Wednesday 24 November 2010

உலக மகா கலாச்சாரம்

இப்ப எல்லாம் எங்க இருந்து திருடி எழுதுறீங்க, ஏதாவது ஒரு படைப்பு வந்தா ஐயோ இது என்னோட கதை, திருடிட்டார் அப்படினு பரவலா ஒரு பேச்சு அடிபடுது. சுயமா சிந்திச்சி எழுதற அளவுக்கு யார்கிட்டயும் உண்மையிலேயே எந்த அறிவும் இல்லை. அங்க இங்க கிடைக்கிற விசயத்தை சிந்திச்சி நம்மளோட சொந்த சிந்தனை போல நாம  எழுதறோம்.  அப்படி எழுதுவதில்தான் எங்க திறமை இருக்கு அப்படினு  ஒப்புக் கொள்கிற தைரியம் முக்கால்வாசி பேருகிட்ட கிடையாது.

தானே அறிவின் சித்தன், இது கம்பன் பாடாத சிந்தனை என்கிற தொனியில நான் சிந்திச்ச மாதிரி யாருமே இப்படி சிந்திக்கவே இல்லை அப்படினு நினைக்கிற எழுத்துலக சிகாமணிகளே நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பது கிட்டத்தட்ட பல நூற்றாண்டுகளுக்கு பின்னால் என்பதை கொஞ்சம் மனதில் வைத்து கொள்ளுங்கள்.

சொல்லப்பட்ட விசயங்களை நாம் அணுகும் முறையை பொருத்தே அந்த விசயம் வித்தியாசமாக சிந்திக்கப்படுகிறது.

நீங்கள் புதிதாக என்ன கண்டுபிடித்தீர்கள், என்ன சிந்தித்தீர்கள் என ஒரு வெள்ளை தாளினை எடுத்து எழுதி பாருங்கள். உங்களால் ஒன்றுமே எழுத இயலாது. அப்படி நீங்கள் ஒருவேளை எழுதிவிட்டால் நீங்கள் உங்களையே ஏமாற்றுகிறீர்கள் என்றுதான் அர்த்தம். அதனால் வெள்ளை தாளில் எழுதும் முயற்சியை கைவிட்டு விடுங்கள்.

கலாச்சாரம் என்றால் என்ன?

அங்கீகாரத்திற்கு என வாழ்பவர்கள் தங்களை முன்னிறுத்தியே செயல்படுவார்கள், அதே வேளையில் சமூகம் பயன்பட வேண்டும் என நினைப்பவர்கள் தங்கள் எண்ணங்களை முன்னிறுத்தி செயல்படுவார்கள். தங்களை பற்றி பெரிதாக விளம்பரம் செய்யமாட்டார்கள். அப்படி என்றால் ஒரு கலாச்சாரம் சமூகத்திற்கு பயன் அளிக்கும் வகையில் இருத்தல் மிகவும் அவசியம். கலாச்சாரத்தின் மூலம் சகல உயிரினங்கள், தாவரங்கள் என மொத்த நிலப்பரப்பும், கடல்பரப்பும் பெருமை கொள்ள வேண்டும். ஆனால் எந்த ஒரு கலாச்சாரமும் இதன் அடிப்படையில் உருவானதாக எந்த சரித்திரமும் இல்லை.

இந்த கலாச்சாரம் பற்றி நீங்கள் அனைவரும் விபரமாக தெரிந்து கொள்ள வேண்டுமெனில் நான் திருடும் வரை நீங்கள் காத்திருக்கத்தான் வேண்டும்.

Monday 22 November 2010

முக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்? 1

காலம் என்று வந்த பின்னர் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என பிரித்து வைத்து பார்த்தாகிவிட்டது. ஆனால் இக்கணத்தில் எக்கணமும் இல்லை எனும் புத்தரின் கூற்று எத்தனை உண்மை என்பதை  எத்தனை மனிதர்களின் மனம் பரிசீலிக்கும்.

பல்லாயிரம் வருடங்கள் முன்னர் நடந்தது எது? இனிமேல் நடக்கப்போவது எது? நடந்து கொண்டிருப்பது எது? எனும் எண்ணங்களுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

முன்னாளில், இந்நாளில் இப்படிப்பட்ட எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் பல விசயங்கள் மனிதர்களுக்கு புலப்பட்டு இருக்கிறது. ஆதிகாலத்தில் எந்தவொரு கருவிகளும் இல்லாமலே பல விசயங்களை அனுமானிக்க முடிந்தது. இது ஒரு நிகழ்தகவு என கொள்ள இயலாது.

முனிவர் என்றால் முற்றும் துறந்தவர் என்பது பொருள் அல்ல. முனிவர் என்பவர் முக்காலமும் அறிந்தவர் என பொருள்படும். உண்மையிலேயே முனிவர்கள் இருந்தார்களா? இருக்கிறார்களா? எனும் கேள்விக்கு பதில் எவரிடம் இருக்கிறது என தேடி பார்த்தால் நம்மிடமே இருக்க கூடும். சித்தர் தன்னை சித்தர் என அறிவித்து கொள்வதில்லை. முனிவர் தன்னை ஒரு முனிவர் என முன்மொழிவதில்லை.

ஒரு விசயத்தை அணுகும்போது மனிதர்கள் அனைவருமே 'வாய்ப்பு' என்கிற தொனியில் அணுகாமல் இதுதான் சரி என்கிற தொனியில் அணுகும்போது அவர்கள் அந்த விசயத்தில் மிகவும் கெட்டித்தனமாக இருப்பதற்கு வாய்ப்பு அதிகம். இந்த மனிதர்களிடம் அஷ்டமா சித்திகள் அடங்கி இருக்கிறது என்கிறது சித்தர்கள் என போற்றப்படும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு. இந்த வரலாற்றில் எத்தனை உண்மை இருக்கிறது என்பது அலசப்பட, ஆராயப்பட வேண்டிய ஒன்று.

ஒரு ஆசிரியரின் அறிவினை சோதிப்பது அந்த ஆசிரியரை இழிவுபடுத்தும் நிகழ்வாகவே பெரும்பாலும் கருதுகிறார்கள், அந்த ஆசிரியர் உட்பட. ஆனால் உண்மை என்னவெனில் , இந்த சோதனை மிகவும் அத்தியாவசியம் ஆகிறது. ஆசிரியர் ஒருவர் தவறாக சொல்லித் தந்தால் அது தவறு என சுட்டி காட்டும் ஆற்றல் ஒரு சில மாணாக்கருக்கே உண்டு. விளக்கம் கேட்டல் எதிர்த்து பேசுதல் என்றாகிறது. நம்மில் முனிவர்கள் உண்டோ?

எதுவெல்லாம் நடக்கும் என எதிர்காலத்தை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் அனைவரிடத்திலும் உண்டு.  'இது நடக்கும்னு நினைச்சேன்' என நடந்தபின்னர் சொல்லும் மனிதர்கள் எத்தனை?

இதற்கு அனைத்துக்கும் விடையாய் அமைவது எது தெரியுமா?

(தொடரும்)

Friday 19 November 2010

அடியார்க்கெல்லாம் அடியார் 34

மதுசூதனன் திடீரென வேறு பாதையில் சென்றதை எவருமே கவனிக்கவில்லை. சிறிது தூரம் சென்றவர்கள் மதுசூதனனை காணாமல் தேடினார்கள்.
''சொல்லாமக் கொள்ளாமப் போய்ட்டானே'' என செல்லாயி அலுத்துக்கொண்டார். வைஷ்ணவியின் மனம் வருந்தியது. அன்று இரவு சிவன் கோவிலுக்குச் செல்லலாம் என சொன்னான் கதிரேசன். வைஷ்ணவியும் ஈஸ்வரியும் சம்மதம் சொன்னார்கள். 

இரவு சிவன் கோவில் சென்றபோது அங்கே வாசலில் மதுசூதனன் நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்து ''எங்கே போனாய்?'' என்றான் கதிரேசன். ''ஒரு அன்னை எனக்காக விரதம் முடிக்க பிரசாதம் செய்து வைத்திருந்தார் அங்கே சென்றேன்'' என்றான் மதுசூதனன். 

''
நீ பேசுறது எனக்குக் கொஞ்சமும் பிடிக்கலை, ஏண்டா இப்படி மாறின?, இதோ பாரு நீ பண்ணினது பாவம்'' என்றான் கதிரேசன். ''பாவம் பண்ணியவர் எவருமில்லை பாரினில்; பண்ணுவது பாவம் என அறிந்தால் அதை பண்ணுபவர் எவருமில்லை'' என்றான் மதுசூதனன். அப்போது ''சாமி உள்ளே வாங்க, உங்களுடைய உரையைக் கேட்க எல்லாரையும் உட்கார வைச்சிருக்கேன்'' என அழைத்தார் ஒருவர். ''இதோ இவர்களையும் அழைத்துக்கொண்டு உட்கார வையுங்கள், சிவன் கோவிலில் நுழைய இவர்களுக்கு தகுதி இருக்கிறதா என சோதித்துக் கொண்டிருக்கிறார்கள்'' என மூவரையும் காட்டிச் சொன்னான் மதுசூதனன். ''வாங்க, உட்காருங்க'' என அழைத்தார் அவர். 

''
மதுசூதனா, நீ என்னதான் பேசப் போகிறேனுப் பார்க்கிறேன்'' எனச் சென்றான் கதிரேசன். ''என் உரை அந்த சிவன் ஆற்றப் போவது'' என்றான் மதுசூதனன். முறைத்துப் பார்த்தவாரே கதிரேசன் கோவிலுக்குள் சென்று அமர்ந்தான். வைஷ்ணவியும், ஈஸ்வரியும் சென்று  அமர்ந்தார்கள். மதுசூதனன் பேச ஆரம்பித்தான். 

''
பொய்யென நம்மை பிறர் சொன்னால் பொறுக்கவும் இயலாதே; பொய்யாய் போனோமே நாமே இங்கே; மெய்யாய் வீற்றிருக்கும் சிவனைத் தொழுதே மெய்யாய் ஆகவும் முடியாதே; மெய்யும் பொய்யாய் போகக்கடவது; பொய்யே வாழ்வில் சித்தம்; பொய்யனாகிப் போனேன் நானும் நித்தம்;'' எனப் பேசியவன் ''நீங்கள் பொய்யோ'' எனக் கூட்டத்தைப் பார்த்துக் கேட்டான் மதுசூதனன். 

''
ஆமாம் ஆமாம்'' என ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டே சொன்னார்கள். ''பொய் என சொல்லியே உண்மை உரைத்தீர்களே நீங்கள் இன்னமும் பொய்யோ'' என்றான் மதுசூதனன். கூட்டம் அமைதியானது. ''சிவன் அறிவீரோ இச்சிவன் ஒன்றே தான் அறிவீரோ'' எனச் சொன்ன மதுசூதனன் ''இச்சிவனுக்கு அடியார் எவரோ இவ்விடத்தில்'' என்றான் மதுசூதனன். ''நீங்கதான் சாமி'' என்றனர் கூட்டத்தில் இருந்தவர்கள். 

''
எம்மை அடியார் என சொல்லி எம் மனம் குளிர்வித்தீர்; இச்சங்கரன்கோவிலில் இச்சிவனுக்கு யாம் அடியாராய் அவதரித்தோம்; எமக்கும் ஒரு அடியார் வேண்டும்; அந்த அடியார் எவரோ இவ்விடத்தில்'' எனக் கேட்டான் மதுசூதனன். கூட்டத்தில் இருந்த சிலர் உங்கள் அடியாராக இருக்கிறோம் என சம்மதம் சொன்னார்கள். புன்முறுவலுடன் மதுசூதனன் கைகள் கதிரேசனை நோக்கியது. ''அதோ அவரே என் அடியார்'' என்றான் மதுசூதனன். கூட்டத்தில் இருந்தவர்கள் கதிரேசனை சாமியிடம் போ போ எனச் சொன்னார்கள்.

''
அவன் என் காலேஜிலப் படிச்சவன், இப்போ இப்படி வேசம் போடுறான், அவனுடைய காதலி இதோ இங்கே இருக்கா'' என வைஷ்ணவியைக் காட்டினான் கதிரேசன். ஈஸ்வரி பதட்டம் அடைந்தாள். வாங்க போயிரலாம் என சொன்னாள். கூட்டம் மதுசூதனைப் பார்த்து சாமி இது உண்மையா? என்றது. ''உண்மையாய் அது இருக்கவே யாம் பொய்யனாகிப் போனோம்'' என்றான். ''சாமிக்கு அடியாராக இருக்கிறதுல எவ்வளவு ஆனந்தம், போப்பா'' என்றது கூட்டம். ''முடியாது இப்படி ஒரு பொய்யானவனுக்கு என்னால் அடியாரா இருக்க முடியாது நான் சிவனுக்கு மட்டுமே அடியார்'' என கோபத்துடன் சொன்னான் கதிரேசன். ''நீ எப்படி சிவனுக்கு அடியார், அந்த சாமி மட்டும் தான் சிவனுக்கு அடியார், நாம வேணும்னா அந்த சாமிக்கு அடியாராக இருப்போம்'' என சிலர் சொன்னார்கள். 

கதிரேசன் எழுந்தான், சிவன் சன்னதி முன் நின்றான். பாடினான். பாடலைக் கேட்டு மொத்தக் கூட்டமும் அப்படியே எழுந்து நின்றது. ஈஸ்வரியின் கண்களில் கண்ணீர் வழிந்தது. 

''
சிவனே பொய்யாய் போவோர்க்குத்தான் இவ்வுலகம் மெய்யோ
தவம்புரிதலும் தன்னிலைமறத்தலுமே உனக்கு இதமோ
உத்தமியின் கரம்பற்றிட உன்னடியார் ஆகிடாது போவேனோ
சத்தமின்றி இனியுமிருப்பாயோ சொல்சிவனே''
எல்லோரையும் அமரச் சொன்னான் மதுசூதனன். அனைவரும் அமைதியாய் அமர்ந்தார்கள். ''குடும்ப வாழ்க்கையில் இருந்து கொண்டு சிவனின் அடியாராக இருந்திட வாய்ப்பில்லை, ஆனால் எனக்கு அடியாராக இவர் இருக்கலாம் ஆகவே இவர் என் அடியார்'' என்றான் மதுசூதனன். மதுசூதனன் சொன்னதைக் கேட்டு உடனே அமர்ந்த கூட்டத்தைக் கண்டு ஆச்சரியமடைந்தான் கதிரேசன். ஈஸ்வரியும், வைஷ்ணவியும் வெளியேச் செல்லக் காத்திருந்தனர். 

கதிரேசன் மதுசூதனின் அருகில் வந்தான். ''சிவனுக்கும் குடும்பம் உண்டு, எனவே குடும்ப வாழ்க்கையில் இருப்போரே சிவனின் அடியார், ஆகவே நானும் சிவனின் அடியார்'' என்றான் கதிரேசன். ''இதோ இவர் சிவனின் அடியாராம், எங்கே சிவனை வரச் சொல்லுங்கள் பார்க்கலாம்'' என்றான் மதுசூதனன். கூட்டத்தில் இருந்த ஒருவர் ''அவர் வரச் சொல்றது இருக்கட்டும் சாமி, எங்கே நீங்க சிவனை வரச் சொல்லுங்க'' என்றார். கதிரேசன் இதுதான் தக்க சமயம் எனக் கருதி ''எங்கே வரச் சொல் பார்க்கலாம், அப்படி அவர் வந்தால் நான் உனக்கு அடியாராக இருக்கச் சம்மதிக்கிறேன், அப்படி வராது போனால் என்ன செய்யலாம் உன்னை'' என்றான் கதிரேசன். 

மதுசூதனன் புன்னகை புரிந்தான். எந்த ஒரு கலக்கமும் இல்லாதவனாய் ''யாம் சிவனை வரச் சொல்லும் முன்னர் எங்கே நீவீர் சிவனை வரச் சொல்லும்'' என்றான் மதுசூதனன். ''என்னால் இயலாது, நீயே முயற்சி'' என்றான் கதிரேசன். ''சொல்சிவனே என பாடும் பாடலெல்லாம் எதற்காக, சிவன் சொல்வார் எனும் நம்பிக்கையா அல்லது சிவன் சொல்லமாட்டார் எனத் தெரிந்து கேட்பதா என்பதைச் சொல்லவும். இயலாது என விட்டுவிடுவது உம்மைப் போன்றோருக்கு, இயலும் என முயல்வது எம்மைப் போன்றோருக்கு'' என்றான் மதுசூதனன். 

''
சிவனைக் கூப்பிடுங்க சாமி'' என்றார் அதே நபர். ''இதோ வரச் சொல்கிறேன்'' என்றான் மதுசூதனன். கதிரேசன் ஆச்சரியமடைந்தான். ஈஸ்வரியிடம் சென்று நின்று கொண்டான். ''என்ன சொல்றான் இவன், எல்லாத்தையும் கேட்டு கூட்டமும் ஆவலா இருக்கு, என்ன ஈஸ்வரி இது'' என ஈஸ்வரியிடம் சொன்னான். ''அவன் பொய்யனாகிப் போனானு சொன்னான்ல அதை நிரூபிக்கப் போறான், வாங்க நாம போகலாம்'' என்றாள் ஈஸ்வரி. ''சிவன் வருவாரோ'' என்றான் கதிரேசன். ''பைத்தியமா உங்களுக்கு, சிவன் எல்லாம் வரமாட்டார்'' என்றாள் ஈஸ்வரி. 

மதுசூதனன் பேச ஆரம்பித்தான். ''பல்லாயிரம் கோடி காலநிலைகள் முன்னே பரம்பொருளே இவ்வுலகம் எல்லாம் உருவாக்கினாய். தோற்றம் இல்லா நிலை கொண்டோனே, நீவீர் தோன்றினீர் என்றே இவ்வுலகம் பொய்யாய் அறியும். யாம் உம்மை அழைக்கின்றோம் என்பதற்காக தோற்றம் கொள்வீரோ'' என்றான் மதுசூதனன். கூட்டம் பரபரப்பானது. கண்கள் மூடினான். பின்னர் தொடர்ந்தான். 

''
மெய்யாய் இருப்போர்க்கே மெய்யானவன் இப்பொழுது தெரிவார், நீங்கள் அனைவரும் மெய்யோ'' என்றான் மதுசூதனன். ''ஏலே என்ன காதுல பூ சுத்துதேலா, மெய்யாய் இருப்போர்க்கே மெய்யானவர் தெரிவார்னு சொல்லுறீரு, பொய்யனாய்ப் போன உம்ம பேச்சு கேட்டு எப்படிலே அந்தச் சிவன் வருவாரு, இங்கே இருக்கறவகளுக்கு புத்திகெட்டுப் போச்சுனு நினைச்சியாலே நானும் அப்பத பிடிச்சிப் பார்க்கறேன் அடியார்னு சொல்லுத அந்தப் பயலை உன் அடியாருனு சொல்லுத ஏன்லே உன்னை எவனும் கேள்வி கேட்கமாட்டானு நினைச்சியாலே'' என்றார் அவர். 

''
சாமியை மரியாதைக் குறைவா பேசாதீங்க அவர் சொன்னது சரிதானே நாம மெய்யாய் இருந்தாத்தான் மெய்யானவர் தெரிவார்'' என கூட்டம் ஏற்பாடு பண்ணியவர் சொன்னார். ''அப்போ பொய்யாய் போனவன் கூப்பிட்டா மெய்யானவர் வருவாகளோ, கோவிலுக்கு வெளியில அவன் வரட்டும்லே உசிரோட எங்கயும் போகமாட்டாம்ல அவன்'' எனப் பேசிவிட்டு கதிரேசனிடம் சென்று ''நல்லா பாடினலே, நீதாம்லே உண்மையான அடியார்'' எனச் சொல்லிவிட்டு விறுவிறுவென அவர் வெளியேறினார். வைஷ்ணவி கலக்கம் அடைந்தாள். மதுசூதனன் அந்தப் பேச்சைக் கேட்டு கலக்கமின்றி உடனே அவ்விடம் விட்டு எழுந்தான். ''யாம் வெளியே செல்கிறோம், அவரது ஆசை தீரட்டும்'' என சொல்லிவிட்டு வெளியே நடந்தான். 

கூட்டம் தவித்தது. என்ன ஆகப்போகிறதோ என அச்சத்துடன் மதுசூதனனைத் தடுத்தார்கள். வைஷ்ணவி ஓடிச்சென்று ''மதுசூதனா இதெல்லாம் வேண்டாம்டா'' என்றாள். அதையும் மீறி கோவிலுக்கு வெளியே மதுசூதனன் வந்தான். ''சாமி வேண்டாம்'' என்றது கூட்டம். சொன்ன கூட்டம் பதட்டத்துடன் பார்த்து நின்றது. மதுசூதனன் வெளியே வந்ததைப் பார்த்ததும் உள்ளே பேசிய நபர் ''உனக்கு ரொம்பத் தைரியம்லே இரும்லே வாரேன் உன்னை இந்த இராத்திரியிலேயே சிவலோகம் அனுப்புதேன்'' என வேகமாகச் சென்றார். 

வைஷ்ணவி மதுசூதனனிடம் ''உன் உயிருக்கு ஆபத்து வா போகலாம்'' என்றாள். ''வரட்டும் அந்த நபர், யாம் இங்கேயே காத்திருப்போம்'' என்றான் மதுசூதனன். மதுசூதனனின் செய்கையை கண்டு கதிரேசன் ஆச்சரியமடைந்தான். 

(தொடரும்)