Friday 10 January 2020

அசுரனும் தர்பாரும்

திரையரங்கு சென்று படம் பார்ப்பது என்பது அரிதானதால் பார்க்கின்ற அனைத்து தமிழ் திரைப்படங்கள் குறித்து எல்லாம் எழுதுவது என்பது சற்று இடைஞ்சல்தான். அக்டோபர் மாதம் 12ம் தேதி அன்று அசுரன் திரையரங்கு சென்று பார்த்தபோது உடன் வந்தவர்கள் படத்தின் உட்பொருளை புரிந்து கொள்ளமுடியாமல் நிறைய வன்முறையாக இருக்கிறது என்றார்கள். ஆனால் அந்தப் படத்தின் வலியை வாழ்வில் நேரடியாக அனுபவித்தவர்கள் மட்டுமே உணர இயலும். 

ஒடுக்கப்பட்டவர்களின் வலி என்பது அசுரன் போன்ற படைப்புகளின் மூலம் வெளிக்கொண்டு வந்தாலும் சமூகத்தின் மாற்றம் என்பது உடனடியாக நிகழும் நிகழ்வு அல்ல. ஏதேனும் ஒரு வகையில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனால் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறான். பணம் இருப்பவருக்கு, செல்வாக்கு உள்ளவருக்கு அதனால் பெரும் பாதிப்பு இல்லை, ஆனால் அல்லல்படுவது எல்லாம் பிறரால் அடக்கி அடிமைப்படுத்தப்பட்டவர்கள்தான். 

கல்வி என்ற ஒன்றே சமூக மாற்றத்திற்கு வழி என்று சொல்வதை முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியாதது போல படித்தவர்கள்தான் பெரும்பாலும் புத்தியற்று வலம் வருகிறார்கள். இது இந்த உலகத்தின் சாபக்கேடு. படைப்பாளி எப்படியாவது இச்சமூகத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டு விடாதா எனும் ஏக்கத்தில் வெளிக்கொணரும் படைப்புகளில் வலி அதிகம். இந்தப் படைப்புகள் எல்லாம்  வெறும் கை தட்டல்களுக்கு அல்ல. 

கிராமத்தில் நிலத்தகராறு, வெட்டுக்குத்து, செருப்பை கையில் எடுத்துக் கொண்டு போவது என ஒரு ஒடுக்கப்பட்டச் சமூகத்தினூடே வாழ்ந்து வந்த காரணமோ என்னவோ படைப்பின் ஆழம் நிறையவே பாதித்தது. ஆனால் நகரங்களில் எல்லாம் இப்படி எல்லாம் இருப்பது இல்லை எனும் ஒரு கருத்து உண்டு, அங்கே பணத்தைத் தேடி அலைபவனுக்கு யார் என்ன ஆள் என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. ஓடிக்கொண்டே இருப்பவனுக்கு ஏது பேதம், இருந்தாலும் கிராமத்தில் இருந்து பயணப்பட்ட பலரின் உள்ளுக்குள் விதைக்கப்பட்டு இருக்கும் விஷச்செடி முற்றிலுமாக அழிக்கப்பட்டது இல்லை. இனி வரும் சந்ததிகள் வர்க்க பேதங்கள் பார்க்காமல் அனைவருக்கும் உதவி புரிந்து அன்புடன் இருக்க வேண்டும் என்பது மட்டுமே இன்னும் பல வருடங்களுக்கு பெரும் கனவாகவே இருக்கும். மக்கள் திருந்த நினைத்தாலும் குட்டி குட்டித் தலைவர்கள் மக்களை விடுவதாக இல்லை, ஊர் நாட்டாமைகள் உறங்குவதாகவும் இல்லை. 

மிகச் சிறப்பான படைப்பு தந்த இயக்குனர் வெற்றிமாறனுக்கு வாழ்த்துக்கள். தனுஷ் ஒரு அற்புதமான நடிகர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இசை அருமை. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. 

அதன்பிறகு திரையரங்கு சென்று இன்று பார்த்த படம். தர்பார். ரஜினி என்பதைத் தவிர வேறு என்ன சொல்லிவிட முடியும். படம் ஆரம்பித்ததில் இருந்தே திரையரங்கில் ஆர்ப்பாட்டங்களும், சப்தங்களும் என இருந்தது. ரஜினியின் படங்களை அமைதியாகப் பார்க்கும் வழக்கம் எங்குமே இல்லை போல. இது ஒரு சினிமா எனும் மனநிலையில் இருந்தால் மட்டுமே இது போன்ற படங்களை இரசித்து வர இயலும். படம் வேகமாக முடிந்துவிட்டது எனும் திருப்தியும் நிம்மதியும் இருந்தது. இப்போதெல்லாம் எந்தப் படம் என்றாலும் முழுவதுமாகப் பார்த்து விடுகிறேன். எனக்கு இரசனை குறைந்துவிட்டது என்றில்லை, அப்படி என்னதான் ஒரு படைப்பாளி சொல்ல வருகிறார் எனும் ஆர்வக்கோளாறுதான். இது சினிமா அல்ல, மாபெரும் ஒரு படைப்பு என சுயதம்பட்டம் அடிக்கும் இயக்குநர்கள் நிச்சயம் கொஞ்சமாவது அறிவோடு இருந்தால்தான் நல்லது அப்போதுதான் என்ன மாதிரியான வசனம் எழுதுகிறோம், எந்த மாதிரியான காட்சிகள் அமைக்கிறோம் என்பதில் ஒரு தெளிவு இருக்கும். தமிழ் சினிமா காலா, அசுரன், பரியேறும் பெருமாள், நேர் கொண்ட பாதை  போன்ற பாதையில் பயணித்தாலும் பேட்ட, விசுவாசம், பிகில், தர்பார் போன்றவைகளும் தேவையாகத்தான் இருக்கிறது. 

இப்படி பிறரது படைப்புகள் குறித்து எழுதும் போது நாம் எழுதுகின்ற படைப்புகள் குறித்தும் ஒரு குற்ற உணர்வு வராமலும் இல்லை. திருக்குறள் தராத சமூக மாற்றத்தை, இராமானுசர் மகான்கள், பெருந்தலைவர்கள் சொன்ன கருத்துக்களால் உண்டாகாத சமூக மாற்றத்தை கொண்டு வர வேண்டி படைப்பாளிகள் பலர் தங்கள் படைப்புகளில் சுமந்து கொண்டு அலைகின்றார்கள். காலம் என்ற ஒன்றே ஒன்றுதான் அத்தனையையும் புரட்டிப் போடும் பேராற்றல் கொண்டது. காலத்தை மாற்றும் வல்லமை மனித இனத்துக்கு வசப்படட்டும். 

நன்றி. 


Sunday 15 December 2019

நாவல் வெளியீடு - பாமரத்தியும் பட்டாம்பூச்சியும்


எனது அடுத்த நாவல் அடுத்த வருடம் மார்ச் மாதம் வெளியிடப்பட இருக்கிறது. நாவலுக்கு ஆசியுரை, அணிந்துரை, மதிப்புரை, வாழ்த்துரை  எழுதித்தந்த இலட்சுமி, அருணா, ஜனனி, சத்தியநாராயணன், வேணி மற்றும் சந்திரகலா ஆகியோருக்கு மிக்க நன்றி.

என்றும் அன்புடன்
இராதாகிருஷ்ணன்


Wednesday 16 October 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 24

24. காலத்தில் காலம் இல்லை.

இந்த உலகில் எதுவுமே தெரியாமல் இருந்து கொள்வது கூட ஒரு வகையில் பேரின்பம்தான். நாம் பேசுகின்ற பல விசயங்கள் பெரும்பாலும் பிறரைப் பற்றியதாகவே இருக்கிறது. புறங்கூறுதல் போலவே புறங்கூறுதலை கேட்பதும் மோசமானது. ஒருவர் புறம் பேச ஆரம்பித்தவுடன் நாம் விலகியே இருந்தாலும் சிறிது நேரத்தில் அப்பேச்சில் ஈர்க்கப்பட்டு நாமும் அதில் இணைந்து விடுகிறோம். அதே வேளையில் அறிவியல் வளர்ச்சி, புரட்சி என ஒரு புறம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது, மறுபுறம் தங்களது நம்பிக்கைகளை எல்லாம் அத்தனை எளிதாக விட்டுத்தர முன் வராமல் மகிழ்வோடு இருந்து கொள்ளவே பலரும் விருப்பம் கொள்கின்றனர்.

பாமாவும், நாச்சியாரும் இரவு எட்டு மணிக்கு குண்டத்தூர் வந்தடைந்தனர். அங்கு இருந்த ஒரு உணவகத்தில் உணவு அருந்திவிட்டு பெருமாள்பட்டிக்கு நடக்கத் தொடங்கினர். இருள் என்பது ஒளியற்ற ஒரு நிலை. அதே இருள் மனதில் இருப்பின் அதை அறிவற்ற நிலை என்றே குறிப்பிடுகின்றனர். பாமரத்தனம் என்பது அறிவற்ற நிலை என்பதைக் காட்டிலும் தெளிவற்ற நிலை என்றே குறிப்பிடலாம். பாமரத்தனத்தை வெகுளித்தனம் என எண்ணுபவர்களும் இருக்கின்றனர். நிலாவின் வெளிச்சத்தில் சாலை தெளிவாகவே தெரிந்தது.

''பாமா, ஆழ்வார் திருநகரி பத்தி ஏதேனும் உனக்கு முன் ஞாபகம் இருக்கா'' நாச்சியாரின் பாமரத்தனமான கேள்வி அது.

''இல்லைம்மா, எனக்கு அப்படி ஒன்னும் தெரியலைம்மா. நம்மாழ்வார் பத்தி படிச்சதால தெரிஞ்சிகிட்ட ஊருதான் அது, வாழ்நாளில் கட்டாயம் போய் பாக்கனும்னு நினைச்ச ஊருல ஒன்னு அதைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியலம்மா. அதிலயும் நான் இன்னும் திருவரங்கமோ, திருவில்லிபுத்தூரோ போனது இல்லைம்மா''

''ஒருவேளை உனக்கே தெரியாம இருக்கும், எதுக்கும் நீ ஆழ்ந்த தியானம் இருந்து பாரு''

''பண்றேன்மா, ஆனா எனக்கு நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து இப்படி ஒரு எண்ணம் எல்லாம் எனக்கு வந்ததே இல்லை. அப்பாதான் எனக்கு பெருமாள் அறிமுகம் பண்ணி வைச்சார். நாலாயிர திவ்விய பிரபந்தம் வாசிப்பார், அதில உண்டான ஈர்ப்புதான்ம்மா மற்றபடி என்ன சொல்றதுனு தெரியலை அதுவும் உங்களோட இந்த உறவு எல்லாம் எனக்கு நிறைய மகிழ்ச்சி தரக்கூடியதா இருக்கு''

''தியானம் இருந்து பாரு பாமா''

''சரிம்மா''

பெருமாள் கோவிலின் கோபுரத்தில் விளக்கு பிரகாசமாக எரிந்து கொண்டு இருந்தது. நாச்சியார் பாமாவின் தெய்வீகத் தொடர்பு குறித்து எண்ணிக் கொண்டு இருந்தார். ஆனால் பாமாவுக்கு பட்டாம்பூச்சிக்கு சிறகுகள் முளைத்து விட வேண்டும் என்பதிலும், நாராயணிக்கு கை கால்கள் வர வேண்டும் என்பதிலும் இருந்தது.

நல்ல மனிதர்களாக இருப்பதுவும், நல்ல மனிதர்களை அடையாளம் கண்டு கொண்டு அவர்களோடு பிரியாமல் சேர்ந்து இருப்பதுவும் இன்றைய காலத்தில் பெரிய விசயம்தான். அதே போல நமது செயல்களை எந்த ஒரு காலத்தில் நினைத்துப் பார்த்தாலும் நாம் தலை நிமிர்ந்து இருக்கும்படியாக இருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட ஒரு வாழ்வை பாமா சற்றும் எதிர்பார்த்து இருக்கவில்லை. படித்தோம், வேலைக்குச் சென்றோம் என்று இருக்கும் என்றுதான் எண்ணி இருந்தாள். இந்த உலகில் காலத்தின் தேவைக்கு ஏற்ப காலம் விசயங்களை நடத்திக் கொள்ளும். காலத்தின் தேவை, தேவையாகவே இருந்திருக்கவில்லை என காலமும் ஒரு கணத்தில் உணர்த்தி வைக்கும். இந்த மொத்த அண்டவெளியும் காலத்திற்கானது இல்லை, காலத்தில் காலமும் இல்லை.

சனிக்கிழமை அன்று அதிகாலையில் யசோதையின் வீட்டை அடைந்தாள் பாமா.

''சொன்ன நேரத்திற்கு சரியா வந்துட்ட பாமா''

''காலத்தில் காலம் இல்லை யசோ, வண்ணத்துப்பூச்சியை கவனிச்சிக்கிட்டதுக்கு நன்றி''

''யசோ, என்னோட அத்தை கூப்பிடற மாதிரியே இருக்கு. உன்னோட பேரழகுல நானே மயங்கிருவேன் போல. தெய்வீகக்கலையம்சம் உனக்கு பாமா''

''உங்க அத்தை உங்களுக்கு ஒருவேளை அந்த யசோதையை பார்த்துதான் பெயர் வைச்சி இருப்பாங்க போல''

''நல்லாவே பேசற பாமா''

''உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லனும், எவ்வளவு பெரிய உதவி நீங்க பண்றது''

யசோதை முகம் மலர்ந்தாள். இருவரும் மருத்துவர் மாறனை சந்திக்கச் சென்றனர்.

மருத்துவர் மாறன் யசோதைக்காக காத்து இருந்தவர் போல வரவேற்றார். பட்டாம்பூச்சியைப் பார்த்தவர் வியப்பு அடைந்தார்.

''நான் கொடுக்கப்போற இந்த ட்ரீட்மென்ட்ல ஒருவேளை இந்த பட்டாம்பூச்சி இறந்து போகலாம், அதுக்காக என் மேல பழி சுமத்தக் கூடாது. இப்படி டெவெலப்மென்ட் ஆகாம இத்தனை நாட்கள் இது உயிரோட இருக்கிறதே அபூர்வம்தான்''

''என்ன சொல்றீங்க டாக்டர்''

மாறன் தான் எழுதி வைத்து இருந்த விசயத்தை அவர்களிடம் காண்பித்து விளக்கம் அளிக்க ஆரம்பித்தார். இவ்வுலகில் உருவான அத்தனை உயிரினங்களும் தங்களுக்குள் பெரும் அதிசயத்தைப் புதைத்து வைத்து இருக்கிறது. பாமா மெய் மறந்து அமர்ந்து இருந்தாள்.

(தொடரும்)