Wednesday 3 February 2016

தட்சாயினியும் கல்யாண உறவும் - 2

''என்ன தம்பி சௌக்கியமா இன்னைக்கு காய்கறி பக்கம் காணோமே'' அப்பா அருணைத்தான் விசாரித்தார் 

''வாழை இலை போட வந்தேன். நாளனைக்குத்தான் பறிக்கனும்யா''

''தம்பியைத் தெரியுதாம்மா உன்னோட படிச்ச தம்பிதான் அப்பவே எனக்கு நல்ல பழக்கம்''

''ம்ம் தெரியும்ப்பா''

அருண் அப்பாவோடு நல்ல பழக்கம் என்பது இதுவரை எனக்குத் தெரியாது. எனது காதலுக்கு இதுவரை பதில் சொல்லாமல் இருப்பது இதுவும் ஒரு காரணமோ என நான்அந்த கணத்தில் எண்ணினேன். அருண் என்னைப் பார்க்க மறுத்தான். பொங்கல் நன்றாகத்தான் இருந்தது. சாப்பிடத்தான் பிடிக்கவில்லை. 

ரொம்ப நல்ல தம்பி என அருண் குறித்து அப்பா சொன்னார். அருணின் அப்பா அம்மா, விவசாயம், அவனது தங்கை என பேசினார். இவ்வளவு எல்லாம் என்னோடு அப்பா பேசியது இல்லை.

அம்மாவிடம் விபரங்கள் சொன்னேன். உங்கப்பாவுக்கு வேறு வேலை இல்லை சும்மா ஏதாச்சும் பேசுவார் என்றார் அம்மா. இது எனக்குப் புரியவில்லை. அருணின் ஊருக்குச் செல்லலாம் என தைரியம் வளர்த்துக்கொண்டேன். அடுத்தநாள் அருணின் ஊருக்குள் சென்றேன் மனம் படபடத்தது. யாரைப் பார்க்கனும் எனக் கேட்டார். ஒருவர். என்னோட தோழி ஒருத்தி என பொய் சொன்னேன் தப்பு செய்வதாக நாம் நினைக்கும்போது பொய் சொல்ல ஆரம்பிக்கிறோம் அதான்மா எந்த புள்ளை அது என்றார்.

என்னோட படிச்ச பொண்ணு என சொன்னபோது எனது கண்ணில் அருண் தென்பட்டான் ஒரு கைதிக்கு கிடைத்த விடுதலை போல உணர்ந்தேன் அதோ அங்கே இருக்காங்க என நான்அவரிடம் சொல்லிவிட்டு அருணை நோக்கி நடந்தேன். வீதியில் வேறு எவரும் இல்லை எனினும் பலர் என்னைப் பார்ப்பது போல ஒரு பிரமை உண்டாகியது. தட்சா என அழைத்த அருண் குரல் எனக்கு தந்த மகிழ்ச்சி நிறைய. நல்லா இருக்கியா என்ன இந்தப்பக்கம் என்றான். உன்னைப் பார்க்கவே வந்தேன் என்றதும் சிரித்தான்.

வா வீட்டுக்குப் போகலாம் என அழைத்துச் சென்றான். நான் மதிய வேளையில் சென்று இருந்தேன். வெயில் ஒன்றும் அவ்வளவாக இல்லை. ஊர்ல யாரையும் காணல என சொன்னபோது எல்லாம் வெளியூர் வேலை என்றான். 

அருண் என் காதலுக்கு நீ பதில் சொல்லலையே என்றேன் புன்னகைத்தவன் வீடு வந்துருச்சு என்றான். எங்க வீடு போன்று இருந்தது. 

யாருப்பா இது என்றது அருணின் அம்மாவாக இருக்கும் என நினைத்தேன். மரக்குளம் முத்தையா ஐயா பொண்ணு. முத்தையா மகளா வாம்மா என்று சொன்னபோது ஏதோ நெருங்கிய உறவு போல உணர்ந்தேன் உட்கார வைக்கப்பட்டதும் மோர் கொண்டு வந்து தந்தார். என்ன பண்றம்மா என எல்லாம் விசாரித்தார். உங்க அப்பா வியாபார சம்பந்தமா இங்க வருவாரு போவாரு. அப்பத்தான் இவனோட அப்பாவுக்கு பழக்கம் என்றார். எங்க மூலமாத்தான் எதுவும் இந்த ஊரில செய்வார் என்றதும் சரியெனக் கேட்டுக்கொண்டேன். என்ன விசயமா வந்தம்மா என்றதும் அருணின் மீதான எனது காதலை சொல்ல நினைத்தேன். ஊர் சுத்திப்பார்க்க வந்ததாக பொய் சொன்னேன். இங்க என்ன கிடக்கு, ஊரே காலியாகிரும்போல. இவன் ஒரு வேலைக்குப் போனா எல்லாம் வித்துட்டு கூடப் போயிரலாம்னு இருக்கோம் என்றதும் எனக்கு திக்கென்றது. சிறிது நேரம் பேசிவிட்டு வீடு வந்து சேர்ந்தேன் மொபைல் எண் கூட அருண் என்னிடம் தரவில்லை, நானாகத்தான் கேட்டேன்.

என் அம்மாவிடம் எனக்குத் திருமணம் முடிந்த பின்னர் ஊரை விட்டுச் செல்வீர்களாக எனக்கேட்டபோது இதே மண்ணுலதான் எங்க கட்டை வேகும் என்றார்கள். அருண் வீட்டிற்கு சென்று வந்ததை மறைத்து வைத்தேன் விற்பனை இடத்துக்கு அப்பாவுடன் சில சனிக்கிழமைகள் சென்று வர ஆரம்பித்தேன் எதுக்கும்மா சிரமம் என்றதால் செல்வதை நிறுத்திவிட்டேன். 

வேலை சம்பந்தமாக ஒரு நிறுவனத்திற்குச் செல்ல வேண்டி இருந்தது. அங்குதான் என் சகோதரனை சந்தித்தேன். என்னைப் பார்த்தவன் ஏதும் சொல்லாமல் போனான். அண்ணா என அழைத்து அவன் முன் நின்றதும் யார் நீ என்றான் நான் தட்சாயினி உன்னோட கூடப்பிறந்த தங்கை என்றேன் அது உறவு முறிச்சி வருசமாச்சி என்றான். அம்மாவை அண்ணி அடிச்சதால என்னால பொறுத்துக்க முடியலை என்றதும் போயிரு என விறுவிறுவென நடந்து போய்விட்டான்.

தாயை விட மனைவி ஆண்களுக்கு மிகவும் முக்கியமாகப்போய்விடுகிறது. அன்று நடந்த நிகழ்வை இன்று நினைத்தாலும் உடல் உள்ளம் கொந்தளிக்கிறது. நான் செய்தது சரிதான் என இதுவரை எண்ணி இருக்கிறேன். அன்பில்லாத உறவு அவசியமற்றது. போலித்தனமான வாழ்வில் என்ன இருக்கப்போகிறது. கிளம்பி வரும் போது எதிரே வந்தான். நான் அவனை காணாத மாதிரி கடந்தேன். தட்சா நில்லு. நின்றேன். என்னைப். பார்த்ததை அப்பா அம்மாகிட்ட சொல்லாத. அம்மா அப்பா என்றில்லாமல் அப்பா அம்மாவாம்.

முகத்தைப் பார்க்காமல் தலையாட்டிவிட்டு நடந்தேன். எத்தனை பாசமாக இருந்தான். தட்சா உனக்குத்தான் எல்லாம் முதலில் என அழ வைக்காமல் இருந்த அந்த அண்ணனா இவன். திரும்பிப் பார்த்தேன் அதே இடத்தில் நின்று கொண்டு இருந்தான். அப்போதுதான் ஈரம் என் கண்களை நனைத்தது. வேகமாக நடந்து வெளியேறினேன். ந்த உலகம் எனக்கு இன்னமும் புரிந்தபாடில்லை. புரியவும் புரியாது. அன்று அம்மாவிடம் அண்ணன் வந்தா ஏத்துப்பியா என்றேன். நான் எங்க அவனை ஒதுக்கி வைச்சேன். அவன்தான் நம்மளை ஒதுக்கி வைச்சி பாசத்தில் விளையாடறான், நீ அன்னைக்கு பொறுமையா இருந்து இருக்கனும்மா ஆனா நீ பண்ணினது சரிதான் போறான் விடு. எங்கேயாச்சிம் நல்லா இருக்கட்டும். எங்களுக்கு கொள்ளி போட உன் மகன் வருவான் என்றதும் கல்யாணம் பண்ண வேண்டியதின் அவசியம் சற்று புரிந்தது.

வேலை இடத்தில் நன்மதிப்பை பெற ஆரம்பித்து இருந்தேன். இந்த நேரத்தை எவராலும் பிடித்து வைக்க முடிவதில்லை. அருண் வீட்டிற்கு சென்றது அண்ணனைப் பார்த்தது எல்லாம் ஒரு கனவு போல இருந்தது. அப்பாதான் அருணுக்கு வேலை கிடைத்த விசயத்தை என்னிடம் சொன்னார். அப்பாவுக்கு அருணை மிகவும் பிடித்து இருக்க வேண்டும். அவர்கள் ஊரைவிட்டுப் போயிருப்பார்களோ என நினைத்தேன் அருணுக்கு எந்த ஊரில் வேலை என அப்பாவிடமும் கேட்கவில்லை.

இந்த உலகில் ஒன்று மட்டும் நிச்சயம். இதுதான் சரி என எதையும் எவராலும் நியாயப்படுத்திப் பேசிவிட முடியும் வலி என்பது நேரடியாக பாதிக்கப்பட்டவர்க்குத்தான் எனக்கு கதைகள் படிக்கப் பிடிக்கும். ஓவியம் வரைவது, பாடுவது, ஆடுவது என ஓரளவுக்குத் தெரியும் கற்றுக்கொள்ள ஊக்கம் தந்தது பக்கத்து ஊரில் பாடல் சொல்லி தந்த ஆசிரியை கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்தார்கள் பிறரிடம் எதுக்கு கல்யாணம் என விட்டேத்தியாகப் பேசுவார்கள் என்னிடம் அப்படி சொன்னது இல்லை. ஒருவேளை நானும் அவரைப்போல கல்யாணம் பண்ணாமல் வாழ்வேனோ எனும் அச்சம் உள்ளூர அருண் தந்தது உண்டு. அருண் தான் அம்மையப்பனைத் தாண்டிய உலகம் என எண்ணி இருக்கிறேன் பாடல் ஆசிரியையிடம் கேட்கலாம் என நினைத்தேன் என்ன வாழ்வு இது அன்று மதியம் அவர்கள் இறந்து போனதாக தகவல் ஊருக்குள் வந்தது.

அதிர்ச்சியும் பயமும் ஒட்டிக்கொண்டது. அவருக்கு வயது 52 தான். அம்மா அப்பா நான் அங்கு இரவு சென்றோம். என்னால் அழுகையை கட்டுப்படுத்த இயலவில்லை. உறவுகள் என அவர் சொல்லித்தந்த பிள்ளைகள் குடும்பம் தான் வந்து இருந்தனர். மூச்சடைத்து இருந்ததாக சொன்னார்கள். எவரோடும் அன்போடு இருக்க பழகிட வேண்டும் என அவர் சொன்னதுதான். ஊர்ப்பெரியவர் ஆசிரியை எழுதித்தந்த விபரங்கள் வாசித்தார் தனது சொத்து பணம் வீடு இல்லாத மக்களுக்கு சேரட்டும் என அவர் வாசித்தபோது எனக்கு அழுகை அதிகமானது. உறவுகளை நேசியுங்கள் இது தவிர வேறு எதுவும் இல்லை உலகில் என்றே முடித்து இருந்தார்கள் எனக்கு அப்படி ல்யாணம் எதற்கு எனப் பேசிய ஆசிரியையா என ஆச்சரியம். ஒருவேளை கல்யாணம் உறவுகளை சிதைக்கும் என நினைத்தாரோ. நாட்கள் கழிந்தது அவரது மரணம் மனதில் நிழலாடுகிறது.

வெள்ளி அன்று அண்ணனின் நிறுவனம் சென்றேன் அண்ணா நான் அண்ணியைப் பார்க்க வேண்டும் என்றேன் தட்சா எதுவும் வேணாம் போ என விரட்டினான். அண்ணனின் வீட்டு முகவரி ஒருவரிடம் வாங்கிக்கொண்டு அங்கு சென்றேன். கதவைத் திறந்த அண்ணியிடம் என்னை மன்னிச்சிருங்க அண்ணி என்றேன் வா தட்சா என உள்ளே அழைத்தார். எனது தயக்கம் எப்படியானது என நான் சொல்ல இயலாது. மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றபோதும் மன்னிப்பு கேட்பது என்னஒரு செயல். உள்ளே சென்று அமர்ந்தேன். தண்ணீர் கொண்டு வந்தார். குடித்தேன். அண்ணி குழந்தை எங்கே என்றேன். இன்னும் பாக்கியம் இல்லை தட்சா என்றபோது அவருக்குள் சோகம் இருந்தது அத்தையை நான் அவமதிச்சி இருக்கக்கூடாது அந்த பாவம்தானோ என்னவோ நீ எப்படி இருக்க என் அம்மா கூட நீ பண்ணினது சரினு சொன்னாங்க அண்ணி, பெத்த அம்மா அதுவும் எப்படி எல்லாம் வளர்த்தாங்க என சொன்னபோது எனக்கு கண்ணீர் எட்டிப்பார்த்தது வீட்டுக்கு வாங்க அண்ணி என அழைத்தேன். உன் அண்ணன் நீ வந்தது பார்த்தது எல்லாம் சொன்னார். அன்னைக்கு நிறைய அழுதார். மனசில பூட்டி வைச்சி இருந்துருக்கார். வரோம் என அண்ணி சொன்னபோது சந்தோசப்பட்டேன் எதையும் மனசில வைச்சிக்க வேணாம் என்று சொல்லிவிட்டு நடந்தேன்.

இந்த பிரபஞ்சம் அழகிய மனிதர்களால் மட்டுமே என்றும் அலங்கரிக்கப்பட்ட ஒன்றாக இருந்தால் மட்டும் எப்படி இருக்கும். அண்ணியின் கோபம் இரண்டு விசயங்களால் மாறி இருக்கிறது ஒன்று பிள்ளைப்பேறு மற்றொன்று அண்ணனுடைய என் மீதான பாசம் அண்ணி அம்மாவை அடித்த போது அம்மா என்னை மன்னிச்சிரு தாயி என்றுதான் சொன்னார் நான் தான் அண்ணியை அறைக்குள் அழைத்துச் சென்று என் ஆதங்கம் தீரும்வரை அடித்து துவைத்தேன். உலகில் அவமானங்களோடு வாழப் பழகாதீர்கள் அன்புக்காக விட்டுத்தாருங்கள் தவறில்லை. என் அம்மா பொறுமையின் சிகரம். பொறுமைதான் அன்பின் வலிமை. அன்பு நிறைந்த மனிதர்கள் உலகில் காயப்படுத்தப்படுகிறார்கள். அன்பை அவமதிக்கும் போது நிராகரிக்கும் போது உள்ளூர மனம் குமுறும். அருண் விசயத்தில் நான் வமதிக்கப்பட்டதாக நினைக்கவில்லை. அனுமதிக்காக காத்திருந்தேன் ஆறு வருடங்கள் ஆகிவிட்டது. வாரம் சில ஆகியும் அண்ணன் அண்ணி வரவில்லை.

அம்மாவிடம் சொன்னபோது விரிசல் விழுந்தது விழுந்ததுதான் போல என்றார் அண்ணனைப் பார்க்க வரமறுத்தார் அருணை ஒருமுறை சந்தித்தேன் அண்ணி விசயத்தை சொன்னேன் அவன் தட்சா பெருமையா இருக்கு என்றான் பெரியவர்களை மதிக்காதவங்க இருந்து என்ன பிரயோசனம் என்னோட காதலுக்கு பதில் இல்லையா என்றேன் என்னோட தங்கைக்கு கல்யாணம் இருக்கு இன்னும் ஆறு மாசம் தான் அதற்கு பிறகு நம்ம கல்யாணம் பத்தி பேசலாம் என்றான் நான் காதல் பற்றி சொன்னேன் அவன் கல்யாணம் பற்றி சொன்னான் காதல் பண்ணினால் கல்யாணத்தில் முடியனும்னு நினைக்கிறாங்க கல்யாணம் பண்ணினப்பறம் காதலை மறந்துருராங்க என்றான் என்ன சொல்ற என்றேன்.

காதல் பண்றேனு சொல்லிட்டு வேற பெண்ணை கல்யாணம் பண்றது தப்புதானே என்றான் ஆமா அருண். கல்யாணம் பண்ணிட்டு பிரியறது தப்புதானே என்றான். ம்ம்.கல்யாணம் பண்ண முன்னால் யோசிக்கலாம் கல்யாணம் பண்ணிட்டு யோசிக்கக்கூடாது என்றவனை வியப்புடன் பார்த்தேன் இப்படி அவன் பேசி கேட்டது இல்லை காதல் அதிகமானது ஆசை வார்த்தைகள் பேசி காதல் என சொல்லி கொச்சைப்படுத்தும் வகையில் அருண் இல்லை மகிழ்ச்சியாக இருந்தது இந்த உலகம் இப்படியானது இல்லை.

பெண்ணை ஒரு உலகம் எப்படி நடத்தும் என நான் அறியாதது இல்லை கேட்டால் இயற்கை என பேசுபவர்களை கண்டது உண்டு மதிப்பு கௌரவம் இல்லாத ஒன்று எதற்கு
மோசமான விசயம் பிடித்துவிட்டால் மனம் அதை கேவலமாக எண்ணுவது இல்லை அருண் நான் காத்து இருக்கவா என்றேன் நான் காத்துக்கொண்டு இருக்கிறேன் தட்சா என்றபோது இந்த பிரபஞ்சமே எனக்குத்தான் என்று இருந்தது அருண் பற்றி அப்பா பெருமையாகப் பேச ஆரம்பித்தார் விவசாயம்தனை விடமா வேலைக்குப் போற பையன் என்றபோது எனக்கு சந்தோசம் அருண் அவனது அப்பா ஒருநாள் வீடு வந்தார்கள் தங்கையின் திருமண பத்திரிக்கை தந்தார்கள் கல்யாணத்துக்கு சென்றோம் அருண் என்னைப்பற்றி அவர்கள் வீட்டில் சொன்னான் அடுத்த கல்யாணம் என எங்களுக்கு என்றார்கள்.

இப்போது ஒன்றை மிகவும் யோசிக்கத் தொடங்கினேன் காதல் என்பது அவசியமா? காதல் என்பது உண்மையா? காதல் அனுமதி பெற்றுத்தான் நடக்குமா? காதலின் வெற்றி கல்யாணம் தானா? அண்ணன் அண்ணி இன்னும் வரவே இல்லை எனது திருமணம் தேதி குறிக்கப்பட்டு அண்ணனுக்கு நானும் அப்பாவும் பத்திரிக்கை தரப் போனோம். வருகிறோம் என்றான் வந்தான் கல்யாணம் உறவை சிதைக்கக்கூடாது அண்ணியின் பிள்ளைப்பேறுக்காக ஒரு கிளினிக்தனை அறிமுகம் செய்தேன் எந்த பாவமும் இல்லை என புரியட்டும் அருண் என்னை காதலிக்கத் தொடங்கி இருந்தான்.

ஆமாம் அண்ணி ஏன் அம்மாவை அடித்தார்? அது ஒரு தனிக்கதை.

(முற்றும்)

Monday 11 January 2016

தட்சாயினியும் கல்யாண உறவும் -1

எனது பெயர் தட்சாயினி, வயது 23. சராசரிப் பெண்ணைப் போலவே இருப்பேன். சராசரி என்றால் என்னவென்று சொல்ல, சாதாரணம் அல்ல. கணக்கியல் படித்து வேலையில் சேர்ந்து மூன்று மாதங்களே ஆகிறது. எனது கதையை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே விரும்புகிறேன்.

எனக்கு ஒரு மூத்த சகோதரன் உண்டு. அவனுக்கு திருமணம் ஆகியிருக்கக்கூடாது என்றுதான் இன்றும் வேண்டுகிறேன். எங்களது குடும்பம் ஒரு விவசாய குடும்பம். கல்யாணம் முடித்த ஒரு மாதத்தில் எங்களுடன் இருந்த தொடர்பை என் அண்ணன் முற்றிலுமாகத் துண்டித்துவிட்டான். எங்களுக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. என்னை கரை சேர்ப்பான் என்ற எனது பெற்றோரின் நம்பிக்கை வீணாகிப் போனது. நான் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த நேரம் இது. பணம் சேர்த்து படித்து முடிக்க போதும் போதும் என்றானது.

என் அண்ணனைப் பார்த்து ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டது. வேலை கிடைப்பது பெரும்பாடாக இருந்தது. சில மாதங்கள் விவசாயம் செய்தேன். அதற்குள் பலவாறு பேச்சுக்கள். எப்படியோ ஒரு வேலை கிடைத்து அது எனக்குப் பிடித்துவிட்டது. இந்த வேலையில் சேர்ந்தபின்னர்தான் நிம்மதியாக இருந்தது.

பதினோராவது படிக்கும்போது அருண் என்பவனை நான் உயிருக்கு உயிராக காதலித்தேன். பன்னிராண்டாவது முடித்ததும் எனது காதலை அவனிடம் சொன்னேன். சந்தோசப்பட்டான் ஆனால் பதில் ஏதும் சொல்லவில்லை. இன்று கூட அவனை எதேச்சையாக சந்தித்தேன். வேலை கிடைத்த விஷயத்தை சொன்னேன். வாழ்த்துக்கள் சொன்னவன் தன்னைப்பற்றி எதுவும் சொல்லாமல் இருந்தான். என்ன பண்ற என்ற எனது கேள்விக்கு விவசாயம் பார்க்கிறேன் என்ற பதில் தந்தவன் சரி பார்ப்போம் எனப்  போய்விட்டான். இன்றுவரை எனது காதலுக்கு அவன் பதில் சொல்லவே இல்லை. அவனைத்தவிர வேறு எவரையும் காதலிக்க மனமும் இல்லை. அவனை இன்னமும் எனக்குப் பிடித்து இருக்கிறது. அவனுக்கு என்னைப் பிடித்து இருக்கிறதா என கேட்கும் மன தைரியம் எனக்கு இருந்தது இல்லை.

''தட்சா  பொண்ணு கேட்டு வராங்க என்ன சொல்லட்டும் என்று அம்மா கேட்டதும் ஒரு மூனு வருஷம் போகட்டும்மா என்றேன். சரிம்மா என அம்மா அமைதி ஆனார். அருணுக்கு திருமணம் ஆகிவிடக்கூடாதே என்ற கவலை எனக்கு இருந்தது. எப்படியும் என்னை மணம்  முடிப்பான் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. அருண் எனது ஊரில் இருந்து ஒரு 15கி மீ தொலைவில் உள்ள ஊரில் இருக்கிறான். அந்த ஊர்ப்பக்கம் சிலமுறை சென்றது உண்டு. ஆனால் அந்த ஊருக்குள் ஒரே ஒருமுறை சென்றது உண்டு. சின்ன கிராமம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அருண் அன்று ஊரில் இல்லை. பின்னர் அந்த ஊருக்குள் செல்லும் தைரியம் வந்தது இல்லை.

நான் வேலைப் பார்க்கும் ஊருக்குத்தான் அவன் பொருள் விற்க வாங்க வர வேண்டும். எங்க ஊருக்கும் இதுதான் விற்பனை இடம். அப்பா இங்கேதான் வருவார். அப்பாவின் கண்களில் பட்டு இருக்கலாம். ஆறு மணிக்கு அப்பா ஊரில் இருந்து கிளம்புவார். ஒன்பது மணிக்கு வீடு வந்து பின்னர் தோட்டம் செல்வார். வாரத்தில் மூன்று நாட்கள் நிச்சயம் செல்வார். இதுவரை நான் அந்த விற்பனை பகுதிக்கு சென்றது இல்லை. இப்போது அந்த இடம் எதுவெனப் பார்க்கத்தான் ஆர்வம் உண்டானது. அன்று இரவு அப்பாவிடம் பேசினேன்.

''என்னம்மா புது அக்கறை''

''சும்மா தோனிச்சிப்பா''

''நாளைக்கு என்னோட வாம்மா''

சனி அன்று அப்பாவுடன் சென்றேன். அப்பா கொண்டு போன காய்கறி மூட்டைகள் வெகுவேகமாக விற்றது. என்னை பலரும் விசாரித்தார்கள். அருணை எனது கண்கள் வேறு எவருக்கும் தெரியாமல் தேடித் தவித்தன.

''வாம்மா போகலாம், இன்னைக்கு நீ வந்த வேளை எல்லாம் சீக்கிரம் வித்துருச்சி''

''அப்பா வேற விற்பனை இடம் இங்கே இருக்கா''

''இல்லைம்மா, இது ஒரே இடம் தான். ஆனா பொருள் பொருத்து மாறும். வத்தல் எல்லாம் தெற்கால விப்பாங்க''

அப்பாவுடன் இத்தனை சுலபமாக இன்றுதான் பேசி இருக்கிறேன். ஒருவித பயம் எப்போதும் இருக்கும். ஆனால் அருண் பற்றிய நினைப்பில் பயம் விலகும்.

''பொங்கல் இந்த கடையில் நல்லா இருக்கும், வாம்மா சாப்பிட்டுப் போகலாம்''

நான் பார்க்காத ஒரு புதிய கடை அது. எவரைப் பார்க்க நினைக்கிறோமோ அவரைப் பார்த்தே தீர்வோம் என்று புரிந்த தருணம் அது. அருண் அந்த கடையில் இருந்து வெளியே வந்தான்.

(தொடரும்) 

Tuesday 29 December 2015

நமது திண்ணை டிசம்பர் மாத இணைய இதழ்

ஒன்றின் வளர்ச்சியானது அவை பெறும் எதிர்ப்புகளைப் பொருத்து அமைகிறது. மக்களின் கவனத்தை ஈர்க்கும் எதுவும் சர்ச்சைக்கு உள்ளாகும்.

நமது திண்ணை இணைய இதழ் தற்போது ட்விட்டர் பயன்பாட்டில் உள்ள தமிழ் மக்களின் சிலருக்கு மிகவும் பரிச்சயமாக மாறி எரிச்சல்தனை ஒரு சிலரின் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு இந்த இணைய இதழில் இடம் பெற்றுள்ள அவனதிகாரம் எனும் ட்விட்டர் பயன்பாட்டு தமிழரின் எழுத்துக்கள். நமது திண்ணையில் எதற்கு அப்படி சர்ச்சையை அந்த அவனதிகாரம் உண்டு பண்ணின எனப் பார்த்தால் குழந்தைத்தனமான எழுத்துக்கள். குழந்தையின் செயல்களை எப்படி ரசித்து மகிழ்கிறோமோ அதைப்போலவே இது போன்ற அழகிய காதல் ரசிப்புகளை ரசிக்க வேண்டும், ஆனால் ஒரு பிரமாண்டமான படைப்பையே விமர்சிக்கும் விமர்சகர்கள் அதிகமாகிப் போன சூழலில் இதுபோன்ற எழுத்துக்கள் விமர்சனம் பெறவே செய்யும். ஆனால் அவனதிகாரம் எல்லாமே வெகு அழகு.

மதுப்பிரியாவின் ''அவனா வந்தான். சினிமா டயலாக்க அளந்தான். நான் ஙே-னு  சொன்னேன். அவன் கிர்ர்ர்ர்-னு சொல்லிட்டுப் போயிட்டான்'' இந்த ஙே கிர்ர்ர்ர் எல்லாம் ட்விட்டர் பயன்பாட்டு மொழிகள். ஒரு படைப்பாளி தனது எண்ணங்களை வெளிப்படுத்த பயன்படுத்துவதே மொழி. அதுவும் டார்லின்ரெதா உவமை எல்லாம் காதலின் உச்சம். ''எரியும் நெருப்பாய் நீ, திரியாய் நான், நீ பிரகாசமாய் எரிய என்னை நான் எரிப்பேனடா'' இங்கே நெருப்பின் நிலையை திரியே அதிகரித்து விடுவதாக ஒரு அழகிய கவித்துவம். ஜீவசுசியின் அழகிய சொல்லாடல். 'உன்னைப் பிடிக்கும் அதைவிட உன் இதயம் பிடிக்கும்' என சொல்லப்பட்டதாக இருக்கிறது. இங்கே உன்னைத்தவிர வேறு எனக்கு எதுவுமே பிடிக்காது என சொல்வது போல அமைக்கப்பட்டு இருக்கிறது. இவர் எனது கவிதைகளை ட்விட்டரில் எழுதியது உண்டு. இவரது கவனத்தை ஈர்த்த எனது கவிதைகளை நான் கவிதைகள் என்றே அங்கீகரித்தது இல்லை.

இப்படியான அவனதிகாரம் பெரும் சர்ச்சையை உண்டுபண்ணி ஆசிரியரை பேட்டி  எடுக்கும் அளவுக்கு கொண்டு போயிருக்கிறது. ஆசிரியரின் பொறுமையான பதில்கள் கூட கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விளம்பரம் தேடும் பிரியராக ஆசிரியரை சித்தரித்து இருப்பது கண்டு எல்லாம் கவலைப்படத் தேவை இல்லை. நமது திண்ணையின் இணைய இதழின் வளர்ச்சி கண்டு பெருமைப்படலாம். இதைவிட பெரும் பரிசு எனக்கு சிறந்த சகிப்புத்தன்மையாளர் விருது பெற வழி செய்ததே இந்த நமது திண்ணை இணைய இதழ் தான். ஏளனம் செய்கிறார்களோ அல்லது உண்மையில் பாராட்டுகிறார்களோ அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டியது இல்லை. நம்மை ஒருவராக மதித்து நமது செயலுக்காக நம்மீது அக்கறை கொள்பவர்கள் மீது நன்றி நமக்கு இருக்க வேண்டாமா? அதற்காக மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ரிஸ்வான் எழுதிய மழை கவிதை மிகவும் அருமை. கொலையுண்ட மரம் கொண்டு யாகம். அட. பாட்டி அறிந்திடா பாட்டில் நீர். மரம் வளர்ப்போம், மழை பெறுவோம். முன் அட்டைப்படம் சினிமா இதழ் போன்ற பிரமையை உண்டு பண்ணி இருக்கிறது.

மகனதிகாரம் அன்பின் மிகுதி. வெகு சாதாரண செயல்களை சொல்லும் விதத்தில் அற்புத செயலாக்கி காட்டிவிடுகிறார்கள். ஒரு பருக்கை அமிர்தம். அதுவும் மகளதிகாரம் எல்லாம் நிறையவே அன்பை சொல்லுக்குள் அடக்கிவிடுகிறது. ஏன் ஊசி போடறாங்க?

மணல் கவிதை சற்று வித்தியாசம். மண் தின்று மண் திங்கும். மண்ணில் பெயர் எழுதும். சுசீமா அம்மா அவர்களின் திருவடி சேவை எனும் புதிய தொடர். மோட்சம், வீடுபேறு, ஆன்ம விடுதலை என்று தொடங்குகிறது. மனிதனின் அதிகபட்ச தேர்வு முக்தி அடைதலே அதற்கு திருவடி பற்ற வேண்டும் என அருமையாக விளக்கி இருக்கிறார். பல திருக்குறள்களை மேற்கோள் காட்டியதோடு மட்டுமில்லாமல் திருவாசகம் கூட துணைக்கு அழைத்து இருக்கிறார். திருமூலர் குறிப்பிட்ட திருவடி சிறப்பும் உள்ளது. திருநாவுக்கரசர் குறிப்பிட்ட திருவடி, திருவெம்பாவையில் திருவடி என திருவடிகள் பெருமையை சொல்லி இருப்பது வெகு சிறப்பு. ஆவலுடன் எதிர்பார்க்கும் தொடர் இது.

அவளதிகாரம் அவனதிகாரத்திற்கு சளைத்தது அல்ல. கான் அவர்களின் போடா என்றாள். போயிடவா என்றேன். போகாத லூஸு  என்று இறுக் க அணைத்துக் கொள்கிறாள். நம்மில் சிரிப்பை உண்டாக்கும் சொல்லாடல். கண்ணனின் அவளதிகாரம் எழுத தேவையில்லை. அவளே... அதிகாரம் தான். சுகிபாலாவின் காதல் செய்யும் முடிவு அவளே கழட்டிவிடும் முடிவு அவளே. இவை எல்லாம் இப்படி எழுதப்படுவதற்கு காரணம் ட்விட்டர் தான். ஒரு பெரும் கவிதையை சில வரிகளில் எழுதி வெளிப்படுத்தி விடுகிறார்கள். அதற்கு நிச்சயம் ஒரு தனித்திறமை வேண்டும்.

நண்பர் ரவியின் பரங்கிக்காய் துவையல் வெகு சிறப்பு. உதயாவின் வாடகை எனும் தலைப்பின் வாடகைத் தாய் பற்றிய ஒரு சின்ன கதை. கதையில் வெறுமை தலைதூக்கித் தெரிகிறது. உமா க்ருஷ்  அவர்களின் பாடல் பரவசம். காதல் ஊர்வலம் இங்கே எனும் பாடல் கேட்டதில்லை. ஆனால் டி ஆர் அவர்களின் பாடல்கள் எல்லாம் வெகு சிறப்பாக இருக்கும் என உறுதியாக நம்பலாம்.ஆசிரியரின் புருஷ்லீ குறித்த பார்வை சிறப்பு.

நமது திண்ணை மென்மேலும் புகழும் வளர்ச்சியும் பெற இதில் வரும் படைப்புகள் எல்லாம் வெகு சிறப்பாக கொண்டு வர வேண்டியது ஆசிரியரின் பொறுப்பு. நிச்சயம் முயற்சி வெற்றி பெறும். வாழ்த்துக்கள், வடிவமைப்பு வெகு அருமை.