Saturday 9 June 2018

காலா - உலக மாற்றம் எவர் கைகளில்

கபாலி படம் பார்த்த பிறகு நிறைய தமிழ்ப்படங்கள் பார்த்தாகி விட்டது. பல படங்களின் பெயர்கள் கூட மறந்து விட்டது. பொதுவாக படத்தைப் பார்க்க ஆரம்பித்த அரை மணி நேரத்தில் உறங்கி விடுவது உண்டு., என்னைத் தாலாட்டும் தமிழ் படங்கள்.  அருவி, அறம் போன்ற படங்கள் சமூகத்தில் சில விசயங்களை மாற்ற வேண்டும் என மிகவும் தைரியமாகச் சொன்ன படம். இதை விட இருட்டு அறையில் முரட்டு குத்து எனும் படம் எல்லாம் அதீத தைரியம்தான். சமூகப் பிரச்சினைகள் ஒருபுறம், காமம் சார்ந்த விசயங்கள் எல்லாம் ஒரு புறம். படைப்பாளி சமூகத்திற்கு ஏதேனும் சொல்ல வேண்டும் என துடிதுடித்துக் கொண்டு இருக்கிறான்.

காலா படத்தைப் பார்க்க வேண்டும் எனும் முடிவு ரஜினி.  தியேட்டருக்குப் போனால் தெரிந்தவர்கள் நிறைய பேர் வந்து இருந்தார்கள். அதற்கு முன்னர் வேறொரு திரையில் படம் பார்த்தவர்கள் வெளியில் உணவுப் பொருட்கள் வாங்க வந்து இருந்தார்கள். பார்க்க வேண்டிய படம் என சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.

படம் ஆரம்பிக்கத் தொடங்கியதும் மனிதர்கள் குறித்த வரலாறு சொல்லப்படுகிறது. நில ஆக்கிரமிப்பு செய்பவர்கள் கோலோச்சிய காலம் இன்றும் தொடர்கிறது. நிலத்தை இழந்தவர்களின்  கதையை, பறிக்கப்பட்ட கதையை கேளுங்கள், எத்தனை வலிமிக்கது எனப் புரிய வரும். குடும்பம், காதல், அடிதடி என படம் அழகாக நகர்கிறது. கதாநாயகன் வில்லன் என எடுக்கப்படும் படங்களில் பெரிதாக ஒன்றும் எதிர்பார்த்து விட முடியாது. நிலம் நம் உரிமை. நம் நிலத்திலேயே நம் மரணம் என்பது எல்லாம் கேட்க உணர்வுப் பூர்வமாக இருக்கும். ஆனால் வெளியூர் வேலை என்பதுதான் பலரின் கனவு. ஊரை விட்டு வெளியேப் போகாமல் வாழ்ந்து மடிந்த மக்கள் முன்னர் இருந்தனர், அப்போது கூட திரைகடல் ஓடி திரவியம் தேடு எனச் சொன்னது தமிழ்.

புரட்சி, போராட்டம் என்பது மக்களின் வாழ்வோடு கலந்த ஒன்று. மக்கள் அனைவரும் போராட்டத்திற்கு தங்களை தயார்படுத்துவது இல்லை. போராட்டம் புரட்சி பண்ண ஒரு தனிக்கூட்டம் மக்களில் உண்டு. அதிகார வர்க்கம் என்பது அடிமை வர்க்கத்தினால் உண்டாவது. அடிமை வர்க்கம் போராடும் போது அதிகார வர்க்கம் ஆடும், ஆனால் அதிகார வர்க்கம்தனை அழிப்பது கடினம். பணம், பதவி. இவற்றை வெல்ல மக்கள் மாற வேண்டும்.

படத்தில் இந்தி வசனங்கள் வருகிறது. தூய்மை இந்தியா எனும் முழக்கத்தை கேலி கூத்தாக்க முனைந்து இருக்கிறார்கள். சிறு குழந்தைகள் சம்பந்தபட்ட காட்சிகள் எல்லாம் இப்போதைய குழந்தைகளின் மனநிலையை சொல்கிறதா எனத் தெரியவில்லை. படம் நன்றாக இருக்கிறது என்றார் ஒருவர். சரியான குப்பை என்றார் இன்னொருவர்.

தமிழகத்தில் இப்படிப்பட்ட இடங்கள் உண்டா எனக் கேட்டார் ஒருவர். இருக்கிறதா?

தமிழ் சினிமாவின் சாபக்கேடு பாடல்கள். மனைவி நோக்கி இரஜினி பாடும் ஒரு பாடல்  நன்றாக இருந்தது என்றனர். இசை மிகச் சிறப்பு.

நிறைய காட்சிகள் பேரழகு. இராமன் இராவணன் கதை. இராவண காவியம் எனும் நூல். என்னவோ சொல்ல வந்து என்ன என்னவோ சொல்கிறார்கள். இறுதியில் நல்லவேளை நிலத்தைப் பாதுகாப்பது போல? முடிக்கிறார்கள். வாழ்த்துகள் இயக்குநர். ரஜினி தமிழ் சினிமாவின் பேரரசர் என்னவோ சொல்ல வந்து என்ன என்னவோ சொல்லி முடிக்கிறேன். படைப்பாளியின் பலவீனங்களில் இதுவும் ஒன்று.

மக்கள் நினைத்தால் உலக மாற்றம் நிகழும், எந்த மக்கள் என்பதே கேள்வி.





Friday 14 July 2017

அடியார்க்கெல்லாம் அடியார் - வாழ்த்துரை சு.சந்திரகலா

அடியார்க்கெல்லாம் அடியார் - வாழ்த்துரை 

இன்று அனைத்து நகரங்களும் வளர்ந்து நிற்பதற்கு பின்னால் கிராமங்கள் தான் இருக்கின்றன. மனிதனின் பழக்க வழக்கங்கள் அழியாமல் இருப்பதற்கும் உறவின் உன்னத நிலையையும் கிராமங்கள் தான் புரிய வைக்கின்றன. கிராம மக்களின் வாழ்வியல் முறையையும் சமயம் மனிதனின் வாழ்வோடு எவ்வாறு பயணிக்கிறது என்பதை எடுத்துரைக்கிறது அடியார்க்கெல்லாம் அடியார்.

இக்கதையின் ஆரம்பம் முதல் இறுதிவரை கிராமத்திற்குள் பயணம் செய்த உணர்வை கொடுக்கும்.நகரத்தில் ள்ள இளைய சமுதாயத்தினர்க்கு இந்நாவல் ஒரு வரப்பிரசாதமாக அமையும்

கிராம மக்களின் நடைமுறை வாழ்க்கையில் தொடக்கி உறவுகளின் முக்கியத்துவத்தையும் சமயம் மற்றும் அன்பின் முக்கியத்துவத்தையும் இக்கதையின் மையகருத்தாக எடுத்து உணர்த்தியிருப்பது சிறப்பு.


இக்கதையின் சில இடங்களில் உலகநியதிகளை எடுத்துரைப்பது மிகவும் சிறப்பு.அறிவியல் சார்ந்த விஷயங்களை சொல்லவும் மறக்கவில்லை.அதை வாசகர்களுக்கு புரியும்படி மிக எளியமுறையில் விவரித்துள்ளார் இராதாகிருஷ்ணன்.சார்லஸ் டார்வின் இயற்கை தேர்வு முறை பற்றி கூறியிருப்பது அற்புதம். இதன் மூலம் இவர் மிகச் சிறந்த அறிவியலார் என்பதை நிரூபித்துளார்

கடவுள் சமயம் சார்ந்த விஷயங்களை எழுதுவதற்கு அதை பற்றிய அறிவும் புரிதலும் மிக முக்கியம். ஆனால் இராதாகிருஷ்ணன் அவர்கள் மிக அழகாக தன்னுடைய கருத்துக்களை எடுத்துரைத்திருக்கிறார். ஆங்காங்கே இறைவனை பற்றி மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் அவற்றின் விளக்கங்கள் அவர்களின் சிறப்புகளை சொல்லியிருக்கிறார். மனிதன் வாழ்வதற்கு அன்பு ஒரே அடிப்படை என்பதை மிக அழகாக உணர்த்துகிறார்

அடியார்க்கெல்லாம் அடியார் என்னும் இந்நாவலில் பல அரிய தத்துவங்களையும் வாழ்வியல் முறைகளையும் தன்னுடைய மிகச் சிறப்பான எழுத்துக்களால் புரியவைத்தமைக்கு இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.”யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுகஎன்று தான் ஒவ்வொரு கதை ஆசிரியரும் தம் எழுத்துக்களை புத்தகமாக வெளியிடுகின்றனர். இராதாகிருஷ்ணன் அவர்களும் அந்த எண்ணத்திலேயே தன்னுடைய நாவலை வெளி உலகிற்கு கொண்டுவந்திருக்கிறார் என்பதே என்னுடைய எண்ணம். இது போன்ற பல நாவல்கள் எழுதி எழுத்து துறையில் சாதிக்க வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.

நன்றி  

                                 
அன்புடன்                                                                                                                                                  
சு.சந்திரகலா  

அடியார்க்கெல்லாம் அடியார் - மதிப்புரை ஹனுமலர்

அடியார்க்கெல்லாம் அடியார் - மதிப்புரை 

இந்த நாவலைப் படித்தபோது உணர்ந்த எனது உண்மையான உணர்வுகளை இதில் பதிவு செய்துள்ளேன். முதல் இருபது பக்கங்கள் மிகவும் மெதுவாகவும் அத்தனை சுவாரஸ்யமாகவும் இல்லாமல் இருந்தது. இதற்கு நான் ஒரு இந்துவாக இல்லாமல் இருப்பதும் மற்றும் இந்து கலாச்சாரம் அறியாமல் இருப்பதுவும் காரணம் ஆகும். எனது மனதை இந்த முதல் இருபது பக்கங்கள் அவ்வளவாக ஈர்க்கவில்லை. பக்தி பாடல்கள் எனக்குப் புரியாத காரணத்தினால் அவற்றை வாசிக்காமல் கூட கடந்துவிட்டேன்.

ஈஸ்வரி வந்தபிறகு எனக்கு கதையில் ஈடுபாடு ஏற்பட்டு ஆர்வத்துடன் வாசிக்கத் தொடங்கினேன். காதல் கடவுளை வெல்ல இயலுமா என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் மேலோங்கியது.

காதல் சிவனை வென்றது என சொல்லலாமா என யூகம் செய்கின்றேன். ஈஸ்வரியின் மற்றும் கதிரேசனின் காதல் மிகவும் அழகாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. அவர்களது புரிதலை உணர்ந்து கொள்ள முடிகிறது, அதுவும் குறிப்பாக ஈஸ்வரி. அவள் தன் கணவன் மீது சந்தேகமோ, பொறாமை குணம் கொண்டவள் போல தென்படவே இல்லை. உண்மைக் காதல். காதலே எல்லாம். என்னை மெய்மறக்கச் செய்த பகுதி என குறிப்பிடலாம்.

மதுசூதனன் மற்றும் வைஷ்ணவி இருவருக்கும் இடையில் காதல் முதலில் இருந்தே அவ்வளவாக சொல்லப்படவில்லை. மதுசூதனின் பிடிவாத முரட்டு குணம் தென்படுகிறது. அவனது வாழ்வு சீரழிந்தது போல இன்னும் கதையில் காட்டி இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.

என்னை கவர்ந்த அம்சங்களில் ஒன்று கதிரேசன் வைஷ்ணவியிடம் கொண்டு இருக்கும் ஒரு உன்னத நட்பு. மிகவும் அருமை. அவன் அவளோடு பேசும் போதும் அவளை அவன் நடத்தும் விதமும் அற்புதமான தருணங்கள்.

காதல்தான் எல்லாம். காதல் இருந்தால் வாழ்வு இருக்கும் என முடித்தவிதம் வெகு சிறப்பு.

அன்புடன்
ஹனுமலர்