூவாயிரம் வருடங்கள் மேலாக சிறப்பு பெற்று விளங்கியது. அப்படிப்பட்ட எகிப்தியர்கள் இன்றைய நிலை வருத்தத்திற்கு உரியது. எகிப்தியர்கள் பற்றி மேலும் தொடர்வோம்.

(தொடரும்)

Thursday 15 August 2013

தலைவலி தந்த தலைவா

தமிழகத்தில் மட்டும் இந்த 'தலைவா' எனும் தமிழ் திரைப்படம் வெளியாகவில்லையாம். அதற்கான காரணங்கள் இவையிவையென 'பொழுதுபோக்கு' ஊடகங்கள் வரிசைபடுத்திக் கொண்டே இருக்கின்றன. 

முதல் காரணம் தலைவா திரைப்படம் வெளியிடப்பட்டால் தியேட்டர்களுக்கு குண்டு வைப்போம் என ஒரு 'சித்தரிக்கப்பட்ட' மிரட்டல் செய்தி. அதைத் தொடர்ந்து தியேட்டர்களுக்கு எங்களால் பாதுகாப்பு தர முடியாது என கைவிரித்துவிட்ட 'பம்மல்' தமிழக காவல்துறை. அதைகண்டு பயந்து நடுங்குவதை போல 'பாவலா' செய்த திரையரங்கு உரிமையாளர்கள். 

இரண்டாவது காரணம் தலைவா படத்தின் கதாநாயகன் விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் விடுத்த 'நான் அண்ணா, என் பையன் எம் ஜி ஆர்' எனும் அறிக்கை. 

மூன்றாவது காரணம் 'அதிமுக வெற்றி பெற அணில் போல உதவினோம்' எனும் கதாநாயகனின் 'மறக்கப்பட்டு பின்னர் தூசி தட்டப்பட்ட' தன்னடக்கமான அறிக்கை. 

ஆனால் பாவம் தயாரிப்பாளர். திரைப்படத்தின் மூலம் தமிழகத்தின் அரசியல் தலைவிதியை மாற்றி அமைத்தவர் எம் ஜி ஆர். அதன் காரணமாகவே திரைப்படத்தின் மூலம் பெரும் புகழ் அடைபவர்கள் தமிழக முதல்வர், இந்திய பிரதமர் எனும் கனவு காண்கிறார்கள். தன்னை ஒரு தலைவனாக சித்தரித்துக் கொண்டு கனவு காண்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது? 

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தான் தலைவனாக வேண்டும் எனும் ஒரு சிறு எண்ணம் இருக்கத்தான் செய்கிறது. மேலும் பலர் நாட்டிற்கு நல்லது செய்ய தலைவன் எனும் பதவி ஒரு அவசியமான ஒன்று என்றாகிறது. குடும்பத் தலைவர், ஊராட்சி மன்ற தலைவர், பேரூராட்சி மன்ற தலைவர், ஒன்றிய தலைவர், மாவட்ட தலைவர் இப்படி தலைவர் எனும் தலைவா கோசம் எங்கும் ஒலித்து கொண்டுதானிருக்கிறது. 

இப்படி இத்தனை தலைவர் என இருந்தாலும் அரசியல் தலைவர் எனும் 'தகுதியற்ற' சிறப்பு தலைவர் பதவி ஒரு மாநிலத்தின், நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தி அதற்கு உண்டு. காங்கிரஸ், பாஜக திமுக, அதிமுக என கட்சிகளின் தலைவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாகவே பார்க்கப்படுகிறார்கள்.

இப்படி தலைவர் ஆசை விஜய்க்கு இருப்பது என்னவோ உண்மைதான். மக்களுக்கு உதவ வேண்டும் எனும் தனது கனவு சாத்தியப்பட நினைக்கிறார். திரைப்படத்தில் இருந்து எண்ணற்றோர் அரசியல் உலகுக்கு வந்து வெற்றி பெற முடியாமல் தவித்து கொண்டு இருக்கிறார்கள். இதன் காரணமாகவே கமல் அரசியல் உடம்புக்கு ஆகாது என ஒதுங்கி கொண்டார், ரஜினி அரசியல் மனசுக்கு ஆகாது என அறிக்கையுடன் நிறுத்திக் கொள்கிறார். ஆனால் விஜயகாந்த், விஜய டி ஆர் போன்றோர் எல்லாம் ஒரு கட்சியை நடத்தி அந்த கட்சிக்காக அங்கீகாரம் தேடி தேடி தங்களை தொலைத்து கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு அரசியல் கட்சி நடத்த ஏகோபித்த மக்கள் ஆதரவு மட்டும் அல்லாது பணம் வேண்டும், ஆள் பலம் வேண்டும், மிக மிக முக்கியமாக அடிமைகள் வேண்டும். இப்படி விசுவாசிகள் எனும் கொத்தடிமைகள் இல்லாத பட்சத்தில் ஒரு கட்சியானது சர்வ வல்லமை பொருந்தியதாக ஆகாது. இதையெல்லாம் தயார் செய்ய மனோதிடம் வேண்டும். எம்ஜி ஆர் செய்து காட்டினார், ஜெயலலிதா அதை பின்பற்றுகிறார். ஜெயலலிதாவுக்கு பின்னர் அதிமுகவின் நிலை ஒரு கேள்விக்குறிதான். அதற்கு இன்னும் பல ஆண்டுகள் இருக்கின்றன. 

தமிழகத்தில் ஓரளவுக்கு எல்லாமே தன்னிறைவு அடைந்ததாக இருக்கிறது. மின்சாரம் இல்லை என்றாலும் மின்சாரம் இல்லாமல் வாழப் பழகி கொள்ளும் மனப்பக்குவம் உண்டு. சகித்து கொள்ளும் மனோபாவம் அதிக அளவில் தமிழக மக்களிடம் உண்டு. இல்லையெனில் ஒரே மாதிரியான திரைப்படங்களை மீண்டும் மீண்டும் கண்டு ரசிப்பது எப்படி? மீண்டும் மீண்டும் அதே அரசியல் கட்சிகளை மாற்றி மாற்றி தேர்ந்தெடுப்பது எப்படி? எனவே இங்கே தமிழகத்தில் ஒரு போராளி அவசியமில்லாமல் போகிறது. 

விஜய் நடித்த தலைவா எனும் திரைப்படத்தில் முதலும் கடைசியுமாய் 'Time to Lead' என்பது ஒரு அச்சுறுத்தலான விசயமாக தமிழக அரசுக்கு இருந்து இருக்குமா என்பது சந்தேகமே! ஆனால் படைப்பாளிகளை ஒடுக்க வேண்டிய அவசியம் என்ன! அரசியல்வாதிகளை, அரசியல் கட்சிகளை கேவலப்படுத்தி எத்தனையோ படங்கள் வந்து இருக்கின்றன. அவை எல்லாம் கண்டு கொள்ளாமல் இந்த படத்திற்கு அப்படி என்ன ஒரு தடை. ஆந்திரா, கேரளா, வேறு நாடுகள் என இந்த திரைப்படம் திரையிடப்பட்டு இருக்கிறதே. பாவம் இரண்டு விஜய்கள். தமிழக மக்கள் ஒரு 'முற்பாதி பொழுபோக்கு' படத்தை முழுவதுமாக புறக்கணிக்க செய்துவிட்டார்கள் திரையரங்கு உரிமையாளர்கள்.

தலைவா எனும் திரைப்படத்தின் கதை ஒரு அரசியல் களத்தை சார்ந்தது. அது 'உடன் இருந்து குழி பறிப்போர்' வகையை சார்ந்தது. 'துரோகத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட கதை வடிவம் இது' மும்பையில் தொடங்கி மும்பையில் முடிகிறது. முதல் பாதி காதல் கலந்த நகைச்சுவை, இரண்டாம் பகுதி பழிவாங்கல் படலம். துப்பாக்கிகள் பெருகி போன இந்த புவியில் இன்னும் கத்திகளுக்கு கொண்டாட்டம் தான். 

கதாநாயகிகள் பொய் சொல்லும் பேர்வழிகள் என்பதை எப்போதுதான் தமிழ் சினிமா மாற்றி கொள்ளுமோ? சகிக்க முடியவில்லை. வருத்தப்படாத வாலிபர் சங்கங்கள்போன்றே ஆஸ்திரேலியாவில் கூட இருக்கத்தான் செய்கிறதாம். கடல் கடந்து வணிகம் திரட்ட சென்றவர்கள் 'கும்பலாக' காதலுக்கு அலைவது கேலி கூத்து. 

அடேங்கப்பா, ஆஸ்திரேலியாவில் ஒரு அரைகுறை ஒரு ஹோட்டல் நடத்தி அதன் மூலம் கதாநாயகன் மனம் மயக்கி, அவரது தந்தையை வசப்படுத்துவது எப்படிப்பட்ட 'கிரியேட்டிவ் மூவ்'! மங்காத்தா எனும் திரைப்படத்தில் அஜீத் தனது காதலி மற்றும் தந்தையை ஏமாற்றுவார். இந்த கதையில் வேசம் போட்டு விஜய் ஏமாற்றபடுவார். எல்லாம் சரிதான். விசயங்களை சொல்லும் விதம் தான் படைப்பாளிகளிடம் வேறுபடுகிறது. 

அண்ணா! அன்னா ஹசாரே! படத்தின் தொடக்கத்தில் பல தலைவர்கள் பெயர் வருகிறது, அதில் போராளிகள் எல்லாம் வருகிறார்கள்.  அவர்களது பெயர்களை படிக்கும்போதே உடலில் 'ஜிவ்வென' உணர்ச்சி மேலிடுகிறது. எப்படிப்பட்ட தலைவர்கள், எப்படிப்பட்ட போராளிகள் அவர்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுத்த உயர்ந்த உள்ளங்கள் அவை, ஆனால் இப்போதைய தலைவர்கள் மக்களை ஒடுக்கவே தலை எடுக்கிறார்கள். 

விஜய், உங்களுக்குள் மக்களை வழி நடத்த வேண்டும் ஒரு எண்ணம் இருப்பின் அதற்குரிய உரிய முயற்சிகள் எடுத்தாக வேண்டும். படத்தில் காட்டியது போன்று நிஜ வாழ்வில் கூட சித்தப்பர்கள் எட்டப்பர்களாக இருப்பார்கள். எப்படி இருப்பினும் தலைவா எனும் பட்டம் பெரிய தலைவலிதான். 

அந்த தலைவலியை தாங்கி கொள்ளும் சக்தி இருப்பின் 'Time to Lead...'




Wednesday 14 August 2013

அஷ்டமாசித்திகளும் அகிலாண்டீஸ்வரியும் - 6

இலகிமா, அணிமா, மகிமா, கரிமா, பிராப்தி, பிரகஷ்யம், இசித்வம், வசித்வம் என்பதாக இந்த எட்டு சித்திகள் எண்ணங்கள் பற்றிய ஒன்றுதான். 

இசித்வம் எனும் சித்தியானது இறந்தவர்களை பிறக்க வைக்க கூடிய தன்மையது என்றே சொல்லப்படுகிறது. இந்த சித்தியின் மூலம் மொத்த உலகத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரக் கூடிய வல்லமை கிட்டும் என்றே சொல்லப்படுகிறது. இது கூட ஒருவகையில் சாத்தியம் என்றே கருதலாம். ஒரு தலைவனுக்கு கட்டுப்படும் தொண்டர்கள் இருப்பதை போல எல்லோரையும் வசீகரிக்கும் தன்மை கொண்டவர்கள் மூலம் இது சாத்தியம். ஆனால் இந்த உலகம் அப்படி ஒரு வசீகர தன்மை உடைய மனிதரையோ, சித்தரையோ இதுவரை கண்டதில்லை என்பதுதான் உண்மை. அப்படி இருக்கும் பட்சத்தில் எதற்கு ஒவ்வொருவரும் ஒரு தெய்வம் என கொண்டாட வேண்டிய சூழல் இருக்கிறது என்பது கேட்கப்பட வேண்டிய கேள்வி. தெய்வத்தன்மை உடைய சித்தி இது எனப்படுகிறது. 

வசித்வம் என்பது ஆளுமை, அதாவது பிற உயிரினங்கள், பிற கோள்கள் என இந்த பிரபஞ்சத்தையே கட்டுப்படுத்தக் கூடிய ஆளுமை. அறிவியலும் இதைத்தான் செய்ய முயற்சி செய்து கொண்டு இருக்கிறது. செயற்கை தனமாக செய்து விடுவது. விலங்கினங்கள், மனிதர்கள் என கட்டுபாட்டில் கொண்டு வந்து தனக்கு கட்டுப்பட கூடியவர்களாக மாற்றிவிடுவது. 

இத்தனை சித்திகள் எல்லாம் ஒரே ஒரு விசயத்தில் அடங்கி போக கூடியவை தான். எண்ணங்கள். சித்தர்கள் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி இருப்பவர்களாகவே இருந்து வந்து இருக்கிறார்கள். மாந்திரீகர்கள் எனப்படும் மந்திரவாதிகள் செய்யும் கண்கட்டு வித்தை போன்றது அல்ல இந்த சித்திகள். இந்த மந்திரவாதிகள் கூட தங்களது எண்ணங்களால் மட்டுமே அனைத்தையும் கட்டுபாட்டில் கொண்டு வருவதாக சொல்கிறார்கள். இதில் எத்தனை உண்மை என்பது எனக்கு புரியாத ஒன்று தான். 

தண்ணீரில் நடக்ககூடிய மனிதன். இதற்கு எத்தனயோ காரணங்கள் சொல்கிறார்கள். ஆனால் இவர் தண்ணீர் மீது நடந்தார் என்றே காட்டப்படுகிறது. ஆனாலும் இந்த சித்தர்கள் செய்த பல விசயங்கள் எப்படி விவாதத்திற்கு உரியதோ அதைப்போலவே இவரது செயல்களும் விவாதத்திற்கு உரியது என்றே ஒருவர் சொல்கிறார். அதாவது அனைவரும் மெய்மறந்து பார்த்து கொண்டிருப்பார்கள், அந்த வேளையில் வேறொரு விசயம் நடக்கும் என்றே சொல்லப்படுகிறது. 


இதனை நிரூபிக்கும் வகையில் ஒருவர் சொன்ன விசயம் இது. அதாவது எப்படி எல்லாம் மக்கள் ஏமாற்ற படுகிறார்கள் என்றே சொல்லப்படுகிறது. இவரது மந்திர ஜாலங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இதை கண்டு களித்து, இந்த திறமையை பாராட்டி செல்வது சரிதான், ஆனால் ஏமாற வேண்டிய நிர்பந்தம் எதுவும் இல்லை. ஐயோ ஏமாற்றுகிறார்கள் என கத்த வேண்டிய அவசியமும் இல்லை. அது மந்திரம், தந்திரம், மாயாஜாலம். அவ்வளவுதான். 


நம்மில் பலர் மந்திரவாதிகள் என தெரிந்து கூட, அவர்கள் செய்யும் மந்திரங்கள் தம்மை பாதிக்கும் என்கிற ஒரு மன பதட்ட நிலைக்கு சாமானியர்களை கொண்டு செல்வது மட்டும் அல்லாமல் உடலை பாதிக்கும் பொருள்களை இந்த மந்திரவாதிகள் சாப்பிட சொல்லி தந்துவிடுகிறார்கள். செய்வினை என்றெல்லாம் சொல்லி கிராமங்கள் அல்லோகலப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. 

நம்மிடம் இருக்கிறது சித்தி. அது நமது எண்ணங்களால் ஆனது சித்தி. இறைவன் மீது மனதை ஒருமுகப்படுத்தி நல்ல விசயங்களே நடக்கும், நல்ல விசயங்களை மட்டுமே செய்வோம் என்கிற உறுதிப்பாடு அவசியம். அனைவருக்கும் இறைவன் மீது பற்று வராது என்பதற்காக செய்யும் தொழிலே தெய்வம் என சொல்லி வைத்தார்கள். 

நமது செயலில், சிந்தனையில் எண்ணங்களை மேம்படுத்தி இவ்வுலகம் செழிப்புற வாழ்வோம். நன்றி வணக்கம். 

(முற்றும்)