Friday 16 January 2015

தமிழ் மின்னிதழ் - ஒரு பார்வை 2

சிறுகதையோ, கதையோ புனைவு என்று அழைத்துக் கொள்கிறார்கள். கவிதை கூட புனைவதுதான் ஆனால் அது புனைவு என சொல்லப்படுவதில்லை. நாவலை புதினம் என்றும் அழைக்கிறார்கள். புனைவு எனும் சொல் நன்றாகவே இருக்கிறது.

பைத்தியக் காலம் என்றொரு புனைவு    எழுதியவர் 'இலக்கிய எழுத்தாளர்' நர்சிம்.  இவரைப்பற்றி அதிகம் குறிப்பிடத்தேவையில்லை. எழுத்துலகம் இவரது எழுத்துக்கள் பற்றி அறியும். இவரது எழுத்துக்கள் குமுதம், ஆனந்தவிகடன் என அலங்கரிக்கத் தொடங்கிவிட்டன. இவரிடம் சென்று எழுத பயின்று கொண்டால் நான் நன்றாக எழுத ஆரம்பிக்கலாம். ஒருமுறை நான் எழுதியதை கவிதை என்றேன். சற்று மாற்றி அமைத்தால் சிறப்பாக இருக்கும் என்றார். எப்படி மாற்றி அமைப்பது என சிந்தித்து பின்னர் வேண்டாம் என விட்டுவிட்டேன்.

'தான் தவிர்க்கப்படுதல் தெரியாமல் அண்டை வீட்டிற்கு விளையாடச் சென்று வெறுமையாய் திரும்பும் சிறுவனின் மனவலியை உணரச் செய்து விடுகிறார்கள் சிலர்'. இது அவரின் எழுத்து. எனக்கு என்னவோ இந்த எழுத்து வெகுவாக என்னை பாதித்துவிட்டது. எனது கிராமத்தின் சூழலை கண் முன்னர் கொண்டு வந்து நிறுத்தியது. இப்படித்தான் இவரது எழுத்துக்களை வாசிக்கும் போதெல்லாம் நிகழ்வு மனக்கண் முன்னால் வந்து போகும். சில சிறுகதைகள் வாசித்து இருக்கிறேன். அதில் இவர் சொல்லும் விதம் மிகவும் சிறப்பாக இருக்கும். விவரிப்பு அதில் வரும் கதாபாத்திரங்கள் அழுத்தமான ஒன்றை சொல்லி செல்லும். இந்த பைத்தியக் காலம். கதையை வாசித்து முடித்தபோது அதே பிரமிப்பு. கோமாதா, நந்தி அட! சொல்ல வைத்தது. அதுவும் கதையில் வரும்காட்சிகளின் பின்னணி. முடிவுதான் கதைக்கான மொத்த தளமும்.

அடுத்து பொன் வாசுதேவன் அவரது கவிதைகளுக்குப் போனேன். எளிமையான மனிதர். நேரில் பார்த்து இருக்கிறேன், பேசி இருக்கிறேன். எனது இரண்டு புத்தகங்கள் வெளிவர காரணமானவர். இவரது  இருபது வருடங்களுக்கு மேலான வாசிப்பு அனுபவம் இவரது எழுத்துகளில் மிளிரும். ஒரு நாவல் எழுதிக் கொண்டு இருந்தார். தமிழும், அடர்ந்த கருத்து செறிவுமான  கவிதைகள் . ம்ம் இவரிடம் கவிதை எழுத கற்றுக்கொள்ளப்போகலாம். 'தப்பிப் பதுங்கிய சிறுதுளி நீர் சிற்றலை நெளிய' பிரமாதம். நிழல் குறித்து  அட! வாழ்தலின் பலி கொண்டலையும் அற்ப சிம்மாசனம். வேரிழந்த எழுத்துக்கள். எனக்கு மிகவும் கடினம் இதுபோன்ற வார்த்தை கோர்ப்புகள். அதனால் தான் எனது கவிதைகளை வெறும் வார்த்தைகள் என கர்வத்துடன் சொல்லிக்கொண்டேன்.

அடுத்து என் சொக்கன் அவர்கள். இவருடனான அறிமுகம் ட்விட்டரில் இடம்பெற்றது. இவர் அழகாக வெண்பா எழுதுவார். அழகாக கதையும் சொல்வார். இவரது புனைவின் தலைப்பு காரணம். இவரது கதையை படிக்கும் முன்னரே நான் இப்படி எழுதி இருந்தேன்.

மனமுவந்து பாராட்டுவதை கூட உள்நோக்கம் ஏதேனும் இருக்குமோ என எண்ண  வைத்தது சந்தேக குணத்தின் குரூரமான பக்கம். 

இவரது கதையை படிக்கும்போது இதே சிந்தனை கொண்ட கதை. ஆனால் மனிதர்கள்  எப்படி விலகிப் போய்விட்டார்கள் என சொல்லும் அழுத்தமான கதை.

அடுத்து ரைலு. முத்தலிப். நகைச்சுவை உணர்வு உடையவர். பெயர்தான் முத்தலிப் ஒரு முத்தம் கூட தன இதழ்கள் கண்டதில்லை என என்னை சிரிக்க வைத்தவர். ரைலு ஒரு கனவும் அந்த கனவின் ஏமாற்றமும் சொன்ன கதை. இவர் தற்போது எழுத்துலகில் பரப்பரப்பாக கண்காணிக்கப்படுபவர். இந்த கதையும் அப்படியே. அதுவும் எங்கள் ஊர் பக்க கதை என்பதால் ராமேஸ்வரம், அருப்புக்கோட்டை ரயில் மனத்திரையில் வந்து போனது. உள்ளப் போராட்டங்களை சொன்னவிதம் வெகு சிறப்பு. சில புதிய சொற்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.

சங்கீதா பாக்கியராஜா. இலங்கையை சேர்ந்த எழுத்தாளர். இவரது எழுத்துகளில் ஒரு கனமான வலி இருக்கும். அது சிறிது நாட்கள் வலித்துக் கொண்டே இருக்கும். இவரது எழுத்து பெண்களின் பிரச்சினைகளை நிறைய பேசும். இந்த அன்றில் பறவை ஒரு தபுதாரனின் கதை. நான் இந்த கதையைப் பற்றி நிறைய சொல்லப்போவதில்லை. ஒரே வரி மனைவி போனால் எல்லாம் போம்.

அடுத்து தமிழ் தமிழ் தமிழ். ஆம். கண்ணபிரான் ரவிசங்கர்.  இவரது சிந்தனைகள் இவர் ஒரு தமிழ் மாமேதை. எனக்கு இவரைப் பார்க்கும்போதெல்லாம் கணிதமேதை ராமனுஜன் நினைவுக்கு வருவார். இவர் முருகனின் அருள் பெற்றவர். தரவு இல்லையெனில் வெளியே போ என மிரட்டும் கோபக்காரர். இவரோடு நான் ஒருமுறை ஆண்டாள் பற்றி விவாதம் செய்தபோது நான் விளையாட்டாக எழுதினேன் ஆனால் இவர் எல்லாவற்றையும் ஆணித்தரமாக எழுதினார். இதோ தரவு இப்படி அர்த்தம் கொள்ளலாம் என்றார். எனக்கு பொதுவாக புராணங்கள், பழைய விசயங்களில் அத்தனை தரவு பார்ப்பதில்லை, கற்பனைதான். ஆனால் இவரின் சிந்தனை வேறு. இவரைப்போல தமிழுக்கு பலர் வேண்டும். இவருக்கு எழுத்துலகில் கடும் எதிர்ப்புகள் இருப்பதால் பிளாக்கில் எழுதுவதை நிறுத்திவிட்டார். மீண்டும் இவர் எழுத வேண்டும். இவர் எல்லாம் மாதம் ஒரு தமிழ் நூல் வெளியிடலாம். தமிழில் சிலப்பதிகாரம்தனை ஆய்வு செய்து உள்ளார். இவரது எழுத்து எனது நூல் ஒன்றுக்கு கிடைத்ததே பெரும் பாக்கியம்.  அதைப்போல இவரது எழுத்து சுமந்து வந்த 'தமிழ்' மின்னிதழ் பெரும் பாக்கியம் செய்து இருக்கிறது. இலக்கியம், இலக்கணம் என சொல்லி எல்லா விசயங்களையும் இங்கே அருமையாக எழுதி இருக்கிறார். தகவல் களஞ்சியம், தமிழ் களஞ்சியம்.

அட இப்படி எழுதலாமா என ஜி ரா எண்ண  வைத்துவிட்டார். கேபியும் மூன்று பெண்களும் என்பதான புனைவு. எனக்கு அவர் குறிப்பிட்ட படங்கள் தெரியாது என்பதால் முழுவதும் உள்வாங்க இயலவில்லை. ஆனால் கதைநாயகிகள் மூலம் அற்புதமாக பல விசயங்கள் சொல்லி இருக்கிறார். படம் பார்த்து மீண்டும் படித்தால் சுவராஸ்யமாக இருக்கும்.

இன்று இறுதியாக விமர்சனம். உலகப்படங்கள் பார்ப்பவர்கள் தமிழில் அதிகம், ஆனால் அதை அழகாக விமர்சனம் செய்வது இவருக்கு மட்டுமே கைகூடும். இவரது எழுத்து எனக்கு முன்னரே பரிச்சயம். புத்தக விமர்சனங்கள் இவர் எழுதுவது உண்டு. இவர் எழுதியதைப் படித்தபோது அந்த நியூரி பில்கே சிலேன் இயக்குனரின் படங்களைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது. மிகவும் தெளிவான நடை. தற்போது இவரது எழுத்துக்கள் பத்திரிக்கைகளிலும் வருகிறது.

நாளை, விஷ்ணுபுரத்தான் ஜெயமோகன் மற்றும் சில கவிதைகளும், புனைவுகளும்.

(தொடரும்)


Thursday 15 January 2015

தமிழ் மின்னிதழ் - ஒரு பார்வை 1

நூற்றி முப்பத்தெட்டு பக்கங்களை கொண்டதாக அமைந்துள்ள தமிழ் மின்னிதழ் ஒன்று தமிழ் ட்விட்டர் சமூகத்தில் 'ரைட்டர்' என செல்லமாக அழைக்கப்படும் திரு சி சரவணகார்த்திகேயன் அவர்களின் முயற்சியால் இன்று வெளிவந்து உள்ளது.

தமிழ் மின்னிதழ். அட்டையில் ஓ!  இவர்தான் ஜெயமோகனா என ஆசிரியரின் எழுத்தைப் படித்த பின்னரே தெரிந்தது. "எழுத்து ஒரு நிகர்வாழ்க்கை எனக்கு!" நேர் வாழ்க்கை தெரியும், எதிர் வாழ்க்கை தெரியும். நிகர்வாழ்க்கை எனக்குப் புதிது.  ஜெயமோகன் எழுத்து நிறைய கேள்விபட்டதுண்டு. வாசித்தது இல்லை.

"தமிழ்" எழுத்து வடிவமைப்பு மிகவும் எளிமையுடன் கூடிய சிறப்பு. 'தமிழ் சிற்பி' மீனம்மாகயலுக்கு பாராட்டுகள். சமூக இருள் போக்க வரும் தமிழ். ஆசிரியர் சி சரவணகார்த்திகேயன் அவர்களை இந்த முயற்சிக்கு வெகுவாக பாராட்ட வேண்டும். இவருக்கு பக்கபலமாக இருந்த ஆலோசனைக்குழு கௌரவ குழுவிற்கும் ஆசிரியருக்கும் உளம்கனிந்த பாராட்டுகள். தை என எழுதாமல் பொங்கல் என இதழ் 1 வந்தது தித்திக்கும் இனிப்புதான், தமிழுக்கு தமிழருக்கு வெகு சிறப்பு.

பிரசன்னகுமார் அற்புதமான ஓவியர் சமீபத்தில்தான் இவரது ஓவியங்கள் கண்ணுக்குப்பட்டது. வெகுநேர்த்தியாய் எழுத்தாளனாக ஒரு ஜெயமோகனை வடிவமைத்த விதம் பாராட்டுகள். புதியன விரும்பு என்பது கட்டளைச் சொல். தமிழுக்கு அந்த உரிமை உண்டு. ஆசிரியர் உரை படிக்கிறேன். கல்லூரி கனவு நனவாகி இருக்கிறது. உலகம் யாவையும் என வாசித்ததும் அப்படியே உள்ளுக்குள் மகிழ்ச்சி ஓடும் அது அந்த பாடலின் வலிமை. இது ஒரு தொடக்கம் என்கிறார் ஆசிரியர். தொடர்ந்து  சிறப்பாக நடக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து அமரர் சுந்தர ராமசாமிக்கு சமர்ப்பணம் செய்தது வெகு சிறப்பு என தமிழ் மின்னிதழைப் போற்றி மகிழ்கிறேன்.

 எனக்கு தமிழ் எழுத்துலகம் தெரியாது. பெயர்கள் மட்டுமே பரிச்சயம் எவருடைய நாவல்களும் பல ஆண்டுகளாக வாசித்தது இல்லை. எனது வாசிப்பு blog twitter மட்டுமே. அப்படி வாசித்தபோது பழக்கமான சிலர் முகங்கள் இங்கே இந்த தமிழ் மின்னிதழில் உண்டு. எவருடனும் நெருங்கி பழகிய அனுபவம் இல்லை.

நான் போற்றும் மனிதர்களான  எனது நூல்களை வெளியிட்ட பொன்.வாசுதேவன், தமிழ் உயிர்மூச்சு என இருக்கும் 'முருகனுருள்' 'சிலுக்கு சித்தன்' புகழ் கண்ணபிரான் ரவிசங்கர், வெண்பா புகழ் என் சொக்கன், பிரமிக்க செய்யும் நர்சிம், முத்தமிழ்மன்ற தொடர்பு ஜி ராகவன், நல்ல வாசகி லேகா,  இந்த எழுத்துலகில்  எனக்கு புதிதாக அறிமுகம் ஆன மீனம்மாகயல், முத்தலிப், சங்கீதா பாக்கியராஜா, கர்ணா சக்தி, மிருதுளா, சொரூபா  மற்றும் ட்விட்டரில் தனக்கென ஒரு சாம்ராஜ்யம் வைத்திருக்கும் சௌம்யா.

நான் Facebook படிக்கும் வழக்கம் இல்லாத காரணத்தினால் பெருமாள் முருகன் சமீபத்தில் எழுதிய மாதொருபாகன் எனும் நாவல் குறித்த சர்ச்சை ட்விட்டரில் கேள்விபட்டேன். அது குறித்து கிருஷ்ணபிரபு இந்த மின்னிதழில் எழுதி இருக்கிறார். ஒரு எழுத்தாளன் சமூகத்தில் நிகழும் நிகழ்வுகளை அப்படியே வைப்பதில் என்ன தவறு இருக்கிறது என இந்த மதமும் சாதியையும் துள்ளிக்கொண்டு திரிகிறது என தெரியவில்லை. எத்தனை பிரம்மானந்தா, நித்யானந்தா இந்த சமூகம் கண்டு இருக்கிறது. அவர்களை எல்லாம் செருப்பால் அடிக்காமல் விட்டது இந்த சமூகத்தின் தவறு.

எங்கள் கிராமத்தில் கூட முன்னொரு காலத்தில் பிடித்தவனோடு பிள்ளை பெறும்  கலாச்சாரம் உண்டு என சில வருடங்கள் முன்னர் என் பெரியம்மா சொன்னபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் என்ன சொல்றீங்க என கேட்டபோது ஆமாம் எடுபட்ட  சிறுக்கிக  என திட்டிய காலம் என் பெரியம்மா காலமாக மாறி இருக்கலாம். வைப்பாட்டி எல்லாம் இல்லாமலா? ஆனால் என்ன இந்த சமூகத்தில் சாமியால் நடைபெறும் விசயங்கள் சர்ச்சைக்கு உள்ளாகின்றன. ஏனெனில் இறைவன் தூய்மையானவன், இறைவனை பின்பற்றுபவர்கள் தூய்மையானவர்கள் எனும் ஒரு மனநிலை மனிதர்களில் பதிந்துவிட்டது.

பெருமாள் முருகன் எழுதாமல் விட்டால் அது தமிழ் எழுத்து உலகிற்கு நல்லதல்ல எனவும் நல்லது எனவும் கூறுகிறார்கள். எனக்கு நாவல் படித்தது இல்லை என்பதால் எதுவும் சொல்ல இயலாது. ஆனால் காலங்கள் பல தடைகளை பல கலாச்சாரங்களை கடந்தே வந்து இருக்கின்றன. தொன்மைபழக்கங்கள் இப்போது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது இல்லை. ஆனால் தெரிந்து கொள்வதில் தவறில்லை.

கானல் - மீனம்மாகயல் எழுதிய ஒரு கதை. இந்த கதையை சற்று கவனமாக வாசிக்கத் தவறினால் என்ன சொல்ல வருகிறது என புரியாமல் போகும். கதையில் குறிப்பிடப்பட்ட நேரமே இரண்டு நிகழ்வுகளை விவரிக்கும் பாங்கு. இவருக்கு நல்ல தமிழ் சிந்தனை உண்டு, ஆனால் என்ன எழவோ காமத்தை சுற்றியே இவரது எழுத்தும் எண்ணமும் அமைந்துவிடுவது இவருக்கான பலமும் பலவீனமும். ஒட்டுமொத்த சமூகம் காமத்தினால் அல்லல்படுவது இயற்கைதான். வெளிச்சொல்ல இயலாமல் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் நிலை உலகில் மிகவும் பரிதாபத்திற்குரியது. அதே பாலியல் வன்முறையை எழுத்துகளில் சாடும் பெண் என்றாலோ, எழுத்துகளில் வைத்திடும் பெண் என்றாலோ அந்த பெண்ணை பற்றிய சமூகத்தின் பார்வைதான் நான் குறிப்பிட்ட 'என்ன எழவோ'. அந்த கதையில் குறிப்பிட்ட 'தா..' என்ற வார்த்தையை கூட நான் எழுதுவதும்  உச்சரிப்பதும்  இல்லை. நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது உடல்நிலை ஆசிரியர் அந்த வார்த்தையை அதிகம் உபயோகிப்பார். அட ஆசிரியர் சொல்கிறார், சொல்வதற்கு நன்றாக இருக்கிறதே என நானும் சில நாட்கள்  சொன்னேன். ஒரு பனங்காடி  நண்பன் அழைத்து அது கெட்ட வார்த்தை என சொன்னதில் இருந்து அந்த வார்த்தை நான் உபயோகம் செய்வது இல்லை.

ஆனால் சமீபத்தில் என் அத்தை ஒருவர், என் அப்பா அந்த வார்த்தை உபயோகித்தபோது எனக்கு சங்கடமாக இருந்தது. இந்த கதையில் சொல்லப்படும் விசயங்கள் கானல் தான். ஒரு பெண்ணை பலவந்தபடுத்த சமூகம் தயாராக காத்து இருக்கிறது. அதை எதிர்த்து போராட வழி இல்லை. இதே போன்று ஒரு உண்மையான நிகழ்வை ட்விட்டரில் பூங்குழலி எனும் மருத்தவர்  எழுதி இருந்தார். மகளை பறிகொடுத்த தந்தை. கிராமங்களில் நிறைய நடைபெறுகிறது. பாதுகாப்பற்ற சமூகம்.

சௌம்யாவின் கவிதைகளுக்கு தாவினேன். சௌம்யாவின் எழுத்து எவரையும் காயப்படுத்தாது. அவரின் பண்பு அவரை எல்லோருக்கும் பிடித்த ஒருவராகவே இந்த ட்விட்டர் சமூகம் பார்த்து வருகிறது மீ காதல் ஒரு எளிய அன்பின் வெளிப்பாடு. பெண்ணியம் என்ற வார்த்தை இப்போது நிறைய பயன்பாட்டில் உள்ளது. இதழதிகாரம், அதிக காரம் எல்லாம் இல்லை.மிகவும் இனிப்புதான். அதுவும் என் பெண் முத்தங்கள் என்றே முடிகிறது கவிதை.அவளதிகாரம்  அவனதிகாரம், மகளதிகாரம்  மனைவியதிகாரம் என நிறைய இருக்க இதழதிகாரம். இலக்கியமாக சொல்லிச் செல்லும் ஊடலுணவு. கோபத்தில் பாசம் வெளிப்படும் என்பதை வெளிச்சொல்லும் கவிதை.

நாளை நர்சிம், கண்ணபிரான், சொக்கனோடு பிரயாணிக்கிறேன்

(தொடரும்)


Tuesday 13 January 2015

மதமும் சாதியும்

மூர்க்கர்கள் நிறைந்த உலகில் இந்த மதம் சாதி  எல்லாம் குறித்து கண்டித்து எழுதினாலும் மூர்க்கர்கள் திருந்தவே மாட்டார்கள்.

இந்த மதம், சாதி குறித்து எழுதினால் தரம் தாழ்ந்துவிடும். தரங்கெட்டதை குறித்து எதற்கு எழுதுவானேன்.

                                                     நன்றி வணக்கம்.

இப்படியெல்லாம் எழுத்தாளன் ஓடி ஒளியக்கூடாது. எழுதிக்கொண்டே இருப்பதுதான் எழுத்தாளன் பணி, இல்லையெனில் சமூகத்தின் பிணியை எவர் தீர்ப்பது.

திருவள்ளுவர் எழுதியே திருந்தாத சமூகம் நம்மளோடது, அதனால் எழுதுவது மட்டுமே எழுத்தாளன் பணி. மக்களை நல்வழிபடுத்தி செல்வது அரசு பணி .