Sunday 29 November 2015

அம்மா - சௌம்யா (மின்னூல் கவிதைத் தொகுப்பு) 2 நிறைவு


20 இரவு

பல வருடங்களுக்கு முன்னர் நண்பர் ஒருவரின் கவிதையைப் படித்துப் பார்த்துவிட்டு இப்படி சோகமாகத்தான் எழுத வேண்டுமா என அவரிடம் கேட்டு வைக்க அதற்கு அவர் இது என் பாணி, நீ வேண்டுமெனில் சந்தோசமாக எழுதி வைத்துக் கொள் என்றார். ஒவ்வொருவருக்கும் ஒரு நடை, சிந்தனை உண்டு.

இரவு குறித்த கதையில் பெண்ணின் கைப்பை உவமை அழகு. விட்டத்து பல்லி பேய்க்கதைகள் கரப்பான் பூச்சி என இரவின் பயத்தை பாடல்களே துணை

21. ஸ்வீட்டான்

மிகவும் அழகிய கவிதை. ஒற்றுப்பிரச்சினை எனக்கு உண்டு. எங்கு க்  வரும் த்  என. தேவதைத்தனங்கள் தேவதை தனங்கள். கைகள் மெத்தை. மிகவும் அழகாக சிவந்த முதுகின் காரணம் மருதாணி கரங்கள்.

22 பிரார்த்தனை

நல்ல புத்தி கொடு என சின்னஞ்சிறு குழந்தையே சாமியிடம் வேண்டும். ஒரு வெள்ளேந்தியாக சாமியிடம் பிரார்த்தனை மிகவும் சிறப்பு. என்னவெல்லாம் எண்ணம் வரும் என நேர்த்தியான சிந்தனை

23 மீ காதல்

காதலித்தபடி இருக்கிறோம் இயல்பாக இருப்பதே சுகம். எதையும் கேட்காமல் தரப்படுவது காதல். பெண்ணியம். ஆசை அறுபது நாள். மோகம் முப்பது நாள் என தாண்டி அன்பில் நிலைத்து நிற்கும்

24 இதழதிகாரம்

முத்தம் தாடி. சிலுங்கும் கொலுசு. பெண் முத்தங்கள்.

25 ஊடலுணவு

கோபங்கள் தொலையுமிடம் அன்பு

26 தேவதைகள்

சிறுமியின் தேவதை உரையாடல் கவிதைத்தனமானதுதான். கட்டுபாடற்ற வாழ்வே சிறப்பு

27 காத்திருப்பு

நொடிகளுக்கு யுகம். நிறைவடைந்த நினைவுகள். இதை ஒவ்வொரு மனிதரும் ஏதேனும் ஒரு கட்டத்தில் உணர்ந்து இருப்பார்கள்.

28 யாத்திரை.

தமிழ் மின்னிதழில் வெளியான கவிதைகளில் இதுவும் ஒன்று.

29 அறியாமை

அம்மா! அம்மா இல்லாத வாழ்வு குறித்த ஓர் பார்வை இது. என்னவெல்லாம் அம்மா தன்  குழந்தையைப் பற்றி அறிந்து இருப்பார் என சுகம் சொல்லி சோகம் ஆகும் கவிதை.

30 படையல்

சற்று வித்தியாசமான சிந்தனை

31 எதிர்காலம்

உறவுகள் சலிப்பூட்டுகின்றன. நீ இருக்கிறாய் என்பதே போதுமானது எதிர்காலம் சிறப்புற

32 ஜன்னல்

ஜன்னல் பற்றி எழுதாத கவிஞர்கள்  இல்லை எனலாம். அத்தனை வசீகரமானவை. ஜன்னல் ஒரு காட்சி பெட்டகம். கம்பிகள் கொண்ட ஜன்னல். முத்தாய்ப்பான முடிவு

33 விலைமகள்

தமிழ் மின்னிதழில் வெளியான மற்றொரு கவிதை.

34 குறுங்கவிதைகள்.

உழைப்பு எனத்  தொடங்கி ஒவ்வொரு கவிதையும் வெகு சிறப்பு

வலிக்குதா வலிக்குதா என்று குழந்தை தன்  அம்மாவைப் போல் அல்லாமல் பொம்மையிடம் கேட்பதாக முடிகிறது கவிதைத்தொகுப்பு.

எளிய வார்த்தைகள் கொண்டு அழகிய மாலைகள் தொடுக்கப்பட்டு இருக்கின்றன. சின்ன சின்ன நிகழ்வுகளே ஒரு காவியம் ஆகின்றன. பேசத் தெரியாதவனுக்கு பேச்சு சொல்லிக் கொடுப்பதைப் போல கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என சொல்லித் தருகின்றன.

கவிதைகள் அந்த படைப்பாளியின் எண்ணத்தை வெளிக்கொண்டு வருவனவாக இருந்தாலும் எவ்வித சம்பந்தமும் இல்லாமலும் ஒருவர் சிந்திக்கக் இயலும். பெரும்பாலும் ஒரு படைப்பாளி சுதந்திரமாக சிந்திக்கும் போது  தன்னை பாதிக்கும் விசயங்களையே கவிதைக்கான கருப்பொருளாக வைப்பார். இந்த கவிதைகளில் அன்பு, அம்மா, காதல் என உறவுகள் பற்றியே வலம்  வருகிறது.

சிந்தனைகள் செழித்தோங்கி பல அழகிய படைப்புகள் தந்து மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

(நிறைவு 


Sunday 22 November 2015

அம்மா - சௌம்யா (மின்னூல் கவிதைத் தொகுப்பு) -1

அம்மா - சௌம்யா அவர்களின் கவிதைத்தொகுப்பு மின்னூல் வடிவில். பல புத்தகங்கள் வெளிவர வேண்டுமென வாழ்த்துகிறோம்.

'சமூகத்தலைவி' மீனம்மாகயலின் அட்டைவடிவமைப்பே சற்று வித்தியாசமாக இருக்கிறது. பிஞ்சு கால்களை தாயின் கரங்கள் அள்ளி குவிப்பது போல அமைந்து இருக்கிறது. அம்மா என்ற எழுத்தில் வைக்கப்பட்ட அழகிய சிவந்த நிற பொட்டு. மின்னூல் எவ்வித வண்ணம் இல்லாமல் கருப்பு வெள்ளை வடிவில் அமைந்து இருக்கிறது. எளிமைதான்.

அறிமுகமே இப்படித்தான் தொடங்குகிறது. 'அரட்டைகேர்ள்' என்ற பெயரில் 2011 முதல் ட்விட்டரில் இயங்கி வரும் சௌம்யா கோவையைச் சேர்ந்தவர் என. அவர் எழுதிய பல கவிதைகளின் தொகுப்பாக இந்த மின்னூல் இலவசமாக இங்கு  பெற்றுக் கொள்ளலாம். மின்னூல் விற்பனைக்கு கூட பண்ணலாம் என இப்போதுதான் தெரியும். இந்த கவிதைத் தொகுப்பை எப்படி வாசிப்பது என சென்றால் மொபைல் போனில் இதற்குரிய அப்ளிகேசன்ஸ் தரவிறக்கம் செய்ய வேண்டும் என சொல்லப்பட்டு இருந்தது. உடனே தரவிறக்கம் செய்து வாசிக்கத் தொடங்கியாகிவிட்டது. வலைதளம்  பேஸ்புக், ட்விட்டர் என தமிழில் இவரது இயக்கம் சொல்லப்பட்டு இருக்கிறது. ட்விட்டர், வலைதளம் பார்த்தது உண்டு. பேஸ்புக் பார்த்தது இல்லை.

1. கிடா

இந்த கவிதையை ஏற்கனவே வாசித்த அனுபவம் உண்டு. எனது கிராமத்தின் நிகழ்வை கண்ணுக்கு முன்னர் கொண்டு வந்து நிறுத்திய ஒரு அற்புதமான கவிதை. கிடா எப்படி எல்லாம் அன்புடன் ஓடியாடி திரிந்தது என கவிதையாக நிற்கும். 'சாமி ஆடு, கைய கிய்ய வைச்சீங்க' என அப்படியே அந்த நிகழ்வு. அதுவும் அந்த கடைசி வரியில் கவிதைக்கான உயிர்நாடி.

2.  அம்மா

வேண்டாம். ஒரு தாயின் மரணம் பற்றி எழுதவே வேண்டாம். ஜில்லுனுதானே இருக்கு என்ற வரி படித்தபோது ஒரு இனம் புரியாத நெருடல். தாயை இழந்த பின்னர் எப்படி எல்லாம் நாம் தாயிடம் சொல்லிக்கொள்வோம் என்பது போன்ற உணர்வினை அழகாக தென்பட்டு இருக்கிறது

3. அப்பா

அப்பா அடித்ததேயில்லை. ஆமாம். பலருக்கும் பரிச்சயமான வரி. ஒரு தந்தை எப்படி இருப்பார் என்பதற்கான வரிகளில் தெளிவாகத் தெரிகிறார் அப்பா. 'நீ குழந்தை தானேடா' இப்போது கூட இதே வார்த்தைகளை என் தந்தை என்னிடம் சொன்னது உண்டு.

4. கணவன்

முத்தம் ரகசியம் தாம்பத்யம் வளவிக்கீறல் என சொல்லி சோகமான ஒரு கவிதைதான் என்பது கடைசி வரியில் தென்பட்டது.

என்ன இது எல்லா கவிதைகளுமே ஒரு வலியின் தடமாக இருக்கிறதே என்று யோசித்தேன். அடுத்து வந்தது பருவம்

5. பருவம்

குழந்தமை, பால்யம் பதின்மம் என சொல்லி ஒரு சிறுமியின் பருவம் எய்த நிலையை சொல்லிச் சென்றது கவிதை. முதுமை எல்லாம் சொல்லாமல் பருவம் என்றால் பருவமாக இருந்தது.

6. மோகமுள்

இது ஒரு நாவலின் தலைப்பு. உவமைகளைத் தாங்கி வந்திருக்கும் கவிதை. அடர்ந்த வனம். கருத்த தீவு. அதரம், இதழ் நெற்றி, கன்னம் கழுத்து என வார்த்தைகளில் நிறையவே மோகம் தாண்டவமாடுகிறது. மீசை குறித்த பார்வை சிறப்பு.

7. ஞானம்

புத்தனின் ஞானம் குறித்து கேள்வி எழுப்பும் ஒரு அழகிய கவிதை. பற்று வைப்பதில் விலகி இருப்பதே துறவறம். பற்று கொண்ட ஒன்றை விட்டு விலகிடுவதெ ஞானம் யசோதரா.

8. மரப்பாச்சி

மரப்பாச்சி பொம்மைகள். தனியாய் மாலையணிந்து வலி சொல்லும் கவிதை இது. சின்ன சின்ன வரிகளில் அதிரவைக்கும் கவித்துவம் தென்படுகிறது.

9. வான்சிறப்பு

வள்ளுவரின் வரிகள் கொண்ட தலைப்பு. மழை என்றால் என்ன எப்படியெனினும் மழை பிரமிப்பு. மழை நினைவுபடுத்திச் செல்லும் கவித்துவம்.

10. உறக்கம்

உறக்கம் மட்டும் இல்லையெனில் இவ்வுயிரின் இயக்கம் ஏதும் இல்லை. உறக்கம் ஒரு வரம். கவித்துவ வரிகளால் சிறப்பிக்கப்பட்ட உறக்கம்.

11. உதிரா நினைவு

அண்ணனின் பிறந்த தினம் குறித்த கவிதை என வாசிக்கத் தொடங்கினால் அம்மாவின் அன்பைச் சொல்லும் அழகிய கவிதை.

12. அவள் பெயர் அட்சயா

பொம்மை குறித்த பொருள் பொதிந்த உயிர் நிறைந்த கவிதை. இதுபோன்ற கவிதைகள் எல்லாம் மிகவும் எளிமையாக இருப்பது மட்டுமல்ல நம்மோடு எளிதாக இணைந்துவிடும் கவிதை. நமது நினைவுகளை கிளறிவிடும் கவிதைகள் சிறப்பு பெறுகின்றன.

13 மிச்சங்கள்

மீண்டும் ஒரு பழைய நினைவுகளை அசைபோடும் கவிதை. பாத்திரங்களில் பெயர் பதிப்பார்கள். மனித பாத்திரங்களுக்கும் பெயர் வைப்பார்கள்.

14 வலி

பெயர் குறித்த வலி நிறைந்த கவிதை.

15 வன்முறை

மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நிலையை சொல்லும் கவிதை. முதலில் வாசிக்கும்போது என்னவோ என நினைக்க கடைசியில் ஒரு உணர்வின் மீதான வன்முறையை அழகாக விவரிக்கும் கவிதை

16 மகள்

இந்த கவிதையைப் படித்தவுடன் ஒரு இனம் புரியாத ஏக்கம் வந்து போனது. எதற்கு மகள் வேண்டும் எனும் எனது எழுத்து கூட ஒரு ஏக்கத்தின் வெளிப்பாடுதான். நல்ல வரிகளுடன் தொடக்கம். பெண் குழந்தை என்றால் மிகவும் இஷ்டம் போல. அருமையான வெளிப்பாடு.

17. முத்தம்

காதல் முத்தம் அட்டகாசம்.

18 கண்ணீர்

அழுகையில் வடிந்து போனதென் அத்தனை ஆதங்கங்களும், அவமானங்களும், கோபங்களும் இயலாமையும். மனவலி நிவாரணி.

19. காதலிக்கப்படுதல்

காதலிக்கப்படுதல் கடைநிலை மனிதருக்கும் சந்தோசம் தரும். காதலிக்கபடுவதால் என்னவெல்லாம் நடக்கும் எனவும் புரியலாம்.

19. விஷூ

அம்மா முகத்தைத்தான் வெறிக்கிறது பார்வை.

ஒரு நிகழ்வை விவரிக்கும் கவிதையில் சில வரிகளே அந்த நிகழ்வின் சிறப்பம்சம்.

கவிதாயினி சௌம்யாவின் அம்மா அற்புதமாகவே இருக்கிறது. தனிப்பட்ட ஒருவரின் நூலுக்கு நான் எனது எண்ணத்தை  எழுதுவது இதுவே இரண்டாவது தடவை என்றே கருதுகிறேன்.

(தொடரும்)


நமது திண்ணை நவம்பர் மாத இணைய இதழ்

சற்று தாமதமாகவே வெளிவந்த இந்த இணைய இதழில் எப்போதும் போல வழக்கமான இராமானுசர் தொடர் இல்லாதது ஒரு குறையாகவே தெரிந்தது. பல வேலைகள் காரணமாக உடனே இந்த இதழை வாசிக்கவும் இயலவில்லை. வேலைக்கு முன்னுரிமை தரும்போது தமிழ் பின்னுக்கு தள்ளப்படுகிறது. இந்த இதழின் ஆசிரியருக்கு பெருமளவில் உதவி செய்த அனைத்து நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அட்டைப்படம் மிகவும் வித்தியாசமாக இருந்தது.  ரிஜ்ஜியின் மழலைக் கடிதம் மிகவும் கவலை தரக்கூடிய கவிதை. இந்த உலகம் மிகவும் பொல்லாத ஒன்றாகவே தெரிகிறது. இறைவனுக்கு வணக்கங்கள் எனத் தொடங்கும் கவிதையில் நிறைய வலிகள். பெண்ணாக பிறப்பது பெரும் இடர் என இந்த கவிதையில் சொல்லப்பட்டு இருக்கிறது. பல இழிநிலை மனிதர்களால் குழந்தைகள்  படும் பெரும் துயரத்தை பல வரிகளில் நாம் காணலாம். இவ்வுலகம் மாற வேண்டும் என்பதே நமது வேண்டுதலாக இருக்கிறது.

உதயாவின் புகையிலை தவிர்ப்போம் எனும் விழிப்புணர்வு முத்தம் குறித்த கதை. ஒரு விஷயத்தை சமூகத்திற்கு சொல்ல முற்படும்போது வலி தரும் விசயங்களை சொல்லும்போது மனதில் படியும் என்றே எடுத்துக்கொண்டாலும் சில நேரங்களில் கதைப்பாத்திரங்கள் அத்தனை பாதிப்பை நம்மில் உண்டாக்குவது இல்லை. புகைப்பிடித்தல், புகையிலை போடுதல், மது அருந்துதல் என பல பழக்கவழக்கங்கள் உடல் நலத்திற்கு இடையூறு என சொன்னாலும் இன்றும் பெரும்பாலான மனிதர்கள் அதை விட்டுவிட்டதாகத் தெரியவில்லை.

அழகிய ஓவியங்கள் மிகவும் சிறப்பு. ஓவியங்கள் நமக்கு பாடம் நடத்தும். கொக்கின் வாயில் இருக்கும் மீன், கண்ணாடியில் விசித்திர முகம் என ஒவ்வொன்றும் ஒரு அர்த்தம் சொல்லவே வரையப்பட்டு இருக்கும்.

அவளதிகாரம் மகளதிகாரம் அவனதிகாரம் எல்லாம் எப்போதுமே மிகவும் சிறப்பாக இருக்கும். ஒவ்வொருவரும் அந்தந்த வரிகளில் வாழ்ந்து விடுகிறார்கள். முடி கலைவதே இன்பம். தேவதையுடன் உலா வருகிறேன். மௌனம் எப்போதுமே அழகு. பெரிய ஆபிசராம். என்னிடம் குழந்தையாகிப் போவான். சோறு ஆக்கிடுவான். குருடாக ஆசை. நானும் எத்தனையோ அவளதிகாரம் எழுதி இருக்கின்றேன் என்றே கருதுகிறேன். இதற்கு காரணம் எவர் என என்னைக் கேட்டால் அன்றில் இருந்து இன்று வரை பல பெயர்களை சொல்ல இயலும். எவரேனும் ஒருவர் கருப்பொருளாகி நிற்பார்கள். அதை எவராலும் அறிந்து கொள்ள இயலாதபடி எனது எழுத்து அமைந்து விடும்.

மெழுகுவர்த்திகள் குறித்து மேலும் பல விபரங்கள் தந்து இருக்கலாம். எங்கே செயல்படுகிறது, அந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் யார் யார். எத்தனை வருடமாக தொண்டு புரிகிறார்கள், அவர்களை தொடர்பு கொள்வது எப்படி போன்ற விபரங்கள் இல்லாமல் இருப்பது முழுமையற்று இருக்கிறது. ஆசிரியர் இதை அடுத்தமுறையாவது இணைத்தால் நன்றாக இருக்கும்.

உதயாவின் கபாலி மிகவும் நகைச்சுவையான அதே வேளையில் நல்லதொரு கருத்து சொல்லும் கதை. ஒன்றுக்கொன்று தொடர்பு உடையது என எனவும் சில அபத்தமான காரியங்கள் நல்லதில் சென்று கூட முடியும்.

நவராத்திரி விழாவா, பண்டிகையா சுசீமா அம்மா அவர்களின் பயன்மிக்கத்  தொடர். இதுவரை படி அமைத்து கொலு பொம்மைகள் எல்லாம் செய்ததாக எனக்கு நினைவில் இல்லை. இந்தத் தொடரில் குறிப்பிட்டபடி பாடல்கள் பிறர் வீட்டுக்குச் செல்லுதல் எல்லாம் நான் கண்டதே இல்லை. ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை மட்டும் கொண்டாடுவோம். கலப்பை, புத்தகம் என கொண்டாட்டம் இருக்கும். தனிப்பட்ட சமூகம் கொண்டாடுமா, அல்லது எல்லா சமூகத்தினரும் கொண்டாடுவார்களா எனத் தெரியாது. சகோதரி ஷக்திபிரபா கூட இதுகுறித்து எழுதியாக ஞாபகம். எப்படி எடுத்துக் கொண்டாலும் இந்த நவராத்திரி ஒரு விழாதான். ஒன்பதாம் எண்ணுக்கு உரிய பலன்கள். நிறைய விசயங்களை உள்ளடக்கிய பகுதியை அனைவரும் பயன்பெறும் வண்ணம் எழுதி இருப்பது வெகு சிறப்பு. எல்லாமே புதிய விசயங்கள்தான்.

ஆசிரியரின் திரு தனஞ்ஜெயின் அவர்களின் நேர்காணல் மிகவும் சிறப்பு. தேசிய விருது பெற்ற ஒரு எழுத்தாளர். ஒரு தயாரிப்பாளர். சினிமா குறித்த அவரது பார்வை மிகவும் சிறப்பு. அவர் தொழில் குறித்த தொடர்பான கேள்விகள் எல்லாம் சிறப்பு.

நண்பர் ரவியின் கிச்சன் டைம் பால் பேடா. இது பால்கோவாவுக்கு சளைத்தது அல்ல என்றே கொள்ளலாம். எவரேனும் செய்து பார்த்தவர்கள் எப்படி வந்தது என சொன்னால் மிகவும் சுவராஸ்யமாக இருக்கும்.

டிவிட்டரில் சிந்தனை எல்லாம் எப்படி இருக்கும் எனில் சமூகத்தில் சினிமா முதற்கொண்டு அரசியல் வரை ஏதும் பிரச்சினை எனில் அனைவருமே அது குறித்து தங்களது எண்ணங்களை பதிவு செய்வார்கள். அப்படித்தான் துவரம் பருப்பு குறித்த சிந்தனையை இதில் காணலாம்.

உமாக்ருஷ் அவர்களின் பாடல் பரவசம். இந்த பாடலை நான் கேட்டதே இல்லை. வித்யாசாகரின் இசை மிகவும் மென்மையாக இருக்கும். பாடல் வரிகள் என்னவெல்லாம் சொல்ல வருகிறது என மிகவும் தெளிவாக ஆராய்ந்து இருக்கிறார். நல்ல நல்ல பாடல் வரிகள். எப்படி பாடுவது என்பதே இந்த பாடலுக்கான வெற்றி.

மதிப்பிற்குரிய ஆச்சி மனோரமா அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்தனை பண்ணுவோம்.

பத்து இதழ்கள் கண்ட நமது திண்ணை தனது எல்லையை விரிவாக்கி இன்னும் பல எழுத்தாளர்களின் எழுத்துகளை தன்னுள கொண்டு வர வேண்டும் என்பதே எனது அவா. அற்புதமான நமது திண்ணை இணைய இதழ் மென்மேலும் வளர எமது வாழ்த்துகள்.