Thursday 19 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 6

6. யசோதையின் மனம்

நாச்சியார் சிம்மக்கல்லில் ஒரு வீட்டில் வாடகை எடுத்து தங்கி மதுரை மருத்தவமனையில் பயிற்சியாளர் மருத்துவராகப் பணிபுரிந்து வந்த யசோதையை முதலில் பார்க்கச் சென்றார். நாச்சியாரின் வருகை யசோதைக்கு பெரும் மகிழ்வைத் தந்து இருந்தது. தனக்கு எது எல்லாம் தேவையோ அதை எல்லாம் நாச்சியார் மூலம் நிறைவேற்றிக் கொள்வது என்பது யசோதைக்கு சிறு வயது முதல் மிகவும் எளிதாக இருந்தது.

யசோதைக்குப் பெயர் வைத்தது கூட நாச்சியார் தான். யசோதை தங்கி இருந்த மாடி வீடு எல்லா வசதிகளும் ஒரு சிறு தனிக்குடும்பத்திற்கு ஏற்றது போலவே கட்டப்பட்டு இருந்தது. மாடிப்படி வீட்டின் உள்ளே வந்து செல்லும்படியாக இருந்ததால் ஒருவகை பாதுகாப்பாகவும் இருந்தது.

''அத்தை, உங்களை நான் எதிர்பார்க்கவே இல்லை, குடிக்க மோர் கொண்டு வரேன்'' யசோதையின் ஆச்சரியம் கலந்த வரவேற்பு புரிந்துக் கொள்ளக் கூடியதுதான். நாச்சியாருக்கு மோர் கொண்டு வந்து தந்தாள். 

''சொல்லிட்டு வரனும்னுதான் இருந்தேன், இன்னைக்கு எப்படியும் நீ வீட்டுல இருப்பனு தைரியத்துல கிளம்பி வந்துட்டேன், அப்படியே நீ இல்லைன்னாலும் கூடலழகர் பெருமாள் கோவிலுக்குப் போய்ட்டு வந்து இருப்பேன், நீ ஊருக்கு எல்லாம் வரவே வேணாம்னு முடிவு பண்ணிட்ட போல அதுவும் வந்தா ஒரு நாளு கூட வீட்டுல முழுசா தங்கினது இல்லை, நான் ஒரு வாரம் இங்க தங்கலாம்னு இருக்கேன் உனக்குச் சம்மதம் தான'' என்றார்.

''தாராளமா தங்குங்க அத்தை, என்ன விசயமா வந்தீங்க''

''உனக்குத்தான் தெரியுமே, நம்ம ஊர்ல ஒரு பள்ளிக்கூடம் தொடங்கனும்னு ரொம்ப நாளா ஒரு ஆசை. எல்லாம் பாப்பநாயக்கன்பட்டியில் போய் படிச்சி பழகிட்டோம். இனி வரக்கூடிய பிள்ளைக நம்ம ஊர்ல அஞ்சு வரைக்காவதும் படிக்கட்டுமேனு தோனிகிட்டே இருக்கு, நம்ம ஊரை விட்டு ஆளுகளும் வெளியேறிட்டே இருக்காங்க, பெருமாள் கோவில் மட்டும் தான் நம்ம ஊருக்கு அடையாளம், ஒரு பள்ளிக்கூடம் இருந்தா நல்லதுதானே''

''அதான் முயற்சி பண்ணி முடியலைனு சொல்லிட்டே இருந்தீங்களே''

''முடியலைனு சொல்லலை, முடியமாட்டேங்குது, விருதுநகர் பிரயோசனப்படாதுனு மதுரையில முயற்சி பண்ணிப் பார்ப்போம்னு எனக்குத் தெரிஞ்சவங்களை பார்த்துப் பேசனும்''

''சரிங்க அத்தை, இன்னைக்கு மதியம் என்னோட சமையல்தான், சாப்பிட்டு கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துட்டு சாயங்காலமா போகலாம், நானும் வரேன்''

''ம்ம், பட்டாம்பூச்சி பத்தி ஏதாச்சும் தெரியுமா யசோ''

''வண்ணத்துப்பூச்சியா''

''ம்ம்''

''எதுக்கு அத்தை''

பூங்கோதையின் வீட்டில் நடந்த பட்டாம்பூச்சி விசயத்தைச் சொல்லி முடித்தார் நாச்சியார். ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்த யசோதை மன மகிழ்ந்தாள்.

''கோதை அக்காவுக்கு குழந்தைனு நினைச்சாலே உள்ளுக்குள்ள வண்ணத்துப்பூச்சி பறக்குது அத்தை, அதான் பள்ளிக்கூட விசயத்தை மறுபடியும் கையில் எடுத்துட்டீங்களா''

நாச்சியார் சிரித்தார். நாம் ஏதேனும் பேசிக்கொண்டு இருக்கும்போது நமது மனம் ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்திக் கொள்ளும். அது நல்லதுக்கு எனில் மகிழ்வும், நல்லதுக்கு இல்லை எனில் சோகமும் தங்கிவிடும்.

''பட்டாம்பூச்சி பத்தி என்ன நினைக்கிறனு சொல்லு''

''அது ஒரு அரிய வகை பூச்சி இனம் அத்தை, உங்களுக்குத் தெரியாத ஒன்னா''

''ஒரு முட்டை உருமாற்றம் அடைஞ்சி பட்டாம்பூச்சியா மாறுறது பிரமிப்பா இல்ல''

''இந்த அண்டவெளி, நாம நம்மோட மூளை எல்லாமே பிரமிப்புதானே அத்தை''

''இல்லை யசோ, இந்த பட்டாம்பூச்சி எனக்கு இந்த எட்டு மாசமா எதையோ சொல்ல வர மாதிரி இருக்கு''

''அத்தை, எப்பவும் போல பெருமாளேனு இருங்க, அப்படி எல்லாம் பட்டாம்பூச்சி ஒன்னும் சொல்ல வராது, நீங்களே உங்களுக்கு உங்க பெருமாள் சொல்ற மாதிரி சொல்லிக்கிட்டாதான் உண்டு''

அப்போது அங்கே அறைக்குள் ஒரு பட்டாம்பூச்சி வட்டமடித்து வந்தது. யசோதை பட்டாம்பூச்சியை வியப்புடன் நோக்கினாள். யசோதையின் வலது புற தோளில் பதினைந்து வினாடிகள் மட்டுமே அமர்ந்துவிட்டு சட்டென வெளியில் பறந்தது.

''அத்தை''

நாச்சியார் பட்டாம்பூச்சி சென்ற வழியை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தார்.

(தொடரும்) 

Sunday 15 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 5

5. துளசிச் செடி

நாச்சியார் சொன்ன கதை பூங்கோதையின் மனதைத்  தைத்துக் கொண்டு இருந்தது. பூங்கோதையின் தோளின் மீது அமர்ந்த பட்டாம்பூச்சி வீட்டை விட்டு எங்கும் செல்வதாக இல்லை. தானும் ஒருவேளை அம்மாவாகும் வாய்ப்பு இன்றி போகும் எனில் தனக்குப் பின் தனது சந்ததி எனச் சொல்ல ஏதும் அற்றுப் போயிருக்கும் என நினைக்கும்போது பூங்கோதைக்கு மிகவும் கவலையாக இருந்தது.

''அம்மா என் மேல அமர்ந்த இந்த பட்டாம்பூச்சி ஆணா, பெண்ணா'' பூங்கோதையின் கேள்வி எதனால் எழுந்தது என ஆராயாமல் பட்டாம்பூச்சியினை ஆராய எழுந்தார் நாச்சியார்.

அந்த பட்டாம்பூச்சி வீட்டின் அறையில் இருந்த இரண்டு சன்னல்களில் ஒரு சன்னலில் சென்று அமர்ந்து இருந்தது. பட்டாம்பூச்சியின் அருகில் சென்று அதன் வயிறுப் பகுதியைப் பார்த்தார் நாச்சியார்.

''பொண்ணு'' நாச்சியார் சொன்னபோது பெரும் மகிழ்வோடு சொன்னார்.

''கோதை, ஒரு பட்டாம்பூச்சிக்கு மொத்தம் ஆறு கால்கள் இருக்கும், நாலு கால்கள் போல தோற்றம் இருந்தாலும் ஆறுதான். அதன் வயிறு தட்டையா நேரா இருந்தா அது ஆண், கொஞ்சம் தூக்கலா வளைஞ்சி இருந்தா அது பொண்ணு. இந்த பட்டாம்பூச்சிக்கு கழிவு எல்லாம் வெளியேற்ற தனித்தனி வழிகள் எல்லாம் இல்லை. எல்லாமே நீர் ஆகாரம்தான் அதனால் சிரமம் இல்லை. நீல நிறம், மஞ்சள் நிறம்னு கலந்து கலந்து இருக்கிற இந்த பட்டாம்பூச்சி இங்கேயே இருந்து என்ன சொல்ல நினைக்குதுனு தெரியலை''

''அதுபாட்டுக்கு ஒரு ஓரத்திலே இருக்கட்டும்மா''

''சரி கோதை, கவனமா இரு. நிறைய வருசம் கழிச்சி நான் ஒரு வேலையா நாளைக்கு மதுரை வரைக்கும் போறேன், வர ஒரு வாரம் ஆகும், எது வேணும்னாலும் பாப்பாத்தி கிட்ட கேளு, நானும் போய் அவகிட்ட சொல்லிட்டுப் போறேன், உன்னை வந்து பாத்துக்குவா''

''சரிம்மா''

ஊரில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் பரந்தாமனுக்கு வசுதேவன் கட்டித்தந்த வீடு. கிராமத்தில் கட்டப்படும் வீடுகளில் மொட்டைமாடி வைத்துக் கட்டுவது வழக்கம். ஏதேனும் காயப்போடுவதற்கு ஏதுவாக இருக்கும். கோவிலில் இருந்து பதினைந்து நிமிடங்களில் நடந்து செல்லும் தொலைவில் தான் வீடு கட்டப்பட்டு இருந்தது. இந்த மொட்டை மாடியில் நின்று முழுக்கோவிலையும் வெகுவாக இரசிக்கலாம்.

இரண்டு மாடிகள் கொண்ட வீடு. வீட்டுக்குள் நுழைந்ததும் காலணிகள் கழற்றி வைக்க ஒரு அறை. அங்கேயே கால், முகங்களை கழுவிக் கொள்ள தண்ணீர் வசதி கொண்ட சிறு இடம். அதைத்தாண்டி வீட்டுக்குள் நுழைந்ததும் நல்ல விசாலமான வரவேற்பு அறை. பத்து நபர்கள் கூட தாராளமாக படுத்து உறங்கலாம். அந்த அறையில் கீழேதான் அமர வேண்டும், எவ்வித நாற்காலிகளோ, கட்டில்களோ இல்லை. அங்கேதான் பெரும்பாலும் எவரேனும் வந்தாலும் கீழே அமர்ந்து பேசிச் செல்வார்கள்.

அந்த அறை முடியும் இடத்தில் வலப்புறமாக கிழக்கு நோக்கி கட்டப்பட்ட சமையல் அறை. நான்கு நபர்கள் தாராளமாக நின்று சமைக்கலாம். கோவில் அன்னதானம், நெய்வேத்தியம் எல்லாம் இங்கே செய்யப்படுவது இல்லை. பரந்தாமனுக்கும், பூங்கோதைக்கும் மட்டுமான சமையல் அறையாக இருந்தது.

வரவேற்பு அறை, சமையல் அறைக்குப் பின்புறம் உறங்குவதற்கான ஒரு அறை அதை ஒட்டிய ஒரு பூஜை அறை. முதல் மாடியில் இரண்டு அறைகள் மட்டுமே கட்டப்பட்டு இருந்தன. வீட்டினைச் சுற்றி சின்ன சின்ன மரங்கள் மா, கொய்யா ஆலிவ் என நடப்பட்டு இருந்தன. வீட்டில் இருந்து சிறிது தொலைவில் கோவிலுக்கு என சமைப்பதற்கான சமையல் அறையும், பொருட்கள் சேர்த்து வைக்கும் ஒரு அறையும் இருந்தது. இவற்றில் எல்லாம் இருந்து சற்று தள்ளி மற்றொரு பக்கத்தில் கழிப்பறை.

வீட்டின் முன்பக்கத்தில் வாசல் தாண்டி ஒரு மாடத்தில் துளசிச் செடிகள் இருந்தது. இந்த துளசிச் செடிகளை பல வருடங்களாகப் பாதுகாத்து வருகிறாள் பூங்கோதை. ஒரு துளசிச் செடி வைத்த இடத்தில் இன்று பல துளசிச் செடிகள் ஆகி இருந்தது. இந்த பெரும் அண்டவெளியில் தங்களைத் தாங்களே நட்சத்திரங்கள் முதற்கொண்டு பெருக்கிய வண்ணம் இருக்கின்றன.

நாச்சியார் கிளம்பியதும் அவரோடு துளசிச் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வெளியில் வந்தாள் பூங்கோதை. பட்டாம்பூச்சியும் அவள் பின்னால் வந்தது. அங்கே இருந்த ஒரு துளசிச் செடி இலையின் மீது அமர்ந்தது. அதனை பூங்கோதை வெகு ஆச்சர்யத்துடன் பார்த்தாள். நாச்சியார் கூட என்னவென ஒரு கணம் அங்கேயே நின்றார்.

தண்ணீர் ஊற்றித் திரும்பியவள் மதுரை மீனாட்சி கோவிலுக்குப் போனா எனக்கு குங்குமம் பிரசாதம் கொண்டு வாங்கம்மா என்றாள். நாச்சியார் தலையை மட்டும் ஆட்டியவர் துளசிச் செடியில் அமர்ந்து இருந்த பட்டாம்பூச்சியை பார்த்தவாறு இருந்தார்.

சிறிது நேரத்தில் பட்டாம்பூச்சி அங்கே இருந்து பறந்தது. துளசிச் செடியின் இலையின் பின்புறம் குனிந்து பார்த்தார் நாச்சியார்.

''பெருமாளே'' இரு கைகளைத் தன்  தலைக்கு மேலே தூக்கி வணங்கி நின்றார்.

''என்ன ஆச்சுமா''

''ஒரே ஒரு முட்டையை மட்டும் போட்டுட்டு அந்த பட்டாம்பூச்சி போயிருக்கு'' இலையில் ஒட்டிக்கொண்டு இருந்த முட்டையை பூங்கோதைக்கு காட்டினார் நாச்சியார்.

''எத்தனையோ முட்டைகள் போடும் வழக்கம் பட்டாம்பூச்சிகளுக்கு உண்டு அதுவும் பிரத்யோகமா இலைகள் தேடிப் போகும். இந்த துளசிச் செடியில இருந்து இதுவரைஇத்தனை வருசமா  பட்டாம்பூச்சி எதுவாச்சும் வந்து இருக்குனு நீ கவனிச்சு இருக்கியா கோதை''

''இல்லைம்மா''

''முட்டை போட்டுட்டு போறதோட சரி, அதற்கப்புறம் அந்த முட்டையை பாதுகாக்கனும், பொறிக்கனும் அப்படி எல்லாம் பட்டாம்பூச்சிக்கு வழக்கம் இல்லை. நீ இந்த இலையில் தண்ணியை ஊத்திராதே,  முட்டையை சிதைக்கமா பார்த்துக்கோ, நா அடுத்த வாரம் வந்து பாக்கிறேன்''

''சரிம்மா''

துளசிச் செடியின் இலையை பார்த்தவாறு நின்று கொன்று இருந்தாள் பூங்கோதை.

கிருஷ்ணருக்கு தானே சமம் என தன்னைத் தானே உலகுக்கு உணர்த்திய இந்த துளசிச் செடி ஒரு உயிரைத் தாங்கிக் கொண்டு இருந்தது.

(தொடரும்)

Saturday 14 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 4

4. பட்டாம்பூச்சியின் பரிணாம மாற்றம்

பெருமாள்பட்டியின் சிறப்பு என்னவெனில் பெருமாள் கோவிலுக்கு அருகில் உள்ள கண்மாயில் நீர் வற்றியது கிடையாது. அந்தக் கண்மாய் நீரைத்தான் விவசாயத்துக்குப் பயன்படுத்தி வருகிறார்கள்.  ஓரளவுக்கு நல்ல இடம் தாங்கிய கண்மாயினைத்தான் வெட்டி இருந்தனர். கண்மாய்க்கரை எல்லாம் போட்டு முடித்த சில நாட்களில் நல்ல மழை பெய்ததாகவும் அன்றில் இருந்து இன்றுவரை கண்மாயில் நீர் வற்றியதை எவரும் பார்த்தது இல்லை என்றே சொல்வார்கள்.

கிராமத்துக்கு ஏற்றது போன்ற கோவில். கருங்கல்லினால் ஆன கருவறை, அர்த்தமண்டபம், விமானம், இராஜகோபுரம். இராஜகோபுரத்திற்கும், கருவறைக்கும் இடைப்பட்ட ஒரு இருபது அடியில் ஒரு மண்டபம். அங்கேதான் அன்னதானம் எல்லாம் வழங்குவார்கள். இந்த பெருமாள் கோவிலில் இன்றும் கூட திருமணம் நடத்திக் கொள்பவர்கள் உண்டு. வசதி வாய்ப்புகள் வந்தபிறகு கல்யாண மண்டபம் என நகரங்கள் தேடிப் பயணப்பட்டு போன பிறகு திருமணம் நடத்துவதில் கோவில்கள் முன்னுரிமை இழந்து போயின.

இருந்தாலும் அவ்வப்போது திருமண வைபவங்கள் காணும் இந்த பெருமாள் கோவிலை குண்டத்தூர் மரிக்கொழுந்து ஸ்தபதியார் தானே முன்னின்று செய்து முடித்து வைத்தார். வசுதேவனின் ஓட்டன் வாமனசித்தன் மரிக்கொழுந்துவிடம் தனது கோவில் ஆசையை சொன்னதும் அதற்கு முதலில் கண்மாய் வெட்ட வேண்டும் என ஆரம்பித்ததுதான் இந்தக் கண்மாய். வறட்சிக் காலங்களில் கூட கண்மாய் வற்றாமல் இருப்பது கண்டு பலரும் ஆச்சரியம் அடைந்தது உண்டு, அதன்பின்னரே ஊற்றுநீர் குறித்த தகவல் பரப்பப்பட்டது.

பொதுவாக கிராமம் என்றாலே கருப்பசாமி, முனியாண்டி, அய்யனார், காளியம்மன், அரசமரத்து பிள்ளையார் என சாமிகள் இருக்கும். இந்த ஊரில் பெருமாள் கோவிலைத் தவிர வேறு எந்த கோவில்களும் இல்லாமல் போனதற்கு வசுதேவனின் குடும்பமே காரணமாக இருந்தது எனும் பேச்சு இருக்கிறது. இந்த கிராமத்தில் இறந்து போன எவரையும் குலசாமியாக எல்லாம் இங்கே உள்ளவர்கள் கொண்டாடியது இல்லை. வாமனசித்தன் சொன்னதன்பேரில் எல்லாம் பெருமாளுக்கு மட்டுமே சமர்ப்பணம் செய்து கொண்டு இருப்பதாகச் சொல்வார்கள்.

அன்றைய தினங்களில் வீட்டுக்கு குறையாமல் ஐந்து பிள்ளைகளாவது இருப்பார்கள். ஆனால் வசுதேவனின் பரன்பரையில் மூன்று பிள்ளைகள் மேல் இருந்தது இல்லை. அதிலும் ஒருவர் மட்டுமே திருமணம் முடித்துக் கொள்ளும் வழக்கம் இருந்து வந்தது. இது தற்செயலாக நடந்து வருவதா, அல்லது திட்டமிட்டு நடக்கிறதா எனத் தெரியாது. வசுதேவனின் தந்தை குசேலபாகனுடன் உடன்பிறந்த சித்தப்பா பார்த்தன் தனக்கு இருபது வயது இருக்கும்போதே ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்குச் செல்வதாகச் சொல்லிச் சென்றவர்தான், அவரோடு எவ்வித தொடர்பும் அதற்குப்பின்னர் இல்லாமல் போனது. இவர்களுது பரன்பரை முன்னால் இருந்தவர்கள் எல்லாம் ஸ்ரீஇராமானுசரிடம் பழக்க வழக்கம் கொண்டு இருந்ததாகப் பேச்சு இன்னமும் கிராமத்தில் இருக்கிறது.

நாராயணி எனும் பெயரைக் கேட்டதும் நாச்சியார் தனது யோசனையில் இருந்து விடுபட்டார்.

''கோதை, இந்த பெயர் எப்படி தேர்ந்து எடுத்த'' நாச்சியார் ஆச்சரியம் கலந்து கேட்டார்.

''அவர்தான் இந்தப் பெயரை எனக்கு முன்னமே சொன்னார், எங்களுக்கு பெண் பிள்ளை பிறக்கும்னு ஒரு நம்பிக்கை. அவருக்கு அவர் அம்மா மேல நிறைய பிரியம், அவர் அம்மா திரும்ப பிறக்கனும்னு சொல்வார், அதெல்லாம் சாத்தியம் இல்லைன்னாலும் அவரோட ஆசையை சரினு சொல்லுவேன்'' பூங்கோதையின் மீது அமர்ந்து இருந்த பட்டாம்பூச்சி அகலவே இல்லை. அந்த அறை பட்டாம்பூச்சிகளின் வண்ணங்களால் நிறைந்து இருந்தது.

''இந்த பட்டாம்பூச்சிக்கு உன் மேல என்ன பிரியமோ கோதை, நகராம உட்கார்ந்து இருக்கு. பட்டாம்பூச்சியோட வாழ்நாள் ஒரு வாரத்தில் இருந்து ஒன்பது மாதங்கள் வரை இருக்கும். இங்கே இருக்க இந்த பெரிய பட்டாம்பூச்சிகள் நிறைய மாதங்கள் உயிர் வாழும். அவை குளிர் இரத்த வகை, அதனால வெயில் காலத்தில் துடிதுடிப்பா இருக்கும், குளிர் காலம் வந்துட்டா உறைஞ்சி உயிர் போகாம இருக்கிறது எல்லாம் அதிசயம் தான். வெளிச்சூழல் வைச்சிதான் அவை தன்னோட வெப்ப நிலையை சமன்படுத்திக்கும்''

''அப்போ இந்த பட்டாம்பூச்சி எட்டுமாசம் முன்னாடி என் மேல வந்து உட்கார்ந்த ஒன்னாம்மா'' பூங்கோதையின் கேள்விக்கு என்னவென பதில் சொல்வதென தெரியாது புன்னகை புரிந்தார்  நாச்சியார்.

''தெரியலை கோதை, பட்டாம்பூச்சி கதையைச் சொல்றேன். கோதை இப்போ உன்னை மறுபடியும் முதலில் இருந்து இதே வாழ்க்கையை வாழச் சொன்னா இதே போல வாழ்வியானு கேட்டா உன்னால ஆமா, இல்லைனு பதில் சொல்ல முடியும் ஆனா உண்மையில் என்ன நடக்குதுன்னு யாருக்கும் தெரியாது. நம்ம மனிதர்களுக்கு எப்பவுமே கடந்த காலத்தில் என்னவாக நடந்து இருக்கும் எப்படி இருந்து இருக்கும் அப்படினு தெரிஞ்சிக்க ஆசை, அதனால எழுதப்பட்ட பெரும் பழங்கதைகள், சமீபத்திய சிறுகதைகள் என நிறையவே உண்டு.

அதில் ஒன்னுதான் இந்த பட்டாம்பூச்சி கதை. 50மில்லியன் ஆண்டுகள் பின்னோக்கி போய் அப்போ வாழ்ந்த குறுகிய வாழ்நாட்கள் வாழும் டைனோசர்களை சுட்டு தள்ளிட்டு வருவதற்கு ஒரு நிறுவனம் கால இயந்திரம் உருவாக்கி அதில் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த வழிகாட்டி இரண்டு நபர்கள் அதோடு கதைநாயகன் இன்னும் இரண்டு நபர்கள் போவாங்க. எந்த எந்த டைனோசர்களை கொல்லனும் அப்படினு முன்னமே அந்த நிறுவனம் குறியிட்டு வந்து இருப்பாங்க.

அந்த கதைநாயகன் இப்படி நாம பின்னோக்கி போய்ட்டு திரும்பி வந்தா எல்லாம் அப்படியே இருக்குமானு கேட்பான், அது உறுதி சொல்ல முடியாது, அதே வேளையில் தாங்கள் என்ன சொல்கிறார்களோ அதை மட்டுமே செய்யனும் மீறி செயல்படக்கூடாதுனு சொல்வாங்க. எடுத்துக்காட்டா ஒரு எலியை மிதிச்சுக் கொன்னா அதனைச் சுற்றிய ஒரு பரிணாம சூழல் மாறிப்போகும் அதனால சுடுவதை தவிர வேறு எதுவும் பாதை மீறிப் போகக்கூடாதுனு கடுமையான விதிகள் போடப்பட்டு இருக்கும்.

அப்படி போனப்ப பாதை மாறி கதைநாயகன் சேற்றில் மிதிச்சு வந்துருவான். வழிகாட்டி பயங்கரமா கோவப்படுவான். திரும்பி மீண்டும் அதே தற்காலத்திற்கு வந்ததும் முதலில் இருந்ததை விட எல்லாம் மாறி இருக்கும். ஏன் இப்படி ஆயிருச்சின்னு பார்த்தா சேற்றில் மிதிச்சதால அதில் இருந்த ஒரு பட்டாம்பூச்சி செத்துப் போய் அவனது காலில் ஒட்டி இருக்கும். அந்த ஒரு பட்டாம்பூச்சி செத்துப் போனது மொத்த நிகழ்வுகளையே மாற்றி வைச்சிரும். அவனுக்கு என்ன இதுனு புரியறதுக்கு முன்னாலே அந்த வழிகாட்டி அவனை சுட்டுக் கொன்னுருவான். அந்த பட்டாம்பூச்சி உயிரோடு இருந்து இருந்தா கதைநாயகன் உயிரோட இருந்து இருப்பானு கதை முடியும்''

நாச்சியார் சொல்லி முடித்ததும் அத்தனை பட்டாம்பூச்சிகளும் அந்த அறையை விட்டுப் பறந்தோடின. பூங்கோதையின் கன்னம் தொட்டு மீண்டும் தோளில் அமர்ந்து கொண்டது அந்த ஒரே ஒரு பட்டாம்பூச்சி.

''அம்மா'' என கண்கள் கலங்கினாள் பூங்கோதை.

''எனக்குப் பிறகு எனக்கான என் சந்ததி இல்லைனு ஆயிருதல கோதை, அப்படி என் சந்ததி ஒன்னு உருவாகி இருந்தா இந்த உலகத்தில் எத்தனை மாற்றம் உருவாகி இருக்கும்னு சொல்ல முடியாதுல, அதுபோல நிறைய மகான்கள், பெரியோர்கள், அறிவியல் அறிஞர்கள் எல்லாம் பிறக்காமல் போயிருந்தானு யோசிச்சா இந்த உலகத்தைப் பத்தி நம்முடைய பார்வை எப்படி இருக்கும். இப்படித்தான் எங்க குடும்பத்தில ஒரே ஒரு சந்ததி தொடர்ச்சி மட்டுமே இருந்துட்டு வந்து இருக்கு அதனால பெரும் மாற்றம் நிகழாமல் போய் இருக்குமோ''

நாச்சியார் சொன்னதும் பூங்கோதை அவரது கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

(தொடரும்)