Friday, 6 August 2010

ரஜினியை மறந்த ஐஸ்வர்யாராய் பச்சன்

என்னைக்கு படம் வரும், என்னைக்கு பாட்டு கேட்க முடியும் என இருந்த காலங்கள் எல்லாம் மாறி போயின.

உடனுக்குடன் எங்கோ நடப்பதை எங்கோ இருந்து நேரடியாகவே காண முடிகிறது. தகவல் தொழில்நுட்பத்தின் இந்த முன்னேற்றம் மிகவும் பாராட்டுக்குரியது.

எப்போதும் போலவே பெரும்பாலான எளியோர், வறியவர் எல்லாம் அந்த நிலையில் மட்டுமே இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த வாழ்க்கை மட்டுமே பிடித்து போனதா? அல்லது வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள தவறிவிட்டார்களா? வாய்ப்பு இருந்தும் புறக்கணிக்கப்பட்டார்களா?

ரஜினி எனும் மனிதர் உழைப்பால் முன்னேறி இருக்கிறார். அவர் எடுத்துக்கொண்ட தொழில் அதிக பணம் ஈட்டும் தொழில். ஆனால் அந்த தொழில் கூட அனைவராலும் அதிக பணம் ஈட்ட முடிவதில்லை. துணை நடிகராகவே வாழ்ந்து முடித்தவர்கள் பலர். நடிக்க முடியாமல் நீடிக்க இயலாமல் ஒதுங்கி போனவர்கள் பலர். ரஜினியின் வெற்றிக்கு ரஜினி மட்டுமே காரணமல்ல என்பதை ரஜினி நன்றாகவே தெரிந்து வைத்து இருக்கிறார்.  ரஜினியை விட அதிக உழைப்பை சிந்தியும் எந்த நிலையிலும் முன்னேற இயலாமல் வாடி வரும் விவசாய மக்களை பார்த்து உழைப்பால் முன்னேறலாம் என சொன்னால் 'கையும் காலும் தானே மிச்சம்' என இவர்களது வாழ்க்கையை பாடி வைக்கத்தான் இயலும்.

ஒரு திரைப்படத்திற்கு அனுமதி சீட்டு வாங்கும்போது விலைவாசி எல்லாம் கண்ணுக்குத் தெரிவதில்லை. அதே வேளையில் தக்காளி விலை ஒரு பத்து பைசா அதிகம் எனில் அரசுதனை திட்டாமல் எவரும் இருந்ததில்லை.

லாபம் கிடைக்கும் விசயத்தில் மட்டுமே வியாபாரிகள் வியாபாரம் செய்வார்கள் என்பது மறுக்க முடியாத நியதி.  எந்திரன் எனப்படும் திரைப்படத்திற்கு செலவழிக்கப்பட்ட பணம் தனை நினைத்தால் பல விவசாயிகள் மயக்கம் போட்டு விடுவார்கள். கூட்டுறவு வங்கி மூலம் கடன் அவர்களுக்கு கிடைப்பதே பெரிய விசயம். இதைப்  போலவே வெளிநாடுகளில் எடுக்கப்படும் பல திரைப்படங்களின் செலவு பல்லாயிரம் கோடிகள். இந்த பணம் எல்லாம் எப்படி வசூல் ஆகிறது. மக்கள். மக்கள். மக்கள். இந்த திரைப்படங்களை மக்கள் புறக்கணித்தால் என்ன ஆகும்? ஆனால் மக்கள் புறக்கணிக்கமாட்டார்கள். காரணம் மிகவும் எளிது. கற்பனையினிலும், கனவுகளிலும் சஞ்சாரிக்கும் மக்கள் மிக மிக அதிகம். மேலும் அன்றாடம் உழைத்து வாழும் மக்களுக்கு இந்த திரைப்படம் ஒரு பொழுது போக்கு சாதனமாக திகழ்கிறது.  மக்கள் சக்தி என்பது எத்தனை பெரிய சக்தி. மக்களின் விருப்பத்தை நாம் குறை கூற இயலாது. கேளிக்கை, விளையாட்டு என நமது கவனம் அதிகமாகவே இருக்கத்தான் செய்யும்.

தற்போது வெளியிடப்பட்ட எந்திரன் இசை, பாடல் வெளியீடு பலரின் கவனத்தை ஈர்த்தது என்றால் மிகையாகாது. மிகவும் பிரமாண்டமாகவே நடத்தப்பட்டு இருக்கிறது. எந்திரன் குழுவினருக்கு வாழ்த்துகள். இதில் ரஜினியின் பேச்சு மிகவும் எளிமையான பேச்சு. வெற்றியை தக்க வைத்து கொள்வது என்பது அத்தனை எளிதல்ல என்பதை நன்றாகவே உணர்ந்து இருக்கிறார். எத்தனை கோடிகள் போட்டு படம் எடுத்தாலும் மக்கள் நினைத்தால் ஒன்றுமே இல்லாமல் போய்விடும் என்பதையும் அறிந்து வைத்து இருக்கிறார்.

ஐஸ்வர்யாராய் பேசும்போது அனைவருக்கும் நன்றி சொன்னவர், ரஜினியை மறந்தே போனார். அவரது பேச்சின் இடையில் ஒரு விசயம் சொல்லிவிட்டு நான் சொல்வதை ஒப்பு கொள்வீர்கள்தானே ரஜினி சார் என குறிப்பிட்டார். அதனால் ரஜினிக்கு நன்றி சொல்லிவிட்டோமோ என நினைத்தாரோ என்னவோ. ரஜினியை மட்டும் விட்டுவிட்டு அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டு கிளம்பியவரை விவேக் நினைவு படுத்தினார் போலும். திரும்ப வந்தவர் ஆரம்பித்த விதம் 'அட' என சொல்ல வைத்தது. சாதனையாளர்கள் தங்கள் தவறுகளை மிகவும் எளிமையாக சமாளித்து விடுகிறார்கள்.

வெற்றியாளர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நம்மில் பலருக்கு நிறையவே இருக்கும். எவரிடமும் கற்று கொள்ள தேவை இல்லாதது நன்றி மறவாமல் இருப்பது. நமக்கு உணவுக்கு வழி செய்து தரும் விவசாயிகளுக்கு நாம் நன்றி உடையவர்களாக இருப்போம். அவர்களுக்கு நம்மாலான உதவிகள் கிடைக்க வழி செய்வோம்.

Thursday, 5 August 2010

விருதுகளும் நானும்

அழகா இருக்கேடா
என் கண்ணு பட்டுடும் போலிருக்கு 

அம்மா அன்பாய்
அணைத்து தந்த முத்தம்

என் பிள்ளை சிங்கக்குட்டி
கட்டிபிடித்த தந்தை

வெற்றி கூட
வெறுமையாய்  தெரிகிறது 
தோல்வியில்
துடிதுடித்து இருப்போரை
நினைக்கையில்!