Tuesday 14 February 2017

ஆட்டிற்கும் அன்பிற்கும் நன்றி - முன்னுரை

முன்னுரை 

அசைவம் சாப்பிடுபவர்கள் அன்பு செய்ய தகுதி அற்றவர்கள். 

இதை எழுதியதுதான் எழுதினேன். இது தவறான கருத்து என பல நண்பர்கள், தோழிகள் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். தவறான கருத்தாகவே இருந்துவிட்டுப் போகட்டும் என நான் பேசாமல் இருந்து இருக்கலாம், அன்பு என்ற சொல் இல்லையென்றாலும் அருள் அதாவது கருணை என்ற சொல் வடிவம் கொண்டு இருப்பதால் இது வள்ளுவர் சொன்னது என ஒரு குறளை மனதில் நினைத்துக் குறிப்பிட்டுவிட்டேன்.

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் 
எங்ஙனம் ஆளும் அருள் 

வள்ளுவர் சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாதென்று சொல்லிவிட்டார்கள். அவரவருக்கு எது சௌகரியமோ அதைத்தான் சரியென்று சொல்வார்கள்.

அதைவிட ஒருபடி மேலே போய் இதை தஞ்சாவூர் கல்வெட்டில் எழுதி அதன் அருகில் சென்று அமர்ந்துகொள்ள வேண்டும்  என ஒருவர் சொல்லிவிட்டார். மேலும் ஒருவர் என்னவொரு புத்திகெட்ட வாக்கியம் இது என கேட்டுவிட்டார்.

பல்வேறு கருத்துக்களைக்  கொண்ட மனிதர்கள் எனக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் சிலர் மென்மையானவர்களாகவும், பலர் வன்மையானவர்களும் என இருக்கிறார்கள். என்னால் இந்த வன்மையானவர்களின் சொற்கள் தரத்தை எல்லாம் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடிவது இல்லை.

தனது சிந்தனைக்கு, தனது கருத்துக்கு மாற்று கருத்து சொல்லிவிடக்கூடாது என மிகவும் கடினமான சொற்களை கையாள்கிறார்கள். அவர்களின் தரத்துக்கு நாம் செல்வது என்பது அவசியம் இல்லை. இல்லையனில் அன்பை வலியுறுத்தும் தகுதி நமக்கில்லை என்றாகிறது.

ஆனால் இந்த அசைவம் சாப்பிடுபவர்கள் குறித்து ஏதேனும் கருத்தைச் சொன்னால் உடனே மூளை பலருக்கும் அதீதமாக வேலை செய்து விடுகிறது. இதற்குப் பின்னணி என்னவென்று யோசித்துப் பார்த்தால் சாதீய கருத்து ஒன்று இருக்கிறது என்பது எனது மனதுக்கு தெரியாமல் போய்விட்டது. அன்பு செய், அசைவம் உண்ணாதே என்றால் பார்ப்பனீயத்திற்கு குடை பிடிப்பதாக கருதிக்கொள்ளும் மடத்தனம் எல்லாம் எனக்குப் புரிவதற்கு சில நாட்கள் ஆனது.

அதிலொருவர் சைவம் சாப்பிட்ட ஹிட்லர் ஒரு கொடுங்கோலன், எனவே இந்த வாக்கியம் தவறானது என்கிறார். ஹிட்லரின் ஆணைக்கு கீழ் படிந்த பலரும் மூளை கெட்டுப் போன அசைவக்காரர்கள் என்றெல்லாம் மறுத்துப் பேச எனக்கு விருப்பம் இல்லை. ஹிட்லர் ஆரம்பத்தில் அசைவம் சாப்பிட்டவர் என்பது வேறு வரலாறு.

மனிதர்களை பலியிடுவது எத்தனை கொடுங்குற்றமோ அதைப்போல விலங்குகளை பலியிடுவது கொடுங்குற்றமே 

இப்படியெல்லாம் நான் சொல்வதினால் என்னை விலங்கினப் பிரியன் என்றோ, அசைவம் வெறுக்கும் சைவப் பிரியன், அன்பை வலியுறுத்தும் சமணப் பிரியன் என்றோ நீங்களே கங்கணம் கட்டிக்கொள்ள வேண்டாம்.

அன்பு காட்டுபவர்களை வெறுக்கச் செய்வதே பலரது பணி

இந்த அன்பையும், அன்பின் வழி சொன்ன ஆடும் என்னோடு சேர்ந்து உங்களுடன் பேசிக் கொண்டு இருக்கும்.





Monday 5 December 2016

பெருந்துயரம் - மரணம்

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை 17

காலையில் வேலைக்குக்  கிளம்பிச் செல்லும் முன்னர் எனது வேலை இடத்து மேற்பார்வையாளர்  நோயை எதிர்த்துப் போராடி இன்று அதிகாலை மருத்துவமனையில் அமைதியாக இறந்துவிட்டார் என்று எனது மற்றோரு பேராசிரியரிடம்  இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது.

எனக்கு தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது. எவருக்கு  மரணம் ஏற்படக்கூடாது என்று கடந்த ஒரு வருடமாக  வேண்டிக்கொண்டு இருந்தேனோ அவர் இப்போது மரணம் அடைந்த செய்தி என்னை பெரும் துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ஒரு நல்ல நண்பரை, ஒரு சகோதரரை, ஒரு நல்லாசிரியரை இழந்து விட்டேன்.

நான் அவரை மார்ச் மாதம் 2003ல் சந்தித்தேன். அன்றிலிருந்து இன்று வரை அவரின் மேற்பார்வையில் தான்  வேலை செய்து வந்து இருக்கிறேன். எனது ஒவ்வொரு ஆராய்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தவர். அறிவிற்சிறந்தவர். சிறு வயதிலேயே கல்லூரியில் உயர் பதவி பெற்றவர் என்ற பெருமை உண்டு. அவரது சிந்தனை செயல் எல்லாம் ஆராய்ச்சிதான்.

இத்தாலியில் பிறந்து, ஆஸ்திரேலியாவில் வளர்ந்து இங்கிலாந்தில் ஆராய்ச்சிப் பயணத்தைக் தொடங்கியவர். ஆராய்ச்சி தவிர்த்து  அவ்வப்போது கிரிக்கெட் பற்றி மட்டுமே என்னிடம் பேசுவது உண்டு. சில நாட்கள் முன்னர் கூட இந்தியாவில் செல்லாத பணம் குறித்த அறிவிப்பைப் பற்றிப் பேசிக்கொண்டு இருந்தார். இவரைப் போல ஆராய்ச்சிச் செய்ய வேண்டும் எனும் ஆர்வத்தை எப்போதும் தூண்டிக்கொண்டே இருப்பார்.

பதின்மூன்று வருட காலப் பழக்கம். சென்ற வருடம் இவருக்கு கேன்சர் என்று என்னிடம் சொன்னபோது எனக்கு அழுகை வந்துவிட்டது. ஆனால் இவரது மன தைரியம் தனக்கு நோய் இருந்தது போலவே இவர் காட்டிக்கொள்ள வில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று வார காலத்தில் கூட வேலை குறித்து மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டு இருந்தார்.

எல்லாம் சரியாகி மீண்டும் வேலைக்கு வந்து சேர்ந்தார். திடீரென சில மாதங்கள் முன்னர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஆராய்ச்சியைச் செய்ய உன்னைத் தனியாக விட்டுவிட்டேன் அதற்காக என்னை மன்னித்துக் கொள் என்று கூட மின்னஞ்சல் எழுதிக் கொண்டு இருந்தார். குணமாகி வாருங்கள், நான் சமாளித்துக் கொள்கிறேன் என்று மட்டுமே சொல்லத் தெரிந்தது எனக்கு அன்று.

மீண்டும் சரியாகி வந்தவர் சோர்வாகவே காணப்பட்டார். இரண்டு வாரங்கள் முன்னர் bone marrow transplant பண்ண வேண்டும் அதற்கான நபர் கிடைத்துவிட்டார் என மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றார்.

அவர் மூன்று மாத காலத்திற்கு ஆராய்ச்சிக்குத் தேர்ந்தெடுத்த ஒரு மருத்துவத்துறை மாணவனை கடந்த மூன்று மாதங்களாக நான் மேற்பார்வை செய்ய வேண்டியது இருந்தது. அவன் எழுதும் ரிப்போர்ட் நான் சரி பார்க்கவா என்றபோது நான் சரி பார்த்து அனுப்புகிறேன் எனக் கூறிவிட்டார். அவர் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முதல் நாள் கூட ஆய்வகத்தில் வந்து எனக்கு உதவி செய்து கொண்டு இருந்தார். சீக்கிரம் குணமாகி வாருங்கள் என்று சொன்னபோது கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்னர் வந்து விடுவேன் என்று சொல்லிச் சென்றார்.

அவரின் முழு முயற்சியால் தான் நான் இன்னமும் இந்த ஆராய்ச்சி வேலையைச் செய்து கொண்டு இருக்கிறேன். சில வாரங்களுக்கு முன்னரே அவரது செய்முறை பயிற்சி வகுப்புகள் எல்லாம் என்னைப் பார்த்துக் கொள்ளச் சொன்னார்கள். அப்போது அதற்கான ஏற்பாடுகளை என்னை  பண்ணச் சொல்லி எனது பேராசியர் சொன்னபோது தான் எல்லாம் ஏற்பாடு பண்ணிவிட்டதாக மருத்துவமனையில் இருந்தே மின்னஞ்சல் எழுதினார்.

எல்லா மருத்துவ சிகிச்சை நல்லபடியாக முடிந்து தேறி வந்து கொண்டிருந்தார். இந்த வாரம் வீட்டிற்கு வந்து விடுவார் என்று சொல்லி இருந்தார்கள். அவருக்கு ஒரு முறை மட்டுமே மின்னஞ்சல் அனுப்பி விரைவில் குணமாகி வாருங்கள் என்று சொல்லி இருந்தேன். அவரிடம் அதற்குப் பதில் இல்லை. இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சைக்காகவே சென்று இருக்கிறார் என்று மனமும் நினைத்துக் கொண்டு இருக்கிறது. அவர் இப்போது உயிரோடு இல்லை என்று நினைத்தால் மனதில் பெரும் வலி உண்டாகிறது. அவரது மனம் ஒத்துழைத்த அளவிற்கு அவரது உடல் ஒத்துழைக்க வில்லை.

அவர் உயிருடன் இருந்தபோது மரணத்தை விட நோய் கொடியது என்றே நினைத்தேன். அவர் இறந்த பின்னர் மரணம் நோயை விடக் கொடியது என்றே நினைக்கிறேன்.

மிகவும் ஒரு  நல்ல மனிதரை, நல்ல ஆராய்ச்சியாளரை இத்தனை விரைவாக இழந்து நிற்கிறேன் என்பதே பெருந்துயரமாக இருக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

(தொடரும்)




Monday 7 November 2016

நுனிப்புல் பாகம் 3 10

நுனிப்புல் பாகம் 3 9

இந்த மாதவி குறித்து தனக்குத் தெரிந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் பாரதியை மிகவும் ஆட்டி வைத்தது. இவ்வுலகில் நாளை என்ன நடக்கப்போகிறது என்பதை அறிவியல் உலகம் ஓரளவுக்குத் தெரிந்து வைத்து இருக்கிறது. தனிப்பட்ட மனித வாழ்வில் என்ன நடக்கும் என்பதை ஓரளவு தீர்மானிக்க இயலும் என்பதை எவரும் மறுக்க இயலாது.

ஒரு வாரம் மேல் ஆகியும் மாதவி எவ்வித தொடர்பும் இன்றி இருந்தாள். பாரதி கொஞ்சம் கொஞ்சமாக மாதவி குறித்த நினைவுகளில் இருந்து மீண்டு கொண்டு இருந்தாள். எவரையும் சந்திக்காமல் கல்லூரி, வீடு என ஒரு வாரம் கழிந்து போனதை பாரதி எண்ணிக்கொண்டு இருந்தாள்.

''பாரதி, உன்கிட்ட பேசனும்''

சுந்தரன் தன்னைத் தேடி வருவான் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. பறவைகளையோ, விலங்குகளையோ மரம் தேடிச் செல்வது இல்லை.

''என்னடா பேசனும்?''

''பிரபா என்னை வேணாம்னு சொல்லிட்டுப் போயிட்டா, வேலை கூட மாறிப் போயிட்டா''

''போகாம என்ன செய்வா, திமிர் பிடிச்சி அலைஞ்சா என்ன செய்வா''

''என்னை நீ காயப்படுத்தாத பாரதி''

''ஒன்னு மட்டும் புரிஞ்சிக்கோ. நம்மை பாதுகாத்து நமக்கு அடைக்கலம் தந்து வாழ வைக்கிற மனுசங்களுக்கு எப்பவும் நன்றியுள்ளவங்களா இருக்கனும், அதை நீ முதலில் கத்துக்கோ''

''எனக்காக நீ பிரபா கிட்ட பேச முடியுமா?''

''அவகிட்ட நா எதுக்கு உனக்காக பேசனும்''

''நான் உன்னை லவ் பண்றேன் அப்படினு நினைக்கிறா''

''அதுக்கு நா என்ன பண்ண முடியும், தேவை இல்லாம பிரச்சினை பண்ணாத''

''நீ வந்து நாம லவ் பண்ணலைன்னு சொல்லனும்''

''சொன்னா''

''என்னை அவ ஏத்துப்பா''

''எதுக்கு வேலைய விட்டுப் போனா''

''எல்லாரும் கிண்டல் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க அதான் வேற வேலை கிடைச்சதுனு போயிட்டா''

''இது என் லவ்வரு, பேரழகினு சொல்லிட்டுத் திரிஞ்சிருப்ப''

''ஹெல்ப் பண்ணு பாரதி''

''சரி அவ போன் நம்பர் கொடு''

''இல்லை நேர்ல போய் பேசிட்டு வருவோம்''

''உன்னோட ஒரே ரோதனையாய் போச்சுடா, சரி வா''

ஒன்றிலிருந்து மெதுவாக விலகி பின்னர் சம்பந்தமே இல்லாமல் போக ஒன்று மனக்கசப்பு உண்டாகி இருக்க வேண்டும் அல்லது மறறொன்று கிடைத்திருக்க வேண்டும். இந்த மனிதர்களின் வாழ்வை ஒரு சிறு வட்டத்திற்குள் அடைத்து விடலாம்.

இந்த பிரபஞ்சம் எத்தனை பெரிதாக இருந்தால் என்ன, அந்த பிரபஞ்சத்தில் எத்தனை நாடுகள் இருந்தால் என்ன அந்த நாட்டில் எத்தனை மக்கள் இருந்தால் என்ன. எல்லாம் ஒரு சின்ன வட்டம் தான்.

சுந்தரனுடன் சேர்ந்து பாரதி பிரபா வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்தாள். மாதவியிடம் இருந்து அழைப்பு வந்தது.

''பாரதி, எப்படி இருக்க, சமாதான தூதுவர் ஆகிட்ட போலிருக்கு. ஒரு வாரமா பேச்சையே காணோம்''

''உன்னோட எனக்கு என்ன பேச்சு வேண்டி இருக்கு மாதவி, நான் இந்த ஒரு வாரம் மௌன விரதம்''

''மௌன விரதம் என்னோட மட்டுமா இல்லை ஊரு உலகத்துக்கு கூடவா''

''இப்போ எதுக்கு போன் பண்ணின, அதுவும் சமாதான தூதுவர்னு சொல்ற''

''என்ன பாரதி, கோபமா இருக்க. மௌன விரதம் எவ்வளவு கஷ்டம் தெரியுமா? நான் கூட அடுத்த வருஷம் வைகுண்ட ஏகாதசிக்கு முழு நாளும் மௌன விரதம் இருக்கப்போறேன். அதுக்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கு. அப்போ நீயும் ஊர்லதான் இருப்ப''

''மாதவி இப்படி பொடி வைச்சி பேசறதை நீ நிறுத்து. உனக்கு எல்லாம் தெரியும்னு எனக்கும் தெரியும். இப்போ நான் சுந்தரன் விஷயமா போய்கிட்டு இருக்கேன்''

''காதல் மன்மதன் சுந்தரன் என்ன சொல்றான், பிரபா என்ன கோவிச்சிக்கிட்டுப் போயிட்டாளா? சரி சரி நீ சமாதானம் செஞ்சு வை. நான் உன்னைக் கூப்பிட்டதற்கு முக்கிய காரணம் ஒரு பத்து நாட்கள் சென்னைக்கு வர இருக்கேன். உன் வீட்டுல எனக்குத் தங்க இடம் கிடைக்குமா?''

''என்ன சொல்ற, எப்போ வரப்போற? என்ன விசயம்''

''தங்க இடம் கிடைக்குமா?''

''அதெல்லாம் இடம் இருக்கு, எப்போ வரேன்னு மட்டும் சொல்லு''

''ஒரு முக்கியமான விசயம் பாரதி. கேட்கற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லப் பழகிக்கிட்டோம்னு வைச்சிக்கோ நம்ம அறிவுத்திறன் பாதுகாக்கப்படும், வைச்சிருரேன்''

''ம்ம்''

''போன்ல யாரு மாதவியா?''

''ஆமா, அதைப்பத்தி உனக்கு என்ன?''

''நீ மாதவியை விட அழகா அறிவா இருக்க ஆனா உனக்கு எதுக்கு வாசன் மேல ஆசை''

''சுந்தரா, இனி ஏதாவது பேசின அப்படியே திரும்பிருவேன்''

''மன்னிச்சிரு பாரதி''

பிரபாவின் வீட்டை அடைந்ததும் பிரபா மட்டுமே வீட்டில் இருப்பது தெரிந்தது. பெருங்கூட்டமொன்றில் அவரவருக்கான சுதந்திரம் என்பது தனிமை. இவ்வுலகில் நம்மைப்போலவே நல்லவர்களாக இருப்பார்கள் என எண்ணும்  நபர்கள் ஒருவகை. அனைவருமே மோசமானவர்கள் என எண்ணும்  நபர்கள் இன்னொருவகை.

அதே இவ்வுலகில் உத்தமர்களாக இருப்பவர்கள் மீது கூட அவச்சொல்லை வீச சிலர் தயங்குவதே இல்லை. மேலும் திறமையை வளர்த்துக் கொள்ளாமல் எந்த ஒரு தொழிலும் எவரும் நிலைத்து இருக்க இயலாது என்பதை பலரும் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். இந்த பிரபா அப்படிப்பட்ட ஒருவராக இருக்கலாம்.

''சுந்தரா, உனக்குப் பிடிச்சிருக்கு அங்கிருதுக்காக அவளுக்கும் பிடிக்கனும்னு நினைக்கிற உன் நினைப்புல மண்ணை அள்ளிப்போடனும்''

''பாரதி, பிரபாகிட்ட நல்லா பேசு''

''சுந்தரா, ரகசியமான நட்பு, ரகசியமான உறவு அப்படிங்கிற ரகசியமான எதுவுமே நிம்மதியான மகிழ்ச்சியை யாருக்கும் தராது''

''பிரபா, பிரபா''

வீட்டின் கதவைத் தட்டி பிரபாவை பாரதிதான் அழைத்தாள். வீட்டின் கதவைத் திறந்து கொண்டு பிரபா வந்து நின்றாள்.

''என்ன வேணும்''

''சுந்தரன் விசயமா பேசணும்''

''தனிப்பட்ட விசயத்தில் தலையிட வேண்டியது இல்லை, உள்ளே வாங்க''

சுந்தரன், பாரதி வீட்டிற்குள் நுழைந்தனர். வீடு மிகவும் சுத்தமாக இருந்தது. இருவருக்கும் பழச்சாறு கொண்டு வந்து வைத்தாள். பிரபாவிடம் எல்லா விஷயங்களையும் எடுத்துச் சொன்னாள் பாரதி. அனைத்தையும் கேட்டுவிட்டு பிரபா மிகவும் அமைதியாக எனக்கு இவனைப் பிடிக்கலை என முடித்துக் கொண்டாள்.

சுந்தரன் பாரதியை நோக்கி எல்லாம் உன்னாலதான் என சத்தம் போட்டான். பாரதி அதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. மீண்டும் பிரபாவிடம் நிறைய நேரம் பேசி ஒருவழியாக அவளை சமாதானம் செய்து சம்மதிக்க வைத்துவிட்ட நிம்மதி பாரதிக்கு இருந்தது.

சமாதான தூதுவருக்கு வாழ்த்துக்கள் என மாதவி ஒரு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாள். பாரதிக்கு படுங்கோபம் வந்தது. மாதவி சென்னைக்கு வரட்டும் பார்த்துக் கொள்கிறேன் என முடிவுக்கு வந்தாள்.

(தொடரும்)