Wednesday 22 June 2011

ஈரானில் நெடா

ஒரு குழந்தை தனது எதிர்காலம் எப்படி இருக்கும் என எந்த வித எதிர்பார்ப்புமின்றி பிறக்கிறது. அந்த குழந்தையின் ஆசைகள், அந்த குழந்தையின் எண்ணங்கள் எல்லாம் சுற்றுபுற சூழல் வைத்து வளர்கிறது. 

குழந்தையின் மனதில் சில விசயங்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சில நேரங்களில் அந்த பாதிப்புகள் எந்தவித சுவடும் இன்றி தொலைந்து விடுகிறது. சில பாதிப்புகள் மாறா வடுக்களாக பதிந்து விடுகின்றன. 

 சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி நெடா எனும் பெண் குழந்தை ஈரானில் பிறந்தது. சுதந்திரம் இல்லாத பெண்கள் வாழ்வினை கண்டு மனம் வேதனை கொண்டது. பெண்கள் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு ஈரானில் நடத்தப்படும் கொடுமைகள் மிகவும் வேதனைக்குரியவை. 

பெண்கள் தான் சுதந்திரமாக தனக்கு பிடித்த உடையை கூட உடுத்த முடியாத அடுக்கு முறை பல நாடுகளில் பல ஆண்டுகளாக இருந்து வந்தது. சில நாடுகளில் இதில் மாற்றம் ஏற்பட்டாலும் இன்னும் பல நாடுகளில் இந்த அவல நிலை தொடர்ந்து வரத்தான் செய்கிறது. 

நெடா தனது துர்க்கியில் சென்று படித்தபோது தான் அனுபவித்த சுதந்திரத்தை ஈரானிலும் அனைவரும் பெற வேண்டும் என நினைத்தார். இந்த பெண் சுதந்திரமற்ற தன்மையை ஆதரித்தவர்களில் பெண்களும் இருந்தார்கள். பழமைவாதிகள் என்றும் அத்தனை எளிதாக மாறுவதில்லை. 

சமீபத்தில் நடந்த தேர்தலில் நெடா புரட்சிகர பெண்ணாக போராடினார். ஆனால் தேர்தல் முறைப்படி நடக்கவில்லை. அதனால் மாற்றம் என்பது ஏற்பட வழியின்றி போனது. தேர்தலுக்கு பின்னர் நடந்த அமைதி போராட்டத்தால் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. ஆட்சியாளர்களின் அடக்குமுறையால் பலர் கொல்லபட்டார்கள். 

அப்படி நடந்த ஒரு போராட்டத்தில் நெடா அநியாயமாக கொல்லப்பட்டார். வீட்டுக்கு வந்துவிடு என அம்மாவின் அழைப்பையும் மீறி நெடா துடிப்புடன் செயல்பட்டதாக நெடா சுடப்பட்டபோது அருகில் இருந்த ஒரு மருத்துவர் கூறினார். 

இந்த உலகம் சுதந்திரம் இல்லாத உலகம் என போராட்டம் நடக்கும் பல இடங்களில் ஆட்சியாளர்களால் தனி மனிதர்கள் நொறுக்கப்படும்போது ஒரு நெடா மட்டும் என்ன செய்ய இயலும்? 

Sunday 19 June 2011

கோவில்


மனிதர்களின் நம்பிக்கை மிகவும் சக்தி வாய்ந்தது. திடமான நம்பிக்கை இருந்துவிட்டால் சாதிக்க முடியாத விசயங்களும் சாத்தியமாகும் வாய்ப்பு அதிகமாகிறது. இப்படிப்பட்ட நம்பிக்கை ஒருவரிடத்தில் இருந்து பலரிடத்தில் பரவும் பட்சத்தில் அந்த நம்பிக்கையின் மீதான பிடிப்பு அதிகரிக்கிறது.

இறைவன் என்பவர் யார் என்பற்கான விவாதங்கள் அதிகம் இருந்தாலும், மனிதர்களின் நம்பிக்கையில் இறைவன் மிகவும் பலமாகவே இருக்கிறார். அறிவு வளார்ச்சியில் ஆண்டவனின் வளர்ச்சியும் அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது. 

நன்மை பயக்கவேண்டும் என நினைப்பவர்கள்தான் இவ்வுலகில் அதிகம். பிரச்சினைகள் எளிதாக தீர்ந்துவிட வேண்டும் என எண்ணி நாம் பயணப்படுகிறோம். நமது கட்டுப்பாடுகளில் இல்லாத பல செயல்கள் நம்மில் பதில் பெற முடியாத கேள்விகளை எழுப்பி செய்கின்றன. 

''சாமிய கும்பிட்டாத்தான் நாம நல்லா இருப்போமா'' எனும் கேள்விக்கு 'ஆம் அல்லது இல்லை' என ஒருவர் பதில் தந்துவிடமுடியும். சாமியின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர் ''ஆம்'' என சொல்லிவிட இயலும். ''அப்படின்னா சாமிய கும்பிடலைன்னா நாம நல்லா இருக்க மாட்டோமா'' எனும் கேள்வி எழும் பட்சத்தில் சாமியின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர் ''ஆம்'' என்றே சொல்வார். இங்கே நம்பிக்கை விதைக்கப்படுகிறது. நன்றாக இருக்க வேண்டுமெனில் சாமியை கும்பிட வேண்டும் எனும் எண்ணம் ஆழமாக விதைகிறது. இருக்கிறது எனும் நம்பிக்கைக்கு இருக்கும் ஆற்றல், இல்லை என்பதற்கு இல்லை. அதனால் தான் அது அவ நம்பிக்கையாக கருதப்படுகிறது. 

ஏதேனும் தவறு நடந்து விட்டாலும் கூட ''நாம சாமிய சரியா கும்பிடலையோ'' எனும் ஒரு ஐயப்பாடு எழுந்து விடுகிறது. கஷ்டங்கள் என பல வந்தாலும் ''சாமி சோதனை செய்கிறார்'' என ஆறுதல் கொள்ள செய்கிறது. 

வாழ்வில் நடக்கும் சில பல விசயங்களை மிகவும் உன்னிப்பாக கவனித்து பார்த்தால் ஏதோ ஒன்று நமது மேல் ஆதிக்கம் செலுத்துவது போன்று காணப்படும். வழி வழியாக வந்த இந்த இறைவன் எனும் எண்ணம் அனைவரையும் ஒரு முறையேனும் சிந்திக்க வைத்து விடுக்கிறது, அது நம்பிக்கையாகவும் இருக்கலாம், அவ நம்பிக்கையாகவும் இருக்கலாம். 

''கோவிலுக்கு போனா மனசு நிம்மதியாக இருக்கிறது'' எனும்போது கோவிலுக்கு செல்லாத சமயங்களில் மனசு நிம்மதியாக இல்லையா? எனும் கேள்வி எழுகிறது என வைத்துக் கொள்வோம். இந்த கேள்விக்கு நிம்மதி என வேறிடத்தில் இருந்தாலும் கோவிலில் ஏற்படும் நிம்மதி இருப்பதில்லை எனும் பதில் பொருத்தமாகிறது. சாத்திரங்கள், சம்பிரதாயங்கள், மந்திரங்கள் என மனம் கொள்ளும் நம்பிக்கை மிகவும் அதிகமே. தனி மனிதர்களின் மீது வைக்கப்படும் நம்பிக்கைகளை விட தனி மனிதன் மூலமாக இறைவன் மீது வைக்கப்படும் நம்பிக்கைகள் மிகவும் உறுதியாக இருக்கிறது. 

உலகில் எண்ணற்ற கோவில்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. உலகெங்கும் நிறைய பொருட்செலவில் புதிய கோவில்கள் கட்டப்படுகின்றன. இந்த கோவில்களினால் சமூகத்தில் எத்தகைய பலன்கள் ஏற்படுகின்றன, எத்தகைய சீரழிவுகள் ஏற்படுகின்றன என பட்டிமன்றம் வைத்து பேசுவதற்கு பக்தர்கள் தயாராக இல்லை. மனம் குளிர வணங்கிட ஒரு தெய்வமும், அங்கே கோவிலும் மட்டுமே பக்தர்களுக்கு முக்கியம். அப்படிப்பட்ட அவர்களின் நம்பிக்கையை நல்ல விதமாக நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும் என கோவிலை சார்ந்த அமைப்புகள் இருக்கின்றன. அத்தகைய அமைப்புகள் மிகவும் செழித்தோங்க வேண்டும்.

கோவில் மட்டுமே பிரதானம் அல்ல, கோவிலை சார்ந்து உருவாக்கப்படும் கல்வி நிறுவனங்கள், மருத்துவ வசதிகள், கலை அமைப்புகள் என மொத்த சமூகத்தையும் தூக்கி நிறுத்தக் கூடிய தெய்வங்கள் நமக்கு மிகவும் அத்தியாவசியம். மனிதர்களின் நம்பிக்கையினால் இந்த உலகில் ஒரு மாபெரும் புரட்சி ஏற்படுத்த இயலும். சாமியை கும்பிடுபவர்கள் தவறு செய்ய மாட்டார்கள் எனும் நம்பிக்கை முன்னொரு காலத்தில் இருந்தது. நாம் சாமியை கும்பிடுகிறோம் அதனால் தவறே செய்யக் கூடாது என்கிற பய பக்தியும் மனிதர்களிடம் இருந்தது. நாளடைவில் இந்த நம்பிக்கைகள் சிதறடிக்கப்பட்டன. ஆனாலும் ஆங்காங்கே நம்பிக்கை உடையவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.  சமூக அமைதிக்காக , சமூக ஒற்றுமைக்காக இந்த கோவில்கள் தமது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்பதுதான் ஒரு சின்ன கனவு.

(தொடரும்) 


Thursday 19 May 2011

எப்படி காதலிப்பது

வாழ்க்கையில் காதல் மிகவும் சுவராஸ்யமானது. ஆனால் எப்படி காதலிப்பது? 

வாழ்க்கையில் காதல் ஒருமுறைதான் வருமாம். ஆனால் எவரை காதலிப்பது? 

திரைப்படங்களில் காட்டப்படும் காதல் காட்சிகள் பல மிகைப்படுத்தப்பட்டவை என சொன்னாலும், உண்மையான வாழ்க்கையில் காதல் மிகைப்படுத்தப்பட்டதாகவே தெரிகிறது. 

'நீ இல்லையினா நா செத்து போயிருவேன்' வெறும் பேச்சுக்காக பேசப்பட்ட வசனங்கள் இல்லை இவை. பலர் இறந்து போயிருக்கிறார்கள். 

'மனசுக்கு பிடிச்சவரை காதலிச்சம், ஆனால் கல்யாணம் பண்ண முடியலையே' எனும் ஏக்கத்தில் பலர் வாழ்வதாகத்தான் சொல்கிறார்கள். 

காதல் வெகு அதிகமாகவே கொச்சைப்படுத்தப்படுவதும் உண்மைதான். 

அப்படி என்னதான் காதல்?! 

காதல் புரிய முடியாதது என்கிறார்கள் புரிந்து கொண்டவர்கள் போல! 

காதலின் சுவையை அறியாதவரை காதல் இனித்து கொண்டிருக்கும் என்கிறார்கள் பலர். 

காதலிக்கிறோம் என்கிற உணர்வே இல்லாமல் காதலிப்பதில்தான் ஒரு அலாதிப் ப்ரியம் இருக்கிறது. 

எப்படி காதலிப்பது? எவரை காதலிப்பது? 

காதல் சொல்லிக்கொண்டு வருவதில்லை. காதல் இவரை காதலி என கை காட்டுவதும் இல்லை. 

காதல் மனதில் தோன்றும் ஒரு உணர்வு. இந்த காதல் ஒரு விதமான நோய் என சொல்லி வைத்தார்கள். 

நோய் தீர்ந்துவிட்டால் காதல் இல்லாது போய்விடும் போல. 

இந்த காதல் பற்றிய பல காவியங்கள் மாபெரும் வெற்றி பெற்று இருக்கின்றன. காதலித்து வாழ்தலில் இருக்கும் சுகம் எதிலும் இல்லை என ரகசியமாகவே காதல் புரிந்து கொண்டிருக்கிறார்கள். கள்ளக்காதல். 

எது எப்படியெனினும் எப்படி காதலிப்பது? எவரை காதலிப்பது? 

காதல் புரிந்து கொண்டே பலரும் கேட்டு கொள்ளும் கேள்விதான் இது. 

காதல் ஒருபோதும் எவருக்குமே ஒழுங்காக வந்தது இல்லை. எவருமே முறையாக காதலித்ததும் இல்லை.