Tuesday 29 December 2015

நமது திண்ணை டிசம்பர் மாத இணைய இதழ்

ஒன்றின் வளர்ச்சியானது அவை பெறும் எதிர்ப்புகளைப் பொருத்து அமைகிறது. மக்களின் கவனத்தை ஈர்க்கும் எதுவும் சர்ச்சைக்கு உள்ளாகும்.

நமது திண்ணை இணைய இதழ் தற்போது ட்விட்டர் பயன்பாட்டில் உள்ள தமிழ் மக்களின் சிலருக்கு மிகவும் பரிச்சயமாக மாறி எரிச்சல்தனை ஒரு சிலரின் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு இந்த இணைய இதழில் இடம் பெற்றுள்ள அவனதிகாரம் எனும் ட்விட்டர் பயன்பாட்டு தமிழரின் எழுத்துக்கள். நமது திண்ணையில் எதற்கு அப்படி சர்ச்சையை அந்த அவனதிகாரம் உண்டு பண்ணின எனப் பார்த்தால் குழந்தைத்தனமான எழுத்துக்கள். குழந்தையின் செயல்களை எப்படி ரசித்து மகிழ்கிறோமோ அதைப்போலவே இது போன்ற அழகிய காதல் ரசிப்புகளை ரசிக்க வேண்டும், ஆனால் ஒரு பிரமாண்டமான படைப்பையே விமர்சிக்கும் விமர்சகர்கள் அதிகமாகிப் போன சூழலில் இதுபோன்ற எழுத்துக்கள் விமர்சனம் பெறவே செய்யும். ஆனால் அவனதிகாரம் எல்லாமே வெகு அழகு.

மதுப்பிரியாவின் ''அவனா வந்தான். சினிமா டயலாக்க அளந்தான். நான் ஙே-னு  சொன்னேன். அவன் கிர்ர்ர்ர்-னு சொல்லிட்டுப் போயிட்டான்'' இந்த ஙே கிர்ர்ர்ர் எல்லாம் ட்விட்டர் பயன்பாட்டு மொழிகள். ஒரு படைப்பாளி தனது எண்ணங்களை வெளிப்படுத்த பயன்படுத்துவதே மொழி. அதுவும் டார்லின்ரெதா உவமை எல்லாம் காதலின் உச்சம். ''எரியும் நெருப்பாய் நீ, திரியாய் நான், நீ பிரகாசமாய் எரிய என்னை நான் எரிப்பேனடா'' இங்கே நெருப்பின் நிலையை திரியே அதிகரித்து விடுவதாக ஒரு அழகிய கவித்துவம். ஜீவசுசியின் அழகிய சொல்லாடல். 'உன்னைப் பிடிக்கும் அதைவிட உன் இதயம் பிடிக்கும்' என சொல்லப்பட்டதாக இருக்கிறது. இங்கே உன்னைத்தவிர வேறு எனக்கு எதுவுமே பிடிக்காது என சொல்வது போல அமைக்கப்பட்டு இருக்கிறது. இவர் எனது கவிதைகளை ட்விட்டரில் எழுதியது உண்டு. இவரது கவனத்தை ஈர்த்த எனது கவிதைகளை நான் கவிதைகள் என்றே அங்கீகரித்தது இல்லை.

இப்படியான அவனதிகாரம் பெரும் சர்ச்சையை உண்டுபண்ணி ஆசிரியரை பேட்டி  எடுக்கும் அளவுக்கு கொண்டு போயிருக்கிறது. ஆசிரியரின் பொறுமையான பதில்கள் கூட கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விளம்பரம் தேடும் பிரியராக ஆசிரியரை சித்தரித்து இருப்பது கண்டு எல்லாம் கவலைப்படத் தேவை இல்லை. நமது திண்ணையின் இணைய இதழின் வளர்ச்சி கண்டு பெருமைப்படலாம். இதைவிட பெரும் பரிசு எனக்கு சிறந்த சகிப்புத்தன்மையாளர் விருது பெற வழி செய்ததே இந்த நமது திண்ணை இணைய இதழ் தான். ஏளனம் செய்கிறார்களோ அல்லது உண்மையில் பாராட்டுகிறார்களோ அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டியது இல்லை. நம்மை ஒருவராக மதித்து நமது செயலுக்காக நம்மீது அக்கறை கொள்பவர்கள் மீது நன்றி நமக்கு இருக்க வேண்டாமா? அதற்காக மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ரிஸ்வான் எழுதிய மழை கவிதை மிகவும் அருமை. கொலையுண்ட மரம் கொண்டு யாகம். அட. பாட்டி அறிந்திடா பாட்டில் நீர். மரம் வளர்ப்போம், மழை பெறுவோம். முன் அட்டைப்படம் சினிமா இதழ் போன்ற பிரமையை உண்டு பண்ணி இருக்கிறது.

மகனதிகாரம் அன்பின் மிகுதி. வெகு சாதாரண செயல்களை சொல்லும் விதத்தில் அற்புத செயலாக்கி காட்டிவிடுகிறார்கள். ஒரு பருக்கை அமிர்தம். அதுவும் மகளதிகாரம் எல்லாம் நிறையவே அன்பை சொல்லுக்குள் அடக்கிவிடுகிறது. ஏன் ஊசி போடறாங்க?

மணல் கவிதை சற்று வித்தியாசம். மண் தின்று மண் திங்கும். மண்ணில் பெயர் எழுதும். சுசீமா அம்மா அவர்களின் திருவடி சேவை எனும் புதிய தொடர். மோட்சம், வீடுபேறு, ஆன்ம விடுதலை என்று தொடங்குகிறது. மனிதனின் அதிகபட்ச தேர்வு முக்தி அடைதலே அதற்கு திருவடி பற்ற வேண்டும் என அருமையாக விளக்கி இருக்கிறார். பல திருக்குறள்களை மேற்கோள் காட்டியதோடு மட்டுமில்லாமல் திருவாசகம் கூட துணைக்கு அழைத்து இருக்கிறார். திருமூலர் குறிப்பிட்ட திருவடி சிறப்பும் உள்ளது. திருநாவுக்கரசர் குறிப்பிட்ட திருவடி, திருவெம்பாவையில் திருவடி என திருவடிகள் பெருமையை சொல்லி இருப்பது வெகு சிறப்பு. ஆவலுடன் எதிர்பார்க்கும் தொடர் இது.

அவளதிகாரம் அவனதிகாரத்திற்கு சளைத்தது அல்ல. கான் அவர்களின் போடா என்றாள். போயிடவா என்றேன். போகாத லூஸு  என்று இறுக் க அணைத்துக் கொள்கிறாள். நம்மில் சிரிப்பை உண்டாக்கும் சொல்லாடல். கண்ணனின் அவளதிகாரம் எழுத தேவையில்லை. அவளே... அதிகாரம் தான். சுகிபாலாவின் காதல் செய்யும் முடிவு அவளே கழட்டிவிடும் முடிவு அவளே. இவை எல்லாம் இப்படி எழுதப்படுவதற்கு காரணம் ட்விட்டர் தான். ஒரு பெரும் கவிதையை சில வரிகளில் எழுதி வெளிப்படுத்தி விடுகிறார்கள். அதற்கு நிச்சயம் ஒரு தனித்திறமை வேண்டும்.

நண்பர் ரவியின் பரங்கிக்காய் துவையல் வெகு சிறப்பு. உதயாவின் வாடகை எனும் தலைப்பின் வாடகைத் தாய் பற்றிய ஒரு சின்ன கதை. கதையில் வெறுமை தலைதூக்கித் தெரிகிறது. உமா க்ருஷ்  அவர்களின் பாடல் பரவசம். காதல் ஊர்வலம் இங்கே எனும் பாடல் கேட்டதில்லை. ஆனால் டி ஆர் அவர்களின் பாடல்கள் எல்லாம் வெகு சிறப்பாக இருக்கும் என உறுதியாக நம்பலாம்.ஆசிரியரின் புருஷ்லீ குறித்த பார்வை சிறப்பு.

நமது திண்ணை மென்மேலும் புகழும் வளர்ச்சியும் பெற இதில் வரும் படைப்புகள் எல்லாம் வெகு சிறப்பாக கொண்டு வர வேண்டியது ஆசிரியரின் பொறுப்பு. நிச்சயம் முயற்சி வெற்றி பெறும். வாழ்த்துக்கள், வடிவமைப்பு வெகு அருமை.


Sunday 29 November 2015

அம்மா - சௌம்யா (மின்னூல் கவிதைத் தொகுப்பு) 2 நிறைவு


20 இரவு

பல வருடங்களுக்கு முன்னர் நண்பர் ஒருவரின் கவிதையைப் படித்துப் பார்த்துவிட்டு இப்படி சோகமாகத்தான் எழுத வேண்டுமா என அவரிடம் கேட்டு வைக்க அதற்கு அவர் இது என் பாணி, நீ வேண்டுமெனில் சந்தோசமாக எழுதி வைத்துக் கொள் என்றார். ஒவ்வொருவருக்கும் ஒரு நடை, சிந்தனை உண்டு.

இரவு குறித்த கதையில் பெண்ணின் கைப்பை உவமை அழகு. விட்டத்து பல்லி பேய்க்கதைகள் கரப்பான் பூச்சி என இரவின் பயத்தை பாடல்களே துணை

21. ஸ்வீட்டான்

மிகவும் அழகிய கவிதை. ஒற்றுப்பிரச்சினை எனக்கு உண்டு. எங்கு க்  வரும் த்  என. தேவதைத்தனங்கள் தேவதை தனங்கள். கைகள் மெத்தை. மிகவும் அழகாக சிவந்த முதுகின் காரணம் மருதாணி கரங்கள்.

22 பிரார்த்தனை

நல்ல புத்தி கொடு என சின்னஞ்சிறு குழந்தையே சாமியிடம் வேண்டும். ஒரு வெள்ளேந்தியாக சாமியிடம் பிரார்த்தனை மிகவும் சிறப்பு. என்னவெல்லாம் எண்ணம் வரும் என நேர்த்தியான சிந்தனை

23 மீ காதல்

காதலித்தபடி இருக்கிறோம் இயல்பாக இருப்பதே சுகம். எதையும் கேட்காமல் தரப்படுவது காதல். பெண்ணியம். ஆசை அறுபது நாள். மோகம் முப்பது நாள் என தாண்டி அன்பில் நிலைத்து நிற்கும்

24 இதழதிகாரம்

முத்தம் தாடி. சிலுங்கும் கொலுசு. பெண் முத்தங்கள்.

25 ஊடலுணவு

கோபங்கள் தொலையுமிடம் அன்பு

26 தேவதைகள்

சிறுமியின் தேவதை உரையாடல் கவிதைத்தனமானதுதான். கட்டுபாடற்ற வாழ்வே சிறப்பு

27 காத்திருப்பு

நொடிகளுக்கு யுகம். நிறைவடைந்த நினைவுகள். இதை ஒவ்வொரு மனிதரும் ஏதேனும் ஒரு கட்டத்தில் உணர்ந்து இருப்பார்கள்.

28 யாத்திரை.

தமிழ் மின்னிதழில் வெளியான கவிதைகளில் இதுவும் ஒன்று.

29 அறியாமை

அம்மா! அம்மா இல்லாத வாழ்வு குறித்த ஓர் பார்வை இது. என்னவெல்லாம் அம்மா தன்  குழந்தையைப் பற்றி அறிந்து இருப்பார் என சுகம் சொல்லி சோகம் ஆகும் கவிதை.

30 படையல்

சற்று வித்தியாசமான சிந்தனை

31 எதிர்காலம்

உறவுகள் சலிப்பூட்டுகின்றன. நீ இருக்கிறாய் என்பதே போதுமானது எதிர்காலம் சிறப்புற

32 ஜன்னல்

ஜன்னல் பற்றி எழுதாத கவிஞர்கள்  இல்லை எனலாம். அத்தனை வசீகரமானவை. ஜன்னல் ஒரு காட்சி பெட்டகம். கம்பிகள் கொண்ட ஜன்னல். முத்தாய்ப்பான முடிவு

33 விலைமகள்

தமிழ் மின்னிதழில் வெளியான மற்றொரு கவிதை.

34 குறுங்கவிதைகள்.

உழைப்பு எனத்  தொடங்கி ஒவ்வொரு கவிதையும் வெகு சிறப்பு

வலிக்குதா வலிக்குதா என்று குழந்தை தன்  அம்மாவைப் போல் அல்லாமல் பொம்மையிடம் கேட்பதாக முடிகிறது கவிதைத்தொகுப்பு.

எளிய வார்த்தைகள் கொண்டு அழகிய மாலைகள் தொடுக்கப்பட்டு இருக்கின்றன. சின்ன சின்ன நிகழ்வுகளே ஒரு காவியம் ஆகின்றன. பேசத் தெரியாதவனுக்கு பேச்சு சொல்லிக் கொடுப்பதைப் போல கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என சொல்லித் தருகின்றன.

கவிதைகள் அந்த படைப்பாளியின் எண்ணத்தை வெளிக்கொண்டு வருவனவாக இருந்தாலும் எவ்வித சம்பந்தமும் இல்லாமலும் ஒருவர் சிந்திக்கக் இயலும். பெரும்பாலும் ஒரு படைப்பாளி சுதந்திரமாக சிந்திக்கும் போது  தன்னை பாதிக்கும் விசயங்களையே கவிதைக்கான கருப்பொருளாக வைப்பார். இந்த கவிதைகளில் அன்பு, அம்மா, காதல் என உறவுகள் பற்றியே வலம்  வருகிறது.

சிந்தனைகள் செழித்தோங்கி பல அழகிய படைப்புகள் தந்து மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

(நிறைவு 


Sunday 22 November 2015

அம்மா - சௌம்யா (மின்னூல் கவிதைத் தொகுப்பு) -1

அம்மா - சௌம்யா அவர்களின் கவிதைத்தொகுப்பு மின்னூல் வடிவில். பல புத்தகங்கள் வெளிவர வேண்டுமென வாழ்த்துகிறோம்.

'சமூகத்தலைவி' மீனம்மாகயலின் அட்டைவடிவமைப்பே சற்று வித்தியாசமாக இருக்கிறது. பிஞ்சு கால்களை தாயின் கரங்கள் அள்ளி குவிப்பது போல அமைந்து இருக்கிறது. அம்மா என்ற எழுத்தில் வைக்கப்பட்ட அழகிய சிவந்த நிற பொட்டு. மின்னூல் எவ்வித வண்ணம் இல்லாமல் கருப்பு வெள்ளை வடிவில் அமைந்து இருக்கிறது. எளிமைதான்.

அறிமுகமே இப்படித்தான் தொடங்குகிறது. 'அரட்டைகேர்ள்' என்ற பெயரில் 2011 முதல் ட்விட்டரில் இயங்கி வரும் சௌம்யா கோவையைச் சேர்ந்தவர் என. அவர் எழுதிய பல கவிதைகளின் தொகுப்பாக இந்த மின்னூல் இலவசமாக இங்கு  பெற்றுக் கொள்ளலாம். மின்னூல் விற்பனைக்கு கூட பண்ணலாம் என இப்போதுதான் தெரியும். இந்த கவிதைத் தொகுப்பை எப்படி வாசிப்பது என சென்றால் மொபைல் போனில் இதற்குரிய அப்ளிகேசன்ஸ் தரவிறக்கம் செய்ய வேண்டும் என சொல்லப்பட்டு இருந்தது. உடனே தரவிறக்கம் செய்து வாசிக்கத் தொடங்கியாகிவிட்டது. வலைதளம்  பேஸ்புக், ட்விட்டர் என தமிழில் இவரது இயக்கம் சொல்லப்பட்டு இருக்கிறது. ட்விட்டர், வலைதளம் பார்த்தது உண்டு. பேஸ்புக் பார்த்தது இல்லை.

1. கிடா

இந்த கவிதையை ஏற்கனவே வாசித்த அனுபவம் உண்டு. எனது கிராமத்தின் நிகழ்வை கண்ணுக்கு முன்னர் கொண்டு வந்து நிறுத்திய ஒரு அற்புதமான கவிதை. கிடா எப்படி எல்லாம் அன்புடன் ஓடியாடி திரிந்தது என கவிதையாக நிற்கும். 'சாமி ஆடு, கைய கிய்ய வைச்சீங்க' என அப்படியே அந்த நிகழ்வு. அதுவும் அந்த கடைசி வரியில் கவிதைக்கான உயிர்நாடி.

2.  அம்மா

வேண்டாம். ஒரு தாயின் மரணம் பற்றி எழுதவே வேண்டாம். ஜில்லுனுதானே இருக்கு என்ற வரி படித்தபோது ஒரு இனம் புரியாத நெருடல். தாயை இழந்த பின்னர் எப்படி எல்லாம் நாம் தாயிடம் சொல்லிக்கொள்வோம் என்பது போன்ற உணர்வினை அழகாக தென்பட்டு இருக்கிறது

3. அப்பா

அப்பா அடித்ததேயில்லை. ஆமாம். பலருக்கும் பரிச்சயமான வரி. ஒரு தந்தை எப்படி இருப்பார் என்பதற்கான வரிகளில் தெளிவாகத் தெரிகிறார் அப்பா. 'நீ குழந்தை தானேடா' இப்போது கூட இதே வார்த்தைகளை என் தந்தை என்னிடம் சொன்னது உண்டு.

4. கணவன்

முத்தம் ரகசியம் தாம்பத்யம் வளவிக்கீறல் என சொல்லி சோகமான ஒரு கவிதைதான் என்பது கடைசி வரியில் தென்பட்டது.

என்ன இது எல்லா கவிதைகளுமே ஒரு வலியின் தடமாக இருக்கிறதே என்று யோசித்தேன். அடுத்து வந்தது பருவம்

5. பருவம்

குழந்தமை, பால்யம் பதின்மம் என சொல்லி ஒரு சிறுமியின் பருவம் எய்த நிலையை சொல்லிச் சென்றது கவிதை. முதுமை எல்லாம் சொல்லாமல் பருவம் என்றால் பருவமாக இருந்தது.

6. மோகமுள்

இது ஒரு நாவலின் தலைப்பு. உவமைகளைத் தாங்கி வந்திருக்கும் கவிதை. அடர்ந்த வனம். கருத்த தீவு. அதரம், இதழ் நெற்றி, கன்னம் கழுத்து என வார்த்தைகளில் நிறையவே மோகம் தாண்டவமாடுகிறது. மீசை குறித்த பார்வை சிறப்பு.

7. ஞானம்

புத்தனின் ஞானம் குறித்து கேள்வி எழுப்பும் ஒரு அழகிய கவிதை. பற்று வைப்பதில் விலகி இருப்பதே துறவறம். பற்று கொண்ட ஒன்றை விட்டு விலகிடுவதெ ஞானம் யசோதரா.

8. மரப்பாச்சி

மரப்பாச்சி பொம்மைகள். தனியாய் மாலையணிந்து வலி சொல்லும் கவிதை இது. சின்ன சின்ன வரிகளில் அதிரவைக்கும் கவித்துவம் தென்படுகிறது.

9. வான்சிறப்பு

வள்ளுவரின் வரிகள் கொண்ட தலைப்பு. மழை என்றால் என்ன எப்படியெனினும் மழை பிரமிப்பு. மழை நினைவுபடுத்திச் செல்லும் கவித்துவம்.

10. உறக்கம்

உறக்கம் மட்டும் இல்லையெனில் இவ்வுயிரின் இயக்கம் ஏதும் இல்லை. உறக்கம் ஒரு வரம். கவித்துவ வரிகளால் சிறப்பிக்கப்பட்ட உறக்கம்.

11. உதிரா நினைவு

அண்ணனின் பிறந்த தினம் குறித்த கவிதை என வாசிக்கத் தொடங்கினால் அம்மாவின் அன்பைச் சொல்லும் அழகிய கவிதை.

12. அவள் பெயர் அட்சயா

பொம்மை குறித்த பொருள் பொதிந்த உயிர் நிறைந்த கவிதை. இதுபோன்ற கவிதைகள் எல்லாம் மிகவும் எளிமையாக இருப்பது மட்டுமல்ல நம்மோடு எளிதாக இணைந்துவிடும் கவிதை. நமது நினைவுகளை கிளறிவிடும் கவிதைகள் சிறப்பு பெறுகின்றன.

13 மிச்சங்கள்

மீண்டும் ஒரு பழைய நினைவுகளை அசைபோடும் கவிதை. பாத்திரங்களில் பெயர் பதிப்பார்கள். மனித பாத்திரங்களுக்கும் பெயர் வைப்பார்கள்.

14 வலி

பெயர் குறித்த வலி நிறைந்த கவிதை.

15 வன்முறை

மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நிலையை சொல்லும் கவிதை. முதலில் வாசிக்கும்போது என்னவோ என நினைக்க கடைசியில் ஒரு உணர்வின் மீதான வன்முறையை அழகாக விவரிக்கும் கவிதை

16 மகள்

இந்த கவிதையைப் படித்தவுடன் ஒரு இனம் புரியாத ஏக்கம் வந்து போனது. எதற்கு மகள் வேண்டும் எனும் எனது எழுத்து கூட ஒரு ஏக்கத்தின் வெளிப்பாடுதான். நல்ல வரிகளுடன் தொடக்கம். பெண் குழந்தை என்றால் மிகவும் இஷ்டம் போல. அருமையான வெளிப்பாடு.

17. முத்தம்

காதல் முத்தம் அட்டகாசம்.

18 கண்ணீர்

அழுகையில் வடிந்து போனதென் அத்தனை ஆதங்கங்களும், அவமானங்களும், கோபங்களும் இயலாமையும். மனவலி நிவாரணி.

19. காதலிக்கப்படுதல்

காதலிக்கப்படுதல் கடைநிலை மனிதருக்கும் சந்தோசம் தரும். காதலிக்கபடுவதால் என்னவெல்லாம் நடக்கும் எனவும் புரியலாம்.

19. விஷூ

அம்மா முகத்தைத்தான் வெறிக்கிறது பார்வை.

ஒரு நிகழ்வை விவரிக்கும் கவிதையில் சில வரிகளே அந்த நிகழ்வின் சிறப்பம்சம்.

கவிதாயினி சௌம்யாவின் அம்மா அற்புதமாகவே இருக்கிறது. தனிப்பட்ட ஒருவரின் நூலுக்கு நான் எனது எண்ணத்தை  எழுதுவது இதுவே இரண்டாவது தடவை என்றே கருதுகிறேன்.

(தொடரும்)


நமது திண்ணை நவம்பர் மாத இணைய இதழ்

சற்று தாமதமாகவே வெளிவந்த இந்த இணைய இதழில் எப்போதும் போல வழக்கமான இராமானுசர் தொடர் இல்லாதது ஒரு குறையாகவே தெரிந்தது. பல வேலைகள் காரணமாக உடனே இந்த இதழை வாசிக்கவும் இயலவில்லை. வேலைக்கு முன்னுரிமை தரும்போது தமிழ் பின்னுக்கு தள்ளப்படுகிறது. இந்த இதழின் ஆசிரியருக்கு பெருமளவில் உதவி செய்த அனைத்து நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அட்டைப்படம் மிகவும் வித்தியாசமாக இருந்தது.  ரிஜ்ஜியின் மழலைக் கடிதம் மிகவும் கவலை தரக்கூடிய கவிதை. இந்த உலகம் மிகவும் பொல்லாத ஒன்றாகவே தெரிகிறது. இறைவனுக்கு வணக்கங்கள் எனத் தொடங்கும் கவிதையில் நிறைய வலிகள். பெண்ணாக பிறப்பது பெரும் இடர் என இந்த கவிதையில் சொல்லப்பட்டு இருக்கிறது. பல இழிநிலை மனிதர்களால் குழந்தைகள்  படும் பெரும் துயரத்தை பல வரிகளில் நாம் காணலாம். இவ்வுலகம் மாற வேண்டும் என்பதே நமது வேண்டுதலாக இருக்கிறது.

உதயாவின் புகையிலை தவிர்ப்போம் எனும் விழிப்புணர்வு முத்தம் குறித்த கதை. ஒரு விஷயத்தை சமூகத்திற்கு சொல்ல முற்படும்போது வலி தரும் விசயங்களை சொல்லும்போது மனதில் படியும் என்றே எடுத்துக்கொண்டாலும் சில நேரங்களில் கதைப்பாத்திரங்கள் அத்தனை பாதிப்பை நம்மில் உண்டாக்குவது இல்லை. புகைப்பிடித்தல், புகையிலை போடுதல், மது அருந்துதல் என பல பழக்கவழக்கங்கள் உடல் நலத்திற்கு இடையூறு என சொன்னாலும் இன்றும் பெரும்பாலான மனிதர்கள் அதை விட்டுவிட்டதாகத் தெரியவில்லை.

அழகிய ஓவியங்கள் மிகவும் சிறப்பு. ஓவியங்கள் நமக்கு பாடம் நடத்தும். கொக்கின் வாயில் இருக்கும் மீன், கண்ணாடியில் விசித்திர முகம் என ஒவ்வொன்றும் ஒரு அர்த்தம் சொல்லவே வரையப்பட்டு இருக்கும்.

அவளதிகாரம் மகளதிகாரம் அவனதிகாரம் எல்லாம் எப்போதுமே மிகவும் சிறப்பாக இருக்கும். ஒவ்வொருவரும் அந்தந்த வரிகளில் வாழ்ந்து விடுகிறார்கள். முடி கலைவதே இன்பம். தேவதையுடன் உலா வருகிறேன். மௌனம் எப்போதுமே அழகு. பெரிய ஆபிசராம். என்னிடம் குழந்தையாகிப் போவான். சோறு ஆக்கிடுவான். குருடாக ஆசை. நானும் எத்தனையோ அவளதிகாரம் எழுதி இருக்கின்றேன் என்றே கருதுகிறேன். இதற்கு காரணம் எவர் என என்னைக் கேட்டால் அன்றில் இருந்து இன்று வரை பல பெயர்களை சொல்ல இயலும். எவரேனும் ஒருவர் கருப்பொருளாகி நிற்பார்கள். அதை எவராலும் அறிந்து கொள்ள இயலாதபடி எனது எழுத்து அமைந்து விடும்.

மெழுகுவர்த்திகள் குறித்து மேலும் பல விபரங்கள் தந்து இருக்கலாம். எங்கே செயல்படுகிறது, அந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் யார் யார். எத்தனை வருடமாக தொண்டு புரிகிறார்கள், அவர்களை தொடர்பு கொள்வது எப்படி போன்ற விபரங்கள் இல்லாமல் இருப்பது முழுமையற்று இருக்கிறது. ஆசிரியர் இதை அடுத்தமுறையாவது இணைத்தால் நன்றாக இருக்கும்.

உதயாவின் கபாலி மிகவும் நகைச்சுவையான அதே வேளையில் நல்லதொரு கருத்து சொல்லும் கதை. ஒன்றுக்கொன்று தொடர்பு உடையது என எனவும் சில அபத்தமான காரியங்கள் நல்லதில் சென்று கூட முடியும்.

நவராத்திரி விழாவா, பண்டிகையா சுசீமா அம்மா அவர்களின் பயன்மிக்கத்  தொடர். இதுவரை படி அமைத்து கொலு பொம்மைகள் எல்லாம் செய்ததாக எனக்கு நினைவில் இல்லை. இந்தத் தொடரில் குறிப்பிட்டபடி பாடல்கள் பிறர் வீட்டுக்குச் செல்லுதல் எல்லாம் நான் கண்டதே இல்லை. ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை மட்டும் கொண்டாடுவோம். கலப்பை, புத்தகம் என கொண்டாட்டம் இருக்கும். தனிப்பட்ட சமூகம் கொண்டாடுமா, அல்லது எல்லா சமூகத்தினரும் கொண்டாடுவார்களா எனத் தெரியாது. சகோதரி ஷக்திபிரபா கூட இதுகுறித்து எழுதியாக ஞாபகம். எப்படி எடுத்துக் கொண்டாலும் இந்த நவராத்திரி ஒரு விழாதான். ஒன்பதாம் எண்ணுக்கு உரிய பலன்கள். நிறைய விசயங்களை உள்ளடக்கிய பகுதியை அனைவரும் பயன்பெறும் வண்ணம் எழுதி இருப்பது வெகு சிறப்பு. எல்லாமே புதிய விசயங்கள்தான்.

ஆசிரியரின் திரு தனஞ்ஜெயின் அவர்களின் நேர்காணல் மிகவும் சிறப்பு. தேசிய விருது பெற்ற ஒரு எழுத்தாளர். ஒரு தயாரிப்பாளர். சினிமா குறித்த அவரது பார்வை மிகவும் சிறப்பு. அவர் தொழில் குறித்த தொடர்பான கேள்விகள் எல்லாம் சிறப்பு.

நண்பர் ரவியின் கிச்சன் டைம் பால் பேடா. இது பால்கோவாவுக்கு சளைத்தது அல்ல என்றே கொள்ளலாம். எவரேனும் செய்து பார்த்தவர்கள் எப்படி வந்தது என சொன்னால் மிகவும் சுவராஸ்யமாக இருக்கும்.

டிவிட்டரில் சிந்தனை எல்லாம் எப்படி இருக்கும் எனில் சமூகத்தில் சினிமா முதற்கொண்டு அரசியல் வரை ஏதும் பிரச்சினை எனில் அனைவருமே அது குறித்து தங்களது எண்ணங்களை பதிவு செய்வார்கள். அப்படித்தான் துவரம் பருப்பு குறித்த சிந்தனையை இதில் காணலாம்.

உமாக்ருஷ் அவர்களின் பாடல் பரவசம். இந்த பாடலை நான் கேட்டதே இல்லை. வித்யாசாகரின் இசை மிகவும் மென்மையாக இருக்கும். பாடல் வரிகள் என்னவெல்லாம் சொல்ல வருகிறது என மிகவும் தெளிவாக ஆராய்ந்து இருக்கிறார். நல்ல நல்ல பாடல் வரிகள். எப்படி பாடுவது என்பதே இந்த பாடலுக்கான வெற்றி.

மதிப்பிற்குரிய ஆச்சி மனோரமா அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்தனை பண்ணுவோம்.

பத்து இதழ்கள் கண்ட நமது திண்ணை தனது எல்லையை விரிவாக்கி இன்னும் பல எழுத்தாளர்களின் எழுத்துகளை தன்னுள கொண்டு வர வேண்டும் என்பதே எனது அவா. அற்புதமான நமது திண்ணை இணைய இதழ் மென்மேலும் வளர எமது வாழ்த்துகள்.


Tuesday 13 October 2015

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 29

சுபத்ராவை எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென்று அவளது வீட்டிற்கு சென்றேன். வாடகை வீடு கண்டுபிடிப்பது ஒன்றும் அத்தனை கடினமாக இல்லை. சுபத்ரா பற்றி கேட்டதும் மாடியினை காட்டினார்கள். பின்னர் சிறிது நேரம் யோசித்துவிட்டு அவர்களே சென்று சுபத்ராவை அழைத்து வந்தார்கள். என்னைப் பார்த்ததும் சுபத்ரா முகத்தைத் திருப்பிக் கொள்ளவில்லை. என்னோட நண்பர் தான் என அவர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு என்னை அவள் தங்கி இருக்கும் மாடிக்கு அழைத்துச் சென்றாள்.

''சுபா, என் மீது கோபமா?''

''இல்லைடா, நான் உன் மேல சின்ன வயசில இருந்து ஆசை வைச்சது என்னமோ உண்மைதான். அது காதல்னு இன்னைக்கு வரைக்கும் நம்புறேன். இந்த ஊருக்கு வந்ததே உன்னைப் பார்க்கணும் பேசணும்னு தான். ஆனால் எல்லாம் தலைகீழா இருக்கு. கோரன் மூலம் உன்னை மிரட்டி கூட பார்த்தேன். எப்ப என்னை நீ வீட்டை விட்டு வெளியே அனுப்புனியோ அப்பவே நீ வேணாம்னு முடிவு பண்ணிட்டேன்டா.

முயற்சி செஞ்சிட்டு முடியலைன்னு செத்துரக்கூடாதுனு எங்கம்மா அடிக்கடி சொல்லும். ஆனா உன்கிட்ட என்னால முயற்சி கூட செய்ய முடியலை. ஏன்டா என்னை நீ எப்படி மறந்த? எத்தனை ஆசையா என்னோட பழகின பேசின, எப்படிடா உன்னால முடிஞ்சது. இனிமே உன் வழியில நான் குறுக்கே வரலை. நீ என்னைப் பார்க்கறது பேசறது எல்லாம் நிறுத்திக்கோ. இதுவே நம்ம கடைசி சந்திப்பா இருக்கட்டும். நான் இனிமே உன்கூட பேசவோ பழகவோ மாட்டேன்''

''சுபா''

''போடா, எத்தனை நம்பிக்கையா நான் இருந்தேன்னு உனக்கு எங்கடா தெரியப்போகுது. கோரன் உன்னை கொல்வானு சொன்னப்ப என்னால அதை தாங்கிக்க முடியலை. கிளம்பிப் போடா, அவளோட  நிம்மதியா இரு''

''சுபா, என்னை மன்னிச்சிரு, நான் நீ இப்படி நினைப்ப பழகுவேணு நான் பழகலை. ஆனா உனக்குள்ள இந்த காதல் எல்லாம் எனக்குத் தெரியாது. அப்படியே தெரிஞ்சி இருந்தாலும் உன்னோட குணத்திற்கு நான் பொருந்த மாட்டேன்''

''கிளம்பிப் போடா''

''அதில்லை சுபா''

''போடான்னு சொல்றேன்ல''

அதுக்கு மேல் அங்கிருக்க கூடாது என வீடு வந்து சேர்ந்தேன். காயத்ரியிடம் எல்லா விசயங்களையும் சொன்ன பின்னர் அவளுக்குள் உண்டான நிம்மதியை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது.

கர்மவினை என்பது எல்லாம் என்னவென இதுவரை கண்டு கொண்டதும் இல்லை. எதற்கு எது நடக்கிறது என இதுவரை புரிந்த பாடில்லை. அன்று இரவு சற்று நிம்மதியாக தூங்கமுடிந்தது.

மாதங்கள் கடந்து போவதில் தாமதம் ஏற்படவில்லை. கல்லூரி வாழ்க்கை வேகமாக கடந்து போய்க்கொண்டு இருந்தது. இந்த ஒரு வருடம் எவ்வித துப்பறியும் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. கல்லூரி முடியும் காலம் வந்தது. அனைவரும் பிரிந்து சென்றனர். நானும் காயத்ரியும் மேற்கொண்டு படிப்பது குறித்து யோசித்துக் கொண்டு இருந்தோம்.

எந்த ஒரு விசயமும் அப்படியே முடிந்து போவது இல்லை என்பது போல அன்று இரவு கோரன் எனது வீட்டிற்கு வந்து இருந்தான்.  இதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவனை வீட்டிற்குள் அழைப்பதா வேண்டாமா என யோசித்துக் கொண்டு இருந்தபோது எனது அம்மா அவனை உள்ளே வாப்பா என அழைத்து அமரச் சொன்னார்.

''என்னடா முருகேசு எப்படி இருக்க''

''நல்லா இருக்கேன் கோரன், நீ இதுவரை எங்க போன''

''இப்போ நாங்க கரியநேந்தல் போய்ட்டோம். அங்கே ஒரு சின்ன பிசினஸ் வைச்சி நடத்திட்டு இருக்கோம். உன்னைப் பார்க்கணும்னு தோணிச்சி அதான் வந்தேன். சுபத்ரா எங்கே போயிட்டா''

''அவ சொந்த ஊருக்குப் போய்ட்டா, இங்கே வந்த வேலை முடிஞ்சதுனு கிளம்பிட்டா''

''அவளுக்கு போன் பண்ணினேன், எடுக்கலை. நம்பர் மாத்திட்டாளா''

''ஆமா''

''அவ நம்பர் கொடு''

''புது நம்பர் என்கிட்டே இல்லை, அவளோட பழக வேணாம்னு சொல்லிட்டா''

அதற்குள் என் அம்மா அவனுக்கு பலகாரங்கள், காபி கொண்டு வந்து வைத்தார். அவனும் பலகாரங்கள் சாப்பிட்டுக்கொண்டே காபி குடித்து முடித்தான்.

''இங்கே வேணும்னா தங்கிக்கப்பா''

''இல்லைம்மா, அவனுக்கு வேற வேலை இருக்கு, அவன் போகணும்''

''இல்லைடா முருகேசு, இங்கே தங்கிட்டுதான் நான் காலையில போகணும்''

''எங்கே தங்கப்போற''

''தெரிஞ்சவங்க வீட்டில''

''இங்கே தங்குப்பா''

''வேணாம்மா''

''சரிடா, நான் கிளம்பறேன்''

கோரன் அங்கிருந்து கிளம்பினான். எதற்கு வந்தான், எதற்கு சுபத்ராவை விசாரித்தான் என எனக்குப் புரியவே இல்லை. அவனை பின்தொடர நினைத்தேன். பிறகு வேணாம் என விட்டுவிட்டேன்.

அதிகாலையில் எனக்கு ஒரு அழைப்பு வந்தது. புதிய எண் கண்டு திடுக்கிட்டேன். சிறிது யோசனைக்குப் பிறகு எடுத்தேன்.

''கோரனை  நான் கொன்னுட்டேன்டா''

''சுபா''

''நேத்து உன் வீட்டுக்கு வந்துட்டு என்னைத் தேடி எங்க ஊருக்கு வந்துட்டான், என்னை கொலை பண்ண முயற்சி செஞ்சான். நான் அவனை கொலை பண்ணிட்டேன்''

''என்ன சொல்ற சுபா, போலிஸ் கேசு''

''நீ பேசமா இருடா''

சுபத்ரா இணைப்பைத் துண்டித்தாள். அவளது எண்ணுக்கு அழைத்தபோது அவள் எடுக்கவே இல்லை. தகவல் எதற்கு சொல்ல வேண்டும்.

சில மணி நேரத்தில் எனது வீட்டு வாசலில் காவல் அதிகாரிகள் வந்து நின்றனர்.

''நீதானே முருகேசு''

கை கால்கள் நடுங்க ஆரம்பித்தது.

(தொடரும்) 

Sunday 11 October 2015

வாசகி ஒருவரின் தொலைக்கப்பட்ட தேடல்கள் குறித்த விமர்சனம்


இங்கே இந்த இணைப்பில் வாசகி ஒருவரின் தொலைக்கப்பட்ட தேடல்கள் குறித்த விமர்சனம்    படிக்கவும்

நிறைய நபர்களிடம் இந்த சிறுகதை தொகுப்பை கொடுத்து இருந்தேன். இந்த சிறுகதை தொகுப்பு வெளியிட்டபின் முதல் முதலில் அது குறித்த விமர்சனம் எழுதித் தந்த வாசகி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

இந்த விமர்சனம் எனது எழுத்தை பண்படுத்த உதவும் வகையில் அமைந்து இருப்பது வெகு சிறப்பு. அடடா விமர்சனத்திற்கே விமர்சனம் எழுதுவது நல்லது இல்லை என்பதால் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்.

மிக்க நன்றி.

Wednesday 7 October 2015

நமது திண்ணை அக்டோபர் மாத இணைய இதழ்

முதல் பக்கத்தைப் பார்த்ததும் பளிச்சென மனதில் ஒட்டிக்கொண்டு ஒருவித சந்தோசம் தந்துவிடுகிறது நமது திண்ணை. பொதுவாக குழந்தைகள் சுவற்றில் கிறுக்கி விளையாடுவார்கள். சுதந்திரமான வீட்டில் குழந்தைகளால் வரையப்பட்ட ஏகப்பட்ட கோடுகள் இருக்கும். ஆனால் இப்படி ஓவியம் வரையலாம் என்பது ஒரு சில குழந்தைக்களுக்கேத்  தெரியும். அருகில் இருக்கும் செடி கொடிகளால் அந்த மரம் உயிர் பெற்று இருப்பது போல உங்கள் கண்ணுக்குத் தெரிந்தால் நீங்கள் தான் ஓவியத்தில் ஜீவன் காண்பவர்கள். இலைகள், மலர்கள், பட்டாம்பூச்சிகள், பறவைகள். வெகு பிரமாதம். ஓவியர்கள் மீது எனக்கு எப்போதுமே ஒரு தனி மரியாதை உண்டு. வாழ்த்துக்கள் ஸ்ருதி. 

எமி அவர்களின் தாயகம் தேடும் உயிர் ஒரு நீண்ட வலியை சொல்லும் கவிதை. இந்த கவிதையில் வரும் ஒவ்வொரு விஷயமும் நிராகரிக்கப்பட்ட மனிதர்களின் ஓலமாகவே இருக்கும். புலம் பெயர் மக்களில் பல வகையினர் உண்டு. இந்த கவிதையில் சொல்லப்படும் புலம் பெயர் மக்களின் அவலம் இன்னும் நடந்து கொண்டே இருக்கிறது. என்னதான் இருந்தாலும் சொந்த ஊர் நாடு போல எதுவுமே இருப்பது இல்லை. பிச்சை எடுத்துப் பிழைத்துக் கொள்கிறோம் என்பதோடு அந்த புலம் பெயர் மனிதர்களின் வாழ்க்கைச் சூழலை கவிதை மனவலியுடன்  முடித்து வைக்கிறது.

ரிஸ்வான் அவர்களின் அன்புள்ள அப்பா.  பெருக்குவேன் காகிதங்கள் தினம், பணமெனும் காகிதம் வேண்டி. கல்வி நல்லதொரு வாழ்வைத் தரும் என சொல்லி மகள் மீதான எதிர்பார்ப்புடன் குப்பை பெருக்கினும் கோபுரம் தொடு என அருமையாக இருக்கிறது.

சுஷீமா அம்மா அவர்களின் ஸ்ரீராமானுஜர் தொடர் இத்தனை வேகமாக முடியும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. சைவ மன்னன் மட்டும் கொஞ்சம் சுதாரித்து இருந்து இருந்தால் ஸ்ரீராமானுஜர் இன்று இத்தனை அளவுக்கு பேசப்பட்டு இருக்கமாட்டாரோ என்னவோ! ஆனால் நல்ல மனிதர்களுக்கு எவரேனும் உதவியாக வந்துவிடுவார்கள் என்பதுதான் காலம் காலமாக கண்டு வரும் செய்தி. கண்கள் இழப்பது, உயிர் துறப்பது என்பதெல்லாம் நல்லதொரு விசயத்திற்காக முன்னர் மனிதர்கள் துணிந்து செய்தார்கள் என அறிய முடிகிறது. பிற சமயங்களை வெல்வது அன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கலாம். ஓம் நமோ நாராயணா என்றே சொன்னால் போதும் என வாழ்ந்தவர் புகழ் இன்னும் பெருகிக் கொண்டே இருக்கிறது. பல விசயங்களை அறிந்து கொள்ளும் வண்ணம் அருமையான தொடர் தந்தமைக்கு மிக்க நன்றி அம்மா.

எம்சி அவர்களின் நண்பன் கதை ஒருவரது  சின்ன கவனக்குறைவு பிறருக்கு எத்தனை பாதிப்பு உண்டாக்கும் என சோகம் சொல்லி முடித்த கதை.

விமலா பாட்டி அவர்களின் காலக்கண்ணாடி கடிதம் பற்றிய அருமையான நினைவலைகள் எனது கடிதம் எழுதிய காலங்களை, இன்றும்  கடிதம் எழுதும் அப்பா குறித்து அருமையான வாசிப்பு அனுபவத்தைத் தந்தது. அவர் சொன்னது போல கடிதங்கள் எல்லாம் தொகுத்து வைத்து இருந்தால் ஒரு காவியமே எழுதி இருக்கலாம் தான்.

பரிசல் அவர்களின் வீட்டைக் காலி பண்ணிப்பார், அட்வான்ஸ் கேட்டுப் பார் என்பது வீட்டின் உரிமையாளரே அட்வான்சை காலி பண்ணிப்பார் என முடிந்து இருப்பது பெரும் சோகம். பணத்திற்கு ஆசைப்பட்டு நல்ல நல்ல குணங்களை மனிதர்கள் தொலைத்து விடுகிறார்கள். முன்பணம் என்பது ஒரு பாதுகாப்புக்கு எனத் தெரியாமல் அதை செலவழித்துவிடும் உரிமையாளர்கள் பலர் இதுபோல நடந்து கொள்வது உண்டு. பலர் நிலையை பிரதிபலிக்கிறது.

அவளதிகாரம், மகளதிகாரம் படங்கள் எல்லாம் அருமை.

பெண்களின் அவல நிலையைச் சொல்லும் ஒரு சோகமான கவிதை மனோவின் ஆண்  திமிர் . மனைவியை கொடுமைபடுத்தும் கணவன்  இறந்து போகவேணும் என எந்த ஒரு மனைவியும் வேண்டுவதில்லை, மாறாக தானே  இறந்து போகிறார்கள்.

சேப்பாக்கம் தொகுதி எம் எல் ஏ திரு அன்பழகன் நேர்காணல்! ஒரு மக்கள் பிரதிநிதியிடம் சினிமா குறித்து நேர்காணல் தொடங்கியதும் என்ன இது என்றே தோணியது. தமிழ் சமூகம் சினிமாவால் தான் சீரழிந்தது என்று இல்லை, சினிமாவுக்கு முன்னரே சீரழிந்த தமிழ் சமூகம் தான் அது. சில கேள்விகளுக்குப் பின்னர் அவரது அரசியல் வாழ்வு பற்றி இருந்தது. மக்களுக்கு என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள், வாரத்தில் எத்தனை முறை தொகுதிக்கு  செல்கிறீர்கள், அடிக்கடி ட்விட்டரில் தென்படுகிறீர்களே உங்கள் தொகுதியின்  தெருக்களில் அடிக்கடி தென்படுவது உண்டா, உங்கள் தொகுதி மக்களுக்கு நாட்டின் மீதான அக்கறை என்ன, குற்றங்கள் குறைந்து இருக்கிறதா என பேட்டி எடுத்து இருந்தால் கலகலப்பாக இருந்து இருக்கும். ஆசிரியரின் முதல் நேர் காணல் என்பதால் அதுவும் தமிழகத்தில் இந்த முதல்வர், அமைச்சர்கள், எம் எல் ஏக்கள் என்றால் அளவு கடந்த மரியாதை என்பதால் அதுவும் வீட்டிற்கு ஆட்டோ வரும் என்பதால் சற்று கவனம் அவசியம் தான்.

அட யானைக்கு 38 பெயர்கள். பிரமாதம்.

உமா  க்ருஷ் அவர்களின் பாடல் பரவசம்  காதல் கவிதைகள் படித்திடும் நேரம் உண்மையிலேயே பிறைசூடனின் மிகவும் அற்புதமான  பாடல். ஒரு பாடலுடன் நம் மனம் ஒன்றிவிடாது போனால் அந்த பாடலின் மீது நமக்கு ஈர்ப்பு ஏற்படுவதில்லை. ஒரு பாடல் கேட்போம் அத்தோடு போய்விடுவோம் ஆனால் அதில் உள்ள நுணுக்கங்கள் எல்லாம் ரசிப்பதற்கு தனி மனநிலை வேண்டும். இசைஞானி இசை என்றால் தரம் பிரித்து விடலாம் எனுமளவுக்கு அவரது இசை இருப்பது என்னவோ உண்மைதான். பல இசைக்கருவிகளை கொண்டு இசைக்கப்பட்ட பாடல் என்றாலும் அத்தனையும் சரியாக இணைந்து போக வைப்பதே ஒரு இசையமைப்பளாரின் வெற்றி. இவரது எழுத்தின் மூலமே  அந்த பாடலின் உன்னதம்தனை, இசையின் மேன்மையை நாம் அறிந்து கொள்ளச்  செய்து இருப்பதுதான் வெகு சிறப்பு. அதோடு காட்சிப்படுத்தலை அதில் உள்ள வேறுபாட்டை அழகாக விவரித்து இருக்கிறார். அருமை.


நண்பர் ரவி அவர்களின் சமையல். உக்காரை. எங்குதான் பெயர் கண்டுபிடிப்பு செய்வார்களோ? கேள்விபட்டதே இல்லை. வெறும் கடலைப்பருப்பு வைத்து ஒரு உணவு. வித்தியாசமாக இருக்கிறது. சட்னிக்கு பதில் இப்படியும் செய்து சாப்பிடலாம்தான்.

ஆசிரியர் மூலம் சுந்தரராஜன் அவர்கள் குறித்து அறிந்து கொள்ள முடிந்தது. நமது திண்ணை இணைய இதழ் மட்டுமல்ல இனிய இதழ்.

அழகிய வடிவமைப்பு, எண்  அழுத்தினால் பக்கம் செல்லும் நேர்த்தி எனத் தொடர்ந்து அனைவரையும் உற்சாகம் பண்ணிக்கொண்டு இருக்கும் இந்த இணைய இதழ் புதிய இணையதளம் உருவாக்க இருக்கிறது. உங்களால் முடிந்த நிதியுதவியை நமது திண்ணை ஆசிரியர் அவர்களிடம் விபரங்கள் கேட்டு செய்யுமாறு இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன். 

Tuesday 6 October 2015

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 28

அடுத்த தினம் காவல் நிலையத்திற்கு சென்று கோரன் பற்றி விசாரித்தேன். அவர்கள் கோரன் வெளியில் சென்றுவிட்டதாக கூறியது பெரும் வருத்தம் தந்தது. அவன் மீது வழக்குப் பதிவு செய்யாமல் என்ன காரியம் பண்ணி இருக்கிறீர்கள் என சத்தம் போட்டேன். என் மீது வழக்குப் பதிவு செய்து விடுவதாக மிரட்டினார்கள்.

எங்கே இந்த கோரன் போயிருப்பான் என அவனது வீட்டிற்கு சென்று பார்த்தால் அங்கே கோரன் இருந்தான். ஆனால் நான் மறைந்து கொண்டேன். அவனது வீட்டிற்குள் சிலர் சென்றார்கள். சிறிது நேரத்தில் அவர்கள் வெளியே சிரித்த முகத்தோடு வந்தார்கள். கோரன் வாசல் வரை வந்து அவர்களை அனுப்பி வைத்தான். இந்த வயதில் இவனுக்கு எப்படி இப்படி ஒரு எண்ணம் வந்தது என்றே யோசித்துக் கொண்டு இருந்தேன். ஒருவேளை சுபத்ரா சொன்னது போல பரிணாமத்தின் கர்மவினையோ.

வீட்டிற்குள் சென்ற கோரன் கையில் ஒரு பையுடன் வெளியேறினான். என்னை எவரும் பார்த்துவிடக்கூடாது என்பது போல நடந்து கொண்டேன். அவனை மெதுவாக பின் தொடர ஆரம்பித்தேன். நிச்சயம் இவன் சுபத்ராவை நோக்கித்தான் செல்ல வேண்டும் என எண்ணியது தவறாக முடிந்தது. அவன் கரியனேந்தல் செல்லும் பேருந்தில் ஏறினான். அவனை பின் தொடர்வதா வேண்டாமா என எண்ணியபடி நின்றேன். காயத்ரியின் தந்தையை இப்படித்தான் தொடர்ந்தது நினைவில் வந்து ஆடியது. ஒன்றும் தெரியாதது போல அவன் இருந்த பேருந்து பக்கமாக நடந்தேன். அவன் அமர்ந்து இருந்த சன்னல் பக்கம் சென்று அழைத்தேன்.

''கோரன்''

பெயர் கேட்டதும் திடுக்கிட்டான். என்னைப் பார்த்தவன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

''கோரன், கோரன்''

அவன் என்னைத் தவிர்க்க நினைப்பது புரிந்தது. பேருந்தில் ஏறி அவனருகே சென்றேன்.

''கோரன் எங்கே போகிறாய்?''

இருக்கையில் இருந்து எழுந்தவன் வேகமாக பேருந்தில் இருந்து இறங்கி சில பேருந்துகளில் ஏறி இறங்கினான். எனது கண்ணில் இருந்து எப்படியோ மறைந்தான். அங்கே காத்து இருப்பதில் அர்த்தமில்லை என பேருந்து நிலையம் விட்டு வெளியேறினேன். கோரன் மிகவும் புதிராகவே தெரிந்தான்.

வீட்டிற்கு சென்றபோது காயத்ரி மிகவும் கோபமாக இருந்தாள் .

''என்ன விசயம் காயூ''

''எங்க போன''

''கோரன் என்ன பண்றானு பாக்கப் போனேன்''

''அந்த சனியனை விட்டுத் தொலைக்க முடியாதா''

''அவன் சுபாவை கொல்லப்போறேனு  சொல்லி இருந்தான்''

''அதான் சுபா அவனை கொல்வேனு சொன்னால''

''சுபா எங்கே''

''லைப்ரெரி போய்  இருக்கா''

''சாப்பிட்டாளா''

''சாப்பிட்டுத்தான் போனாள்''

''அம்மா எங்கே''

''கோவிலுக்குப் போனாங்க, இன்னும் வரலை''

''நீ போகலை''

''நீ எங்கே போனேனு சொல்லாம போயிட்ட, நீ வந்தா சாப்பாடு எடுத்து வைக்க சொல்லிட்டு அத்தைப் போயிட்டாங்க''

''நானா சாப்பிடமாட்டேனா''

''எனக்கு உன் மேல கோபம் தீரலை''

''சுபா எதுவும் சொன்னாளா''

''சொன்னா, உன்னை காதலிக்கிறேன்னு சொன்னா. உன்னை அவளுக்கு  விட்டுத்தரும்படி சொன்னா, எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வருது''

''விளையாட்டுக்கு பேசி இருப்பா''

''முருகேசு உனக்கு எது விளையாட்டு, எது உண்மைனு தெரியாதா, அவ ரொம்ப சீரியசா பேசறா, எனக்கு பயமா இருக்கு''

''என்ன பயம்''

''என்னை கொலை பண்ணிட்டா''

''என்ன பேசற நீ, அவ அப்படிபட்ட  பொண்ணு இல்ல''

''இல்லை முருகேசு, நீ அவளை வேறு வீடு பாக்கச் சொல்லு''

''எதுக்கு இப்படி பயப்படற, சொன்னா கேளு காயூ, அவ ஒன்னும் பண்ணமாட்டா''

அம்மா கோவிலில் இருந்து வந்தார்கள்.

''என்னடா சாப்பிட்டியா?''

''இல்லைம்மா''

''காயத்ரி, அவனுக்கு சாப்பாடு எடுத்து வைக்கலை''

''நான் சாப்பிட்டுக்கிறேன்மா, இப்போதான் வந்தேன்''

''அந்த பொண்ணு இங்கேதான் தங்கப்போறா''

''ஆமாம்மா, ஏன்?''

''சும்மா கேட்டேன்டா''

''காயூ சொன்னாளா, எதுவும் சுபா சொன்னாளா ?''

''இல்லையே, நீ போய்  சாப்பிடு, காயத்ரி சாப்பாடு எடுத்து வைம்மா''

சாப்பாடு எடுத்து வைக்கும்போது காயத்ரி சுபத்ராவை வெளியே போகச் சொல்லு என்பதை பலமுறை சொல்லிவிட்டாள்.

''காயூ, எல்லாம் கர்மவினை''

''ஆமா, எது நடக்கணுமோ அதுதான் நடக்கும்னு பேசிட்டு இரு''

காயத்ரி அழாத குறைதான். எனக்கு சுபத்ராவை வீட்டை விட்டு வெளியே அனுப்ப மனம் இல்லை. கோரன் பற்றிய அச்சம் எனக்கு நிறையவே இருந்தது.
மதியம்தான் சுபத்ரா வீட்டிற்கு வந்தாள்.

''டேய், ஒரு புது வீடு வாடகைக்கு எடுத்துட்டேன். ஒரு ரூம் மட்டும் தரேன்னு சொல்லி இருக்காங்க. லைப்ரெரி பக்கம் தான். அப்படியே இந்த ரெங்கநாதனை நல்லா திட்டிட்டு வந்துட்டேன். எல்லாத்தையும் என் வீட்டுல சொல்லிட்டான். நீ ஒண்ணும்  பரிணாமம் எல்லாம் ஆராய்ச்சி பண்ண வேணாம் வீட்டுக்கு வானு சொல்லிட்டாங்க. அடம் பிடிச்சி இன்னும் ஆறு மாசம்னு சொல்லிட்டு வந்து இருக்கேன். ஏன்டா  இந்த ஆம்பளை பசங்களுக்கு அறிவே இருக்காதா? அந்த கோரன் மடையன் எனக்கு போன் பண்ணி இன்னும் ஆறு மாசம் கழிச்சி உன்னை கொல்றேன்னு சொல்றான். உன் அட்ரஸ் தாடா இப்பவே வரேன் உன்னை கொல்றேன்னு சொன்னதும் போன  வைச்சிட்டான்''

சுபத்ரா மளமளவென பேசியது கண்டு என் அம்மா அப்படியே ஓரிடத்தில் தூணில் சாய்ந்து கொண்டார்கள். காயத்ரிக்கு முகமெல்லாம் சந்தோசம்.

''என்னடா ஒன்னும் பேசமாட்டேங்கிற, டேய் நான் உன்கூட இருந்தா இவ இருக்காளே அவளுக்கு இருப்பு கொள்ளாது, அதான் நான் வெளியே போய் உன்னை தொடர்ந்து காதல் பண்ணப் போறேன். உன் அம்மா கூட பாவம் ரொம்பவே இடிஞ்சி போயிட்டாங்க, இல்லையாம்மா''

''இந்த சின்ன வயசுல இப்படி இருக்கியே''

''எப்படி இருக்கேன், இல்லை எப்படி இருக்கேன், உங்க மகனுக்கு ஏத்த ஜோடி நான் தான், இவ யாரு? என்னை நீங்க மறந்து போயிட்டீங்களோ''

''ஏதோ  வீடு பாத்து இருக்கேன்னு சொன்னயில, போம்மா''

அம்மா அப்படி சொன்னதும் சுபத்ரா தனது பெட்டியை எடுத்துக் கொண்டு வரேன்டா என என்னிடம் மட்டும் சொல்லிவிட்டு வெளியேறினாள். சுபத்ராவை இருக்கச் சொல்ல எனக்கு வாய்ப்பு இன்றி போனது.

''அம்மா, அவ ஒண்ணுமே இல்லாத விஷயத்தை பெரிசு படுத்துறாமா''

''நீ பேசாம போடா, அவ எவ்வளவு திமிரா பேசுறா, காலையில காயத்ரியை ஓங்கி அடிக்கப் போயிட்டா. நான் அவளை நல்லா திட்டினேன் அதான் எங்கேயோ போயி வீடு பாத்து வந்துருக்கா''

''அம்மா அவ பாவம்மா, காயூ எதுக்கு இதை என்கிட்டே சொல்லலை''

''பாவம் அவ மேல தான் இருக்கும், அதான் சொல்லலை''

''காயூ என்ன நீ இப்படி பேசற''

''அவளை கண்டிச்சி வை''

''நீங்க ரெண்டு பேரும்  அடிச்சிக்க வேணாம்''

பல தினங்களாக சுபத்ராவை நாங்கள் பார்க்கவே இல்லை. ஒருமுறை கோரன் வீட்டுக்குப் போனபோது வேறு ஒரு குடும்பம் அங்கே குடி வந்து இருந்தது. விசாரித்துப் பார்த்ததில் வீட்டை விலைக்கு வாங்கி விட்டதாக சொன்னார்கள்.

இந்த உலகில் என்ன நடக்கிறது, எப்படி நடக்கிறது என இதுவரை எவருமே சரியாக சொன்னது இல்லை.

(தொடரும்)









Thursday 1 October 2015

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 27

''சுபாவை கூப்பிடுடா''

''வேண்டாம் கோரன்''

''நீ அவளை வரச் சொல்லிட்டுப் போடா''

''கோரன் நீ ஏன்டா இப்படி நடந்துக்கிற''

''நான் சொன்னதை செய்டா''

சுபத்ராவை  அழைத்தேன்.சுபத்ரா வெளியே வந்தாள். நான் அங்கிருந்து மறைந்து கொண்டேன். கோரனைப்  பார்த்த சுபத்ரா நேராக வந்து கோரன் எதிர்பார்க்காத வண்ணம் மூர்க்கமாகத் தாக்கினாள். கோரன் சுதாரிக்கும் முன்னர் நான் அவன் மீது கல் எடுத்து எறிந்தேன். நிலைகுலைந்து விழுந்தான் கோரன். எவ்வித சப்தமும் போடாமலே கோரன் இருந்தது ஆச்சரியமாக இருந்தது.

சுபத்ரா போலீசிற்கு தகவல் சொல்லிவிட்டு காத்து இருந்தாள். கோரனின் கால் கைகளை கட்டிப்போட்டேன். அதோடு நானும் உடன் இருக்க வேண்டியதாகி விட்டது. ரங்கநாதன், சுபலட்சுமிக்கு  இது கொஞ்சமும் பிடிக்கவில்லை. சுபத்ராவை நாளையே வீட்டை காலி பண்ணி வேறு எங்காவது தங்கிக் கொள்ளச் சொன்னார்கள். சுபத்ரா மறுப்பேதும் சொல்லாமல் சரி என சொல்லிவிட்டாள்.

போலிஸ் உடனடியாக வந்தது. சுபத்ரா எல்லா விபரங்களையும் சொன்னதும் கோரனை போலிஸ் அழைத்துச் சென்றது. என்னையும் சுபத்ராவையும் காலையில் காவல் நிலையத்திற்கு  வரச் சொன்னார்கள்.

''டேய் நான் உன்னோட இப்போ உன் வீட்டுக்கு வரட்டுமா?''

''சுபா''

''அவங்கதான் இங்க என்னை தங்க வேணாம்னு சொல்லிட்டாங்க, அங்க வந்து தங்கிட்டு நாளை வேற இடம் போயிக்கிறேன்''

''சரி சுபா''

சுபத்ரா தனது பெட்டியை எடுத்துக் கொண்டு என்னுடன் நடக்கலானாள். ரங்கநாதன் சுபத்ராவை தடுக்கவே இல்லை. காயத்ரி அக்காவாவது தடுப்பார் என்றால் அதுவும் இல்லை.

''சுபா, என்னை காதலிக்கிறது உண்மையா?''

''ஆமாடா, என்னடா சந்தேகமா?''

''சுபா, நான் காயூவை காதலிக்கிறேன், ப்ளீஸ் எங்க வாழ்க்கையை குழப்பாதே''

''உன்னை என்னை காதலிக்க சொன்னேனாடா''

''எத்தனை பிரச்சினை?''

''சரி செய்துடலாம்டா''

''சரி செய்துரலாம்னு சொல்லிக்கிட்டே இருக்க வேண்டியதுதான், எதையும் சரி செய்யமுடியாது''

பேசிக்கொண்டே வீடு வந்து  சேர்ந்தோம். சுபத்ராவை கண்டதும் காயத்ரி குழப்பம் அடைந்தாள். அம்மாவிடம் சொன்னதும் அம்மா சரி இருக்கட்டும் என்றார். அப்பா என்னை தனியாக அழைத்து என்னப்பா தேவையில்லாத பிரச்சினைகளோட வாழுற, படிக்கிறதுக்கு பாரு என அறிவுரை சொல்லி அனுப்பினார்.

காயத்ரியின் அறையில் தான் சுபத்ரா தூங்க வேண்டி இருந்தது. காலையில் எழுந்து கிளம்பியபோது காயத்ரிதான் சுபத்ரா இங்கேயே இருக்கட்டும் என்றாள். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. என் அம்மாவும், அப்பாவும் காயத்ரி சொன்னாள் என்பதற்காக சம்மதம் சொன்னார்கள்.

நாங்கள் மூவரும் காவல் நிலையம் செல்ல இருந்தோம். அப்பாவும் உடன் வருகிறேன் என்றதால் நால்வரும் சென்றோம். அப்பாவுக்கு அங்கிருந்த காவல் அதிகாரியை தெரியும் என்பதால் எவ்வித பிரச்சினை இன்றி எல்லாம் முடிந்தது. ஆனால் கோரனை வெளியில் விட இயலாது என்றார் அவர்.

நாளிதழ் ஒன்றை பார்த்தபோது கோரன் சொன்னது போலவே ஆசிரியர் கொலை செய்யப்பட்ட விசயம் வெளி வந்து இருந்தது. அதை காவல் அதிகாரியிடம் தந்து கோரன் தான் இந்த கொலையை செய்தான் என நான் சொன்னதும் என்னை போகச் சொன்னவர் அவர்கள் அதைப் பார்த்துக் கொள்வதாக கூறினார்கள்.

சுபத்ரா காயத்ரியின்  நெருங்கிய தோழி ஆனது ஆச்சரியம். அன்று கல்லூரியில் எப்படி ஒரு மனிதன் கொடூர எண்ணம் கொண்டு உருவாகிறான் என பாடம் எடுத்தார் எனக்குப் பிடித்த ஆசிரியர்.

''சார், கோரன் ஒரு கொலைகாரனாக மாறியதற்கு என்ன காரணம்?''

''கொலைகாரனா?''

மொத்த வகுப்பும் என்னை பயத்துடன் பார்த்தது.

''நமது கல்லூரி ஆசிரியர் ஒருவரை கோரன் கொலை செய்து தற்போது ஜெயிலில் இருக்கிறான் சார். அவன் நிறை புத்திக்கூர்மை கொண்டவன் ஆனால் எதற்கு இப்படி நடந்து கொண்டான் என நினைக்கும்போது இந்த கொடூர எண்ணம் அவனுள் எப்படி வந்து இருக்கக் கூடும் சார்''

''நீ அதுகுறித்து இங்கு பேசுவது தேவை இல்லை, கொடூர எண்ணம் கோபத்தின் வெளிப்பாடு, இன்று வேறு பாடம் பார்க்கலாம்''

கோரன் பற்றிய பேச்சு கல்லூரி முழுக்க பரவியது. பலர் பரிதாபம் கொண்டார்கள். மாலை கல்லூரியில் இருந்து வீட்டிற்கு சென்றபோது சுபத்ராவைப் பார்த்தோம். சுபத்ராவிடம் கோரன் பற்றி கேட்டபோது ஒரே வரியில் சொன்னாள்.

''பரிணாமத்தின் கர்ம வினை''

''கர்மவினையா?''

''ஆமாடா, நமது மூளை வளர வளர நமக்கு நம்மை பாதுகாக்க வேண்டி எண்ணம் வந்தது, அதன் விளைவாக எதிரிகளை உருவாக்கிக் கொண்டோம்''

காயத்ரி குறுக்கிட்டாள்.

''சிலருக்கு அன்புள்ளமே அவர்களுக்கு பெரும் எதிரி''

நான் காயத்ரி என்ன அர்த்தத்தில் சொன்னாள் என புரிந்து கொள்ள முடியவில்லை. சுபத்ராதான் சொன்னாள்.

''கோரன் நிச்சயம் வெளியே வருவான், அவன் ஒரு ஜீனியஸ், ஆனால் முட்டாள்தனமா நடந்துக்குவான்''

''அவன் வெளியே வந்தா உன்னை கொலை பண்ணிருவான்''

''இல்லைடா, நான் அவனை கொலை பண்ணுவேன்''

காயத்ரி பயம் கொண்டாள்.

(தொடரும்)

Wednesday 30 September 2015

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 26

அன்று மாலை கோரனின் வீட்டிற்கு நானும் காயத்ரியும் சென்றோம் ஆனால் கோரனின்  வீடு பூட்டப்பட்டு இருந்தது. எங்கு சென்று இருப்பான் என எண்ணுவதற்கு வழியில்லை. அப்படியே காயத்ரியின் அக்காவை பார்க்க ரங்கநாதன் சார் வீட்டிற்கு சென்றோம்.

காயத்ரியைப் பார்த்ததும் அவளது அக்கா அத்தனை பாசமாக வரவேற்றார்.  நாங்கள் சிறிது நேரம் அங்கு இருக்கும்போதே சுபத்ரா அங்கு வந்தாள். எங்களைப் பார்த்தவளின் முகம் அத்தனை சந்தோசமாக இல்லை. வாங்க என சொல்லிவிட்டு நேராக மாடிக்குப் போனாள். காயத்ரியின் அக்காவின் கவனத்தை என் பக்கம் திருப்பினேன்.

''சார் எப்போ வருவாங்க?''

''அவர் வர எப்படியும் மணி எட்டு ஆகும்''

''நீங்க வேலைக்குப் போறதை எதுக்கு நிறுத்தினீங்க''

''வேணாம்னு சொல்லிட்டார், நிறுத்திட்டேன், நீ சொன்னா காயத்ரியும் கேட்பா''

''வேலைக்குப் போக வேணாம்னு நான் சொல்லமாட்டேன்''

''ஆனா இது கூட நல்லா இருக்கு''

''அவங்க அம்மா எங்கே?''

''அத்தை வெளியூர் போயிருக்காங்க, வர ஒரு வாரம் ஆகும்''

பேசிக்கொண்டு இருக்கும்போதே சுபத்ரா வந்தாள்.

''சுபா, கோரன் எங்க போனான்னு தெரியுமா''

''எனக்குத் தெரியாது''

''சொல்லு சுபா, அவன் வீடு பூட்டி இருந்தது''

''எனக்குத்  தெரியாதுடா''

சுபத்ரா அவ்வாறு சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டாள். காயத்ரி அவளது அக்காவிடம் எல்லா விபரங்களையும் சொல்லி வைக்க காயத்ரி அக்காவோ சுபத்ராவிடம் எச்சரிக்கையாக இருக்கச் சொன்னார். நாங்கள் இருவரும் வீட்டிற்கு வந்துவிட்டோம்.

அடுத்த நாள் கல்லூரியில் கோரன் வந்து தனது மாற்று சான்றிதழ் வாங்கிச் சென்றதாக பேசிக்கொண்டார்கள். நானும் தான் கல்லூரியில் இருக்கிறேன் ஆனால் எனக்குத் தெரியாமல் என்னைப் பார்க்காமல் அவன் அவ்வாறு செய்தது ஆச்சரியமாக இருந்தது. தலைவலி என சொல்லிவிட்டு கோரன் வீட்டிற்கு சென்றேன். அவனது வீடு பூட்டப்பட்டுதான் இருந்தது. அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது ஒரு மணி நேரம் முன்னால வெளிய கிளம்பி போனாங்க என தகவல் சொன்னார்கள். எனக்கு இப்படி துப்பறியும் வேலையாகவே போய்விட்டது.

கல்லூரியில் படிப்பு தடைப்பட்டுக் கொண்டு இருந்தது. காயத்ரியும் படிப்பு மீது அக்கறை செலுத்த வேண்டும் என சொல்லிக்கொண்டே இருந்தாள். ஒரு வாரம், இரண்டு வாரம் என வாரங்கள் கடந்து சில மாதங்கள் கடந்தது. தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் வந்தது கண்டு கொஞ்சம் சந்தோசம் என்றாலும் கோரன் எங்கு போனான் என தெரியவில்லை. இந்த சில மாதங்களாக சுபத்ரா முகம் கொடுத்து பேசவும் இல்லை.

திடீரென எனது அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.

''டேய் முருகேசு, நான் கோரன் பேசறேன்''

''கோரன், எங்க இருக்க''

''நான் எங்க இருக்கேனு உனக்குத் தெரிய வேணாம், அந்த வாத்தியானை கொன்னுட்டேன், அடுத்து சுபத்ராதான்''

''என்ன சொல்ற''

''அவ உன்னை காதலிச்சேன்னு என்கிட்டே பொய் சொன்னால அதுக்கு அவளை கொலை பண்ணிட்டுதான் மறு வேலை''

''கோரன் உன்னோட புத்தி எதுக்கு இப்படி போகுது''

''நம்பிக்கைத் துரோகிகளை இந்த உலகம் சகித்துக்கிட்டு இருக்கவே கூடாதுடா, நீ காயத்ரிக்கு நம்பிக்கைத் துரோகம் பண்ணின உன்னையும் கொல்வேன்டா''

''இப்படி எத்தனை பேரை கொல்லப் போற''

''எனக்கு ஏதாவது சம்பந்தபட்டவங்க மட்டும் தான்''

''நீயே நம்பிக்கைத் துரோகம் பண்ணினா உன்னை நீயே கொல்வியா''

''மூடன் மாதிரி பேசாதடா, நான் யாருக்கும் நம்பிக்கைத் துரோகம் பண்ணமாட்டேன்டா''

''எனக்குப் பண்ணி இருக்கியே''

''என்னடா சொல்ற''

''உன்னை நல்லவன்னு நம்பினேன் ஆனா நீ கொடூர மனம் கொண்டவனா இருக்கே, நீ பதில் சொல்றது எல்லாம் நினைச்சி எவ்வளவு நினைச்சி இருந்தேன்''

''டேய் வாயை மூடுடா, நாளைக்கு அந்தாளு முகத்தோட பேப்பர்ல வரும், படிச்சிக்கோடா''

அத்துடன் அழைப்பைத் துண்டித்தான். அவனை மீண்டும் அழைத்தபோது அழைப்பில் இல்லை என்றே பதில் வந்தது. இதை காயத்ரியிடம் சொன்னபோது காயத்ரி சுபத்ராவை எச்சரிக்கைப் பண்ணலாம் என சொன்னாள் . சுபத்ராவிற்கு போன் போட்டபோது சுபத்ரா எடுக்கவே இல்லை. அன்று இரவு சுபத்ராவை சந்திக்கப் போனேன். எனது அழைப்பு கேட்டும் சுபத்ரா பேச மறுத்தாள். சிலமுறை முயற்சி செய்து கடைசியாக பேசினேன்.

''சுபா ஒரு முக்கியமான விஷயம், சொன்னா கேளு, வெளியே வா''

சுபா வீட்டை விட்டு வெளியே வந்தாள்.

''என்னடா''

''உன்னை கோரன் கொல்லப் போறதா எனக்கு போன் பண்ணினான்''

''என்னடா உளறுற''

''சொன்னான், அந்த வாத்தியானை கொன்னுட்டானாம், அடுத்து நீதான் அப்படின்னு சொன்னான்''

''எந்த நம்பர்ல இருந்து பேசினான், என்கிட்டே இருக்க நம்பருக்கு அவனை கூப்பிட முடியலையேடா''

''நம்பர் அழிச்சிட்டான்''

''நீ போடா நான் பாத்துக்கிறேன்டா, முருகேசு எனக்கு ஒரு உதவி பண்ணுவியாடா''

''என்ன உதவி''

''அடுத்தமுறை கோரன் போன் பண்ணினா எனக்கு இப்படி வந்து சொல்லாதே, அவ மேல கை வைச்சி பாருடா, உன்னை நானே கொலை பண்ணுவேன்னு சொல்லு''

''ஏன்''

''டேய், உன்னோட காதலி என்னை ஒருத்தன் கொல்லப்போறேனு சொல்றான், அதை கேட்டுட்டு என்கிட்டே வந்து தகவல் சொல்ற''

''அது இல்லை''

''என்னடா அது இல்லை, ஒழுங்கு மரியாதையா காயத்ரியை மறந்துரு''

''சுபா நீ என்னை காதலிக்கிறது பொய்னு தெரிஞ்சிதான் கோரன் உன்னை கொல்ல இருப்பதா சொன்னான்''

''சரிடா, ஆனா நான் காதலிக்கிறது உண்மைடா''

''வேணாம் சுபா''

''பாருடா என்ன நடக்குதுன்னு''

அவள் வீட்டிற்குள் சென்றுவிட்டாள். நான் வெளியில் நின்று கொண்டு இருந்தேன். என் மீது எவரின் கையோ பட்டது. திரும்பிப் பார்த்தேன். கோரன் நின்று கொண்டு இருந்தான். எனக்கு கை கால்கள் நடுங்கத் தொடங்கியது.

(தொடரும்)





Tuesday 29 September 2015

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 25

''முருகேசு, உனக்கு சில உண்மைகளை சொல்றேன் கேளுடா, அதுக்கு அப்புறம் உனக்கும் ஒரு விஷயம் சொல்றேன்டா, அதுபடி நீ நடக்கணும்டா, இல்லை...''

''சொல்லு''

''அவனின் மனைவி எனது அம்மாவுக்கு  தங்கை முறை, என் அப்பாவுக்கும் தூரத்து சொந்தம். அவனும் சித்தியும்ஓடிப்போய்த்தான் காதல் திருமணம் பண்ணிக்கொண்டார்கள். முதலில் நன்றாகத்தான் இருந்தார்கள். சித்தி எங்கள் வீட்டுக்கு வருவார்கள், போவார்கள். பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்தார்கள். இதனால் இவனால் எனது சித்தி மிகுந்த மன வேதனைக்கு ஆளானார்கள். கொஞ்சம் கொஞ்சமாக மனநிலை பாதிக்கப்பட ஆரம்பித்தது. இதற்கு சற்று ஆறுதலாக இருந்த எங்களை பார்க்கக்கூடாது என அவன் கட்டளை போட்டதால் எப்போதாவது வர ஆரம்பித்தவர் சில மாதங்களாக வருவதை அடியோடு நிறுத்திவிட்டார். என் அம்மா அங்கே செல்லும்போது அவன் என் அம்மாவை கண்டபடி பேசியதை என் அம்மா எங்களிடம் சொல்லவில்லை. சித்தியைப்  பார்க்கவும் செல்லவில்லை.

மன அழுத்தம்தனை காரணம் காட்டி பலமுறை மருத்துவமனைக்கு அவன் அழைத்துச் சென்று இருக்கிறான். தான் நல்லவன் போல எல்லோரிடமும் காட்டிவிட்டு தாட் பொரசெஸ் என கதைகட்டிவிட ஆரம்பித்தான். ஒருமுறை சித்தியைப் பார்த்தபோது கோரன் எனக்கு பயமா இருக்குடா, நான் என் அம்மா வீட்டுக்குப் போறேன் என்றபோது இவன் வேறொரு மணம்  முடிக்க திட்டமிடுவதை சொன்னார். நான் அவனை முழுமையாக நம்பியதால் பார்த்துக்கொள்ளலாம் என சொல்லிவிட்டு வந்த ஒரே வாரத்தில் சித்தி தற்கொலை செய்து கொண்டதாக அவனிடம் இருந்தே தகவல் வந்தது. தற்கொலைதான் என நம்பும்படி எல்லா ஆதாரங்களும் இருந்தன அதனால் போலிஸ் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஆனால் நான் அப்பா அம்மா இது ஒரு கொலை என்றே எண்ணினோம். அவன் உண்மையை ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் அவனை கொல்வது  எனத்  திட்டமிட்டோம். ஆனால் படுபாதகன் நீ குறுக்கே வந்துவிட்டாய், உன்னை கொலை பண்ணினால்தான் அவனை கொலை பண்ண முடியும் என எனக்குள் ஒரு ஆத்திரம் இருந்து கொண்டே இருந்தது. இன்று நான் சொன்னது பொய் என்று சொன்னாய் பார் அதுதான் எனக்கு மேலும் ஆத்திரம் அதிகம் ஆனது.

இப்போது சொன்னது உண்மை. நான் அவனை எங்கேனும் தேடி கொலை பண்ணாமல் விடமாட்டேன். நீ இதற்கு மேல் இதில் தலையிடுவது என இருந்தால் இப்போதே சொல், உன்னை இங்கேயே கொன்று போட்டுவிடுகிறேன்''

''கோரன், இது எல்லாம் தப்பு என தெரியவில்லையா''

''எதுடா தப்பு, சொல்டா, இவ்வுலக உயிர்கள் எல்லாம் பிரசவிக்கின்றன, அந்த பிரசவம் என்பது பெண்ணுக்கு என உண்டானதுடா, ஒரு பெண் பிரசவிக்க முடியாமல் போனால் வேறு ஒரு பெண்ணை நாடுவது அந்த பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதி, ஆனால் அப்படியே விருப்பம் கொண்டு போகட்டும் அதற்காக மனநிலை பாதிக்கப்படும்படி செய்து கொலை செய்யும் மனநிலையை எப்படியடா மன்னிப்பது''

''கோரன் சொல்வதைக் கேள், கொலை செய்தார் என்பதற்கு ஆதாரம் இல்லாமல் நீ தவறான முடிவை எடுக்காதே''

''உன்னோடு பேசினதே தப்புடா, இதோ பார் உன்னை...''

நான் சுதாரித்து எழுந்து கதவைத் திறந்து ஓட எத்தனித்தேன். ஆனால் அவன் விருப்பம்படி செய்யட்டும் என அப்படியே உட்கார்ந்து இருந்தேன். கோரன் சமையல் அறைக்குள் என நினைக்கிறேன், அங்கிருந்து ஒரு கத்தியுடன் வந்தான். எனக்கு வியர்க்க ஆரம்பித்தது.

''சொல்டா, நீ தலையிடுவாயா''

''கோரன், இனி அது உன்னோட விருப்பம், நான் விலகிக் கொள்கிறேன்''

''போலிஸ் கேட்டால் எதுவும் தகவல் சொல்வாயாடா''

''இல்லை சொல்லமாட்டேன்''

''அந்த சுபாவை நீ ஏமாற்றினால் இதே கதிதான் உனக்கும். அதென்னடா நீ நினைத்தபடி பெண் மாற்றுவது, முதலில் அவன், அடுத்து நீ. அதுக்கு ஒரு அடையாளம் உன்னில் போடவேண்டும்''

கோரன் பேசிக்கொண்டே என் அருகில் வந்தான். நான் அப்படியே அமர்ந்து இருந்தேன். என் அருகில் வந்ததும் அப்படியே எழுந்து அவனது வயிற்றில் ஓங்கி முட்டினேன் நிலைகுலைந்து கீழே விழுந்தான். எங்கிருந்து வந்த தைரியமோ அவனது உடலில் கைகளில் சரமாரியாக மிதித்தேன். அவன் கொஞ்சம் கூட கத்தவில்லை. இனி அங்கு இருப்பது ஆபத்து என கதவைத் திறந்து வேகமாக வெளியேறினேன். இனி கோரன் பரம எதிரிதான் என நினைக்கும்போது பயமாக இருந்தது.  சுபத்ராவிடம் விஷயத்தை சொல்லி நிலைமையை சரி செய்ய வேணும் என எண்ணிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

காயத்ரி தூங்காமல் காத்துக்கொண்டு இருந்தாள். எல்லா விபரங்களையும் சொல்லி முடித்தேன். அவள் பதறினாள்.

''முருகேசு, என்ன காரியம் பண்ணி இருக்க?''

''நீ கவலைப்படாதே, அவன் எப்படியும் அந்த ஆசிரியரைத் தேடித்தான் போவான் அதுக்குள்ளாற சுபா கிட்ட பேசுவோம்''

''அவதான் எல்லாம் தூண்டி விட்டு இருக்கா, அவகிட்ட எதுக்குப் பேச்சு''

''இல்லை காயூ, நீ தூங்கு''

காயத்ரியிடம் சொல்லிவிட்டு நான்  தூங்காமல் இருந்தேன். காயத்ரியின் அம்மாவின் உடல்நிலையை காரணம் காட்டித்தான் காயத்ரியின் தந்தை இன்னொரு பெண்ணுடன் ஓடிப்போனார். அதேபோல கோரன் சொன்னது போல இருந்தால் ஆசிரியர் எதற்கு கொலை பண்ண வேண்டும். யோசித்தவாரே உறங்கினேன்.

மறுநாள் சுபத்ராவைப் பார்க்கச் சென்றேன். சுபத்ரா எங்கேயோ வெளியே கிளம்பிக் கொண்டு இருந்தாள்.

''சுபா, முக்கியமான விஷயம் பேசணும், நீ கோரன் கிட்ட என்னை காதலிக்கலை, கதைதான் சொன்னேன்னு சொல்லிரு, அவன் என்னை கொல்லணும்னு  சொல்றான்''

''இன்னும் உன்னை கொல்லலையா?, இன்னுமா விட்டு வைச்சிருக்கான், நான் எதுக்குடா பொய் சொல்லணும், நீயும் நானும் காதலிச்சோம், என்ன மறைக்கப் பாக்கிறாய, ஒழுங்காப் போயிருடா''

''நீ பரிணாமம் பத்திதான் படிக்க வந்த, எதுக்கு இப்படி என்னை வம்பில கோர்த்துவிட்ட''

அவளிடம் நேற்று நடந்த விசயங்களை சொன்னதும் அதிர்ச்சி ஆனாள்.

''என்னடா சொல்ற''

''ஆமா சுபா, இதுதான் நடந்தது''

''இருடா''

அவளது செல்பேசியை எடுத்து யாரையோ அழைத்தாள்.

''கோரன், என்ன காரியம் பண்ண இருந்த, முருகேசு என்னோட பிரெண்ட் அவனுக்கு ஏதவாது  ஆச்சு உன்னை என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது. ஏன்டா  அறிவுகெட்டவனே அவனை என்ன பண்றதுனு  எனக்குத் தெரியும் உன் வேலை எதுவோ அதைமட்டும் பாரு''

பதில் கூட பேசாமல் அழைப்பைத் துண்டித்தாள். அவளது அலைபேசி மீண்டும் அழைத்தது.

''என்னடா, ஒழுங்கா இரு''

''-----''

''புரிஞ்சதுல நீ அந்த வாத்தியானை பழி வாங்கு என்னமும்  செய், என் பிரெண்ட் பக்கம் நீ தலை வைச்ச உன் தலை இருக்காது, வைடா போனை''

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இவ்வுலகில் எனக்குத் தெரியாதது என்று நிறைய இருக்கிறது, அதில் மிகவும் முக்கியமான ஒன்று நான். சுபாவின் மீது எனக்கு மரியாதை ஏற்பட்டது.

''நீ தைரியமா இரு, ஆனா நீ என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கிரனும், இல்லைன்னா கோரன் பண்ணவேண்டிய வேலையை நான் பண்ணுவேன்''

சொல்லிவிட்டு கலகலவென சிரித்தாள்.

''எங்கடா உன் பொய் காதலி, நான் எது சொன்னாலும் சிரிப்பாளே''

''சுபா சீரியஸா பேசு''

''ஒண்ணுமே இல்லாத விஷயத்தை ஊதி  பெரிசாக்கி விட எனக்குத் தெரியும், எவ்வளவோ பெரிய விஷயத்தை ஒண்ணுமே இல்லாம ஆக்க என்னால முடியும்''

''சுபா, நல்லா படிச்சி வேலைக்குப் போகணும்னு இருக்கேன்''

''அப்படின்னா அவளை மறந்துரு''

''சுபா''

''டேய் இந்த உலகத்தில உயிரற்றதில் இருந்து உயிர் உருவாகியதா எந்த வரலாறும் இல்லை. அதனால நான் உன்னோட உயிர். நீ என்னோட உயிர்''

சொல்லிவிட்டு வேகமாகப் போய்விட்டாள். பிறரது உணர்வுகளை மதிக்காதவர்கள் சைக்கோ என குறிப்பிடப்பட்டு இருக்கிறது . சைக்கோ! நானா? அவளா?

(தொடரும்)


Monday 28 September 2015

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 24


பகுதி 23 

கோரன் ஆசிரியர் அவனது தாய்க்கு பெரும் கொடுமையை இழைத்ததாக தனது கதையை சொல்லி முடித்து இருந்தான். அவன் மிகவும் சுருக்கமாகவே சொன்னவன் என்னை நோக்கி முறைத்தவண்ணம் இருந்தான். அவனை நோக்கி நான் மட்டுமே பேசினேன்.

''நீ சொல்வது எல்லாம் பொய்''

''உன்னை கொலை செய்தால் அந்த உண்மை தெரியும்''

கோரனின் ஆவேசம் எனக்கு ஒன்றும் இப்போது புதிதாக தெரியவில்லை. பிறரது பிடியில் இருந்து விலக்கிக் கொள்ள போராடினான். அதற்குள் காவல் வண்டி கல்லூரி வளாகத்தில் நுழைந்தது. அதைக் கண்ட கோரன் அங்கிருந்து தப்பித்து ஓடினான். அவனை சில மாணவர்கள் விரட்டிக்கொண்டு சென்றவர்கள் எதற்கு நமக்கு வம்பு எனத் திரும்பினார்கள். காவல் அதிகாரிகள் வேறொரு விசயத்திற்காக வந்தார்கள் என்பது எங்களுக்குப் பின்னரே தெரிந்தது.

கோரன் சைக்கோத்தனம் கொண்டவன் என முடிவுக்கு வரவேண்டி இருந்தது. நான் வாசித்த புத்தகத்தில் இருந்து சில வரிகள் என்னை மிகவும் யோசிக்க வைத்தன.

சைக்கோக்கள் என்போர் எவரென அடையாளம் தெரியாமல் இந்த உலகம் அல்லாடிக் கொண்டு இருந்தபோது எல்லோரும் ஒருவகையில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களே எனும் முடிவுக்கு வருவது பொருத்தம் ஆகாது.

தார்மீக உணர்வுகள் அற்றுப் போனவர்களை சைக்கோ என்றே அழைக்கின்றனர். இவர்கள் எப்படி உருவாகிறார்கள்? இந்த சைக்கோக்கள் இருவகைப்படுகின்றனர். ஒன்று மரபணு ரீதியாக உருவாகும் வகையினர், மற்றொன்று சூழ்நிலை காரணமாக உருவாகும் வகையினர். இவர்களால் சமூகத்திற்கு பெரும் அச்சம் உண்டாக்கப்படுகிறது. 

பிறருடைய உணர்வுகளை மதிக்காதவர்கள் சைக்கோக்கள். இந்த வகையினரின் மூளையில் பிறரின் உணர்வுகளை மதிக்கக்கூடிய இணைப்புகள் மிகவும் குறைவாக காணப்படுகிறது. அப்படியெனில் ஆசிரியரை ஏதேனும் ஒரு காரணம் காட்டி கொல்ல  வேண்டும் என உள்ளத்தில் இத்தகைய எண்ணங்கள் எப்படி கோரனுக்கு வந்தது. அவனது விசயத்தில் தலையிட்டேன் என்பதற்காக என்னையும் கொலை பண்ண வேண்டும் என கோரன் இருப்பது எப்படி என யோசித்தேன்.

''என்ன யோசனை?''

''காயூ, கோரன் பத்தி என்ன நினைக்கிறே''

''நீ அவன் விசயத்தில தலையிட்டு இருக்கக் கூடாது''

''என்ன அப்படி சொல்ற''

''நிச்சயம் அவன் உன்னை கொல்ல  மறுபடியும் முயற்சிப்பான்''

''இல்லை என்னை இனி தேடி வரமாட்டான், ஆனா அவன் சொன்ன கதை பொய் அப்படின்னு எனக்குத் தோணுது''

''உண்மைன்னு இருந்தா?''

''காயூ''

''ஆமா முருகேசா, அவன் சொன்னபோது இருந்த ஆவேசம், ஆத்திரம் எனக்கு என்னமோ உண்மைன்னு தோணுது''

''இல்லை காயூ, அவன் ஒரு கதையை உருவாக்கி இருக்கான்''

''உருவாக்கப்பட்ட கதை இல்லை''

மாலை நாங்கள் இருவரும் வீட்டிற்கு நடந்து சென்றபோது சட்டென ஒரு மறைவில் இருந்து எங்கள் முன்னால் கோரன் வந்து நின்றான்.

''நான் சொன்னது பொய்னு சொன்னல, என்னோட வாடா வந்து பாரு''

''கோரன் உன் படிப்பு எல்லாம் யோசிச்சிப் பாரு''

''டேய், எனக்கு படிப்பு எல்லாம் தேவை இல்லை, நான் சொன்னது உண்மைடா, என்னோட வாடா''

அவனது வார்த்தைகளில் கோபமும் ஆத்திரமும் கொப்பளித்தது. காயத்ரி சற்று பயப்பட ஆரம்பித்தாள்.

''என்னோட வந்தா உன்னை ஒண்ணும் பண்ணமாட்டேன், நீ வரலை, உன்னை கொலை பண்ண தயங்கமாட்டேன்டா''

''நடடா வரேன்''

''அவளை வீட்டுக்குப் போகச் சொல்லுடா''

''அவளும் என்னோட வருவா''

''நீ வீட்டுக்குப் போடி''

அவனது வார்த்தைகள் எனக்கு எரிச்சலைத் தந்தன. காயத்ரியை வீட்டுக்குப் போகச் சொன்னேன். ஆனால் அவளோ அவனை நம்பிப் போகாதே என சொன்னாள். அதற்குள் சிலர் கூடி விட்டார்கள்.

''வாடா''

''என்ன தம்பி தகராறு?''

''அவனை என்னோட வரச்சொல்லு''

''கூப்பிட்டா, போப்பா''

நானும் காய்தரியும் வெகு வேகமாக அங்கிருந்து நகர்ந்தோம். கோரன் எங்களை பின் தொடர்ந்தான்.

''வந்துருடா''

''நாளைக்கு வரேன் கோரன், இன்னைக்கு வீட்டுக்குப் போறேன்''

''இப்போவே வாடா''

''இல்லை கோரன்''

பக்கத்தில் இருந்த ஒரு கடைக்குள் நுழைந்தோம். கோரன் வெளியில் நின்று கொண்டே இருந்தவன் அங்கிருந்து சென்றான்.

''போலீசில் சொல்லலாமா?''

''வேணாம் காயூ''

அரைமணி நேரம் கழித்து வேறு வழியாக வீடு வந்து சேர்ந்தோம். வீட்டில் எல்லா விசயங்களையும் அம்மாவிடம் ஒப்பித்துக் கொண்டு இருந்தாள் காயத்ரி. எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்தவர்

''உனக்கு இது எல்லாம் தேவையாப்பா?''

''நான் ஒன்னும் செய்யலைம்மா''

''அப்புறம் எதுக்கு அவன் உன்னை கொல்ல வரணும், கூட வா வானு கூப்பிடனும்''

''தெரியலைம்மா''

கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்றோம். எல்லோரும் உறங்கியபின்னர் நான் மட்டும் எழுந்து கோரன் வீட்டுக்குச் செல்ல நினைத்து காயத்ரியிடம் சொன்னேன்.

''நீ போகவே கூடாது''

''சொன்னால் கேளு காயூ, இதில் ஏதோ இருக்கு. உதவி பண்ணு''

''காயத்ரியை சம்மதிக்க வைத்து கோரன் வீட்டிற்கு தனியாக சென்றேன். அவனது வீட்டில் விளக்கு எரிந்து கொண்டு இருந்தது. சன்னல் வழியாக வீட்டிற்குள் எட்டிப் பார்த்தேன். கோரன் மட்டும் உறங்காமல் அறையில் முன்னும் பின்னும் நடந்து கொண்டு இருந்தான். வாசற்கதவைத் தட்டினேன்.

''கோரன்''

கதவைத் திறந்தான்.

''உள்ளே வாடா''

அவனது குரலில் ஒன்றும் அத்தனை ஆவேசம் இல்லை. வீட்டிற்குள் சென்றேன். சட்டென கதவுகளை சாத்தி தாழிட்டான்.

''கோரன்''

''உட்காருடா''

''எதுக்கு''

''அப்படியே உட்காருடா''

உட்கார்ந்தேன்.

(தொடரும்)




Thursday 17 September 2015

எங்ஙனம் தொலைந்தீர்கள்?

அம்மாவிடம் சொல்லிக்கொண்டு இருந்தேன். அம்மா, நான் தொலைந்து போனால் நீ அழுவாயா? சிரிப்பாயா?

அம்மா சற்றும் யோசிக்காமல் நீ தொலைந்தால் அழவும் மாட்டேன் சிரிக்கவும் மாட்டேன் நீ கிடைக்கிற வரைக்கும் உன்னை நான் தேடுவேன்டா

அம்மாவின் அந்த சொல் என்னை அப்படியே உலுக்கிவிட்டது.

''பக்தா, எங்கே தொலைவதாக உத்தேசம்?''

''சாமி, நீங்கள் எப்படி இப்போது, அதுவும் நான் என் அம்மாவிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது கொஞ்சமும் நாகரிகம் இல்லாமல் ஒட்டு கேட்டுவிட்டு இப்படி குறுக்கே வந்து பேசலாமோ''

''பக்தா, உன் அன்னை அப்போதே எழுந்து சென்றுவிட்டார், அதை கவனித்துதான் நான் உள்ளே வந்தேன் ஆனால் நீயோ உன் அன்னையுடன் பேசிக்கொண்டு இருப்பதாக சொல்கிறாய்''

''சாமி, அமருங்கள்''

''என்ன பக்தா, வரவேற்பு மாறுகிறதே, சாமியார் ஆக வேண்டும் என சொல்லி இருந்தாய் என்ன நடவடிக்கை எடுத்தாய்''

''அதெல்லாம் இல்லை சாமி, என் அம்மா நான் கல்யாணம் பண்ண வேண்டும் என ஒரேயடியாக பிடிவாதம் பிடிக்கிறார் அதனால் நான் குழப்பத்தில் இருக்கிறேன்''

''பக்தா, உனக்காக நீ முடிவுகள் எடுக்காதவரை அது உன்னை எப்போதும் வருத்திக்கொண்டே இருக்கும். நீயாக சுயமாக சிந்தித்து எடுக்கும் முடிவுகளே உனக்கு நல்வழி தரும்''

''சாமி, எனக்கு சாமியார் ஆக வேண்டும் எனும் ஆசை உள்ளுக்குள் இருக்கிறது, உங்களைப் போல சுதந்திரமாக எங்கும் செல்லலாம், குழந்தை குடும்பம் என உழன்று திரிய வேண்டியது இல்லை. என்னைப்போல ஒவ்வொருவரை சென்று தேடிப்பார்த்து ஒரு கதை சொல்லலாம்''

''பக்தா, அப்படி எல்லாம் திட்டமிட்டு ஒன்றை பற்றி நீ முடிவு எடுக்காதே''

''சாமி, நான் பேசாமல் ஏதேனும் காட்டிற்கு ஓடி விடட்டுமா?''

''பக்தா, நான் உன் பின்னால் வருவேன்''

''நீங்க வந்தால் எனக்குப் பயமில்லை. ஆனால் இந்த திருமணம் தான் என்னை பயமுறுத்துகிறது. அது எப்படி சாமி இந்த மனிதர்கள் திருமணம் பண்ணிக் கொள்கிறார்கள்''

''பக்தா, அது எல்லாம் என்னிடம் கேட்டால் நான் சொல்லும் பதில் உனக்கு திருப்தி அளிக்காது. வா, நான் உன்னை ஓரிடம் அழைத்துச் செல்கிறேன்''

''இங்கேயே சொல்லுங்கள். வேறு எங்கும் நான் வரத் தயாரில்லை''

''பக்தா, என் தந்தை என் தாய் என எவருமே எனக்குத் தெரியாது, ஆனால் நான் பிறப்பதற்கு காரணம் அவர்கள் என்பதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் நான் தந்தை ஆகும் வாய்ப்புதனை  எல்லாம் நான் தேடிச்  செல்லவில்லை, என்னை தேடி எதுவும் வரவும் இல்லை. எனக்கு ஐந்து வயது ஆன போது  நான் சாமியார் ஆனேன்''

''சாமி உங்க கதை நான் கேட்கவில்லை, மனிதர்கள் எப்படி திருமணம் பண்ணிக் கொள்கிறார்கள் என்பதற்கு விளக்கம் சொல்லுங்கள்''

''பக்தா, உனக்கு ஒரு காதலி இருக்கிறாள் அல்லவா, அவளிடம் நீ திருமணம் செய்து கொள் என கேட்டால் அவள் மாட்டேன் என சொல்லமாட்டாள் அல்லவா, அப்படித்தான் திருமணம் செய்து கொள்கிறார்கள்''

''எனக்கு காதலி இருப்பது என்பதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் சரி, சாமி  காதலிக்காமல் எப்படி திருமணம் பண்ணிக் கொள்கிறார்கள்''

''பக்தா, இதை நீ என்னிடம் கேட்பது கொஞ்சமும் நன்றாக இல்லை. எனக்கு திருமண பந்தம் என்று எதுவும் இல்லை''

''சாமி, உங்களுக்கு ஒரு பொண்ணு பார்த்து வைத்து இருக்கிறேன், அவரை திருமணம் பண்ணிக்கொள்ள இயலுமா''

''பக்தா, என்ன விளையாடுகிறாயா? யாரிடம் என்ன பேச்சு பேசுகிறாய்''

''அப்படியெனில் என்னிடம் நீங்கள் சொல்லித்தான் ஆக வேண்டும்''

''பக்தா, தாய் தந்தையர் தனது மகனுக்கு மகளுக்கு இன்னார்தான் என முடிவு செய்து திருமணம் பண்ணி வைக்கிறார்கள்''

''அதையேதான் என் தாயும் செய்கிறார் சாமி, நான் காதலிக்கும் பெண்ணையே எனக்கு மணம் முடித்து வைக்க வெகுவாக போராடுகிறார். காதலித்தால் மட்டும் போதாதா, எதற்கு இந்த திருமணம் எல்லாம் எனக் கேட்டாலும் உனக்கு ஒரு மண்ணும் தெரியாது என என்னை திட்டிவிடுகிறார்''

''பக்தா, நீ திட்டுகள் வாங்கவே பிறந்தவன், அதில் ஆச்சர்யப்பட ஏதும் இல்லை, ஆனால் நீ திருமணம் பண்ண வேண்டியவன் அதில் இருந்து விலகி விட வேண்டாம்''

''எனக்குப் பிடிக்கவில்லை''

''பக்தா, பிடிக்காத விசயங்களை செய்பவர்கள் தன்னைத் தொலைத்தவர்கள் ஆவார்கள்''

''சாமி, எப்படி இப்படி எல்லாம் நீங்கள் பேசுகிறீர்கள் என ஆச்சர்யம் கொள்கிறேன்''

''பக்தா, நம்மைச் சுற்றி நடக்கும் விசயங்கள் நம்மை பாதித்துக் கொண்டே இருக்கின்றன. நாம் தான் இந்த உலகத்தின் நேரத்தை காலத்தை நடத்துகிறோம் எனும் மனப்பாங்கு ஒவ்வொருவர் மனதிலும் இருக்கிறது. இதனால் பல மன இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.

இப்போது ஓரிடத்தில் நீ இருக்கிறாய், அங்கு உன்னைச் சுற்றியே பல வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. உனக்குள் ஒரு மாயை உருவாகிறது. நாம் இங்கே இல்லாவிட்டால் எதுவும் நடக்காது என்பதான மாயை. உன் மீது அநேகர் பிரியம் கொண்டு உள்ளதாக உன்னுள் உவகை கொள்கிறாய். எங்கே நீ இல்லாமல் போனால் அனைவரது பிரியமும் உனக்கு கிடைக்காமல் பொய் விடுமோ என அச்சம் கொள்கிறாய், அதனால் பிடிக்காத இடத்திலும் நீ உழன்று திரிகிறாய். நீ அந்த இடம் விட்டு வெளியேறி விடு. உனக்கு ஒரு உண்மை புரியும். நீ இல்லாமலும் எல்லாம் நடக்கும், நீ இல்லாமல் கூட அவர்கள் பிரியம் கொண்டு இருப்பார், ஆக தொலைவது என்பது நமக்குப் பிடிக்காத விசயங்களை செய்வது, பிடிக்காமல் வாழ்வது என்பதுதான்.

உடலால் தொலைவது கண்டுபிடித்துவிடலாம். மனதால் தொலைந்தால் உன்னைத் தேடிக் கண்டுபிடிப்பது சிரமம். எனவே இப்போதே திருமண வாழ்வுக்கு எல்லாம் முடியாது என சொல்லி என் பின்னால் வா, நீ தொலையாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்''

''சாமி, என் அம்மா என்னைத் தேடுவார்களே''

''பக்தா, உன் அம்மா உன்னைத் தேடவில்லை, தன்னைத் தேடுகிறார். தனக்குப் பிரியமான ஒன்றைத் தேடுகிறார். நீ அவர்களின் பிரியம்''

''அப்படியெனில் எப்படி நான் தொலையாமல் இருப்பது''

''பிடித்த விசயங்களைச் செய்''

அம்மா என அலறினேன். அம்மா என்னடா ஆச்சு என ஓடோடி வந்து விளக்கைப் போட்டார். வியர்த்து விறுவிறுத்து இருந்த நான் அம்மாவை நோக்கியபடி சொன்னேன்.

''அம்மா அந்த சுபாவோட எனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைச்சிருமா நான் தொலையவே மாட்டேன்''.

''என்னடா அந்த சாமியார் கனவா?''

''ஆமாம்மா''

''உனக்கு மந்திரிச்சி விடனும்''

 எனக்குள் ஒரு பெரும் கேள்வி ஒன்று உங்களை நோக்கி எல்லாம் கேட்க வேண்டும் போல் இருக்கிறது.

இவ்வுலக வாழ்வில் பிடிக்காத செயல்களை எல்லாம்  செய்யும் அளவுக்கு நீங்கள் எல்லாம் எங்கனம் தொலைந்தீர்கள்? 

Thursday 3 September 2015

நமது திண்ணை செப்டம்பர் மாத சிற்றிதழ்

நமது திண்ணை சிற்றிதழை ஒவ்வொருமுறை ஒருவர் வெளியிடுவர். இதற்கு பெரிய விழா எல்லாம் இல்லை. ட்விட்டரில் இந்த சிற்றிதழின் இணைப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி என சொல்லி இணைப்பு தருவார்கள். அவ்வளவுதான். ஆனால் இந்த முறை தி.மு.க மந்திரி (அவரே சொன்னபிறகு தான் எனக்குத் தெரியும்) திரு ஜெ அன்பழகன் இந்த சிற்றிதழை வெளியிட்டு இருக்கிறார். ஒரு மந்திரி ஒரு சிற்றிதழை வெளியிட முன்வந்து இருப்பது பாராட்டுக்குரியது.

முதல் பக்க வடிவமைப்பே மிகவும் அட்டகாசம். அட்டைப்படத்தை அலங்கரிக்கும் காய்கறியை இங்கே  படித்துத் தெரிந்து கொள்ளலாம். சுபாஷினி அவர்களுக்கு நன்றி.

1. உயிருக்குள் ஓர் உயிர் - எமி

குழந்தையைப்  பற்றிய, தாய்மையைப் பற்றிய உயிருக்குள் ஓர் உயிர் எனும் அற்புதமான  கவிதையை எமி எழுதி இருக்கிறார். பிள்ளை பெறுவதால் அல்லது குழந்தையை சுமப்பதால் அழகு குறையும் எனும் கவலை இரண்டாவது பத்தியில் தென்படுகிறது. தூக்கத்தை மறந்தேனே என சொல்லப்பட்ட வரிகளுக்கு பின்னர் ஓர் விளக்கமும் இருக்கிறது. உலகம் உருண்டை நம்பினேன் எனும் எண்ணமும் வெளிப்படுகிறது நல்ல நல்ல உவமைகள் கொண்டு இருக்கும் இந்த அழகிய கவிதையில் எழுத்துப்பிழைகளைத்  தவிர்த்து இருக்கலாமோ? தேவை இல்லைதான், அந்த அழகிய குழந்தையை தாய்மையைச்  சுமந்த கவிதையில் ஏது  குறை என எமி கருதி இருக்கலாம்.

2. வளர்த்து விடுங்கள் - வருண் 

மரம் பேசும் கவிதையாக மனிதம் வேண்டும் கவிதையாக அமைந்து இருக்கிறது. இப்போதெல்லாம் மரத்தின் மீதான அக்கறை பெரும்பாலான மனிதர்களிடம் நிறைய இருக்கிறது. வளி  இல்லாமல் திண்டாடும்போது நல்ல கவிதை வரி. வி'சுவாசமாக நல்ல வார்த்தை நயம்.

ராஜ் மற்றும் அம்ஹர் அவர்களின் அழகிய படங்கள் சிற்றிதழை அலங்கரிக்கின்றன.

3. ஸ்ரீஇராமானுஜர் - சுஷீமாசேகர் 

மிகவும் சுவாரஸ்யமான தொடர் என்றால்  மிகையில்லை. திருமலை நம்பி, திருக்கச்சி நம்பி, கூரத்தாழ்வார், கோவிந்தபட்டர், ஸ்ரீ போதாயன மகரிஷி என பலரது வாழ்வோடு ஸ்ரீ இராமானுஜர் வாழ்வு இணைந்து இருக்கிறது. அன்பில்  மனம் வைத்தால் அனைவரும் மனம் மாறுவர் என்பதற்கு இவரது திருமலைக்கு சென்ற காட்சி விளக்குகிறது. கோவிந்த பட்டர் தான் கொண்ட அன்பை மறக்காமல் பின்னர் இவரின் அன்பை பெற்ற காட்சி சிறப்பு. கூரத்தாழ்வாரின் மனப்பாடம் பண்ணும் ஆற்றல் நான் படித்த  பள்ளியில் ஒரு சில மாணவர்களை  நினைவுகூற  செய்தது. அவன் எல்லாம் ஒரு தடவை பார்த்தால் போதும் அப்படியே ஒப்பிப்பான்  என்பார்கள்.எனக்கும் சரஸ்வதி தேவி கனவில் வரமாட்டார்களா எனும் நிறைவேறாத கனவு உண்டு.

ஸ்ரீ ஆண்டாளின்  ஆசையை இவர் நிறைவேற்றிய கதையை ஓரிடத்தில் சொன்னபோது எனக்கும் பேசத் தெரியும் என சொன்னார்கள். இந்த கதையைப் படித்தபின்னர் நிறைய பேசலாம் போல. நன்றிகள் அம்மா.

4. தலைகவசம் - ப. மணிகண்டபிரபு 

தலைக்கனத்தோடு செல்லவில்லை,  தலையில் கனத்துடன்  செல்கிறேன் என அருமையான கவிதையை எழுதி இருக்கிறார் மணி. இவரது சிந்தனைகள் மிகவும் சிறப்பாக இருக்கும். முகமே அடையாளம் எனினும் நம் உடல் வைத்து நம்மை யார் என கண்டுபிடிப்பவர் உள்ளனர் என ஒரு வரி கவிதைத்துவம். நமது மனதுக்குள் புன்னகைப்பது தெரியாது என்பது போல தலை கவசம் அறிந்தால் முகம் புன்னகைப்பது தெரியாது என்பது போல ஒரு வரி. மிகவும் சிறப்பு.

5. அப்பா - எம்சீ189 (பாமரன்) 

நல்லதொரு குட்டிக்கதை. அதுவும் கடைசி வரி மிகவும் முத்தாய்ப்பு. நாம் நல்லது செய்தால் நமது கெட்டது எல்லாம் மறைந்து போகும். படிப்பு என்பது எல்லாருக்கும்  இல்லை. எவ்வளவு படிச்சாலும் தலையில் ஏறமாட்டேங்குது ஏறமாட்டேங்குது என சொல்பவர்களிடம் எல்லாம் நன்றாக இன்னும் முயற்சி செய்யுங்கள் என சொன்னாலும் முயற்சி செய்யாமல் இருப்பவர்களே அதிகம் தோல்வி அடைகிறார்கள். படிப்பு மட்டுமே சமயோசித புத்தி தராது  என்பதையும் அப்பாவின் அன்பையும் அறிவுறுத்தும் கதை.

6. கிச்சன் டைம் கோவக்காய் பொரியல் - நளபாகம் ரவி 

கோவக்காய் அட! மேலதிக விபரங்கள் இங்கே  இங்கே இதை வினிகரில் போட்டு விற்பார்கள். அப்படியே கடித்து சாப்பிட்டாலும் மிகவும் நன்றாக இருக்கும். வெள்ளரியின் சிறு வடிவம். இவர் எழுதுவது எல்லாம் மிகவும் எளிதாக இருக்கிறது. செய்வதுதான் கடினமாக படுகிறது. ஒருமுறையேனும் நண்பர் சொல்வதை சமைத்து இங்கே ஒரு பதிவு எழுதிவிட வேண்டும்.

7.நேர்காணல் திருமதி ஜானகி சுஷீமாசேகர் 

அன்பான மனிதர்களை சந்திக்கும்போதெல்லாம் இந்த உலகம் இப்படியே இருந்துவிடக்கூடாதா என்கிற ஒரு ஏக்கம் வந்துவிட்டுப் போகும். எத்தனை அழகிய மனிதர்களால் ஆனது உலகம். ஒருவரின் திறமையை உலகறியச் செய்ய வேண்டும் எனும் ஆர்வம் ஒரு சிலருக்கு இருப்பதால்தான் பல திறமையாளர்கள் நம் கண்ணுக்குத் தெரிகிறார்கள். மிகவும் அருமையான பேட்டி   என்றே சொல்ல வேண்டும். குறுகிய நேரத்தில் பல விசயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. அதுவும் அழுகை, அன்பு, ஆர்வம், இசை என எல்லாம் அறிந்து கொண்ட வேளையில் ஒரு விருதுவை புறக்கணித்த தைரியம் வெகு சிறப்பு. செத்த பின்பு ஞானி அவசியமில்லை. கடைசியில் வாசித்த வரிகள் கண்களில் நீர்த்திரள செய்தது. அற்புதமான மனிதர்களை இவ்வுலகம் பின்பற்றவேண்டும்.

கேசவ் அவர்களின் ஓவியங்கள் வெகு சிறப்பு. அருமை. மகளதிகாரம், அவளதிகாரம், மதுவிலக்கு பற்றிய அழகிய டிவிட்கள்.

8. பாடல் பரவசம் - உமா க்ருஷ் 

அப்படியே சிறிய வயது நினைவுகளை முதல் நான்கு பத்திகளில் நமது கண்முன் கொண்டு வந்து நிறுத்தி  விடுகிறார். இளவயது இசையோடு ஒட்டிய கிராமத்தின் நினைவுகள் சுகமானவை என்பதை நினைவுபடுத்துகிறது. பாடல் பற்றிய பரவசத்தில் மூழ்கும் முன்னர் பாடல் பெற்ற சிறப்பில்  ஒரு நடிகரின் வரலாறு தென்படுகிறது. தேவா இல்லையென்றால் தமிழ் இசையில் இல்லை கானா என்றாலும் ஒரு நல்ல இசை அமைப்பாளாராக இருக்கப்போய்த்தான் பல படங்களுக்கு இசை அமைத்து தேனிசை தென்றல் என பட்டம் பெற்றார் தேவா என அறிய முடிகிறது. மிகவும் அருமையான வரிகளை எழுதி இருக்கிறார் வாலி. இந்த வரிகளை வாசிக்கும்போது கடினமாக இருக்கும், ஆனால் இதை இசைக்குள் நுழைத்து இனிமையாக்கிய பெருமை பாடகர்கள், இசை அமைப்பாளருக்குச்  சேரும். வெட்டப்பட்ட வரிகள் கண்டு இவரது கோபமும் புரிகிறது. அருமை.

சிற்றிதழ் ஆசிரியரின் தியாகராஜ பாகவதர் குறித்த விஷயங்கள்  அருமை, கைது செய்யப்பட்டு பின்னர் என்ன ஆனது என எழுதி இருக்கலாம்தான்.

அழகிய வடிவமைப்புகளுடன் மின்னி வானம் தொட்டு  சிறக்கிறது நமது திண்ணை சிற்றிதழ்.



Friday 28 August 2015

தமிழ் மின்னிதழ் - 3 சுதந்திரம் இதழ் - 2

எழுத்தாளர் திரு பெருமாள் முருகனின் நூல்கள் குறித்த விமர்சனங்கள் இந்த இதழில் 64 பக்கங்கள் வரை அலங்கரிக்கின்றன. எதற்கு இப்படி செய்தேன் என்பதற்கான விளக்கம் ஆசிரியரின் எழுத்து மூலம் புரிய முடிகிறது. ஒரு எழுத்தாளன் தன்னை இறந்துவிட்டான் என அறிவிக்கலாம் ஆனால் அவரது எழுத்துகள் எப்போதுமே இறப்பது இல்லை என்பதையே இந்த எழுத்தாளரின் நூல்கள் குறித்த விமர்சனங்கள் தாங்கி வந்திருக்கும் இந்த தமிழ் மின்னிதழ் சொல்கிறது.

ஒவ்வொருவரின் பார்வையில் ஒரு எழுத்தாளரின் நூல்கள் குறித்த பார்வை வேறுபடத்தான் செய்யும். சிலர் பாராட்டுவார்கள், சிலர் திட்டுவார்கள். நான் இதுவரை இவரது நூல்களை படித்து இருக்கவில்லை என்பதால் இவரது கருத்து, நோக்கம் என்னவென தெரியாது. எப்படி ஒரு திரைப்படம் பார்க்கும் முன்னர் விமர்சனம் படிக்கிறோமோ அதைப்போலவே ஒரு நூல் குறித்த விமர்சனமும் அமையும். சில விமர்சனங்கள் பார்க்க, படிக்கத் தூண்டும். சில விமர்சனங்கள் அறவே வெறுக்க வைக்கும். மாதொருபாகன் எனும் நூல் குறித்த பிரச்சினை தெரியாது போயிருந்தால் இந்த எழுத்தாளர் பற்றி எழுத்துலகம் தவிர்த்த பிறருக்கு தெரிந்து இருக்குமா எனத் தெரியாது.

மிகவும் கவனமாக விமர்சனம் குறித்து விமர்சனம் எழுதும் முன்னர் தனிப்படைப்புகள் குறித்து ஒரு பார்வை.

1. விலைமகள் - சௌம்யா

முரணாக இல்லையா என்பதான கேள்வி வரும்போதே விலைமகளின் நிலையை எண்ணி இந்த கவிதை கலங்குகிறது என தெரிந்து கொள்ளலாம். காதல், காமம், கள்ளக்காதல் என விவரித்து எவர் உடலையும் காமுற்று ரசித்திருந்தால் எனும் வரிகள் மனதிற்கும் உடலுக்குமான ஒரு ஒப்பீடு. மிகவும் அருமையாக ஒரு கொடூர சூழலுக்கு தள்ளப்பட்ட பெண்ணின் நிலையை வடிவமைத்து கடைசியில் தாலிக்கு அனுமதியுங்கள் என கனத்துடன் முடிகிறது கவிதை.

2. ரஸ்கின் பாண்ட் ஒரு சந்திப்பு - என் சொக்கன் 

ஒன்று எழுத்துலகில் பிரகாசிக்க வேண்டுமா பல எழுத்தாளர்கள், அவர்தம் நூல்களை அறிந்து வைத்து இருப்பது மிகவும் சிறப்பு. ஒரு எழுத்தாளரே மற்றொரு எழுத்தாளரை சந்தித்தது பற்றி விவரிக்கிறது  இந்த கட்டுரை. மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. யார் என்ன சொன்னாலும் சரி, நான் எழுத மட்டுமே விரும்பினேன். பிரமாதம். எனக்கு  மனிதர்களைப் பற்றிப் பேசும்  புத்தகங்கள் பிடிக்கும். ஆனால், சில எழுத்தாளர்கள் செய்தித்தாள்
வாசித்த கையோடு அதைப்பற்றி  ஒரு கருத்து சொல்லவே ண்டும் என்று எழுத உட்கார்ந்துவிடுகிறார்கள். அடடா! எத்துனை உண்மை. நிச்சயம் இந்த சந்திப்பு கட்டுரை பலருக்கும் பயனுள்ளதாக அமையும் என்பதில் ஐயமில்லை. ஒரு அற்புதமான எழுத்தாளரை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி.

3. காமத்தின் பரிமாணம் - அப்பு 

இந்த கட்டுரை குஷ்வந்த்  சிங் என ஆரம்பித்து புத்தகங்களை குறித்து விவரிக்கிறது. அப்பு தனது அனுபவங்களை மிகவும் அருமையாக விவரிக்கிறார். இதில் நாமும் தெரிவோம் என்பது உறுதி. சில எழுத்தாளர்கள் அவர் எழுதிய புத்தகங்கள் குறித்து சிறப்பாக இருக்கிறது. காமம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் எதுவுமே பிறர் தெரிய எவரும் வாசிப்பது இல்லைதான். ஒரு எழுத்தாளர் தனக்கான அடையாளம் ஏதுமின்றி எல்லாம் எழுதும் வல்லவராக இருத்தல் அவசியம் புரிய முடிகிறது. இது வேற கை, அது வேற கை. 

4. உயிர் தப்பிய கவிதை - ஷக்தி 

நான் உங்கள் கவிதைகளை அரவணைத்து கொள்கிறேன். கவிதைப் பற்றிய கவிதை. எப்படியானது, எங்கிருந்து வந்தது என இந்த கவிதை தன்னையே சொல்லி உயிர் தப்பியதாக கூறி  அரவணைப்பு கேட்கிறது. நல்ல நல்ல வரிகள்.
குரூரம் ஊறிய ஆதிக்க உமிழ்வுக்கும் 
கடவுளர்கள்  கோலோச்சும் நரகத்திலிருந்தோ . 
சவத்திற்கும் மயானத்துக்கும் இடையே சிக்கிய
நாளைக்கான வார்த்தைக்கு பதுங்குகிறது 


5. செல்வமடி நீயெனக்கு - சொரூபா 

ஒவ்வொரு வீட்டின் கதவை ஓங்கி ஒரு உதைவிட்டு செல்கிறது இந்த கதை. வீட்டின் கதவுக்குப் பின் இருப்பவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் அதுவே உண்மை. ஒரு நட்பை மென்மையாக சொல்லி அந்த நட்பினால் உண்டாகும் ஒரு சந்தோசம் அதோடு மணவாழ்க்கை தரும் வலி, சுமையை அழுத்தமாக  சொல்கிறது கதை. பால்  ஈர்ப்பு கொ ள்ளுமுன் அன்யோன்யம் பிறந்திருக்கும். அப்படிப் பிறந்த அன்னியோன்யம்  யானரயும் உறுத்துவதில்லை. பிளாட்டோனிக் காதல் என்பார்கள். அது அங்கங்கே கதையில் ஆழமாக ஊடுருவி செல்கிறது. விவகாரத்து பண்ணுவது அத்தனை எளிதா என்ன எனும் எனது எழுத்தை ஒருநிமிடம் சுண்டிவிட்டுப் போனது இந்த கதை.

6. நாராயணன் - முரளிகண்ணன் 

கண்களை கலங்க வைத்து விட்டீர்கள் முரளிகண்ணன். எத்தனை அழகிய வர்ணனை, காட்சிகள் கண்முன் வருகின்றன. ஒவ்வொரு மனிதரும் நாராயணன் போல இருந்துவிட்டால் எத்தனை அருமையாக இருக்கும். ஊர் மரியாதையை விட உலக மரியாதை பெறுவது எத்துனை சிறப்பு.

நாராயணன் திக்கியவாறே  ஆவாசமாக மறுத்தான். பொண்ணு வாழ்க்கை வீணாகிடும் என நாசூக்காய்ச் சொன்னான். 

ஏராளனமான வேஷ்டிகள், மாலைகளுக்கு இடையே சிவப்பு வேட் டி ஒரு குப்பையைப் போல் கிடந்தது. 

7. 'போல' கவிதைகள் - தமிழ் 

பாதம் போல, நிறைக்கும் இசை போல, சில்காற்றைப் போல, இசை போல, நின்று பருகிய தேநீர் போல, சந்தப்பாடலைப் போல, உருக்கிய நெய் வாசம் போல. 

ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒவ்வொரு விசயங்களை ஒப்புமைபடுத்தி தமிழ் அவர்கள் தமிழை அழகுப்படுத்தி இருக்கிறார். நண்பனின் நினைவுகள் என கடைசிவரி கவிதையில் சொன்னாலும் காதல், நட்பு என உருகி இருக்கின்றது.

8. பாலாவின் நிழலோவியம் அருமை.

9. கன்னி நிலம் - மீனம்மா கயல் 

ஒருவர் பற்றிய உங்கள் மனதில் இருக்கும் பிம்பத்தை முதலில் தூக்கி எறியுங்கள், அவர்களுக்குள் தாங்க முடியாத ரணம் இருக்கலாம். ஒரு பெண்ணின் மனநிலை மிகவும் சிறப்பாக சொல்லப்பட்டு இருக்கிறது. கதையின் கரு தலைப்பில் தெரிய வந்தாலும்  எழுதப்பட்ட கதையில் இருக்கும் விவரணைகள், மன ஓட்டங்கள், எழுதப்படும் வார்த்தைகள் கதையை வெகு சுவாராஷ்யமாக்கி விடுகின்றன.

அதுவும் ''கலக்கல் அண்ணா'' என்ற கமென்ட். அதனால் தான் அவளை மன்னித்தாள். 

பொண்ணு போட்டோல  ஒருமாதிரி இருக்காம் நேர்ல ஒரு மாதிரி இருக்காம். எதற்கும் கவலை இல்லாதவள் என்ற பிம்பம். 

மனம் பார்த்து எவருமே மணம் முடிப்பது இல்லை. அக்கா தங்கை பாசமும் அழகு.

10. குவியொளி - மகள் 

அம்மா அப்பாவின் பெருமையை ஒவ்வொரு எழுத்தும் சொல்லும் . ஒவ்வொன்றும் மிகவும் அருமையாக இருக்கிறது.

11. அஜ்னபி கவிதைகள் 

இன்டர்நெட் பற்றிய ஒரு பார்வையில் பேராண்மை. மிகவும் நன்றாக இருக்கிறது. பசியின் கொடுமையை சொல்கிறது மற்றொரு கவிதை.

திறன்பேசித் தொடுதிரையின்
ஒத்திசைந்த ஒற்றல்களில்

12. கனவுகளின் நாயகன் - எஸ். கே. பி கருணா 

படிக்க படிக்க மிகவும் ஆர்வமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது. இவரது கட்டுரையில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. அரசியல், சினிமா என்ற உலகம் தொடாத ஒரு மனிதர் பரவலாக மக்களுக்குத் தெரிய வாய்ப்பு இல்லை, பத்திரிகை, ஊடகங்கள் பெரும்பாலும் அத்தனை முன்னுரிமையும் தருவதில்லை. இப்படி ஒரு மாமனிதர் இருந்தாரா எனும் எண்ணுமளவுக்கு அவரது வாழ்வியல் செயல்பாடுகள் ஆச்சரியம் அளிக்கின்றன. இதற்கெல்லாம் தனி மனோதிடம் வேண்டும். எவர் என்ன சொன்னாலும் தனக்குப் பிடித்ததை செய்த மாமனிதர். மாணவர்களே உலகம் என்ற நம்பிக்கை ஒளிக்கீற்று. மறைந்த அப்துல் கலாம் அவர்கள் குறித்து பல அறியாத தகவல்களை அறியத்தந்து இருக்கிறார்.

நாகராஜ் அவர்களின் பொன்னாஞ்சலி ஓவியம் மிகவும் நன்றாகவும் அதுவும் இங்கே இணைக்கப்பட்டது பொருத்தமாகவும் இருந்தது.

13. பா சரவணன் கவிதைகள் 

முரண் தொகை ரசிக்க வைத்தது. பசலையுற்றவன் ஒரு மனிதனின் வாழ்வை சொல்லி கடைசி வரியில் காவியம் ஆனது. வெக்கை, மோகமுள்ளின் முனை, அற்பாயுளின் தாகம் எல்லாம் அதன் சுவை உணர  மீண்டும் வாசித்து கொள்ளவேண்டும்.

14. கடவுள் அமைத்து வைத்த மேடை - ஜிரா 

மெல்லிசை மன்னர்  இசையின் மீது இவருக்கு எத்துனை பாசம். வியந்து போகிறேன். இசையை அவர் எப்படி எல்லாம் நேசித்தார் என ஜிரா அவர்களின் வரிகளில் நாம் உணர முடியும். அதுவும் இசையில் கூட குறில் நெடில் எல்லாம் நான் கேள்விப்படாத ஒன்று. பிரமாதம். குருபக்தி, தமிழ்பக்தி இசைபக்தி என வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார் இசைமேதை என்பதை அறிய முடிகிறது.

அதுவும் மிகவும் பொருத்தமாக பரணிராஜன் அவர்களின் பொன்னாஞ்சலி ஓவியம் வெகு சிறப்பு. மெல்லிசை மன்னரின் சிரித்த முகத்தை எத்தனை சாதுர்யமாக வரைந்து காண்பித்துவிட்டார்.

அனைவருக்கும் பாராட்டுகள். ஒரே ஒரு மொழிபெயர்ப்பு கதையை இப்போது விட்டுவிட்டேன். எழுத்தாளர்களுடன் எழுத்துக்களுடன் தொடரும்.

(தொடரும்)



Thursday 27 August 2015

பேய் ஊர்

எவருக்குத் தெரியும்
அந்த ஊரில் தான்
பிறக்கவேணும் என

பூசாரி கோடாங்கி
ஆசாரி செட்டியார்
தேவர் நாயுடு
சக்கிலியர் ரெட்டியார்
அவர்தம்மில் ஒருவராக
அந்த ஊரில் தான்
பிறக்கவேணும் என
எங்கிருந்து தவம் இருந்தனரோ

அவுசாரி தேவடியா
பொறுக்கி குடிகாரன்
கஞ்சா கசக்கி சீட்டு கட்டு
அடிதடி சண்டை
என அல்லல்படும்
அந்த ஊரில் தான்
பிறக்க வேணும் என
எவர் எழுதி வைத்தனரோ

கோவிலு குளம்
முனி பிசாசு
காடு தோட்டம்
கிணறு தோப்பு
தரிசு காஞ்ச கண்மாய்
மண்ரோடு தார்ரோடு
அந்த ஊரில் தான்
அழுது சிரிக்க வென
எப்படித்தான் அங்கு போனாரோ

அரசு வைச்சது ஒரு பேரு
இவங்க வைச்சது பேய் ஊரு
ஆம்பளைன்னு இல்ல
பொம்பளைன்னு இல்ல
ஒன்னு கிணறுல விழுந்து
சாகுறா
இல்லை கயித்துல தொங்கி
சாகுறா
சுடுகாடு ஒண்ணு உள்ள
அந்த ஊரில் தான்
அடக்கம் ஆவோம் என
சத்தியமிட்டு சொல்லி சேர்ந்தாரோ

காதலு தோத்து
விஷம் குடிச்ச ஆளும் உண்டு
கட்டிக்கிட்டவன் சரியில்லைன்னு
தட்டிக்கேட்டு தானே
அவன் கையால செத்தது உண்டு
விவாகரத்து கூத்தியாள்
கூத்தியான் விவகாரமான
அந்த ஊரில் தான்
மணமுடித்து வாழ்  என
கண்கள் இன்றி போனாரோ

என்ன என்னவென்னவோ
நடக்குது
ஆனாலும் பாருங்களேன்
அம்மனுக்கு கூழும்
கருப்பனுக்கு கறிசோறும்
தீபாவளி பொங்கலுன்னு
தின்னு தீக்குறாங்க
அந்த ஊரில் தான்
தின்னு கழியணும்னு
தினவெடுத்து போய் விழுந்தாரோ

எதுவுமே நடக்காத மாதிரி
எல்லோரும் சாமி பேய்னு
சத்தியம் பண்ணி
தீபம் அணைக்கிறாங்க
பேய் இருக்கும் ஊரில
சாமியும் தான் இருக்குமோ
சாமி இருக்கிற ஊரில
பேயும்தான் இருக்குமோ
என்னதான் இருந்தாலும்
பிறந்த ஊரு பெருமை
பேய் ஊருனு ஆனாலும்
விட்டுத்தான் போகுமோ என்றாரோ!





Wednesday 26 August 2015

தமிழ் மின்னிதழ் - சுதந்திரம் 2015 -1

இம்முறை தமிழ் மின்னிதழ் எழுத்தாளர் திரு. பெருமாள் முருகன் சிறப்பிதழாக வெளிவந்து இருக்கிறது. ஒரு எழுத்தாளருக்கு இதைவிட என்ன பெருமை வேண்டும். அதிலும் எழுத்தாளர் சிறப்பிதழில் எனது எழுத்து வந்தது அதைவிட இரட்டிப்பு சந்தோசம்.

ஆமாம், முதலில் சுயதம்பட்டம் அடித்துக்கொள்வோம்.  சென்ற முறை இங்கே சொன்னது போல ஒரு கதையை தமிழ் மின்னிதழுக்கு எழுதி அனுப்பி அது இடம்பெற்ற மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன். தமிழ் மின்னிதழ் ஆசிரியருக்கு கோடானு கோடி நன்றியை சமர்ப்பிக்கிறேன். அதற்காக தொடர்ந்து எனது எழுத்து வரும் என்றெல்லாம் என்னால் சொல்ல இயலாது. ஆசிரியர் மற்றும் இதழின் குழுவைப் பொருத்தது, அதைவிட நான் எழுதி அனுப்புவேனா என்ன எழுதி அனுப்புவேன் என்பதைப் பொருத்தது . ஆசிரியரிடம் இருந்து மின்னஞ்சல் வந்ததும் உள்ளூர அத்தனை சந்தோசம். இந்த தருணத்தில் முதலில் எனது எழுத்துக்கு ஆதரவு தெரிவித்த நமது திண்ணை சிற்றிதழுக்கு எனது நன்றி.  நமது திண்ணை தவிர எனது எழுத்து எந்த ஒரு சிற்றிதழ் இணைய இதழ் என எதிலுமே வந்தது இல்லை. இது என்ன பெரிய விசயமா என்று கேட்டால் என்னைப் பொருத்தவரை பெரிய விசயம் தான்.

எப்படி ஊர் மெச்ச வேண்டி நாம் வாழ நினைக்கிறோமோ அதைப்போலவே ஊர் மெச்ச வேண்டி எழுத்து இருக்க வேண்டும் எனும் எனது எழுத்தின்  தவம் எவருக்கும் தெரியாது, அதன் வலி எவருக்கும் புரியாது. எனது முதல் நாவலை வாசித்துவிட்டு சாகித்ய அகாடெமி விருது கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு என்ன பதில் சொன்னேன் என எனக்கு இப்போது நினைவில் இல்லை.

நான் எழுதி அனுப்பிய கதையின் தலைப்பு எண்ணியாங்கு என்கொலல். நண்பர் ஒருவர் சூப்பர் என்றார், ஆனால் எனது வழக்கமான சிறுபிள்ளைத்தனம் அந்த கதையில் இல்லை என்றார். ஆமாம், இரண்டே வார்த்தைகள். எண்ணியாங்கு, என்கொலல். இந்த இரண்டு வார்த்தைகளுமே திருக்குறளில் இருந்து எடுத்தது. என்கொல் என்ற வார்த்தை என்கொலல் என திரிந்தது.

எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்

இதில் எண்ணியாங்கு எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை. இந்த குறள் சொல்வது என்னவெனில் எண்ணியதை செயல்படுத்த உறுதி இருப்பின் எண்ணியது நடைபெறும். கதையில் இதைத்தான் சொல்ல எண்ணினேன். அப்போது  ஒரு பெரிய கேள்விக்குறி எனக்கு எழுந்தபோது மரம் பற்றி நினைவுக்கு வந்தது. மனிதர்கள் தான் தமது எண்ணங்களுக்கு அது இது என சொல்லித் திரிகிறார்கள், ஆனால் மரம்? மரம் என்ன நினைத்து எதை எண்ணி எதில் உறுதியாக இருந்து நிறைவேற்றி கொள்கிறது என்பதே அது. மற்றொன்று நன்றி நவிலல். நாம் சரி, மரம்?

காலைக்குச் செய்த நன்றி என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர்  எனின்

எழுத ஆரம்பிக்கிறேன். கதை சரளமாகவே வரவில்லை. ஒரு கட்டுப்பாட்டில் பயணிக்கும்போது நமது சிந்தனைகள் தடைபடும் என்பது உறுதி. இந்த கதையில் அடுத்து எடுத்துக்கொண்டது அறிவியல் விஷயத்தை எழுதியே ஆக வேண்டும் எனும் ஒரு எண்ணம். இடைச்செருகல் மாதிரி இருக்கக்கூடாது அதே வேளையில் கதையின் ஓட்டத்தை கெடுத்துத் தொலையக்கூடாது. ஆனால் எனக்கு எழுதி எழுதிப் பார்த்தாலும் திருப்தியே வரவில்லை. கடைசியாக நிலம், வீடு, ஸ்டீரால் விஷயம் சரியெனப் பட்டது. பலமுறை யோசித்து அதிகம் என்னால் திருத்தி வெட்டப்பட்ட கதை இதுவாகவே இருக்கும். இதுக்காக பல ஆராய்ச்சி கட்டுரைகளை வேண்டி புரட்ட வேண்டியதாகிவிட்டது.

ஒருவழியாக கதையை எழுதி முடித்து அனுப்பி விட்டேன். முதலில் தவறுதலாக அதில் இருந்த மூலக்கூறுகள்  இரண்டுமே ஒரே மாதிரி அனுப்பினேன். பின்னர் அதை சரிசெய்து அப்போது சில வரிகள் மாற்றி மீண்டும் அனுப்பி வைத்தேன். ஆசிரியரிடம் இருந்து பதிலே இல்லை. எனக்கும் கேட்கவோ பயம். சரி என்ன ஆனாலும் பரவாயில்லை ஒருவேளை வெளியாகாவிட்டால் இருக்கவே இருக்கிறது இந்த வலைத்தளம் என சமாதானம் பண்ணிக்கொண்டேன். ஆனால் உள்ளூர ஒரு கவலை இருந்தது. அதாவது ஒரு பள்ளியில் அனுமதி கிடைக்காத பிள்ளையின் தந்தையின்  கவலை அது. நல்லவேளை, கதை அனுமதி பெற்றுவிட்டது எனும் ஆசிரியரின் பதில் வந்ததும் மனம் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

நீங்கள் வாசிக்கலாம், வாசிக்காமலும் போகலாம். ஆனால் எழுதிவிட்டேன் எனும் திருப்தி எனக்கு இருக்கிறது.

விரைவில் தமிழ் மின்னிதழில் இடம்பெற்றுள்ள பிறரின் எழுத்துக்கள் குறித்து பகிர்ந்து கொள்கிறேன்.

(தொடரும்)










Tuesday 11 August 2015

இப்படித்தான் தொடங்கியது

ஒரு ஆரவாரமற்ற அமைதியான இருட்டில் இரவு ஒரு மணி இருக்கும். நார்மன் அந்த கிராமத்தின் தெரு ஒன்றில் நின்று கொண்டிருந்தான். நார்மன் நல்ல உடற்கட்டும் அழகிய முகவடிவும் ஆறடி உயரமும் கொண்டவன். அவனது முதுகில் ஒரு பை இருந்தது. அந்த கிராமத்திற்கு நான்கே தெருக்கள் இருந்தன. ஒவ்வொரு தெருவும் மற்றொரு தெருவுடன் சந்தித்து பேஸ்பால் விளையாடும் விளையாட்டுத்திடல் போல சதுரமாக அந்த தெருக்கள் அமைந்து இருந்தன. அந்த தெருக்களின் உட்புறம் வீடுகள் ஒருங்கே கட்டப்பட்டு இருந்தன. எப்படியும் ஒரு ஐம்பது வீடுகள் தேறும். அந்த தெருக்களின் வெளிப்புறம் கண்ணுக்கு எட்டும் தொலைவு வரை பச்சை பசேலென மரங்களும், செடிகளும், கொடிகளும் தென்பட்டன. அந்த பச்சை மரங்களுக்கு ஊடே சில ஆறுகள் சில குளங்கள் எல்லாம் இருந்தன.

நார்மன் எல்லா வீடுகளிலும் எவ்வித வெளிச்சமும் இல்லாது இருப்பது கண்டான். இரவில் வெளிச்சம் எதற்கு என எல்லா வீடுகளும் எண்ணி இருக்கலாம். வடமேற்குத் தெரு முனையில் இருந்து தென்மேற்குத்   தெரு முனைக்குப் போனான். அங்கே ஒரு முப்பது நிமிடங்கள் நின்றான். அப்போது சோவென சொல்லிவைத்தாற்போல் மழை கொட்டியது. நார்மனுக்கு ஓடிவிட வேணும் என்றோ எங்கேனும் ஒளிந்து கொள்ள வேண்டுமென்றோ கொஞ்சமும் தோணவில்லை. மழையில் முழுக்க முழக்க நனைந்தான். அவனது பையும் தான்.

சிறிது நேரம் பின்னர் விடாத மழை என்றாலும் தென்மேற்குத் தெருவில் இருந்து தென்கிழக்குத் தெரு சென்றான். இந்த ஊர் பரிச்சயமற்றது. தான் எந்த தெருவில் நிற்கிறோம் என்கிற அறிவு எல்லாம் நார்மனுக்குக் கிடையாது. தண்ணீர் தாகம் எடுத்தது. அப்படியே மழை நீரை கைகளில் ஏந்தி குடிக்கலானான். என்னதான் மழை நீர் எனினும் ஆற்று நீர் போல மழை நீர் சுவையாக இருப்பது இல்லை. குடித்துக் கொண்டு இருந்தவனுக்கு மிகவும் சுவையாகவே இருந்து இருக்கக்கூடும், அல்லது தாகத்திற்கு சுவை எல்லாம் பொருட்டு அல்ல என்று இருக்கலாம்.

நார்மன் அப்படியே அங்கே அமர்ந்துவிட்டான். அமர்ந்தவன் சிறிது நேரத்தில் உறங்கியும் போனான். மழை நீர் தந்த மயக்கம். மழை நார்மனைக் கண்டு இரக்கம்  கொள்வதாக ஒன்றும் தெரியவில்லை. கிட்டத்தட்ட ஒரு ஒன்றரை மணி நேரங்கள் மேல் கொட்டிக்கொண்டு இருக்கிறது. சில்லிட்டுப் போகும் குளிரில் மனிதர்கள் உறங்க இயல்வதில்லை ஆனால் நார்மன் உறங்கிக்கொண்டுதான் இருந்தான். சிறிது நேரத்தில் மழை நின்றது. அவனில் இருந்த தண்ணீர் எல்லாம் மலையில் இருந்து கிளையில் இருந்து இலையில் இருந்து கொட்டும் நீர் போல கொட்டிக்கொண்டு இருந்தது.

காலையில் ஆறு மணி வரை எவருமே அவனை கவனிக்கவில்லை. ஒரு ஏழு மணி இருக்கு. நடுத்தர வயது மிக்க பிரதேஷ் என்பவர் நார்மனைக் கண்டுத் திடுக்கிட்டார். எப்படி இப்படி ஒரு மழையில் நனைந்து உறங்கிக் கொண்டு இருக்க இயலும் என அவர் யோசித்தவாரே  நார்மனைத் தொட்டு எழுப்பினார். நார்மன் எழுந்தான்.

''யார் நீ, எவரைப் பார்க்க வேண்டும் இப்படியா இந்த மழை நீரில் உறங்குவது, என்னுடன் கிளம்பி வா''

நார்மன் சற்றும் யோசிக்காமல் அவருடன் கிளம்பினான்.

''எனது பெயர் நார்மன் தேச்ரன். எனக்கு வீடு ஊர் என்று எதுவும் இல்லை. எப்படியோ இந்த கிராமத்தில் வந்து சேர்ந்து விட்டேன்''

''அதற்காக அதோ அந்த வீட்டின் திண்ணையில் நீ அமர்ந்து இருக்கலாம் உறங்கி இருக்கலாம், இப்படியா தெருவில் விழுந்து இருப்பது. இந்த உலகில் நல்ல மனிதர்களே இல்லை என்று முடிவுக்கு வந்துவிட்டாயா?''

''எவரை எனக்குத் தெரியும். அதனால் நான் செல்லுமிடத்து ஏதேனும் உண்டு உறங்கி வாழ்ந்து கழிக்கிறேன்''

பிரதேஷ் வீடு கிழக்குத் தெருவில் இருந்தது.

''சோபியா, நமது வீட்டிற்கு விருந்தாளி வந்து இருக்கிறார். முதலில் நல்ல சூடான காபி தயார் செய்''

''யார் அந்த விருந்தாளி''

''இதோ இவர்தான், அந்த தெரு முனையில் உறங்கிக்கொண்டு இருந்தார். நான்தான் எழுப்பிக் கொண்டு வந்தேன், இவர் குளிக்கட்டும். மாற்று ஆடைகள் தந்துவிடுகிறேன். நீ சாப்பாடு கூட தயார் செய்''

நார்மனுக்கு எதுவும் புரியவில்லை. இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என யோசித்தான். பிரதேஷ் சொன்னது போல குளித்து அவரது ஆடைகளை உடுத்திக்கொண்டான்.

அவர்கள் இருவரிடமும் விசாரிக்கையில் அவர்களுக்கு எவருமே உறவினர்கள் இல்லை என்பது தெரிந்து கொண்டான். அன்றே அவர்களை கொல்ல  வேண்டும் என முடிவு செய்தான் நார்மன்.

நிற்க.

இப்படித்தான் ஒரு கதை தொடங்கியது. அதை எங்கு எப்படி எவ்வாறு முடிப்பது என இனிமேல்தான் யோசிக்க வேண்டும்.




Monday 10 August 2015

நமது திண்ணை ஆகஸ்ட் மாத சிற்றிதழ்

இந்த மாத சிற்றிதழ் சற்று தாமதமாகவே வெளிவந்தது. எனக்குள் ஒரு சின்ன அச்சம், எங்கே இதழ்தனை வெளியிட மறந்துவிட்டார்களா அல்லது இனிமேல் வெளியே வரவே வராதா என. இதற்கு ஒரு காரணம் இருக்கிறது, நான் பார்த்தவரை பல விசயங்கள்  போதிய ஆதரவு இல்லாது போகுமெனில் அவைத் தொடர வாய்ப்பு இல்லை, அதே வேளையில் ஈடுபாடு இல்லையெனில் தொடர்ந்து செய்யவும் இயலாது.  சென்றமுறை சில பிரச்சினைகள் என சொல்லி இருந்தார்கள். நல்லவேளை, மிகவும் சிறப்பாகவே வெளிவந்துவிட்டது. ஆசிரியருக்கும், வடிவமைப்பாளருக்கும் மற்றும் எழுதியவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அமரர் திரு அப்துல் கலாம் அவர்களின் மரணம் இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் ஒரு அதிர்ச்சி அலைகளை ஏறப்டுத்திச்  சென்றது. எத்தனை பொருத்தமான வரிகள். ''நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் நமது இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்''. ஒரு மாமனிதர் என்பதற்கு அவர் வாழ்ந்த காலங்களே உதாரணம்.

அடுத்து உயில் எனும் கவிதை. தலைப்பே அருமை. உயிலில் விவசாய நிலங்கள் எழுதி வைப்பார்கள். விவசாய நிலங்களே இல்லாது போகும் தருணத்தை மிகவும் அருமையாக எழுதி இருக்கிறார். வேதனைகளை சுமக்கும் வரிகள்.

மிகவும் ஆவலுடன் படிக்கும் தொடர் ஸ்ரீராமானுஜர். இத்தனை விசயங்களையும் மிகவும் சுவாரஸ்யமாக எழுதி வரும் சுஷீமா அம்மா அவர்களுக்கு மிக்க நன்றி. செவி வழியாக பல விசயங்கள் பல கேள்விப்பட்டு இருந்தாலும் முதன்முறையாக வாசிப்பது  மிகவும் சிறப்பாக இருக்கிறது, அதுவும் கேள்விபட்டதைவிட மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இப்படிப்பட்ட மனிதர்களின் வாழ்வு, அந்த மனிதர்களைச் சுற்றி அமைந்த வாழ்வு நமக்கு நல்லதொரு பாடத்தை எடுத்துச் சொல்கிறது. பிறருக்கு உதவுவதே தலையாய பண்பு என்பது அன்று சிலருக்கு இருந்து இருப்பது இன்று சிலருக்கு இருப்பது போற்றத்தக்கது.

அப்பா குறித்த ரோகிணி அவர்களின் பதிவு கண்களை கலங்கச் செய்தது. இப்படி எல்லாம் வாழ வெகு சிலருக்கு மட்டுமே கொடுத்து வைத்து இருக்கிறது போலும். தமது பிள்ளைகள் தான் எல்லாம் என்பவர்கள் உள்ள உலகில் பிறரையும் அரவணைக்கும் அன்பு ஆசிரியர்களுக்கு உண்டுதான் எனினும் இவரது தந்தையை குறித்த விசயங்கள் பெருமிதம் கொள்ளச் செய்கின்றன.

நல்ல நல்ல படங்கள் மிகவும் தெளிவாக சிற்றிதழை அலங்கரிக்கின்றன. அருமையாக இருக்கிறது. பாராட்டுக்கள். கேள்விப்படாத பாடல் என்றாலும் உமாகிருஷ் அவர்கள் விவரித்த வர்ணனையில் அந்த பாடலை கேட்டுவிட வேணும் எனும் எண்ணம் உண்டாக்கியது சிறப்பு. இசை வரிகளுக்கு எப்போதும் பலம் தான்.

கலாம் அவர்கள், அவனதிகாரம், அவளதிகாரம் என டவிட்கள் அலங்கரிக்கின்றன. இப்படி ஒரு தலைப்போடு எழுதப்படும் சிந்தனைகளை நாம் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கின்றன. பல வாசிக்காதவைகள் என்பதால் இன்னும் ரசிக்க முடிந்தது கூடுதல் சிறப்பு.

ஓவியர் கேசவ் அவர்களின் நேர்காணல் வெகு சிறப்பு. ஓவியம் ஒன்றுதான் எனக்கு இன்னும் பிரமிப்பை ஏற்படுத்திக் கொண்டு இருக்கும் ஒரு விசயம். ஒருவரை தத்ரூபமாக வரைவது என்பது, ஒரு விஷயத்தை மனதில் வைத்து அதை ஓவியமாக வெளிப்படுத்துவது இன்னும் ஆச்சரியத்தை உண்டுபண்ணிக்கொண்டே இருக்கின்றன. எப்படி ஓவியர் ஆனார், ஓவியத்திற்கு எழுதப்படும் வெண்பா என அற்புதமாக விவரித்து இருக்கிறார். அதுவும் கிருஷ்ணர் குறித்த ஓவியங்கள் என அவர் குறிப்பிட்ட  நிகழ்வு ஆச்சரியம். அவரது ஒரு ஓவியம் இது. அவரது வலைதளத்தில் சென்று பார்த்தேன். பிரமாதம். ஒவ்வொன்றும் பிரமிக்க வைத்தன.

கிச்சன் டைம் எனக்குப் பிடித்த காளான். இத்தனை எளிதாக இருக்கிறதே என நண்பர் ரவி எழுதுவதில் இருந்து எண்ணிக்கொள்ளலாம். ஆனால் செய்து பார்த்தால்தான் தெரியும். ஆசிரியரின் மெல்லிசை மன்னர் பதிவு வழக்கம் போல சிறப்பு. 

தொடர்ந்து நமது திண்ணை தடங்கல் இன்றி வெளிவர எமது வாழ்த்துக்கள். சிறப்பாக வடிவமைக்கப்பட்டு நல்ல விசயங்கள் தாங்கி சிறந்து விளங்குகிறது நமது திண்ணை. பாராட்டுகள். 


Wednesday 5 August 2015

தேடிக்கொண்ட விசயங்கள் - 7 ஆர் என் ஏ உலகம் இல்லை

பகுதி - 6

ஒன்று கிடைக்கும் உடனே ஒரு முடிவுக்கு வந்துவிடுவோம், பிறகு வேறொன்று கிடைக்கும் உடனே எடுத்த முடிவை பரிசீலனை செய்வோம். எடுத்த முடிவுக்கு எதிராக எது தோன்றினாலும் அதன் தன்மையை பரிசீலனை செய்து அதை ஏற்றுக்கொண்டு பயணிப்போம். இதுதான் இந்த உலகத்திற்கு அறிவியல் சொன்ன நீதி.

அறிவியல் எதற்குமே அவமானப்பட்டது இல்லை. உண்மையைச் சொல்ல எதற்கு அவமானம், வெட்கம், தயக்கம். பல காலங்களாக இந்த உலகம் ஆர் என் ஏ மூலம் உருவாகி இருக்க இயலும் என நம்பிக்கொண்டு இருந்தார்கள். அதற்கான ஆதராங்கள் என பல காட்டப்பட்டன. நியூக்ளிக் அமிலங்களை தாமாக ஒருங்கிணைத்து உருவாகிய ஆர் என் ஏ  பிற்காலத்தில் டி என் ஏ வாக பரிமித்தது என்பதே நம்பபட்டவந்த செய்தி. இப்போதும் கூட இந்த புரதங்கள் உருவாக டி என் ஏ  செல்லின் கருவில் இருந்து வெளிவர இயல்வதில்லை. மாறாக டி என் ஏ வில் இருந்து ஆர் என் ஏ கருவில் நகல் எடுத்து வெளியே வந்து ரைபோசொமில் புரதங்கள் உருவாக்குகின்றன. எனவே இதற்கு முன்னர் இந்த உலகில் உயிரினங்கள் தோன்ற இந்த ஆர் என் ஏ  காரணம் என எண்ணி ஆர் என் ஏ  உலகம் என்று ஒரு கோட்பாடு உருவாக்கப்பட்டது.

இந்த நியூக்ளிக்  அமிலங்கள் உருவாக வினையூக்கிகள் தேவை. இந்த வினையூக்கிகளை ஆர் என் ஏ தான் செயல்படுத்தி வந்ததாக  நம்பினார்கள். எப்போது புரதம் இந்த வினையூக்கி வேலையை தானே செய்ய ஆரம்பித்ததோ அப்போது இந்த ஆர் என் ஏ  உலகம் முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது. ரைபோசோம்கள் உருவான காலகட்டமே ஆர் என் ஏ  முடிவுக்கு ஒரு காரணம். ஆனால் இதை எல்லாம் மறுத்து ஒரு அறிவியல் அறிஞர் சொல்லி இருப்பது என்னவெனில் நிச்சயம் இந்த ஆர் என் ஏ  உலகம் என்று ஒன்று இந்த உயிர்களைத்  தோற்றுவிக்க காரணம் இல்லை என அறிவித்து இருக்கிறார்.

ரைபோசோம்களை ஆராய்ந்து பார்த்த இவர் இந்த ரைபோசோம்கள் முன்னர் வினையூக்கி போல செயல்பட்டு அமினோ அமிலங்களை இணைத்து புரதம் உருவாக்கி வந்து இருக்கின்றன. இது எல்லா உயிரிகளிலும் தென்படுகிறது. மேலும் இந்த ரைபோசோம்கள் அத்தனை சிறப்பாக ஒன்றும் செயலாற்றவில்லை மேலும் புரதம் போல இவற்றுக்கு எவ்வித வடிவமும் கிடையாது, ஆகவே இந்த ரைபோசோம்  ஒரு பானை போல செயல்பட்டு அதில் என்ன சேர்கிறதோ அதைவைத்து ஒன்று உண்டாக்கப்படும். எனவே இந்த ரைபோசோம்கள் ஒன்றும் இயற்கைத் தேர்வு மூலம் தம்மை முன்னிலைபடுத்தியவை அல்ல, மாறாக மூலக்கூறுகள் இணைந்து உண்டாக்கியவை என எண்ணம் தோன்றுகிறது என்றார்.

ஆர் என் ஏ  மற்றும் புரதங்கள் தாமாக உருவாகக்கூடிய சாத்தியம் இல்லை என முன்னர் சொல்லப்பட்டாலும் கிட்டத்தட்ட 14 அமினோ அமிலங்கள் மற்றும் சில புரதங்கள் தாமாகவே உருவாகும் தன்மை கொண்டவை. எனவே ஆர் என் ஏ  உலகம் என்பதை விட ஆர் என் ஏ/புரதம் உலகம் சரியாக இருக்கும் என்கிறார்.

ஆர் என் ஏ  உலகம் :

ஆர் என் ஏ  தானாக நியூக்ளிக் அமிலங்கள் மூலம் உருவாகி தாமே பெருகி அதில் இருந்து ரைபோசோம்கள் உருவாக்கி பின்னர் அந்த ரைபோசோம்கள் ஆர் என் ஏ தற்போது போல புரதங்களாக மாற்றியதும் அந்த புரதங்கள் வினையூக்கிகளாக செயல்பட்டு கொண்டு இருக்கின்றன.

ஆர் என் ஏ  அல்லாத உலகம் :

இந்த நியூக்ளிக்  அமிலங்கள், அமினோ அமிலங்கள் எல்லாம் கூடி ஆர் என் ஏ வுக்கு முந்தைய ஒன்றையும் அதே போல புரதங்களுக்கு முந்தைய ஒரு புரதம் உண்டாக்கி இருக்கின்றன. இவை இரண்டும் சேர்ந்து அடிப்படை ரைபோசோம்கள் உருவாக்கின. அந்த அடிப்படை ரைபோசோம்கள் வினையூக்கியாக செயல்பட்டு  ஆர் என் ஏ  மற்றும் புரதம் உருவாக்கின. அதற்குப் பின்னர் ஆர் என் ஏ  மற்றும் புரதம் ஆர் என் ஏ மூலக்கூறுகளை பெருகச் செய்தன. பின்னர் இந்த அடிப்படை ரைபோசோம்கள் ரைபோசோம்களாக  மாறி ஆர் என் ஏ  வை புரதம் உருவாக வழி செய்தன என்கிறார்கள்.

 இந்த உலகம் உருவாக ஆர் என் ஏ  மூலக்கூறு காரணம்  இல்லை என்றால் இந்த புரதம் மற்றும் ஆர் என் ஏ  ஒரு சேர அடிப்படையில் தானே தோன்றி இருக்க வேண்டும் என அடிப்படை ரைபோசோம்கள் உருவாக்கி அது ஆர் என் மற்றும் புரதம் உருவாக்கும் வல்லமை கொண்டவையா என சோதிக்கத்  தொடங்கிவிட்டார்கள்.

சற்று பொறுங்கள், இந்த பிரபஞ்சத்தின் தீராத வலியைப் போக்கிக் கொண்டு இருக்கின்றேன்.

(தொடரும்) 

Thursday 30 July 2015

ஏடு கொண்டார் எவர் கண்டார்

கல்வெட்டு ஒன்றைப் பார்த்து
இதில் எழுதப்பட்டு இருப்பது
உண்மையா என மனம்
எண்ணியபோது தானே பதிலாக
உண்மையாகவும் இருக்கலாம்
உண்மையற்றதாகவும் இருக்கலாம்
என்றே சொல்லி அமர்ந்தது

எத்தனையோ புத்தகங்கள்
எழுதப்பட்டு இருக்கிறது
கதைகளா, கற்பனைகளா என
மனம் வினவிக்கொண்டே
தனக்குள்
கதையாக  கற்பனைகளாக இருக்கலாம்
கதையற்றும் கற்பனையற்றும் இருக்கலாம்
என ஆசுவாசம் கொண்டது

ஆண்டாண்டு காலமாக
இறைவன் குறித்த பாடல்கள்
ஏற்றுக்கொள்வதா மறுப்பதா
என்ற மனதின் ஓசைக்கு
அதுவே இசையாய்
ஏற்றுக்கொள்ளவும் செய்யலாம்
மறுத்துவிடவும் செய்யலாம்
என உருகி நின்றது

அவரவர் எண்ணம் கொண்டு
தான் அறிந்த அறிவின் பலம் கொண்டு
இந்த பரந்த பிரபஞ்சங்களின்
ஏடு கொண்டார் எவர் கண்டார்
ஏதுமே எழுதிவைக்காத
மனிதர் கொண்ட மௌனங்களுக்கு
அர்த்தம் நாம் அறியலாம்
அர்த்தம் நாம் அறியாமலும் இருக்கலாம்.




Wednesday 29 July 2015

களிமண் - மயர்வற மதிநலம்

களிமண் கொண்டு வந்து
ஒரு பொம்மை செய்து தர சொன்னான்
தண்ணீர் ஊற்றி
களிமண்ணில் ஒரு பொம்மை
செய்து தந்தேன்

அந்த பொம்மையை
 தண்ணீரில் கரைத்துவிட்டு
என்ன தண்ணீரில்
பொம்மை அழிகிறதே  என்றான்
நீ கொண்டு வந்த
களிமண் அப்படி என்றேன்

சிறிது நேரம் யோசித்தவன்
நான் எப்படிபட்ட களிமண்
கொண்டு வந்தாலும்
நீ அழியாத பொம்மை
அல்லவா செய்ய வேண்டும் என்றான்

அழியாத புகழோடு வாழ
வழி சொன்னான் அவன்
அழியாத கல்வியோடு மேன்மை
பெற சொன்னான் அவன்
அழியாத சிறப்பு குணம்
கொண்டிருக்க சொன்னான் அவன்

தன்  தேகத்து பெருமை பேசியிராது
பிறருக்கு அடிமையற்று இருந்திடவே
களிமண் கொடுத்துச் சொன்னான் அவன்

உள்ளத்தில் உயர்வு கொண்டு
கழிவிரக்க எண்ணம் அகற்றி
மதிநலம் சிறப்புற மனநலம் தானுயர
அழியாத வாழ்வு வாழச் சொன்னான் அவன்






Monday 27 July 2015

யாருமற்ற அநாதை பிரபஞ்சம்

சில தினங்களாகவே அந்த சாலை வழியில் பார்க்கிறேன்
ஒரு மரத்தின் நிழலில் அவ்விலங்கு படுத்து இருக்கிறது
எங்கிருந்து வந்து இருக்கும் என அதனிடம் கேட்டாலும்
உர்ரென்று முறைக்கும் அல்லது பாய்ந்து கடிக்கும்

என்னைப்போலவே பலரும் அவ்வழி செல்கிறார்கள்
அதே விலங்குதனை பார்த்தபடி நகர்கிறார்கள்
கல்லெடுத்து எறியும் சிறுவர் கூட அதை
கண்டுகொள்ளாமல் போய் விடுகிறார்கள் மௌனமாக

இப்படியாக இன்னும் சில தினங்கள் நகர்கின்றன
திடீரென ஒருநாள் அந்த விலங்கினை காணோம்
ஏதேனும் வேறு ஒரு மரம் தேடிப்  போயிருக்கும்
என்றே எனது மனமும் சமாதானம் சொல்கிறது

வேலைக்கு விடுமுறை சொல்லிவிட்டு தேடுகிறேன்
எந்த மரத்தின் கீழும் அந்த விலங்கு காணவில்லை
தனித்துக் கிடந்த அந்த விலங்கை வாரியணைத்து
என் வீட்டில் வைத்து அழகு பார்த்து இருக்கலாம்தான்.

Sunday 19 July 2015

அடியார்க்கெல்லாம் அடியார் - ஆசியுரை திருமதி சுஷீமா சேகர்


                                                                        ஆசியுரை 

இப்போதெல்லாம் கிராமங்கள் கூட நகரங்கள் ஆகி வருகின்றன. விவசாய நிலங்கள் வீடு கட்டும் மனைகளாக மாறி விட்டன. கிராம வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நகரில் வளரும் பிள்ளைகளுக்குக் கொஞ்சமும் தெரிவதில்லை. இந்த நாவலைப் படிக்கையில் திரு.ராதாகிருஷ்ணன் அவர்கள் நம்மை ஒரு அழகிய கிராம சூழலுக்குள் அமிழ்த்தி விடுகிறார்.

கிராமத்தில் இருந்து கல்லூரிக்குப் படிக்க வரும் முதல் தலைமுறையினர் படும் அல்லகளையும், அவர்களுக்கு நண்பர்களாலும் சூழ்நிலைகளாலும் நேரும் மனமாற்றங்களையும் அருமையாகப் பகிர்ந்துள்ளார் கதாசிரியர். படிக்க ஆரம்பித்தவுடன் கதை போல் அல்லாமல் சினிமாவைக் காண்பது போல் அவர் எழுத்து நம் கண் முன் விரிகிறது.

கருத்துரிமை மட்டுமே நம்மை ஐந்தறிவுள்ளப் பிராணிகளிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. ஒவ்வொரு துடிப்புள்ள இளைஞன் வாழ்வில் ஏற்படும் சலனங்களையும், கேள்விகளையும் அதற்கான விடைத் தேடல்களையும் படிப்படியாக இக்கதையில் விவரித்திருக்கிறார் திரு.ராதாகிருஷ்ணன்.

தற்போது இருக்கும் இளம் தலைமுறையினர் மதங்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. ராதா அவர்கள் சமணம், சைவம், வைணவம் ஆகிய மதங்களை இக் கதையில் வரும் பாத்திரங்கள் மூலம் விளக்குவது நல்ல ஒரு உக்தி. கடைசியில் நாம் உணருவது அதையெல்லாம் விட அன்புள்ள மனிதனாய் இருப்பதே சாலச் சிறந்தது என்று! நல்லதொரு முத்தாய்ப்பு கதைக்கு!

அவரின் இந்த நாவலை பலரும் படித்து, சுவைத்து, மகிழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி அவரை வாழ்த்துகிறேன். எந்தப் படைப்பும் சரியான சிந்தனையாளர்கள், படைப்பைப் பாராட்டுபவர்கள் கைகளில் போய் சேர்ந்தால் தான் படைத்தவருக்கு ஆனந்தம். அது திரு.ராதாகிருஷ்ணன் அவர்களுக்குக் கிட்ட வேண்டும் என்பது என் ஆசை. இன்னும் பல நற்கதைகள் எழுதி பேரும் புகழும் அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அன்பும் ஆசியுடனும்,
சுஷீமா சேகர்.

--------------------------------

மிக்க நன்றி அம்மா. எண்ணில்லா மகிழ்ச்சி கொண்டேன்.