Tuesday 16 May 2017

ஆட்டுக்கு வளைகாப்பு

ஆடு கர்ப்பமாக இருக்கிறது என அறிந்து பெரு மகிழ்ச்சியுடன் அம்மாவிடம் ஓடிச் சென்றேன்.

''அம்மா அம்மா ஆட்டுக்கு வளைகாப்பு பண்ணுவோம்மா''

அம்மா என்னை முறைத்துப் பார்த்தார்கள்.

''ஏன்டா இப்படி இருக்க ஊருல என்ன பேசுவாங்க தெரியுமா''

''ஆட்டோட கர்ப்பத்துக்கு நம்ம தலைவர் வீட்டு கிடாதான் காரணம் அதையும் கூட்டி வரலாம்மா, தயவு செஞ்சி சரினு சொல்லும்மா''

''என் வயித்துல எப்படிடா நீ வந்து பொறந்த, நீயெல்லாம் ஆட்டுக்குப் பொறக்க வேண்டியவன், போயிரு''

அம்மாவின் கோபம் எனக்கு எரிச்சல் தந்தது. அம்மாவுக்குத் தெரியாமல் வளைகாப்பு விழா ஏற்பாடு பண்ண வேண்டும் என திட்டமிட்டு வரும் ஞாயிறு அன்று விழா நடத்த ஒரு சின்ன அரங்கம் பிடித்தேன். ஆட்டிடம் செய்தி சொன்னேன். ஆடு என்ன சொல்றான் இவன் என்பது போல என்னைப் பார்த்தது.

கால்கள் மட்டுமே உள்ள ஆட்டுக்கு கொலுசு போலத்தான் வளையல் போட இயலும் என அறுபது வளையல்கள் அதன் நான்கு கால்களுக்கு அளவெடுத்து வெளியூரில் உள்ள கடையில் சொன்னேன்.

''யாருக்குவே''
.
''ஆட்டுக்குண்ணே''

''புத்தி கெட்டுப் போச்சாலே, அவனவன் பெத்த புள்ளைக்கே வளைகாப்பு செஞ்சி வைக்கமாட்டீங்கா இவனைப் பாருவே, கலிகாலம். சரி சரி கொடுத்துட்டு போ நாலு நாளுல செஞ்சி வைக்கேன்''

''சனிக்கிழமை வேணும்''

''சரிவே, வெள்ளிக்கிழமை வந்து வாங்கிக்கோ''

பூக்கடையில் சென்று நின்றேன். ஆட்டுக்கு மாலை போட்டால் மாலை தரையில் தட்டக்கூடாது. அந்த ஆடு தன்னை வெட்டப் போகிறார்களோ என எண்ணவும் கூடாது என யோசித்தேன்.

''என்ன தம்பி, என்ன வேணும்''

''சந்தனம், குங்குமம் வேணும்''

''வேற''

''ஆட்டுக்கு ஒரு நல்ல மாலை செஞ்சி தாங்க''

''என்ன கிடா வெட்டா''

''இல்லை ஆட்டுக்கு வளைகாப்பு''

''முன்னமே சொல்ல வேண்டிதான தம்பி, தப்பா பேசிட்டேனே, சரி ஆடு எவ்வளவு உயரம்''

எப்போது ஆட்டின் உயரம் அளந்து இருக்கிறேன். கால் அளவு அளந்த எனக்கு ஆட்டின் உயரம் தெரியவில்லை.

''என்னோட தொடை உயரத்துக்கு இருக்கும்ணே''

தான் உட்கார்ந்த இடத்தில் இருந்து எட்டிப்பார்த்தார்.

''இப்பவே கட்டித்தரவா''

''சனிக்கிழமை வேணும்''

அங்கிருந்து நேரடியாக துணிக்கடைக்குப் போனேன். எனக்குப் பிடித்த நிறத்தில் எடுப்பதா அல்லது ஆட்டுக்குப் பிடித்த நிறத்தில் எடுப்பதா என யோசித்தபடி உள்ளே சென்றேன். சந்திரன் அண்ணனை அங்கே பார்ப்பேன் என நினைக்கவில்லை. அவர் கண்ணில் படாமல் ஒரு ஓரமாக சென்று நின்று கொண்டேன்.

சந்திரன் அண்ணனுக்கு ஒரே ஒரு மகள் தான். அந்தப் பெண் கூட பக்கத்து ஊர்ப் பையனை காதல் பண்ணிக்கொண்டு ஒரு வருடம் முன்னர் ஓடிப்போய்விட்டாள். சில வாரங்கள் கழித்து வந்த அவர்களை இந்த சந்திரன் அண்ணன் வீட்டுக்குள் சேர்க்க மறுத்துவிட்டார். அந்தப் பையன் வீட்டிலும் சேர்த்துக் கொள்ளவில்லை. என் மாமன் பையன் கணேசன் தான் சற்று தொலைவில் உள்ள பூச்சிக்காட்டில் ஒரு வீடு தந்து அடைக்கலம் தந்து இருக்கிறான். அந்த பெண் கூட மாசமாக இருப்பதாக கணேசன் சொன்னான். நான் பூச்சிக்காடு எல்லாம் போனது இல்லை. இந்த வளைகாப்புக்கு அவனை அழைக்கலாம் என்றால் வேலை காரணமாக டில்லி செல்வதாக போன வாரம் சொல்லி இருந்தான்.

ஆடு கருப்பு நிறம். அதற்கு என்ன நிறம் பொருத்தம் என கடையில் சேலை எடுக்க அமர்ந்தேன். துணியாக எடுத்து தைக்கலாம் என்றாலும் சேலையாக எடுத்தால் நல்லது என எண்ணினேன். நீல நிறத்தில் பச்சை நிறம் கலந்தது. சேலையில் இது முன்புறம் வருவது, ஜாக்கெட் பீஸ் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு காட்டிக் கொண்டு இருந்தாள் அந்தப் பெண்.

''சேலை ஆட்டுக்குத்தான்''

''ஆட்டை கல்யாணம் கட்டியிருக்கிகளா''

என்னவொரு சேட்டை அந்தப் பெண்ணுக்கு என நினைத்தேன். அவளது கழுத்தை கவனித்தேன். தாலி ஒன்றும் தட்டுப்படவில்லை. மெல்லிய செயின் ஒன்று போட்டு இருந்தாள்.

''ம்ம்ம் நான் வளர்க்கிற ஆடு அது. கட்டினா உங்களைத்தான் கட்டிக்கிறலாம்னு இருக்கேன்''

''ஆமா காத்துக்கிட்டு இருக்காக''

சிலர் அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்ததால் அந்தப் பெண்ணிடம் மேற்கொண்டு பேச்சு கொடுக்கக்கூடாது என சேலையை வாங்கிக்கொண்டு கிளம்பினேன். அந்தப் பெண்ணின் முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டது. யார் எவர் என பிறகு விசாரிக்க வேண்டும். பக்கத்தில் கிடாவுக்கு ஒரு வேட்டியும் சட்டையும் வாங்கினேன்.

சேலையுடன் தையல்கார கோமதி அக்கா வீட்டுக்கு வந்தேன்.

''ஒரு சத்தியம் பண்ணுக்கா''

''என்னடா வந்ததும் வராததுமா சத்தியம் பண்ண சொல்ற''

''இப்போ ஒரு சேலை கொடுப்பேன் அதை என்னோட ஆட்டுக்கு தைச்சி கொடுக்கணும்''

''நீ லூசுன்றது சரியாத்தான்டா இருக்கு''

பட்டென என்னை லூசு என அந்த அக்கா சொன்னது எனக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது.

''சரிடா சேலையைக் கொடு''

சேலையை வாங்கிப் பார்த்ததும் அக்காவின் முகத்தில் ஏகப்பட்ட ஆச்சரியம்.

''டேய் இது விலை உசந்த பட்டாச்சேடா, கொடுத்து வைச்ச ஆடுதான்''

''ஆட்டோட அளவுக்கு தைச்சிக் கொடுக்கா, யார்கிட்டயும் சொல்லமாட்டேனு சொல்லுக்கா''

''போடா ஆட்டுக்கு சேலை தைக்கிறேன்னு சொன்னா யார் என்கிட்டே தைக்க கொடுக்கமாட்டாங்க. யார்ட்டயும் சொல்லலை. இன்னைக்குப் போய் ஆட்டுக்கு அளவு எடுத்துக்கிறேன்''

''அப்படியே இதை கொஞ்சம் வெட்டிக்கொடுக்கா''

''என்னடா இது''

''கிடாவுக்கு சட்டை வேட்டி''

''சரிடா''

''அளவு''

''போடா நான் பாத்துக்கிறேன்''

குங்குமம், சந்தனம் இவற்றை ஆட்டுத் தொழுவத்தில் ஒளித்து வைத்தேன்.

வளைகாப்பு பத்திரிக்கை அடிக்க வேண்டும் என வெள்ளையாபுரம் சென்றேன்.

''யாருக்கு வளைகாப்பு''

''ஆட்டுக்கு''

''ஆடுனு மட்டும் போட்டு இருக்கு, ஆட்டுக்குப் பேரு இல்லையா''

''ஆட்டுக்கு பேரு ஆடுதான், இது ஆடு, கிடா படம்''

நான் எழுதிக் கொடுத்த தாளினை தலையில் அடித்துக் கொண்டார்.

''எவ்வளவு காப்பி வேணும்''

''முன்னூறு, இல்லையில்லை முன்னூற்றி மூணு''

''இந்த ஞாயிற்றுக்கிழமைனு போட்டு இருக்கு, இப்ப வந்து தர, இன்னைக்கு செவ்வாய்க்கிழமை''

''சும்மாதானே இருக்கீங்க''

''எகத்தாளம்''

''வெள்ளிக்கிழமை காலையில வரேன்''

''சரி அட்வான்ஸ் கொடுத்துட்டுப் போ''

அங்கேயே ஒரு உணவுக்கடையில் வளைகாப்புக்கு வருபவர்களுக்கு புளிசாதம், தயிர்சாதம், லெமன் சாதம், தேங்காய் சாதம், பருப்பு சாதம் என உணவுக்கு ஆர்டர் கொடுத்தேன்.

தலைவரிடம் சென்று விபரத்தைச் சொன்னேன். கலகலவென சிரித்தார்.

''முட்டாப்பய வேலை எல்லாம் நீ செய்ற, சரி வந்து சனிக்கிழமை சாயந்திரம் பத்திட்டுப் போ''

''ஐயா யார்கிட்டயும் வெள்ளிக்கிழமை வரைக்கும் சொல்ல வேணாம்''

''ரகசிய வளைகாப்பா''

''ஊரறிய வளைகாப்பு தான்''

மீண்டும் சிரித்தார்.

எல்லாவற்றையும் ஏற்பாடு செய்தாகிவிட்டது. சேலையை அட்டகாசமாக கோமதி அக்கா தைத்து இருந்தார். ரவிக்கை கூட தைத்து இருந்தார். வேட்டி சட்டை எல்லாம் எப்படி துல்லியமாக வெட்டினாரோ தெரியவில்லை.

வெள்ளையாபுரம் சென்று வெள்ளிக்கிழமை பத்திரிக்கை வாங்கி வந்தேன். அவருக்கே முதல் பத்திரிகை. வளையல்களை வாங்கிக்கொண்டு ஒரு பத்திரிக்கையை அங்கே தந்தேன். நேராக துணிக்கடைக்கு சென்று அந்தப் பெண்ணைத் தேடிப் போய் பத்திரிகை தந்தேன்.

''நிசமாலுமா''

''ம்ம்''

''வராம இருந்துராதீங்க''

''கட்டாயம் வரேன்''

அவளது பெயர் வனிதா. பூச்சிக்காடுதான் சொந்த ஊரு. பெண்ணின் பெற்றோர்கள் விவசாயம் பார்க்கிறார்கள். கணேசனுக்கு தெரிந்த பெண் தான். மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. வீடு வந்து சேர்ந்தேன்.

''அம்மா இன்னைக்கு எல்லோருக்கும் வளைகாப்பு பத்திரிகை தரனும்''

''உனக்கு அறிவே இல்லையா, என்ன காரியம் பண்ணிட்டு வந்து நிக்கிற, உனக்கு புத்தி கெட்டுப் போச்சுன்னு ஊரெல்லாம் பேசப் போறாங்க''

அம்மா பத்ரகாளியானார். நான் அமைதியாக நின்று கொண்டு இருந்தேன். அப்பா சத்தம் கேட்டு வந்தார்.

''உங்க புள்ள என்ன காரியம் பண்ணி இருக்கு பாருங்க''

எனது கையில் இருந்த பத்திரிக்கையைப் பார்த்தார்.

''நல்ல காரியம் பண்ணி இருக்கான். நம்ம பேரைக் கூட போட்டு இருக்கான்''

''உங்க ரெண்டு பேரை என்ன பண்றது''

''நீங்க வர வேண்டாம், நானே பத்திரிகை போய் வைக்கிறேன்''

''அதுதான் முறை''

''என்னங்க முறை கிறைங்கிறீங்க''

''போகட்டும்''

நானாக மட்டும் சென்று ஒவ்வொரு வீடாக பத்திரிக்கை தந்தேன். என்ன நினைத்தார்களோ வரோம்பா என்றார்கள். சந்திரன் அண்ணன் முகத்தில் மட்டும் பெரும் சோகம் நிறைந்து இருந்தது போல எனக்குத் தென்பட்டது.

சனிக்கிழமை அன்று மாலை வாங்கி வந்தேன். அன்று முழுவதும் மிகவும் படபடப்பாக இருந்தது. தலைவர் வீட்டில் சென்று அன்று மாலையில் கிடாவை அழைத்து வந்தேன். நன்றாக ஆடு மற்றும் கிடாவை குளிப்பாட்டினேன். ஆட்டுத் தொழுவத்தில் தான் அன்று உறங்கினேன்.

மறுநாள் காலை ஆட்டிற்கு ரவிக்கை சேலை அணிவித்தேன். கிடாவுக்கு சட்டை வேட்டி அணிவித்தேன். என் கண்ணே பட்டுவிடும் போல் இருந்தது. ஊரெல்லாம் வளைகாப்பு பற்றிய பேச்சாக இருந்தது. வீட்டுக்கு ஒருவர் என பெண்கள் கிளம்பிவிட்டார்கள்.

முதலில் ஆடு, கிடா சற்று மிரண்டது. பின்னர் சகஜ நிலைக்குத் திரும்பியது. ஆடு என்னைப் பார்த்தபடி இருந்தது. அதன் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பார்த்தேன். கிடா தன்னை வீரன் என எண்ணிக்கொள்ளத் தொடங்கியது.

வனிதா தனது பெற்றோர்களுடன் வந்து இருந்தாள். என் அப்பா அம்மாவிடம் அவர்களை அறிமுகப்படுத்தினேன். அவர்கள் பேசிக்கொள்ள தொடங்கினார்கள். வனிதா என்னுடன் வந்தாள்.

''எவ்வளவு கூட்டம்''

''அன்பை போற்றும் மனிதர்கள் இந்த உலகத்தில் நிறைய இருக்காங்க, எதையும் ஒரு தெய்வ நிலையில் பார்க்கும் மனம் அவங்களுக்கு இருக்குங்க''

அம்மாயிதான் முதலில் ஆட்டுக்கு சந்தனம் குங்குமம் வைத்தார். அதன் பின் அப்பத்தா வந்தார். அவர்கள் எல்லாம் என்னைப் பார்த்து பெருமிதம் கொண்டார்கள். அம்மாவும் வந்தார்கள். இப்போது என்னவோ அவர்களிடம் பெரும் மகிழ்ச்சி இருப்பது போல தோனியது. என்னிடம் நேராக வந்தார். வனிதா பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள்.

''யாரும் உனக்கு பொண்ணு கொடுக்கமாட்டாங்கனு நினைச்சேன், என் தப்புதான்''

அம்மா என்னிடம் அப்படி சொல்லிவிட்டு வனிதாவின் நெற்றியில் குங்குமத்தை வைத்துவிட்டுப் போனார்.

வனிதாவின் முகத்தில் வெட்கம் கண்டேன்.

ஆடு, குங்குமம் சந்தனம் என தன்னை நிரப்பிக் கொண்டு இருந்ததை பார்த்தபோது ஒரு பெண் அமர்ந்து இருப்பது போலவே எனக்குத் தென்பட்டது.

எல்லோரும் என்னை வெகுவாகப் பாராட்டினார்கள். வந்தவர்களில் ஒருவர் வருமானத்துக்கு வைக்கிற விழானு நினைச்சேன் ஆனா யார்கிட்டயும் காசு கொண்டு வரக்கூடாதுனு சொல்லிட்டியேப்பா என ஆயிரம் ரூபாய் எடுத்துத் தந்தார். வேண்டாம் என மறுத்தாலும் அவர் கேட்பதாக இல்லை. சாப்பாட்டின் சுவையை விழாவின் சிறப்பை பெருமை பேசாதவர்கள் ஊரில் இல்லை.

அன்று இரவு களத்துமேட்டில் அமர்ந்து இருந்தேன். சந்திரன் என்னைத் தேடி வந்தார். வந்தவர் என் கைகளைப் பிடித்தபடி கலங்கி நின்றார்.

''என் கண்ணைத் தொறந்திட்ட தம்பி''

காதல் செய்து ஓடிப்போன சந்திரன் அண்ணன் மகளின் திருமண வரவேற்பு மற்றும் வளைகாப்பு என அதே அரங்கத்தில் ஒரு சேர பத்து நாட்கள் கழித்து வெகு விமரிசையாக நடந்தது.

முற்றும்

Monday 15 May 2017

திருநெல்வேலி ட்வீட்டப் கவிதை - TnMegaTweetup2017

டிவிட்டரில் எழுதும் தமிழ் கீச்சர்கள் வருடந்தோறும் ஒருமுறை ஓரிடத்தில் ஒன்று கூடி விழா எடுப்பது வழக்கம். இதற்காக கவிதை எழுதி பேரும் புகழும் பெற வேண்டும் என்பது என்னுடைய பேராசைகளில் ஒன்று. நான் டிவிட்டரில் எழுத ஆரம்பித்த ஆண்டு ஆகஸ்ட் 2013. அதற்கு முன்னரும் விழா நடந்து இருக்கிறது. ட்விட்டரில் சேர்ந்த பிறகு எழுதிய முதல் எழுத்து இது  அதற்குப்பிறகு ஒரு கதை எழுதி அப்படியே நிறுத்தி வைத்து இருக்கிறேன். 
எவ்வளவு விளையாட்டுத்தனம் கொண்டவர்கள் இருக்கிறார்கள் எதற்கு இதையெல்லாம் ஒரு பெரிய விசயமாக கருதக்கூடாது என நினைக்க வைத்த கற்றறிந்த கயவர்கள் பற்றி எழுதியது. 



திருப்பூரில் நடந்தபோது நான் எழுதவில்லை 

இம்முறை இத்திருவிழா திருநெல்வேலியில் நடந்தது. நண்பர் பாண்டித்துரை அவர்களிடம் கவிதையை கொடுத்து அனுப்பினேன். கவிஞர் திரவியம் அவர்கள் கவிதையை சிறப்பாக வாசித்தார்கள். அவர்களுக்கு நன்றி. விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பெருமளவுக்கு ஒருங்கிணைப்பைச் சரியாகச் செய்து இருந்தார்கள் என உறுதியாக சொல்லலாம். வாழ்த்துக்கள். 

ஒரு உறுத்தலான விசயம், அதுதான் குறை சொல்லாமல் இருக்க இயலாதே, இந்த அசைபடத்தில் ஒலிக்கும் சில குரல்களை கேளுங்கள் நான் சொல்வது உங்களுக்குத் தெரிய வரும் அப்படி இல்லாதபட்சத்தில் கண்டு கொள்ளாமல் விட்டுவிடவும்.   

எனக்குள் எப்போதுமே இப்படியொரு எண்ணம் எப்போதும் உண்டு அதாவது ஒன்றை உயர்த்திப் பேச மற்றொன்றை தாழ்த்திப் பேச வேண்டிய அவசியமே இல்லை மேலும் ஒன்றை உயர்த்திப் பேசினால் மற்றொன்று தாழ்ந்தது என்ற பொருளும் இல்லை. அதை இந்தக் கவிதையில் தவறவிட்டது போல இருக்கிறது. ஆனால் இதை கவிதை என்று இலக்கியவாதிகள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள், அதுவரைக்கும் பரவாயில்லை. அடுத்தமுறை இத்திருவிழா பாண்டிச்சேரியில். அதற்கும் இப்போதே வரிகள் யோசிக்கத் தொடங்கி  இருக்கிறேன். 


அசைபடத்தில் கவனித்தால் எனது பெயர், நான் வசிக்கும் இடம் எல்லாம் மிகவும் தவறாகவே சொல்லப்பட்டு இருக்கிறது, இது என்னுடைய தவறுதான். இராதாகிருஷ்ணன், லண்டன் என எழுதித் தந்து இருக்க வேண்டும். இப்படித்தான் எதையுமே முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல், யார் எவர் என ஒரு விபரமும் புரியாமல் அந்த உலகம் இயங்கிக் கொண்டு இருக்கும். எவருடன் பழகுகிறோம், எவருடன் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்பது கூட பல நேரங்களில் தெரியாது. நாம் எழுதுவதை எல்லாம் ஏதோ  இந்த உலகத்தையே மாற்றி அமைத்து விடும் வலிமை கொண்ட சொற்றொடர்களாக எண்ணி வாதிட்டு கொண்டு இருப்பார்கள், எரிச்சல் அடைவார்கள், மகிழ்ச்சி அடைவார்கள். இதன் காரணமாக மன உளைச்சல் அடைபவர்களும் உண்டு. எப்படி இருப்பினும் முகம் காட்டாதவர்கள் மத்தியில் முகம் காட்டும் சிலர் கொண்டாடும் திருவிழா இது. எனது கவிதை எப்போதும் தொடரும். 


நெல்லைக்கு ஒரு வாழ்த்து

நெல்லுக்கும் திரு என மரியாதையிட்டு
அன்பின் வேலியால் கட்டப்பட்டு
நெல்லையப்பர் காந்திமதி சுவாசிக்கும்
ஊரின் பெருமை உரக்கச் சொல்வேன்
இரக்கமனம் கொண்ட மக்கள் உள்ள
தாமிரபரணி ஆறு புகழ் கொண்ட
திருநெல்வேலி மிகச் சிறந்த ஊரு

அன்பைத் தொல்லையாய் எவரும்
இங்கே கண்டதுமில்லை
பண்பைத் தொலைத்து எவரும்
இங்கே வாழ்வதும் இல்லை
தமிழ்ச்சொல்லை சொல்லும் விதத்தில்
இத்தரணியில் எவருமே இவர்களுக்கு
ஓர் நிகருமில்லை

நெல்லையின் பெருமையைச் சொல்லவே
எல்லையில்லா புகழ்கொண்ட தமிழ்
நாடினேன்
இல்லையென சொல்லாது நல்விசயங்கள்
செய்யும் இதயம் கனிந்த மக்களை
தன்னுள்ளே கொண்ட நெல்லையில்
குடிபுகுந்தேன்

நெல்வளம் கொண்ட நகரம்
சொல்வளம் கொண்ட நகரம்
தேவாரப் புகழ் பெற்ற திருத்தலம்
எம்சிவன் நடனமிட்ட தாமிர திருச்சபை
இனிப்பின் சுவை அல்வா
நெற்கதிர் அறுக்கும் அரிவாள் – நெல்லை
புகழ் பாடுவேன்

தமிழின் வீரம் சொன்ன நெல்லை
பாளையக்காரர்கள் வலம் வந்த எல்லை
தாமிரம் நல்ல மின்கடத்தி
நாமும் இங்கே கூடினோம் தமிழ் கடத்தி
நமது புலமையைச் சொல்ல
நெல்லைபோல ஒரு இடமும்
இல்லை

எழுத்தால் அறிமுகம் ஆனோம்
கருத்தால் மனதில் கூடினோம்
நம் நட்பை உலகறியச் செய்து
இதை எந்த நாளும்
நல்வழியில் தொடர்வோம்
வளர்வோம் வாழ்வோம்
வாழ்க தமிழ்




Wednesday 12 April 2017

பிரபஞ்சத்தின் நுனி

ஒரு குண்டூசியின் நுனி இருமுனைகளில் இருக்கும். குண்டூசியின் நடுவில் அமர்ந்து கொண்டு இருபக்கமும் பார்த்தால் ஒரு பக்க நுனியானது கூர்மையாகவும் மற்றொரு நுனி குண்டாகவும் இருக்கும்.  இப்போது நம்மால் அந்த குண்டூசியின் இருபக்க நுனியைத் தாண்டி எதுவுமே பார்க்க இயலவில்லை என வைத்துக் கொள்வோம் அதற்காக எதுவுமே இல்லை என முடிவு செய்ய முடியாது. இப்போது எல்லா குண்டூசிகளையும் வட்டமாக சுற்றி வைத்து நடுவில் அமர்ந்து கொள்வோம். எங்கு சுற்றினாலும் ஒரே நுனி மட்டுமே தெரியும். நாம் அமர்ந்து இருப்பது ஒரு பக்க நுனி என்றாலும் குண்டூசியின் தொடக்கம் மத்தியப் பகுதி ஆகிறது. குண்டூசிகளைத் தாண்டி நம்மால் எதுவும் பார்க்க இயலாத போது குண்டூசியின் நுனியை எல்லை எனக் கொள்கிறோம். இப்போது அந்த குண்டூசியின் நுனி நீள்கிறது என கொள்வோம். இவ்வாறாக ஒவ்வொரு குண்டூசியை சென்று அமர்ந்தாலும் மத்திய பகுதியாகவே தோன்றும். இதை அப்படியே பிரபஞ்சத்திற்கு கொண்டு போவோம்.

இந்த பிரபஞ்சத்தில் நாம் தான் மத்திய பகுதியில் இருப்பது போலவும் நாம் பார்க்கும் எல்லா திசைகளிலும் நுனிப்பகுதி ஒரே மாதிரியாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நுனிப்பகுதியைத் தாண்டி என்ன இருக்கிறது என்பது நமது பார்வைக்குட்பட்ட பிரபஞ்சத்தினைத் தாண்டி நம்மால் காண இயல்வது இல்லை என்பதால் கற்பனையில் பயணிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

இந்த பிரபஞ்சம் தொடங்கிய தினம் முதல் வெகுவேகமாக விரிவடைந்து போய்க் கொண்டிருக்கும் பிரபஞ்சத்தில் நடக்கும் நிகழ்வுகள் பல நட்சத்திரங்களை உருவாக்குகிறது. நட்சத்திரங்கள் அல்லாத கிரகங்களும் உண்டாகின்றன. பால்வெளி வீதி போல பல வீதிகள், கருந்துளைகள் என நிறைந்து காணப்படுகின்றன. தாயைத் தேடி ஓடும் கன்றுக்குட்டியைப் போல எதையேனும் தேடித்தான் இந்த பிரபஞ்சத்தின் கேலக்சிகள் ஓடிக்கொண்டு இருக்கின்றனவா என்றால் உண்மையில் என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை. இதில் என்னவெனில் இப்போது நாம் வேறு கேலக்சியில் சென்று அமர்ந்தாலும் அந்த கேலக்சியே மத்தியப்பகுதி என தெரியும். மற்ற கேலக்சிகள் நம்மைவிட்டு ஓடுவது போல் இருக்கும். இப்போது இந்த பிரபஞ்சத்தின் நுனி என சொன்னோமோ அங்கே சென்று அந்த கேலக்சியில் அமர்ந்து கொண்டால் இப்போது கூட அந்த மத்தியப்பகுதி போலவும் மற்ற கேலக்சிகள் விலகிச் செல்வது போலவும் தோன்றும். அப்படியெனில் பிரபஞ்சத்தின் நுனி தான் எது. குண்டூசியின் மறுமுனைக்குச் சென்றால் அங்கிருந்து அது மத்திய பகுதி ஆகும். ஆக குண்டூசியின் நுனி தான் எது.

அதாவது ஒவ்வொரு கேலக்சியில் இருந்தும் மற்ற கேலக்சிகள் விரிவடைந்து செல்கின்றன. இப்போது குண்டூசி எடுத்துக்காட்டு பெரும் குழப்பமாகத் தெரியும். ஆனால் அது அப்படித்தான். ஒவ்வொரு குண்டூசியும் ஒரு கேலக்சி அதற்கு வெளிப்புறமோ உட்புறமோ என இல்லை. எனக்கு வலம் எனில் என் எதிர் நிற்பவருக்கு இடம். அப்படியெனில் பிரபஞ்சத்திற்கு நுனி என்பதே இல்லையா? முடிவே இல்லாத முடிவிலியா என்றெல்லாம் யோசித்தாலும் பிரபஞ்சம் நுனி கொண்டு இருக்கிறது என்றே சொல்கிறார்கள்.

இதைவிட நமது பிரபஞ்சம் போலவே இன்னொரு பிரபஞ்சம் இருக்க வாய்ப்பு உண்டு என்றும் சொல்கிறார்கள். அதில் நம்மைப் போலவே செயல்பட்டு கொண்டு இருக்கும் நபர்கள் உண்டு என கற்பனை பண்ணுகிறார்கள்.

ஏழு பிரபஞ்சங்களில் ஏழு பூமிகள், ஏழு இராதாகிருஷ்ணன்கள் , இப்படி எழுதுவதை போல எழுதிக் கொண்டு இருக்கக்கூடும். இதை இருள் பாய்ச்சல் டார்க் ப்ளோ நிரூபிப்பதாக  சொல்கிறார்கள். அதாவது நமது பிரபஞ்சத்தின் மீது உண்டாகும் ஒரு வெளி ஈர்ப்பு விசை மற்றொரு பிரபஞ்சம் மூலம் உண்டாகி இருக்கலாம் எனும் கருத்து நிலவுகிறது.

எவரேனும் அறிவியல் அறிந்தவர்கள் விளங்க வைக்கட்டும்.