Wednesday 26 September 2012

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 10

வெகு வேகமாக அருகில் வந்த அந்த ஆசிரியர் அவனது கன்னத்தில் பளாரென ஒரு அறை விட்டார். எனக்கு திடுக்கென இருந்தது.

''நீங்கள் என்னை அறைந்ததற்கான காரணம் எனக்கு புரிகிறது. ஆனால் நீங்கள் நினைத்து இருந்தால் என்னை அறையாமல் இதே காரணத்திற்காக இருந்து இருக்கலாம் என்றான் எனது அருகில் இருந்தவன்''.  அந்த ஆசிரியர் மறு பேச்சு பேசாமல் அப்படியே நின்றார். 

''என்னை அடித்த குற்றத்திற்காக உங்கள் மீது என்னால் புகார் செய்ய இயலும், ஆனால் நான் அப்படி ஒன்றும் செய்யப் போவதில்லை'' என்றான் அவன் மேலும். சிறிது நேரம் அங்கு நின்றவர் வேறு எதுவும் பேசாமல் அவரது இருக்கைக்கு சென்றார் அந்த ஆசிரியர். 

இருக்கையில் அமர்ந்தவர் வேறு எதுவும் பேசவில்லை. வகுப்பு மிகவும் அமைதியாக இருந்தது. அப்பொழுது முன் வரிசையில் இருந்த ஒருவன் சார், நீங்கள் சொல்ல வந்ததை சொல்லி தொடரலாம் என அவர் சொன்ன வாசகத்தை அப்படியே அச்சு பிறழாமல் சொன்னான். 

''இதோ இவனுக்கு என்னைப் பிடிக்காமல் போவதற்கு சில காரணங்கள் உண்டு. அதைப்போலவே என்னை பிடிக்கும் எனில் அதற்கும் சில காரணங்கள் உண்டு. இந்த உயிரினங்களின் எண்ணங்கள் விசித்திரமானவை' என அவன் சொல்லி முடிக்க மீண்டும் எனது அருகில் இருந்தவன் எழுந்து 'நீயும் அவரோட சேர்ந்து வெட்டித்தனமா பேசாதடா' என்றான். 

மொத்த வகுப்பும் கொல்லென சிரித்தது. இம்முறை இவனுக்கு எந்த அறையும் விழவில்லை. We always look for the reasons for our actions. For certain kind of actions, we blame it on something rather than own it ourselves. This is an extra-ordinary behaviour by human beings in the world to protect them from criticism and have a security as well. When I questioned our professor, he could not answer my comment, but he tried to distract by acting in another way. Action for a reason, reason for an action, this is not a proper way. 

அருகில் இருந்தவன் மடமடவென பேசி முடித்ததும் எனக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் போலிருந்தது. நீ தமிழ் மீடியமா என்றேன். ஆமாம் என்றான் அவன். நானும் தான், எனக்கு நீ சொன்னது விளங்கவே இல்லை என்றேன். முறைத்துப் பார்த்தான். இவன் பேசியதை மாணவர்களுக்குள் பேசிக்கொண்டு இருந்தார்கள். 

எதற்கு முறைக்கிற? என்றேன். நான் சொன்னது விளங்கவில்லைன்னு சொன்னியே என்றான். அப்போ முறைக்கிறதுக்கு அது ஒரு காரணம்! என்று நமட்டு சிரிப்பு சிரித்தேன். For an action, there will be a reaction. Action can't be only reason for that reaction. என்றான். எனக்கு ஜிவ்வென கோபம் வந்தது. கோவத்தை அடக்கி வைத்து கொண்ட வேளையில் ஆசிரியர் எழுந்தார். 

''எண்ணங்களை கட்டுபாட்டுக்குள் வைத்துக் கொண்டிருந்தால் காரணமும், காரியமும் அடிபட்டு போகும், அதை எனக்கு மிகவும் அருமையாகவே இந்த மாணவன் விளங்க வைத்துவிட்டான். அவனுக்கு எனது நன்றி'' என அவர் சொல்லி முடிக்க அருகில் இருந்தவன் எழுந்து நீங்க எப்போதான் வெட்டித்தனமா பேசறதை நிறுத்திட்டு பாடம் எடுக்கப் போறீங்களோ தெரியலை என்றான். அனைவருமே மீண்டும் சிரித்தார்கள். ஆசிரியரின் முகத்தில் கோபம் கொப்பளித்தது. 

அவனை வகுப்பறையை விட்டு உடனடியாக வெளியேறுமாறு கத்தினார். அவன் போக மறுத்தான். நீங்கள் எங்களுக்கு ஒன்றும் மனோதத்துவ பாடம் எடுக்க வரவில்லை. அதைப்போல தத்துவ இயல் ஒன்றும் சொல்லி தர அனுப்பி வைக்கப்படவில்லை. நீங்கள் எடுக்க வேண்டிய பாடம் மட்டும் எடுத்தால் போதும். இப்போதே அரை மணி நேரம் செலவாகிவிட்டது. இன்னும் அரை மணி நேரத்தில் என்ன சொல்லித் தர இயலும்? என அவன் பேசியது கண்டு அவரது கோபம் அதிகம் ஆகியது. 

This is my class. I choose what I teach. என்று அவர் கத்தியதும் I choose what I listen என இவன் இங்கிருந்து சத்தம் போட்டான். எனக்கு அருகில் இருந்தவனை அடிக்க வேண்டும் போலிருந்து. அதனால் அவனது காலை ஓங்கி மிதித்தேன். ஆ எனும் அலறல் சத்தம் கேட்டது. சாரி என்றேன். என்னை மீண்டும் முறைத்துப் பார்த்தான். 

அதற்கடுத்து அந்த ஆசிரியர் பாடம் நடத்தும் மனநிலையில் இருப்பதாகவே தெரியவில்லை. இவனை வகுப்பறையை விட்டு துரத்துவதற்காகவே மனித எண்ணங்கள் குறித்தே பேசினார். எப்போதுதான் வகுப்பு முடியும் என இருந்தது. அருகில் இருந்தவனை பிரின்சிபால் அழைப்பதாக சொன்னார்கள். எங்களுக்கு பயமாக இருந்தது. சிறிது நேரம் கழித்து வந்தவன் அமைதியாக அமர்ந்து இருந்தான். 

மதிய வேளையில் என்ன நடந்தது என கேட்டேன். இனிமே எதிர்த்து பேசினா சஸ்பென்ட் பண்ணிருவேன்னு சொன்னார் என சொல்லி முடித்து கொண்டான். எதிர்த்து பேசறது ஒரு காரணம், உன்னை சஸ்பென்ட் பண்றதுக்கு என சிரித்தேன். நங் என எனது தலையில் கொட்டியவன் சாரி என்றான். காயத்ரியை நோக்கி வந்துவிட்டேன். 

'இன்னைக்கு கிளாஸ் எப்படி?' என்றேன். 'அவன் என்ன லூசா' என்றாள். 'நீதான் கேட்கணும்' என்றேன். 'காரணம், காரியம். நீ என்ன நினைக்கிற' என்றாள். கர்மம் என்றேன். 'என்ன சொல்ற' என்றாள். அதாவது கர்ம வினை. கற்றறிந்த மாந்தர்கள் கூட இந்த கர்ம வினைக்கு தப்பிக்க முடியாது. எல்லோரும் சிக்கி அல்லாடனும் அதுதான் இந்த உலகியல் நியதி'. 

'ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம், காரியம்' என்றாள். 'ம்ம் சில ஏத்துக்க முடியும், சில ஏத்துக்க முடியாது' என்றேன். 'என் அப்பாவை நினைச்சாத்தான் இன்னும் என்னால தாங்கிக்க முடியலை' என்றாள். அவரைப் பத்தி பேச வேணாம்னு சொல்லியாச்சு என்றேன். 'மனசு கேட்கலை' என்றாள். அவளது கைகளை பிடித்தபோது சில்லென இருந்தது. 

'காயத்ரி, இனிமே கவலைப்படாதே. மறந்துரு' என சொன்னதும் சரி என தலையாட்டினாள். மீண்டும் வகுப்பு. எனக்குப்  பிடித்த ஒரு ஆசிரியர் வந்து இருந்தார். அவர் பேசியது தாலாட்டு போன்று இருக்கவே நன்றாக தூங்கிவிட்டேன். என்னை எவரோ தொடுவது போன்றே உணர்ந்து முழித்து பார்த்தேன். அந்த ஆசிரியர் எனது அருகில் சிரித்து கொண்டு இருந்தார். 

நாளைக்கு வரும்போது தலைகாணி, போர்வை எல்லாம் எடுத்துட்டு வா, அதோ அங்க நல்லா படுத்து தூங்கலாம், எதுக்கு சிரமப்படற, அடுத்த வகுப்பு ஆரம்பிக்க போகுது என சொல்லிவிட்டு நான் பதில் ஏதும் பேசும் முன்னர் அவர் வகுப்பை விட்டு வெளியேறினார். வகுப்பே அமைதியாக இருந்தது. பக்கத்தில்  இருந்தவர்கள் என்னை மாட்டிவிட்ட மகிழ்வில் இருந்தார்கள். 'தூங்கு முருகேசு, தூங்கு' என எல்லோரும் ஒரு சேர சத்தமிட்டார்கள். அவர்களது சத்தத்தில் எனது தூக்கம் தொலைந்து இருந்தது. 

அன்று மாலையில் காயத்ரியிடம் எனக்குப் பிடித்த ஆசிரியர் என்ன நடத்தினார் என கேட்டேன். நினைவுகள் பற்றி நடத்தினார் என்றாள். நான் கேட்கும்போது தூக்கம் பற்றித்தானே ஆரம்பித்தார், அதுதான் தூங்கிட்டேன் என்றேன். காயத்ரி சிரித்தது எனக்கு மகிழ்வாக இருந்தது. தூக்கம் பற்றி பேசினவர் நினைவுகள் பற்றி பேசினார். ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது என்றாள். நமக்கு மிகவும் பிடித்தமான்வைகள், பிடிக்காதவைகள், பாதிப்புக்கு உள்ளாக்கினவைகள் என  இவைகளை நாம் அவ்வளவு எளிதா மறக்கவே மாட்டோம்னு சொன்னார். தெரிஞ்சது தானே என்றேன். ஆனா காலையில என்ன சாப்பிட்டோம்னு மறந்திருவோம்னு சொன்னார். 

அப்படின்னா என்னை நீ மறக்கவே மாட்டியா என்றேன் நான். யோசித்தவள் கர்ம வினை என்றாள். எனக்கு  குழப்பமாக இருந்தது. 

(தொடரும்)

Friday 21 September 2012

என்ன சொல்லி தந்தது இந்தியா? 5

கிராமம் நோக்கிய பயணம். மின்சார தட்டுபாடு பற்றி இதுவரை ஒன்றும் அறிய வாய்ப்பு இல்லை. சென்னையில் கால் வைத்ததில் இருந்து கிராமத்திற்கு வந்த ஒரு நாள் வரை மின்சாரம் நின்றதாக தெரியவே இல்லை. மின்சார வெட்டு என்றெலாம் பேசினார்களே என யோசிக்க தோணியது. ஆனால் அன்று இரவு பன்னிரண்டு மணி இருக்கும். மின்சாரம் வெட்டப்பட்டது. மின்சாரம் மீண்டும் ஒரு மணிக்கு வந்தது. இந்த வேளையில்  யுபிஎஸ் உதவியது. அடுத்தடுத்து மின்சாரத் தட்டுபாடு வெகுபாடு படுத்தியது. ஒருமுறை ஒரு நாள் முழுவதும் மின்சாரம் இல்லாமல் இருந்தது. மறுமுறை அதுவும் கும்பாபிஷேக விழா செல்ல காலையில் எழுந்து தயாராக மின்சாரம் இல்லாமல் போனது. யுபிஎஸ் இருந்தும் உபயோகமின்றி இருந்தது. எப்பொழுது மின்சாரம் வரும் என காத்திருந்ததுதான் மிச்சம். 

தினம்தோறும் மதுரை பயணம். துணிக்கடைகள். பாத்திரக்கடைகள். வேறு என்ன சொல்ல. பல வருடங்கள் கழித்து ஒரு நாள் மாலையில் மீனாட்சி அம்மன் ஆலயம் சென்ற திருப்தி. பணம் எதுவும் கொடுக்காமல் சாதாரண வரிசையில் நின்று சென்றபோது அலாதி இன்பம். அப்போது கூட்டம் அவ்வளவாக இல்லை. கோவில் சுற்றி வந்தபோது சரியான கூட்டம். நல்லவேளை முன்னரே சென்று வந்தோம் என நினைத்துக் கொண்டோம். 

மதுரையில் கிளி ஜோசியரை தேடித் தேடி அலைந்ததுதான் மிச்சம். எங்குமே கிளி ஜோசியரை காண இயலவில்லை. கடைசிவரை கிளி ஜோசியமே பார்க்க இயலவில்லை. இந்த ஜோசிய அனுகூலங்கள் எல்லாம் ஒருவகையான பொழுதுபோக்கு. மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் இந்த ஜோசியம், நட்சத்திரம் எல்லாம் பித்தலாட்டங்கள், இதனால் நான் அடைந்த பாதிப்புகள் நிறைய என இந்த கிளி ஜோசியம் பற்றி பேசியபோது வெகுண்டு எழுந்த ஒரு மாணவியின் வார்த்தையில் எத்தனையோ அர்த்தங்கள் இருக்கத்தான் செய்தது.

இந்தியாவில் மன அழுத்த பாதிப்புக்கு உள்ளாகும் நபர்கள் குறைவு என்று சொல்வார்கள். இதற்கு காரணம், உறவு, பந்தங்கள் எல்லாம் இருப்பதால் ஆறுதலுக்கு என இருப்பார்கள், அதன் காரணமாக மன அழுத்தம் வர வாய்ப்பு குறைவு என்பார்கள். ஆனால் இன்று மன அழுத்தத்திற்கு உள்ளாகி அவதிப்பட்டு கொண்டு இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும். 

கேரளாவிற்கு பயணம். எங்கு சென்றாலும் ஆறு மணி நேரம், ஏழு மணி நேரம் ஆகிவிடுகிறது. படகு வீட்டில் ஒரு நாள் தங்கிய அனுபவம் நன்றாகவே இருந்தது. அதற்கு முன்னர் பதநீர் குடிக்க வேண்டும் என பல நாள் ஆசையை கேரளா செல்லும்போது வழியில் காரை நிறுத்தி குடித்தோம். பதநீர் பதநீர் போன்றே இல்லை. பாட்டில்களில் அடைத்து விற்றார்கள். அளவுக்கு அதிகமாக குடித்ததால் வாந்தி எடுத்து அடுத்த இரண்டு நாட்கள் பெரும் அவஸ்தை தான். அதற்கு பின்னர் ஒரு முறை பெங்களூரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய கதை எல்லாம் அப்பப்பா. விமான நிலையம் செல்வோமா, மாட்டோமா என பெங்களூர் நகருக்குள்ளேயே வழி தெரியாமல் இரண்டு மணி நேரம் செலவழித்தது. மதுரை - கோயம்புத்தூர் - பெங்களூர் - மதுரை. இரண்டே தினத்தில் சென்று வந்ததும் மூன்றாம் நாள் எங்கும் செல்ல முடியாத நிலை. 

என்றுமே செல்லாத குற்றாலம் இந்த முறை செல்ல வாய்ப்பு வந்தது. அருவிகளில் தண்ணீர் கொட்டிக் கொண்டு இருந்தது. குற்றாலத்தில் வந்து தங்கி விடலாமா என்கிற சீதோஷ்ண நிலை. ஒரு திருமணத்திற்கு சென்றபோது திருமணம் முடிந்த மறுகணமே மனிதர்கள் பறந்து போயிருந்தார்கள். 

சில நண்பர்கள் கோவித்து கொண்டார்கள். ஒரே ஒரு நண்பர் பல வருடங்கள் கழித்து வந்து பார்த்தார். பழைய கதைகள் பேசிய பொழுது நன்றாகவே இருந்தது. உறவினர்கள் எவரும் பார்க்க வேண்டும் என வரவில்லை. நானாக தேடி சென்று பார்த்த வரை மட்டுமே. 

இந்தியா என்றால் உறவுகள் , விருந்தோம்பல். திருவிழாக்கள். என்ன சொல்லி தந்தது இந்தியா என்று எண்ணி பார்க்கையில் என்ன நான் கற்று கொண்டேன் என்றுதான் நினைக்க தோன்றுகிறது. திருவள்ளுவர் சொன்னதுதான். கனியிருப்ப காய் கவர்ந்தற்று. இந்தியா என்றுமே நல்லதை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கிறது. எடுத்துக் கொள்பவர்கள் மாறிவிட்டார்கள். 

முற்றும். 

Wednesday 19 September 2012

கசாப்பு கடைக்காரர் கையில் காப்பு கட்டலாமா?

இந்தியா பயண கட்டுரைத் தொடரில் இருந்து சற்று விலகிச் செல்லலாம் என நினைக்க வைத்த ஒரு விசயம் இது. பொதுவாகவே இந்த இந்து மத சாத்திரங்கள், சம்பிராயதங்கள் எல்லாம் மனிதனை ஒரு கட்டுபாடுக்குள் இருக்க கொண்டு  வரப்பட்டவைதான் என்பதில் எனக்கு மறு கருத்து இல்லை, இருப்பினும் இந்து மத சாத்திரங்கள், சம்பிராயதங்கள் எல்லாம் எந்த அளவுக்கு பின்பற்ற முடியும் என்பதில் ஒரு பல பரீட்சையே செய்து கொள்ளலாம் என்றுதான் எண்ணத் தோணுகிறது.

 சென்ற வருடம் லண்டனில் உள்ள கோவிலில் பிரம்மோற்சவம் நடைபெற்ற போது, கையில் காப்பு கட்டச் சொன்னார்கள். இந்த பிரமோற்சவம் வருடாந்தோரும் ஆகஸ்ட் மாதத்தில் பத்து நாட்கள் நடைபெறும். பத்து நாட்களில் கடைசி ஞாயிறு அன்று தேர்த்திருவிழா நடைபெறும். திங்கள் கிழமை அன்று விழா இனிதே முடிவடையும். இப்படி இருக்கும் பட்சத்தில் சில கட்டுபாடுகள் சொன்னார்கள். மனைவியுடன் உறவு கொள்ளாது இருத்தல். அசைவ உணவு சாப்பிடாது இருத்தல், சுருக்கமாகஸ் சொன்னால் அக சுத்தம், புற சுத்தம் என சுத்தமாக இருத்தல். லண்டனுக்கு வெளியில் செல்லாது இருத்தல் போன்ற கட்டுபாடுகள். நான் ஏற்கனவே ஸ்பெயின் தீவான மயோர்கா செல்ல முடிவு எடுத்து இருந்ததால் காப்பு கட்ட வேண்டாம் என நினைத்து காப்பு கட்ட மறுத்துவிட்டேன்.

ஆனால் இந்த வருடம் காப்பு கட்ட வேண்டிய சூழல் வந்தது. முதலில் வேண்டாம் என்றுதான் நினைத்தேன், ஏனெனில் எனக்கு இது போன்ற சடங்கு சாத்திரங்களின் கட்டுபாடுக்குள் சிக்கி கொள்ள விரும்புவதில்லை. இதைக் கட்டினால் இது எல்லாம் செய்யக் கூடாது என சொல்லப்படும்போது அதைக் கட்டிக்கொண்டு செய்யக் கூடாததை செய்தால் என்ன நடக்கும் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் சற்று அதிகமாகவே உண்டு. எனக்கு காப்பு கட்ட வேண்டிய நேரம் வந்தபோது ஐயர் சற்று அதிகமாகவே தயங்கினார். எனது மன நிலை அவர் அறிந்து வைத்து இருந்தாரா என தெரியவில்லை. விழா முடிந்ததும் கேட்டுவிடலாம் என்றுதான் நினைக்கிறேன்.

சரி, கட்டுங்கள் சாமி என்று சொல்லி கெட்டியாக கட்டியாகிவிட்டது. எதுக்கு கட்டினோம் எனும் மனநிலை வேறு. வீட்டுக்கு வந்ததும் மனைவியிடம் காப்பு கட்டிவிட்டு வந்துவிட்டேன் என காட்டினேன். எதற்கு இதெல்லாம் என்றே கேட்டார்கள். ஏனெனில் நான் எப்போதுமே இதுபோன்று செய்து கொண்டது இல்லை. கட்டிவிட்டு விட்டார்கள் என்றேன் அப்பாவியாய். உங்கள் சம்மதம் இல்லாமலா கட்டினார்கள் என்றதும் இல்லை வேறு வழியின்றி கட்டிக்கொண்டேன் என சொன்னதோடு நாம் எனது கையில் காப்பு இருக்கும் வரை சற்று தள்ளி இருக்க  வேண்டும் என்றேன். இதை  மீண்டும் மீண்டும் சொல்லி வைத்தேன். அருகில் அருகே தூங்குவது கூட தவறோ என்று மனைவி சொல்ல அதெல்லாம் எவர் சொன்னது என்று அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்றே சொல்லியாகிவிட்டது.

முதல் நாள் ஏதும் பிரச்சினை இல்லை. ஆனால் அன்பின் மிகுதி அதிகமாகவே இருந்தது. அடுத்த நாள் இரவு மிகவும் அன்பாக பல விசயங்கள் பேசிக்கொண்டிருந்த வேளையில் எங்கள் இருவருக்குள் ஒன்றுமே இல்லாத விசயம் குறித்து கருத்து வேறுபாடு வந்தது.  ஏதேனும் ஒரு மாலை வேளையில் ஒரு புது வீடு பார்க்கலாமா என்றார் மனைவி. நானோ இந்த பத்து நாட்கள் என்னை எங்கும் அழைக்காதே என்று சொன்னேன். இதுதான் நடந்தது. அதற்கடுத்து எதற்கு பத்து நாட்கள் எதுவும் செய்ய கூடாது என்று ஆரம்பித்து சின்ன ஊடல். எனக்கோ என்ன இது என தோணியது. நம்மை இறைவன் பிரித்து வைக்க சதி பண்ணுகிறான் என்று காப்பு மீது பழியை போட்டு விட்டு இரண்டாம் கழிந்தது. காப்பு குறித்து எனது மனைவி சற்று பயந்தே விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். காப்பு கையில் இருக்கிறது, கவனம் என்றே சொன்னார். அன்னியோன்யம் அநியாயத்திற்கு விலகி நின்றது. எனக்கே ஆச்சர்யம்.

மூன்றாம் நாள் மீண்டும் சகஜ நிலை. அன்றுதான் நினைவு வந்தது, அடுத்த நாள் வேலைக்கு செல்ல வேண்டும், அங்கே இந்த வாரம் கிட்டத்தட்ட ஐம்பத்தி நான்கு கினி பிக்ஸ் கொல்ல வேண்டும் என. அது எனது ஆய்வகத்தில் உள்ள மற்ற நபரின் வேலை. அவருக்கு முன்னரே இதே வேலையில் உதவியதால் இந்த முறையும் செய்ய வேண்டிய நிலை. இந்த வேலையை ஒரு வாரம் தள்ளிப்போட்டு இருந்து இருக்கலாம். ஆனால் காப்பு கட்டப் போகிறேன் எனும் நினைப்பு எல்லாம் முன்னரே இல்லை. அதனால் எல்லா கினி பிக்ஸ் வந்து சேர்ந்துவிட்டது. செய்தே ஆக வேண்டிய சூழல்.  அடடா, ஆராய்ச்சி வேலையில் பல உயிரினங்களை கொல்ல வேண்டி இருக்கிறதே, இதை மறந்து கையில் காப்பு கட்டிவிட்டோமே என நினைத்தேன். அதை மனைவியிடம் சொல்லி வைக்க, உங்களை எல்லாம் எவர் காப்பு கட்ட சொன்னது என்றார்.

வேலைக்கு சென்றேன். கையில் இருக்கும் கயிறு குறித்து தற்போது எவரும் கேள்வி கேட்கவில்லை. இதற்கு முன் சில வருடங்கள் முன்னர் இந்தியா சென்று திரும்பிய போது கையில் கோவிலில் வாங்கிய கருப்பு கயிறு கட்டி இருந்தேன். வேலை இடத்தில் ஒரு உணவு விருந்தில் கையில் என்ன கருப்பு கயிறு என சைனா மாணவன் கேட்க நான் பதில் சொல்லும் முன்னரே கடவுள் நம்பிக்கை இல்லாத எனது ஆசிரியர் அந்த கயிறு இவன் உயிரை காப்பற்றும் என்று சிரித்து வைத்தார். அன்று மாலையே கயிறுதனை கழற்றிவிட்டேன். இந்தியாவில் இருந்தபோது எல்லாம் முருகன் டாலர் வைத்த கயிறு, கையில் கருப்பு கயிறு. அட அட என்ன பக்தி மாயம். எல்லாம் தொலைந்து போனது, என்னையும் சேர்த்து.

முதல் நாள் பதினெட்டு கினி பிக்ஸ் கொல்லப்பட்டது. அடுத்த நாள் பதினெட்டு கினி பிக்ஸ் கொல்லப்பட்டது. கையில் இருந்த காப்பு மனதை உறுத்தவே இல்லை. எந்த ஒரு விசயத்திற்கும் காழ்ப்புணர்வு கழித்த மனம் சுத்தமாக இருந்தால் போதும் என்றே உலகில் சொல்லி இருக்கிறார்கள். காப்பு கட்டிய காரணத்தால் மட்டுமே அக சுத்தம், புற சுத்தம் கவனிக்க வேண்டிய ஒன்றில்லை. அக சுத்தம், புற சுத்தம் எல்லாம் எல்லா நேரங்களிலும் மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று என்பதை எவரேனும் மனித குலத்திற்கு பொட்டில் அடித்தாற்போல் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என தினம் தினம் கையில் இருக்கும் காப்பு நினைவுறுத்துவதை போல சொல்லி வைப்பார்களா?

இதற்குதான் இந்த மதத்தில் கசாப்பு கடைக்காரர் மற்றும் நிமிடந்தோறும் நாராயண நாராயணா என சொல்லும் நாரதர் கதை உலகுக்கு சொல்லப்பட்டது. கசாப்பு கடைக்காரர் மோட்சம் அடைந்ததை கண்டு, உன் பெயரையே இரவும் பகலும் உச்சரிக்கும் தனக்கு இன்னமும் மோட்சம் கிட்டாதது குறித்து நாராயணரிடம் கேட்கிறார் நாரதர். அதற்கு நாரணனோ இதோ இந்த கிண்ணத்தில் இருக்கும் எண்ணையை கொட்டிவிடாமல் சுற்றி வா என்கிறார். சுற்றி வருகிறார் நாரதர். எத்தனை முறை நாராயணா சொன்னாய் என்கிறார் நாரணன். நமோ நாராயணா, எனது கவனம் எல்லாம் கிண்ணத்தில் இருக்கும் எண்ணை கொட்டிவிடக்கூடாது என்பதில் தான் இருந்தது, பெயர் உச்சரிக்கவே மறந்து போனேன் என்கிறார் நாரதர். நாராயணன் சிரிக்கிறார். நாரதர் அர்த்தம் புரிந்து கொள்கிறார். இறைவன் பெயரில் மட்டும் சுத்தம் என விரதம், முடி கட்டுதல், பாதை யாத்திரை நடத்தல் என செய்வதை விட எல்லா காலங்களிலும் மனிதர்கள் நியாயம், தர்மம் என கட்டுபாடுக்குள் இருக்க ஒரு காப்பு வேண்டும். அதை எங்கே பெறுவது, எப்படி எல்லாருக்கும் கட்டுவது?