Thursday 7 January 2010

உண்மை வேறு நம்பிக்கை வேறு

ஆன்மிகப் பாடல்கள் என்றால் மிகவும் விருப்பமாகவே பலருக்கும் இருக்கும். இறைவனை நினைத்து எழுதப்பட்ட பாடல்கள் என்றே மனம் நினைத்து நினைத்து பெருமிதம் கொள்ளும். பலரின் கண்களும் நீர் கோர்த்துக் கொண்ட தருணங்களும் அதிகம் உண்டு. மனதில் இருக்கும் மென்மை உணர்வினைத் தழுவிச் சென்ற ஆன்மிக பாடல்களைக் கேட்கும்போது பலமுறை யோசித்தது உண்டு. ஏனிந்த நிலை என?

அமைதியான சூழ்நிலையை விரும்பும் உயிரினங்கள் மிகவும் அதிகம் உலகில் உண்டு என எடுத்துக் கொள்ளலாம். அமைதியாக இருக்கும்போது நமக்கு ஆனந்தமாக இருக்கும். அதே வேளையில் விழாக்காலங்களில் ஏற்படும் சப்தங்களும் நமக்கு ஆனந்தமாக இருக்கும். ஆனால் இதே சப்தமானது சண்டைகளின் போது ஏற்பட்டால் நமது ஆனந்தம் தொலைந்து போய்விடும். இப்படி பலவிதமான உணர்வுகளை நம்மிடம் நாம் ஏற்படுத்தியதன் நோக்கம் எதுவென ஆராய்ந்து கொண்டிருக்க ஆவல் அதிகமாகவே இருந்தது. இதில் எப்படி இறை உணர்வை மட்டும் தனிமைப்படுத்திப் பார்ப்பது எனப் புரியாமலேதான் இருக்கிறது.

ஒரு விசயத்தை நமக்குப் பிடித்தமானவர் சொல்லும்போது அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும், நமக்குப் பிடித்தமில்லாதவர் சொல்லும்போது அதை ஒதுக்கித் தள்ளும் பக்குவமும் நமக்குள் ஏற்பட்டது எவ்வாறு எனச் சிந்தித்தபோது பல விசயங்கள் புரியப்படாமலே இருந்து ஒதுங்கிப் போவதுண்டு. இதற்கெல்லாம் ராசிகளும், நட்சத்திரங்களும் கூட கூட்டுச் சேர்ந்து கொண்ட விதம்தனை கூட படித்துப் பார்த்து அறிந்து கொள்ள அவசியம் வந்ததுண்டு.

முதலில் சொன்ன பாடலையே சிந்தித்துப் பார்க்கலாம். காதலன் காதலியை நோக்கி எழுதும் பாடல். காதலி காதலனை நினைத்து எழுதும் பாடல். இதே பாடலை இறைவனுக்கும் இணைத்துப் பார்க்கலாம். மிகவும் பொருந்தித்தான் போகிற‌து. யோசித்தேன், மனிதர்கள் செய்யும் செயல்களை நாம் எதனுடனும் இணைத்துப் பார்த்தாலும் அது போலவேத் தோற்றம் எடுத்துக்கொள்ளும்படி நமக்குள் ஒரு வித எண்ண ஓட்டம் ஓடிக்கொண்டிருந்த நிலையை கண்டு பிரமிப்பு ஏற்பட்டது.

ஒரு விசயத்தை எப்படி நீ பார்க்க நினைக்கிறாயோ அப்படியே அந்த விசயம் தன்னை மாற்றி அமைத்துக்கொள்கிறது எனச் சொல்ல இயலுமா? அந்த விசயம் மாற்றம் கொள்ளவில்லை, ஆனால் அந்த விசயத்தை மாற்றியமைத்துக் கொண்டது நமது எண்ணம். இதற்கு மூல காரணன் யார்? நம்பிக்கை.

உண்மை வேறு, நம்பிக்கை வேறு என எவரேனும் பிரித்துப் பொருளுணர்ந்து கொள்ள முனைந்திருப்போமானால் இன்று உலகில் பல்வேறு சர்ச்சைகள் இருந்திட நியாயமில்லை. ஒருமுறை இருவரிடம் நடந்த ஒரு உரையாடலைக் கேட்க நேர்ந்தது.

'கடவுளிடம் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?'

'இல்லை'

'அப்படியெனில் கடவுளிடம் நம்பிக்கை இல்லையா?'

'இல்லை'

'நீங்கள் கடவுளை நம்பவில்லை எனலாமா?'

'அப்படியே சொல்லலாம்'

'நீங்கள் மிகவும் சிறந்த ஆன்மிகவாதி என்று கருதியது என் தவறா?'

'அதுகுறித்து என்னால் எதுவும் சொல்ல இயலாது'

'கடவுள் இருக்கிறாரா, இல்லையா?'

'இருக்கிறார்'

'பின்னர் ஏன் கடவுள் மீது நம்பிக்கை இல்லை எனச் சொல்கிறீர்கள்?'

'இருக்கிறது எனச் சொல்வதற்கு நம்பிக்கையின் தேவை அவசியம் எனில் அங்கே இருக்கிறது எனச் சொல்லப்படுவதன் அர்த்தம் சந்தேகத்துக்கு உட்படுகிறது'

'எனக்குப் புரியவில்லையே, கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்கிறீர்கள், ஆனால் கடவுள் இருக்கிறார் என்கிறீர்கள்'

'ஒன்றை நம்புவது வேறு, ஒன்று இருக்கிறது என அறிந்துணர்வது வேறு. நாம் நம்பும் விசயத்தை பிறர் நம்பும்படி நாம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது, அதன் காரணமாக நம்பிக்கையில்லாத் தன்மை ஏற்பட வாய்ப்பு அமைத்து தந்துவிடுகிறோம்'

'என்னதான் சொல்கிறீர்கள், கொஞ்சமும் விளங்கவில்லை, கடவுளை நம்புகிறீர்களா, இல்லையா?'

'கடவுளை நான் நம்பவில்லை, ஆனால் கடவுள் இருப்பதாக உணர்கிறேன்'

'புரியும்படிச் சொல்லுங்கள், என்னை நீங்கள் நம்புகிறீர்களா?'

'இல்லை'

'எனக்குப் புரிந்துவிட்டது ஐயா, நீங்கள் மிகச் சிறந்த ஆன்மிகவாதி'

இந்த உரையாடல் முடிந்ததும் எனக்குள் ஒரு பாடல் ஒலித்தது. கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும்...

நானும் சிந்தித்துப் பார்த்தேன், நம்பிக்கை இல்லாத பட்சத்தில் இறைவன் இல்லாது ஒழியக்கூடும் அல்லவா? அப்போதே மனதுக்குள் ஒரு எண்ணம் எழுந்தது. நம்பிக்கை இல்லாத போதிலும் அவன் இருந்து கொண்டுதானிருக்கிறான் என்பதை எவரையும் நான் நம்ப வைக்கவேண்டிய அவசியம் எனக்கு ஒருபோதும் ஏற்படப் போவ‌தில்லை.

அது இருக்கட்டும், நம்பிக்கையினால் மட்டுமா இறைவன் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்?

உண்மை எது?

உண்மை என்றால் என்ன என்பதை வரையறுத்துக் கொள்ளும் பட்சத்தில் உண்மையின் சொரூபமாக இறைவன் விளங்குகிறாரா, விளங்கவில்லையா என்பது தெரிந்துவிடும். எப்படி உண்மை என்று உருவானது எனத் தேடி தேடிக் களைத்துப் போனேன். களைத்திருந்த வேளையில் அவ்வழிதனை கடந்த ஒருவர் சொல்லிச் சென்றார், உண்மை ஒருநாள் வெளி வரும். ஒளிந்திருக்கத்தானா உண்மை? மறைந்திருக்கத்தானா உண்மை? ஒரு உண்மையை பற்றி விளக்கக்கூட ஒரு பொய்மை நிகழ்வுதானா தேவைப்படுகிறது? சிந்தித்துப் பார்க்கையில் இறைவன் இஷ்டம் போல சிரிக்கிறான்.

ஒரு நிகழ்வு நடக்கிறது, அந்த நிகழ்வு உண்மையிலே நடந்ததா எனும் கேள்வி எழுகிறது. அதாவது ஒன்று நடந்தது எனில் அது எவ்வாறு நடந்தது, எந்த முறையில் நடந்தது எனும் விளக்கங்கள் தேவைப்படுகிறது. அந்த நிகழ்வினைப் பார்க்கும் தனித்தனி நபர் சொல்லும்போது ஒவ்வொருவரின் விளக்கமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இதன் காரணமாக அங்கே நிகழ்வின் தன்மை மாற்றம் கொள்கிறது. உண்மையான நிகழ்வு என்பது இப்போது பல சந்தேகங்களுக்கு உட்பட்டு தள்ளாடித் தவிக்கிறது. ஒரு அரை மணி நேரம் முன்னர் நடந்த விசயத்தையே நம்மால் புரிந்து கொள்ள இயல்வதில்லை, அதன் தன்மையை அப்படியே நம்மால் விவரிக்க இயல்வதில்லை. இதைத்தான் எந்தவொரு ஆராய்ச்சியும் ஒரு பொருளின் தனித்தன்மையை முழுவதுமாகச் சொல்லிவிட இயல்வதில்லை என ஒருவர் அழகாக எழுதி வைத்ததை உண்மை என்றே இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறேன். அதுதான் உண்மையா என எப்படிச் சோதித்து கண்டு கொள்வது, எந்த சோதனைப் பயிற்சியைச் செய்து பார்ப்பது? புரியவில்லை. இதன் காரணமாக உண்மை எதுவென இன்னமும் தெரியவில்லை.

உண்மை எதுவெனத் தெரியாதபோது எப்படி இறைவன் உண்மையின் சொரூபமாகத் திகழ்கிறார் எனச் சொல்வது? நல்லது நடக்க வேண்டுமெனில் ஒரு பொய் என ஓராயிரம் பொய் கூடச் சொல் என்கிறது முன்னோர்களின் அறிவு. ஒரு பொய்தனைத் திரும்பத் திரும்பச் சொல்லும்போது அதுவே உண்மையாகிவிடுகிறது என்கிறது ஆய்வுகளுக்கு உட்படாத அறிவு. பொய் என்பது என்ன என எண்ணிப் பார்த்தோமெனில் உண்மையைத் தவிர்த்த அறிவு எனக் கொள்ளலாம். இருப்பதன் அடிப்படையில், அந்த அந்த அறிவுக்கு அடிப்படையில் ஒரு நிகழ்வினைப் பார்க்கும்போது, அந்த நிகழ்வுக்கான காரணிகள் என காணும்போது உண்மை எது, பொய் எது எனும் நிலைத் தடுமாற்றம் என்பது ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. அறிவு என்றால் எதுவெனச் சிந்தித்துப் பார்த்தேன்.

அறிவு என்பதன் அர்த்தம் அறிந்து கொள்வது எனப் பொருள்படும்படி வைத்துக் கொள்ளலாம். அவரவர் அறிந்து கொள்வது அனைவரும் அறிந்து கொள்வது என்றாகாது, அனைவரும் அறிந்து கொள்வது என்பது அவரவர் அறிந்து கொள்வது என்பதும் ஆகாது. அப்படியெனில் அறிவு என்பது பொதுவான கருவி. இருப்பதை வைத்து அறிந்து கொள்வது என வரும்போது அதற்கான காரணிகள் கிடைக்கும். இல்லாத ஒன்றை வைத்து அறிந்து கொள்வது என்பது கற்பனை அறிவு என கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அப்படியெனில் கற்பனையும் கூட உண்மையின் வசம் தன்னை ஒப்படைத்து இருந்திருக்கக் கூடுமோ?

Monday 4 January 2010

முயல் கறி


ஐந்தாம் வகுப்பு பள்ளித் தோழிகள் சந்தியா, விந்தியா.

சந்தியாவுக்கு ஏதாவது பிரச்சினை எனில் விந்தியா முதல் ஆளாய் நிற்பாள். சந்தியாவும் அவ்வாறே.

இருவரது ஊரும் பத்து நிமிடத்தில் நடந்து செல்லுமாறு அமைந்து இருந்தது. இரு ஊர்களுக்கும் இடையில் விவசாய நிலங்கள். அந்த விளை நிலங்கள் வீடாகிப் போனால் இரண்டு ஊர்களும் ஒரு ஊராகிப் போய்விடும். சந்தியாவின் சொந்த கிராமம் சற்று தொலைவில் இருந்தது, அங்கே அவரது பாட்டி தாத்தா வசித்து வந்தனர். முழு ஆண்டுத் தேர்வு விடுமுறைக்கு பாட்டியின் ஊருக்கு சந்தியாவின் முழுக் குடும்பமும் சென்று விடும். வேறொரு பள்ளியில் ஆசிரியர்களாகப் பணியாற்றும் அவளது பெற்றோருக்கு அதுவே செளகரியமாக இருந்தது.

யார் பள்ளித் தேர்வில், விளையாட்டுப் போட்டியில் முதல் வருவது எனும் போட்டி இருவருக்குமிடையில் மிகவும் அதிகமாகவே உண்டு. ஆனால் இவர்கள் இருவரையும் இதுவரை முதலில் வராத வண்ணம் தடுத்து வரும் கணேசனும் அந்த பள்ளியில் உண்டு.

ஐந்தாம் வகுப்பின் அரையாண்டுத் தேர்வு விடுமுறை கழிந்து பள்ளிக்குச் சென்றனர் இருவரும்.

பாட மதி்ப்பெண்கள் என அன்றே அனைத்துப் பாடங்களுக்கும் மதிப்பெண்கள் தரப்பட்டது. சந்தியா முதல் மாணவியாக முதன் முறையாக வந்தாள். விந்தியா மூன்றாம் நிலையில் இம்முறை இருந்தாள். கணேசன் தான் இரண்டாம் நிலை என அறிந்ததும் அழுதுவிட்டான்.

'இனிமே நீ அழப் பழகிக்கோடா' என சந்தியா சற்று கோபமாகவே கணேசனிடம் சொன்னாள்.

'நாங்க எத்தனை தடவை இரண்டாமிடம், மூணாமிடம்னு வந்துருக்கோம், நீ ஏண்டா அழறே' என தன் பங்குக்கு விந்தியாவும் சொல்லி வைத்தாள்.

'என்னை என் அப்பா அடிப்பாரு' என அழுதான் கணேசன்.

'என் புரோகிரஸ் ரிப்போர்ட் வந்ததும் அதை உன்கிட்ட தரவா, அதைப் பார்த்தாவது எத்தனை நான் அடி வாங்கியிருக்கனும்னு உங்க அப்பா நினைக்கட்டும்' என்றாள் சந்தியா.

'என்னதையும் சேர்த்து எடுத்துட்டுப் போ, இப்பவே புரோகிராஸ் ரிப்போர்ட் தந்து தலைவலி தராங்க' என்றாள் விந்தியா.

கணேசன் எதிர்பார்த்தது போல கணேசனின் தந்தை அவனை அடிக்கவில்லை, மாறாக நன்றாகப் படிக்குமாறு வலியுறுத்தினார்.

'சந்தியாவுக்கு என்ன வேணும்' என்று அவரது தந்தைச் செல்லமாகக் கேட்டார்.

'முயல் வேணும்' என்றாள் சந்தியா.

'முயலா? நீ சொன்னது போல முதல் ராங்க் வந்துட்ட, அதனால உனக்கு வாங்கித் தரேன்' என உறுதி தந்தார் சந்தியாவின் தந்தை சோனைமுத்து.

முயல் விற்கும் இடங்களுக்குத் தேடி அலைந்தனர். கண்கள் உருண்டையான முயல் வேண்டும் எனத் தேடினாள் சந்தியா. காதுகள் கொம்புகள் போல இருக்க வேண்டும் என அடம் பிடித்தாள். வேகமாக துள்ளிக் குதித்தோட வேண்டும் எனவும் வம்பு செய்தாள். அவள் கேட்டபடி வாங்கிட அழுத்துப் போனார் சோனைமுத்து.

கண்கள், காதுகள் சரி, ஓடும் முயல் என எப்படிக் கண்டுபிடிப்பது எனத் தவித்தவர் ஊரில் உள்ள ஒருவனிடம் சொன்னார். அவனும் சில தினங்களுக்குப் பின்னர் ஒரு முயல் ஒன்றைப் பிடித்து வந்து தந்தான். சந்தியாவுக்கு அந்த முயல் மிகவும் பிடித்துப் போனது.

தினமும் அதை தனது செல்லக் குழந்தையைப் போல பாவித்து வந்தாள். பழக்கப்பட்டு போன முயல் ஓட எத்தனிக்கவில்லை, சந்தியாவுடன் ஒட்டிக்கொண்டது. நாய் ஏதேனும் வந்தால் விரட்டி அடித்துவிடுவாள் சந்தியா. பள்ளிக்குச் செல்லும் போது அதனை பத்திரமாக ஒரு அறையில் பூட்டி வைத்துவிட்டுச் சென்றாள். மதிய உணவு, தண்ணீர் என அனைத்தும் தந்து விடுவாள்.

முயல் கொழுகொழுவென ஆகிப் போனது. ஓடும் வேலையில்லை, உணவு தேடும் தேவையில்லை. முயலுக்கு சோம்பல் அதிகமாகிப் போனது. இதைக் கவனித்த சந்தியா சனி, ஞாயிறு என மாடியில் ஓடச் சொல்லி முயலைத் தூண்டுவாள். முயலும் சொல்வதற்கிணங்க ஓடிக் காண்பிக்கும்.

முழு ஆண்டுத் தேர்வு வந்தது, விடுமுறையும் உடன் வந்தது. முயலை உடன் எடுத்துச் செல்லலாம் என சந்தியா விரும்பினாள். ஆனால் சந்தியாவின் தாய் சுகுமாரி மறுத்துவிட்டார். கிராமத்தில் கொண்டு சென்றால் பிரச்சினை எனச் சொல்லி விந்தியாவிடம் பாதுகாக்கத் தரலாம் என சொன்னாள். சந்தியாவும் விந்தியாவிடம் விபரம் சொல்லிக் கொடுத்தாள்.

விடுமுறைக்கு ஊருக்குச் சென்று ஒரு வாரம் ஆனது. நாளிதழ் ஒன்றைப் பார்த்த சந்தியாவின் முகம் வெடவெடத்தது, மனம் படபடத்தது.

'அம்மா, என் முயலுக்கு என்னாகி இருக்குமோ' என அலறினாள்.

'என்னாச்சு'

'இதோ நியூஸ் படிம்மா' எனக் காட்டினாள்.

'முயல் கறி தின்ற பள்ளித் தோழியின் குடும்பம்'

'முயலை என் தோழி வீட்டுலப் பாக்கச் சொல்லிப் போயிருந்தோம், அன்னைக்கி சாயந்திரம் வந்து பார்த்தா முயல் ஓடிப்போச்சுனு சொன்னாங்க, ஆனா முயல் கறி வாசம் அடிச்சது, நாங்க கேட்டப்ப முயல் கொழு கொழுனு இருந்திச்சி அதான் சாப்பிட்டோம்னு சொன்னாங்க' என வேதனையுடன் அந்த நாளிதழின் வரிகள் சொல்லிக் கொண்டிருந்தன.

விந்தியாவின் வீட்டுக்குப் போன் செய்தாள் சந்தியா.

'பேப்பர் நியூஸ் பார்த்து பயந்திட்டியா' எனச் சிரித்தாள் விந்தியா.

'ம்ம்' என்றாள் சந்தியா.

'உனக்கு ஒண்ணுன்னா நான் சும்மா இருப்பேனா, முயல் எப்பவும் பத்திரமாத்தான் இருக்கும், நீ சந்தோசமா பாட்டி வீட்டுல இரு, கவலைப்படாதே' என நம்பிக்கை சொன்னாள்.

இதைக் கேட்ட சந்தியாவின் அன்னை மனதில் நினைத்தாள்.

புரிந்துணர்வும், ஒருமித்த எண்ணமும் உள்ளவரை எல்லாப் பொருள்களும் இவ்வுலகில் பாதுகாப்பாகவே இருக்கும். நமது முன்னோர்கள் நம்மிடம் தந்த பூமியினை பாதுகாப்பாக வைத்திருக்கிறோமோ முயல் கறி செய்துவிட்டோமா என எண்ணுகையில் கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொண்டது.

(முற்றும்)