Tuesday 3 May 2011

முடியாது என சொல்லவா தெரியாது!

முடியாது என சொல்ல தெரியாமல் பல விசயங்களில் மனிதர்கள் சிக்கி கொண்டு தடுமாறுகிறார்கள் என படித்தபோது ஆச்சர்யமாக இருந்தது.

நம்மை பற்றி நாம் அறிந்து கொண்டிருப்பதை விட நம்மை பற்றி பிறர் அதிகம் அறிந்து வைத்திருக்கும் வகையில் நாம் நடந்து கொள்கிறோம் என்பதுதான் இந்த சிக்கலுக்கு காரணம். 

பிறரின் தூண்டல்களில் நம்மை நாம் ஈடுபடுத்தி கொள்வதினால் நாம் மிகவும் சிரமப்படுகிறோம். இதைத்தான் ஆசையே துன்பத்திற்கு காரணம் என சொல்லலாம். 

துன்பம் துயரம் இல்லாம் உயரம் கைக்கு எட்டுவதில்லை. அப்படியெனில் சிரமம் இல்லாமல் வாழ்வது எப்படி? போராடாமல் வாழ்வது எப்படி?

சிரமப்படாமல், போராடாமல் வாழ ஒருவர் நினைத்துவிட்டால் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். 

நினைத்ததை செயல்படுத்த அதற்கான அயற்சி இல்லாத முயற்சி அவசியம். முடியாது என சொல்லவா தெரியாது. 

முடியும் விசயத்தில் முடியாது என சொல்பவர்கள் சாதனையாளர்களாக முடியாது என்பது உண்மை. முடியாது விசயத்தில் முடியும் என சொல்பவர்கள் சோதனைகுட்பட்டு, வேதனைக்குட்பட்டு சீரழிகிறார்கள். 

முடியும் விசயம் எது? முடியாது விசயம் எது? உங்களை நீங்களே உறுதி படுத்தி கொள்ளுங்கள். அடுத்தவர் சொல்வதை கேட்டு அடுத்த அடி கூட எடுத்து வைக்காதீர்கள். 

Sunday 1 May 2011

கூட்டி கழித்தல்

கூட்டி கழித்தல் 
மனிதர்களின் அற்புத விளையாட்டு 

தேவையெனில் கூட்டுவதும்
தேவையற்றதெனில் கழித்தலும்
பரம்பரையாய் வந்த விளையாட்டு 

லாப கணக்குதனில் கூட்டுதலும்
நஷ்ட கணக்குதனில் கழித்தலும்
கால கணக்குகளின் விளையாட்டு 

கூட்டுதலிலும் கழித்தலிலும் 
மனம் வைத்தே பெருக்குவதில்
சிறுத்து போன மனித விளையாட்டு! 


Wednesday 23 March 2011

ஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (2)

காற்று வளி மண்டலம். பூமிக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் எனலாம். வாயுக்கள் சில கிரகங்களில் இருக்கத்தான் செய்கின்றது. ஆனால் அந்த வாயுக்கள் எல்லாம் உயிர்கள் தோன்ற வழி வகுக்கவில்லை என எண்ணும்போது ஆச்சர்யம் மட்டுமே மிஞ்சுகிறது. அறிவியல் சொல்படி இந்த பூமி உருவானபோது இங்கே ஆக்சிஜன் தனியாக இல்லை. ஏதோ ஒரு தனிமத்துடன் இணைந்தவண்ணமே இருந்து இருக்கிறது. கரியமில வாயு தன்மையில் இந்த ஆக்சிஜன் கலந்து இருக்கிறது. மேலும்  நீர் கோமெட்டினால் பூமியில் கொட்டப்பட்டு இருக்கிறது. அந்த நீரில் ஆக்சிஜன் ஹைட்ரஜனுடன் கலந்து இருக்கிறது.

தனியே தனிமமாக இல்லாத ஆக்சிஜன், ஆனால் உயிர்கள் எப்படி உருவானது என பார்க்கும்போது பாக்டீரியாவை சொல்கிறார்கள். இவ்வுலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் (?)சுவாசிக்கின்றன. ஏதோ ஒரு வகையில் அதன் உடல் அமைப்புகள் அவ்வாறு இருக்கிறது. இந்த சுவாசத்தின் முக்கிய பணி என்னவெனில் அந்த உயிரினத்திற்கு தேவையான சக்தியை வழங்குவது மட்டுமே.

தானாக உணவை தயாரிக்க தெரிந்த பாக்டீரியாக்கள், தாவரங்கள் எல்லாம் சுவாசம் செய்து கொண்டுதான் இருக்கின்றன. மூச்சை உள்ளிழுத்து விடுதல் மூலம் மட்டும் ஒரு உயிரினம் வாழ்ந்து விடுவதில்லை. செல்களில் இருக்கும் மைட்டோகான்றியாவில் நடைபெறும் வேதிவினையே ஒரு உயிரினம் வாழ  வழி வகுக்கிறது.

உள்ளிழுக்கப்பட்ட காற்றில் இருக்கும் வாயுக்கள் அளவும், வெளிவிடப்படும் காற்றில் இருக்கும் வாயுக்கள் அளவும், ஏன் ஈரப்பதமும் வித்தியாசபடுகிறது.

உள்ளிழுக்கும் காற்றில் இருக்கும் வாயுக்கள் அளவு ஆக்சிஜன் 21% , நைட்ரஜன் 78% கார்பன் ஆக்சைடு 0.04% ஆர்கன் மற்றும் இதர வாயுக்கள் 1% அதோடு குறைந்த ஈரப்பதம் என அறியப்படுகிறது. அதுவே வெளியிடப்படும் காற்றில் உள்ள வாயுக்கள் அளவு ஆக்சிஜன் 16% , நைட்ரஜன் 78% கார்பன் ஆக்சைடு 4% ஆர்கன் மற்றும் இதர வாயுக்கள் 1% அதோடு அதிக  ஈரப்பதம் என அறியப்படுகிறது. 

இந்த நைட்ரஜன் நீரில் மூழ்கி செல்பவர்களுக்கு ஆஸ்த்மா வரவழைக்கும் சக்தி உடையதாக குறிப்பிடுகிறார்கள். 

(தொடரும்)