Monday 7 November 2016

நுனிப்புல் பாகம் 3 10

நுனிப்புல் பாகம் 3 9

இந்த மாதவி குறித்து தனக்குத் தெரிந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் பாரதியை மிகவும் ஆட்டி வைத்தது. இவ்வுலகில் நாளை என்ன நடக்கப்போகிறது என்பதை அறிவியல் உலகம் ஓரளவுக்குத் தெரிந்து வைத்து இருக்கிறது. தனிப்பட்ட மனித வாழ்வில் என்ன நடக்கும் என்பதை ஓரளவு தீர்மானிக்க இயலும் என்பதை எவரும் மறுக்க இயலாது.

ஒரு வாரம் மேல் ஆகியும் மாதவி எவ்வித தொடர்பும் இன்றி இருந்தாள். பாரதி கொஞ்சம் கொஞ்சமாக மாதவி குறித்த நினைவுகளில் இருந்து மீண்டு கொண்டு இருந்தாள். எவரையும் சந்திக்காமல் கல்லூரி, வீடு என ஒரு வாரம் கழிந்து போனதை பாரதி எண்ணிக்கொண்டு இருந்தாள்.

''பாரதி, உன்கிட்ட பேசனும்''

சுந்தரன் தன்னைத் தேடி வருவான் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. பறவைகளையோ, விலங்குகளையோ மரம் தேடிச் செல்வது இல்லை.

''என்னடா பேசனும்?''

''பிரபா என்னை வேணாம்னு சொல்லிட்டுப் போயிட்டா, வேலை கூட மாறிப் போயிட்டா''

''போகாம என்ன செய்வா, திமிர் பிடிச்சி அலைஞ்சா என்ன செய்வா''

''என்னை நீ காயப்படுத்தாத பாரதி''

''ஒன்னு மட்டும் புரிஞ்சிக்கோ. நம்மை பாதுகாத்து நமக்கு அடைக்கலம் தந்து வாழ வைக்கிற மனுசங்களுக்கு எப்பவும் நன்றியுள்ளவங்களா இருக்கனும், அதை நீ முதலில் கத்துக்கோ''

''எனக்காக நீ பிரபா கிட்ட பேச முடியுமா?''

''அவகிட்ட நா எதுக்கு உனக்காக பேசனும்''

''நான் உன்னை லவ் பண்றேன் அப்படினு நினைக்கிறா''

''அதுக்கு நா என்ன பண்ண முடியும், தேவை இல்லாம பிரச்சினை பண்ணாத''

''நீ வந்து நாம லவ் பண்ணலைன்னு சொல்லனும்''

''சொன்னா''

''என்னை அவ ஏத்துப்பா''

''எதுக்கு வேலைய விட்டுப் போனா''

''எல்லாரும் கிண்டல் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க அதான் வேற வேலை கிடைச்சதுனு போயிட்டா''

''இது என் லவ்வரு, பேரழகினு சொல்லிட்டுத் திரிஞ்சிருப்ப''

''ஹெல்ப் பண்ணு பாரதி''

''சரி அவ போன் நம்பர் கொடு''

''இல்லை நேர்ல போய் பேசிட்டு வருவோம்''

''உன்னோட ஒரே ரோதனையாய் போச்சுடா, சரி வா''

ஒன்றிலிருந்து மெதுவாக விலகி பின்னர் சம்பந்தமே இல்லாமல் போக ஒன்று மனக்கசப்பு உண்டாகி இருக்க வேண்டும் அல்லது மறறொன்று கிடைத்திருக்க வேண்டும். இந்த மனிதர்களின் வாழ்வை ஒரு சிறு வட்டத்திற்குள் அடைத்து விடலாம்.

இந்த பிரபஞ்சம் எத்தனை பெரிதாக இருந்தால் என்ன, அந்த பிரபஞ்சத்தில் எத்தனை நாடுகள் இருந்தால் என்ன அந்த நாட்டில் எத்தனை மக்கள் இருந்தால் என்ன. எல்லாம் ஒரு சின்ன வட்டம் தான்.

சுந்தரனுடன் சேர்ந்து பாரதி பிரபா வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்தாள். மாதவியிடம் இருந்து அழைப்பு வந்தது.

''பாரதி, எப்படி இருக்க, சமாதான தூதுவர் ஆகிட்ட போலிருக்கு. ஒரு வாரமா பேச்சையே காணோம்''

''உன்னோட எனக்கு என்ன பேச்சு வேண்டி இருக்கு மாதவி, நான் இந்த ஒரு வாரம் மௌன விரதம்''

''மௌன விரதம் என்னோட மட்டுமா இல்லை ஊரு உலகத்துக்கு கூடவா''

''இப்போ எதுக்கு போன் பண்ணின, அதுவும் சமாதான தூதுவர்னு சொல்ற''

''என்ன பாரதி, கோபமா இருக்க. மௌன விரதம் எவ்வளவு கஷ்டம் தெரியுமா? நான் கூட அடுத்த வருஷம் வைகுண்ட ஏகாதசிக்கு முழு நாளும் மௌன விரதம் இருக்கப்போறேன். அதுக்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கு. அப்போ நீயும் ஊர்லதான் இருப்ப''

''மாதவி இப்படி பொடி வைச்சி பேசறதை நீ நிறுத்து. உனக்கு எல்லாம் தெரியும்னு எனக்கும் தெரியும். இப்போ நான் சுந்தரன் விஷயமா போய்கிட்டு இருக்கேன்''

''காதல் மன்மதன் சுந்தரன் என்ன சொல்றான், பிரபா என்ன கோவிச்சிக்கிட்டுப் போயிட்டாளா? சரி சரி நீ சமாதானம் செஞ்சு வை. நான் உன்னைக் கூப்பிட்டதற்கு முக்கிய காரணம் ஒரு பத்து நாட்கள் சென்னைக்கு வர இருக்கேன். உன் வீட்டுல எனக்குத் தங்க இடம் கிடைக்குமா?''

''என்ன சொல்ற, எப்போ வரப்போற? என்ன விசயம்''

''தங்க இடம் கிடைக்குமா?''

''அதெல்லாம் இடம் இருக்கு, எப்போ வரேன்னு மட்டும் சொல்லு''

''ஒரு முக்கியமான விசயம் பாரதி. கேட்கற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லப் பழகிக்கிட்டோம்னு வைச்சிக்கோ நம்ம அறிவுத்திறன் பாதுகாக்கப்படும், வைச்சிருரேன்''

''ம்ம்''

''போன்ல யாரு மாதவியா?''

''ஆமா, அதைப்பத்தி உனக்கு என்ன?''

''நீ மாதவியை விட அழகா அறிவா இருக்க ஆனா உனக்கு எதுக்கு வாசன் மேல ஆசை''

''சுந்தரா, இனி ஏதாவது பேசின அப்படியே திரும்பிருவேன்''

''மன்னிச்சிரு பாரதி''

பிரபாவின் வீட்டை அடைந்ததும் பிரபா மட்டுமே வீட்டில் இருப்பது தெரிந்தது. பெருங்கூட்டமொன்றில் அவரவருக்கான சுதந்திரம் என்பது தனிமை. இவ்வுலகில் நம்மைப்போலவே நல்லவர்களாக இருப்பார்கள் என எண்ணும்  நபர்கள் ஒருவகை. அனைவருமே மோசமானவர்கள் என எண்ணும்  நபர்கள் இன்னொருவகை.

அதே இவ்வுலகில் உத்தமர்களாக இருப்பவர்கள் மீது கூட அவச்சொல்லை வீச சிலர் தயங்குவதே இல்லை. மேலும் திறமையை வளர்த்துக் கொள்ளாமல் எந்த ஒரு தொழிலும் எவரும் நிலைத்து இருக்க இயலாது என்பதை பலரும் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். இந்த பிரபா அப்படிப்பட்ட ஒருவராக இருக்கலாம்.

''சுந்தரா, உனக்குப் பிடிச்சிருக்கு அங்கிருதுக்காக அவளுக்கும் பிடிக்கனும்னு நினைக்கிற உன் நினைப்புல மண்ணை அள்ளிப்போடனும்''

''பாரதி, பிரபாகிட்ட நல்லா பேசு''

''சுந்தரா, ரகசியமான நட்பு, ரகசியமான உறவு அப்படிங்கிற ரகசியமான எதுவுமே நிம்மதியான மகிழ்ச்சியை யாருக்கும் தராது''

''பிரபா, பிரபா''

வீட்டின் கதவைத் தட்டி பிரபாவை பாரதிதான் அழைத்தாள். வீட்டின் கதவைத் திறந்து கொண்டு பிரபா வந்து நின்றாள்.

''என்ன வேணும்''

''சுந்தரன் விசயமா பேசணும்''

''தனிப்பட்ட விசயத்தில் தலையிட வேண்டியது இல்லை, உள்ளே வாங்க''

சுந்தரன், பாரதி வீட்டிற்குள் நுழைந்தனர். வீடு மிகவும் சுத்தமாக இருந்தது. இருவருக்கும் பழச்சாறு கொண்டு வந்து வைத்தாள். பிரபாவிடம் எல்லா விஷயங்களையும் எடுத்துச் சொன்னாள் பாரதி. அனைத்தையும் கேட்டுவிட்டு பிரபா மிகவும் அமைதியாக எனக்கு இவனைப் பிடிக்கலை என முடித்துக் கொண்டாள்.

சுந்தரன் பாரதியை நோக்கி எல்லாம் உன்னாலதான் என சத்தம் போட்டான். பாரதி அதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. மீண்டும் பிரபாவிடம் நிறைய நேரம் பேசி ஒருவழியாக அவளை சமாதானம் செய்து சம்மதிக்க வைத்துவிட்ட நிம்மதி பாரதிக்கு இருந்தது.

சமாதான தூதுவருக்கு வாழ்த்துக்கள் என மாதவி ஒரு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாள். பாரதிக்கு படுங்கோபம் வந்தது. மாதவி சென்னைக்கு வரட்டும் பார்த்துக் கொள்கிறேன் என முடிவுக்கு வந்தாள்.

(தொடரும்)


Monday 17 October 2016

செவ்வாய் கிரகத்தில் நான்

part 2

நான் செவ்வாய் கிரகத்திற்கு சென்றது போன்ற கனவு கண்டேன். ராக்கெட்டில் சென்று செவ்வாய் கிரகத்தில் இறங்கிய இடத்தில் சிறிது நீர். ஒரு குழந்தை போன்ற மனநிலையில் மனம் சந்தோசமானது. என்னுடன் எனது நண்பர்கள் இருவர் வந்து இருந்தனர். பாலைவனம் போன்ற செம்மண் பரப்பு எங்கும் தெரிய ஒரு பக்கத்தில் பாதுகாக்கப்பட்ட இடம் என பலகை தெரிகிறது. இதோ எங்கள் தமிழ் தமிழ் என ராக்கெட்டில் வந்த ஆங்கிலேயர் ஒருவரிடம் சொல்கிறேன். அவரும் ஆமோதிக்கிறார்.

பாதுகாக்கப்பட்ட இடம்தனில் உள்ளே நுழைய தாவரங்கள் பயிரிடப்பட்டு இருப்பது காண்கிறேன். ஆச்சரியமாக இருக்கிறது. அப்படியே நடந்தால் ஊர் வருகிறது. அங்கே மக்கள் தமிழ் நிறத்தில் தென்படுகிறார்கள். நீச்சல் குளத்தில் பலர் மகிழ்ச்சியோடு வரிசையாக அமர்ந்து குளிக்கிறார்கள். அதைத்தாண்டிச் செல்ல ஒரு சிலரிடம் பேச்சு கொடுக்கிறேன். அந்த வழியில் பழங்கால தமிழ் எழுத்து கல்வெட்டு தென்படுகிறது.

இப்படித்தான் என நினைக்கையில் சிறிது நேரத்தில் போஸ்டர் தெரிகிறது. பிரின்டர் இருக்கும் என நினைக்கிறேன். ஒருவர் எனக்கு எதுவும் தெரியாது என்கிறார். இன்னொருவர் இந்தி பேச எங்களுக்குப் புரியாது என சொல்ல பங்களா மொழி பேசி தமிழில் சொல்கிறார். அப்போது எனது மனைவி உடன் இருக்கிறார். பூமியின் வேறு ஒரு பகுதிக்கு வந்துவிட்டோமோ என சந்தேகம் ஏற்படுகிறது.

அங்கிருந்து நடக்க சுடிதார் அணிந்த ஒரு பெண் தரையில் அமர்ந்து போன் பேசிக்கொண்டு இருக்கிறார். சிறிது தூரம் நடந்து எனது மொபைல் எடுத்துப் பார்க்கிறேன். கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கடந்ததை காட்டுகிறது. செவ்வாய் கிரகம் வர மூன்று வருடங்கள் ஆகிவிட்டதே, மூன்று வருடங்கள் இழந்து விட்டோமே திரும்பிப் போனால் மூன்று வருடங்கள் கிடைக்குமா என கணக்கிட்டு மேலும் மூன்று வருடம் ஆகுமே என நினைக்கிறேன்.

இதே போன்று இங்கு வேறு இடங்கள் உண்டா? கல்லூரி எங்கே? தொழிற்சாலைகள் எங்கே என்ற என் கேள்விகள் மனதோடு இருக்கிறது. அங்கு எவரிடமும் கேட்கவில்லை. மொபைலில் orbit என பூமி போன்ற கிரகங்கள் காட்டுகிறது. படம் எடுத்து அனுப்ப நினைக்கிறேன். ஆனால் அதற்கான signal இல்லை என மனம் சொல்கிறது.

இந்த மனிதர்கள் நம்மை தொடர்பு கொள்ளாமல் இருக்க வாய்ப்பு உண்டு என எண்ணம் உண்டாகிறது. அந்த மனிதர் பேசிய பேச்சில் அரசர் எங்கோ சென்றுவிட்டார் என்பது போன்ற வார்த்தை முழு விசயம் தெரியவில்லை. காட்சிகளின் ஊடே துப்பாக்கி ஏந்திய போலிஸ் எங்களை எவர் எனக்கேட்டுக்கொண்டே ராக்கெட் அருகில் ஆங்கிலத்தில் பேசி வந்து புன்னகையுடன் சென்ற காட்சி.

நான் எங்கு சென்றாலும் உடன் என் மனைவி இருப்பார் எனும் காட்சி, தமிழ் மீதான என் நேசம், மொபைல் போன் தாவரங்கள் என இந்த செவ்வாய் கிரக பயணம் உண்மையிலேயே நான் இதுவரை கண்ட அற்புதமான கனவுகளில் ஒன்று. இந்த கனவு சற்று தொடர்ந்து இருக்கலாம்.

(அடுத்து ஒரு கனவுடன் விரைவில்)

Wednesday 12 October 2016

தேடலும் தரிசனமும் - அகநாழிகை பொன். வாசுதேவன்

மக்கள் பண்பாட்டின் எல்லா நிலைகளிலும் மரபுகள் இயங்குகின்றன. பண்பாட்டை எடுத்துரைக்கும் பல கூறுகளில் மரபும் ஒரு கூறாகும். 

பழக்க வழக்கம் என்பது தனி மனித செயல் மட்டுமன்று. அது மரபணுக்களின் வழியாக நம் முன்னோர்களின் எச்சமாக நமக்குள் வந்து கொண்டிருப்பது. மனித இனம் எத்தனையோ அறிவியல் வளர்ச்சிகளைக் கண்டு வருகிறது. அடிப்படை மனித கூறுகளான குணங்கள் குறைந்து கொண்டே வந்தாலும் அது முற்றிலுமாக தீர்ந்து போய்விடவில்லை. மனித அடிப்படை நற்குணங்களைத் தக்க வைத்துக் கொள்வதில் மரபணுக்களின் பங்கு அதிகம்.

 'மாறா மரபு' எந்த இந்த நாவலில் மரபு என்பதைத் திருத்தியும், மாற்றியும் அமைப்பதன் வாயிலாக வளர்ச்சியை, மாற்றத்தை, முன்னேற்றத்தை எய்தலாம் என்ற நம்பிக்கையோடு மருத்துவத்தின் வாயிலாக அதைச் சாதித்துவிட முடியும் என்று நம்புகிற ஆய்வின் மர்ம முடிச்சுகளையொட்டி கதைக் கரு அமைந்துள்ளது.

 'கத்தி மேல் நடப்பது போன்ற சிக்கலான போக்குடைய இந்தக் கதைக் கருவை மிகவும் லாவகமாகவும், சுவாரசியத்துடன் அளித்துள்ளார் எழுத்தாளர் வெ. இராதாகிருஷ்ணன். அவர் ஒரு அறிவியலாளராகவும், சிந்தனையாளராகவும் இருப்பதால் இந்தத் திறன் அவருக்கு இயல்பாகவே கைகூடியிருக்கிறது. 

பொதுவாகவே, இராதாகிருஷ்ணன் எடுத்துக்கொள்கிற எல்லாக் கதைகளின் கருவும், அறிவியலையும், வாழ்வியலையும் இணைத்து அதிலிருந்து எழுகிற கேள்விகளுக்கு விடை காண முற்படுபவையாக இருந்திருக்கின்றன. ஏன், எதற்கு, எப்படி என்ற அடிப்படை மனித மனக் கேள்விகளுக்கான விடை தேடல்களே இராதாகிருஷ்ணனின் எழுத்துகளின் உள்ளாழ்ந்த பொருள். இந்தத் தத்துவத் தேடல்களினூடாக அவர் கண்டடைகின்ற தரிசனங்களை, உள்ளொளியை நாமும் அவரது படைப்புகளை வாசிப்பதன் வாயிலாக உணர்ந்தறிய முடிகிறது. 

தனித்துவமான கதை சொல்லல் பாணி, எழுத எடுத்துக்கொள்கிற பேசு பொருள், உள்ளடக்கம், எளிமையான நடை என எல்லாவிதத்திலும் நம்மை ஈர்க்கின்றன. வெ.இராதாகிருஷ்ணனின் படைப்புகளைத் தொடர்ந்து பதிப்பிக்கிற வாய்ப்பு கிடைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழ் எழுத்துலகில் அவர் தொடர்ந்து எழுதித் தடம் பதிக்க எனது நல்வாழ்த்துகள்.

மிக்க அன்புடன்

பொன்.வாசுதேவன்
அகநாழிகை பதிப்பகம்
pon.vasudevan@gmail.com

------------------

தங்களின் நல்வாழ்த்துகளுக்கு எனது பணிவான வணக்கங்களும், நன்றிகளும். நிறைய வாசிப்பு அனுபவமும், எழுத்தாளராக, தினமலரில் உதவி ஆசிரியராக, சட்ட வல்லுநராக இருக்கும் தங்களின் மூலம் எனது எழுத்துக்கள் நூல் வடிவம் பெறுவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.