Friday 13 May 2011

அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்

அரசியல் பண்ண வேண்டிய இடத்தில் அரசியல் பண்ணாமல் வேறு  பல இடங்களில் அரசியல் பண்ணுவது நமது வாடிக்கை.

வீட்டில் இருந்தே அரசியல் தொடங்கிவிடுகிறது. 'நாக்கில்லாத நரம்பு எப்படின்னாலும் பேசும்' என்பது உலகம் அறிந்த உண்மைதான். 

'சீ சீ இந்த பழம் புளிக்கும்' எனும் கதையாய் பல நேரங்களில் நிகழ்வது தவிர்க்க இயலாதது. 

அ தி மு க எனும் கட்சியும் இரட்டை இலை எனும் சின்னமும், தி மு க கட்சியும், உதயசூரியன் எனும் சின்னமும் இன்னும் கிராமங்களில் இருந்து கொண்டிருக்கலாம். நகரங்களில் பல மாற்றங்கள் வந்த பிறகும் அதே கட்சி, அதே சின்னம், அதே 'இல்லாத கொள்கைகள்' என இந்த கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வருவதும் ஏதாவது ஊழல் வெளித் தெரிவதும் என இந்த கட்சிகளின் செயல்பாடுகள் மக்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவது இல்லை. 

அதை செய்கிறேன், இதை செய்கிறேன் என வாய் சவுடால் விடாமல் மக்களின் குறை தீர்க்கும் அரசு என்பது வெறும் கனவு. 

அமெரிக்காவின் ஒபாமா பெரிதும் எதிர்பார்க்கப்பட்டார். பொய்த்து போனது மக்களின் எதிர்பார்ப்பு. 

ஒரு அரசு செய்வதை விட மக்கள் நினைத்தால் செய்யலாம் என்பதுதான் அமெரிக்காவில் நடக்கும் தேர்தலும் சரி, தமிழகத்தில் நடக்கும் தேர்தலும் சரி காட்டுகின்றன. 

எனவே இந்த அரசு, தான் என்ன செய்ய வேண்டும் என்பதை விட மக்களை எப்படி விழிப்புணர்வுடன் செயல்பட விட வேண்டும் என்பதில் தான் இந்த அரசின் வெற்றி உள்ளது. 

மக்கள் நினைத்தால் மட்டுமே பெரிதும் மாற்றம் ஏற்படுத்த முடியும். மக்களின் மன நிலையில் பெரும் மாற்றம் ஏற்படுத்தும் அரசு என்பதெல்லாம் நமது தமிழகத்தில் மட்டுமல்ல உலகத்தில் கூட  சாத்தியம் இல்லை. 

அதே குண்டும் குழியும் நிறைந்து கிடக்கும் சாலைகள். எந்த ஒரு வசதிகளும் இல்லாத பள்ளிகள், ஊழல் நிறைந்த மனிதர்கள், வியாபாரிகள் என இவர்கள், இவைகள் எல்லாம் ஒரு அரசு மாறுவதால் மாறுவதில்லை. மனிதர்கள் மாறினால் மட்டுமே மாறும்.

அந்த பெரும் மாற்றத்தினை முதலில் தமிழக முதல்வராக பதவியேற்க இருக்கும் ஜெயலலிதா அவர்கள் தனக்குள் ஏற்படுத்தி கொண்டிருக்கிறாரா என்பதுதான் இன்று முதன்மை கேள்வி. 

இந்த வெற்றியின் உற்சாகத்தில் பேசும் பேச்சுகள் அடுத்த நொடிகளில் மறந்து போகும். மக்கள் மீண்டும் மறக்கப்படுவார்கள். மக்களும் மறந்து போவார்கள். 

ஒரு வீடு, ஒரு நகரம், ஒரு மாநிலம் எப்படி இருக்க வேண்டும் எனும் கனவு எந்த முதல்வருக்கும் இருந்தததில்லை, இருப்பதும் இல்லை. 

சிறு வயதில் இந்த கட்சிக்கு கொடி தூக்கிய காலம், தொண்ணூறுகளில் இந்த கட்சி மாபெரும் வெற்றி பெரும் என கணித்தபோது ஒரு இடம் கூட கிடைக்காமல் தொலைந்த காலம். அ தி மு க ஏனோ மனதில் இருந்து கொண்டிருக்கிறது, எந்த ஒரு மாற்றமும் இல்லாமல். 

வாழ்த்துகள் அ தி மு க தலைமைக்கும், தொண்டர்களுக்கும், மக்களுக்கும். 

ஐந்து வருடங்களில் என்ன நடக்கும் என எவர் சோதிடம் பார்ப்பது இனி? ஒரே சாலையில் பயணித்து பழக்கப்பட்டுத்தான் போனோம். வழியில் பார்க்கும் மனிதர்கள் மட்டும் வெவ்வேறாக இருக்கிறார்கள் ஒரே குணத்துடன். 




Thursday 5 May 2011

சமூக சேவை எனும் சாக்கடை

சேவை மனப்பான்மை என்பது அனைவருக்கும் அத்தனை எளிதில் கை கூடுவதில்லை. சமூகத்தின் மீது அக்கறை கொண்டு சமூகத்தினை ஒரு சிறந்த, உயர்ந்த சமூகமாக மாற்றிட பலரின் மனதில் எண்ணம் ஓடிக் கொண்டிருக்கும். 

இந்த சமூக சேவையானது வீட்டில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பார்கள். வீட்டினை குப்பையாக வைத்திருப்பவர் சமூகத்தினை நிச்சயம் துப்புரவு செய்ய இயலாது. 

இந்த சமூகத்தில் நான் என்பது தனி, நாம் என்பது ஒரு கூட்டம். இதில் ஒரு நாம் என்பதற்கு பதிலாக பல நாம் இருப்பதுதான் சமூக பிரச்சினை ஆகிறது. 

நோய் என ஒன்று வந்துவிட்டால் அதன் அடிப்படை விசயத்தை அறிந்து கொண்டு தீர்வு செய்யாவிட்டால் அந்த நோய் மீண்டும் மீண்டும் வந்து சேரும். அதைப் போலவே சமூக பிரச்சினைகளுக்கான ஆணி வேரதனை அறியாது போனால் பிரச்சினைகள் ஒருபோதும் அழியாது. 

சிறுவர்களை வதைப்படுத்தும் படங்களை சேமித்து வைப்பது தனக்கு ஒரு பொழுது போக்கு என ஒருவரை கைது செய்தபோது கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல் அவர் சொன்னதை கேட்டபோது தவறு எங்கு தொடங்கபடுகிறது என்பது அறிவது அவசியமாகிறது. 

நல்லவையோடு தீயவைகளும் சேர்ந்தே இருக்கும், அதில் நல்லவைகளை மட்டும் தேர்ந்தெடுத்து வாழ வேண்டும் என இருப்பதுதான் பகுத்தறிவு என சொன்னாலும், மனிதர்களின் பலவீனங்களால் தீயவைகளே மிகவும் முன்னிலை வகிக்கின்றன. 

அப்படிப்பட்ட தீயவைகளை அடியோடு ஒழித்து கட்ட முயலாமல் வேடிக்கை பார்க்கும் சாக்கடை சமூகம் தான் இவ்வுலகம் எங்கும் நிலவுகிறது. பல கோடி மக்களை பார்க்கும்போது இவர்களா தவறு செய்கிறார்கள் எனும் இனம் புரியாத கேள்வி எழும் வேளையில் நாமும் தவறு செய்கிறோம் என்கிற ஒரு உணர்வு சகிப்புத்தன்மையை ஏற்படுத்தி செல்வதை எவராலும் தவிர்க்க இயலாது. ஏதோ ஒருவகையில் முரண்பட்ட வாழ்வினை வாழும் சமூக புழுக்கள் ஆகிப் போனோம். 

நேர்மையும், நியாயமும் கேலிப் பொருளாகிப் போனது. தவறு செய்பவர்களை மறைக்கும் கேவலம் எங்கும் நிறைந்து போனது. இப்படித்தான் உலகம் இருக்கும் என்பதை ஏற்று கொண்ட பின்னர் அதன்படியே வாழ்வது என்பது பலருக்கும் பழகித்தான் போனது.

கொலை குற்றங்கள் என நிறைந்து காணப்படும் சமூகத்தில் நாம் வாழ்ந்தால் என்ன? அழிந்தால் என்ன? 

ஒவ்வொரு வினாடியும் பல குழந்தைகள் பரிதாப நிலைக்கு உட்படுத்தபடுகிறார்கள். இதை தெரிந்தும் தெரியாத சமூகமாகவே வாழும் நமக்கு எதிர்காலம் என்பது வெளிச்சமாகவே இருக்கிறதாம். 

Tuesday 3 May 2011

முடியாது என சொல்லவா தெரியாது!

முடியாது என சொல்ல தெரியாமல் பல விசயங்களில் மனிதர்கள் சிக்கி கொண்டு தடுமாறுகிறார்கள் என படித்தபோது ஆச்சர்யமாக இருந்தது.

நம்மை பற்றி நாம் அறிந்து கொண்டிருப்பதை விட நம்மை பற்றி பிறர் அதிகம் அறிந்து வைத்திருக்கும் வகையில் நாம் நடந்து கொள்கிறோம் என்பதுதான் இந்த சிக்கலுக்கு காரணம். 

பிறரின் தூண்டல்களில் நம்மை நாம் ஈடுபடுத்தி கொள்வதினால் நாம் மிகவும் சிரமப்படுகிறோம். இதைத்தான் ஆசையே துன்பத்திற்கு காரணம் என சொல்லலாம். 

துன்பம் துயரம் இல்லாம் உயரம் கைக்கு எட்டுவதில்லை. அப்படியெனில் சிரமம் இல்லாமல் வாழ்வது எப்படி? போராடாமல் வாழ்வது எப்படி?

சிரமப்படாமல், போராடாமல் வாழ ஒருவர் நினைத்துவிட்டால் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். 

நினைத்ததை செயல்படுத்த அதற்கான அயற்சி இல்லாத முயற்சி அவசியம். முடியாது என சொல்லவா தெரியாது. 

முடியும் விசயத்தில் முடியாது என சொல்பவர்கள் சாதனையாளர்களாக முடியாது என்பது உண்மை. முடியாது விசயத்தில் முடியும் என சொல்பவர்கள் சோதனைகுட்பட்டு, வேதனைக்குட்பட்டு சீரழிகிறார்கள். 

முடியும் விசயம் எது? முடியாது விசயம் எது? உங்களை நீங்களே உறுதி படுத்தி கொள்ளுங்கள். அடுத்தவர் சொல்வதை கேட்டு அடுத்த அடி கூட எடுத்து வைக்காதீர்கள்.