Friday 6 August 2010

ரஜினியை மறந்த ஐஸ்வர்யாராய் பச்சன்

என்னைக்கு படம் வரும், என்னைக்கு பாட்டு கேட்க முடியும் என இருந்த காலங்கள் எல்லாம் மாறி போயின.

உடனுக்குடன் எங்கோ நடப்பதை எங்கோ இருந்து நேரடியாகவே காண முடிகிறது. தகவல் தொழில்நுட்பத்தின் இந்த முன்னேற்றம் மிகவும் பாராட்டுக்குரியது.

எப்போதும் போலவே பெரும்பாலான எளியோர், வறியவர் எல்லாம் அந்த நிலையில் மட்டுமே இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த வாழ்க்கை மட்டுமே பிடித்து போனதா? அல்லது வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள தவறிவிட்டார்களா? வாய்ப்பு இருந்தும் புறக்கணிக்கப்பட்டார்களா?

ரஜினி எனும் மனிதர் உழைப்பால் முன்னேறி இருக்கிறார். அவர் எடுத்துக்கொண்ட தொழில் அதிக பணம் ஈட்டும் தொழில். ஆனால் அந்த தொழில் கூட அனைவராலும் அதிக பணம் ஈட்ட முடிவதில்லை. துணை நடிகராகவே வாழ்ந்து முடித்தவர்கள் பலர். நடிக்க முடியாமல் நீடிக்க இயலாமல் ஒதுங்கி போனவர்கள் பலர். ரஜினியின் வெற்றிக்கு ரஜினி மட்டுமே காரணமல்ல என்பதை ரஜினி நன்றாகவே தெரிந்து வைத்து இருக்கிறார்.  ரஜினியை விட அதிக உழைப்பை சிந்தியும் எந்த நிலையிலும் முன்னேற இயலாமல் வாடி வரும் விவசாய மக்களை பார்த்து உழைப்பால் முன்னேறலாம் என சொன்னால் 'கையும் காலும் தானே மிச்சம்' என இவர்களது வாழ்க்கையை பாடி வைக்கத்தான் இயலும்.

ஒரு திரைப்படத்திற்கு அனுமதி சீட்டு வாங்கும்போது விலைவாசி எல்லாம் கண்ணுக்குத் தெரிவதில்லை. அதே வேளையில் தக்காளி விலை ஒரு பத்து பைசா அதிகம் எனில் அரசுதனை திட்டாமல் எவரும் இருந்ததில்லை.

லாபம் கிடைக்கும் விசயத்தில் மட்டுமே வியாபாரிகள் வியாபாரம் செய்வார்கள் என்பது மறுக்க முடியாத நியதி.  எந்திரன் எனப்படும் திரைப்படத்திற்கு செலவழிக்கப்பட்ட பணம் தனை நினைத்தால் பல விவசாயிகள் மயக்கம் போட்டு விடுவார்கள். கூட்டுறவு வங்கி மூலம் கடன் அவர்களுக்கு கிடைப்பதே பெரிய விசயம். இதைப்  போலவே வெளிநாடுகளில் எடுக்கப்படும் பல திரைப்படங்களின் செலவு பல்லாயிரம் கோடிகள். இந்த பணம் எல்லாம் எப்படி வசூல் ஆகிறது. மக்கள். மக்கள். மக்கள். இந்த திரைப்படங்களை மக்கள் புறக்கணித்தால் என்ன ஆகும்? ஆனால் மக்கள் புறக்கணிக்கமாட்டார்கள். காரணம் மிகவும் எளிது. கற்பனையினிலும், கனவுகளிலும் சஞ்சாரிக்கும் மக்கள் மிக மிக அதிகம். மேலும் அன்றாடம் உழைத்து வாழும் மக்களுக்கு இந்த திரைப்படம் ஒரு பொழுது போக்கு சாதனமாக திகழ்கிறது.  மக்கள் சக்தி என்பது எத்தனை பெரிய சக்தி. மக்களின் விருப்பத்தை நாம் குறை கூற இயலாது. கேளிக்கை, விளையாட்டு என நமது கவனம் அதிகமாகவே இருக்கத்தான் செய்யும்.

தற்போது வெளியிடப்பட்ட எந்திரன் இசை, பாடல் வெளியீடு பலரின் கவனத்தை ஈர்த்தது என்றால் மிகையாகாது. மிகவும் பிரமாண்டமாகவே நடத்தப்பட்டு இருக்கிறது. எந்திரன் குழுவினருக்கு வாழ்த்துகள். இதில் ரஜினியின் பேச்சு மிகவும் எளிமையான பேச்சு. வெற்றியை தக்க வைத்து கொள்வது என்பது அத்தனை எளிதல்ல என்பதை நன்றாகவே உணர்ந்து இருக்கிறார். எத்தனை கோடிகள் போட்டு படம் எடுத்தாலும் மக்கள் நினைத்தால் ஒன்றுமே இல்லாமல் போய்விடும் என்பதையும் அறிந்து வைத்து இருக்கிறார்.

ஐஸ்வர்யாராய் பேசும்போது அனைவருக்கும் நன்றி சொன்னவர், ரஜினியை மறந்தே போனார். அவரது பேச்சின் இடையில் ஒரு விசயம் சொல்லிவிட்டு நான் சொல்வதை ஒப்பு கொள்வீர்கள்தானே ரஜினி சார் என குறிப்பிட்டார். அதனால் ரஜினிக்கு நன்றி சொல்லிவிட்டோமோ என நினைத்தாரோ என்னவோ. ரஜினியை மட்டும் விட்டுவிட்டு அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டு கிளம்பியவரை விவேக் நினைவு படுத்தினார் போலும். திரும்ப வந்தவர் ஆரம்பித்த விதம் 'அட' என சொல்ல வைத்தது. சாதனையாளர்கள் தங்கள் தவறுகளை மிகவும் எளிமையாக சமாளித்து விடுகிறார்கள்.

வெற்றியாளர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நம்மில் பலருக்கு நிறையவே இருக்கும். எவரிடமும் கற்று கொள்ள தேவை இல்லாதது நன்றி மறவாமல் இருப்பது. நமக்கு உணவுக்கு வழி செய்து தரும் விவசாயிகளுக்கு நாம் நன்றி உடையவர்களாக இருப்போம். அவர்களுக்கு நம்மாலான உதவிகள் கிடைக்க வழி செய்வோம்.

Thursday 5 August 2010

விருதுகளும் நானும்

அழகா இருக்கேடா
என் கண்ணு பட்டுடும் போலிருக்கு 

அம்மா அன்பாய்
அணைத்து தந்த முத்தம்

என் பிள்ளை சிங்கக்குட்டி
கட்டிபிடித்த தந்தை

வெற்றி கூட
வெறுமையாய்  தெரிகிறது 
தோல்வியில்
துடிதுடித்து இருப்போரை
நினைக்கையில்!

Wednesday 4 August 2010

கம்யூனிசமும் கருவாடும் - 3

கருவாடுவுக்கும் கம்யூனிசத்துக்கும் என்ன சம்பந்தம்? இது சந்தத்திற்காக எழுதப்பட்டதா?
காதலும், கத்தரிக்காயும் எனும் சொல்வழக்கு போன்றதா? எனும் கேள்விகளும், மேலும் கம்னியூசத்தை அவமதித்து எழுதுவது போன்ற ஒரு பிரமையும் உருவாவதை தவிர்க்க இயலவில்லை என்பதற்காக வருந்துகிறேன்.

கருவாடுவுக்கும் கம்யூனிசத்திற்கும் சம்பந்தம் உண்டு.  சாதாரணமாக மீன்கள் நீரில் துள்ளி விளையாடும். தண்ணீரில் கலந்திருக்கும் பிராண வாயுதனை சுவாசித்து தனக்கென குடில்கள் எதுவும் அமைத்து கொள்ளாமல் நீந்திக் கொண்டு திரிவதுதான் மீன்களின் வேலை. இந்த மீன்கள் யாருக்காகவும் அடிமைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இவை சுதந்திரமாக நீரினில் திரியும்.

குளமோ. குட்டையோ, அருவியோ, நதியோ, கடலோ இந்த மீன்கள் நினைத்த மாத்திரத்தில் ஓரிடம் விட்டு ஓரிடம் செல்லும் வாய்ப்புதனை பெற்றிருக்கும். மீன்கள் வேட்டையாடும் வழக்கம் வைத்திருப்பதில்லை. இந்த மீன்கள் வகை வகையாக இருக்கும். இப்படிப்பட்ட மீன்கள் நீர் வாழ் உயிரின வகையை சார்ந்தது என்பதை அனைவரும் அறிவார்கள். இந்த மீன்கள் நிலத்திற்கு வந்தால் காற்றில் கலந்திருக்கும் பிராண வாயுவை உட்கொண்டு வாழ இயலாது. சில நிமிட மணித் துளிகளில் இறந்துவிடும்.

அப்படி இறந்து போன மீன்கள்தனை உப்புதனை தடவி வெயிலில் காயப் போட்ட பின்னர் அந்த மீன்களின் பெயர் கருவாடு. இப்பொழுது இந்த கருவாடு பல காலத்திற்கு கெடாமல் பாதுகாக்கலாம். வகை வகையாக இருந்த மீன்கள் ஒரே ஒருவகையான கருவாடு என மாறிவிடும். அதாவது பல்வேறு வகையாக பிரிந்து நிற்கும் மனிதர்கள் இறந்தவுடன் பிணம் என அழைக்கப்படுவதை போல. அந்த கருவாடுதனை கூட நெத்திலி கருவாடு, அத்திலி கருவாடு என பிரித்து விடுவார்கள் என்பது வேறு விசயம். கம்யூனிசத்திலும் அத்தகைய பிரிவுகள் உண்டு.

சுருங்க சொன்னால் இந்த கம்யூனிசம் அதுதான். எல்லா நிலைகளின் அதாவது சோசியலிசம், கேப்பிடலிசம், மாவோயிசம், மார்க்சிசம், லெனினிசம், ஸ்டாலினிசம் என எல்லாவற்றையும் கடந்த இறுதி நிலை.

இந்த கம்யூனிச தத்துவத்தில் சுதந்திரமாக வாழும் அனைத்து பறவைகளும், விலங்குகளும் அடங்கும். கம்யூனிசம் என்பது விலங்கினங்கள், பறவைகளுக்கு மிகவும் எளிதாகவே பொருந்தும். இதில் மனிதர்கள் மட்டுமே விதிவிலக்கு. அதனால்தான் சிந்தனையை  தன்னிடமிருந்து கார்ல் மார்க்ஸ் வெளிபடுத்தினார். கார்ல் மார்க்ஸ் அவர்களின் சிந்தனை புரட்சிகர சிந்தனை என அழைக்கப்படுகிறது. இங்கேல்ஸ் மற்றும் கார்ல் மார்க்ஸ் இருவரும் இணைந்து பணியாற்றினாலும், கார்ல் மார்க்ஸ்தான் பெரிதளவு போற்றபடுகிறார்.  அதற்கு காரணம் கார்ல் மார்க்சின் சிந்தனை வளமும் இங்கேல்சின் பெருந்தன்மையும் என சொல்லலாம். இங்கேல்ஸ், கார்ல் மார்க்ஸ்தனை மிகவும் அதிகமாகவே புகழ்ந்தார்.கம்யூனிசத்தின் முழக்கம் என்னவெனில் 'உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்' என்பதுதான்.

ஜெர்மனியில் இருந்து பிரான்ஸ் நாட்டில் வேலை பார்த்த ஜெர்மனியர்கள் ஒன்று கூடி 1836ம் வருடம் ஒரு அமைப்பினை உருவாக்கி இருந்தார்கள். அது குறித்தும், இங்கேல்சும், கார்ல் மார்க்சும் வெளியிட்ட கம்யூனிச தத்துவ கொள்கைகளை அடுத்து பார்ப்போம்.

அதற்கு முன்னர், மனிதர்கள் விதி விலக்கு என சொன்னாலும், கம்யூனிசம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறது என்பதான தோற்றம் இருக்கும். தந்தை சம்பாதிப்பார். தாயும் பிள்ளைகளும் தந்தையிடம் இருந்து பெற்று கொள்வார்கள். ஒருவர் உழைக்கும் திறன் உடையவர். அவரது உழைப்பால் மற்றவர் பயன் பெறுகிறார்கள். இதைத்தான் கம்யூனிசம் சொல்கிறது. உழைப்பவர்கள் உழைக்கும் வாய்ப்பு அற்றவர்களையும் காப்பாற்றி கொள்ளுங்கள் என. இங்கே தந்தை முதலாளி போல நடந்து கொண்டு குடும்பத்திற்காக பாடுபடும் தாய்க்கும், குழந்தைக்கும் போதிய வசதிகள் செய்து தரவில்லையெனில் தாயும் குழந்தையும் சுரண்டபடுகிறார்கள் என்பதே பொருள். இந்த விசயத்தை கிராமம், நகரம், மாநிலம், நாடு, உலகம் என எல்லாவற்றிலும் கொண்டு வருவதே உண்மையான கம்யூனிசம் என்கிறது கோட்பாடு. வீட்டுக்கு சரி, எப்படியாவது சமாளிக்கலாம், உலகத்துக்கே என்றால்?

சோசியலிஸ்ட் , கம்யூனிஸ்ட் என இரண்டுக்குமே தமிழ் அகராதியில் பொதுவுடைமைவாதி என்றே இருக்கிறது. கார்ல் மார்க்ஸ் அவர்களை சோசியலிஸ்ட் , கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் என்றெல்லாம் சொல்கிறார்கள். கம்யூனிசம் என்பதே இவ்வுலகில் இல்லை என்பதை சுட்டிக்காட்டத்தான் மார்க்சிசம், லெனினிசம், ஸ்டாலினிசம் எல்லாம் தோன்றியது என்பதை இங்கே சுட்டிக்காட்ட விழைகிறேன்.

(தொடரும்)