சுயநலமற்ற மனிதர்களின் கருத்துமலர்கள் சத்திய வாக்குதான். என்னைப் பொருத்தவரை அவர்கள் மனிதர்களே. வாழ்வில் இப்படித்தான் வாழ வேண்டுமெனெ சத்தியத்துக்கு கட்டுபட்டு வாழ்ந்த ஷீர்டி சாய்பாபா போன்ற வெகு சில மனிதர்கள் போற்றத்தக்கவர்கள்தான், மறுப்பதற்கில்லை. இருப்பினும் என்னைப் பொருத்தவரை அவர்கள் கூறிய கருத்துமலர்களை மட்டுமே போற்றி கொண்டு இருக்காமல் நாமும் ஒரு சாய்பாபா போல வாழ்ந்து காட்டுவதுதான் அவர் போன்றோரை பின்பற்றுபவர் செய்ய வேண்டிய அரிய செயலாகும். இது எவருக்கும் வாய்ப்பது அத்தனை எளிதில்லை, அதனால்தான் ஒரே ஒரு ஷிரிடி சாய்பாபா மட்டுமே இருக்கிறார், மற்றவர்கள் எல்லாம் அவர்களின் அடியார்களாக இருக்கிறார்கள். இது நான் மக்களின் மீது சொல்லும் குற்றசாட்டு அல்ல.
சாதாரண மக்கள் தங்களால் வாழ இயலாத வாழ்க்கையை இந்த மகான்களிடம் காண்பதால் பெரு மகிழ்ச்சி கொண்டு தங்களைத் தாங்களே முடக்கி கொள்கிறார்கள் என்பதுதான் எனது எண்ணம். இதன் காரணமாக மனிதர்களை கடவுளாக வழிபடுதல் என்பது அவரவரின் மனதுக்கு ஏற்ப நடக்கும் நம்பிக்கை எனும் செயல்பாடு. இந்த நம்பிக்கை இருக்கும் மட்டுமே ஷ்ரிடி சாய்பாபா, ரமண மகரிஷி, ராகவேந்திரர் போன்ற மகான்கள் மீதான பற்றுதல் தொடர்கிறது. இப்பொழுது சிவன், விஷ்ணு, முருகன், விநாயகர் எனும் மனித உருவில் உள்ள தெய்வங்கள் என சொல்லப்படுபவர்களை எடுத்துக் கொள்வோம். இந்த தெய்வங்கள் எல்லாம் இன்னல்களில் இருந்து காத்துவிடுவார்கள் எனும் நம்பிக்கை ஒன்றுதான் நம்மை அவர்களை வணங்க செய்கிறது. ஊரில் விளையாட்டாக சொல்வார்கள், கஷ்டம்னு ஒன்னு வந்தாத்தான் கடவுள் நமது கண்களுக்குத் தெரிவார் என்பார்கள்.
மரணமடைந்த எனது தாய் இறைவனாக இருந்து காத்து கொண்டிருக்கிறார் என எனது தந்தை அடிக்கடி சொல்வார், என்ன முட்டாள்தனம் என்றே எனக்குத் தோன்றும், ஆனால் பிறரது நம்பிக்கைகளை உதாசீனப்படுத்தும் யோக்யதை எனக்கு இல்லை, யோக்யதை இருந்தாலும் உதாசீனப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை, எனவே சிரித்து கொண்டே அமைதியாக இருப்பேன். கிராமத்து வீட்டில் எனது தாத்தா, எனது தாய் என பூஜையறையை அலங்கரித்து கொண்டிருப்பார்கள். அதே போல எனது மற்றொரு தாத்தாவுக்கு (எனது தாயின் அப்பா) கிராமத்து தோட்டத்தில் சமாதி ஒன்று உண்டு, அங்கே பூஜைகள் எல்லாம் நடக்கும். அதே போல நாச்சாரம்மாள் எனும் குழந்தை தீயில் விழுந்து இறந்து போனதால் அந்த குழந்தை நம்மை காக்கும் என அவரையும் ஒரு வீட்டில் தெய்வமாக கொண்டாடுவோம். இப்படி மனிதர்களை கடவுளாக வைத்து வணங்கிப் பார்க்கும் பழக்கம் நம்மில் தொன்று தொட்டு வந்து கொண்டிருக்கிறது. இதெல்லாம் தவறு என்று நான் சொல்லவில்லை. வாழ்க்கையில் என்ன வேண்டும்? நிம்மதி! அந்த நிம்மதி எந்த ரூபத்தில் வந்தால் என்ன என்கிற மனப்பக்குவம் உடையவர்கள் தான் நாம்.
எனக்கு இறை நம்பிக்கை கிடையாது, ஆனால் இறைவன் இருக்கிறார். எப்படி இருக்கிறார், ஏன் இருக்கிறார், எதனால் இருக்கிறார், எங்கே இருக்கிறார் என்பதெல்லாம் எனக்கு தெரியாது. தெரிந்து கொள்ள முயற்சிப்பதும் இல்லை. இறைவன் இருக்கிறார் அவ்வளவே. எனது செயல்பாடுகளுக்கே நானே காரணம். இதில் இறைவன் பங்கு கொள்வதும் இல்லை, பங்கு பெறுவதும் இல்லை. நான் என்ன புதிதாக சொல்லிவிடப் போகிறேன். நன்றும் தீதும் பிறர்தர வாரா என சொன்னவர்கள் இந்த வாழ்க்கையின் சூட்சுமத்தை அறிந்தவர்கள்.
ஏதேனும் தவறாக நடந்தால், ஏதேனும் நேர்மாறாக நடந்தால் 'தெய்வம் சும்மா விடாது' என சொல்பவர்களை கண்டு சிறுவயதில் மிகவும் பயந்தே இருக்கிறேன். இப்பொழுது கூட வாழ்வில் நடக்கும் பல விசயங்களைப் பார்க்கும்போது நமக்கு அதனதன் காரண காரியங்கள் தெளிவதில்லை தெரிவதும் இல்லை. நான் முதன் முதலில் நாவலுக்கு எழுதிய கவிதை
நீ என் அருகினில் இருப்பினும்
உன்னை என்னுள் உணராதவரை
உன்னை தேடுதல் ஒரு தேவை.
இது எனது மனைவி அருகில் இருக்க நான் எழுதியது. இங்கே இறைவனைப் பொருத்திப் பார்க்கலாம், எனது மனைவியை நினைத்தும் பார்க்கலாம்.
மனிதர்களின் செயல்பாடுகளுக்கெல்லாம் இறைவன் பொறுப்பு ஏற்பது இல்லை, எனினும் நடக்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் இறைவன் ஒரு காரணியாக காட்டப்படுவதால் மனிதர்களின் நம்பிக்கை, தெய்வங்களிடம் மட்டுமின்றி மனிதர்களிடமும் பரவி இருக்கிறது என்பதுதான் நான் இதுவரை கண்டுகொண்ட விசயம்.
அவரவருக்கு எது எது பிடித்து இருக்கிறதோ அதன்படி அவர்கள் மட்டுமே நடந்து கொண்டால் பிரச்சினை இல்லை, அதை மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது பெரும் பிரச்சினைக்கே வழி வகுக்கும்.
நான் அவர்களின் அருகில் இல்லாத காரணத்தினால் மகான்கள் எனப் போற்றபடுபவர்கள் எல்லாம் என்னை வியக்க வைக்கிறார்கள். இதற்கு காரணம் அவர்களைப் பற்றி என்னில் பல அபிமானங்களை பிறர் திணித்துவிடுகிறார்கள், அல்லது அபிமானங்களை நானே திணித்துக் கொள்கிறேன்.
ஒரு கட்டத்துக்குள் நம்மை நாமே நுழைத்துக்கொள்ளும்போது எந்த சிந்தனையும் முழுமை பெறுவதில்லை.
உருவ வழிபாடு தப்பும் இல்லை, வழிபாடு பண்ணாம இருப்பதும் தப்பு இல்லை. அவரவருக்கு அவரவர் செயல்கள் தப்பே இல்லையாம்!