Wednesday 18 May 2011

கண்ணு பட்டுருச்சோ ரஜினி!

எப்ப, எனக்கும் எந்த குறையும் இல்லைன்னு ஒரு இடத்தில பேசினாலும் பேசினாரு, சோதனைக்கின்னே வந்து சேர்ந்துச்சு நோயி. அந்த பேச்சை கேட்டதும் என்னை அறியாமலே 'அட பாவமே' என்றுதான் தோணிச்சி, ஆனா இப்படி வந்து சேரும்னு நினைக்கல. வேதனையுடன் சொல்கிறார் ரஜினியின் மீது பிரியம் வைத்து இருப்பவர். கண்ணு பட்டுருச்சோ ரஜினி. 

உங்களுக்கு சிறு பிரச்சினை என்றால் அதை பெரும் பிரச்சினை என வேடிக்கை பார்க்கும் மனிதர்கள் உண்டே ரஜினி. நீங்கள் எண்பதுகளில் பட்ட வேதனையை விட இது ஒன்றும் பெரிது இல்லைதான். வயது வளர்கிறதல்லவா! 

இந்த கஷ்ட நேரத்தில்  எதையும் எழுதி உம்மை கஷ்டபடுத்த விரும்பலை, உம்மை என் எழுத்து கஷ்டபடுத்தவும் படுத்தாது. ஆனால் உம்மை பின்பற்றும் பல கோடி ரசிகர்களின் மனம் வேதனை படுமே ரஜினி. அவர்கள் வாழ்க்கையில் இனிமேலும் வேதனை படுவது அவசியமில்லாத ஒன்றுதான். நீங்கள் கைவிட்டு விட்ட புகை பழக்கம், மது பழக்கம் பலரும் கைவிட கூடும். எண்பது வயதாகும் என் தந்தையின் உடல்நலம் சீரடைந்து பின்னர் சீராகி பல வருடங்களாக உண்ணாமல் இருந்த முட்டையை உண்பதாக சொன்னபோது 'வாழ்க்கையை எப்படியும் வாழ்ந்துவிட வேண்டும் எனும் ஆசை எவரையும் விட்டுவிடுவதில்லைதான். வெளிப்படையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களை பலருக்கும் பிடித்துதான் இருக்கிறது, உங்களில் அவர்களை பார்க்கிறார்கள். 

புகை பிடிக்கும் பழக்கத்தை இத்தனை வருட காலம் கொண்டிருந்தீர்களே, அது உடனடியாக எதுவும் செய்யாது என்பதலா? நீங்கள் பிடிக்கிறீர்கள் என நானும் பிடிக்கிறேன் என பிடித்து காட்டிய நண்பர்கள் கண்டு வெறுப்பு அடைந்திருக்கிறேன். 'தலைவர் பிடிக்கிராருடா' என என்னை ஏளனம் பேசியவர்கள் உண்டு. 

மது பழக்கம் இல்லாத மக்களை மேலை நாடுகளில்  பார்ப்பது கடினம், அந்த மதுவையே மறைந்து இருந்து குடிக்கும் வழக்கம் கொண்ட பலர் நம் ஊரில் அதிகம். இந்த மதுவை விட முடியாத வாழ்க்கை கொண்டீர்களே, என்ன காரணம் ரஜினி. கணித மேதை ராமனுஜரின் வாழ்க்கை வரலாறு மிகவும் மோசமானது ரஜினி. தெரிந்து இருப்பீர்கள். கடல் கடந்து சென்றால் ஒரு பிராமணர் என்ற அந்தஸ்து தொலையும் என்ற நிலையிலும் கடல் கடந்து சென்றவர். ஆனால் தனது உயிர் புலால் உண்பதால் சரியாகும் என்கிற நிலையிலும் அதை தொடாதவர் என்றே வரலாறு சொல்கிறது. அது என்ன காரணமோ ரஜினி. தனிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கை தனிப்பட்ட மனிதருக்கு மட்டுமே சொந்தம். ஆனால் எப்பொழுது அவர்கள் பொது மனிதர்கள் ஆகிறார்களோ அப்பொழுது அவர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கை எதுவும் இல்லைதான். 

சாதாரண மனிதருக்கு இருக்கும் பொறுப்பை விட பிரபலமான மனிதர்களுக்கு இருக்கும் பொறுப்பு மிக மிக அதிகம் என சொல்வார்கள். ஆனால் பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளும் பக்குவம் அந்த பிரபலமானவர்களுக்கே  உரித்தான ஒன்று. எத்தனை கதாபாத்திரங்கள், எத்தனை கதைகள் படித்து இருப்பீர்கள். எத்தனை கதைகள் சொல்லி இருப்பீர்கள். உங்களுக்கு தெரியாததா ரஜினி. 

ஆன்மிகம் என சொல்லிக்கொண்டு சக உயிரினங்களை உண்டு வாழும் வாழ்க்கை எப்படி சரியென சொல்வது. தனது அன்னை, தந்தை, உறவினர்களின் உடல் நலம் பற்றி அக்கறை கொள்ளாத பலர் உங்கள் உடல் நலம் குறித்து வேதனை கொண்டிருப்பதை கண்டீர்களா ரஜினி. மது, புகை என இருந்தாலும் இத்தனை வருடம் பிரச்சினை இல்லாமல் வாழ்ந்ததே உங்களின் கட்டுகோப்பான வாழ்க்கைதான். உங்களின் கட்டுகோப்பு எங்களை போன்றவர்களிடம் இல்லையே ரஜினி. 

நீங்கள் நல்ல மனிதர் என்றே பலராலும் அறியப்பட்டு இருக்கிறீர்கள். ஆனால் குடிப்பழக்கம், புகைப்பழக்கம், புலால் உண்ணல், கோபம் போன்றவை கொண்டிருப்போர் நல்ல மனிதர்களாக இருந்திடல் சாத்தியம் எனினும் நல்ல உடல் நலத்துடன் இருப்பது சாத்தியம் இல்லை என்பது உங்களுக்கு இமயமலை கற்றுத் தராததா. 

சூழ்நிலை கைதி என சொன்னீர்களே ரஜினி. பணம் சம்பாதிக்கும் வியாபாரிகள் அனைவருமே அப்படித்தான். அந்த வியாபாரிகள் தனது சொந்த நலனுக்காக எதையும் விற்றுவிடும் அளவுக்கு துணிந்தவர்கள். நேர்மையும், நியாயமும் உலகில் எங்குமே இல்லையே ரஜினி. 

இத்தனை விசயங்கள் என்னை போன்று எழுதும் பலர், பேசும் பலர் எல்லாம் யோக்கியவான்கள் இல்லை ரஜினி. இந்த எழுத்தை, பிறர் எழுத்தை, பிறர் பேசுவதை நீங்கள் படிக்க, கேட்க நேரிட்டால் மனதுக்குள்  சிரித்து கொள்வீர்கள் அல்லவா. அதுதான் மனிதர்களின் ரகசியம். பிறருக்கு ஒன்று எனில் உடனே அறிவுரை சொல்லும் வித்தைகாரர்கள். தன்னை பற்றி நினைத்து கூட பார்க்க மாட்டார்கள். நீங்கள் இதற்கெல்லாம் கவலைப்பட போவது இல்லை. விரைவில் நலம் பெறுங்கள் ரஜினி. உங்களால் மனதளவில் உற்சாகம் கொள்ளும் கோடி மக்கள் உண்மையிலேயே உண்டு. 

Friday 13 May 2011

அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்

அரசியல் பண்ண வேண்டிய இடத்தில் அரசியல் பண்ணாமல் வேறு  பல இடங்களில் அரசியல் பண்ணுவது நமது வாடிக்கை.

வீட்டில் இருந்தே அரசியல் தொடங்கிவிடுகிறது. 'நாக்கில்லாத நரம்பு எப்படின்னாலும் பேசும்' என்பது உலகம் அறிந்த உண்மைதான். 

'சீ சீ இந்த பழம் புளிக்கும்' எனும் கதையாய் பல நேரங்களில் நிகழ்வது தவிர்க்க இயலாதது. 

அ தி மு க எனும் கட்சியும் இரட்டை இலை எனும் சின்னமும், தி மு க கட்சியும், உதயசூரியன் எனும் சின்னமும் இன்னும் கிராமங்களில் இருந்து கொண்டிருக்கலாம். நகரங்களில் பல மாற்றங்கள் வந்த பிறகும் அதே கட்சி, அதே சின்னம், அதே 'இல்லாத கொள்கைகள்' என இந்த கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வருவதும் ஏதாவது ஊழல் வெளித் தெரிவதும் என இந்த கட்சிகளின் செயல்பாடுகள் மக்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவது இல்லை. 

அதை செய்கிறேன், இதை செய்கிறேன் என வாய் சவுடால் விடாமல் மக்களின் குறை தீர்க்கும் அரசு என்பது வெறும் கனவு. 

அமெரிக்காவின் ஒபாமா பெரிதும் எதிர்பார்க்கப்பட்டார். பொய்த்து போனது மக்களின் எதிர்பார்ப்பு. 

ஒரு அரசு செய்வதை விட மக்கள் நினைத்தால் செய்யலாம் என்பதுதான் அமெரிக்காவில் நடக்கும் தேர்தலும் சரி, தமிழகத்தில் நடக்கும் தேர்தலும் சரி காட்டுகின்றன. 

எனவே இந்த அரசு, தான் என்ன செய்ய வேண்டும் என்பதை விட மக்களை எப்படி விழிப்புணர்வுடன் செயல்பட விட வேண்டும் என்பதில் தான் இந்த அரசின் வெற்றி உள்ளது. 

மக்கள் நினைத்தால் மட்டுமே பெரிதும் மாற்றம் ஏற்படுத்த முடியும். மக்களின் மன நிலையில் பெரும் மாற்றம் ஏற்படுத்தும் அரசு என்பதெல்லாம் நமது தமிழகத்தில் மட்டுமல்ல உலகத்தில் கூட  சாத்தியம் இல்லை. 

அதே குண்டும் குழியும் நிறைந்து கிடக்கும் சாலைகள். எந்த ஒரு வசதிகளும் இல்லாத பள்ளிகள், ஊழல் நிறைந்த மனிதர்கள், வியாபாரிகள் என இவர்கள், இவைகள் எல்லாம் ஒரு அரசு மாறுவதால் மாறுவதில்லை. மனிதர்கள் மாறினால் மட்டுமே மாறும்.

அந்த பெரும் மாற்றத்தினை முதலில் தமிழக முதல்வராக பதவியேற்க இருக்கும் ஜெயலலிதா அவர்கள் தனக்குள் ஏற்படுத்தி கொண்டிருக்கிறாரா என்பதுதான் இன்று முதன்மை கேள்வி. 

இந்த வெற்றியின் உற்சாகத்தில் பேசும் பேச்சுகள் அடுத்த நொடிகளில் மறந்து போகும். மக்கள் மீண்டும் மறக்கப்படுவார்கள். மக்களும் மறந்து போவார்கள். 

ஒரு வீடு, ஒரு நகரம், ஒரு மாநிலம் எப்படி இருக்க வேண்டும் எனும் கனவு எந்த முதல்வருக்கும் இருந்தததில்லை, இருப்பதும் இல்லை. 

சிறு வயதில் இந்த கட்சிக்கு கொடி தூக்கிய காலம், தொண்ணூறுகளில் இந்த கட்சி மாபெரும் வெற்றி பெரும் என கணித்தபோது ஒரு இடம் கூட கிடைக்காமல் தொலைந்த காலம். அ தி மு க ஏனோ மனதில் இருந்து கொண்டிருக்கிறது, எந்த ஒரு மாற்றமும் இல்லாமல். 

வாழ்த்துகள் அ தி மு க தலைமைக்கும், தொண்டர்களுக்கும், மக்களுக்கும். 

ஐந்து வருடங்களில் என்ன நடக்கும் என எவர் சோதிடம் பார்ப்பது இனி? ஒரே சாலையில் பயணித்து பழக்கப்பட்டுத்தான் போனோம். வழியில் பார்க்கும் மனிதர்கள் மட்டும் வெவ்வேறாக இருக்கிறார்கள் ஒரே குணத்துடன். 




Thursday 5 May 2011

சமூக சேவை எனும் சாக்கடை

சேவை மனப்பான்மை என்பது அனைவருக்கும் அத்தனை எளிதில் கை கூடுவதில்லை. சமூகத்தின் மீது அக்கறை கொண்டு சமூகத்தினை ஒரு சிறந்த, உயர்ந்த சமூகமாக மாற்றிட பலரின் மனதில் எண்ணம் ஓடிக் கொண்டிருக்கும். 

இந்த சமூக சேவையானது வீட்டில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பார்கள். வீட்டினை குப்பையாக வைத்திருப்பவர் சமூகத்தினை நிச்சயம் துப்புரவு செய்ய இயலாது. 

இந்த சமூகத்தில் நான் என்பது தனி, நாம் என்பது ஒரு கூட்டம். இதில் ஒரு நாம் என்பதற்கு பதிலாக பல நாம் இருப்பதுதான் சமூக பிரச்சினை ஆகிறது. 

நோய் என ஒன்று வந்துவிட்டால் அதன் அடிப்படை விசயத்தை அறிந்து கொண்டு தீர்வு செய்யாவிட்டால் அந்த நோய் மீண்டும் மீண்டும் வந்து சேரும். அதைப் போலவே சமூக பிரச்சினைகளுக்கான ஆணி வேரதனை அறியாது போனால் பிரச்சினைகள் ஒருபோதும் அழியாது. 

சிறுவர்களை வதைப்படுத்தும் படங்களை சேமித்து வைப்பது தனக்கு ஒரு பொழுது போக்கு என ஒருவரை கைது செய்தபோது கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல் அவர் சொன்னதை கேட்டபோது தவறு எங்கு தொடங்கபடுகிறது என்பது அறிவது அவசியமாகிறது. 

நல்லவையோடு தீயவைகளும் சேர்ந்தே இருக்கும், அதில் நல்லவைகளை மட்டும் தேர்ந்தெடுத்து வாழ வேண்டும் என இருப்பதுதான் பகுத்தறிவு என சொன்னாலும், மனிதர்களின் பலவீனங்களால் தீயவைகளே மிகவும் முன்னிலை வகிக்கின்றன. 

அப்படிப்பட்ட தீயவைகளை அடியோடு ஒழித்து கட்ட முயலாமல் வேடிக்கை பார்க்கும் சாக்கடை சமூகம் தான் இவ்வுலகம் எங்கும் நிலவுகிறது. பல கோடி மக்களை பார்க்கும்போது இவர்களா தவறு செய்கிறார்கள் எனும் இனம் புரியாத கேள்வி எழும் வேளையில் நாமும் தவறு செய்கிறோம் என்கிற ஒரு உணர்வு சகிப்புத்தன்மையை ஏற்படுத்தி செல்வதை எவராலும் தவிர்க்க இயலாது. ஏதோ ஒருவகையில் முரண்பட்ட வாழ்வினை வாழும் சமூக புழுக்கள் ஆகிப் போனோம். 

நேர்மையும், நியாயமும் கேலிப் பொருளாகிப் போனது. தவறு செய்பவர்களை மறைக்கும் கேவலம் எங்கும் நிறைந்து போனது. இப்படித்தான் உலகம் இருக்கும் என்பதை ஏற்று கொண்ட பின்னர் அதன்படியே வாழ்வது என்பது பலருக்கும் பழகித்தான் போனது.

கொலை குற்றங்கள் என நிறைந்து காணப்படும் சமூகத்தில் நாம் வாழ்ந்தால் என்ன? அழிந்தால் என்ன? 

ஒவ்வொரு வினாடியும் பல குழந்தைகள் பரிதாப நிலைக்கு உட்படுத்தபடுகிறார்கள். இதை தெரிந்தும் தெரியாத சமூகமாகவே வாழும் நமக்கு எதிர்காலம் என்பது வெளிச்சமாகவே இருக்கிறதாம்.